Search This Blog

ஆசிரியர் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 மார்ச், 2014

சாரி ஃபார் த டிஸ்டபன்ஸ்...ஒரு குரூப்பாத்தான் அலையுறாய்ங்க?

தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சொந்த தொழிலில் செக்கு மாடு சுற்றி வருவதைப் போன்று சில வேலைகளையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பதால் எழுத அமர்ந்தால் மைண்ட் முழுவதும் ஏதோ ப்ளாங்க் ஆக இருப்பதாக ஒரு ஃபீலிங். (ஏற்கனவே மைண்ட் காலியாத்தானே இருக்குதுன்னு ஒரு சந்தேகம் எழலாம்.) பதிவுகளே இல்லாமல் காணாமல் போகாமல் இருக்க உள்ளேன் ஐயா என்று சொல்ல நினைக்கும் விதமாகத்தான் இந்த பழைய பதிவை தூசி தட்டியிருக்கிறேன்.

**********************************************
முறைப்படி சம்பளப்பட்டியல் மூலம் மட்டும் ஊதியம் வாங்குபவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்றாலே மார்ச்சுவரிக்கு அனுப்பும் அளவுக்கு வரிப்பிடித்தம் இருக்கும் என்ற அளவுக்கு பேதியைக் கொடுக்கும் விஷயம் என்றுதான் சொல்கிறார்கள். 4ஆண்டுகளுக்கு எழுதிய பதிவை இப்போது படித்துப்பார்த்தாலும் அதில் இடம்பெற்றிருந்த என்னுடைய சொந்த புராணம் சில வரிகளை தவிர வேறு எதையும் மாற்றும் அவசியம் இருக்கவில்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது பல விஷயங்களில் இருந்தாலும் பெரும்பகுதி மக்களின் அவல நிலை என்பது மாறாததாகவே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அதனால் பழைய பதிவு இப்போது மீள்பதிவாக உங்கள் பார்வைக்கு..


.
***********************************************
கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கும் அப்பாவி நடுத்தர வர்க்கத்தின் ஜனவரி, பிப்ரவரி சம்பளங்கள் வருமான வரிக்காகவே பெரும்பாலும் பிடிக்கப்பட்டு விடுவதால் மார்ச்சுவரிக்கே செல்லும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று சொல்வார்கள்.

இது பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.இப்போது என் கவனத்துக்கு வந்த விஷயமே வேறு.சில தினங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் வந்து என்னுடைய புதிய செல்போன் நம்பர் அவனிடம் இல்லாததால் அம்மாவிடம் பேசியிருக்கிறான்."எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்-ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.

எங்க அம்மாவுக்கா, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட சொன்னாங்க. எனக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.

போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நான் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை ஏய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம தண்ணியடிக்க மாட்டாங்கன்னு எனக்கு தெளிவா புரிஞ்சது.

அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி என் அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் அந்த நண்பனை பார்க்கப்போனேன். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் எனக்கு கிடையாதே.

அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.

"ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொன்னார்.

அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. என்னுடைய திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்தேன்.ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தா  முப்பது வேலை நாள் தேவைப்படும்.

"எவ்வளவு சார் தருவீங்க.வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேட்டேன்.

"இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசினார் அந்த ஆபிசர்.

எனக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.

நான் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டேன். ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நானும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. எனக்கு தமிழ்-ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.

எனக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சுகிட்டேன். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் பார்த்திருக்கேன்.

சில பழமைவாதிங்க  புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில மொள்ளமாறித்தனமெல்லாம் செய்துகிட்டு இருப்பாங்க.

இப்ப இரண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு இடத்துல பகுதிநேரப்பணிக்கு சேர்ந்துருக்கேன். அந்த நிறுவனத்துல பத்து வருஷமா பொழுதை ஓட்டிகிட்டு இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், அடிமட்ட வேலையா நினைக்குற போஸ்டிங்குக்கு வர்ற ஆளுங்களை எதுவும் சொல்றது இல்லை. கொஞ்சம் படிச்சுட்டு கம்ப்யூட்டர் அறிவோட வர்ற ஆளுங்களை சம்பளம் எதுவும் ஒழுங்கா கிடைக்காதுன்னு சொல்லி பயமுறுத்தி நாலே நாள்ல விரட்டிகிட்டே இருந்தாங்க.

அலுவலகத்தை எப்படியோ டெவலப் செய்திருக்கலாம். நானும் வளரணும், நிறுவனமும் வளரணும்னுங்குற கொள்கை என்னுடையது. ஆனா பலருக்கு அந்த எண்ணம் இல்லை. முதலாளி அல்லது மேலதிகாரியோட நான் நெருங்கிடுவேனோனுன்னு பயத்துல என்னைப் பத்தி நிறையவே வத்தி வெச்சுடலாம்னு முயற்சி நடந்துருக்கு. ஆனா நான் வேலைக்கு சேர்ந்த ரெண்டே நாள்ல வேட்டு வெக்கிற ஆளுங்களை கவனிச்சதுல அவங்க எந்த எந்த விஷயத்துல பிரச்சனை பண்ணுவாங்கன்னு புரிஞ்சுகிட்டு என்னோட நடவடிக்கைகளை அமைச்சுகிட்டதால  ஒண்ணும் பண்ண முடியாம தவிக்கிறாங்க.

ஆனா ஒரு விஷயம். இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யுற இடத்தையும் உருப்புட விட மாட்டாங்க. கூட வேலை செய்யுறவனையும் காலி பண்றதுலயே கவனமா இருப்பாங்க.

வேலை பார்த்து செட்டிலாகணும்னு நான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்குறது சென்னை அல்லது கோவைதான்.பார்ப்போம். எந்த ஊர் கொடுத்துவெச்சிருக்குன்னு.

எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.

பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நான் எஸ்கேப். மறு வருஷம் என்ன செய்வாங்க.

"சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.

எழுதப்பட்ட தேதி - 25-மார்ச்-2010

வியாழன், 17 நவம்பர், 2011

பஸ் கட்டணம், பால் கட்டணம் உயர்வு - ஆப்பு ஆரம்பம்.

 எந்த ஒரு விலை உயர்வு அறிவித்தாலும் ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டம், பேரணி அப்படின்னு அமர்க்களப்படுத்தும். உண்மையில் இந்த விலை வாசி உயர்வை சுமக்கப்போறவன் கத்த கூட தெம்பில்லாம நசுங்கிப்போய் கிடப்பான்.

அரசாங்க பதிவேடுகளை பேப்பர்ல மட்டுமே பராமரிச்சுகிட்டு இருந்த காலத்துல தொட்டதுக்கும் சென்னைக்கே மொத்த தமிழகமும் ஓடி வரவேண்டி இருந்துச்சு. இப்போ ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்படி இப்படின்னு ஓரளவு நிலைமை பரவாயில்லை.

ஒரு மாணவன் அதிகபட்சம் 5 முதல் 15 நிமிஷத்துக்குள்ள நடந்தே அவனோட பள்ளிக்கூடத்துக்கு போற மாதிரி அருகாமையில இருக்குற பள்ளிகளோட தரத்தை உயர்த்தி ஆசிரியர்களை போதுமான எண்ணிக்கையில நியமிக்கிற வேலையை எந்த அரசு வந்தாலும் செய்யப்போறதே இல்லைன்னுதான் தோணுது.

