Search This Blog

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

திருப்பாம்புரத்தில் சரத்குமார்...

செங்கற்கோயிலாக இருந்த பாம்புர நாதர் திருக்கோயில் கொற்றமங்கலம் பாரறாவாயர் எனும் சான்றோரால் கற்றளியாக புகழாபரணன் என்ற பெயருடன் மாற்றப்பட்டது.(கல்வெட்டு 95/1911) இவர் சுவாமி கோயிலையே கற்றளியாக்கினார். இக்கோயில் மூன்றாம் குலோத்துங்கனின் (கி.பி.1189-1218) ஆண்டுகட்கு முன் அதாவது கி.பி.1200க்கு முன் கற்றளியாக்கப்பட்டிருக்கலாம்.

திருப்பாம்புரம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு இந்த லிங்க்கைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

******
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் நீள்கிறது.நடிகர் சரத்குமார் மூன்று தினங்களுக்கு முன்பு  இருட்டிய பிறகு வந்ததற்கே கோயிலில் கூட்டம் சற்று அதிகரித்துவிட்டது.
பிரபலம் என்றால் ஒருவருடைய ஒவ்வொரு செய்கையும் பல ஜோடிக்கண்களால் கவனிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது பிரபலமாக இருப்பதற்கு கொடுக்கும் விலைகளில் ஒன்று என்பது என் எண்ணம்.

படங்களில் இருக்கும் அர்ச்சகர்கள் எம்.விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் வி.கௌரிசங்கர் ஆகியோர் எங்கள் குடும்ப நண்பர்கள்.அதனால்தான் படங்களை எனக்கு மெயிலில் அனுப்பி வைத்தார்கள்.
******

வியாழன், 18 பிப்ரவரி, 2010

பட்டிக்காட்டை விட்டுப் பறந்து போன பச்சை போர்டு...

(இலவச இணைப்பு பரிசலின் புத்தகம் பற்றிய என் கருத்து)
 
சிவகங்கை பகுதி(சீமை)யில் ஆலவிளாம்பட்டிக்காடுன்னு ஒரு கிராமமாம்.அங்க ஒரு மதுக்கடை திறந்திருக்காங்க.பேர சொல்லி அதோட ஓனர் யாருன்னு எழுதுனா உடனே ....................அவமதிச்சுட்டதா வழக்கு போட்டாலும் போட்டுடுவாங்க. (முதல்ல வெச்ச பச்சைக்கலர் போர்டுதான் இப்பவும் இருக்கா இல்ல, மஞ்சளுக்கு மாத்திட்டாங்களான்னு தெரியலையே)

அதுதான் தெருவுக்குத்தெரு குடி நீருக்கான குழாய் இல்லன்னாலும் யாரும் 'குடி'மகன்களுக்கான நீர் கிடைக்காம திண்டாடக்கூடாதுன்னு அரசு முயற்சி எடுக்குறது உனக்குப் பிடிக்கலையான்னுதானே கேட்குறீங்க.

விஷயம் அது இல்லை சார்.அந்த கிராமத்துல வரதட்சணை வாங்கக்கூடாது, புகை ,மது இதையெல்லாம் பயன் படுத்தக்கூடாதுன்னு பல வருஷங்களுக்கு முன்னாலயே சத்தியப்பிரமாணம் பண்ணி அதை ஓலைச்சுவடியிலயும் எழுதி வெச்சிருக்காங்களாம்.(அந்த மக்களோட உரிமையைப் பறிச்சு அடிமையா வெச்சிருக்குறதா ரெண்டு பகுத்தறிவு பேர சொல்லி சண்டைக்கு வராம இருந்தா சரிதான்.)

மக்கள் குடிக்கிறதாலதான் நாங்க மதுக்கடை திறந்தோம். அப்படின்னு அதிகாரத்துல இருக்குறவங்க சொல்லுவாங்க. கடை இருக்குறதாலதான் நாங்க குடிக்கிறோம்...கடை முதலாளியும் பொழைக்கணும்ல அப்படின்னு போதையில உளறுற ஆட்களையும் நாம பார்த்திருப்போம்.

ஆனா இந்த கிராமத்துல மதுக்கடை திறந்திருந்தாலும் ஒருத்தர் கூட அதை வாங்க வரலையாம்.கடையைத்திறந்தவங்களே மூடிட்டாங்களாம்.கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு புரட்சின்னு சொல்லுவாங்க. இது சத்தமும் இல்லாத புரட்சி.

குடும்பத்துக்குள்ள அனாவசிய சச்சரவு இல்லை.அக்கம்பக்கத்து ஆட்களோட குடிச்ச போதையால தகராறு இல்லை.தொண்ணூறு வயசு வரை நிறைய பேர் ஆரோக்கியமா இருக்காங்க.-இதெல்லாம் அந்த கிராமத்து ஆட்களோட ஸ்டேட்மெண்ட்.

24.02.2010 தேதியிட்ட குமுதம் வார இதழ்ல இந்த கட்டுரை வந்துருக்கு.

எக்கச்சக்கமா சம்பாதிக்கிற பணத்தை எப்படி செலவு செய்யுறதுன்னு தெரியலை,வேலைப்பளு காரணமா ஏற்பட்ட அசதியை மறக்க கொஞ்சம் ஜாலியா இருக்கோம் இப்படி விதவிதமா காரணம் சொல்ற புண்ணியவான்களே...உங்களை நான் எதுவும் சொல்லலை.அது உங்க சவுகர்யம். ஆனா அதே போதையோட வண்டியோட்டிகிட்டுப் போய் யாரையாச்சும் காலிபண்ணிட்டு, குடிக்காதவன் ஆக்சிடண்ட் பண்றது இல்லையான்னு உங்க தப்பை நியாயப்படுத்தாதீங்கன்னு தான் சொல்றேன்.

 தினமும் நிச்சயமில்லாத கூலி வேலை செய்து இருநூறு ரூபா சம்பாதிச்சு அவ்வளவையும் குடிச்சு காலி பண்ணிட்டு சிகரட் கடன் கேட்டு கொடுக்காத பெட்டிக்கடைக்காரனோட பொறப்பை கேவலமா பேசிட்டு,வீட்டுல பணம் இல்லாததால சமைக்காத மனைவியை அடிச்சு உதைச்சுட்டு, ஆசிரியர் நோட்டு வாங்கிட்டு வரலைன்னா நாளைக்கு பள்ளிக்கூடத்துக்குள்ள விடமாட்டாராம்னு சொல்ற பையனை,"ஏண்டா...ஒரு பொட்டிக்கடைக்காரன் என்னைய கேவலமா பேசிட்டான். உனக்கு படிப்பு ஒரு கேடா"ன்னு திட்டுற மோசமான மனிதர்களும்,

மது அருந்தி தைரியம் வரவழைத்துக்கொண்டு(?!) கொலைசெய்ய செல்லும் கூலிப்படையினரையும்தான்  குமுதத்துல வெளிவந்த கட்டுரை எனக்கு நினைவூட்டியது.

******

துணிச்சலுக்கு பாராட்டுகள் என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார் நம்ம பரிசல் அண்ணன்.அதனால குழிகளுக்கு நடுவுல இருக்குற சாலைகள்ல(?1) போற எச்சரிக்கையோடதான் தொகுப்புக்குள்ள பயணம் பண்ணினேன்.
பரவாயில்லை...எதிர்பார்த்ததோட நல்லா வந்துருக்கு.(அடப்பாவி...என் தொகுப்போட உள்ளடக்கம் பத்தி எனக்கு தெரியும்.எதிர்பார்த்ததோட நல்லா வந்திருக்குன்னா அப்ப எதையுமே நீ எதிர்பார்க்கலையான்னு பரிசல் அண்ணன் கேட்குறது எனக்கு புரிஞ்சு போச்சு.)

தனிமை-கொலை-தற்கொலை * இந்தக்கதை நம்மில் பெரும்பாலானோர் மிகச்சரி என்று நினைத்துக்கொண்டு ரொம்ப ரொம்ப தவறான காரியத்தில் ஈடுபடுவோம் என்பதை உணர்த்துகிறது. பில் தொகையை எத்தனை முறை கூட்டினாலும் நாம் முதல் முறை போலவே தவறாகத்தான் கூட்டிக்கொண்டிருப்போம். அது போலதான்.

காதல் அழிவதில்லை * மொக்க படத்தோட தலைப்புல (சிம்பு மன்னிக்க)குடும்பத்துல குதூகலம் குறையாம இருக்குற ரகசியத்தை சொல்ற கதை.

காதலிக்கும் ஆசையில்லை * எனக்கு டீ,காப்பி குடிப்பதை நிறுத்தி ரொம்ப நாட்களாகிவிட்டது.இப்போதும் யார் வீட்டுக்காவது போகும்போது அவர்களிடம் எனக்கு வேணாம் என்று மறுக்கும்போது அவர்களின் முகம் களையிழப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

நாம் ரொம்ப பெருமையாக ஒரு விஷயத்தை சொல்லும்போது எதிராளியின் இதயம் கிழிந்து தொங்குவதை கவனிப்பதே இல்லை.அதை எப்படி சொல்ல வேண்டும், என்ற நேர்த்தியை இந்த கதை சொல்கிறது.

நான் ரொம்ப நல்லவனாக்கும் என்று சொல்வது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு பெருமை தரலாம். ஆனால் அந்த வார்த்தைகளும் சிலரை காயப்படுத்தும் என்பதை அழகாக புரிந்துகொண்டேன்.

BUTTERFLY EFFECT *இந்தக்கதை , இந்த நிமிடம் வாழ் என்ற ஞானியரின் தத்துவத்தை அது தத்துவம் என்று புரியாமலேயே கடைப்பிடிப்பது குழந்தைகள்தான் என்று சொல்கிறது.

இருளின் நிறம் * நாணயத்துக்கு மட்டுமல்ல...இருளுக்கும் இன்னொரு பக்கம் உண்டு என்று புரியவைத்த கதை

நான் அவன் இல்லை*ச்சே...இப்படித்தானா போய் சிக்குறது...என்று சார்லியைப் பார்த்து காமெடியாத்தான் சொல்லத்தோன்றியது. நிஜ வாழ்க்கையிலும் பல சம்பவங்கள் இப்படித்தான் யு டர்ன் அடித்து கவிழ்த்து விடும் என்ற நிதர்சனம் இந்தக்கதையில்  உண்டு.

மனிதாபிமானம்*என்ன நடந்தது என்று புரியாமல் நாம் உதிர்க்கும் சொற்கள் பல நேரங்களில் மிகவும் தவறாகப் போய் விடும் வாய்ப்பு உண்டு.இந்தக்கதையில் எதுவும் நடக்கவில்லை.ஆனால் எதிர்பாராத வில்லங்கத்தை உருவாக்கிவிடலாம். எனவே போனில் பேசும்போதும் கவனம் தேவைன்னு சொல்லிட்டீங்க.

நட்பில் ஏனிந்த பொய்கள்* பல நேரங்களில் ஒருவரின் நடத்தைதான் மதிப்பை உருவாக்கும் என்பது புரியாமல் ஏன் இந்த பொய்கள் என்று யோசிக்கவைத்த கதை.

