Search This Blog

பிற இதழ்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிற இதழ்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 செப்டம்பர், 2012

முடவனை மூர்க்கன் அடித்தால், மூர்க்கனை முனி அடிக்கும்.


சமீபத்தில் இவர் எழுதி பிரசுரமான நூல் "பாவ புண்ணிய கணக்குகள்"

நம்மை மீறி என்ன நடந்து விடப்போகிறது என்ற நம்பிக்கை தேவைதான். ஆனால் இந்த எண்னம் அளவுக்கு அதிகமாகப் போய், மற்றவர்களை வதைப்பதில் முடிகிறதே. இதற்கெல்லாம் முடிவில்லையா என்று நான் பலமுறை வேதனைப்பட்டிருக்கிறேன். என் மனதில் இருந்து வந்த இந்த குழப்பத்திற்கு "பாவ புண்ணிய கணக்குகள்" நூலின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு குறிப்புகள் எளிமையாக விடையளித்தன.

முடவனை மூர்க்கன் அடித்தால், மூர்க்கனை முனி அடிக்கும்.

மனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும்!
சம்பாதிக்க கூடாதவை சாபமும், பாவமும்!

-இப்படி பல சிந்திக்க வைக்கும் கருத்துக்களுடன் வெளிவந்திருக்கிறது "பாவ புண்ணிய கணக்குகள்"

நூல் விலை ரூ.90/-
Blackhole Media Publication Limited,
7/1, 3rd Avenue, Ashok Nagar,
Chennai - 83.
Cell:96001 23146
Land Line : 044 43054779


**************************************


தெய்வங்களுக்கும் நண்பர்கள் தேவைப்படலாம்!
*********************************
சென்னைக்கு அருகில் இருக்கும் மலைக்கோயில் திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டு வழியாகவும், மாமல்லபுரம் வழியாகவும் செல்ல முடியும்.  1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது. (தஞ்சை பெரிய கோயிலைவிட மூப்பு.) மலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்டது என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மலைமேல் ஒரு கோயிலும்; தரையில் ஒரு கோயிலும் உள்ளது. எனது பயணம் மலைக்கோயிலை நோக்கி இருந்ததால் தாழக்கோயில் என்று அழைக்கப்படும் தரைக்கோயில் பக்கம் திரும்பவில்லை.

அதற்கு மற்றொரு காரணம், நான் அங்கு செல்லும் போது மாலை ஐந்தரை மணியைத் தாண்டியிருந்தது. இருட்டுவதற்கு முன்னால் மலை ஏற வேண்டுமே என்ற உந்துதல், வேகமாக ஏறத்தொடங்கினேன். 500 அடி உயரமுள்ள இம்மலையில் செங்குத்தான 565 படிகள். நடக்க, நடக்க சளைக்காமல் படிகள் தோன்றிக்கொண்டே இருந்தன. சற்றே ஆசுவாசப்படுத்த வேண்டியிருந்தது. சிறு சவாலாக கூட உணர்ந்தது. இறுதியில் கோயிலை அடைந்த போது நாலாபுறமும் இருந்து வந்து தழுவிய காற்றால், நடந்த களைப்பு மறைந்து, கண்களில் ஊரின் அழகு படர்ந்தது. மனம் ஆனந்தம் கொண்டது. சிறுவயது முதல் வயலும் வயல் சார்ந்த இடமும், கடலும்,கடல் சார்ந்த இடமுமாக வாழ்ந்து பழகியதினாலோ என்னவோ, மலையும் மலைச் சார்ந்த இடங்களுக்கு செல்கிற போது இங்கேயே இருந்துவிடக்கூடாதா என்கிற ஏக்கம் தரக்கூடியதாகவே இருக்கிறது. (எதிர்காலம் அப்படியும் அமையலாம்! யார் அறிவார்?)




