Search This Blog

சந்தேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்தேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 ஏப்ரல், 2013

மணமாலை விளம்பரம் பார்த்து இப்படியும் மோசடிபேர்வழிகள் வரலாம்

10 ஜாதகம் வந்ததுக்கே சந்தோசப்பட்டு அதுல ஒருத்தருக்கு என்னைய கட்டிவெச்சுட்ட. அக்காவுக்கு முதல் ஜாதகத்துலேயே ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்துட்ட...மிச்சம் இருக்குற என் தங்கச்சிக்காச்சும் ஒரு அம்பது அறுபது ஜாதகத்தை பார்க்கலாமே...அப்படின்னு எங்க அக்கா சொல்லுது...அதனால நாங்க அவசரப்படாம பொறுமையா எனக்கு மாப்பிள்ளை தேடுறோம் என்று அந்த பெண் என்னிடம் கூறியபோது எனக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அந்த பெண்ணின் வயது 26. இதில் ஒன்றும் பெரிய தாமதம் இல்லை. அந்த பொண்ணு படிச்சு முடிக்கவே 22 அல்லது 23 வயசு ஆகியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. குடும்ப வறுமை காரணமாக அந்த பெண் 10ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு சுமார் 9 ஆண்டுகாலமாக சொற்ப சம்பளத்தில் ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பெண்ணின் உடன்பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லை. பூர்வீக சொத்துக்களும் இல்லை. சேமிப்பும் இல்லை. (ஆனால் 2 லட்ச ரூபாய் கடன் உண்டு). தந்தை விபத்தில் இறந்துவிட்டார்.

இவ்வளவு சிக்கலில் இருப்பதற்காக அந்த பெண் அவசரப்பட்டு ஏதாவது ஒரு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள் விரலுக்கு மீறிய வீக்கத்துக்கு ஆசைப்படுவதுதான் தவறு என்று தோன்றுகிறது. அவர்களின் எதிர்பார்ப்பு சொந்தவீடு, அரசுப்பணி, மாதம் 30ஆயிரத்துக்கு குறையாமல் சம்பளம் என்று பெரிய பட்டியலே தயாரித்து வைத்திருக்கிறார்கள். இந்த தகுதியுடன் இருக்கும் மாப்பிள்ளை வீட்டில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்குமே என்பதை இந்த பெண்ணைப் போன்றவர்கள் வசதியாக மறந்துவிடுவதுதான் சிக்கலே.

வசதிக்குறைவாக இருக்கும் பல இளைஞர்கள் வரதட்சணையை எதிர்பார்க்காமல் தங்களைப்போன்று கஷ்டப்படும் குடும்பங்களில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு சிரமதிசையில் இருக்கும் பெண்கள் கூட நாம் பிறந்த வீட்டில்தான் சிரமத்தை அனுபவித்துவிட்டோம். போகும் வீட்டில் ரத்தின கம்பளத்தில் போய் இறங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த ஆசையை முழுவதும் தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் புகுந்தவீட்டில் கணவனுடன் நாமும் உழைத்து நமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமீப காலமாக வெகுவாக குறைந்து வருகிறது.

தானும் உழைக்கத் தயாராக இருக்கும் பெண்களுக்கு கொடுமைக்கார அரக்க குணத்துடன் கணவனும், கணவன் குடும்பத்தாரும் அமைகிறார்கள். வரும் மனைவியை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஆணின் குடும்பத்துக்கு ராட்சச குணத்துடன் மருமகள் அமைகிறாள். இந்த ஏட்டிக்கு போட்டியான கணக்கு டேலி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை.

---------------------------
இணைய தளத்தில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து விளம்பரம் செய்ய இயலாதவர்களும், புரோக்கர்களிடம் அவ்வப்போது நூற்றுக்கணக்கில் என்று கொடுத்தே பல ஆயிரங்களை இழக்க வேண்டும் என்று அஞ்சும் பலருக்கும் நாளிதழ்களில் உள்ள வரிவிளம்பரங்கள் மூலம் நல்ல வரன்கள் அமைந்துவிடுவதும் உண்டு.

ஆனால் இப்படி வரும் விளம்பரங்களை சில புல்லுருவிகள் பயன்படுத்திக்கொண்டு பெண்ணை அல்லது மாப்பிளையை ஏமாற்றும் கதைகளை அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு 07.04.2013 அன்று ஒரு நாளிதழின் திருச்சி பதிப்பில் மணமாலை பகுதியில் வெளிவந்த விளம்பரம் பார்த்து ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். மாப்பிள்ளை சுயதொழில் என்று குறிப்பிட்ட விசயம் அந்த நபரின் கண்ணை உறுத்தியிருக்க வேண்டும். அதை வைத்து தூண்டில் வீசியிருக்கிறார். அதாவது தான் ஒரு எக்ஸ்போர்ட், இம்போர்ட் கம்பெனி வைத்திருப்பதாகவும், சுயதொழிலில் நீங்கள் தயாரிக்கும் பொருள் ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக இருந்தால் தான் ஏற்றுமதி ஆர்டர் எடுத்து தருவதாகவும், குடும்பம், உடன்பிறப்பு, பூர்வீகம், உறவுகள் இன்னும் பிற விபரங்களை சாதாரண தபாலில் அனுப்பவும். ரிஜிஸ்டர், கூரியர் தபால்கள் வாங்குவதில்லை. போனிலும் பேசுவதில்லை. அதனால் சாதாரண தபாலில் அனுப்புங்கள் என்று எழுதியிருந்தது.

சாதாரணமாக இப்படி ஒரு கடிதம் வந்தால் உடனே பதில் எழுதுவதுதான் பெரும்பாலானோரின் வழக்கமாக இருக்கும். ஆனால் நாங்கள் அப்படி அவசரப்படவில்லை. தெளிவான முகவரி கூட இல்லாமல் போன் எண் இல்லாமல் ஒருத்தன் அந்த முகவரிக்கு கடிதம் எழுத சொல்கிறான் என்றால் போஸ்ட் ஆபீசில் யாரையோ கைக்குள் வைத்துக்கொண்டு அந்த கடிதத்தை பெற்றுக்கொள்வான் என்று ரொம்ப எளிதாக யூகிக்க முடிந்தது.

அவன் கடிதம் எழுதியிருந்த லெட்டர்பேட் ரொம்ப சிம்பிளாக இருந்தது. நிறைய டிசைன் செய்து காஸ்ட்லியாக உருவாக்கியிருந்தால்தான் பிராடு கம்பெனியாக இருக்கும். இப்படி சிம்பிளாக இருந்தால் நம்பகத்தன்மை கூடும் என்று நினைத்திருந்தானோ என்னவோ. ஆனால் எங்களுக்கு கடிதத்தை பார்த்த மாத்திரத்தில் மோசடி என்பது புரிந்தது. ஒரு முக்கிய இடத்தில் அலுவலகம் அமைத்து பந்தா காட்டி நம்பவைப்பவர்களே சடாரென்று கம்பிநீட்டிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது சரியான போஸ்டல் அட்ரஸ் கூட தராத மன்னார் அன் கம்பெனியை அவ்வளவு எளிதில் நம்பிவிடுவோமா என்ன... இன்னும் எப்படி எப்படி எல்லாம் யோசித்து ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களோ...

நண்பர்களே ஜாக்கிரதை. மோசடி வலைகள் பல்வேறு வழிகளில் பின்னப்படலாம். இன்டர்நெட், ஈமெயிலில் இதைத்தாண்டிய ஆபத்து உண்டு. கவனமுடன் நடந்துகொள்ளுங்கள். இது மாதிரி புது டெக்னிக் இருந்தால் (நான் இந்த பதிவில் சொல்லியிருப்பது மிகவும் பழைய டெக்னிக்காக கூட இருக்கலாம்) பதிவேற்றுங்கள். நிச்சயமாக நான்கு பேருக்காவது அதனால் நன்மை விளையும்.

போனில் முக்கியமான நபர் அழைப்பார் என்று காத்திருக்கும்போது டெலி மார்கெட்டிங் போன் வந்தால் எவ்வளவு எரிச்சல் வருமோ அதை தாண்டி கோபம் இந்த கடிதத்தைப் பார்த்ததும் வந்தது. சூப்பரா இல்லாவிட்டாலும் நார்மலா ஒரு ஜாதகம் வரும் என்று எதிர்பார்த்திருக்கும் வேளையில் இங்கேயும் மார்க்கெட்டிங் லெட்டர் என்றால் கோபம் வராமல் என்ன செய்யும்?

புதன், 13 மார்ச், 2013

அணு குண்டுல இருந்து கர்ணன் கவச குண்டலம் காப்பாத்துமா?

18.03.2013 தேதியிட்ட குங்குமம் வார இதழ்ல கே.என்.சிவராமனின் கர்ணனின் கவசம் தொடர்கதையின் முதல் அத்தியாயத்தை படிச்சதும் என்னை மாதிரி சாதாரணர்களுக்கு இந்த சந்தேகம்தான் வரும். அதாவது அணுகுண்டோட பாதிப்புல இருந்து கர்ணனின் கவச குண்டலம் காப்பாத்துமா என்ற கேள்விதான் இது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா செளந்தர்ராஜன் ஒரு நாளிதழின் ஞாயிறு இணைப்பு வாரஇதழ்ல தினம் ஒரு உயிர், சிவம் அப்படின்னு ரெண்டு தொடர்கதை எழுதினாரு. அதை விடாம படிச்சிடுவேன். ஒவ்வொண்ணும் ஒரு வருடம் (சுமார் 50 வாரங்கள்) வெளிவந்தது. நான் இதுமாதிரியான அமானுஷ்ய மர்மத்தொடர்களின் ரசிகன். இப்பவும் இந்த கதைகளை நூலகத்துல இருந்து இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால எல்லாவிதமான தொடர்கதைகளுக்கும் தனி வாசகர் வட்டம் இருந்தது. சென்னை தொலைக்காட்சி வந்ததும் பத்திரிகைகளில் கதை படிக்கிறவங்க எண்ணிக்கையில கேன்சர் மாதிரியான ஒரு பாதிப்பு ஏற்படத்தொடங்கி செயற்கைக்கோள் தொ(ல்)லைக்காட்சிகள் வந்ததும் கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜுக்கே போயிடுச்சு.

புத்தகம் படிக்கிறதுக்கு நாம செலவழிக்கிற நேரத்தைப்போல குறைந்தது 4 மணி நேரத்தை நமக்கு தெரியாம தொல்லைக்காட்சிகள் எடுத்துக்குது. அதை யாரும் உணர்றது இல்லை. அதை இப்போ பேசி என்ன ஆகப்போகுது.

சாதாரணமான திகில் கதைகளை விட அமானுஷ்யங்கள் கலந்த மர்மக்கதைகள் எப்போதுமே வாசகர்களின் ஆதரவைப் பெறக்கூடிய சூழ்நிலை இன்னும் தொடருதுன்னு நினைக்குறேன். அவர்கள் அதற்கு தேர்ந்தெடுக்கும் கதைக்களனும் கருவும் அழுத்தமானதா இருக்கணும். பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இதுமாதிரியான அமானுஷ்ய கதைகளுக்கு கோவில் சிலைகள், அதன் புராணபழமை காரணமாக பலகோடி மதிப்பு, நவபாஷான சிலை மாதிரி சக்தி அது இதுன்னு பல கதைக்கருவை கையாண்டாங்க.

அதெல்லாம் ரொம்ப பழைய பஞ்சாங்கம். அந்த மாதிரி பழைய புராணத்துல உள்ள விசயத்தை கையில் எடுத்துகிட்டு இப்போ உலகையே மிரட்டிகிட்டு இருக்குற அணுஉலை, அணுகுண்டு பிரச்சனையிலிருந்து தப்பிப்பது எப்படின்னு ஒரு டிராக்கை பிடிச்சு இந்த கதையை தொடங்கியிருக்காங்க.

எனக்கு தெரிந்த டாக்டர் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அணுகுண்டு கதிர்வீச்சால கரப்பான்பூச்சி சாகாது. அதன் இறக்கையில சுரக்குற ஒரு திரவம் அணுக்கதிர்வீச்சை தடுக்கும் அதை நசுக்கிதான் கொல்லணும்னு சொன்னார். இது உண்மையா, பொய்யான்னு எனக்கு தெரியலை. நான் இந்த கருவை மையமா வெச்சு ஒருத்தர் சயின்ஸ் பிக்சன் கதை எழுதுனா எப்படி இருக்கும்னு நினைச்சேன்.

அதையெல்லாம் தாண்டி கர்ணனின் கவசகுண்டலம் சூரிய வெப்பம் மட்டுமில்ல, அணு வெப்பத்தை கூட எதிர்க்கும்னு ஒரு வரியை யோசிச்சு அந்த கவச குண்டலங்களை தேடி வர்றவங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை குறிவெச்சு கிளம்புறாங்கன்னு முதல் அத்தியாயத்திலேயே பீதியை கிளப்பியிருக்கார் கே.என்.சிவராமன்.