கைதி* ஒரு பக்கத்தில் ஒரு கிரைம் ஸ்டோரி. நான் எதாவது டென்ஷனில் இருக்கும்போது சட்டென்று நூலகத்துக்குப்போய் இது மாதிரியான கதைகளைத்தான் எடுத்துப்படிப்பது வழக்கம்.கதைக்கு கையுண்டா காலுண்டான்னு எல்லாம் கேட்காம படிக்கணும் என்று நினைக்கவைத்த கதை.

ஜெனிஃபர் * இது கதையின் இறுதியில் சொன்னதைப்போல் கவர் ஸ்டோரியாகவே போடலாம்.மற்றபடி என்னைப்போல சாமானியர்களுக்கெல்லாம் சாத்தியமில்லை என்று நான் யார் என்பதை புரியவைத்த கதை.

கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன் * செல்போன் ஆடம்பரப்பொருள் என்று ஒரு விவாதம் எழுந்த நேரத்தில் இது மாதிரியான அவசரத்துக்கெல்லாம் உதவுமே என்று சமாதானம் சொன்னார்கள்.ஆனால் இந்த கதையில் உள்ளது போல் நடப்பதை எல்லாம் பார்க்கும்போது (படிக்கும்போது) செல்போன் அநாவசியம் என்றும் கத்தத் தோன்றுகிறது.

டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும் * இது ராஜேஷ்குமார் பாணியில் தாவித்தாவிச்செல்லும் கதை. கதையின் தட்டச்சு வடிவமைப்பு எனக்கு உறுத்தியது இந்தக் கதையில்தான்.

மனசுக்குள் மரணம் * ஆண்ட்டி கிளைமாக்ஸ் என்று சொல்வார்களே...அது இந்தக்கதையில் மிகப்பொருத்தமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஸ்டார் நெம்பர் ஒன்!* இதுதான் உலகம்.எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பது பணம்தான். வேறென்ன சொல்ல.

 நட்சத்திரம் *அழகி படத்தில் வந்த ரோட்டோர மனிதர்கள் என் நினைவில் வந்து போனார்கள்.இதையெல்லாம் பார்க்கும்போது நான் ரொம்பத்தான் வசதியா இருக்கேனோன்னு ஒரு எண்ணம்.

சமூகக்கடமை * பலர் தனக்கு என்ன பொருந்தும் என்று பார்க்காமல் அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தே பொழுதை போக்குவார்கள். இப்படிப்பட்ட மனிதர்களில் பலர் தாங்களே அழிவார்கள், இந்தக்கதையில் வரும் நபர் மற்றவரின் திறமையை ஒன்றுமில்லாமல் செய்வதைப்பார்க்கும்போது அவர்மீது ஆத்திரம் வருகிறது.....அட...பரிசல் அண்ணா...என்னைப்பொறுத்தவரை இந்த ஒரு இடத்துலேயே நீங்க ஜெயிச்சுட்டீங்க....

(பரிசல்,கேபிள் அப்படின்னு லேபிள் போட்டா கூட நாலு ஹிட்ஸ் கிடைக்குது.எதோ உங்க புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுறதால கம்ப்யூட்டரால அதுல ஒர்க் பண்ற ஆளுக்கும் ஏ/சி கிடைக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்-

இதெல்லாம் ஒரு விமர்சனமான்னு ஒரு கேள்வி வரணும்...வந்தாதான் நாங்களும் ரவுடின்னு நாலு பேர் ஒத்துக்குவாங்க.மானத்தைக் காப்பாத்திடுங்கண்ணே...)

புதன், 17 பிப்ரவரி, 2010

ரொம்பவும் துணிச்சல்தான்...அப்படின்னு நான் சொல்லலீங்க...

விளம்பரத்துல கேபிள் அண்ணனோட புத்தக தலைப்பை அவசரமா படிச்சப்ப டக்கீலான்னுங்குறதை ஷக்கீலான்னுதான் முதல்ல படிச்சேன்.(எனக்கு வயசாகிப்போச்சோ...முதல்ல கண்ணை ஒழுங்கா செக்கப் பண்ணணும்.)
தொகுப்பு முழுக்க கதைகளோட வர்ணனை ஒரு மாதிரியாத்தான் இருந்தது.மனசுக்குள்ள இருக்குறது வெளியில தெரிஞ்சுடக்கூடாதுன்னு நினைச்சுகிட்டு முகமூடியோட இந்த சிறுகதைகளை விமர்சனம் பண்ணினா அது எப்படி இருக்கும்னு தெரியுமா?

அளவுக்கு அதிகமா பெண்ணின் அங்கங்களை இப்படி வர்ணிச்சா, அது எல்லார் மனசையும் கெடுத்துடும்.-இப்படி சொல்லி, கதைகள்ல இருக்குற, சிந்திக்க வைக்கிற விஷயங்களையும் இருட்டடிப்பு செய்துடுற விமர்சனமாத்தான் இது இருக்கும்.

நாம கண்ணை மூடிட்டா உலகத்துல நடக்குற எல்லா சம்பவங்களும் நின்னா போயிடுது?அதனால எது நல்லது, எது மோசம்னு குற்றம் குறை கண்டுபிடிக்காம, ஒரு ஓரமா நின்னு என் மனசுக்குத் தோணின விஷயங்களை தட்டச்சிருக்கேன்.

முத்தம் கதையில் வரும் நிஷாவைப்போல் அவதிப்படும் பெண்கள் நம் நாட்டில் ஏராளமாக இருக்கிறார்கள்.அவளிடம் எதையும் எதிர்பார்க்காமல் அவன் உதவி செய்தான் என்பதற்கு காரணம், இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பதுதான். அதாவது இதுவரை இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. சில விஷயங்களில் ஆற அமர யோசித்து முடிவெடுப்பதற்குள் அந்த சூழ்நிலைகள் நம்மை விட்டு எங்கோ போய்விடும்.

ஆண்டாள் கதையில் வருவது போன்று நம்மில் பெரும்பாலானோருக்கு பால்ய வயது அனுபவங்கள் கொஞ்சமாவது ஏற்பட்டிருக்கும்.அந்த வயது பொறாமையில் எந்த உள் நோக்கமும் இருக்காது.அவங்க நம்ம கூட மட்டும் நட்பா இருக்கணும் என்ற ஒரே ஒரு குறிக்கோள்தான் இருக்கும்.(ஆனால் இப்போது ஊடகங்களின் தாக்கத்தால் பெரியவர்களையும் தாண்டிய கறை படிந்த மனசு பால்ய வயதிலேயே ஏற்பட்டு வருவதாக எனக்குத் தோன்றுகிறது.)

ஒரு காதல் கதை, இரண்டு கிளைமாக்ஸ் - இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்துக்கே இடமில்லாமல் ஒப்புக்கொள்ள வைக்கும்  வகையில் உறுதியாக சொல்லப்பட்ட கதை.

துரை, நான்...ரமேஷ் சார் - கோடம்பாக்கத்தை நம்பி வந்த ஆயிரக்கணக்கான ராஜூக்களை நினைவூட்டிய கதை.இப்படிப்பட்ட மனிதர்கள் யாரும் இல்லை என்று மறுக்க யாரும் இல்லை.

என்னைப்பிடிக்கலையா கதை, இப்போது நிறைய குடும்பங்களில் உள்ள தலையாய பிரச்சனையை அப்பட்டமாக்குகிறது.செய்தித்தாள்களில் வரும் கள்ளக்காதல் கொலைகள் பற்றிய செய்திகளுக்கு இந்தக்கதையில் அந்தப்பெண் சொல்லும் காரணம்தான் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மாம்பழ வாசனை - தொடக்கத்தில் ஒரு மாதிரியாகவே போனாலும் கதையின் இறுதியில் எல்லாவற்றையும் மறந்து அடப்பாவமே என்று சொல்ல வைத்துவிட்டது.

நண்டு சிறுகதை, நம் நாட்டின் மருத்துவ சிகிச்சை ஏழைகளை ஓரங்கட்டுவதில் எவ்வளவு தீவிரமாக இருக்கின்றன என்பதை மறைமுகமாக சொல்கிறது.இவர்களுக்கெல்லாம் நம்பிக்கைதான் வாழ்க்கை.

ஒட்டுமொத்தமாக இந்த சிறுகதைத்தொகுதியைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் மனதில் உள்ள ஒரு மாதிரியான உணர்வுகளைத்தூண்டின என்று சொல்லவில்லை என்றால் நான் பொய் சொன்னவனாவேன்.

ஆனால் இதுதான் உண்மை.இந்தக்கதையில் உள்ள கதாபாத்திரங்கள் யாருமே முழுவதும் கற்பனையானவர்கள் என்று சொல்லவே முடியாது. எங்கோ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் கதையில் உள்ள அவலங்களை, நம் சமூகத்தில் உள்ள அவலமாக கருதி, அதற்கு நாமும் நேரடியாகவோ மறைமுகமாவோ காரணமாக இருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டு, நம் மீதே கோபப்பட வேண்டியதுதான்.

இதை  விமர்சனம் என்று சொன்னாலும் அவ்வளவுக்கு எனக்கு திறமை போதாது. சாதாரண வாசகனின் உளறல் என்று இதை எடுத்துக்கொள்ளவும்.
******

துணிச்சலுக்கு பாராட்டுகள் என்று எழுதி பரிசல் அண்ணன் அவரோட புத்தகத்தில் கையொப்பமிட்டிருந்தார். அட்டையைத் திருப்பியதும் நான் பார்த்தது இந்த வார்த்தைகளைத்தான்.தன் புத்தகத்தை படிக்கப்போகும் வாசகருக்கு இப்படி ஒரு வரவேற்பு கொடுத்ததால் உண்மையில் அவருக்குதான் துணிச்சல் அதிகம் என்று சொல்வேன்.

எவ்வளவோ பண்ணிட்டோம்...இதைப்பண்ண மாட்டோமா...படிச்சு முடிச்ச பிறகும் பதிவு எழுதிகிட்டு இருக்கேனே.இப்ப சொல்றேன். நானும் துணிச்சல்காரன் தான்.


நேரமின்மை காரணமாக டைரிக்குறிப்பும், காதல்மறுப்பும் புத்தகம் பற்றிய விமர்சனம் நாளைக்கு.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கேபிள் - பரிசல் - புத்தக விமர்சனம் - விரிவான விபரம் நாளைக்கு...

கேபிளின் புத்தகத்தில் இருந்த சில கதைகளை நான் விகடனில் வெளிவந்தபோதே படித்திருக்கிறேன்.தொகுப்பில் முதல் கதையான முத்தத்தில் ஏறிய கிக், புத்தகம் முழுவதையும் படித்து முடித்தவரை இறங்கவே இல்லை.கேபிள் அண்ணன் வித்தியாசமான கோணங்களில் இயல்பான மனிதர்களை படம்பிடித்துக் காட்டியிருந்தார்.

பரிசல் அண்ணன் ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு களத்தில் அமைத்துக்கொடுத்திருந்தார்.தொகுப்பில் இருந்த பல கதைகள் அட என்று சொல்ல வைத்தன.