இப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் பார்த்து பார்த்து எரிபொருள் சேமிப்புக்கான நீண்ட கால திட்டத்தை அமல்படுத்துறதை விட்டுட்டு நடுத்தர மக்களை சுரண்டக்கூடிய நடவடிக்கைகளை மட்டும் அயல் நாடுகள் கிட்ட இருந்து நம்ம அரசுகள் எப்படித்தான் கத்துக்குதோ தெரியலை.

ஐநூறு ரூபாய்க்கு கூட வேலை பார்க்காம அம்பதாயிரம் சம்பாதிக்கிற அல்லது சம்பளம் வாங்குறவங்களைப் பத்தி கவலை இல்லை. கட்டிடத் தொழிலாளி மாதிரி சில வகை தொழில் செய்யுற லேபர்களும் விலைவாசி உயர்வைக்காரணம் காட்டி கூலியை உயர்த்திடுவாங்க.

இதுல வீணாப்போய் நசுங்குறது வறட்டு கவுரவம் பார்த்து வாழ வேண்டியிருக்குற நடுத்தர வர்க்க அப்பாவிகள்தான். அவங்க ஏன் கவுரவம் பார்க்கணும்னு சிலர் கேட்கக்கூடும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படிச்சதா ஒரு சர்டிபிகேட்டோட இருக்குறவங்கதான் வெடிச்சுகிட்டு வர்ற விலைவாசியோட வேகத்துக்கு சம்பளம் அதிகரிக்காத இடத்துல மாட்டிகிட்டு அவதிப்படுறாங்க.

இதையெல்லாம் பார்த்தா முடியுமா?...விலைவாசி உயர்வுக்கு தகுந்த மாதிரி சம்பாதிக்க கத்துக்கணும்னு அறிவுரைக்கெல்லாம் பஞ்சமே இருக்காது.

இப்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை வறுமையான சூழ்நிலையிலேயே வெச்சிருக்குறதன் வெளிப்பாடுதான் அரசுப்பள்ளிகள் நிறைய தடுமாறுவதும், கல்வித்தந்தைகள் நிறைய உருவாவதும்.

அரசு ஊழியர்களில் சில பணியிடங்களுக்கு ஆட்சியாளர்கள் மிக அதிக அளவு சம்பளத்தை ஏற்றி விட்டதே அந்த பணி நியமனத்திற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதற்காகத்தான் என்று ஒருவர் சொன்னார். இது உண்மையாங்க?

வெள்ளி, 5 நவம்பர், 2010

இந்த ஆண்டு தீபாவளி எப்படி?

நேயர்களே... இது ராசிபலன் அல்ல.

ஒரு காலத்துல சின்ன ஊரா இருந்தாலும் அஞ்சு தியேட்டர் இருக்கும். அதுல ரெண்டு அல்லது மூணுலதான் கொஞ்சம் பெரிய பேனர் படங்களா வெளியிடுவாங்க. மற்ற தியேட்டர்கள்ல சாதாரண நாட்கள்ல அஞ்சரைக்குள்ள வண்டி மாதிரியான படங்களைத் திரையிட்டு சமாளிச்சாலும் தீபாவளின்னு வந்துட்டா தியேட்டர் கிடைக்காம முடங்கிக்கிடந்த எதோ ஒரு தமிழ் படத்தை திரையிட்டுடுவாங்க.

ரஜினி,கமல் மாதிரி பெரிய ஆளுங்க படத்துக்கு டிக்கட் கிடைக்காது. சரி அப்படியே வீட்டுக்கு திரும்பி போனா அக்கம்பக்கத்துல இருக்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு இவங்களா கவலைப்படுவாங்க.(நகரத்துல பெரும்பாலான மக்கள் அடுத்த வீட்டுக்காரனுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நமக்கு என்னன்னுதான் போவாங்க. ஆனா ஒருத்தர் புதுசா வாங்கின பொருள், உடைகள் இது மாதிரியான விஷயங்களை மட்டும் பொறாமையுடன் புறம் பேசுறதை ரொம்ப தெளிவா செய்வாங்க.) இந்த மாதிரி ஆளுங்களுக்களை நினைச்சு ரஜினி படத்துக்குதான் டிக்கட் கிடைக்கலை. எதோ ஒரு படத்தைப் பார்த்துட்டு போவோம்னு எஞ்சியிருக்குற துக்கடா தியேட்டர்ல ஒரு படத்தை பார்த்துட்டு வந்துடுவாங்க. ஆக மொத்தம், சுமாரான தியேட்டர்ல 'பிளாப்' ஆன படத்துக்கும் ஒரு வாரம் நல்ல வசூல் கிடைக்கும்.
 அதெல்லாம் அந்த காலம். இப்போ டிக்கட் கிடைக்கலைன்னா டிவிடியை வாங்கிட்டு வந்துடுறாங்க. இதை நல்லா புரிஞ்சுகிட்ட சன் பிக்சர்ஸ் எந்திரன் படத்தை திரும்பின பக்கமெல்லாம் திரையிட்டு ஒரே வாரத்துல வசூலை மூட்டை கட்டுற மார்க்கெட்டிங் உத்தியை பயன்படுத்திடுச்சு.

நானும் இப்படி தீபாவளி அன்னைக்கே படம் பார்க்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். அது அவ்வளவு சீக்கிரம் நிறைவேறலை.

1996-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி, 1997-தி லாஸ்ட் வேர்ல்டு, 1998-டைட்டானிக், 1999-முதல்வன், 2000-தெனாலி,2001- , 2002-ரமணா, 2003-பிதாமகன். அதோட நான் தீபாவளி அன்னைக்கு படம் பார்க்குறத விட்டுட்டேன். அதுக்கப்புறம் வேலையில பிசியாயிட்டோம்ல. இப்படியெல்லாம் பொய் பேசாத அப்படின்னு சொல்லாதீங்க.

எனக்கு சினிமா மேல இருந்த ஆர்வம் போனதுக்கு முக்கிய காரணம் ஒண்ணே ஒண்ணுதான். தியேட்டர்ல ஆப்ரேட்டருக்கு உதவியாளரா இருந்த கொஞ்ச நாட்கள்லேயே சினிமா மேல இருந்த பிரமிப்பு போயிடுச்சு. ஒருநாள் ஆப்ரேட்டர் திடீர்னு வேலைக்கு வர முடியாத சூழ்நிலையில என்னையே படத்தை திரையிட சொல்லிட்டாங்க. அப்போ எனக்கு பதினஞ்சு வயசு. (தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேல வெற்றி நடை போட்ட அந்த மெஷின் இயக்கம் வழக்கொழிந்து வர்றதால அது பற்றி எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை ஆவணப்படுத்துற விதமா அப்பப்ப பதிவு எழுதுறதா சொல்லி இருந்தேன். நேரமின்மையால சில வாரங்களா சரியா பதிவு எழுத முடியலை. அந்த விஷயங்களை ஒரே பதிவா சீக்கிரம் வெளியிட முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்.)