குங்குமம் சன்குழும பத்திரிகைன்னு எல்லாருக்கும் தெரியும். கர்ணனின் கவசகுண்டலம் தலைப்புலேயே மூணு சூரியன் படம் (தலைப்புள்ளியா). கதையோ அணு வெப்பத்தை தாங்கக்கூடிய கனிமம் குறித்து பேசப்போற மாதிரி தெரியுது. (அது வெப்பத்தை மட்டும் தடுக்குமா, அணுக்கதிர்வீச்சையே தடுக்குமான்னு யாருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறது?) எது எப்படியோ, 25 வாரத்துக்காவது இந்த தொடர் வெளிவந்தா ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல அமானுஷ்ய தொடர்கதை படிச்ச ஃபீலிங் கிடைக்கும்.

பார்ப்போம்...ஏன்னா, கலைஞர் டிவியில ராஜேஷ்குமார் நாவல் ஒண்ணு உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சனிக்கிழமை தொடரா வெளிவந்துச்சு. மால்குடி சுபா அழுத்தமான குரல்ல சொல்லவா சொல்லவா உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சூப்பரா பாடின டைட்டில் பாடல் கூட அனைவரையும் கவரும்படியா இருந்துச்சு. ஆனா 10 வாரம் கூட வெளிவரலைன்னு நினைக்குறேன். (பத்திரிகையில இந்த மாதிரி ஸ்பான்சர் பிரச்சனை இருக்காது)

வியாழன், 29 நவம்பர், 2012

ஜெமினி



பொதுவாக சிறைத்தண்டனை என்பது தவறிழைத்தவர்கள் தங்கள் தப்பை உணர்ந்து திருந்தச்செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது எந்த அளவுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது? இதற்கான சின்ன விளக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜெமினி திரைப்படத்தில் இரு வரி வசனத்தில் சொல்லப்பட்டிருந்தது.

மிக ஜாலியான எண்டர்டெயின்மெண்ட் படம் என்று ஒரு சாரரும், இந்த மாதிரியான மசாலா படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழ் சினிமாவின் உலகத்தரம் கெட்டுவிடும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இப்போது அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. அந்த படம் தொடர்பாக நான் எழுதிய பழைய பதிவு உங்கள் பார்வைக்கு.
******************************


ஓ போட்ட ஜெமினி படம் சாதாரண மசாலாதான். அந்தப் படத்துலயும் நல்ல மெசேஜ் நிறையவே இருக்குங்க. வெறும் பாடல்களால மட்டும் அந்தப்படம் நல்லா ஓடலை. கலாபவன்மணியோட மிருகக்குரல் மிமிக்ரியும் படத்தோட அதிரடி வெற்றிக்கு முக்கியக் காரணம்னு விக்ரமே ஒத்துக்குவார். இந்தப் படத்தின் இயக்குநர் பெயரும் "சரண்" (அவரோட முழுப்பெயர் சரவணன்னு சொல்றாங்க.) - தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன்  அப்படிங்குறதுல சின்ன சந்தோஷம்.


முதலில் சில நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

ஜெமினியில் தேஜாவின் கையாள் ஒருவர், "இந்த சரக்கை மட்டும் அப்படியே கை மாத்தி விட்டா கோடி ரூபாய் ஓடி வரும்." என்பார்.

உடனே தேஜா அந்த ஆளிடம்,"நீ எவ்வளவு படிச்சிருக்க?" என்று கேட்பார்.

"ரெண்டாங்கிளாஸ்" என்று சொல்லும் ஆளின் முகத்தில் தெரியும் பூரிப்பை பார்க்க வேண்டுமே.அடா...அடா... வில்லன் சம்மந்தப்பட்ட காட்சி என்பதை மறந்து காமெடிக்காட்சியைப் போல் படமாக்கியிருப்பார்கள்.

அதற்கு தேஜா கொஞ்சம் கூட சிரிக்காமல், "நம்ம கேங்லயே அதிகமா படிச்சுட்டோம்னு திமிர்ல பேசுறியா"ன்னும்பார். பெரிய நகைச்சுவை நடிகர்களின் காட்சிக்கு சவால் விடும் வகையில் சிரிப்பை ஏற்படுத்தும்.

கமிஷனர், ஜெமினி, தேஜா இருவரையும் ஒரு செல்லில் அடைத்து வைத்திருப்பார்கள். ரொம்பவும் வெறுத்துப் போன ஜெமினி,"திருந்தித் தொலையேண்டா"என்று தேஜாவைப் பார்த்து சொல்வார்.

அதற்கு தேஜா,அவர் இடுப்பின் இரு புறமும் கைகளை ஊன்றிக் கொண்டு,"நான் என்ன தப்பு பண்ணினேன்...இப்ப திருந்த சொல்ற..."என்று கேட்கும்போது ஒரு அப்பாவித் தனம் தெரியும்.

இது மாதிரி வில்லன் வரும் காட்சிகள் அனைத்தையும் நகைச்சுவையுடனேயே படமாக்கியதற்கு சேர்த்து ஒரு ஆப்பு வெச்சாங்க பாருங்க...வெறுத்துப் போயிட்டேன். எதை சொல்றேன்னு புரியலை?

படத்துல காமெடி நடிகர்கள் நடிச்ச காட்சிகள்தான். அந்த மாதிரி மொக்கையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அது கிடக்கட்டும்.

நான் சொல்ல வந்த விஷயம் வேற. நல்ல கமிஷனரா வர்ற மலையாள நடிகர் முரளி,"குற்றவாளிகளைத் திருத்துறதுக்குதான்  சிறைச்சாலைன்னா தண்டனை முடிஞ்சு வர்ற நபர்கள் தவறு செய்யக்கூடாது...

ஆனா நிஜத்துல அப்படி நடக்குறது இல்லையே. ஏன் அப்படி?

சட்டம்னுங்குறது ஃப்ரிட்ஜ் மாதிரி ஆயிடுச்சு. தண்டனை அனுபவிக்க உள்ள போறவங்க வெளியில வரும்போது எந்த மாற்றமும் இல்லாம அப்படியே  ஃப்ரெஷ்ஷா வந்து கிரைம் பண்றாங்க.சமூகமும் சில அதிகாரப் பொறுப்புகளும் அவங்க திருந்தி வாழ்றதை அனுமதிக்கிறது இல்லை.  இந்த நிலைமையை மாற்ற எதோ என்னாலான முயற்சி. அவங்க திருந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர்றேன்."அப்படின்னு சொல்வார்.

எல்லாரும் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயங்க இது.

நான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கிரணைப் பார்த்து ஜொள் விடாம சமர்த்துப்பிள்ளையா இருக்கேன்னு இப்பவாச்சும் நம்புறீங்கிளா?

வேலூர் சிறைச்சாலையும் குற்றவாளிகளை மாற்ற, தொழிற்சாலையாக மாறி வரும் விஷயம் தினமலரில் வெளிவந்துள்ளது.

அந்த செய்தி கீழே...

வேலூர்: வேலூர் ஆண்கள் சிறையில் குற்றவாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழிற்சாலையாக மாறி வருகிறது.வேலூர் தொரப்பாடியில் பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் 1867ம் ஆண்டு அமைக்கப்பட்ட மத்திய சிறை, தமிழகத்தில் முதல் சிறை என்ற பெருமை உடையது. இந்த சிறையில் 2,130 கைதிகள் நிரப்பும் வசதிகள் உள்ளன.


சென்னையில் புழல் சிறை துவங்கப்பட்டதால், தற்போது, இங்கு 935 கைதிகள் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள் 215 பேரும், ஐந்து முதல் பத்து ஆண்டு தண்டனை பெற்ற கைதிகள் 230 பேரும் உள்ளனர்.தண்டனை அனுபவிக்கும் இடமாக இருந்த சிறைச்சாலை தற்போது, தொழிற்சாலையாக மாறி வருகிறது. இங்கு ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி, டெய்லரிங் போன்ற தொழிற்பயிற்சிகள் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.தொழிற்பயிற்ச்சி பெற்ற கைதிகள் மூலம் ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி ஆகியவை தயார் செய்யப்படுகிறது. கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.


* ஷூ தொழிற்சாலை: தமிழகத்தில் வேறு எந்த சிறையிலும் ஷூதயாரிக்கும் தொழிற்சாலை இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் துவங்கப்பட்ட ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் இது வரை 10 லட்சம் ஷூக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 50 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரம் ஜோடி ஷூக்கள் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டு அனைத்தும் மூன்று மாதத்தில் செய்து முடிக்கப்பட்டது.இந்த ஷூக்கள் போலீஸ், தீயணைப்பு துறை, சிறைத்துறையில் மூலம் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஷூ தயாரிப்பு பணியில் 100 கைதிகள் வேலை பார்க்கின்றனர். ஒரு நாளைக்கு 300 ஷூக்கள் தயாரிக்கப்படுகிறது.இதற்காக 60 லட்ச ரூபாய் மதிப்பில் வெளி நாட்டில் இருந்து இரு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் ( நன்றாக வேலை செய்பவர், கொஞ்சம் வேலை செய்பவர், புதியதாக வேலை செய்பவர் ) என்று தரம் பிரிக்கப்பட்டு மாதம் 600 ரூபாய், 800 ரூபாய், 1,500 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகின்றது.இதில், 40 சதம் இயந்திரத்தின் மூலமும், 60 சதம் கையாலும் தயாரிக்கின்றனர். காலை 7.30 மணி முதல் பகல் 11.30 வரை, மதியம் 1.30 முதல் மாலை 4. 30 வரையில் பணி நடக்கிறது.பணி நேரத்தில் இரு முறை சிறைத்துறை நிர்வாகம் சார்பில் கைதிகளுக்கு டீ கொடுக்கின்றனர்.


* டெய்லரிங் யூனிட்: இங்கு 26 தையல் மிஷின்கள் உள்ளது. 33 பேர் வேலை செய்கின்றனர். ஜாக்கெட், சுடிதார் தைக்கின்றனர். நல்ல லாபம் தரும் இந்த தொழிலை செய்து வந்த பத்து பேர் விடுதலையாகியதும் சொந்தமாக கடை வைத்துள்ளனர்.


* ஃபைலிங் பேட் யூனிட்: இங்கு 75 பேர் வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 3,000 வீதம் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ஃபைல் பேடு செய்கின்றனர். அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.இந்தாண்டு 5 லட்சம் ஃபைல் பேடுகள் சப்ளை செய்ய ஆர்டர் பெற்றுள்ளனர். மாதம் 750 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.


* மெழுகு வர்த்தி யூனிட்: மூன்று பேர் வேலை செய்கின்றனர். இங்கு தயார் செய்யப்படும் மெழுகு வர்த்திகள் வேலூர் ரோட்டரி சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.


* பவர் லூம்: நான்கு பவர் லூம்கள் உள்ளன. பத்து பேர் வேலை செய்கின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு பாண்டேஜ் துணி தயாரித்து சப்ளை செய்கின்றனர். மாதம் 8,000 மீட்டர் பாண்டேஜ் துணி தயாரிக்கின்றனர். ஒரு மீட்டர் விலை 12 ரூபாய். இங்கு பணிபுரியும் கைதிகள் மாதம் 1,500 வரை சம்பளம் பெறுகின்றனர்.


வேலூர் மத்திய ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சேகர் கூறியதாவது:இங்குள்ள மினி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் பெரும் பாலும் ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட காலகைதிகள். ஒரு கமிட்டி மூலம் தேர்வு செய்து பயிற்சிகள் கொடுத்து வேலைக்கு அனுப்புகின்றோம்.நிறைய ஆர்டர்கள் வருகிறது. இவர்கள் சம்பாதிக்கும் பணம் இவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும், இவர்கள் குடும்பத்தினருக்கும், குழந்தை படிப்பு செலவுக்கும் மாதா, மாதம் அனுப்பப்படுகிறது. ஆர்வத்துடன் கைதிகள் வேலை பார்க்கின்றனர்.வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மூலம் வேலை வாய்ப்பு, கல்வி, தோட்டம் பராமரிப்பு போன்றவை அளிக்கப்படுகிறது. விடுலையாகி வெளியே செல்லும் கைதிகள், இந்த பயிற்சி மூலம் யாரையும் எதிர் பார்க்காமல் சுய தொழில் செய்ய அவர்களுக்கு வசதியாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்பாராவிதமாக தவறிழைப்பவர்கள் தண்டனையை அனுபவித்த பிறகு வெளியில் வந்து மக்களோடு மக்களாக வாழும் வழி இருந்தால் அவர்கள் தவறான பாதையையே வாழ்க்கையாக்கிக் கொள்ள மாட்டார்கள்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

நாகராஜசோழன் - MA MLA

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த அமைதிப்படை திரைப்படத்தில் அமாவாசை (எ) நாகராஜ சோழன் - சோழர் பரம்பரையிலிருந்து ஒரு MLA என்று பேசும் வசனம் அல்வா மேட்டர் போல் பிரபலம். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய விளம்பரங்களை அவ்வப்போது நாளிதழில் பார்த்தேன். இளையபாரதத்தில் பழைய பதிவுகளை தூசு தட்டும்போது 2010 ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவு ஒன்றில் அமைதிப்படை என்ற வார்த்தையை பார்த்ததும் அது இங்கே மீள்பதிவாக.
***********************************************

இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிக அளவில் செலவு செய்வதே மதுவுக்காகதான். குடும்பத்தில் தாம்பத்ய பிரச்சனைக்கும் மதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

மேலும், அரசுக்கு வருமானம் பற்றாக்குறையாகிவிடும் என்ற காரணம் சொல்லியே  மதுவிலக்கு என்ற விஷயத்தை எல்லாரும் தட்டிக்கழித்துவிருகிறார்கள்.ஆனால் என் மனதுக்குத் தோன்றிய உண்மைக்காரணம் என்ன தெரியுமா?