பணிச்சுமை காரணமாக விரிவான விமர்சனத்தை நாளை எழுதுகிறேன்.ஆனால் பரிசல் அண்ணனோன புத்தகத்துல முதல் பக்கமே இப்படி எனக்கு அதிர்ச்சி கொடுக்கும்னு நினைக்கலை. அந்த ரெண்டு வார்த்தைகளைப்படிச்சதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(வடிவேலுவின் வசன உச்சரிப்பில் படிக்கவும்.)

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலும் பயிற்சி முடித்த ஆசிரியைகளும்...

மிக அதிகபேர் எழுதக்கூடிய தேர்வுமுடிவுகள் வெளிவந்த நேரத்தில் கூட இவ்வளவு பரபரப்பு இருப்பது சந்தேகம்.ஆனால் அவற்றுக்கு உரிய சான்றிதழ்கள் கிடைத்ததில் இருந்து ஒரு வாரகாலத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நிரம்பி வழியும்.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கியபிறகு மாணவர்களும் மாணவிகளும் அதைப்பதிவு செய்வதற்குள் வெந்து நொந்துவிடுகிறார்கள்.இப்போது இந்தப் பட்டியலில் புதியதாக சேர்ந்திருக்கும் கோர்ஸ், ஆசிரியர் பயிற்சி படிப்பு.

சில வாரங்களுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் ஓரிரு தினங்களுக்கு முன்புதான் சான்றிதழ்களை வழங்கியிருப்பார்கள் போலிருக்கிறது.

இன்று திருவாரூரிலும் மாணவிகள் மிக நீ............ண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.பொன்னை (பொண்ணு இல்ல) வைக்கிற இடத்துல பூவை வைக்கிறதா சொல்லுவாங்க. ஆனா பல பொண்ணுங்க டயட் அது இதுன்னு ஐம்பது கிலோ எடை இருக்கவேண்டிய நேரத்துல முப்பத்தஞ்சு கிலோதான் இருப்பாங்க.(முப்பது சதவீதம் தள்ளுபடி?)

இந்த லட்சணத்துல பல மணி நேரம் காத்திருத்தல் அவங்களை மேலும் பலவீனப்படுத்தும். கணிணி வந்த பிறகு இப்படி கால் கடுக்க காத்திருக்குறது நேரத்தைக்கொல்றது மாதிரி.

பதிவு செய்யுற வரிசையை வெச்சுதான் வேலைக்கு கூப்பிடுவாங்களாம். என்ன கொடுமை சார் இது.ஒரு லட்சம் கோடி ரூபா காண்ட்ராக்டை ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொடுத்துட்டு முதல்ல வந்தவங்களுக்கு கொடுத்துட்டோம்னு ரொம்ப கூலா சொன்னாங்க.இது என்ன சினிமா டிக்கட்டா?அப்புறம் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்.

தேர்வு முடிவு வெளிவந்த தேதியை பதிவு பண்ணின தேதியா எடுத்துகிட்டு அந்த அந்த கல்வி நிறுவனங்களிலேயே போய் எல்லா சான்றிதழ்களையும் பதிவு பண்ணிடலாம். அது கஷ்டம்னா, சுழற்சி முறையில வந்து பதிவு பண்ண வைக்கலாம்.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதிதான் பதிவு செய்த தேதியா கணக்கு வெச்சுகிட்டா என்ன பிரச்சனை?

இதுல பல நடைமுறை சிக்கல் இருக்குன்னு சொல்லுவாங்க. இஷ்டப்பட்டா எதுவும் சிக்கல் இல்லை. மனசுக்கு விருப்பம் இல்லைன்னாதான் தட்டிக்கழிக்க ஆயிரம் காரணம் இருக்குறதா தெரியும்.

இன்னைக்கு மெகா டி.வி செய்தியில விருதுநகர், திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துல கூடி நின்ன கூட்டத்தைக் காட்டினாங்க. நாளைக்கு பேப்பர்ல எவ்வளவு தள்ளுமுள்ளு, தடியடி, உடம்புல வலு இல்லாம மயங்கி விழுந்தது எத்தனைபேர் - இந்த விவரங்கள் எல்லாம் வரும்.

திருவாரூர்ல கொஞ்ச நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்துல வேலை வாய்ப்பு அலுவலகமும் இயங்கி வந்தது.மத்திய பல்கலைக்கழகம் இயங்க தற்காலிக கட்டிடம் வேணும்னு அங்க இருந்த எல்லா அரசு அலுவலகங்களையும் தட்டி விட்டதுல திருவாரூர் கால்நடை மருத்துவமனைக்கு எதிர்ல வந்து வேலைவாய்ப்பு அலுவலகம் விழுந்துடுச்சு.

ஒரே நாள் பதிவுமூப்புன்னு ரெண்டுலட்சம் பேர் இருந்தாலும் அதுல தகுதி படைச்சவங்களைத் தேர்வு செய்ய வேறு வழிமுறையை உருவாக்கணுமே தவிர, கோயில்ல பொங்கல் கொடுக்குற மாதிரி முதல்ல பதிவு பண்ணினாதான் வேலை அப்படின்னு சொல்றது மிக மிக முட்டாள் தனம்.

இது மாதிரி பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, ஆசிரியர் பயிற்சி தேர்வு எல்லாம் சனிக்கிழமை எழுதி திங்கள் கிழமை சான்றிதழ் கொடுத்து அவங்க செவ்வாய் கிழமை பதிவுபண்ண கூடிடுறாங்களா?

இல்லையே...ஒவ்வொரு வருஷமும் இந்த கூத்துதானே நடக்குது. ஒரு மா நாடு போட பல மாசங்களுக்கு முன்னாலேயே திட்டமிடுற ஆட்சியாளர்கள், இது மாதிரி நிரந்தர பிரச்சனைகளுக்கு தீர்வு காணுற முயற்சியே எடுக்குறது இல்லையே.

இதுல பொது மக்கள் செய்ய ஒண்ணும் இல்லை.அதிகாரிகளையும் அரசியல்வாதிகள் அல்லது வியாதிகள்தான் ஆட்டி வைக்கணும்.
இந்த கோரிக்கையை வெச்சு இளைஞர்கள் போராடினா, அவங்களையே, பணி செய்ய விடாம தடுத்ததா சொல்லி உள்ள வெச்சிடுவாங்க.

டென்த், பிளஸ்டூவை பள்ளிகள்லேயே பதிவு பண்ற வசதி கொண்டு வந்ததா சொன்னாலும் இந்த முயற்சியும்  தொடர்ந்து நடைபெறணும்.

ஆசிரியர் பணி - புனிதப்பணி. இப்படி எல்லாம் அவங்களை அலைக்கழிச்சா அது நாளைக்கு ஆசிரியரான பிறகு இந்த  கோபம் அவங்களை அறியாமலேயே பிள்ளைங்க மேல திரும்பலாம். இது மாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்லலை. ஒரு சில ஆசிரியர்கள் மோசமா நடந்துக்குறதை பார்த்தா, அவங்க வளர்ந்த சூழ்நிலையும்  பட்ட  வடுக்களும்   கூட இதுக்கு காரணமோன்னு நினைக்கத் தோணுது.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

கடைசியில என்னையும் இப்படி மாத்திட்டாங்களே!

முதல்வன் படத்தின் உச்சகட்ட காட்சியில் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றவுடன் அர்ஜூன்,"கடைசியில என்னையும் அரசியல்வாதியாக்கிட்டாங்களே!" என்று மணிவண்ணனிடம் சொல்வார்.
இப்போது "இப்ப என்னையும் ரசிகனாக்கிட்டாங்களே!"என்று நான் புலம்பவேண்டியதாயிடுச்சு.சீரியல் பார்த்து நேரத்தை தொலைச்சு உறவுகளை சிதையவிட்டுகிட்டு இருக்குற நிறைய தாய்மார்களை நான் கிண்டல் பண்ணினேன்.

ஆனா திங்கள் முதல் வியாழன் வரை இரவு பத்துமணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில ஒளிபரப்பாகுற விசாரணை தொடரை இரண்டு வாரமா
பார்த்துகிட்டு இருக்கேன்.

படத்துல ரெண்டு மணி நேரம் வில்லங்கத்தைக் காட்டிட்டு பத்து நிமிஷம் புத்திமதி சொல்றதையே தப்புன்னு சொல்றோம். ஆனா பல நெடுந்தொடர்கள்ல அஞ்சு வருஷம் அவ்வளவு தப்பையும் காட்டிட்டு கடைசி ஒரு எபிசோடுல மெசேஜ் சொல்றோம்னுதான் பில்ட்அப் பண்ணுவாங்க.

ஆனா விசாரணை தொடர் எல்லாமே குட்டிக்குட்டிக் கதைகள்.திங்கள் கிழமை ஆரம்பமாகுற கதை வியாழன் அன்னைக்கு முடிஞ்சுடும்.எல்லாம் கிரைம் ஸ்டோரிதான். ஒவ்வொரு கதையோட முடிவுலயும் ஒரு நல்ல மெசேஜ் உண்டு.இதுக்கெல்லாம் காரணம் யாரு...நம்ம கிரைம் ஸ்டோரி மன்னன் ராஜேஷ்குமார்தான்.

கதை வசனம் இவரே.பொதுவா ராஜேஷ்குமாரோட நாவல்கள்ல பல குற்றவாளிகள் ரொம்பவும் புத்திசாலித்தனமா தப்பு செய்வாங்க.ஆனா கதையோட முடிவுல கண்டிப்பா அவங்க மாட்டிக்கிற மாதிரிதான் எழுதியிருப்பார்.தொலைக்காட்சி தொடர்லேயும் இதே மாதிரிதான் கதை இருக்கு.இந்த சமூக அக்கறைதான் அவர்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சுது.

அப்புறம் ராஜேஷ்குமார் நாவல்களின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களான விவேக்,ரூபலா,விஷ்ணு -இந்த மூணு பேரும் இருக்காங்க.கதைகளோட, இந்த தொலைக்காட்சித் தொடர்ல விஷ்ணுவோட கதாபாத்திரம் பிரமாதமா சிரிப்பை வரவழைக்கிது.அது ஷ்யாம்கணேஷ்னு நினைக்கிறேன். நாளைக்கு கன்பர்ம் பண்ணிடலாம்.இந்த வகையில எழுத்தாளர் ராஜேஷ்குமார், வசனகர்த்தாவா வெற்றி அடைஞ்சுட்டார் அப்படின்னுங்குறது என் கருத்து.

சுஜாதாவின் படைப்பான கணேஷ், வசந்த் கதாபாத்திரங்களும் இதே சுவாரஸ்யத்தை தரும்.

ஆனா எனக்குள்ள ஒரு பயம். இந்த நிகழ்ச்சியின் இடையில மா.மா விளம்பரமும் (அதுதாங்க மானாட, மயிலாட.) ஒரு எசகுபிசகான மருந்துக்கான விளம்பரமும் மட்டும் தான் போடுறாங்க.
ஒண்ணு, அரைமணி நேரத்துல இருபத்து ஏழு நிமிஷம் விளம்பரத்தையும் பிகினிங் டைட்டிலையும் எண்ட் டைட்டிலையும் போட்டு சாகடிக்கிறாங்க. இல்லன்னா இப்படி மிகக்குறைந்த விளம்பரத்தை மட்டும்தான் போடுறாங்க.அதுக்கு நீ ஏன் பயப்படுற அப்படின்னுதானே கேட்குறீங்க...