நான் சென்ற நேரம், மாலை பூஜை தொடங்கியிருந்தது. சங்கொலி இசைக்க, மின்சார மேள தாளங்கள் ஒலிக்க, கருவறையில் சாம்பிராணி உள்ளிட்ட நறுமணங்கள் நாசியை வந்து தழுவ, அந்த ஞாயிற்றுகிழமையில் சுமார் இருபது நபர்களுக்கு உள்ளாகவே குழுமியிருக்க, நம் தேகமென்னும் ஆலயத்தில் குடியிருக்கும் ஆன்ம கடவுள் சற்றே அமைதி பெற்றது. அத்தகைய சூழலால் உடல் நல் அதிர்வுகளை உள்வாங்கியது. ஆலயங்களில் எனக்கு அபூர்வமாக நிகழ்வது இத்தகைய மனநிறைவு.(பொதுவாக ஆலயம் தோறும் நிரம்பி வழியும் புராணக்கதைகளைக் கேட்டு அடியேன் அதிர்வு பெறுவதில்லை.)

மலையில், மாலை வழிபாடு முடிந்த அடுத்த அரைமணி நேரத்தில், இரவு வழிபாட்டை தொடங்கி விடுகிறார்கள். இரவு ஏழரை மணிக்கெல்லாம் மலைக்கோயில் சாத்தப்படுகிறது. திருக்கழுக்குன்றத்தின் நட்சத்திர ஈர்ப்பே, ஒருகாலத்தில் மலையில் தினமும் மதிய பொழுது இரு வெள்ளைகழுகுகள் வந்து சக்கரைப்பொங்கல் சாப்பிட்டது தான். அதைக் காண இந்திய முழுதும் இருந்து பக்தர்கள், சுற்றுலாவாசிகள் நாளும் திரண்டனர். இதனால் ஊரின் பெயரே அப்படி அமைந்தது. கழுகுக்கு உணவு வைக்க என நிலங்கள் எழுதப்பட்டன. தனிப்பாரம்பரியம் உருவானது. நீண்ட காலமாக தொடர்ந்த இச்செயல், ஒருநாள் சட்டென ஸ்தம்பித்துபோனது. கழுகுகள் வருவதில்லை என்பது பேச்சானது.

ஆம், கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக கழுகுகள் வருவதில்லை. ஏன் என்ற காரணமும் அறிய இயலவில்லை. கடும் முயற்சிகள் செய்து பார்த்தார்களாம். சந்தேகத்தின் பேரில் ஊர் கடைசியில் தங்கியிருந்த பறவை வேட்டையாடும் குறவர் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டார்களாம். மந்திரங்கள், பூஜைகள் செய்து பார்த்தார்களாம். கழுகுகளின் வருகை திரும்ப, இன்று வரை தொடங்கவே இல்லை. அவை என்ன ஆனது? அதுவும் தெரியவில்லை. இரவு பூஜைக்கான இடைப்பட்ட நேரத்தில் ஆலயத்துக்குள் அருகே அமர்ந்திருந்த வயோதிகர் ஒருவரோடு உரையாடும் ஆர்வம் ஏற்பட்டது. ஏனெனில் அவரது தோற்றத்தில் ஒரு ஈர்ப்பு இருந்தது. முதல் பேச்சையே இப்படித்தான் தொடங்கினேன்.

ஐயாவுக்கு அகவை என்ன ஆகிறது? பனிவோடு கேட்டேன். 85 தொடங்கி விட்டது என்றார். வயதைக்கேட்டு, வியந்துவிட்டேன். அவரது பாதி அகவையில் உள்ள நான், சற்றுமுன் தானே படியேறி வந்திருக்கிறேன். தினமும் மாலை வழிபாட்டுக்கு வந்துவிடுவதாக சொன்னார். நாற்பது ஆண்டுகளாக அவ்வூரில் வசிப்பதாக சொன்னார். ஆலயத்தின் சிறப்புகள் குறித்து நிறைய பேசினார்.

