Search This Blog

வெள்ளி, 28 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 4



முன்கதை சுருக்கம்:




அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.




பத்து ஆண்டுகளுக்கு முன்பு- அர்ச்சனா பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும்போது அவன் சுற்றி வந்த நாட்களில் நடந்த சில சம்பவங்கள் இவள் நினைவுக்கு வருகின்றன. அர்ச்சனாவின் தோழிகள் கூட அவனைப் பற்றிக் குறிப்பிட்டு கிண்டல் செய்கிறார்கள்.


பேருந்தில் அவனைப் பார்த்தது முதல் பழைய நினைவுகளில் அர்ச்சனா மூழ்கிவிடுகிறாள். அதனால்தான் பேருந்து நின்று எல்லோரும் டீ குடிக்க இறங்கிச் சென்றது கூட தெரியாமல் சிந்தனையில் இருப்பவளைப் பார்த்து அவள் தாயார் சித்ரா கடிந்து கொள்கிறாள்.


இந்த எண்ண அலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் பழைய சம்பவங்களின் போது சாட்சியாக இருந்த மலர்விழியிடமே கேட்டு விடலாம் என்று போன் செய்கிறாள்..


*****




செங்கம் டிராவல்ஸ்


தொடர்கதை


திருவாரூர் சரவணன்


பகுதி 4


05–04–2019


சித்ரா வாசல் தெளித்து விட்டு கோலமாவு டப்பாக்கள் அடங்கிய பிளாஸ்டிக் தட்டை எடுத்துக்கொண்டிருக்கும்போதுதான் சத்தம் கேட்டு அர்ச்சனா விழித்தாள்.


சட்டென்று படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தவள், ‘‘அம்மா... என்னை எழுப்பதானே சொன்னேன்... இப்ப நீபாட்டுக்கு என்னைய விட்டுட்டு கோலம் போடப் போனா என்ன அர்த்தம்...’’


‘‘ஏண்டி காலையிலேயே இப்படி கத்துற... நான் தண்ணி தெளிக்க எழுந்திரிச்சப்ப நல்லா அசந்து தூங்கிட்டு இருந்த. பொதுவா நல்ல தூக்கத்துல நீ இருக்கும்போது எழுப்புனா பட்டுன்னு கன்னம், கை, காலுன்னு எது சிக்குதோ அங்க ஒரே அறை விடுவ... அது மட்டுமில்லாம நம்ம காலனியில 12 வீடு இருக்கு. ஒரு வீட்டுக்கு கணக்கு வெச்சா ரெண்டரை நாள்தான் கோலம் போடுற முறை வரும். இன்னைக்கு நாம போட்டா அடுத்து 12 நாள் கழிச்சுதான். இதுக்கு ஏன் உன் தூக்கத்தையும் கெடுத்துகிட்டுன்னு விட்டுட்டேன்... அதுக்கு இவ்வளவு கோபமா?’’


‘‘அப்போ மத்த நாள் எப்பவும் போல காலையில ஆறரை மணிக்கு தண்ணி புடிச்சா போதுமா?’’


‘‘அப்படியே ஒரு டேங்கர் லாரி தண்ணியை புடிச்சு ஊத்தப்போற...ச்சே... மணியாகுது வா கோலம்போட...’’ என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறவும், பின்னாலேயே அர்ச்சனாவும் ஓடினாள்.




திடு திடுவென்று அர்ச்சனா ஓடும் சத்தம் கேட்ட அவள் தாய், ’’ஏய்... டி.விக்கு பக்கத்துல ஸ்கார்ப் இருக்கு பாரு. அதை எடுத்து கட்டிகிட்டு வா... பனியில உடம்பு முடியாம விழுந்துட்டன்னா நாலு நாள்ல மிச்சம் இருக்குற அரையாண்டு பரிச்சை கோவிந்தாதான்...’’


சித்ரா சொன்னதிலும் நியாயம் இருக்கவே, வேறு வழியின்றி தலைக்கு ஸ்கார்ப்பை கட்டிக் கொண்டு கோலம் போட வந்தாள் அர்ச்சனா. ஆனாலும் அவள் மனதில் ஒருவேளை அவன் இந்த நேரத்தில் வந்தால், ஸ்கார்ப் கட்டிக் கொண்டிருக்கும் தன்னை அடையாளம் கண்டு கொள்வானா என்ற சந்தேகம் எழுந்தது.