ஸ்பான்சர் கிடைக்காம நிகழ்ச்சி நின்னுடுமோன்னுதான் நான் பயப்படுறேன்.பார்ப்போம்...விசாரணை எந்த அளவுக்குப்போகுதுன்னு.

******

திருவாரூரில் பார்த்து நான் தற்போது கவலைப்பட்ட விஷயம்.

தேரோடும் நாலு வீதியிலயும் சிமெண்ட் ரோடு போடப்போறாங்களாம்.பூமி பூஜை போட்டு மணல், ஜல்லி எல்லாம் வந்து இறங்கிட்டு.பொக்லைன் வெச்சு ஏற்கனவே இருந்த தார்ரோட்டுல கோடு போட்டு கிழிச்சுகிட்டு இருக்காங்க.

இதுனால வரப்போற நன்மை என்னன்னு எனக்கு தெரியாது.ஆனா சில தீமைகளை மட்டும் இப்ப சொல்லிடுறேன்.

மண் தரை இல்லாம போறதால மழை நீர் பூமிக்குள்ள போற நுண்துளைகள் அடைபட்டுப்போகும்.
வருஷத்துக்கு ஒன்பதுமாசங்கள் அனல் காத்து தாங்காம இந்த தெருவுல இருக்குற அணிக நிறுவனங்கள் வீடுகள்ல குளிர்சாதனப்பெட்டி, மின் விசிறியோட பயன்பாடு ரொம்பவும் அதிகமாயிடும்.

இப்படி பூமி மேல மேல வெப்பமாகுறதுக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணி திட்டம் போட்டுட்டு குடிமக்கள், வெப்பத்தைக்குறைக்கணும்னு சொல்றாங்க. என்ன கொடுமை சரவணன் இது.

பேசாம நானும் அரசாங்கப்பணிகளை டெண்டர் எடுக்குற ஒப்பந்தக்காரராயிருந்தா இப்போ சுவிஸ் பாங்க்ல பணம் சேர்த்துருக்கலாமோ.

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 7 - நிறைவுப்பகுதி - ஐம்பதாவது பதிவு

குளிர்பானம் வாங்கிக்கொடுத்தால்தான் மாப்பிள்ளை வெளியே வருவார் என்று சில குறும்புக்கார பெண்கள் சொல்லவும் ஆவேசமாக உள்ளே நுழைந்தது வெற்றிதான்.
"அட அறிவுகெட்ட வெண்ணை...கல்யாண ஏற்பாட்டை நாமதாண்டா செஞ்சுகிட்டு இருக்கோம்.இப்ப பொண்ணு வீட்டுல இருந்து பார்மாலிட்டிக்கு அஞ்சு பேர் வந்திருக்காங்க.அவ்வளவுதான்.இதுக்கு மெனக்கிடுறது எல்லாம் நானும் என் நண்பர்களும்தான்.இப்ப நான் போய் கூல்டிரிங்கஸ் வாங்கிட்டு வரணுமா...பிச்சுபுடுவன் பிச்சு...ஒழுங்கா புள்ளையா அடக்க ஒடுக்கமா ரெடியாகு...இல்லன்னா தூக்கிடுவோம்...எல்லாம் இவங்களால வந்தது.பெரும்பாலும் வில்லங்கம் உங்க கிட்ட இருந்து தான் ஆரம்பமாகுது.இவன் பாட்டுக்கு எதுவும் சொல்லாம கிளம்பியிருப்பான்.அவனை உசுப்பேத்தி எங்கிட்ட திட்டுவாங்க விட்டுட்டீங்கிள்ள..."என்று வெற்றி அந்த பெண்களையும் லேசாக கடிந்துகொண்டான்.

அவர்களில் ஒருத்தி,"அப்ப உன் கல்யாணத்தப்ப ஜமாய்ச்சுடுவோம்."என்றாள்.



"பிசாசுங்களா...நீங்க யாரும் ஆணியே புடுங்க வேணாம்.நான் கல்யாணம் முடிச்சு ஹனிமூனும் கொண்டாடிட்டுதான் உங்களுக்கெல்லாம் விஷயத்தை சொல்லுவேன்.தெண்டமா இவளுங்ககிட்ட பேசிகிட்டு இருக்காதடா.நமக்கு நேரமாச்சு."என்று மாப்பிள்ளை அழைப்புக்காக அன்புச்செல்வனை துரிதப்படுத்தினான்.
மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாணவேடிக்கையுடன் மாப்பிள்ளை - பெண் ஊர்வலம் திருமண மண்டபத்தை வந்து அடைந்தது.

ஒரு வயதான அம்மா,"டேய்...வெற்றி...ஊர்வலத்தை நீயும் உன் பிரெண்ட்சும் அமர்க்களப்படுத்திட்டீங்கடா."என்றார்.

"அடப்போங்க பாட்டி...இதுல ஒரு கிக்கே இல்ல...பொண்ணு வீட்டுல இதையெல்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தா அது ஒரு மாதிரி.ஆனா நாங்களே ஏற்பாடு பண்ணி இப்படி ஆட்டம் போடுறது காசு கொடுத்து ஆளுங்களை கூட்டிட்டு வந்து கட்சி மாநாடு நடத்துற மாதிரி இருக்கு."என்று அலுத்துக்கொண்டான்.

காயத்ரியின் கூந்தலுக்கு சந்தியாவின் தோழி மிக அழகாக ஒருவித அலங்காரம் செய்திருந்தாள். ஒளிப்பட ஆல்பத்தில் வரைகலைக்காக பயன்படுத்த காயத்ரியை வெவ்வேறு கோணங்களில் படம்பிடித்துக்கொண்டிருந்தது வெற்றியின் நண்பன்தான்.திடீரென சந்தியாவுக்கும் அவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கே வந்த வெற்றி,"இங்க என்னப்பா சத்தம்..."என்றான்.

"நீ மட்டுமில்ல, உன் நண்பர்களாலயும் பிரச்சனைதான்.என் ஃப்ரெண்ட் எங்க அக்காவுக்கு இந்த தலை அலங்காரம் செய்ய எவ்வளவு சிரமப்பட்டிருப்பான்னு தெரியுமா? அதை மொபைல் கேமராவுல படம் பிடிக்க எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆயிடும்?ஆனா போட்டோகிராபர்கிட்ட இருக்குற கேமராவுல பதிவுசெஞ்சா எவ்வளவு தரமா இருக்கும்... அதை சொன்னா, உன் பிரண்டு மாட்டேன்னு சொல்றார்.
நீயும் உன் நண்பர்களும் என் கிட்ட வம்பு பண்ணிகிட்டே இருக்குறதுன்னு தீர்மானமா இருக்கீங்கிளா?"என்று சந்தியா படபடத்தாள்.

"த்தோடா...நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம்...சக்தி...என்னடா பிரச்சனை..."

"நீயே எடுடா வெற்றி..."என்று அந்த கேமராவை இவனிடம் தந்தான் சக்திவேல்.

வியூ ஃபைண்டர் வழியே பார்த்த வெற்றி, படம்பிடிக்காமல் கேமராவை நகர்த்திவிட்டு,"அண்ணி...கோவிச்சுக்காம வேற பிளவுஸ் மாத்திட்டு வந்துடுங்க. ஆயிரம் வாட்ஸ் பல்ப்...பிளாஷ் லைட்...உங்க கூந்தல் அழகை அழகா படம்பிடிக்கலாந்தான்...ஆனா போட்டோவுல பார்க்கும்போது கொஞ்சம் நெளியுற மாதிரி இருக்கும்.இந்த விளக்கம் உங்களுக்கு போதும்னு நினைக்குறேன்.நாங்க கொஞ்ச நேரம் வெளியில இருக்கோம்...சந்தியாவோட பேச்சைக்கேட்காதீங்க...ஒரு மண்ணும் தெரியாத விவரம் பத்தாத பொண்ணு."என்று நண்பர்களுடன் வெளியேறினான்.

"கேமராமேன் பசங்க எப்படி சொல்றதுன்னு தவிச்சுருக்கானுங்க. வெற்றிக்கு கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல. எப்படி விஷயத்தை உடைச்சுட்டு போறான் பாரு..."என்று சந்தியா, கதவை சாத்தினாள்.

"அடப்போடி இவளே...இங்கிதம் பார்த்துகிட்டு இருந்தா விடிய விடிய அப்படியே சண்டை போட்டுகிட்டு நின்னுருக்கவேண்டியதுதான்.வெற்றி சொன்னதுதான் சரி. முன்பக்கம் புடவை இருக்குறதால ஒண்ணும் பிரச்சனை இல்லை.

வியர்வையில அப்படியே ஸ்ட்ராப் பளிச்சுன்னு தெரியுது பாரு.அதோட லைட் வெளிச்சமும் சேர்ந்தா அவ்வளவுதான். எதை எதை படம்பிடிக்கணும்னு நாகரிகம் தெரிஞ்ச பசங்கதான். அதான் நம்ம பிரின்ஸ்பால், எஸ்.பி அப்படின்னு எல்லார்கிட்டயும் நல்லபேர் எடுத்துடுறான்.
நான் கூட ஒரு சில கல்யாணவீடியோவை பார்த்துருக்கேன்.விவரம் புரியாத பசங்க அப்படியே ஷூட் பண்ணிருப்பாங்க. சில நொடிகள்தான்னாலும் சம்மந்தப்பட்டவங்க கொஞ்சம் சங்கடமா ஃபீல் பண்ற மாதிரி ஆயிடும்.

அதனால இந்த விஷயத்துல நான் வெற்றி பக்கம்."என்றாள் ஒரு தோழி.

இதற்குள் காயத்ரியும் உடை மாற்றியிருந்தாள்.
******
மறுநாள் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரைதான் முகூர்த்தம்.மண்டபம் மிகப்பெரியதாக இருந்ததால் முதலில் கூட்டம் அதிகமானதை கவனிக்கவில்லை.நேரம் ஆக ஆக சுந்தர்ராஜனுக்கு லேசான பதட்டம் தொற்றிக்கொண்டது.

'நானூறு பேருக்குமேல வரமாட்டாங்க...அப்படின்னு சம்மந்தி சொன்னாருன்னு நம்பி ஆயிரத்து நூறு பேருக்குதான் சமைக்க சொன்னேன்.இப்ப அவரோட சொந்தக்காரங்க எண்ணிக்கையே ஆயிரம்பேர் வந்துடுவாங்க போலிருக்கே...இந்த நிலவரத்தை பார்த்தா, பாதிபேர் நேரமாகுறதைப்பார்த்து சாப்பிடாமலேயே போயிடுவாங்க. அப்படியே எல்லாரும் சாப்பிடலாம்னு உட்கார்ந்தா உணவு பத்தாதே...'என்று குழம்பிய சுந்தர்ராஜனால் திருமண சடங்குகளில் மனம் ஒன்றி ஈடுபடமுடியவில்லை.
சமையலறையை கவனித்துக்கொண்டிருந்த வெற்றி எதற்கோ அரங்கத்துக்குள் வந்த நேரத்தில் தந்தையின் முகத்தைக் கவனித்துவிட்டான்.