இப்ப ஒரு நாளிதழ்ல லேஅவுட் டிசைனர் வேலைக்காக புதுசா சேர்ந்துருக்கேன். நான் தனியா பக்கம் வடிவமைக்க எவ்வளவு நாள் ஆகும்னு புரியாம தட்டுத்தடுமாறி பயிற்சி எடுத்துகிட்டு இருந்தேன். திடீர்னு போன வாரம் வழக்கமான கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வாரலீவு போட்டுட்டார். அவருக்கு மாற்று ஆளும் கடைசி நேரத்துல வரலை. உடனே என்னையே 3 பக்கங்கள் வடிவமைக்க சொல்லிட்டாங்க. நெருக்கடியான நேரத்துலதான் நம்மளால என்ன செய்யமுடியும்னு தெரியுது. சந்திரமுகி படத்துல ஒரு பாட்டுல வர்ற வரி...நீருக்குள் அமிழ்த்தப்பட்ட பந்து மேலெழும்பி வந்தே தீரும்.

எல்லா விஷயத்துக்கும் இது பொருந்தும்.

இளைய பாரதத்துக்கு வருகை தர்ற எல்லாருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

சனி, 11 செப்டம்பர், 2010

செப்டம்பர் 11 - ஒரே நாள் - எவ்வளவு சம்பவங்கள்?

இந்த நாள் வந்தாலே இளைய தலைமுறைக்கு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட அந்த பயங்கரம்தான் நினைவுக்கு வரும்.ஒட்டுமொத்தமாக பல ஆயிரம் மனிதர்களைக் காவு வாங்கிய நாள் மட்டுமல்ல இது.
ஒவ்வொரு இந்தியனையும் மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் நசுக்கிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சுதந்திரப்போராட்டம் தொடர்பான சில சம்பவங்களையும் இந்த நாள் உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது.
செப்டம்பர் 11 பயங்கரவாதத்தின் நாள் மட்டுமல்ல. அது வன்முறைக்கு சற்றும் இடமளிக்காத அறப்போரின் நாளும் கூட. 1906ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரும் அரசிடம் தங்களைப் பதிவு செய்துகொண்டு சான்றிதழ் பெற வேண்டும். அப்படிப் பெறாதவர்கள் குடியுரிமையை இழந்து விடுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் சத்தியாகிரகம்.அந்தப் போராட்டத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று கேட்டு காந்தி தன் 'ஒபீனியன்' பத்திரிகையில் ஒரு போட்டி நடத்தினார்.அந்தப் போட்டியில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல், 'சதாகிரக' என்பது. ஒரு நல்ல விஷயத்தில் உறுதி என்று அந்தச் சொல்லுக்குப் பொருள்.அதை சத்தியாகிரக என்று காந்தி மாற்றினார். சத்தியத்தின் சக்தி என்று பொருள்.அந்த நாள் செப்டம்பர் 11.

விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினமும் செப்டம்பர் 11தான்.
தமிழ் நாட்டில் செப்டம்பர் 11ஆம் தேதி பாரதியார்தினமாக கொண்டாடப்படுகிறது. அது அவரது பிறந்த தினமல்ல. இது பாரதி மறைந்த தினம்.

(நன்றி: புதியதலைமுறை - 16.09.2010  இதழ்)
 சென்னை - திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்துக்கு நான் ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன்.பா.ஜ பிரபலம் இல.கணேசன் நடத்திவரும் பொற்றாமரை இலக்கிய இதழின் முதலாம் ஆண்டு விழாவில் (2006 ஜூலை மூன்றாவது வாரம்) நானும் கலந்து கொண்டேன். சரித்திர நாவலாசிரியர் கவுதமநீலாம்பரன், கவிஞர் வாலி உட்பட இன்னும் சில பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
அந்த விழாவில் கவிஞர் வாலி, தான் பாரதியின் இந்த நினைவு இல்லத்திற்குள் நான் இப்போதுதான் வருகிறேன் என்று சொன்னார். இவ்வளவு பெரிய மனுஷர் சென்னையிலேயே பல ஆண்டுகாலம் இருந்தும் எழுபத்தைந்து வயதில்தான் இந்த நினைவு இல்லத்திற்குள் வந்திருக்கிறார்.

 நான் திருவாரூரில் இருந்தாலும் என்னுடைய இருபத்தைந்தாவது வயதிலேயே வந்துவிட்டேனே என்று சின்னபுள்ளைத்தனமா நினைத்ததுண்டு.

பாரதி திரைப்படம் வெளிவந்தபோது தொலைக்காட்சி டிரெய்லர்களில் படக்காட்சிகளின் பிண்ணனியில் "பாரதி.....ஒரு கவிஞனின் கதை..."என்ற குரல் மிகவும் வசீகரமாகவும் ஒரு கம்பீரத்துடனும் ஒலிக்கும். இந்தக் குரலுக்காகவே அந்த டிரெய்லரை நான் அடிக்கடி பார்த்ததுண்டு. அந்தக் குரல், எழுத்தில் நான் படித்த பாரதியின் கம்பீரமான குரலாகவே கற்பனை செய்ய வைத்தது.
******
இன்று விநாயகர் சதுர்த்தி. எனக்கு இறை நம்பிக்கை உண்டு. எங்கள் பகுதியில் இருந்த ஆலயத்தை புதுப்பித்துக் கட்டி வருகிறோம். இந்த ஆலய உருவாக்கத்தில் என்னுடைய பொருள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆனால் உடலுழைப்பு நிறையவே உண்டு.

சுமார் ஏழு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய திருப்பணி வேலைகள் எண்பது சதவீத அளவில் நிறைவடைந்து விட்டன. தரை,இரும்புக்கதவு மற்றும் கிரில்கள்,பெயிண்டிங் வேலைகள் மட்டுமே பாக்கி. சிற்ப வேலைகள் அதிவிரைவில் நிறைவடைந்தது எங்களுக்கு மட்டுமல்ல, அந்த வேலைகளை செய்த சிற்பக்கலைஞர்களுக்குமே வியப்புதான்.

பொதுவாகவே எல்லா ஆலயங்களிலும் இம்மாதிரியான திருப்பணி வேலைகள் நடைபெறும்போது சிற்பவேலைகள்தான் நிறைவடையாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டே செல்லுமாம். ஆனால் பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் விமானத்தில் மூன்று நிலைகளில் இருபத்தியிரண்டு சிற்பங்கள் வேலைகள் பூர்த்தியாகி விட்டன. ஆனால் சிற்பக்கலைஞர்கள் இல்லாமல் கட்டிடக் கலைஞர்களை மட்டும் வைத்து செய்துவிடக்கூடிய சில வேலைகளால் திருப்பணி தாமதமாகிக்கொண்டிருக்கிறது. (பொருளாதாரமும் ஒரு காரணம்.)

தற்காலிகமாக பிள்ளையாரை வில்வ மரத்தடியில் கொண்டு சென்று வைத்துவிட்டோம். அந்த இயற்கையான குளிர்ச்சி அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது என்று நினைக்கிறோம்.

******
விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான்.
கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர்.

அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, "பிள்ளையார்' என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். "என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?' எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார்.

அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.

விநாயகருக்கு, "சுமுகர்' என்ற பெயருண்டு. "சு' என்றால் மேலான அல்லது "ஆனந்தமான' என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.

(நன்றி:தினமலர்-வாரமலர் 5.09.2010)



புதன், 8 செப்டம்பர், 2010

நடிகர் முரளி - திடீர் மரணம் - என் நினைவிற்கு வந்தவை...