அரசியல் பகை காரணமாகத்தான் பெரும்பாலான வன்முறைகள் அரங்கேறுகின்றன. இதில் நடக்கும் படுகொலைகளை செய்பவர்கள் மது அருந்திதான் செய்வார்கள்.மது என்னும் அரக்கன்தான் அவர்களை மிருகத்தைவிட கேவலமாக்கிவிடுகிறது.

மது அருந்துவதே மிகப்பெரிய சிக்கலாகிவிட்டால் இது போன்ற குற்றங்களை
செய்ய ஆள் வேண்டுமே.உண்மை இப்படி இருக்க மதுவிலக்கை அவர்கள் எப்படி கொண்டுவருவார்கள்?

சத்யராஜ் இரு வேடங்களில் நடித்த அமைதிப்படை திரைப்படம் நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வெளிவந்தது என்று நினைக்கிறேன்.அமாவாசை (எ)
நாகராஜசோழன் கதாபாத்திரம்  பெரும்பாலான அரசியல்வாதிகளைப் பிரதிபலிக்கும்விதமாக அமைந்திருந்ததால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஒரு காட்சியில் மணிவண்ணன்,"இந்த சாதி கருமத்தை யாரு கண்டுபிடிச்சா?" என்று சத்யராஜிடம் கேட்பார்.

"மந்திரம் சொன்னவங்க கண்டுபிடிச்சதை மந்திரிமாருங்க கெட்டியா புடிச்சுகிட்டாங்க." என்பது சத்யராஜின் பதில்

"ஏங்னா...இந்த சாதியை ஒழிக்கப்போறதா மேடைக்கு மேடை பேசுறீங்கிளே...நிசமாலுமா?"

"உனக்கு வேற எதுவும் தொழில் செய்யத் தெரியுமா?"

"அய்யய்யோ...என்னங்க கெட்ட வார்த்தை எல்லாம்.?"

"தெரியாதுல்ல... எனக்கும்தான். நாம சாதியை ஒழிச்சுட்டோம்னா அப்புறம் நீயும் நானும் மட்டுமில்ல, நம்மளை மாதிரி பொழைப்பு நடத்துற எல்லாருமே சோத்துக்கு பிச்சைதான் எடுக்கணும்."

இதுவும் சத்யராஜ், மணிவண்ணன் இடையே நடக்கும் உரையாடல்தான்.

மதுவிலக்குக்கும் இந்த வசனம் பொருந்தும்.

மது அருந்தும் வழக்கமுடையவர்கள் உடனே என்னைத் துவைத்துக் காயப்போடும் எண்ணத்துடன், "இந்தப்பழக்கம் இல்லாத நீ மட்டும் ஆயிரம் வருஷம் தாண்டி தஞ்சாவூர் பெரிய கோயில் மாதிரி அப்படியே இருக்கப் போறியா?" இப்படி பின்னூட்டம் இட வாய்ப்பு நிறையவே உண்டு.

நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் மதுவால் சில தீமைகள் பலரது வாழ்வைப் புரட்டிப் போடும் அளவுக்கு இருக்கின்றன என்பதை நான் உறுதியாக சொல்வேன்.

பொருளாதாரதீமை: மதுவுக்காக ஆயிரம் ரூபாய் செலவழிப்பவனின் வருமானம் பத்தாயிரம் ரூபாயாக இருந்தால் பாதிப்பு உடனடியாக வெளியே தெரிவதில்லை. ஆனால் மூவாயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் குடும்பத்தை உடனடியாக சீர்குலைத்துவிடும்.

உடல்நலம் தொடர்பான தீமை: சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம், தாம்பத்ய குறைபாடு உள்ளிட்ட பல வியாதிகள் மதுவால் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதும் உண்மை.

உறவுசீர்குலைவு: தாம்பத்யத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களில் தொடங்கி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகள் கூட உங்களை வெறுக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த தீமைகள் எல்லாம் குடிக்காதவர்கள் குடும்பத்தில் இல்லையா என்று கேட்பார்கள். இது சரியான பதில் இல்லை என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

இதைவிட ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு பலரை பரலோகம் அனுப்புவதுதான் அது.

மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு.

வியாழன், 22 நவம்பர், 2012

மோசடியில் சிக்கும் மக்கள்




கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பண விஷயத்தில் படித்தவர், படிக்காதவர் என்று பலரும் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் பணத்தாசையை அதிகமாக காட்டும் விளம்பரங்களை பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏமாந்தது சரி. இப்போதும் பெரிய அளவில் ஊடகங்களில் விளம்பரம் செய்தால் அவர்கள் மோசடி செய்ய வாய்ப்பிருக்காது என்று முழுவதுமாக தங்கள் பணத்தை அர்ப்பணித்துவிட பெரும்பாலான மக்கள் தயாராக இருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.

1ரூபா விதைச்சா 1 கோடிரூபாய் அறுக்கலாம் என்ற ரீதியிலான விளம்பரங்களுக்கு பஞ்சமே இல்லை.  பணப்பட்டுவாடாவில் சிக்கல் வந்து முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று கலைமகள் சபா, அனுபவ், ரமேஷ்கார்ஸ், என்று ஆரம்பித்து ஈமு கோழிகள் வரை எவ்வளவோ உதாரணங்களை பேப்பரில் படித்திருக்கிறேன்.

ஆனாலும் சினிமாக்களில் ஒரே பாட்டில் கதா நாயகன் கோடீஸ்வரனாவது போல் திருவாளர் பொது ஜனமும் ஆசைப்படுவதும் இது மாதிரியான சிக்கல்களுக்கு ஒரு காரணமாக இருக்குமோ.

நிதி நிறுவன மோசடிகள் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துவிட்டு 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவு இப்போது மீண்டும் உங்கள் பார்வைக்கு.


மிகப்பெரிய கோடீஸ்வரர் சென்னை சிட்டி பஸ்சில் செல்லும்போது மூன்று ரூபாய் கொடுத்து டிக்கட் எடுக்க காசு இல்லை என்றால் நடத்துனர்,"யோவ்...சாவுகிராக்கி, எறங்குயா முதல்ல..."என்று நல்ல வார்த்தை(?!) சொல்லி அவரை இறக்கிவிடுவார் அல்லது செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் பிடித்துக்கொடுப்பார்.அந்த நேரத்தில் அந்த பணக்காரரின் சொத்துக்கள் எதுவும் உதவிக்கு வராது.

ஒரு நிதி நிறுவனத்திடம் எல்லாரும் ஒரே நேரத்தில் போட்ட பணத்தை திருப்பிக்கேட்டால் ஏற்படுவதும் இதே நிலமைதான். ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் தவிர்த்து நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சில நிறுவனங்களும் திடீரென மூடப்படுவதற்கும் இதுதான் காரணம்.நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பேராசிரியர் கொடுத்த விளக்கம்தான் இது.

10.01.2010 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் இது தொடர்பான விவாதம் நடந்தது.அதில் புதியதாக சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும் பல விஷயங்களைப் பூசி மெழுகிவிட்டார்கள்.

அதுசரி...நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததில் சில அரசு அதிகாரிகளும் இருந்தார்கள்.பல விதிகளுக்கு உட்பட்டுதானே அவர்களாலும் பேச முடியும்.

இதில் என்னை நெருடிய விஷயம் என்னவென்றால் பதிவு செய்யப்படாத நிறுவனம் பற்றிய தகவல்களை சாதாரண குடிமக்கள்தான் கண்டறிய வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு திறமை இருந்தால் இவ்வளவு நாளும் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்க மாட்டார்களே.

மக்கள் பேராசையால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவது பெரும்பாலும் முறையாக பதிவு செய்யப்படாத நிறுவனங்களில்தான். இதற்கு ஓரளவு எளிமையான தீர்வு என்னவென்றால் அரசின் இணையதளத்தில் முறையான பதிவு பெற்ற எல்லா தனியார் நிறுவனங்களின் பட்டியலையும் துறை வாரியாக வெளியிட்டுவிடலாம்.

கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் இவைதான் மக்களுக்கு அதிக நன்மையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் அவை பதிவு பெற்றால் மட்டும் போதாது. அவர்களின் எல்லை எதுவரை என்பதையும் தெளிவாக வரையறுத்து அதையும் அரசின் இணையதளம் மூலமாக மக்களின் பார்வைக்கு அளிக்கலாம்.

அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்ததும் உரிய துறையில் முழுமையாக மாணவர் பட்டியலையும் அந்த இணையதளத்தில் வெளிப்படையாக்கிவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெறாமலேயே மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களைத் தேர்வு எழுதவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலம் காணாமலேயே போய்விடும்.

ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் சில இணையதளங்களில் உடனுக்குடன் புதிய தகவல்கள் பதிவுசெய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி என்று இணைய தளத்தில் இருந்தால் அது பழைய தகவல் என்று நமக்கு புரிந்துவிடும்.ஆனால் பல தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் தொடர்பான தகவல்களை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நிதிநிறுவனத்தில் ஆரம்பித்து கல்விநிறுவனத்துக்கு போய்விட்டேன்.பரவாயில்லை...கல்வி பெற நிதி தேவை. நிதியைப் பெறவும் கல்வி ஒரு கருவியாக இருக்கிறது.

போலிகளை ஒழிக்க மேலே நான் சொன்ன சில வழிமுறைகள் நிச்சயமாக நல்ல பலன் தரும். ஆனால் நல்ல முறையில் நடைபெறும் சில நிதிநிறுவனங்களும் திடீரென மூடப்படுகின்றனவே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்.

ஆப்பு எதுவும் வெளியில் இல்லை. அதற்கும் மக்கள்தான் காரணம். கடன் வாங்கியவர்கள் திரும்ப கட்டவில்லை என்றால் அது முதலீட்டாளர்கள் தலையில்தான் துண்டாக விழும். இதிலும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வங்கியிலும் சரி, சிட்பண்ட்டுகளிலும் சரி சிறு தொகை வாங்கியவர்களில் 95 சதவீதம் பேர் ஒழுங்காக திரும்ப செலுத்துவதாகத்தான் சொல்கிறார்கள். இது உண்மையாகத்தான் இருக்கும்.

அப்போது வில்லங்கம் எங்கே இருக்கிறது. எல்லாம் சில பணக்கார முதலைகளால்தான்.அவர்கள் அப்படி பணத்தை திரும்ப செலுத்தாமல் தப்பிக்க யார் காரணம்? நிதி நிறுவனம் என்றால் நிர்வாக இயக்குனர்கள், அரசுடமை வங்கி என்றால் உயரதிகாரிகளிடமிருந்து பல மக்கள் பிரதிநிதிகள் வரை எல்லா மட்டத்திலும் தவறு செய்கிறார்கள்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுரத்தை கட்ட எத்தனை ஆயிரம் மூளைகளும் கரங்களும் கால்களும் உழைத்தனவோ? ஆனால் அதை தரைமட்டமாக்கியது மூளை இல்லாத ஒரு சிலர்தானே.

அதேபோல் ஊழலுக்கு முக்கியக் காரணம் சிலரின் பேராசைதான்.

நாலுபேர் நல்லா இருக்கணும்னா எதுவுமேதப்பு இல்லை.- இது நாயகன் படத்தில் வரும் வசனம். இதை ரொம்ப தப்பா புரிஞ்சுகிட்டு தப்பாவே செயல்படுத்துறதுக்கு கொஞ்சபேர்தான் இருக்காங்க. ஆனா இதையே நாடு தாங்காது போலிருக்கே.