வற்புறுத்தி கேட்டதும் தன் கவலையை வெற்றியின் காதோடு காதாக சொன்னார்.

"எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.எத்தனை பேர் வந்தா என்னப்பா...சாதாரணமா இவ்வளவு பேருக்கு நம்மால சாப்பாடு போட முடியுமா?...இந்த புண்ணியத்தை நமக்கு தர்ற இவங்களுக்கு நாம சந்தோஷத்தோட நல்லபடியா சாப்பாடு போட்டு அனுப்பணும்.எழுநூறுபேர்தானே அதிகமா வந்துருப்பாங்க...இதெல்லாம் ஒரு மேட்டரா..."என்று அவருக்கு தைரியம் சொன்ன வெற்றி, தன் நண்பர்களை அழைத்தான்.

"டேய்...இந்த விஷயத்துல எங்க சொந்தக்காரங்களை நம்ப முடியாது. நாற்காலியை விட்டு எழுந்திரிக்காம, நாங்க அவங்களை டைனிங் ஹாலுக்கு பஸ்சுல அழைச்சுட்டுப்போய் சாப்பிட வைக்கலைன்னு குத்தம் சொல்லிகிட்டு இருப்பாங்க.அதனால கல்யாணம் முடிஞ்சதும் யாரும் வெளியில போயிடக்கூடாது. அந்த மாதிரி கவனிக்கிறது உங்க பொறுப்பு. ஒரு பந்தியில நானூறு பேர் உட்காரலாம். அதிகபட்சம் ஆறு பந்திக்குதான் ஆள் இருக்கும்.

நான் கூடுதல் சாப்பாட்டுக்கு வேண்டிய வழியை செய்யுறேன்."என்று தலைமை சமையல்கலைஞரிடம் சென்றான் வெற்றி.

"அய்யா...ஆயிரத்து இருநூறு பேருக்கு என்ன சமையல் செய்யுறீங்கிளோ...அதே மாதிரி இன்னும் அறுநூறு பேருக்கும் சமையல் பண்ணிடணும். தேவையான பொருட்களை நாங்க வாங்கிட்டு வர்றோம். உங்களுக்கு பேசிய தொகையை இந்தகூடுதல் வேலைக்கு ஏற்ற மாதிரி நியாயமான அளவுல அதிகரித்து தர்றது என் பொறுப்பு."என்று தெளிவாகப்பேசினான். அவரும் முக மலர்ச்சியுடன் சம்மதித்தார்.

கூடுதல் சமையலுக்கு மூன்று மணி நேரம் அவகாசம் இருந்ததால் வெற்றியின் திட்டப்படி எந்த குளறுபடியும் இல்லாமல் அனைவருக்கும் உணவு உபசரிப்பு நல்லபடியாக நிறைவேறியது.

******

"வெட்டித்தனமா வில்லங்கம் செய்துகிட்டு இருந்தாலும் அவன் மட்டும் இல்லன்னா பாதிப்பேருக்கு சாப்பாடு இல்லாம அசிங்கப்பட வேண்டியதாயிருக்கும்."என்று ஒரு உறவினரிடம் சுந்தர்ராஜன் ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

அது ராமலிங்கத்தின் உறவினர் ஒருவரின் காதுகளில் விழுந்துவிட அவர் மிகச் சரியான முறையில் ஒரு வில்லங்கத்துக்கு நெருப்பு பற்றவைத்தார்.

"சம்மந்தி...இப்ப எவ்வளவு கூடுதலா செலவாயிருக்குன்னு சொல்லுங்க...நான் எப்படியாவது தந்துடுறேன்..."என்று வருத்தம் வார்த்தைகளில் வெளிப்பட்டுவிடாமல் அடக்கிக்கொண்டு பேசினார்.

பதிலுக்கு சுந்தர்ராஜனும் எதோ சொல்ல நினைத்தபோது வெற்றி இடையில் புகுந்தான்.
"ஆஹா...ரொம்ப குடும்பங்கள்ல இப்படிதான் தகராறு ஆரம்பமாகுதா...மாமா...இதுல உங்களை யார் தப்பு சொன்னா...திடீர்னு இவ்வளவு கூட்டம் வரும்னு யாருமே எதிர்பார்க்கலைதான். ஏன்னா...நாம எவ்வளவு பத்திரிகை கொடுத்தாலும் அவங்கள்ல எத்தனை பேர் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்துவான்னு யாராலயும் சொல்ல முடியாது.விசேஷம் நடத்துனா இதெல்லாம் சாதாரணம்.

சின்னப்பையன்...எனக்கு தெரியுது...மணிவிழா கொண்டாடுற வயசுல உங்களுக்கு புரியலையே...இவ்வளவு பேருக்கு சாப்பாடு போட்டு அண்ணனும் அண்ணியும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்காங்க...இது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுமா?இதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த கடவுளுக்கும் வந்திருந்தவங்களுக்கும் நன்றி சொல்றதை விட்டுட்டு புதுசா பூத்திருக்குற உறவை சிதைக்கிற முயற்சியில இறங்கிட்டீங்கிளே...அங்க பாருங்க...அண்ணன்-அண்ணி முகத்துல பசியோட வாட்டம் நல்லா தெரியுது.

பெரிய மனுஷன் நான் சொல்றேன்...பேசாம என் கூட வாங்க..."என்று வெளியில் கிளம்பினான்.

"நீ கோவிச்சுகிட்டு எங்கடா போற?"

"அதெல்லாம் யாருக்கு தெரியும்?...நமக்கு இங்க மண்டபத்துல சாப்பாடு இல்லை.வேற ஒரு இடத்துல ஏற்பாடு பண்ணியிருக்கேன்... எல்லாரும் பஸ்சுல ஏறுங்க..."என்று வெற்றி சொன்னதும் மற்றவர்கள் புதிராகப்பார்த்தார்கள்.

"என் பிரெண்ட்ஸ் அஞ்சு பேர், இங்கயே சாப்பிட்டாச்சு. அவனுங்க இப்ப எல்லாத்தையும் பார்த்துக்குவானுங்க.பயப்படாம வாங்க."என்று வெற்றி முதல் ஆளாக பேருந்தில் ஏறினான்.

அந்த பேருந்து பத்து நிமிட பயணத்தில் சென்று அடைந்த இடம், ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம்.

"இவங்களை பேசாம மண்டபத்துக்கு அழைச்சுட்டு வந்துருக்கலாமே..."என்று ஒரு உறவினர் தன் தத்துவ முத்துக்களை உதிர்த்தார்.

"பெரியப்பா...ஒரு வேளை சாப்பாட்டுக்காக இவங்களை அலைக்கழிக்கக்கூடாது.இப்பவே பதினஞ்சு நிமிஷம் லேட். இப்படி ஆகும்னு தெரியும். அதனாலதான் ஒரு மணி நேரம் முன்னால எல்லாடுக்கும் பழங்கள், பிஸ்கட் அப்படின்னு கொஞ்சமா கொடுக்க சொல்லிட்டேன்.

நம்மாளயே பசி பொறுக்க முடியலையே...குழந்தைங்களால மட்டும் முடியுமா?...அதோட கல்யாண சாப்பாட்டுல சேர்க்கப்படுற சில பொருட்கள் இந்தக் குழந்தைகளுக்கு எதாவது சங்கடங்கள் தரலாம். அதனால வழக்கமா அவங்களுக்கு தர்ற உணவோட, குறிப்பிட்ட சில வகைகளை மட்டும் குழந்தைகளுக்கு ஒத்துக்குற அளவுல செய்து அவங்களோட புது தம்பதி சாப்பிடணும்னு பிளான் பண்ணினேன். நல்லபடியா போய்கிட்டு இருக்கு."என்றான் வெற்றி.

அந்த குழந்தைகளுடன் மதிய விருந்து உண்டது அனைவருக்குமே நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

மீண்டும் மண்டபத்துக்கு வந்து அனைவரும் ரிலாக்சாக அமர்ந்தார்கள்.

"சின்ன மாப்ள...உங்களைப்பத்தி என்னவோன்னு நினைச்சேன். ஆனா அசத்திட்டீங்க போங்க..."என்று ராமலிங்கம் நெகிழ்ந்தார்.

"என்ன வேணும்னு கேளுடா..."என்று சுந்தர்ராஜன் சொன்னார்.

"கேட்பேன்...திட்டக்கூடாது..."என்று வெற்றி புதிர் போட்டான்.

"அவன் என்ன சொல்லப்போறான்...எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கப்பான்னு சொல்லுவான். என்ன, அதானே..."என்று அவன் தாத்தா சொன்னார்.

உடனே வெற்றி வெட்கப்படவில்லை.

"எப்படி தாத்தா இவ்வளவு சரியா என் மனசுல உள்ளதை சொன்னீங்க..."

"ஒழுங்கா படிப்பை முடி...அப்புறம் பார்க்கலாம்."

"ஏம்பா...ஒரே மாதிரியே சிந்திக்கிறீங்க...ஹவுஸ் வொய்ஃப் தான் இருக்கணுமா? ஏன், ஹவுஸ் ஹஸ்பெண்ட் இருக்ககூடாதா. நல்ல வேலைக்குப்போற பொண்ணா கல்யாணம் பண்ணிகிட்டா வீட்டுப்பணியில அவளுக்கு ஓய்வு கொடுத்த மாதிரி இருக்கப்போகுது..."என்று வெற்றி சொல்லவும் அங்கே கூடி நின்ற அனைவருமே சிரித்தார்கள்.

"நல்லா காமெடி பண்றடா..."என்று சுந்தர்ராஜனும் சிரித்தார்.

"சீரியசாதாம்பா...எப்படியும் நான் ஆங்கிலப்பேப்பர்களை எழுதி பாஸ் பண்ணி டிகிரி வாங்கப்போறது இல்லை. அதனாலதான் புத்திசாலித்தனமா இந்த முடிவு எடுத்தேன்."

"என்னது...இது புத்திசாலித்தனமா?...அப்புறம் காலத்துக்கும் அவ சொல்றதை கேட்டுகிட்டு இருக்க வேண்டியதுதான்."என்று முதன் முதலாக அன்புச்செல்வன் பேசினான்.

"அண்ணி... அண்ணன் உங்க பேச்சைக் கேட்க மாட்டாராமா...இதுக்குமேல உங்க சாமர்த்தியம்..."என்று வெற்றி சொன்னதும் காயத்ரியின் கன்னங்கள் மேலும் சிவந்தன.