எனக்கு சினிமா மீதும் நடிகர்களின் நடவடிக்கை குறித்தும் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் உண்டு.ஆனால் இந்த பதிவில் அவற்றைப் பற்றி எழுதவில்லை.
ஒரு திரைப்பட விழாவில்,நடிகர் சத்யராஜ் "ரொம்ப வருஷமா முரளி காலேஜ் போய்கிட்டே இருக்கார். தமிழக முதல்வரிடம் சொல்லி பாஸ் போட சொல்லணும்ப்பா."என்று கிண்டலாக சொன்னார். இந்த செய்தியைக் கேட்டதும் அனைவருக்கும் சிரிப்புதான் வரும்.

இவர் பெரும்பாலான படங்களில் காதல் ஹீரோவாகவே அறியப்பட்டார்.அதிரடி சண்டைக்காட்சி உள்ள படங்களில் அதிகமாக நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

அதர்மம்

அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று அதர்மம்.நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது (1994 என்று நினைக்கிறேன்.) வந்த படம். வீரப்பன் கதை, படத்தின் பின் பகுதியில் அடர்ந்த காடுகள்தான் கதைக்களம் என்று இருந்ததால் என்னை அந்த வயதில் அதிகமாகவே கவர்ந்த படம்.
சின்ன பசங்க நாங்க

இந்தப் படமும் என்னுடைய மிகச் சிறிய வயதில் பார்த்ததுதான்.ரேவதி வாயசைக்கும் "என்ன மானமுள்ள பொண்ணு என்னு மதுரையில கேட்டாக..."பாடலும் வலிப்பு நோய் வந்த சார்லியின் கையில் கத்தியைக் கொடுத்து அவர் கையாலேயே அவரை வில்லன்கள் சாக வைப்பதும் அந்தப் படத்தைப் பொறுத்த வரை என் நினைவுக்கு வரும் விஷயங்கள்.
அவர் நடித்த பல திரைப்படங்களை சேட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பார்த்ததுதான். சமுத்திரம்,ஆனந்தம் ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் உறுத்தாத நடிப்பு என்று சொல்லலாம்.

பொற்காலம்-1997

இந்தப் படம் எங்கள் ஊர் திரையரங்கம் ஒன்றில் தீபாவளிக்கு ரிலீசாகி, பொங்கல் வரை சுமார் எழுபத்தெட்டு நாட்கள் திரையிடப்பட்டது. அப்போது நான் அந்த திரையரங்கில் ஆப்ரேட்டர் அசிஸ்டெண்ட்டாக இருந்தேன்.
படத்திற்கு இசை தேவா.

சேலையின் பெருமை சொல்லும் சிகப்புக் கலரு பாடல்,

சிற்பமாகும் மண்ணின் வளத்தைக் கூறும் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்,
பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் வயல்வெளிகளில் பாடல்கள் படமாக்கப்பட்ட காலகட்டத்தில், வறட்சியின் குறியீடான கருவேலங்காட்டை களமாக்கி கதாப்பாத்திரங்களின் சூழ்நிலையை உணர்த்தும் பாடல், உடல் ஊனம் ஒரு குறையே இல்லை என்று நெத்தியடியாய் சொன்ன பாடல் என்று படத்தில் இருந்த நாலு பாடல்களும் (கேசட்டில் ஐந்து) ஆழமான கருத்துள்ளவை.

பொறுப்பில்லாத தந்தையாக மணிவண்ணன். இப்படி ஒரு அண்ணன் நமக்கு கிடைக்கமாட்டானா என்று எல்லா பெண்களையும் ஏங்க வைத்த கதாபாத்திரமாக முரளி நடித்திருந்த பொற்காலம் படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.

என்னதான் தங்கையின் மீது பாசமழை பொழிந்தாலும் அடி மனதில் அவனும் மற்றவர்களைப் போன்ற மன ஓட்டம் உள்ளவன்தான் என்ற வெளியில் தெரியாத, சாதாரணமாக நாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையை வடிவேலு கதாபாத்திரத்தின் வசனம் மூலமாக சாட்டையடியாய் வெளியே கொண்டு வந்திருந்தார் இயக்குனர் சேரன்.

எனக்குப் பல வாழ்வியல் உண்மைகளை உணர்த்தியதுடன், யதார்த்த உலகத்தையும் மனிதர்களையும் எடைபோட கற்றுக் கொடுத்தது இந்த படம்.

ஒருவன் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்க்கும் புகழ், சொத்து ஆகியவற்றை அவனது வாரிசுகளும் அனுபவிப்பது இயற்கை. அந்த வகையில், தனது மகனை ஹீரோவாக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மரணமடைதல் என்பது யாரையும் கலங்கடிக்கும் சம்பவம்தான்.
தினக்கூலித் தொழிலாளியாக அல்லது மிகப்பெரிய அதிகாரி என்று எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், நாற்பத்தைந்து வயது முதல் ஐம்பது வயதுக்குள் மரணமடையும்போது மிக மோசமான அதிர்ச்சியை அளிக்கும். மற்ற வயதில் மரணமடைந்தால் அதிர்ச்சி வராதா என்று நீங்கள் கேட்கலாம். நான் சொன்ன இந்த வயது,மகன் அல்லது மகளின் கல்வி, திருமணம் தொழில் என்று ஒருவனின் வாரிசுகளுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் அல்லது அதை செயல்படுத்தும் காலகட்டத்தில் ஒருவன் இருக்கும் வயது என்ற காரணத்தால்தான்.
மற்றபடி யார் சொல்லும் ஆறுதல் வார்த்தைகளும் முரளியின் குடும்பத்தாரை முழுவதுமாக சோகத்தின் பிடியில் இருந்து மீட்டு வந்துவிடாது. காலம்தான் அதை செய்யும்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கந்தா - ஆசிரியர் - மாணவன் உறவை மையமாக கொண்ட கதைக்களம்.

நான் எல்.கே.ஜி படிக்கும்போது (அப்படியா என்று ஷாக்காக கூடாது.) என் பெயரை ஆங்கிலத்தில் எழுதித்தந்த ஆசிரியையிடம் ஒரு கேள்வி கேட்டதை நினைத்தால் அப்பவே நமக்கு எவ்வளவு அறிவு இருந்துருக்கு என்று பெருமையாகத்தான் இருக்கிறது(?!)
சரவணன் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் ஒவ்வொரு எழுத்துக்குப்பிறகும் A என்ற எழுத்து இருக்கும். மத்தவங்க பேருல எல்லாம் இப்படி இல்ல. என் பேருல மட்டும் ஏன் இத்தனை A ? என்று ஆசிரியையிடம் கேள்வி கேட்டிருக்கிறேன்.

இந்த அதி புத்திசாலி நாளைக்கு தானே நிறைய படிச்சு விஷயங்களைத் தெரிஞ்சுக்கும். ஆனா இப்ப என்ன சொன்னாலும் ஏத்திக்கிற அளவுக்கு  மண்டையில ஒண்ணும் இல்லைன்னு அந்த  ஆசிரியைக்கு நல்லாவே தெரியும் போலிருக்கு.

"அது அப்படித்தான். நீ பெரியவனானதும் இலக்கணம் சொல்லிக்கொடுப்பாங்க. அப்ப ஏன் இத்தனை A அப்படின்னு புரியும்."னு சொன்னாங்க.