"இது, அதக்குடு இதக்குடுன்னு கேட்கிற இடமில்லையே. முக்திக்கு சித்தி பன்னுற இடமாயிற்றே. அதனால சிவாலாயங்களில் தினப்படிக் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். விழாக்காலங்களில் இங்க ஒருலெட்சம் ஜனம் கூடும்.'' என்றார்.  அவரது பேச்சில் சில ரசிக்கும்படி இருந்தன.
மலையைவிட்டு இறங்கியதும் அவரது சந்திப்பு எனக்குள், மற்றொருவரை நினைவுப்படுத்திவிட்டது. மலையில் சந்தித்த இவரைபோலவே,  வேறொரு ஆலயத்தில் இன்னொருவர் அறிமுகமானவர். அறிமுகத்தோடு நின்றுவிடாமல், நட்பாகத் தொடர்ந்தவர். அந்த நபர் திருக்கண்ணமங்கை ஆபத்சகாயம். (திருவாரூர் மாவட்டம்) அவரை நான் கடைசியாக சந்தித்து, பேசி பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். தொடர்பே இல்லை. திருக்கழுக்குன்றம் பயணத்திற்குப் பிறகு, அவரது நினைவு என்னை முழுமையாக ஆட்கொண்டது.

திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலுக்கு தொடர்ச்சியாக செல்பவர்கள் ஆபத்சகாயத்தை சந்திக்காமல் இருக்க முடியாது. நான் சந்திக்கும்போது, அவருக்கு அகவை 65யைத் தாண்டியிருக்கும் என கருதுகிறேன். பெருமாளின் உண்மைத்தொண்டனாகவே அங்கு வரும் பக்தர்களுக்கு தொண்டு செய்வார். நல்ல உயரமான தோற்றம். ஆச்சார வைணவர் போல் காட்சியளிப்பார், எப்போதும் சிரித்த முகமாய் உரையாடுவார்.  எனினும் அவர் அய்யங்கார் அல்ல. அவரது அணுகுமுறையாலே அந்த பெருமாள் கோயில் எனக்கு பிடித்து போனது. என், வீட்டிற்கு வரும் விருந்தினர்களோடு அடிக்கடி போகும்படியானது. அவ்வாறு போகிற சமயங்களில் அவர் வீட்டிற்கு முதலில் சென்று, அவரை அழைத்துக்கொண்டு ஆலயத்திற்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன். அவர் வீட்டு வாசலில் ஒரு சிறு திண்ணை இருக்கும். அதில் எப்போதும் மஞ்சள் பூசி கோலம் போடப்பட்டிருக்கும். அங்கே ஒரு விளக்கு எரிந்துகொண்டிருக்கும். அந்த திண்ணையில் காளி வாசம் செய்வதாக கூறுவர். அத்திண்ணையில் வீட்டிற்கு வரும் புதியவர்கள் உட்கார்ந்துவிடாமல் எச்சரிக்கை செய்வார்.

பெருமாள் கோயிலுக்கு புதிதாக வரும் பக்தரிடம், தானே முன்வந்து கோயில் குறித்து விளக்கம் தருவார். பெருமாள் குறித்து பெருமை பேசுவார். கோயிலின் உட்பிரகாரத்தின் சுவர்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பு குறித்தெல்லாம் கூறுவார். இருட்டான இடங்களில் இடுப்பில் செருகி வைத்திருக்கும் மெழுகுவர்த்தியை எடுத்து ஏற்றி காட்டி விளக்குவார். புரணக்கதைகçeக் கூறுவார். ஒரு நாளில் பலமுறை விளக்கம் சொல்ல நேர்ந்தாலும், அலுப்புகாட்டாமல் நடந்துகொள்வார். அவரை கைடு என கருதி வெளியூர்காரர்கள் பணம் தர முற்பட்டால் சிரித்துகொண்டே மறுப்பார். தன் குடும்ப பாரம்பரியம் சொல்லுவார். தொலைவில் இருந்து வந்திருக்கிறார்கள் என்றால் வீட்டிற்கு அழைப்பார். உபசரிக்க முற்படுவார். இதெல்லாம் பெருமாள் தொண்டு என்பார். எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கிக் கொள்ளமாட்டார். இப்படியாக அந்த பெருமாளுக்கு பக்தராக வருபவர்கள், பின்னாளில் அவருக்கு நண்பராக மாறிப்போவார்கள்.