"இப்ப பேசுனதெல்லாம் நல்லாத்தான் இருக்கு...நீயும் உன் ஃபிரெண்ட்சும் பிளக்ஸ் போர்டுல திருவாரூரில் திருவிழான்னு போட்டுருக்கீங்கிளே...அப்ப திருவாரூர் தேர் திருவிழாவுக்கு கூடுற கூட்டத்தை எல்லாம் என்னன்னு சொல்றது?"என்று காயத்ரியின் தோழி ஒருத்தி கேட்டாள்.
"நல்லா பாருங்க சார்...தலைக்கு நூறு ரூபா, ஒரு பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் அப்படின்னு செலவு பண்ணி பொதுக்கூட்டத்துக்கு கூட்டத்தைக் கூட்டிட்டு  திருவாரூர் மாநகரில் திருவிழா அப்படின்னு விளம்பரம் செய்யுவாங்க...அந்த கூட்டத்தோட ஒப்பிடும்போது நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வந்த கூட்டம் சொற்பம்தான்.

ஆனா இந்த கூட்டம் நாம பத்திரிகை வெச்சதை மதிச்சு வந்த கூட்டம். அதனால திருவாரூரில் திருவிழான்னு நாங்க பிளக்ஸ்ல போட்டது தப்பே இல்லை.இதை இவங்க கேட்கலை...சந்தியாதான் கேட்க சொல்லியிருப்பான்னு எனக்கு நல்லா தெரியும்...

இப்பவே இப்படின்னா...காலம் பூரா நான் எப்படி சமாளிக்கிறதுன்னு நீங்களே சொல்லுங்க..."என்று வெற்றி கூறியதின் அர்த்தம் பலருக்கும் உடனடியாக புரியவில்லை.

அவன் தாத்தாதான்,"அட...திருட்டு ராஸ்கல்...உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கா...இது முன்னாலேயே தெரிஞ்சிருந்தா ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து முடிச்சிருக்கலாமே..."என்றார்.

இதைக்கேட்ட சந்தியாவின் முகத்தில் திகைப்பு.

"தாத்தா...நீங்களா எதாவது சொல்லி தீர்மானம் பண்ணிடாதீங்க...அப்புறம் சந்தியா என்னை அடிச்சு தொவைச்சு காயப்போட்டுடுவா...முதல்ல எங்க படிப்பு முடியட்டும்...அப்புறம் சந்தியாவுக்கு ஒரு வேலை கிடைக்கட்டும். நான் அதுக்குள்ள அம்மாகிட்ட நல்லா சமையல் கத்துக்குறேன்...அப்புறம் சம்மதமான்னு சந்தியா சொல்லட்டும். அதுவரை  யாரும் இதைப்பத்தி பேசக்கூடாது...பேசக்கூடாது...பேசக்கூடாது..."என்றான்.

"அதை ஏண்டா மூணு தடவை சொல்ற..."என்று தாத்தா கேட்கவும்,"எல்லாம் ஒரு எஃபெக்டுக்காகதான்."என்று வெற்றி சொன்னான்.

"பய ஒரு தீர்மானத்தோடதான் இருக்கான் போலிருக்கே..."என்று சுந்தர்ராஜன் சொல்லவும், அங்கே மீண்டும் சிரிப்பொலி.

சுபம்.
******

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 4
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 5
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 6

******
பள்ளிப்பருவத்தில் இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் தன் வாழ்வைத் தொலைத்த எவ்வளவோ பெண்கள் உண்டு.
 ஆனால் ஒரு பெண் இதே போல் பள்ளியில் படிக்கும்போதே காதலில் விழுந்தாலும் அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? விகடனின் காதலர் தின சிறப்பிதழில் வெளிவந்த இந்த சிறு கட்டுரையை படிக்க இங்கே க்ளிக்கவும்.

கொஞ்சம் சமூக அக்கறை...இந்த இடத்தில் க்ளிக் செய்து பாருங்களேன்.

சனி, 13 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 6

"ஒரு பிரின்ஸ்பால் எதுக்கு மாணவனோட வீட்டுக்கு பழங்களோட வந்திருக்காருன்னு உங்களுக்கெல்லாம் வியப்பா இருக்கும். அதிகமா யோசிக்க வைக்காம நானே சொல்லிடுறேன். இது என் அண்ணன்.வன இலாகா அதிகாரியா இருக்கார்.
இவருக்கு 'ஓ நெகட்டிவ்' வகை ரத்தம். ரொம்ப பிரச்சனைக்குரியதும் அரிதானதும் கூட.இப்ப ஒரு அறுவை சிகிச்சைக்காக தேவைப்பட்டப்ப போதுமான அளவு ரத்தம் கிடைக்கலை. வெற்றியோட நண்பர் ஒருத்தர் கிட்ட இருந்து அவசரத்துக்கு கிடைச்ச ரத்தம்தான் இப்ப என் அண்ணன் உங்க முன்னால நிற்க காரணம். 


அதுதான் வெற்றியையும் ரத்தம் கொடுத்த அந்தப் பையனையும் பார்த்துட்டுப் போகலாம்னு கிளம்பி வந்துட்டோம்."என்று கல்லூரி முதல்வர் சொல்லி முடித்தபோதுதான் வெற்றி வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

"அடடே...வாங்க சார்...முதல்ல எல்லாரும் உட்காருங்க...எங்க அப்பா உட்கார சொல்லலையேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. என் அளவுக்கு விபரம் பத்தாது."என்று வெற்றி சொன்னதும்தான் சுந்தர்ராஜனுக்கு தன் தவறு புரிந்தது.

"சாரி சார்...இவன் பேசுறதைப் பத்தி உங்களுக்கும் தெரிஞ்சுருக்கும். எதையும் சீரியசா எடுத்துக்காதீங்க...முதல்ல உட்காருங்க..."என்று சுந்தர்ராஜன் வழிந்தார்.

"கல்லூரியில சேர்ந்த புதுசுல வெற்றி மேல நிறைய புகார் வரும்.ஆனா இவன் மேல எந்த தப்பும் இருக்காது. ஆனா தனக்கு மேல அதிகாரத்தோட இருக்குறவங்க செய்யுற தப்பை சுட்டிக்காண்பிக்கிறதே நம்ம நாட்டுல பெரிய குற்றமாச்சே.

ஜாலியான பையனா இருந்தாலும் இவனோட படிக்கிற மாணவர்கள் மட்டுமில்லாம வெளியில உள்ள பசங்க நிறைய பேரும் சேர்ந்து நிறைய பேருக்கு ரத்த தானம் செய்துகிட்டு இருந்துருக்காங்க. பல பெரிய ஆளுங்க தலைவர்களோட பிறந்த நாள் அன்னைக்கு ரத்த தான முகாம் நடத்துறதோட சரி. இன்னும் ரத்தம் தானம் கிடைக்காம பலர் பாதிக்கப்பட்டுகிட்டுதான் இருக்காங்க.

ஆனா வெற்றியும் அவன் நண்பர்களும் எந்த விளம்பரமும் இல்லாம இந்த உதவியை செய்துகிட்டு வர்றது நான் மட்டுமில்ல நீங்களும் பெருமைப்பட வேண்டிய விஷயம்."என்று பிரின்ஸ்பால் சொல்லவும் சுந்தர்ராஜனின் குடும்பத்தார் சந்தோஷத்தில் எதுவும் சொல்லத் தோன்றாமல் திகைத்தார்கள்.

"நல்லா சொல்லுங்க சார். அப்பவாச்சும் அப்பாவுக்கு நல்ல சிந்தனை வருதான்னு பார்ப்போம்.அண்ணே...உன்னை மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலை பார்க்குறவங்களால நாட்டுக்கும் வீட்டுக்கும் பொருளாதார நன்மை இருக்கு. ஒத்துக்குறோம்.இது மறைமுக பலன்தான். ஆனா என்ன மாதிரி ஆளுங்களாலதான் நேரடி நன்மை இந்த நாட்டுக்கு அதிகமா கிடைக்குதுன்னு புரிஞ்சுக்குங்க."என்று வெற்றி சற்று நேரம் சுயபுராணம் பாடினான்.

"அதெல்லாம் சரிதான் வெற்றி. ஆனா நீ அந்த நாலு பேப்பர் அரியர் வெச்சிருக்கியே...அதாம்பா...ஆங்கிலத்தாள்...அதையும் இப்ப எழுதப்போற கடைசி செமஸ்டர்லயாவது பாஸ் பண்ணிடேன்."என்று பிரின்ஸ்பால் சிரித்தார்.

"சார்...டவர் இல்லை...நீங்க பேசுறது சரியா கேட்கலை...அம்மா...நான் தான் டீ காபி குடிக்கிறது இல்லைன்னு முடிவெடுத்துருக்கேன்.என்னைப் பார்க்க வர்றவங்களும் அப்படியா இருப்பாங்க...

நான் இவங்களுக்கு தண்ணி கொண்டு வந்து தர்றேன். நீங்க காபி, ஹார்லிக்ஸ் எதாவது கொண்டு வந்து கொடுங்க..." என்று சமையலறைக்குள் நுழைந்தான் வெற்றி.

"உயிர்பிழைச்ச பல பேரோட வாழ்த்து வெற்றிக்கு இருக்கு சார். அவன் நல்லா வருவான்.கவலைப்படாதீங்க.நம்ம மாவட்ட எஸ்.பியும் இந்த காலேஜ் ஸ்டூடண்ட்தான்ன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். வர்ற குடியரசு தினத்தன்னைக்கு வெற்றியையும் அவன் நண்பர்களையும் கவுரவிக்கப்போறாங்க.இது மேலும் பல இளைஞர்களுக்கு ஊக்கம் தர்றதா அமையும்.

அடுத்து வெற்றியோட நண்பனையும் போய் பார்க்கணும்.நாங்க புறப்படுறோம் சார்..."என்று பிரின்ஸ்பால் சொல்லவும்,சுந்தர்ராஜன் "எங்க சார் கிளம்பிட்டீங்க...அப்புறம் என் பையன் சொன்னது மாதிரி எனக்கு விவரம் பத்தாதுன்னுங்குறது உண்மையாயிடும்."என்று சிரித்தார்.

உபசரிப்புக்குப் பின் அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள்.

"வெட்டி...ச்ச...வெற்றி...இப்ப உண்மையிலயே எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்குப்பா.நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.என்ன வேணுமோ கேளு..."என்று சுந்தர்ராஜன் உற்சாகமானார்.

"கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்தான் இப்ப சென்னைக்கு போறது இல்லையே...அதை வங்கி கொடுங்க...நான் தூசி தட்டி நம்ம வீட்டு கொல்லைப்பக்கம் நிறுத்திக்குறேன்."என்று வெற்றி வழக்கம்போல் கலாய்க்க, சுந்தர்ராஜன் முகத்தில் வழிசல்.

"சும்மா அரசியல்வாதி மாதிரி வாக்கு கொடுக்க வேண்டியது.நீங்க ஒரு பொருட்டாவே கவனிக்காம இருக்கீங்கிளே...நம்ம தாத்தாவுக்கு எண்பது வயசு பூர்த்தியாகப்போகுது. திருக்கடையூர்ல சதாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்வோம்.இதை நீங்க செய்யுறீங்கிளா...இல்ல... நான்..."என்று வெற்றி பாதியிலேயே நிறுத்தினான்.

"நான் நடத்தாட்டி நீ என்னடா செய்வ..."என்று சுந்தர்ராஜனும் சூடானார்.