இந்த விஷயம் நடுவுல பல காலம் மறந்துடுச்சு.பின்ன எப்படி நினைவுக்கு வந்துச்சுன்னுதானே கேட்குறீங்க?மதராச பட்டினம் படத்து டிரெய்லர்ல ஆர்யா  அந்த ஆசிரியருக்கே எ...ஏ கத்துக்கொடுக்கும் காட்சியைப் பார்த்ததும்தான்.

******

சிறு குழந்தை ஆர்வத்துடன் வரைந்து காட்டும் இயற்கைக்காட்சி ஓவியத்தை மணியம் செல்வன் போன்ற ஓவிய மேதைகளின் ஓவியம் போல அழகாக இல்லையே என்று ரொம்ப சாதாரணமாக ஒரு சாமானிய மனிதன் சொல்லிவிடுவான்.

குழந்தை வரைந்த அந்த ஓவியத்தில் நேர்த்தியைப் பார்க்காமல் அந்தக் குழந்தையின் ஆர்வத்தையும் முயற்சியையும் காண்பது சாதரண மனிதர்களுக்கு அவ்வளவு எளிதான விஷயமில்லை. அது அதிகமாக ஆசிரியர்களிடம் காணப்படும் உன்னதமான குணம்.

ஓவியம் என்று இல்லை, எந்த ஒரு கலை அல்லது தனித்திறனாகட்டும், அதைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தி புதுப்புது சாதனையாளர்களை உருவாக்கியதில் ஆசிரியர்களின் பங்குதான் மிக அதிகமாக இருக்கும்.
இப்போது நான் மனதில் நினைப்பதை இஷ்டத்துக்கு 'பிளாக்'கில் எழுதி (அது எவ்வளவு குப்பையாக இருந்தாலும் சரி.) உங்கள் பார்வைக்கு கொண்டுவந்துவிட முடிகிறது. ஆனால் நான் அச்சில் பார்க்கவேண்டும் என்று தீவிரமாக எழுதத்துவங்கியது கல்லூரியில் சேர்ந்த ஆண்டான 2000த்தில்.

நான் எழுதிய வாசகர் கடிதம் கூட பிரசுரமாகாத காலகட்டம்.2003 ஜனவரி வரை ஒரு பத்திரிகையிலும் என்னுடைய எழுத்துக்கள் பிரசுரமானதே இல்லை.2003 போகிப்பண்டிகை அன்று மாலைமுரசு பொங்கல் மலரில் முதல் சிறுகதை பிரசுரமானது.அடுத்த நாள் தினபூமி பொங்கல் மலரிலும் ஒரு சிறுகதை. இது அன்றைய காலகட்டத்தில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது. அதன்பிறகு ஆறு மாதங்களுக்கு மாலைமுரசு-வாரமுரசில் தொடர்ச்சியாக என்னுடைய சில சிறுகதைகள் பிரசுரமாயின.

ஆனால் 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் கல்லூரி ஆண்டு மலரில் நான் எழுதிய சிறுகதைகளால் பல மாணவர்களிடையே நான்  பிரபலம். இப்போதும் சில நண்பர்கள் என்னுடைய பெயரை தங்களுடைய செல்போன்களில் 'கதா' என்றுதான் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு கதைகள் கல்லூரி ஆண்டு மலரில் பிரசுரமானதுடன் வேறு பத்திரிகைகளில் எதுவுமே வரவில்லை என்ற நிலையில் நான் எழுதுவதையே விட்டிருக்க வேண்டியது.

ஆனால் முதலாம் ஆண்டிலேயே முதல் கதையைப் படித்த தமிழ்ப் பேராசிரியர் முனைவர் அ.ஜான்பீட்டர், "தம்பி...ஆண்டு மலருக்கு நிறைய பேர் எழுதிக்குடுத்தாலும் காப்பி அடிச்சதுதான் அதிகமா இருக்கும்.ஆனா உன் எழுத்துல உண்மையாவே நீ கற்பனை செஞ்சிருக்குறது தெரியுது. தொடர்ந்து எழுதிட்டு வா. எந்த வேலைக்குப் போனாலும் எழுதுறதை விட்டுடாத. எல்லாருக்கும் அது சாத்தியப்படாது."அப்படின்னு சொன்னதை மனசுல நினைச்சுகிட்டேன்.

மாவட்ட மைய நூலகத்துல 1999லேர்ந்து உறுப்பினரா இருந்ததால நிறைய படிக்க ஆரம்பிச்சேன். அப்பதான் ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது? புத்தகத்தைப் பத்தி தெரிஞ்சு அதை மதி நிலையத்துலேர்ந்து வி.பி.பி மூலமா வரவழைச்சு படிச்சேன்.

ஒரு கதைன்னா எப்படி இருக்கும்னுங்குற டெக்னிக்கல் விஷயம் ஓரளவு எனக்குப் பிடிபட்டுச்சு. 2003ல இருந்து வெளி பத்திரிகைகள்ல பிரசுரமான கதைகள் எல்லாமே ரா.கி. ரங்கராஜனோட புத்தகத்தைப் படிச்ச பிறகு நான் எழுதுனதுதான்.
தினமலர்-வாரமலர் சிறுகதைப் போட்டியில இரண்டு முறை ஆறுதல் பரிசு,அமுதசுரபியில முத்திரைக்கதை,இலக்கியச்சிந்தனையின் 2006 ஜனவரி மாத சிறந்த சிறுகதைக்கான பரிசு,(இது தொகுப்பு நூலில் இடம்பெற்றிருக்கிறது.) தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணி வார இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு. மாலைமுரசு வதீபாவளி மலரில் கவிதைக்கான வெள்ளி குங்குமச்சிமிழ் பரிசு என்று 2007ம் ஆண்டுக்குள் நிறையவே எழுதி வந்த நான் இடையில் சில காலம் சோம்பேறித்தனத்தால் மிகக் குறைவாகவே எழுதி வருகிறேன்.

நாலு பேராவது என்னுடைய எழுத்தைப் படிக்கும் வகையில் எழுதி வருகிறேன் என்றால் இந்த ஆர்வத்துக்கு தூண்டுகோலாக இருந்த தமிழ்ப்பேராசிரியர் முனைவர்.அ.ஜான்பீட்டரும்,புத்தகத்தின் மூலம் ஆசானாக இருந்து கதை என்றால் எப்படி எழுத வேண்டும் என்று எனக்கு சொல்லிக்கொடுத்த ரா.கி.ரங்கராஜனும் என் வாழ்வில் முக்கிய இடம் பிடித்த குருநாதர்கள்.

******

பல பேராசிரியர்கள் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்கினால் அல்லது முதல் மார்க் வாங்கினால் போதும் என்ற அளவில்தான் பாடம் நடத்துவார்கள். ஆனால் புத்தகத்தில் இருப்பது மட்டும் தெரிந்தால் போதாது, நீ படிக்கும் பாடம் வாழ்விலும் நீ வேலைக்குச் செல்லும் இடத்திலும் உன்னை உயர்த்த வேண்டும் என்று சொல்லிப் பாடம் நடத்திய பேராசிரியர் கோ.இராமநாதன் அவர்கள்.

பி.காம் படிக்கும்போது இவர் கொடுத்த ஆலோசனைகளின் பேரில்தான் நாங்கள் தேர்வுக்குத் தயாராவோம்.படிப்பு முடிந்த சில மாதங்களிலேயே நூறாண்டுகளாக இயங்கி வரும் ஒரு உற்பத்தி சார்ந்த நிறுவனத்தில் அனைத்து வகையான கணக்குகளையும் மிக எளிதாக கையாண்டேன்.