ஆலயங்களில் தெய்வங்களுக்கு பணிவிடை செய்ய குருக்கள், பட்டாச்சாரியர் போன்றோரை அரசு, ஆதீனங்கள் நியமிக்கின்றன. அதையும் தாண்டி ஆபத்சகாயம் போன்றோர்களைத் தெய்வங்களே, நேரடியாக தங்களின் நம்பிக்கைக்குரியவர்களாக, நண்பராக நியமித்துக் கொள்கிறதோ எனக் கருதத்தோன்றும். ஆபத்சகாயம் பெருமாளுக்கு நண்பரைப் போல் விளங்கினார். நண்பரை போல் தினமும் சந்தித்தார். உறவாடினார். இன்றும் அந்த நட்பு அவர்களுக்குள் இருக்கும் என்றே நம்புகிறேன். .
ஆம், மனிதர்களைப் போல் தெய்வங்களுக்கும் நண்பர்கள் தேவைப்படலாம். யாருக்கு தெரியும்?

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஆண்களுக்கு குழந்தை பிறக்கும்?

உடல் கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் சென்னை பள்ளிக்குழந்தைகள் என்று வேறு ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அந்த ஆய்வு கூறியிருப்பது வளிமண்டலக்காற்று மாசு. உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு ஹார்மோன்கள் மிக அவசியம். தொடர்ந்து இது போல ரசாயன மாசடைந்த காற்றை சுவாசிக்கும்பொழுது, உடலுக்குள் செல்லும் இந்த ரசாயனங்கள் நாளடைவில் ஹார்மோன்களைப் போல செயலாற்ற ஆரம்பிக்கின்றன. இதனால், நெற்றியில் ஒற்றைக்கண்ணுடன் ஆடு பிறந்ததைப்போல உடல் உறுப்புகளில் தாறுமாறான வளர்ச்சி ஏற்படுகிறது.

தற்போது பரவலாக பயன்பாட்டில் உள்ள களைக் கொல்லிகள், ஆண் விலங்குகளிடம் (தொடர்ந்து களைக்கொல்லி பயன்படுத்திய பயிரைச் சாப்பிடும்) பெண் தன்மையை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. புளோரிடாவில் உள்ள ஒரு ஏரியில் பிறக்கும் அலிகேட்டர் முதலைக்குட்டிகளின் உடலில் இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வேறு சில ஏரிகளில் ஆண் மீன்கள் முட்டையிடத் துவங்கியதற்கு நீரில் கலக்கும் ரசாயனங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் தற்போது மனிதர்களிடமும் வர ஆரம்பித்துள்ளன. மார்பகப் புற்றுநோய், மலட்டுத்தன்மை, 10 வயதிற்கு முன்பே பெண் குழந்தைகள் வயதுக்கு வருவது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த ரசாயனப் பொருட்களே காரணம் என்று அமெரிக்க குழந்தை நல மருத்துவர் பிலிப் லான்ட்ரிகன் செய்த ஆய்வில் உறுதி செய்துள்ளார்.

மேலே உள்ள இரண்டு பாராக்களும் 27.09.2012 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் ஒரு கட்டுரையில் உள்ளவை.

நாம ரொம்ப நாளாவே பூச்சிமருந்து கலந்துதானே !? காய்கறி, அரிசி எல்லாம் சாப்பிடுறோம். அப்போ ரொம்ப சீக்கிரமே ஆண்களுக்கு கருப்பை கூட வளருமோ? இதெல்லாம் நடக்குதோ இல்லையோ உரம், பூச்சிமருந்து கலந்த காய்கறிகளாலே ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சாப்பாட்டுக்கு செலவு செஞ்சுட்டு, அடுத்த 5 நிமிசத்துல நம்ம உடம்புல வர்ற கோளாறுக்கு 50 ஆயிரம் ரூபாயை ஆரம்ப கட்ட வைத்திய செலவா செய்யப்போறாம்னு தோணுது.

இதுக்கு போய் யாராச்சும் கவலைப்படுவாங்களா? அரசாங்கத்துல இலவச காப்பீடு இருக்கு. மிக்சி, கிரைண்டர், டி.வி, மின்விசிறி உள்பட என்னென்னவோ தர்றாங்க. இன்னும் எதெதுக்கோ அரசாங்கத்துல பணம் தரலாம். அப்புறம் ஏன் கவலைப்படணும்?