"உங்க பணத்தை எடுத்து நானே நடத்துவேன்."என்று வெற்றி சொன்னதும் சுந்தர்ராஜனே சிரித்துவிட்டார்.
******
நெருங்கிய உறவினர்களையும் காயத்ரியின் குடும்பத்தையும்தான் திருக்கடையூருக்கு அழைத்திருந்தார்கள்.கோயிலில் சாஸ்திரிகள், உணவு உபசரிப்பு, தங்குமிடம், ஒளிப்படம், சலனப்படம் என்று எல்லா ஏற்பாட்டையும் வெற்றிதான் நண்பர்களின் உதவியோடு செய்திருந்தான்.

ஹோமம் முடிந்து புனித நீர் அபிஷேகத்தின் போது,வெற்றியின் தாத்தா - பாட்டி குளிரில் லேசாக நடுங்கியதை வெற்றி பார்த்தான்.

"டேய்...தாத்தாவுக்கு ரெண்டுபானை வென்னீர் பார்சல்..."என்று வெற்றி சவுண்ட் விடவும் தாத்தா உஷாரானார்.

"வெற்றி...அதெல்லாம் வேணாம்.நீ எதையாவது மனசுல வெச்சுகிட்டு உடம்பை கொதிக்க வெச்சுடுவ...எனக்கு குளிரவே இல்லை."என்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.

"தெய்வமே... என்னைய நம்புறவங்க யாருமே இல்லையா..."என்ற வெற்றி சுற்றிலும் பார்த்தான்.அனைவரும் தாத்தா பாட்டிக்கு அபிஷேகம் செய்வதில்தான் மும்முரமாக இருந்தார்களே தவிர, இவனை யாரும் கவனிக்கவில்லை.

"அது சரி...இதுவே சினிமாவா இருந்தா,'நான் இருக்கேன் அப்படின்னு ஹீரோயின் வந்துருக்கும்.'இங்க சந்தியா கொஞ்சம் கூட கவனிக்காம நிக்கிறா... எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்." என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான்.

"நாங்க என்ன புது ஜோடியா...ஏண்டா  தாலிகட்டுறதுல இருந்து மாலை மாத்துற வரை எல்லாத்தையும் படம் புடிக்கிறீங்க..."என்று தாத்தா அலுத்துக்கொண்டார்.

"தாத்தா...இவ்வளவு காலம் பாட்டியோட குடும்பம் நடத்தியிருக்க.இப்ப மூணாவது தடவை உனக்கு பாட்டியோடவே கல்யாணம்.இந்த கொடுமையை வீடியோ, போட்டோவுல நீ மறுபடி பார்க்க வேணாம்?"என்று வெற்றி சொல்லவும் சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள்.

"நாங்க பாட்டுக்கு சிவனேன்னுதானே கிடந்தோம்.இப்படி எங்களை கூட்டிட்டு வந்து காலை வாரிவிடுறியே?"என்று வெற்றியை தாத்தா பரிதாபமாக பார்த்தார்.

"தாத்தா...கல்யாணம் நடக்கும்போது இதெல்லாம் சகஜம்.இப்ப நாங்கதான் பெரியவங்க...அதனால நீங்க எதிர்த்துப்பேசக்கூடாது.ஓ.கே..."என்று வெற்றி சிரிக்காமல் சொன்னாலும் மற்றவர்களால் சும்மா இருக்கமுடியவில்லை.

இந்த குடும்பத்தின் குதூகலத்தைப் பார்த்த பிற குடும்பங்களும் தங்கள் வீட்டு மணிவிழா தம்பதியரை அதிகமாகவே சீண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

தினமும் குறைந்தது இருபதுக்கும் குறையாத சுபகாரியங்கள் நிகழும் இந்த தலத்தில் எப்போதும் குதூகலத்திற்குக் குறைவிருக்காது.

வீடியோ எடுக்கும் நண்பனுடன் உதவிக்கு வந்த வெற்றிக்கு இந்த சூழ்நிலை மிகவும் பிடித்துப்போனதும்தான் தாத்தா பாட்டிக்கு இந்த விசேஷத்தை நடத்திப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

******
வெற்றி தாத்தாவின் எண்பது வயது பூர்த்தி திருக்கடையூரில் கொண்டாடிய கையோடு அன்புச்செல்வன்-காயத்ரி திருமண ஏற்பாடுகள் தொடங்கின.
திருமணத்துக்கு முதல் நாள்.மாப்பிள்ளையை அழைக்க பெண்வீட்டார் வந்தார்கள்.அன்புச்செல்வனுக்கு தங்கை முறை வரும் சில பெண்கள் மாப்பிள்ளைக்கு கூல்டிரிங்கஸ் வாங்கிக்கொடுத்தால்தான் வருவார்." என்று சொன்னார்கள்.

அந்த பெண்களும் அதை அப்படியே வந்திருந்தவர்களிடம் சொல்ல, அவர்களில் ஒருவன் உள்ளே நுழைந்து,"அட வெண்ணை...உனக்கு அறிவிருக்கா..."என்று திட்டவும் அங்கிருந்த அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.

6 - தொடரும்.

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 4
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 5

******

சிம்பு - த்ரிஷாவின் பின்னணியில் இருப்பது அபிமுக்தீஸ்வரர் ஆலயம். இது திருவாரூர் நகரின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் கோயில்.ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்று புகழ் பெற்ற ஆழித்தேர் திருவிழா நடைபெறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கொடியேற்றத்தின் போது இந்த அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் மண் எடுத்து அதில் முளைப்பாலிகை வளர்ப்பார்கள் என்பது பலருக்கு புதிய தகவலாக இருக்கும்.
ஆலயத்தைப்பற்றி அறிய...
பஞ்சபாண்டவர் பூஜித்த தலம் என்ற பெருமையை உடைய இந்த ஆலயத்தில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு...

***************************************************

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

என்ன கொடுமை சார் இது.


"பிட்' அடித்து பிடிபட்ட மாணவன் தற்கொலை

தூத்துக்குடி :கோவில்பட்டி தனியார் பள்ளியில், தேர்வில் 'பிட்' அடித்தபோது பிடிபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன், பெற்றோருக்கு பயந்து ரயிலில்விழுந்து தற்கொலை செய்து கொண்டான்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி,ராஜிவ் நகர் ராமமூர்த்தி மகன் அருண்குமார்(13), அங்குள்ள தனியார்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தான். நேற்று பள்ளியில் அறிவியல் தேர்வுநடந்த போது, 'பிட்' அடித்தான். அப்போது, அருண்குமாரை பிடித்த ஆசிரியர்,தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தார்.அது தொடர்பாக அருண்குமாரை கண்டித்ததலைமையாசிரியர், பின் அறிவுரை கூறி அனுப்பினார். சம்பவம் குறித்துதெரிந்தால், பெற்றோர் திட்டுவரோ என பயந்த அருண்குமார், வீட்டிற்குப்போகாமல் பல இடங்களில் சுற்றினான். இரவில், தனியார் தியேட்டர் பின்புறமுள்ளதண்டவாளத்திற்கு சென்று, அவ்வழியாக வந்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான். தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
தினமலர் செய்தி.
உழைத்துப்பிழைக்க இந்த உலகத்துல ஓராயிரம் தொழில். ஆனால் இன்னும் தேர்வுல மார்க் எடுக்கலன்னா அவனுக்கு உலகமே இல்லன்னுன்குற மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கி வெச்சிருக்குறதுதானே  இது மாதிரியான தற்கொலைக்கு காரணம்?

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 5

"அட லூசு..."என்று சந்தியா பேச ஆரம்பித்ததும் "இவ என்ன அரசாங்க ரகசியத்தை எல்லாம் வெளியில சொல்லுறா?"என்ற சிந்தனை வெற்றியின் மனதில் ஓடியது.

"நான் உன்னைய 'அத்தான்' அப்படின்னு கூப்பிட்டு வழியணும்னு நீ ஆசைப்படுறது நல்லாவே தெரியுது.அந்த ஆசையை எல்லாம் ஓரங்கட்டிடு.நியாயமா பார்த்தா உன்னைய பொறுக்கி, அதிகப்பிரசங்கி அப்படின்னுதான் கூப்பிடணும்.மாமா, அத்தான் அதான் உன் அப்பா, அண்ணன் - இவங்களுக்காக உனக்கு கொஞ்சமா மரியாதை கொடுக்கலாம்னு நினைக்குறேன். நீயா அந்த மரியாதையைக் கெடுத்துக்காத.
அக்காவோட கல்யாணத்துக்கு வரப்போற என் பிரெண்ட்சையே எப்படி சமாளிக்கிறதுன்னு நானே குழம்பி இருக்கேன்.ச்சீ போ..."என்று சந்தியா  தன் தோழியின் வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்துவிட்டாள்.



'ச்சீ...போன்னு சொல்லிட்டுப்போறா...இப்படித்தானா அசிங்கப்படுறது...ம்...சரி...எங்க போயிடப்போறா...இப்படி கோபப்படுறவளை சுலபமா வழிக்கு கொண்டுவந்துடலாம்.அப்பாதான் கவுத்துவிடாம இருக்கணும்.

எங்க...நான் ஊதுற பலூனை எல்லாம் ஒரே அடியில உடைக்கிறதுதான் அவரு பிழைப்பா இருக்கு.நம்மளைப் பொறுத்த வரை வீட்டுக்குள்ளதான் வில்லன். எதுவா இருந்தாலும் சமாளிச்சுதானே ஆகணும்' என்று நினைத்துக்கொண்ட வெற்றி வீட்டுக்குச் சென்றான்.

இரண்டு மாதங்களுக்குள் திருமணத்தை முடித்துவிடுவது என்று சுந்தர்ராஜனும், ராமலிங்கமும் தீவிரமாக இயங்கினார்கள்.

ராமலிங்கத்தின் பொருளாதார நிலை சற்று சிரமநிலையில் இருந்ததால் சுந்தர்ராஜனே திருமண செலவுகளை ஏற்றுக்கொண்டு நடத்திக்கொள்வதாக சொல்லிவிட்டார்.

கல்லூரியில் ஆண்டு விழா நடத்துவதற்காக சிறப்புவிருந்தினர்கள் இரண்டு பேரை அழைத்திருந்தார்கள்.ஒருவர் தமிழ்த்திரைப்பட இயக்குனர், மற்றொருவர் மாவட்டக்காவல்துறைக்கண்காணிப்பாளர்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துறையாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அந்த இரண்டு பேரும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள் என்ற காரணம்தான் அவர்களை இந்தக் கல்லூரி விழாவின் மேடையில் ஏற்றியிருந்தது.

மாணவர் பேரவை தலைவரும், செயலாளரும் சிறப்புவிருந்தினர்களை அழைத்துவர சென்றபோது வெற்றியும் ஒரு காரை ஏற்பாடு செய்து ஐந்து மாணவர்களுடன் ஏறிக்கொண்டான்.

எஸ்.பியும் இயக்குனரும் காரில் வந்தபோது முன்னால் வந்த பைலட் கார் கண்ணாடியில் ஒட்டியிருந்த போஸ்டரைப்பார்த்து கல்லூரி முதல்வர்தான் முதலில் அதிர்ந்தார்.