******

நான் பார்த்த ஆசிரியர்களில் சிலரின் சிறப்புக்களைப் பற்றி சொல்லியாயிற்று.வேறு சிலரைப் பற்றி குறை சொல்லவில்லை என்றால் எனக்கும் தூக்கம் வராது. படிப்பவர்களுக்கும் சுவாரஸ்யம் இருக்காது. அதனால் இந்த தகவல்கள்.

ஒரு பிரிண்டிங் பிரஸ் இருந்த தெருவிலேயே கோவில் திருவிழா.அதற்குரிய அழைப்பிதழ்களை அந்த அச்சகத்தில்தான் பிரிண்ட் செய்திருக்கிறார்கள்.அந்த தெருவின் பெயரையே தவறாக அச்சிட்டிருந்தார்கள். தொழிலில் ஒரு கவனம் இல்லாததால்தான் இந்த தவறு என்று நான் சொன்னேன்.

சரியாக திருத்தி வாங்காதது அழைப்பிதழ் அச்சடிக்க கொடுத்தவரின் தவறு. வேலை செய்பவர் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்க முடியாது என்று ஒருவர் கோபப்பட்டார்.அவர் அரசுப்பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியர்.

அந்த அச்சகம் இருக்கும் தெருவின் பெயரையே தவறாக அச்சடிக்கிறார்கள் என்றால் தொழிலில் கவனம் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

செப்.15 நாணயம் விகடனில் ஒரு கட்டுரையின் சில வரிகள் என்னுடைய கருத்தை உங்களுக்கு விளக்கும் என்று நினைக்கிறேன்.
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் ஒருவருடைய வேலையை மற்றொருவர் மேற்பார்வையிடுவது என்பது கட்டாயமாகிவிட்டால் அவர் ஒரு சிறந்த புரஃபஷனல் இல்லை.பதிலாக அவர் ஒரு பயிற்சி பெறுபவர் என்கிற நிலையில்தான் இருக்கிறார் என்று அர்த்தம்.

தனது வேலையை நன்றாகச் செய்து விட்டோம் என தனக்குத்தானே சர்ட்டிஃபை செய்து கொள்ளக்கூடிய திறமை.(எல்லா தொழிலிலும் இது பொருந்தாமல் போகலாம். ஆனால் இந்த குணம் ஒருவர் வாழ்வின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம்.

******

எங்கள் ஊர் இயக்குனர் பாபு K. விஸ்வநாத் இயக்கும் படத்தில் ராஜேஷ் ஆசிரியராகவும் கரண் மாணவனாகவும் நடிக்கிறார்கள். இது ஆசிரியர் மாணவர் உறவு பற்றி எப்படி சொல்கிறது என்று பார்ப்போம்.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஆவதும் பெண்ணாலே...அழிவதும் பெண்ணாலே...

இந்த தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த்திரைப்படம் வந்திருக்கிறது.கதையின் நாயகன் மன்சூர்அலிகான் என்று நினைக்கிறேன்.அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை.

பழமொழியைப்போல் சொல்லப்பட்ட இந்த வாக்கியத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று யோசித்துப்பார்த்தேன்.என் அறிவுக்கு எட்டிய அளவிலும் சரி, அனுபவத்திலும் சரி...உண்மை சுடுவதாகத்தான் இருக்கிறது.

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் வேலையை விட்டு விலகிவிட்டார்.அதற்குக் காரணம், என்னைப் பொறுத்தவரை அற்பமாகத்தான் தெரிகிறது.

அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்பட்ட காலதாமதத்தை சரிசெய்யவேண்டும் என்றால் அந்தப் பெண் செய்யும் வேலைகளை வரிசை மாற்றி செய்ய வேண்டும். இதைத்தான் மிகச் சாதாரணமாக மேலதிகாரி சொன்னார்.

கடைநிலை ஊழியர்கள் இரண்டு பேர், தங்களுக்குரிய ஸ்டேட்மெண்ட்டைத்தான் முதலில் தயார்செய்து தரவேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் அன்புத்தொல்லை கொடுத்து இவ்வளவு நாளும் வாங்கிக்  சென்றுகொண்டிருந்தார்கள்.

இப்போது யார் பேச்சைக் கேட்பது என்று குழம்பிய அந்தப்பெண் வியர்த்து விறுவிறுத்து ஒரு பாட்டில் தண்ணீர் குடித்து அழுது கொண்டே அந்த நேரத்துடன் வேலையை விட்டுச் சென்றுவிட்டார்.(இதற்கு முன்னோட்டமாக சக ஊழியைகள் இருவருடன் ஏற்படும் சிறு மனஸ்தாபத்திற்கே கண்ணீர் வடித்தவர்தான் இவர்.)
இந்த வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும், அதை விட்டு விட்டு நீங்கள் சொல்வதுபோல் மாற்றினால் இந்த மாதிரியான சிக்கல்கள் வரும் என்பது மாதிரியான சூழ்நிலைகள் ஒவ்வொரு அலுவலகத்திலும் இருக்கும். இதைத் தெளிவாக மேலதிகாரியிடம் பேசும் துணிச்சல் இருக்க வேண்டும். அதற்கு சாத்தியமில்லாத துக்ளக் தர்பார் நடக்கும் இடம் என்றால் அவர்கள் சொல்வது படி செய்துவிடுவது உத்தமம். ஏதாவது சொதப்பலானால் சொன்னவரைக் கைகாட்டிவிட்டு நாம் நல்ல பிள்ளையாக வேடிக்கை பார்க்கலாம்.

இந்த இரண்டு நிலைகளிலும் இல்லாமல் பிரச்சனைகளைக் கண்டு அழுதுகொண்டு ஓடிய அந்தப் பெண் ஒரு பொறியியல் பட்டதாரி. இந்தப் பெண்ணுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் மாத சம்பளம் கொடுத்த இடத்திலேயே சிறிய காரணத்தால் அழுதுகொண்டு வேலையை விட்டு விலகிய இவர் பல ஆயிரங்கள், லட்சங்கள் என்ற அளவில் ஊதியம் கிடைக்கும் இடத்திற்கு வேலைக்கு சென்றால் அங்கு இருக்கும் வேலைப்பளு,
ஊழியர்களுக்கு இடையில் இருக்கும் அரசியல், வேறு சில சிக்கல் என்று அனைத்தையும் எப்படி சமாளிப்பார்?
யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் வேலையில் சொதப்பியவுடன் அவரது டிரெய்னரான நயன்தாராவை அந்த டீம்லீடர் திட்டுவார். அதைத் தாங்க முடியாமல் நயன்தாரா அழுததும் எனக்கும் அழுகை வந்தது.(அவ்....)

இந்த மாதிரியான கடுமையான வார்த்தைகள் எதுவும் இல்லாமல் பணி வரிசையில் சில மாற்றங்கள் சொன்னதையே தாங்க முடியாமல் வேலையை விட்ட அந்தப்பெண் போல நிறைய ஆண்களும் இருக்கலாம். படிப்பு மட்டும் ஒருவருக்கு எல்லா விஷயத்தையும் கற்றுத்தந்துவிடாது என்பது எனக்குப் புரிஞ்சுடுச்சு.

திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளரான காலம்சென்ற ஏ.வி.மெய்யப்பன் அவர்களைப் பற்றிய நூல் ஒன்றில் என்னைக் கவர்ந்த விஷயம் ஒன்று எல்லாருக்குமே பொருந்தும் என்று நினைக்கிறேன்.

எந்த ஒரு செயல் அல்லது விஷயத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். அப்படி இல்லாமல் அது சரியாக வராது என்று நீங்கள் கருதினால் அதை அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் காரணம் கூற வேண்டும்.சுருக்கமாக சொன்னால் சமாதானமாகு அல்லது சமாதானப்படுத்து. அவ்வளவுதான் வெற்றியின் ரகசியம்.
நான் இந்தப் பதிவின் மூலம் சொல்வதும் இதுதாங்க.முடியும் அல்லது முடியாது என்ற இரண்டு நிலையில் எதாவது ஒரு முடிவில் தெளிவாக இருக்கவேண்டும்.அதை விட்டு விட்டு விலகி ஓடினால் எவ்வளவு விஷயங்களுக்கு எவ்வளவு தூரம், எத்தனை நாள்தான் ஓட முடியும்?

இப்படி அதிரடி முடிவு எடுக்காமல் மழுப்பலாக இருந்து காலத்தின் போக்கில் சரியாகும் என்று விடக்கூடிய சூழ்நிலைகள் குடும்பத்திலும் பொதுவாழ்விலும்  இருக்கும். அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

சமாதானமாகு அல்லது சமாதானப்படுத்து - இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் வெற்றியைத்தரும் ஃபார்முலாக்களில் இதுவும் ஒன்று.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

இரண்டரை லட்ச ரூபாய் போச்சே!...இந்திய ரூபாய்க்கான புதிய குறியீடு வடிவமைப்பு

ஊரோட ஒத்துப்போகாம எப்ப பார்த்தாலும் நீதி,நேர்மை,நடுநிலைமை அப்படின்னு பேசி வாய்ப்புக்களை இழக்குறதே அவனுக்கு வழக்கமாப் போச்சு.(அவன் வேற யாரு...நாந்தேன்.)
எல்லா விஷயத்துலயும் அயல்நாட்டு ஐடியாவைத்தான் சுடணுமான்னு ரொம்பவே யோசிச்சு நானே ஒரு குறியீட்டை வடிவமைச்சு போட்டிக்கு அனுப்புனேன்.

நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 1
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 2
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 3
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 4
நான் வடிவமைத்து அனுப்பிய புதிய குறியீடு - விளக்கம் 5

தமிழகத்தைச்சேர்ந்த ஒருத்தர் வடிவமைச்ச குறியீடு தேர்வு செய்யப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் முதல்ல பெருமையாத்தான் இருந்துச்சு.ஆனா தொடர்ந்து வந்த தகவல்கள்,நான் எந்த அளவுக்கு விஷயம் தெரியாம இருந்துருக்கேன்னு வேதனைப்பட வெச்சது.

என்னோட வடிவமைப்பு எழுதுறதுக்கு கடினமா இருந்ததாலயோ, வேற காரணங்களாலயோ நிராகரிக்கப்பட்டிருந்தா பெருமையா இருந்துருக்கும்.ஹிந்தி தேசிய மொழியா அங்கீகரிக்கப்பட்ட ஒரே காரணத்தால அதை அடிப்படையா வெச்சி உருவாக்கப்பட்ட குறியீடு ஏக மனதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு.

இது உதயக்குமாருக்கு சாத்தியமாகக் காரணம் அவருக்கு ஹிந்தி தெரிஞ்சதாலதான்.

என்னுடைய வருத்தம் என்னன்னா, தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகள்ல நான் கொடுத்த விளக்கம் யாருடைய கவனத்துக்கும் போகாமலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாமோன்னுதான்.

ஹிந்தியை எதிர்க்குறோம்னு சொல்லி பல மத்திய அரசுப்பணிக்குரிய வாய்ப்பை நமக்கு கடினமாக்கி வெச்சிட்டாங்க. இப்போ இது மாதிரியான சாதனை முயற்சிகள் ஹிந்தி தெரியாத காரணத்தால வெளி உலகத்துக்கு தெரியாமலேயே போகுது. இந்த அவல நிலையை நினைச்சு பெருமூச்சு விடத்தான் முடியும். வேற என்ன செய்யுறது?

பத்திரிகையாளர் 'ஞாநி' ஓ பக்கங்களை குமுதத்தில் படிச்சதும் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. நான் வடிவமைச்ச குறியீட்டுக்கு  தேர்ந்தெடுக்கப்பட தகுதியில்லாம இருக்கலாம்.ஆனா நான் அதுல என்னென்ன விஷயங்கள் இருக்கணும்னு நினைச்சு உருவாக்குனேனோ அந்த கொள்கைகள் நடுநிலையானவைன்னு புரிஞ்சுடுச்சு.

நீங்களும் இந்த பக்கங்களைப் படிச்சுட்டு அமைதியா யோசிச்சுப் பாருங்க. உண்மை புரியும்.

ஆனா ஒண்ணுங்க...ரூபாய் நோட்டுல பதினெட்டு மொழிகள் இருக்கேன்னு பெருமையா நினைச்சு தமிழ்,ஆங்கிலத்துல மட்டும் விளக்கம் அனுப்பினது எவ்வளவு முட்டாள்தனம்னு நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.
வெட்டி நியாயம் பேசாம ஹிந்தி கத்துகிட்டா பல விஷயங்களுக்கு நல்லது.இல்லன்னா நம்மை இந்த நிலையில வெச்சிருக்குற அரசியல்வாதிகளோட புள்ளைங்க ஹிந்தியைக் கத்துக்கிட்டு வெளுத்து வாங்கிகிட்டு இருக்குறதை கட்டியிருக்குற கோவணத்தையும் இழந்துட்டு நாம வேடிக்கை பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.

ஓ பக்கங்கள் 1
ஓ பக்கங்கள் 2
ஓ பக்கங்கள் 3
ஓ பக்கங்கள் 4
ஓ பக்கங்கள் 5

வியாழன், 15 ஜூலை, 2010

திருவாரூரில் திருவிழா

வீட்டுக்கும் நாட்டுக்கும் திருவிழா என்பது அவசியம்.சில துறைகளில் பணி புரிபவர்கள் வேலை முடிந்தால் உறக்கம், பாதி உறக்கத்தில் சிரமப்பட்டு எழுந்து மீண்டும் வேலை என்ற இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.இதனால் உறவுச் சிக்கலில் இருந்து உடல்நலம் வரை எவ்வளவு பாதிப்பு என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
உறவினர் வீட்டில் விசேஷம் அல்லது அவர்கள் இருக்கும் ஊரில் திருவிழா என்ற ஒரு சில காரணங்களால்தான் நாம் மற்றவர் வீட்டுக்குச் சென்று சில மணி நேரங்களாவது இருந்துவிட்டு வருகிறோம்.(அடுத்தவர் வீட்டில் முகாமிட்டே வாழ்க்கையைக் கழிப்பவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அடிமையானபிறகு யார் வீட்டுக்காவது செல்லலாம் என்று யோசிப்பதற்கே தயக்கமாக இருக்கிறது.நிழல் கதாபாத்திரங்களின் மேல் உள்ள ஆர்வத்தில் நிஜ வாழ்க்கையின் உறவுகளை உதாசீனப்படுத்தும் போக்கு பலரிடம் இருப்பதை மறுக்கமுடியாது.
மனிதர்கள் தனித்தீவாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் ஓரளவாவது சக மனிதர்களிடம் சற்று ரிலாக்சாக பழக முடிகிறது என்றால் அது மிக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் இல்ல விழாக்களில் மட்டும்தான்.