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஆங்கில டப்பிங் படங்களால் நன்மையா ? தீமையா?



இப்போது சில மாதங்களாக மீண்டும் நூலகத்தில் இருந்து அதிகமாக புத்தகங்கள் எடுத்து படிக்கத்தொடங்கியிருக்கிறேன். (நேர உபயம் : மின்வெட்டு)

ஈரமான ரோஜாவே பட புகழ் இயக்குனர் கேயார் எழுதிய "இதுதான் சினிமா" என்ற புத்தகத்தை இப்போது மீண்டும் படித்தேன். சினிமா உலகத்தில் இருக்கின்ற படத்தயாரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் சிக்கல்களை தெளிவாக விளக்கும் புத்தகம் அது. இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். அதைப் பற்றி நான் இப்போது பேசவில்லை. நான் சொல்ல வந்த விஷயம் வேறு. அதில் டப்பிங் படங்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மறைமுகமாக சில சங்கடங்கள் தருவதை பற்றி எழுதியிருந்தார். அதை அப்படியே நான் தட்டச்சினால், யாராவது என் மனம் புண்பட்டுவிட்டது என்று வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறதா என்ற அச்சம் இருக்கிறது. அதனால் இத்தோடு நிறுத்திக்குவோம். அது என்ன என்று யோசிப்பவர்கள் அந்த புத்தகம் கிடைத்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.

இப்போது இந்த புத்ததமிழ் பேசும் ஜாக்கிசான் என்ற தலைப்பில் 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவை மீண்டும் தூசு தட்டியிருக்கிறேன். இப்போது புதிய பதிவுகள் போடுவதை நான் மிகவும் குறைத்துக்கொள்ள காரணம், இப்போது உள்ள சமுதாய சூழ் நிலைகள் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு திணறும் கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அந்த கோபங்கள் நாகரிகமான வார்த்தைகளாக வெளிப்பட்டால் கூட எந்த பக்கம் வழக்கு பாயுமோ என்ற சந்தேகத்துடன் பொழுதைக்கழிக்க வேண்டியிருக்கிறது. ஏன் இந்த வம்பு. இந்த நந்தன தமிழ் வருடம் முடியும் வரை அமைதி காப்போம். அதன் பிறகு இணையத்தில் எழுதுபவர்களின் கழுத்தை நெறிக்கும் சட்டப்பிரிவில் உரிய நியாயமான மாற்றம் உரிய சட்டப்படி உருவாகும் என்று நம்புவோம்.

இப்போது 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள்பிரசுரம்.

********************************************************


சமச்சீர்கல்விக்கும் ஆங்கிலத்திரைப்படத்துக்கும் தொடர்பு  இருக்கா?...


இருக்கே. பள்ளிக்கூடங்கள்ல இருக்குற பாடத்திட்டத்துக்கும் தமிழ் பேசுற ஆங்கிலப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே.

நீ எந்த பதிவு போட்டாலும் சினிமாவைத்தொடாம எழுதமாட்ட போலிருக்கேன்னு வீட்டுக்கு ஆட்டோவை அனுப்பிடாதீங்கப்பா.

ஒரு பட்டிமன்றத்துல கு.ஞானசம்மந்தன் அவர்கள், "வரவர ஜாக்கிசான் ரொம்ப அழகா தமிழ் பேசுறார். போற போக்கைப் பார்த்தா பட்டிமன்றத்துக்கு நடுவரா அவர் வந்து உட்கார்ந்துடுவார் போலிருக்கே."ன்னார். அதைக் கேட்கும் போது காமெடியாத்தான் இருந்துச்சு.

ஆனா இப்போ அதனால நமக்கு சில சங்கடங்கள் நமக்குத்தெரியாமலேயே இருக்குறது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிற செய்திதான்.

சில தினங்களுக்கு முன்பு புதியதலைமுறை வாரஇதழில் 2010 ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு துறையில் உள்ளவர்களிடமும் நேர்காணல் செய்திருந்தார்கள்.

தமிழ்த்திரைப்படத்துறையில் FEFSI தலைவர் வி.சி.குகநாதன்,"ஹாலிவுட் படங்களை அந்த மொழியிலேயே வெளியிடுங்கள். அதன் மூலம் அடிமட்ட ரசிகனும் தன் ரசனையை வளர்த்துக்கொள்ளட்டும். அதைவிட்டுவிட்டு யாரோ ஒரு ஆங்கிலேயனின் வாயசைப்பில் தமிழைத்திணித்து தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 2010ம் வருடத்தில் அதைக் கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம், தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சினிமா இளைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது."என்று கூறியிருந்தார்.

இதை வெறும் சினிமா தொடர்பான விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது.

சமச்சீர்கல்வி பிரமாதம். கலக்கப்போகுதுன்னு ஆளுங்கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் சொல்றாங்க. எதிர்க்கட்சியும் அவங்களைச்சேர்ந்தவங்களும் இது சரியில்லைன்னு வசை பாடுறாங்க. இவங்க எது சூப்பர்னும் விளக்கலை. அவங்க எது சரியில்லைன்னும் சொல்லலை.

நடுவுல என்னை மாதிரியான அப்பாவிகள் மண்டைதான் காயுது.

இப்போது சமச்சீர்க்கல்வித்திட்டத்தின் நிறைகுறையை அலசி ஆராயும் அளவுக்கு நான் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் அளவுக்கு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறனையும் மேம்படுத்தும் வ்கையில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டுமே தவிர நன்றாகப் படிக்கும் மாணவர்களை நீ, நிறைய அரசுப்பள்ளி மாணவர்களைப் போல் எழுபது சதவீதம் எடுத்தால் போதும் என்று கீழே பிடித்து இழுக்கும் வகையில் சமச்சீர் கல்வி அமையக்கூடாது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இலவசமும் இப்படித்தான். ஒரு பொருளை காசு கொடுத்து வாங்குற அளவுக்கு 
ஒருத்தனை பொருளாதார வலு உள்ளவனா மாத்துறதை விட்டுட்டு இலவசம் கொடுத்து ஒரு அடிமையாவே வெச்சிருக்குறதுக்கு உதாரணம் சொல்றேன்.இது வண்ணத்துப்பூச்சி புழு உருவமா இருக்கும்போது அதுக்கு உதவி செய்யுறதா நினைச்சு கூட்டை  உடைக்கிறதும்  இலவசம் கொடுக்குறதும் ஒண்ணுதான்.

தன்னால கூட்டை விட்டு வெளியில வர்ற வண்ணத்துப்பூச்சியாலதான் பறக்க முடியும். நாமே கூட்டை உடைச்சு அதை வெளியில விட்டா எதுக்கும் பிரயோசனமில்லாம உயிரிழக்க வேண்டியதுதான்.

******

நான் 1996க்குப் பிறகு சில ஆண்டுகள் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி செல்லும் வரை அவ்வப்போது பகுதிநேரமாக திரையரங்குகளில் பணியாற்றி வந்தேன்.(பார்த்ததே பகுதி நேரம். இதுல என்ன அவ்வப்போது?...அதையும் தொடர்ந்து பார்க்கலைன்னு அர்த்தம்.)

அதில் ஒரு தியேட்டரில் The Rock, Broken Arrow, Independence day, Golden Eye, Tommorow never dies, Air Force One, Universal Soldire, Jumanji, Evil Dead, Anaconda, The Lost World(jurassic park 3) உட்பட பல படங்களைத் திரையிட்டாங்க.

அந்தப் படங்கள்ல வர்ற வசனங்களோட உச்சரிப்பு பாதி புரியாது. ஆனா ஓரளவுக்கு வசனங்களுக்கு அர்த்தம் விளங்கிடுச்சு. அடுத்து 2000வது ஆண்டு
வாக்கில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம்ல வேலை செய்த நாட்கள்ல Star Plus சேனலில் அமிதாப் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்ப்பேன்.அப்போதும் எனக்கு ஓரளவு ஆங்கில அறிவு மேம்பட்டதை உணரமுடிஞ்சது.

நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற சமயம். எனக்கு கிரிக்கெட் மேல ஆர்வமே இல்லன்னாலும் அப்போ நான் போட்டிகளைப் பார்க்க ரெண்டு காரணம் இருந்தது.இந்தியா ஆஸ்திரேலியாகிட்ட தவிர வேறு யார்கிட்டயும் தோற்காம இறுதிப்போட்டிக்கு முன்னேறினது முதலாவது காரணம்.

அடுத்தது வேற என்ன...மந்த்ராபேடிதான். அந்தம்மா(?!) கிரிக்கெட் பத்தி அரைகுறையா புரிஞ்சுகிட்டு ஆர்வக்கோளாறுல தப்புதப்பாதான் கேள்வி கேட்கும். ரொம்ப பேர் அதைக் கேட்டாங்களோ இல்லையோ...அம்மணியோட தரிசனத்தை நல்லாவே பார்த்தாங்க.

எங்க கல்லூரி ஆசிரியர் ஒருத்தர்தான் மந்த்ராபேடி பேசுறதை டிவியில பாருங்கன்னு சொன்னார்.நாங்க எல்லாரும் சட்டுன்னு சிரிச்சுட்டோம்.

"நான் பார்க்கசொன்னது அந்த அம்மாவோட ஆங்கிலத்துக்காக. போட்டுருக்குற டிரஸ்சுக்காக இல்லை." அப்படின்னார்.

நான் கொஞ்சம் ஆர்வமா, சார்..அந்தம்மா தப்புத்தப்பால்ல கிரிக்கெட்டைப்பத்தி பேசுது. அப்போ அந்த இங்கிலீஷ் எந்த கதியில இருக்குமோன்னு கேட்டேன்.

எதுவுமே தெரியாத உங்க மாதிரி புத்திசாலிங்களுக்கு அந்த இங்கிலீஷ் போதும்  
அப்படின்னு சொல்லி, கோ எஜுகேஷன் வகுப்புல மானத்தை வாங்கிட்டார்.

இந்த கேலி கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம முயற்சி பண்ணினா நிச்சயமா ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துக்க முடியும்.

ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா இங்க எல்லாம் ஆங்கிலத்தை நம்பியா இருக்காங்கன்னுதானே நீங்க கேட்குறீங்க. அங்க எல்லாம் நாடு பூராவும் ஒரே மொழிதான். ஆனா நம்ம நாட்டுல சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வுல கலந்துக்க தலைநகர் போனா வழியில குறைந்தது ஆறு மொழியாவது கத்துக்க வேண்டிய நிலை. எத்தனை மொழி கத்துக்குறோமோ அத்தனை மனிதனுக்கு சமம்னு சொல்லுவாங்க.

அதுக்கு நேரம் ஒதுக்க எல்லாராலயும் முடியாது.அதனால நம்ம நாட்டுல எல்லாரும் ஆங்கிலத்தை இணைப்புப்பாலம் மாதிரி பயன்படுத்துற அளவுக்கு கத்துக்குறது அவசியம். அதாவது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தாய்மொழி, ஆங்கிலம் இரண்டும் கட்டாயம். அதுக்கு மேல அவங்கவங்க திறமையைப் பொறுத்து கத்துக்கலாம்.

******

செவ்வாய், 13 நவம்பர், 2012

இந்த ஆண்டு பண்டிகை எப்படி

நேயர்களே... இது ராசிபலன் அல்ல.

இது 2010ல எழுதுன பதிவு. அதை மட்டும் சிவப்பு வண்ணத்துல கொடுத்துருக்கேன். அதுல நான் வேலை பார்க்குற இடம் தொடர்பா இருந்த சில வரிகளை நீக்கிட்டு அப்படியே இங்கே கொடுத்துருக்கேன். (இப்போ நான் வேலையை விட்டுட்டு சொந்த தொழில் செய்யுறதால அந்த வரிகள் தேவைப்படலை)

******************************************************

ஒரு காலத்துல சின்ன ஊரா இருந்தாலும் அஞ்சு தியேட்டர் இருக்கும். அதுல ரெண்டு அல்லது மூணுலதான் கொஞ்சம் பெரிய பேனர் படங்களா வெளியிடுவாங்க. மற்ற தியேட்டர்கள்ல சாதாரண நாட்கள்ல அஞ்சரைக்குள்ள வண்டி மாதிரியான படங்களைத் திரையிட்டு சமாளிச்சாலும் தீபாவளின்னு வந்துட்டா தியேட்டர் கிடைக்காம முடங்கிக்கிடந்த எதோ ஒரு தமிழ் படத்தை திரையிட்டுடுவாங்க.