‘‘ம்ச்ஹ... பசங்களுக்கு உடம்பெல்லாம் கண்ணு... அப்படியா நாம அடையாளம் தெரியாம மாறிடப்போறோம்...’’ என்று மைண்ட் வாய்சில் பேசுவதாக நினைத்து வாய்விட்டு உளறினாள் அர்ச்சனா.


‘‘என்னடி ஏதோ புலம்புற... தூங்குறப்ப கண்ட கனவு இன்னும் கலையலையா... இதுக்குத்தான் நீ எழுந்திரிக்க வேணாம்னு சொன்னேன்.’’ என்ற சித்ராவைப் பார்த்து முறைத்து விட்டு, அம்மா போட்ட கோலத்திற்கு வண்ணம் தீட்டுவதில் கவனம் செலுத்தினாள்.


அப்போது யாரோ சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போடும் சத்தம். நிமிர்ந்து பார்த்தாள். அவனேதான். சைக்கிள் கேரியரில் நாளிதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.



வியாழன், 27 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 3




பிரேக் போட்டு திடீரென இவர்கள் பேருந்து நின்ற நொடி எதிரில் ஒரு டேங்கர்லாரி இந்த பேருந்தை மோதுவது போல் நெருங்கி வந்து வலது பக்கம் விலகிச் சென்றது பின்னாலேயே வேளாங்கண்ணி செல்லும் மூன்று அரசு விரைவுப்பேருந்துகளும் சர்... சர்... சர்ரென கிராஸ் செய்து சென்றன.


‘‘டிரைவர்... ஹெட்லைட்டைப் போட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே...


ஓவர்டேக் பண்ணி வர்ற லாரிக்கு ஏன் வழி விடுறீங்க... எதிர்ல நாம வர்றதைப் பார்த்ததும் அவன்ல வேகத்தைக் குறைச்சு பஸ்சுங்களுக்கு பின்னால போயிருக்கணும்?’’ என்று முன் சீட்டில் முட்டிக்கொண்ட ஒருவர் கொதித்தார்.


 ‘‘ஒரு பஸ்சா இருந்தா அவனே பின்னால ஒதுங்கியிருப்பான்... இங்க மூணு பஸ்சு. அதோட எவ்வளவு தூரம் முயற்சி பண்ணி டாப் கியருக்கு பிக்கப் ஆயிருந்தானோ... இப்போ நாம வழி மறிச்சிருந்தா அடுத்து அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துக்கு அவனால வண்டியை நார்மல் ஸ்பீடுக்கு கூட கொண்டு போக முடியாது...


நானும் எழுபது எண்பதுல போய் சடன் பிரேக் போடலியே... இருபத்தஞ்சுல போனப்பதான குத்துனேன்....’’ என்றார் ஓட்டுநர்.


‘‘அது சரி... பள்ளிக்கூட பஸ் ஓட்டுன ஆள்னுங்குறது சரியாத்தான் இருக்கு... அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காதீங்கப்பு...’’ என்றவரின் குரலில் கொதிப்பு அடங்கியிருந்தது.


‘‘வெளியில இருக்குற டேங்கர்லாரி டிரைவருக்கு இரக்கப்பட்ட நீங்க, பஸ்சுக்குள்ள எழுந்து நின்னுகிட்டு இருந்த சிங்கத்தைப் பத்தி யோசிக்காம மூக்கை உடைச்சுட்டீங்கிளே...’’ என்று ஒருவன் சொல்லவும்,


‘‘நீ வேற ஏண்டா மானத்தை வாங்குற...’’ என்று வைத்தியலிங்கம் அவனைப் பார்த்து பல்லைக்கடித்தான்.


பேருந்தினுள் இருந்தவர்கள் ஆளாளுக்கு ஏதோ கதை பேசிக் கொண்டு வர, அர்ச்சனாவின் மனதில் இப்போதைக்கு ஒரே ஒரு கேள்விதான்.


‘பஸ்சுல இருக்குறதுல பாதிப்பேருக்கு மேல சொந்தக்காரங்கதான். இவனை எந்த பழக்கத்துல பெரியப்பா உள்ள விட்டிருக்காரு... நமக்கு தெரிஞ்சவரை இவனோட நம்ம பெரியப்பாவுக்கு எந்த பழக்கமும் இல்லையே...’என்ற கேள்வி அர்ச்சனாவின் மனதில் வெகு நேரமாக ஓடிக்கொண்டே இருந்தது.