அதிலும் பல விசேஷங்களுக்கு மிகச் சரியாக விழா நேரத்தில் சென்றுவிட்டு யாரும் கவனிக்கவில்லை என்று புலம்புவது பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது.ஒரு விழா என்றால் குறைந்தது ஆறுமணி நேரம் முன்பாகவாவது சென்று அங்குள்ள பணிகளை கொஞ்சமாவது பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் கொண்டாட்டமாக இருக்கும்.

எல்லாரும் இப்படி வருவது சாத்தியமில்லைதான்.விழாவுக்கு அழைத்தவர்களில் ஒரு சதவீதம் பேர் அந்த பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள வந்தாலே போதும்.விழா நடத்தும் வீட்டில் உள்ளவர் மற்ற அனைவரையும் ஒரு புன்னகையுடனாவது எதிர்கொண்டு அழைக்க முடியும்.

(இந்த அவசர யுகத்துல இதுக்கெல்லாம் சாத்தியமில்லை அப்படின்னு நிறைய பேர் கண்டிப்பா சொல்லத்தான் போறாங்க.)
ஒவ்வொரு நாளும் மற்றுமொரு நாளே அப்படின்னு போய்கிட்டு இருந்தா அதுல எந்த சுவாரஸ்யமும் இல்லை.பண்டிகை, திருவிழா இதெல்லாம் ஊருக்கும் நாட்டுக்கும்னா, பிறந்தநாள், திருமணநாள் கொண்டாட்டங்கள் வீட்டுக்கு.இதெல்லாம் என்ன தெண்ட செலவுன்னு உங்கள்ல பலர் நினைக்கலாம்.
அதுக்கு ஆகுற செலவை ஆதரவற்றோர்,முதியோர் இல்லங்களுக்குப் போய் செலவழிக்கலாம்னு நினைக்கிறீங்கன்னா இன்னும் சந்தோஷம்.நம்மள்ல நிறையபேர் இப்படி போய் உதவி செய்யணும்னு நினைச்சுகிட்டே இருப்போம். ஆனா இப்ப போவோம்னு நினைக்கிறவங்க ரொம்ப குறைவு.நாளைக்குப் போவோம், அடுத்த வாரம் போவோம்னு ஆயுள் பூராவும் நினைச்சுகிட்டே இருக்குறவங்கதான் நிறைய பேர்.



இதுவே பிறந்தநாள்,திருமணநாளில் போய் அவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைச்சா கண்டிப்பா செய்வோம்.அது அந்த நாளின் சந்தோஷத்தை இன்னும் அதிகமாக்கும்.இது மாதிரியான ஒரு நாளில் நம்மைச் சுற்றி இருக்குறவங்ககிட்ட இருந்து வாழ்த்து கிடைச்சாலே அது எவ்வளவு சந்தோஷம் தரும்னு நான் சொல்லத் தேவை இல்லை. நம்மளுக்கு அறிமுகமில்லாத ஒருத்தர்கிட்ட இருந்து நமக்கு வாழ்த்து கிடைக்கிறது எந்த மாதிரியான மகிழ்ச்சியைத் தரும்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

திருவாரூர் பற்றி ரெண்டு விஷயம் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கலாம்.தேர்த் திருவிழான்னா  திருவாரூர்தான் நினைவுக்கு வரும்.தேரோடும் நாலு வீதிகளிலும் இப்போ கிட்டத்தட்ட ரெண்டு அடி உயரத்துக்குமேல கான்கிரீட் தளம் அமைச்சிருக்காங்க. முன்னால தார்ச்சாலையில அங்கங்க மேடு பள்ளம் இருக்கும்போதே தேரை சரியான திசையில செலுத்த முட்டுக்கட்டை கொடுத்து திசை திருப்புறவங்க மிகவும் சிரமப்பட்டுதான் வேலை செய்வாங்க.அந்த பணிகள்ல தேர்ச்சி பெற்ற பழைய ஆளுங்க பல்வேறு காரணங்களால இப்போ இந்தப் பணிகள்ல ஈடுபடுறது இல்லை.(இந்த அரசியலைப் பற்றி எழுதுனா என் வீட்டுக்கு ஆட்டோ கன்பார்மா வரும்.)

புது ஆளுங்கதான் சில ஆண்டுகளா தேர் கட்டுமானப்பணிகள் செய்து திருவிழாவை நடத்தி முடிக்க உதவியா இருக்காங்க.அதனால கடந்த சில வருஷமா சின்ன சின்ன பாதிப்புகள் வந்தது உண்மைதான்.ஆனால் இந்த வருஷம் இதுமாதிரியான எந்த பாதிப்பும் இல்லாம நல்லபடியா திருவிழா நடந்து முடியணும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்குறேன்.(எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.)

2001ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்போறாங்க. இந்த காரணத்தால அடுத்த ஒரு சில ஆண்டுகளுக்கு தேர்த்திருவிழா நடக்க வாய்ப்பில்லை.அதனால நீங்க 16.07.2010 (வெள்ளிக்கிழமை) நடக்க இருக்குற தேர்த் திருவிழாவுக்கு வாங்க.

வர்றவங்களை உபசரிக்க திருவாரூர் மக்கள் நிறையபேர் இருக்கோம்.

திருவாரூர் என்றால் சட்டுன்னு நினைவுக்கு வர்ற தேர் திருவிழா பற்றி சொல்லியாச்சு.

அடுத்த விஷயம், மனுநீதிச்சோழன்.தேர் ஓட்டும்போது தவறுதலா கன்றுக்குட்டியை சாகடிச்ச மகனை அதே மாதிரி சாகடிச்ச மன்னனின் கதையும் உங்கள்ல பலருக்கு தெரிஞ்சிருக்கும்.

மனித உரிமை பற்றி பேசுற பலர், இது என்ன காட்டுமிராண்டித்தனம்! வண்டி போகும்போது யாராச்சும் அடிபட்டு சாகுறது சகஜம்தான்.(சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?) அப்படின்னு வம்புக்கு வருவீங்க.

இப்படி நினைச்சு அலட்சியமா விட்டதாலதான் சாலைவிதிகளை மதிக்காம வாகனம் இயக்கி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்னு குவிச்சுகிட்டு இருக்குறவங்க திருந்துறதா இல்லை.

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் அப்படின்னு தண்டனை இருந்தா நிச்சயமா பயம் இருக்கும்.ஆனா அப்பாவிகளைப் பழிவாங்க இந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கிற தேசத்துரோகிங்க நிறையவே உண்டு.
அதாவது அப்பாவிகள் மேல இருக்குற அக்கறையாலதான் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய ஓட்டைகள் இருக்குன்னு நினைக்கிறேன்.

எங்கயோ ஆரம்பிச்ச விஷயம் இங்க வந்துடுச்சு. 16.7.10 திருவாரூர்ல திருவிழா...எல்லாரும் வந்துடுங்க.