ரஜினி,கமல் மாதிரி பெரிய ஆளுங்க படத்துக்கு டிக்கட் கிடைக்காது. சரி அப்படியே வீட்டுக்கு திரும்பி போனா அக்கம்பக்கத்துல இருக்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு இவங்களா கவலைப்படுவாங்க.(நகரத்துல பெரும்பாலான மக்கள் அடுத்த வீட்டுக்காரனுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நமக்கு என்னன்னுதான் போவாங்க. ஆனா ஒருத்தர் புதுசா வாங்கின பொருள், உடைகள் இது மாதிரியான விஷயங்களை மட்டும் பொறாமையுடன் புறம் பேசுறதை ரொம்ப தெளிவா செய்வாங்க.) இந்த மாதிரி ஆளுங்களுக்களை நினைச்சு ரஜினி படத்துக்குதான் டிக்கட் கிடைக்கலை. எதோ ஒரு படத்தைப் பார்த்துட்டு போவோம்னு எஞ்சியிருக்குற துக்கடா தியேட்டர்ல ஒரு படத்தை பார்த்துட்டு வந்துடுவாங்க. ஆக மொத்தம், சுமாரான தியேட்டர்ல 'பிளாப்' ஆன படத்துக்கும் ஒரு வாரம் நல்ல வசூல் கிடைக்கும்.
 அதெல்லாம் அந்த காலம். இப்போ டிக்கட் கிடைக்கலைன்னா டிவிடியை வாங்கிட்டு வந்துடுறாங்க. இதை நல்லா புரிஞ்சுகிட்ட சன் பிக்சர்ஸ் எந்திரன் படத்தை திரும்பின பக்கமெல்லாம் திரையிட்டு ஒரே வாரத்துல வசூலை மூட்டை கட்டுற மார்க்கெட்டிங் உத்தியை பயன்படுத்திடுச்சு.

நானும் இப்படி தீபாவளி அன்னைக்கே படம் பார்க்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். அது அவ்வளவு சீக்கிரம் நிறைவேறலை.

1996-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி, 1997-தி லாஸ்ட் வேர்ல்டு, 1998-டைட்டானிக், 1999-முதல்வன், 2000-தெனாலி,2001- , 2002-ரமணா, 2003-பிதாமகன். அதோட நான் தீபாவளி அன்னைக்கு படம் பார்க்குறத விட்டுட்டேன். 

எனக்கு சினிமா மேல இருந்த ஆர்வம் போனதுக்கு முக்கிய காரணம் ஒண்ணே ஒண்ணுதான். தியேட்டர்ல ஆப்ரேட்டருக்கு உதவியாளரா இருந்த கொஞ்ச நாட்கள்லேயே சினிமா மேல இருந்த பிரமிப்பு போயிடுச்சு. ஒருநாள் ஆப்ரேட்டர் திடீர்னு வேலைக்கு வர முடியாத சூழ்நிலையில என்னையே படத்தை திரையிட சொல்லிட்டாங்க. அப்போ எனக்கு பதினஞ்சு வயசு.

*********************************************************
2010ல சன் பிக்சர்ஸ் மாதிரி பெரிய கம்பெனிங்க சென்னை மாதிரி மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள்ல பெரிய ஹீரோ படத்துக்கு எல்லா தியேட்டர்களையும் புடிச்சு வெச்சு படம் காட்டுற போக்கு இருக்குன்னு எழுதியிருந்தேன். இந்த ஆண்டு பொங்கலுக்கு நண்பன் படம் திருவாரூர்ல ரெண்டு தைலம்மை, சோழா அப்படின்னு ரெண்டு தியேட்டர்லயும் ரிலீஸ் ஆச்சு.

திருவாரூர் மாதிரி சின்ன ஊருக்கு இது ரொம்ப ஓவர் அப்படிங்குறது என்னை மாதிரி சாதாரண ஆளுங்களோட எண்ணம்.

இன்று காலையில் எழுதிய பதிவில் என் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள நடேஷ் தியேட்டரில் அம்மாவின் கைபேசி என்று எழுதியிருந்தேன்.

இன்று நாளிதழில் நடேஷ் தியேட்டர்ல அம்மாவின் கைபேசி ரிலீஸ் அப்படின்னு போட்டுருக்கு. காலையில கோவிலுக்கு போகும்போது பார்த்தா சோழாவில் ''போடா போடி", தைலம்மை மற்றும் நடேஷ் தியேட்டர்களில் துப்பாக்கின்னு போஸ்டர் ஒட்டியிருக்கு.

இந்த போக்கு எனக்கு வேறு சில அச்சத்தை உருவாக்கியுள்ளது. இப்படி பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட்டுன்னு பிரமாண்ட தயாரிப்பாளர்கள் எந்த சின்ன படத்தையும் விசேஷ நாள்ல திரையிட முடியாத அளவுக்கு தியேட்டர்களை ஆக்கிரமிக்கிறாங்க.

கோடீஸ்வரங்க, பன்னாட்டு நிறுவங்கள் அதிகம் இருக்குற சென்னைக்கு மட்டும் தடையில்லாம (விதிவிலக்கு தவிர்த்த இடங்கள்ல மட்டும்தான் 2 மணி நேர பவர் கட்) காசு, அதிகாரத்தை பயன்படுத்தி மின்சாரம் வாங்கிடுறாங்க. அவங்க தொழில் பாதிக்கும்னா, கோவை, திருச்சி, திருவாரூர்ல எல்லாம் நாங்க செய்யுறதுக்கு பேர் என்னன்னு யாராச்சும் விளக்கம் சொன்னா தேவலை.

ரியல் எஸ்டேட்காரங்க பலரும் தங்களிடம் இருக்கும் பணத்தை என்ன செய்யுறதுன்னு புரியாம ஆயிரம் ரூபாய் வாடகை, 20 ஆயிரம் முன்பணம் கொடுக்கக்கூடிய இடத்துக்கு 1 லட்ச ரூபாய் அட்வான்ஸ், 4 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து டைம்பாஸ் பண்றதுக்கு முக்கிய இடங்களை ஆக்கிரமிச்சுடுறாங்க. உண்மையில் தொழில் செய்ய நினைக்கும் நபர்களுக்கு கொஞ்சம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இடம் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரியை காரணம் காட்டி நகரில் பல இடங்களில் 5 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. இன்னும் பலரின் மாதவருமானமே இந்த அளவுக்கு இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இன்னும் கொஞ்ச நாளில் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது சென்னையில் இருப்பவர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கு மட்டும்தான் தானியம் வழங்கப்படும் என்று தீர்மானித்து அது அரசின் கொள்கை முடிவு. இதில் வேறு யாரும் தலையிட முடியாது என்று சொன்னால் என்ன ஆகும்? நினைக்கவே வயிற்றைக்கலக்குகிறது.

எல்லாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுற நாள்ல இப்படி ஒரு புலம்பல் தேவையான்னு கேட்குறீங்க. தொழில் வெச்ச ஒண்ணரை வருஷத்துல இந்த மாச கடை வாடகையை கடன் வாங்கி கொடுத்த வேதனையில பேசுறேன். காரணம் உங்களுக்கு தெரிஞ்ச, சென்னைவாசிகளுக்கு தெரியாத மின்வெட்டு.

சனி, 10 நவம்பர், 2012

மின் தடையால் என்ன நன்மை

5ஆம் வகுப்பு மாணவனின் கொடூர சிந்தனை - இந்த பதிவுடன் தொடர்புடைய சிறு செய்தி பதிவின் இறுதியில்....

இது கிட்டத்தட்ட மீள்பதிவுதான். இந்த தலைப்பில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன். இப்போது புதிதாக இப்படி தலைப்பிட்டு எழுதினால் அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களே கிழித்து தொங்கவிட்டுவிடுவார்கள். அந்த பழைய பதிவை சிவப்பு நிறத்தில் கொடுத்திருக்கிறேன்.

அதே விஷயத்தை எழுதும்போது இப்போதைய காலகட்டத்தில் எவ்வளவோ செய்திகள் சேர்க்க வேண்டியிருந்தன. இன்றைய செய்தித்தாள் நாளைய குப்பைத்தாள் என்று பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன். ஆனால் இன்றைய இணைய யுகத்தில் ஒரு மணி நேரம் கழிந்தாலே குப்பையாகி விடுகிறது அந்த சூடான செய்தி. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பதிவில் அவ்வளவு விஷயங்களும் மாறியிருப்பதில் ஆச்சரியப்பட ஒண்ணும் இல்லை.
 **********************
தினமும் இரண்டு மணி நேரம் மின்தடை  என்பது சிறுநகரங்களில் உள்ள பலருக்கும் இப்போது பழகி விட்டது. எந்த அளவுக்கு என்றால் அந்த மின்தடையால் நமக்கு ஏதாவது நன்மை உண்டா என்ற கோணத்தில் சிந்திக்க வைக்கும் அளவுக்கு.

நமக்கு கொஞ்சூண்டாவது மின் கட்டணம் குறையும் என்பது ஒரு புறமிருக்க, இந்த மின் தடை தினமும் காலை ஆறு மணிமுதல் எட்டு மணிவரை இருந்தபோதுதான் நகராட்சிக்குழாயில் போதுமான அளவு குடிநீர் கிடைத்தது.

காரணம் அனைவரும் அறிந்ததுதான். பலரும் மின்சார மோட்டார் மூலம் நகராட்சிக் குடிநீரை வேகமாக உறிஞ்சி விடுவார்கள். என்னை மாதிரி இன்னும் காந்திய வழியை நம்பிக்கொண்டிருப்பவர்கள் பற்றாக்குறையான குடிநீரை மட்டும் வைத்து எப்படியாவது சமாளிப்போம். வசதி படைத்தவர்கள் இந்த நீரை வைத்து வாகனங்கள் கூட கழுவுவார்கள். அவர்கள் வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுநீரைப் பாதுகாக்கிறார்களாம்.

பல ஊர்களிலும் காலை ஆறு மணிமுதல் எட்டு மணிவரைதான் பெரும்பாலும் குடிநீர் விநியோகம் இருக்கும். அந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் எங்களுக்கெல்லாம் போதுமான அளவு தண்ணீர் கிடைத்தது.

இப்போது மீண்டும் காலை எட்டு மணிமுதல் பத்துமணிவரை என்று மின்தடை. திருடர்கள் பாடு ஜாலி. என்னை மாதிரியான காந்தியவாதிகளுக்கு மறுபடியும் ஒரு சோதனை. இப்படித்தான் மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும். வேறு வழி?
******************************
அப்போது இரண்டு மணி நேர மின் தடை பழகிவிட்டதாக எழுதியிருந்தேன். ஆனால் இப்போது பல ஊர்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள 12 மணி நேரத்தில் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வந்து எட்டிப்பார்க்கிறது. இது மாவட்ட தலை நகரத்தின் கணக்கு. கிராமங்கள் என்ன கதியாகியிருக்கிறதோ தெரியவில்லை.

பொழுது விடியும் நேரத்தில் அதாவது காலையில் 6 மணி முதல் 8 மணி வரை மின்சாரத்தின் பயனைப் பெற்றது எப்போது என்று எங்களுக்கே நினைவில்லை. அந்த நேரத்தில் நகராட்சி குடி நீர் வந்தால் மோட்டார் போட்டு உறிஞ்சுபவர்கள் பாடு திண்டாட்டம்தான் என்று நீங்கள் பகல் கனவு கண்டால் அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். (மின் வேட்டு காரணமாக மனிதர்கள் உருப்படியாக தூங்கி பல மாதங்கள் ஆகிறது. அப்புறம் எங்கே இரவில் கனவு வரும்?) இப்போது அதிகாலையில் 5 மணி முதல் 6 மணி வரை சைக்கிள் கேப்பில் மின்னலைப்போல் மின்சாரம் கிராஸ் ஆகிறது. அந்த நேரத்தில் நகராட்சி குடி நீர் வருகிறது. முன்பெல்லாம் காலை 6.10 மணிக்கு மேல் வந்த குடி நீர் இப்போது மோட்டார் வைத்து திருடுபவர்களுக்காகவே 5 மணிக்கும் 4 மணிக்கும் வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும்? வேற என்ன, நகராட்சி ஊழியர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அவர்களின் அல்லக்கைகளும் தான் இப்படி மின் மோட்டார் மூலம் குடி நீரை உறிஞ்சுபவர்களில் பெரும்பான்மையாக இருப்பார்கள்.

சென்னைக்கு 2 மணி நேரம்தான் கரண்ட் கட். மற்ற ஊர்களுக்கு 22 மணி நேரம் வரை கட். இதற்கு காரணமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் கரண்ட் தருவதாக ஒப்பந்தம் போட்டிருப்பதாக சொல்கிறார்கள். இணையத்தில் மேய்ந்தபோது இப்படி தடையில்லாமல் பன்னாட்டு நிறுவங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் 218 மெகாவாட் என்று படித்த நினைவு. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 2500 மெகாவாட் வரை சென்னைக்கு மட்டுமே வழங்கப்படுவதாக வேறு ஒரு புள்ளிவிவரத்தை படித்தால் எனக்கு தலை சுற்றுகிறது. எனக்கு எது உண்மைன்னு புரியலை.