‘‘நாலு வேன் புடிச்சாகூட நெருக்கியடிச்சு உட்காரணும்... அதோட பயங்கரமா குலுக்கி எடுத்துடும். அக்கம் பக்கம் உட்கார்ந்துருக்குறவங்க கிட்ட நல்லா பேசக்கூட முடியாது. அதுக்காகத்தான் தாராளமா உட்கார்ந்து போகலாம்னு பஸ்சைப் பிடிச்சேன்...


நான் நினைச்ச மாதிரியே எல்லாரும் சகஜமா பேசி அரட்டை அடிச்சுகிட்டு வர்றீங்க... ஆனா அர்ச்சனாவுக்குதான் என்னாச்சுன்னு தெரியலை... நீ வேலைக்கு போறதும் கம்பெனி பஸ்சுலதானே... அதுல வாயைத் திறந்தா மூட மாட்டேன்னு இண்டர்போல் ஆபிசர்ஸ் சொன்னாங்க... இப்ப என்னாச்சு...?’’ என்று சிரிக்காமல் விஜயகுமார் பேசவும் இதைக் காதில் வாங்கியவர்கள் சிரித்தார்கள்.




‘‘அய்யோ... பெரியப்பா... மானத்தை வாங்காதீங்க... ஏதோ கம்பெனி ஞாபகம்... அதான்...’’ என்று சமாளித்தாள்.


‘‘என்னது... கம்பெனி ஞாபகமா?... உன்னை மாதிரி வெளியூர்ல தங்கி வேலை பார்க்குற பொண்ணுங்க வீட்டு நியாபகம்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்... நீ குடும்ப விசேசத்துக்கு வந்தும் வேலை ஞாபகத்துலயே இருக்க... உன் கம்பெனி ரொம்ப கொடுத்து வெச்சதும்மா...


ஆனா ஒரு சின்ன விண்ணப்பம்... இது நம்ம வீட்டு கல்யாணம்... மாப்பிள்ளைக்கு நீயும் ஒரு தங்கச்சி. அதை மனசுல வெச்சு இந்த சந்தோஷத்துல பங்கெடுத்துக்க... இந்த பயணமும் நினைவுகளும் ரொம்ப நாளைக்கு நம்ம மனசுல இருக்கும்ணு நம்புறேன்...’’ என்று விளையாட்டாக கும்பிட்டார்.


‘‘ஸ்....யப்பா... போதும் பெரியப்பா... தாங்கலை...’’ என்று அவளும் கைகூப்பினாள்.




புதன், 26 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 2


பகுதி 2


முன்கதை சுருக்கம்:


அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.


*****


மணல் நிறத்துக்கு மாறியிருந்த பள்ளிச்சீருடையான வெள்ளை சட்டையை கழற்றி வீசியதும் முகம் கழுவி வந்து, கலர் சட்டையை அணிந்து கொண்டிருந்தான் வரதராஜன்.


‘‘டேய்... வரதுகுட்டி... செத்த ரேசன் கடை வரைக்கும் வந்துட்டுப்போடா... அரிசி வாங்கித்தர்றேன்... அதை எடுத்துட்டுபோய் சுந்தரி வீட்டுல போட்டுட்டு வந்துடு...’’


‘‘ஏம்மா... முன்னாலயே சொல்ல மாட்டியா? அவசரமா வெளியில கிளம்பிகிட்டு இருக்கேன்... இப்ப போயி ஏன் உயிரை வாங்குற?... தெட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா?...’’


‘‘டேய் நாக்குட்டி... அப்பா பேரை இப்படி தலையில அடிச்ச மாதிரி சொல்றதுக்கு ஒரு நாளைக்கு விளக்கமாறு பிய்யப்போவுது பாரு...’’


‘‘ஆமா... நீ மட்டும் வரதராஜன்னு அழகா ஒரு பேர் வெச்சிட்டு, பொம்பளைப் புள்ளை இல்லைன்னு என்னைய வரதுக்குட்டி, நாய்க்குட்டின்னுல்லாம் கூப்பிடு... நான் மட்டும் அப்பா பேர் சொல்ற புள்ளையா இருக்கறதை குத்தம் சொல்லு...’’