விருந்தினர்கள் முன்னால் வெற்றியை என்ன சொல்வது என்ற தயக்கத்தில் அவர்களை முதல்வரும் பேராசிரியரும் வரவேற்றார்கள். அவர்கள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சிக்கு காரணமான போஸ்டரை முன்னாள் மாணவர்களும் பார்த்தார்கள்.

விழா நல்ல முறையில் நிறைவடையும் நேரம், எஸ்.பி, இயக்குனர் இருவரும் சேர்ந்து எழுந்து நின்றார்கள்.

இயக்குனர்,"எங்களுக்கு முன்னால வந்த கார்ல 'பேட் பாய்ஸ்'அப்படின்னு போஸ்டர் ஒட்டி இருந்ததே...அந்த ஐடியாவுக்கு சொந்தக்காரர் கொஞ்சம் மேடைக்கு வர்றீங்களா.?"என்றார்.

"ஏன் சார்...போலீஸ்கிட்ட புடிச்சுக்கொடுக்கப்போறீங்களா?இந்த வெற்றி அவ்வளவு சீக்கிரத்துல சிக்க மாட்டான். ரொம்ப கஷ்டப்படணும்."என்று முன் வரிசையில் நின்று குரல் கொடுத்தான்.

அருகில் நின்ற மாணவர்கள் எல்லாம் பெரியதாக 'ஓ' போடவும் கல்லூரி அரங்கமே அதிர்ந்தது.

"இதெல்லாம் என்ன பெரிய சத்தம்...நாங்க விட்ட சவுண்டுல பத்து சதவீதம் கூட இல்லை.நீங்க எல்லாம் வேஸ்டுப்பா..."என்று எஸ்.பி சொன்னதும் மாணவர், மாணவிகள் கூட்டத்தில் மீண்டும் உற்சாக கூச்சல்.

"மாணவர்கள்னா மனசாட்சியைத் தவிர எதுக்கும் அஞ்சக்கூடாது.வெற்றி உன்னைப் பத்தி உங்க ஹெச்.ஓ.டி கிட்ட கேட்டுட்டேன்.மேடையில ஏறு. உன்னை வெச்சு சில செய்திகளை மற்ற எல்லாருக்கும் சொல்லணும்."என்று இயக்குனர் சொன்னார்.

"அப்பாவுல இருந்து அதிகாரிங்க வரைக்கும் என்னைய காட்சிப்பொருளாக்குறதுலயே குறியா இருக்காங்களே.என்ன கொடுமைடா இது...சரி...எதிர்மறையாவது பப்ளிசிட்டி கிடைக்குதேன்னு பெருமைப்பட்டுக்க வேண்டியதுதான்."என்று வெற்றி மேடையேறினான்.

மாணவர்களின் உற்சாக கூச்சலைக்கேட்டதும் பெரிய தலைவராக தன்னைக்கற்பனை செய்துகொண்ட வெற்றி, கூட்டத்தைப் பார்த்து கையசைத்தான்.

எஸ்.பி."எங்களோட ஜூனியர் மாணவ சமுதாயத்துக்கு மறுபடியும் வணக்கம்.சேட்டை செய்தாதான் அது குழந்தை. இப்படி அட்டகாசம் பண்றியேன்னு குழந்தையை அம்மா அடிக்கிறது சகஜம்.ஆனா அதே குழந்தைக்கு உடம்பு சரியில்லாம படுத்துட்டா அதிகமா தவிச்சுப்போறது தாயாத்தான் இருக்கும்.

மாணவர்களும் ஆசிரியர்களும் கூட தாய் சேய் மாதிரிதான் இருக்கணும்னு நினைக்கிறோம்.மாணவர் பருவம் குறும்பு நிறைஞ்சதா இருக்குறது தப்பே இல்லை.ஆனா அதனால அடுத்தவங்களுக்கு துன்பம் வரக்கூடாது.யாரோட மனசும் புண்படக்கூடாது.முக்கியப்பாடங்களில் வெற்றிதான் தொடர்ந்து நல்ல மார்க் எடுத்துட்டு வர்றதா சொன்னாங்க.

கார்ல ஒட்டுன போஸ்டர்ல பேட் பாய்ஸ் அப்படின்னு போட்டதால யாருக்கும் நேரடியா கஷ்டம் இல்லை. ஆனா அது ஒரு படத்துல இருக்குற காட்சின்னுங்குறதால சினிமா உங்களுக்குள்ள ஏற்படுத்திருக்குற தாக்கம் புரியுது.இந்த மாதிரி யாருக்கும் உதவாத விஷயங்களை செய்து கெட்ட பேர் எடுக்குறதை விட, சொந்தமா யோசிச்சு ஒரு கோமாளித்தனமான போஸ்டர் ஒட்டிருந்தா கூட நகைச்சுவைன்னு நினைச்சு பாராட்டியிருப்பேன்.

கல்லூரி அனுபவம்னுங்குறது  உங்க ஒவ்வொருத்தருக்கும் கிடைச்ச அற்புதமான வாய்ப்பு.பல வருஷம் கடந்து போனாலும் இதைப் பத்தி நினைக்கும்போது உங்க முகத்துல லேசா ஒரு புன்னகையாவது வரும்.அது எந்த வயசா இருந்தாலும்.

இப்ப நான் வெற்றியை மேடையில ஏத்துனதுக்கு வேற ஒரு காரணமும் உண்டு.இவன் செய்யுற செயல்கள் பல ஆசிரியருக்கே பிடிக்கலைன்னு கேள்விப்பட்டேன்.இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னுதானே நினைக்குறீங்க...அவனும் அவனைச் சுத்தி இருக்குறவங்களும் பெருமைப்படுற ஒரு விஷயத்தை வெற்றி விளையாட்டாவே செய்துகிட்டு வர்றான்.ஆனா அது தந்துகிட்டு இருக்குற நல்ல பலன் ஏராளம்.

இது உங்களுக்கு ஊக்கம் கொடுக்குற வகையில இருக்கணும்னு வர்ற குடியரசுதினத்து அன்னைக்கு அந்த விஷயங்களை கொஞ்சம் பப்ளிசிட்டி பண்ணனும்னு முடிவுபண்ணியிருக்கோம்.
வெற்றி, இனி நீ இந்த மாதிரி குறும்புகளை இன்னும் ஆக்கப்பூர்வமா செய்.உன் கிட்ட நாங்க இன்னும் எதிர்பார்க்குறோம்."என்று பேசியதும் பேராசிரியர்களில் சிலரே அவர்கள் கைகள் வலிக்கும் அளவுக்கு கரகோஷம் எழுப்பினார்கள்.
******
அன்று இரவு ஏழு மணி இருக்கும்.வாசலில் வந்து நின்ற காரைப்பார்த்ததும் சுந்தர்ராஜனுக்கு எதுவும் புரியவில்லை.சற்று வயதான இரண்டு தம்பதியர் காரிலிருந்து இறங்கினார்கள்.

அவர்கள் கைகளில் பழங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் அடங்கிய பைகள் இருந்தன.

அவர்களில் ஒருவர்,"சார்...நான் ....................காலேஜ் பிரின்சிபால்.வெற்றியைத் தேடிதான் வந்திருக்கோம்.உள்ள வரலாமா?"என்று கேட்டார்.

பத்திரிகை எழுதுவது தொடர்பாக ராமலிங்கமும் அவர் மனைவியும் வந்திருந்தார்கள். சுந்தர்ராஜனின் குடும்பம் மட்டுமின்றி இவர்களுக்கும் திகைப்பு. ஆனால் எதுவும் கெட்ட விஷயம் இல்லை என்பதே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

5 - தொடரும்.
******
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 4
******
ஐந்தாவது அத்தியாயத்தின் விளம்பரத்தில் அஜீத்குமார், த்ரிஷா ஆகியோருக்கு பின்னணியில் இருப்பது திருவாரூர் நகரில் நாகை புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம்.
இது கட்டப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.முன்பு எல்லாம் கனரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் குறைவாகத்தான் இந்தப் பாதையில் செல்லும். ஆனால் கடந்த பத்து ஆண்டு காலத்தில் திருவாரூர் நகரம் சதை போட்டுக்கொண்டே போவதால் சைக்கிள் முதல் இருசக்கர வாகனப்போக்குவரத்தும் மிக அதிகமாகி விட்டது.மாவட்ட மைய நூலகம் செல்லவேண்டியதும் இந்த வழியாகத்தான்.

ஆனால் பாலமும் இந்தப் பாதையும் பெரியவர்களையே அச்சுறுத்துகிறது. இந்த அழகில் நூலகத்தில் குழந்தைகள் பிரிவுக்கு கூட்டம் வருவதே இல்லை என்று கவலைப்படுகிறார்கள்.

பாலத்தில் சரியாக இரண்டு கனரக வாகனங்கள்தான் செல்ல முடியும். ஆனால் அதன் இணைப்பில் ஆள் விழுகும் பள்ளம், இரண்டு பக்கமும் மணல் குவிப்பு என்று இருப்பதால் இருசக்கர வாகனங்கள் சறுக்கியோ, பள்ளத்தில் சிக்கியோ விழவேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு முறை உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

மேம்பாலத்தில் ஏறும் பாதை கூட இருவழிப்பாதைதான் என்பதால் கனரக வாகனங்கள் முந்திச் செல்லக்கூடாது என்பது அடிப்படை விதி.ஆனா எல்லா தனியார் பேருந்து ஓட்டுனர்களும் சில அரசுப்பேருந்து ஓட்டுனர்களும் இதை மதிப்பதே இல்லை.

சக்திவிலாஸ் என்ற ஒரு தனியார் பேருந்து அரசுப்பேருந்தை இந்த இடத்தில் முந்திச்சென்றதால் எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தன் மனைவியுடன் இருபதடி பள்ளத்தில் விழ வேண்டிய அபாயத்தில் இருந்து மயிரிழையில் தப்பினார்.

இப்படி மனித உயிரை மதிக்காத ஓட்டுனர்களுக்குதான் மிகக்கடுமையான (கொடூரமான) தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
குறைந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனையும் அங்கே வேலை செய்து பெறும் ஊதியத்தில் தவறு செய்த ஓட்டுனரின் செலவு போக மீதி தொகை எல்லாவற்றையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கே கொடுக்கவேண்டும் என்ற வகையில் தண்டனை இருந்தால் மட்டுமே பொறுக்கி ஓட்டுனர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள்.
நான் சொல்வது விதிகளை மதிக்காத ஓட்டுனர்களுக்கு மட்டுமே.

நான் ஆரம்பித்த விஷயத்தை விட்டு எங்கேயோ சென்று விட்டேன்.

இந்த பாதையில் சாலை ஓரமாக சைக்கிள்களும் இரு சக்கர வாகனங்களும் பாதுகாப்பாக செல்ல வழி ஏற்படுத்திக்கொடுப்பார்களா என்ற ஏக்கம்தான் எங்களுக்கு.வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

மிக மிக மிக குறுகிய காலத்தில் பிரமாண்டமான சட்டசபை வளாகத்தையே கட்டுபவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன?

******