பன்னாட்டு கம்பெனிகளை காரணம் காட்டி, சென்னையில் உள்ள ஹோட்டல், தியேட்டர்கள் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகளும் நாங்கள் நஷ்டத்தில் விழுந்தால் நாடே சுடுகாடாகிவிடும் என்று தடையில்லாமல் மின்சாரம் வாங்குகிறார்களோ என்னவோ. நம்ம நாட்டுல கோடீஸ்வரனுக்கு கோடிக்கணக்குல கடன் கொடுத்து வசூலிக்காம விட்டுட்டு, இப்போ வெளி நாட்டு மூலதனத்தை காரணம் காட்டி உள்ளூரில ஒரு நாளைக்கு 200 ரூபாயும் முன்னூறு ரூபாயும் சம்பாதிச்சவனை எல்லாம் பிச்சை எடுக்குற நிலைமைக்கு தள்ளிட்டாங்க. இதைப்பத்தி வெளிப்படையா பேசவும் பயமா இருக்கு.
*********************************
மின்வெட்டினால் மக்கள் படும் அவதிகளை இணையத்தின் பல தளங்களிலும் பொதுமக்களே பதிந்து விடுவதால்தான் அச்சு ஊடகங்கள் கொஞ்சம் கொஞ்சம் வெளியிட்டு வருகின்றன. இன்று ஒரு நாளிதழில் திருவாரூர் மாவட்டத்தில் 13 மணி நேர மின் தடையால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பெட்டிச்செய்தி பிரசுரமாகியிருக்கிறது. உண்மையில் இன்றைய நிலவரம் காலை 10 மணி முதல் 12, மதியம் 4-6, இரவு 8-9 மற்றும் 11-12, நள்ளிரவு 2-3 பிறகு அதிகாலை 5-6 அவ்வளவுதான். சரியாக 16 மணி நேரம் மின் தடை. இது கடந்த 8 நாள் நிலவரம். தங்கம், பெட்ரோல் மாதிரியே தினசரி மின்வெட்டு நிலவரம் எகிறிக்கொண்டே இருக்கிறது. அச்சு ஊடங்கள் விதிவிலக்கு பெற்று 24 மணி நேரமும் மின்சாரம் பெறுவதுடன் இன்னும் என்னென்ன சலுகைகள் பெறுகிறார்கள் என்பது என்னைப் போன்ற சாமானியர்களுக்கு தெரியாது. அப்புறம் எதையாவது சொல்லி அவர்கள் கேஸ் போட்டால் எங்களால் சமாளிக்க முடியாது.
*********************************
5ஆம் வகுப்பு மாணவனின் கொடூர சிந்தனை என்று பதிவை தொடங்கியிருந்தேன். நீலம் புயல் தமிழகத்தை பெரிசா தாக்காம போயிடுச்சே அப்படின்னு கவலையோட சொன்னான் அந்த சின்ன பையன். ஏண்டா கவலைப்படுறேன்னு கேட்டா, மகாபலிபுரத்துல புயல் கிராஸ் ஆனதுக்கே சென்னையில ஓரளவு காத்தடிச்சு நிறைய மரம் விழுந்ததால மின்சாரத்தை நிறுத்திட்டாங்க. அதனால மற்ற மாவட்டங்கள்ல அன்னைக்கு ஒரு நாள் அவ்வளவா மின் தடை இல்லை அப்படின்னு டிவியில சொன்னாங்க. இதே புயல் சென்னையில அடிச்சிருந்தா அதை எல்லாம் சரி செய்ய நாலஞ்சு நாள் ஆகியிருக்கும். அது வரை நமக்கெல்லாம் கொஞ்சம் அதிகமாவே கரண்ட் கிடைச்சுருக்குமே அப்படின்னு சொன்னான்.

எனக்கு இதைக்கேட்டு பெரிய ஷாக் எல்லாம் வரலை. நான் லேண்ட் லைன் போன் எடுத்து பேசினப்போவே 15 வயசு இருக்கும். எனக்கு செல்போன் சொந்தமானப்போ 25 வயசு. அதுவும் நான் காசு கொடுத்து வாங்குனது இல்லை. நண்பர் கொடுத்தது. அதை ஆறு மாசம் வரை பயன்படுத்திய பிறகுதான் ஆயிரம் ரூபாய்க்கு அதுவும் பழைய விலையில செல்போன் வாங்கினேன். ஆனா இப்போ 5 வயசு பையனுக்கு ஸ்மார்ட் போன் கிடைக்குது. இந்த அளவு டெக்னாலஜி மலிந்து போயிருக்கும்போது தமிழகத்துல நிலவுற மின்வெட்டு பத்தி 10 வயசு பையன் பேசுறது ஒரு மேட்டரே இல்லை.

ஆனா ஒட்டு மொத்த தமிழகமும் சென்னை மக்கள் மேல இவ்வளவு கோபத்தோட எதுவும் செய்ய முடியலையேன்னு கையைப் பிசையுறது நல்லாவே தெரியுது. சென்னைக்கு 22 மணி நேரம் கரண்ட், மற்ற ஊர்களுக்கு 22மணி நேரம் கட் அப்படின்னுங்குற விஷயத்துக்கு பின்னால பல அரசியல், அரசோட கொள்கை உட்பட இன்னும் என்னென்னவோ காரணங்கள் இருக்கும். அதையெல்லாம் அலசுறதுக்கு நான் எதுலயும் நிபணர் இல்லை.

நம்மளை விட பக்கத்து வீட்டுக்காரன் நல்லா இருக்கானே, அடுத்த வீட்டுக்காரி காஸ்ட்லியான பட்டுப்புடவை எடுத்துருக்காளேன்னு சிலர் பொறாமைப்படுவாங்க. அப்போ சில அனுபவம் வாய்ந்த பெரியவர்கள், ஏம்ப்பா இப்படி பொச பொசன்னு பொங்குற. அவன் உன் காசை வெச்சா வாங்குனான். அவன் சம்பாதிச்சான். வாங்குறான். நீயும் சம்பாதி. வாங்கு அப்படின்னு சொல்லுவாங்க.

இது நாள் வரை சென்னையில் நடிகர்கள், பெரிய தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட பலரின் சொகுசு வாழ்க்கையை பார்த்து மற்ற ஊர் மக்கள் பெருமூச்சு விட்டாலும், அதன் பின்னால் ஒவ்வொரு துறையினருக்கும் ஒவ்வொரு மாதிரியான கஷ்டம் உண்டு என்பதை உணர்ந்தே இருந்தார்கள். ஆனால் மற்ற ஊர்களுக்கு மின்சாரம் கொடுக்காமல் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த சொகுசு வாழ்க்கைக்கான மின்சாரம் என்ற எண்ணம் நிறைய மக்களின் மனதில் பொங்கிக்கொண்டு இருப்பது புரிகிறது. நிச்சயமாக இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல.

எனக்கு என்னவோ சென்னையில் உள்ள பெரிய ஹோட்டல்கள், திரையரங்கம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற கேளிக்கை அதிகம் இருக்கும் இடங்களுக்கும் சமமான மின்வெட்டு என்று கோர்ட் உத்தரவு போட்டால் அடுத்த நாள் வெளி மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்கி மின்சாரம் 24 மணி நேரமும் வினியோகிப்பதுடன், புதிய திட்டங்கள் 6 மாதத்துக்குள் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தோன்றுகிறது. தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால்தானே தெரியும்?

புதன், 7 நவம்பர், 2012

விநியோகத்தில் குளறுபடிகள்

மத்திய அரசு மண்ணெண்ணை ஒதுக்கீட்டை குறைத்துவிட்டது என்று காரணம் கூறி குறைந்தது 30 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பட்டை நாமம் சாத்தும் போக்கு உத்தேசமாக 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாக இருக்கலாம். அப்போது முதல் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வரும் ஒரே விசயம், 10 லிட்டர் கொடுத்த இடத்தில் 7லிட்டர், 6 லிட்டர் கொடுத்த இடத்தில் 5 லிட்டர், 3 லிட்டர் கொடுத்த இடத்தில் 2 லிட்டர் என்று குறைத்து தகுதியுள்ள எல்லா கார்டு தாரர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் வழங்க வேண்டும் என்பதுதான். (பல கிராமங்களில் எப்போதுமே 2 லிட்டர்தான். அது வேறு விசயம்)

ஆனால் அரசு எந்திரம் எந்திரமாகவே நடந்து கொள்கிறதோ என்று வேதனைப்பட வைக்கும் அளவுக்கு கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருடமாக மண்ணெண்ணைக்காக தொடர்ந்து மக்களை சாலைமறியலில் ஈடுபட வைக்கும் அளவுக்கு விநியோக முறை குளறுபடியாக இருந்தது. இதில் என்னுடைய அனுபவத்தை முதலில் சொல்கிறேன். 1997ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட தலைநகரமாக ஆனது. அப்போதெல்லாம் சம்மந்தப்பட்ட (கிராமங்களைப் போல்) ரேசன் கடைகளிலேயே மண்ணெண்ணை வழங்கினார்கள். பிறகு திருவாரூரை இரண்டு பகுதிகளாக பிரித்து பைபாஸ் ரோட்டில் ஒன்றும், காகிதக்காரத்தெருவில் ஒன்றும் என இரண்டு மண்ணெண்ணை பங்க் அமைக்கப்பட்டது. அந்த ஆண்டு எனக்கு நினைவில்லை. அதன்பிறகு மாவட்ட தலைநகரம் என்ற கணக்கில் 10 லிட்டர் மண்ணெண்ணை வழங்கப்பட்டது. பிறகு எப்படியோ வில்லங்கம் ஆரம்பித்து மாதத்தில் 5 நாட்கள் கூட உருப்படியாக மண்ணெண்ணை வழங்காமல் திருவிழா கூட்டம் போல் மக்களை கூடி அடிதடியில் இறங்க வைத்தார்கள்.

2001-2002 ஆம் ஆண்டு வாக்கில் மண்ணெண்ணை வாங்க போய் வரிசையில் நின்றால் குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஆகும். நான் அப்படி வரிசையில் காத்து நிற்கும் நேரத்தில்தான் பொன்னியின் செல்வன் நாவலின் 5 பாகங்கள் உட்பட பல கதைப்புத்தகங்களை (வெவ்வேறு மாதங்களில்) படித்து முடித்தேன். பிறகு 2004ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 200 கார்டுக்கு மண்ணெண்ணை என்ற சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதுவரை ஒரு நாளில் எவ்வளவு பேர் வருவார்கள் என்று தெரியாமல் எப்படி எந்த பணத்தை கட்டி மண்ணெண்ணை வாங்கி வைக்க முடியும் என்று சாக்குப்போக்கு சொல்லி தப்பித்துவந்தவர்களுக்கு சுழற்சி முறை மிகப்பெரிய ஆப்பு வைத்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கள் கிழமையா?. அன்று உள்ள 200 கார்டில் 10 லிட்டர் எத்தனை கார்டுகளுக்கு, 3 லிட்டர் எத்தனை கார்டுகளுக்கு என்று துல்லியமாக தெரிந்துவிடுவதால் அதிகமாக ஏமாற்றி பொய் கணக்கு எழுத முடியாமல் போயிருக்கும்.

ஆனால் பொதுமக்களுக்கு இந்த முறை மிகப்பெரிய வரப்பிரசாதம். குறைந்தபட்சம் 10 நிமிடம் முதல் 30 நிமிடத்திற்குள் மண்ணெண்ணை கிடைத்து விடும். இப்போது கடந்த ஆண்டு மத்திய அரசின் ஒதுக்கீடு குறைந்ததை காரணம் காட்டி, பேருந்தில் முதலில் ஏறுபவருக்கு உட்கார இடம் என்ற பாணியில் 5ஆயிரம் கார்டுதாரர்களும் நள்ளிரவு 1 மணிக்கே வந்து வரிசையில் நின்று  மண்ணெண்ணைக்காக போராடி அடிதடியுடன் வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இந்த கலவரத்தை அடக்க மாவட்ட நிர்வாகம் போலீசாரை அனுப்பி வைத்ததுடன் விநியோகமுறையை ஒழுங்கமைக்க உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாருக்கு இது போன்ற வேலைகள் எல்லாம் கூடுதல் பணிச்சுமையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மாதிரி பொருட்கள் எல்லாம் எனக்கு மானிய விலையில் தேவையில்லை, நான் உழைத்து சம்பாதித்துக்கொள்கிறேன் என்ற மனநிலைக்கும் என்னால் செல்ல முடியவில்லை. தினசரி இரண்டு முதல் 4 மணி நேரம் மட்டுமே மின்சார விநியோகம் இருப்பதால் என்னால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிப்பதே பெரும்பாடாகிவிருகிறது. இந்த நிலையில் இப்படி பொதுவிநியோகத்திட்டத்தில் கிடைக்கும் பொருளுக்கு கையேந்தி நாள் முழுவதும் காத்துக்கிடந்தாலும் கிடைக்குமா கிடைக்காதா என்று ஜோசியம் பார்க்க வேண்டிய நிலை.