‘‘பேர் சொல்லும் பிள்ளைன்னா ஊர் உலகத்துல நல்ல பேர் எடுத்துக் குடுக்குறதுடா... இப்படி மரியாதை இல்லாம அப்பன் ஆத்தாளை கூப்பிடுறது இல்லை... இப்ப வரப்போறியா இல்லையா...’’ என்று குரலில் கடுமையை கூட்டினாள் வசந்தி.


ஆனால் வரதராஜன் ரேசன் கடைக்கு செல்லும் மன நிலையில் இல்லை. ‘‘நாளைக்கு சனிக்கிழமை எனக்கு லீவுதான். காலையில போலாம்...’’ என்று சட்டை பொத்தான்களை போட்டுக்கொண்டே பேசினான்.


‘‘இல்லடா குட்டி... மனுச உசிருகூட இப்ப இருக்கும் நாளைக்கும் இருக்கும்னு சொல்லலாம்... ஆனா ரேசன் கடையில இந்த நொடி இருக்குறது அடுத்த வினாடி இருக்கும்னு சொல்ல முடியாதுடா... மூணாவது வீட்டு சுசீலா இப்பதான் வாங்கிட்டு வந்தா, பத்து பதினஞ்சு பேர்தான் நிக்கிறாங்களாம்... ஆறு மணி ஆயிடுச்சுன்னா கணக்கு முடிக்கணும்னு தர மாட்டாங்கடா... நாளைக்கு காலையில கொடுத்தாதான் நிச்சயம்... அதனாலதான்டா சொல்றேன்...’’ என்று கெஞ்சலாக பேசினாள் வசந்தி.




‘‘நீ போய் வரிசையில நின்னு வாங்குறதுக்குள்ள நான் வந்துடுறேம்மா... அர்ஜண்டா போகணும்...’’ என்று வீட்டை விட்டு கிளம்பி ஓடுவதிலேயே குறியாக இருந்தான் வரதராஜன்.


இதுவே அவன் நண்பர்கள் அருகில் இருந்திருந்தால், ‘அர்ஜண்டாக போகணும்’ என்று வரதராஜன் சொன்னதுக்கு ‘கொல்லைப்பக்கம் கழிவறை இருக்கு... அதை விட்டுட்டு எங்கடா போற?’ என்று கேட்டிருப்பார்கள்.



செவ்வாய், 25 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 1


பகுதி 1


பத்து வருசத்துக்கு முன்னால பார்த்தப்ப எப்புடி இருந்தியோ... அப்படியேத்தாண்டி இன்னமும் இருக்க... கொஞ்சம் கூட மாறவே இல்லை... ஏதாவது லேகியம் திங்கிறியா?" என்று அர்ச்சனாவின் முகத்தை தடவி ராமாயி பாட்டி திருஷ்டி கழித்தாள். அதை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்ட அர்ச்சனாவின் முகத்தில் லேசான வெட்கப்புன்னகை.







அடுத்த நொடி அவள் இதயத்துடிப்பு தறிகெட்ட வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. பத்து ஆண்டுகளாக முகமும், உடலமைப்பும் மாறவில்லை என்று அந்த பாட்டி சொன்னதற்காக வெட்கப்பட்டவள், அவனும் இவளை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான் என்பதை உணர்ந்ததும், நம்முடைய உருவமும் முகமும் வேற மாதிரி மாறியிருக்கக்கூடாதா என்று தவித்தாள்.









டேய்... சரிகாஷா சாவுக்கப்புறம் ஈவ் டீசிங் புகாருக்கு கடுமையான தண்டனைன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இருந்தும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்கிளா? இவ அண்ணன்கிட்ட சொல்லி முதல் வேலையா உன் பேர்ல ஈவ்டீசிங் புகார் கொடுத்து உன்னைய உள்ள தூக்கி வெச்சி மிதிக்க வெக்கிறோம் பார்..." என்று அர்ச்சனாவின் தோழி மலர்விழி கத்தியதும் திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து சென்றவன்தான் இல்லை, இல்லை... ஓடிப்போனவன்தான் இவன். அதன் பிறகு இந்த பத்து ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவனை அர்ச்சனாவோ, அவளுடைய தோழி மலர்விழியோ பார்க்கவே இல்லை. ஆனால் இன்று...