என்னமோ அரசு எந்திரம் எல்லா விசயத்துலயும் அச்சடிச்சு கையெழுத்து போட்ட ரூல்ஸ் படிதான் செயல்படுற மாதிரியும், வாய்மொழி உத்தரவே எந்த அமைச்சரும், அதிகாரியும் போடாதமாதிரி நடந்துகிட்டாங்க. ஆனால் இப்போது நவம்பர் 2012 ஆம் ஆண்டு மண்ணெண்ணை வழங்கும் இடத்தில் 10 லிட்டர் கார்டுதாரர்களுக்கு 7 லிட்டரும், 3 லிட்டர் கார்டுதாரர்களுக்கு 2 லிட்டரும் மட்டுமே வழங்கப்படும் என்று எழுதி போட்டிருக்கிறார்கள். அதன்படிதான் வழங்குகிறார்கள். அப்புறம் என்ன ...............த்துக்கு எல்லா கார்டுதாரர்களையும் ஒரே நாளில் கூடி கும்மி அடிக்க விடுகிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று 6-11-2012 அன்று எனக்கு தெரிந்த ஒருவர் காலையில் ஒன்பதரை மணிக்கு சென்று பகல் 1 மணிக்குதான் வாங்கியிருக்கிறார். பெண்கள் என்றால் கூட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். அதிகாலை 3 மணிக்கு சென்று வரிசையில் நின்றவர்கள் பகல் 11 மணிக்கு வாங்கியிருக்கிறார்கள்.

வழங்கும் அளவைக் குறைத்தபிறகும் பழையபடி சுழற்சி முறையில் ஒவ்வொரு வாரமும் அந்த நாளில் வழங்கப்பட்ட 200 கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்க வேண்டியதுதானே?

அவ்வளவு சீக்கிரம் செஞ்சுடுவாங்களா என்ன? ஏற்கனவே கடந்த ஒரு வருசமா ஒரு மாசத்துல ஆயிரம் பேருக்கு மண்ணெண்ணை பற்றாக்குறையா வந்திருந்தா இவங்க ஆயிரத்து ஐநூறு பேருக்கு கொடுக்காம ஆட்டைய போட்டிருக்க வாய்ப்பு இருக்கு. இப்போ பழையபடி சுழற்சி முறையில கொடுக்க ஆரம்பிச்சதும் வடைபோச்சேன்னு கவலையாத்தான் இருக்கும்.

ஒருவேளை இந்த மாச தில்லுமுல்லு மூலமா கிடைக்குற பணத்துக்கு தீபாவளி பட்ஜெட் போட்டு கடன் வாங்கி செலவழிச்சிட்டாங்களோ என்னவோ? அப்படி எல்லாம் இல்லைன்னு சொன்னா, எல்லா பொதுமக்களையும் ஏன் ஒரே நாள்ல வரவெச்சு அவனவன் வேலையை விட்டுட்டு வந்து நாள் பூராவும் காத்துக்கிடக்க வெக்கிறீங்கன்னு எனக்கு உண்மை தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு.

ஆனா ஒண்ணு சார், ரேசன் பொருள் வாங்குறவங்க, அரசாங்க  அலுவலகங்கள்ல ஏதாவது வேலை முடிய வேண்டியவங்க எல்லாம் வேற வேலை எதுவும் இல்லாம வெட்டி ................னுங்கன்னு ஒரு நினைப்பு அரசுப்பணியாளர்கள்ல பலருக்கு இருக்குறதை யாரும் மறுக்க முடியாது. ரொம்ப கூலா, நாளைக்கு வாங்க பார்த்துக்கலாம்னு  இந்த ரெடிமேட் பதில் சொல்லாத அரசுப்பணியாளர்களை விரல்விட்டு எண்ணிடலாம். இந்த கேவலமான நிலை இப்போதைக்கு மாறும்னு தோணலை.

புதன், 31 அக்டோபர், 2012

அரசு முட்டை விழுந்தால் அம்மிக்கல்லே உடையும்

அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுஜனம் ஒருவன் மீது குற்றம் சுமத்த  வேண்டும் என்றாலும் ஆயிரம் வழி தென்படும். அதே சமயம் கொடூரமான குற்றம் செய்தவனை காப்பாற்ற வேண்டும் என்றாலும் ஆயிரம் என்ன பத்தாயிரம் விதிகளை மேற்கோள் காட்டுவார்கள் என்று நண்பர் சொல்வார். இப்போது நாட்டு நடப்பை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

50 சதுரடி அளவு இடத்தில் ஒருவன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பெட்டிக்கடைதான் வைத்திருந்தான். ஆனால் அந்தக்கடையால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு 5ஆயிரம் வகையான தொல்லை. அதனால் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமித்து இருப்பதை அகற்ற வேண்டும் என்று நியாயமாக உரிய இடங்களில் புகார் கொடுத்தோம். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்களை படுத்திய பாடு இருக்கிறதே...ஒரு கட்டத்தில் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வளவும் எதற்காக. எல்லாம் அந்த கடைக்காரன் கொடுத்த ஓசி சோப்பு, பவுடருக்காக.

இவ்வளவுக்கும் நாங்கள் ஒரு வார்த்தை அந்த கடைக்காரனையோ, அவனது குடும்பத்தையோ எதிர்த்துப் பேசவில்லை. அப்போதே அந்த கதி. இதனால் சாமானியர்கள் அறிய வேண்டிய நீதி என்னவென்றால் பணமும், புகழும் இருப்பவர்கள் உங்களை ஆயிரம் மடங்கு கேவலமாக பேசினாலும் நீங்கள் பொத்திக்கொண்டு புகார் மேல் புகாராக கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசினாலும் போச்...அதை வைத்து உங்களை அந்தமான் சிறையில் கூட தள்ளிவிடுவோம் ஜாக்கிரதை. இதுதான் இந்த நாட்டு ஜனநாயகம்.

எங்கள் வீட்டில் குடியிருந்த நபர் எந்த சின்ன விசயத்திலும் சகித்துக்கொள்ளாமல் எங்களிடம் வம்பிழுத்துக்கொண்டே இருந்தார். இடையில் சில நேரங்களில் அவ்வளவு இழிவான வார்த்தைப் பிரயோகமும் இருக்கும். இப்போது ஒரு வார்த்தை அவனுக்கு சரியாக எதிர்த்துப் பேசினாலும் நாளைக்கு பஞ்சாயத்தில் நான் பேசிய ஒரு வார்த்தையை சுற்றித்தான் நியாயம் (?) இருக்கும் என்று நான் நன்கு உணர்ந்திருந்ததால் அவனுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க சொன்ன நபரிடமே பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றேன்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் காலை 6.30 மணிக்கு நான் ஒரு செயலை செய்ததாக சத்தமாக பேசினான் அவன். நான் அமைதியாக அந்த நாளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை நான் இருந்த இடத்தை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொன்னேன். பிரச்சனைக்குரியவன் என்னுடைய இந்த வாதத்தை எதிர்கொள்ள முடியாமல், அப்போ என்னை என்ன ..................ன்னு நினைச்சியா என்று ஒரு வார்த்தை கோபத்தில் விட்டான். மத்தியஸ்தம் பேசிய நபர் அவனைப்பிடித்துக்கொண்டார். யோவ்...உன் அக்கா இங்க எதிர்ல இருக்காங்க. இந்த நேரத்துல இப்படி ஒரு இழிவான வார்த்தையால திட்டுற. யாரும் இல்லாதப்ப நீ ரொம்ப கேவலமாத்தான் பேசியிருப்ப. மரியாதையா 3 மாசத்துக்குள்ள வீட்டை காலி செஞ்சுக்குறதுதான் நல்லது என்று பிரச்சனையை முடித்து விட்டார்.

இவ்வளவுக்கும் அந்தஅளவுக்கு எங்கள் வீட்டில் குடியிருந்தவன் பொருளாதாரரீதியாக பெரிய ஆள் இல்லை. ஒரு மளிகைக்கடையில் தினக்கூலி வேலை பார்த்தவன். இதுக்கே இந்த கதி என்றால் பிரபலம், பணம் உள்ளவன் என்றால் என்ன ஆகியிருக்கும் என் கதி?

இவ்வளவு சுற்றி வளைத்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், பிரபலங்கள் நாக்கை அடக்குகிறார்களோ இல்லையோ, சாமானியர்கள் எல்லாம் நாவை காத்தே ஆக வேண்டும். ஏனென்றால் அதிகார இயந்திரம் பிரபலங்கள் பின்னால் மட்டுமே வாலை ஆட்டும். அதையும் மீறி பொதுஜனம் பின்னால் வாலை ஆட்ட வைக்க வேண்டும் என்றால் நம் மீது ஒரு குற்றச்சாட்டு கூட இருக்க கூடாது. பிரபலம் ஆயிரம் தப்பு செய்தாலும் அப்படி இருப்பது சகஜம் என்று ஊதி விட்டு அடுத்த வேலை பார்க்கும் அதிகார வர்க்கம், பொது ஜனம் ஒரே ஒரு வார்த்தையை ஆத்திரத்தில் ரிலீஸ் செய்தால் கூட அதை வைத்து நம்மை குழி தோண்டி புதைக்க தயாராக இருக்கும்போது நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*****************************
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

இந்த தமிழ் ஆண்டு (நந்தன வருடம்) பிறந்த போது என் நண்பர் ஒருவர் இது அசுரகுரு சுக்ரனின் ஆதிக்கத்தில் பிறந்த ஆண்டு. அசுரர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கும். நாட்டு நடப்பை பார்த்து யார் அசுரர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதற்கு விளக்கம் சொல்ல எனக்கு தெரியாது. எங்கேயுமே வாயை அடக்கி கவனமா இருந்துக்க. ஏப்ரல் 2014 வரை இந்த நிலை தீவிரமா இருக்கும் என்றார். அதை நான் அப்போது நம்பவில்லை. இப்போது சூழ்நிலையைப் பார்த்தால் அவர் சொன்னது உண்மைதானோ என்று என் மனதில் சிறு சலனம் தோன்றுகிறது.

ஏங்க நான் சரியாத்தான் பேசியிருக்கேனா? இந்த கட்டுரையில கேஸ் போட எதுவும் இல்லையே?

புதன், 24 அக்டோபர், 2012

படிக்காதவங்க எல்லாம் என்னப்பா பண்றது?

அடுத்ததாக அரசு வைக்கப்போகும் ஆப்பு. தனுஷ்-தமன்னா நடித்த படிக்காதவன் படத்தில் பலமுறை அட்டெம்ப்ட் அடித்தும் பள்ளி இறுதி வகுப்பை தாண்ட இயலாத வருத்தத்தில் ஹீரோ இருக்கும்போது அவன் நண்பர்கள் ஒரு ஐடியா கொடுப்பார்கள்.

ஐ.ஏ.எஸ் படித்த பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துவிட்டால் அந்த பெண்ணின் பெயருக்கு பின்னால் கணவனின் பெயரையும் சேர்த்து எழுதி அதற்கு அடுத்ததாக ஐ.ஏ.எஸ் என்று போட்டால் மட்டும்தான் நம் பெயர்களின் பின்னால் டிகிரி வரும். இல்லை என்றால் இந்த ஜென்மத்துக்கு சான்சே இல்லை என்று கூறுவார்கள்.

உள்ளாட்சி துறைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்த பிறகு உண்மையிலேயே திறமையான நிர்வாகத்தால் கிராமங்களை சீர்ப்படுத்திய தாய்க்குலங்களை வெகு விரைவில் எண்ணி முடித்துவிடலாம். ஆனால் அவர்களை கையெழுத்து போட மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அந்த கையொப்பத்தின் கீழ் ரப்பர் ஸ்டாம்ப் வைப்பது முதல் அனைத்து வேலைகளையும் அந்த மக்கள் பிரதிநிதியின் கணவரோ, அப்பாவோ, சகோதரரோ, மகனோதான் செய்கிறார்கள்.

அதிலும் பல பெண்களின் பெயர்களுடன் அவர்களின் கணவர்கள் பெயரையும் சேர்த்துதான் நாளிதழ்களுக்கு செய்தியே கொடுக்கிறார்கள். நான் ஒரு குறிப்பிட்ட நாளிதழுக்கு நிருபர் எழுதி தரும் செய்திகளை ஒப்பந்த அடிப்படையில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் அனுப்பும் பணி செய்து வருகிறேன். அவர் இப்படிப்பட்ட செய்திகளில் மக்கள் பிரதிநிதியின் பெயருக்கு பின்னால் இருக்கும் ஆண் பெயரை தூக்கிவிட்டு அதன் முதல் எழுத்தை மட்டும் இன்ஷியலாக போட்டுவிடுவார்.

முதல் முறை இப்படி செய்யும்போது அவரிடம் நான் காரணம் கேட்டேன். "அவங்க பேரை கெஜட்ல இப்படி மாத்திக்கட்டும். அப்புறம் நான் அதே மாதிரி செய்தியில எழுதி தர்றேன். இப்போ நான் எழுதி தர்ற பேர்தான் அவங்க போட்டியிட்ட வாக்குச்சாவடி நோட்டீஸ் போர்டுல இருந்துருக்கும்." என்பார்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலயும் ஒரு பெண் இருப்பாள்னு சொல்லுவாங்க. அதே மாதிரி இப்படி ஒரு முக்கிய பொறுப்புல இருக்குற பொண்ணு பின்னால ஒத்தாசையா இருந்துட்டு போனா யாருங்க தடுக்கப்போறா? ஆனா பல ஊர்கள்ல ஓட்டு கேட்டப்பவும் நன்றி சொல்றப்பவும்தான் அந்த ஊர் மக்கள் தங்கள் மக்கள் பிரதிநிதியை பார்த்திருப்பாங்க. மத்த எல்லா நேரமும் அந்த பெண்ணோட புருஷன்தான் எல்லா அலப்பறையும் கொடுத்துகிட்டு திரியுவாரு.

அது எப்படி சார்...ஒரு டீச்சர், கலெக்டர், காவல்துறை அதிகாரி போன்ற பணிகள்ல எல்லாம் அந்த அம்மாக்களோட கணவர்கள் நேரடியா களமிறங்குறதுல்ல. மக்கள் தேர்ந்தெடுக்கும் பதவியில் இருக்கும் பெண்களை மட்டும் ஒரு வேலையும் செய்ய விடாம இவய்ங்க முந்திரிகொட்டையாட்டம் வந்துடுறாங்க?

இன்னைக்கு ஒரு பேப்பரோட முதல் பக்கத்துல செய்தி படிச்சேன். இப்படி பதவியில இருக்குற பெண் தலைவர்கள், உறுப்பினர்களோட கணவர் உள்ளிட்ட நிழல் தலைவர்கள் ஆட்டம் போட்டா பதவி க்ளோஸ் ஆகுற மாதிரி சட்டத்திருத்தம் வரும் சட்டசபை கூட்டத்தொடர்லேயே மசோதாவா தாக்கலாக வாய்ப்பு இருக்குன்னு தெரிய வருது. பொருத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு.

வியாழன், 18 அக்டோபர், 2012

சென்னைக்கு கூடுதலாக ஒருமணி நேரம் மின்வெட்டு-வெளி நாட்டு கம்பெனி எல்லாம் பொட்டி தூக்கிட்டு ஓடிடுமா?

நேற்று ஒரு ஐந்து நிமிடம் தொல்லைக்காட்சி செய்தி பார்க்க நேர்ந்தது. அப்போது எனக்கு ஷாக் கொடுத்த விஷயம் தமிழகத்தில் மின்வெட்டு நிலை எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திதான். (இன்று காலை நாளிதழ் செய்திகளில் 10 பேர் என்று அறிவித்திருக்கிறார்கள்)

ரமணா படத்தில் யூகிசேது 4வது ரீலிலேயே கண்டு பிடித்த விஷயத்தை உயரதிகாரிகள் (?!) கிளைமேக்ஸ் நெருங்கும்போதுதான் கண்டு பிடிப்பார்கள். இந்த காட்சி எனக்கு ஏன் இப்போது நினைவுக்கு வந்து தொலைத்தது என்று தெரியவில்லை.

சென்னைக்கு கூடுதல் நேரம் மின்சாரத்தை வெட்டினால் கழிவறை வரை ஏசி போட்டுக்கொண்டு குடிப்பதையும், இன்னும் பல ...................... வேலைகளையும் முக்கிய பணியாக வைத்துக்கொண்டு 24 மணி நேரமும் எல்லா கதவையும் அடைத்து வைத்து மின் விளக்கையும் எரிய விடும் மென்பொருள் நிறுவனங்கள், ஹோட்டல் போன்றவை நஷ்டப்பட்டுவிடும் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

கோடிக்கணக்குல காசு வாங்கிட்டு இப்படி அவங்களுக்கு தடையில்லாம கரண்ட் கொடுக்குறதை இந்த அரசியல் வியாதிகள் மாத்திக்கப்போறது இல்லை. மக்கள் எல்லாரும் ஓட்டுக்கு பணம் வேணாம், இலவசம் வேணாம் அதுக்கு பதில் அடிப்படை உரிமையை கொடுன்னு கேட்டு வெளக்கமாத்தை தூக்குற வரை அரசியல் வியாதியை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. ஒரு பெட்டிக்கடை வைத்தாலே மாதம் 10 ஆயிரம் லாபம் எதிர்பார்க்கும்போது, ஜனங்களுக்கு ஓட்டுக்கு பணமும் கொடுத்து மத்த செலவும் செய்ய அவங்க என்ன நோட்டா அடிக்கிறாங்க?

எங்களுடைய கேள்வி எல்லாம் என்னன்னா பெரும்பாலான அரசு அலுவலங்கள் நல்ல காற்றோட்டமான பகுதியிலதான் அமைந்திருக்கு. (முக்கியமாக பெருந்திட்ட வளாகம்) அங்க எல்லாம் என்ன ...................த்துக்கு ஏ/சி வசதின்னு கேட்குறேன்?

மருந்து சேமிப்பு கிடங்கு, பால் பொருள் சேமிப்பு பகுதி தவிர மத்த எல்லா அரசு அலுவலகத்துக்கும் ஏ/சியை புடுங்கி வீசுனா பாதி பிரச்சனை சால்வுடு.

அடுத்த விஷயம் வீடுகள்ல ஏ/சி இருந்தா அவங்களுக்கான வணிக நிறுவங்களுக்கான டேரிப் நிர்ணயிச்சு அதன்படி கட்டணம் வசூலிக்கலாம். ஏன், யூனிட்டுக்கு 10 ரூபா வாங்கினாலும் தேவலை. அப்போதான் மாசம் 60 ஆயிரம் எழுபதாயிரம் வருமானம் வர்றவன் கூட 1 அங்குலம் கூட வெளிச்சம் வராம வீடு கட்டுற கலாச்சாரத்தை நிறுத்துவான்.

அது மட்டுமில்லாம எல்லா அரசு அலுவலங்கள் மாடியிலயும் சோலார் பேனல் வெச்சா, அந்த கட்டிட காம்பவுண்ட் பகுதியிலயும், எரியுற லைட்டுக்காவது கரண்ட் கிடக்காம போகுமா என்ன?

இப்படி ஒவ்வொரு யூனிட்டையும் எப்படி சேமிக்கலாம், நுகர்வை எப்படி குறைக்கலாம், சோலார், காற்றாலை மூலமா எந்த அளவுக்கு மின்சாரம் தயாரிக்கலாம்னு யோசிக்காம, 13ஆயிரத்து ஐ நூறு கோடியை கணக்குல கொண்டுவராம யுரேனியம், தோரியம் செலவை மட்டும் கணக்கு பண்ணிட்டு யூனிட் 1 பைசாவுக்கு கிடைக்குது, அரை பைசாவுக்கு கிடைக்குதுன்னு இருக்குற மக்களை .............................யா ஆக்குறானுங்க.

அது எப்படி சார், அணு மின்சாரத்துக்கு மட்டும் அணு உலை கட்டுமான செலவை கணக்குல காட்டாம கரண்ட் தயாரிக்கிற செலவை மட்டும் சொல்லி ஆதரவு தேடுறீங்க. ஆனா சூரிய மின்சாரத்துக்கு மட்டும் பேனல் போடுற செலவை சொல்லி ஒரு யூனிட் ஒரு லட்ச ரூபாய் ஆகுதுன்னு கூசாம பேசுறீங்க?

எனக்கு தெரிந்த வரை சோலார், காற்றாலை மின்சார உபகரணங்கள் அதிகரிச்சா குடிசை தொழில் மாதிரி நிறைய சிறு, குறு தொழிற்சாலைகள்லயும் உதிரி பாகம் வாங்க வேண்டியிருக்கும். அவங்ககிட்ட இந்த அரசியல் வியாதிங்க பெரிய அளவுல லஞ்சம், நன் கொடை(கொள்ளை அடிக்க) வாங்க முடியாது.

ஆனா ................... மின்சாரம்னா எத்தனை கோடி தேவையோ அதை ஒரே கம்பெனியில வாங்கி நூறு தலைமுறைக்கு சேர்த்துக்கலாம்.

இந்த பதிவுல நான் சொல்லியிருக்குறதுக்கு மாற்றுக்கருத்து ஏகப்பட்டது இருக்கும். நான் நடைமுறைக்கு ஒத்துவராததை சொல்லியிருக்கலாம். அதை பின்னூட்டமிட்டால் நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களும் புரிஞ்சுக்க ஏதுவா இருக்கும்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர், கோவில்ல பிரசாதம் வினியோகம் செய்யுவாரு. முக்கியமா மார்கழி மாதத்துல எல்லா நாளும் 2 கிலோ அரிசியிலதான் பொங்கல் போட்டு கொண்டு வருவாங்க. சில தினங்கள்ல 50 பேரும் வருவாங்க. ஒரு சில நாள்ல 200 பேரும் வருவாங்க. ஆனா அவர் ஒரு நாள் கூட அளவுக்கு அதிகமா மிச்சம் வெச்சது கிடையாது. சுத்தமா தீர்ந்துடுச்சுன்னு நிறைய பேரை திருப்பி அனுப்புனது கிடையாது.

கூட்டத்தை கண்களால் ஒரு நொடியில் அளந்து விட்டு, அதற்கேற்றார்போல் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் அளவை தீர்மானிப்பார்.

ஆனால் இப்போது மின்சார வினியோகத்தில் என்ன நடக்கிறது? மொத்தமாக வழித்து சென்னையில் உள்ள நாலு பேருக்கு கொடுத்துவிட்டு மற்ற மாவட்டங்களுக்கு அதே கரண்டியால் மண்டை வீங்க அடி பின்னி விடுகிறார்கள்.

அரசியல் வியாதிகள் மனம் வைத்தால் எல்லாம் சாத்தியம்தான். ஆனால் அவர்கள் மனம் வைப்பதற்கு அந்த காரியத்தால் அவர்களுக்கு லாபம் இல்லையே?

திங்கள், 24 செப்டம்பர், 2012

ஏனுங்க...இது உண்மைதானுங்களா?

வெளி நாட்டுக்காரங்க இங்க சூப்பர் மார்க்கெட் திறந்தா என்ன விளைவு வரும்னு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருத்தர்கிட்ட கேட்டேன்.

அவரு சொன்னாரு, "இன்னைக்கு ஒரு கிலோ 50 ரூபான்னு விக்கிற பொன்னி அரிசியை 1 கிலோ 25 ரூபான்னு தருவான். அதேசமயம், ஒரு மூட்டை நெல்லுக்கு அரசாங்கம் 300 ரூபா கொடுத்தா இவன் 700 ரூபா தர்றேன்னு சொல்லுவான். நாமளும் பல்லைக்காட்டிகிட்டு அவன் பின்னால போயிடுவோம்.

கொஞ்ச நாள்ல விவசாயிகிட்ட இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வெளி நாட்டு கம்பெனி தவிர வேறு யாரும் இல்லைன்னு ஒரு நிலைமை வந்துடும். அப்போ, நீ ஒரு மூட்டை (100 கிலோ ) நெல்லை 10 ரூபாய்க்கு கொடு. இல்லைன்னா நிலத்தை என் கிட்ட கொடுத்துட்டு எங்கயாச்சும் போய் செத்துடு அப்படின்னு சொல்லுவான். அப்போ யார் என்ன செய்ய முடியும்?

அதே மாதிரி ஒரு சில மாதங்கள்லேயே நாம மளிகை பொருட்கள் வாங்க அண்ணாச்சி கடை மாதிரி எந்த கடையும் இல்லாம போயிடும். அப்போ ஒரு கிலோ சாதா அரிசி 500 ரூபா. காசு இருந்தா வா. இல்லைன்னா பட்டினி கிடந்து சாவு. அப்படின்னு சொல்லிடுவான்.

இதுதான் நடக்கும்"னு சொன்னாரு.

ஏனுங்க...இது உண்மைதானுங்களா?

கொசுறு:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் டிரான்ஸ்பார்மர் பழுதால் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் மின் தடை - நாளிதழில் செய்தி.

என்னுடைய சந்தேகம்:

எங்க ஊர்ல டிரான்ஸ்பார்மர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்து மேல கரண்ட் இல்லையே?