வெளிநாடு, வெளிமாநிலம் போறவங்க மட்டும்தான் பயணக்கட்டுரை எழுதணுமான்னு ரொம்ப நாளா யோசிச்சுகிட்டே இருந்தேன். ஏற்கனவே ரொம்ப அதிகமா யோசிச்சு முன் தலையில ஒளி பிரதிபலிக்கிறதெல்லாம் வேற விஷயம்.
வெளியூர் போயிருந்த அம்மாவை மதுரைக்கு வர சொல்லிட்டு 24 டிசம்பர் 2009 காலை 5 மணிக்கு நானும் திருவாரூர்ல பஸ்சுக்குள்ள ஏறிட்டேன். ஏற்கனவே இரண்டரை ஆண்டு, ஒன்னரை ஆண்டு இடைவெளியில அவங்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து ரெண்டு கண்ணுக்கும் ஃபோல்டிங் லென்ஸ் வெச்சாச்சு.
இப்ப ஒரு கண்ணுல சின்ன பிராப்ளம். அதுக்காகதான் இந்த மதுரை பயணம்.
திருவாரூர்ல இருந்து போகும்போது தஞ்சை ரயில் நிலையத்து முகப்புல வெச்சிருந்த ஒரு விளம்பரப் பலகை "கரெக்ட்...விளம்பரம்னா இப்படித்தான் இருக்கணும்." அப்படின்னு வாய்விட்டு சொல்ல வெச்சுதுங்க.
நொடிக்கணக்குல செல்போன் கட்டணப் போட்டி ஆரம்பமானதும் ஒரு நிறுவனம்
"இப்ப எங்க இருக்க?"
"கிளாஸ்ல"
இப்படி சின்ன சின்ன விஷயத்துல சந்தோஷமா பேசுங்கன்னு தொலைக்காட்சிகள்ல கூவுனுச்சு. படிக்கிற புள்ளைங்க வகுப்புல இப்படி பேசுறதை ஊக்குவிக்கும் விதமா இந்த விளம்பரம் இருந்ததால எனக்குப் புடிக்கலை.(உனக்கு பிடிக்கணும்னு எவன் சொன்னான்.)
அதே நிறுவனம்,
***********
"எங்க வரணும்.?"
"ரெண்டாவது பிளாட்பாரத்துக்கு."
**********
"எங்க நிக்கிற?"
"புக் ஸ்டால்ல."
***********
"டிக்கட் கன்ஃபர்ம் ஆயிடுச்சா?"
"இல்ல...வெயிட்டிங் லிஸ்ட்டுதான்."
**********
"எந்த கோச்?"
"S 10"
**********
இப்படி சின்ன சின்ன விஷயத்தை கட்டணம் பற்றி கவலைப்படாம பேசுங்க...ஏன்னா, இப்ப நீங்க பேசுற நொடிகளுக்கு மட்டுமே கட்டணம். அப்படின்னு விளம்பரம் விளம்பரம் வெச்சிருந்தாங்க.
ஒரு நிறுவனத்தை வளர்க்க விளம்பரங்கள் அவசியமே. அந்த விளம்பரங்கள் மக்களுக்கும் நல்ல திசையைக் காட்டுறதா இருக்கணும்.
நிறுவனத்தோட பேர் என்னன்னுதானே கேட்டீங்க?...நான் எழுதுற பிளாக்குல காசு வாங்காம ஏன் அவங்க விளம்பரத்தைப் போடணும்?
******************
அடுத்து என் கவனத்துல அதிகமா பதிஞ்ச விஷயம் மேலூர் புறவழிச்சாலை. மதுரை - திருச்சி சாலை நான்கு வழிப்பாதையாக்குற வேலை முடியுற நிலையில இருக்கு. ஆனா அதுக்குள்ள சுங்கம் வசூலிக்கிற டோல்கேட் அமைக்கும் பணி நிறைவடைஞ்சு கல்லாப்பெட்டியைத் திறந்து வெச்சுடுவாங்க போலிருக்கு.
அது சரி...இது எந்த நாடு...இந்தியா. ஒருத்தர் பணம் கட்டலைன்னா அடுத்த நாளே ஒரு சேவையை நிறுத்திடுவாங்க. ஆனா நீங்க அதன் பிறகு பணம் கட்டினா கூட ஒரு வாரமோ, ஒரு மாசமோ ஏன் ஒரு வருஷம் கழிச்சு...இல்லன்னா அந்த சேவை கிடைக்காமலேயே கூட போகலாம்.
விட்டது தொல்லை. அந்த நாட்களுக்கு செலவாவது மிச்சம் அப்படின்னு உங்களை நிம்மதியா இருக்க விட்டுடுவோமா?... பணம் கட்ட சொல்லி மாசம் மாசம் ரொம்ப சரியான தேதிக்கு பில்லை மட்டும் அனுப்பிகிட்டே இருப்போம். நாங்க சுறுசுறுப்பா வேலை செய்யலைன்னு நீங்க சொல்லிடக்கூடாதுல்ல.
இந்த சேவை எனக்கு வழங்கப்படுறதை நிறுத்தி நாற்பது வருஷமாச்சே...அப்படின்னு நீங்க பாட்டுக்கு நம்ம முதல்வர் மாதிரி கடிதம் எழுதிகிட்டே இருக்க வேண்டியதுதான். அதுக்கு மட்டும் எங்களை பதில் போட வெச்சிடுங்க...சவாலுக்கு சவால்...இதுதான் இன்றைக்கு பல அரசு, தனியார் சேவை நிறுவன குளறுபடிகள் செய்வதன் உச்ச கட்டம்.
அநியாயமா பணம் கட்ட சொல்லி பில் வந்தா அதைக் கட்டாம இருக்க முடியாதா?
ஏன் முடியாது... அநியாயத் தொகையை மட்டுமில்லை. நியாயமான தொகையையும் முழுசாவே ஏப்பம் விட்டுடலாம். எல்லாம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துதான்.
விலை வாசி ஏறிப்போச்சே...நீங்க கொடுக்குற ஐநூறு ஆயிரத்தை வெச்சு அதிகாரிகள் எல்லாம் கோடிக்கணக்குல சொத்து வாங்குறதுக்கு எத்தனை பிறவி எடுக்குறது...
அவங்களுக்கே நீங்க லட்சக்கணக்குல லஞ்சம் கொடுக்கணும்னா, குறைந்தபட்சம் கோடிக்கணக்குல ஏமாத்துனாதான் முடியும். வியாபாரம் கட்டுபடியாகனுமில்ல?...
ஆயிரம் கட்டாதவனுக்கு ஆப்பு வெக்கிறதும், ஆயிரக்கணக்கான கோடி கட்டாதவனுக்கு மாலை மரியாதை பண்ணி அடுத்த கடன் அல்லது சேவைக்கு ஏற்பாடு செய்யுறது ஏன்னு இப்பவாச்சும் புரியுதா?...ஊழலுக்கும் வரி ஏய்ப்புக்கும் ஒரு மரியாதை இருக்கு. அதை புரிஞ்சுக்குங்கப்பா...
ஆமா... நான் எங்க இருக்கேன்...(மதுரை போற பஸ்சுலதான்...பத்து ரூபா அரசாங்கத்தை ஏமாத்த தெரியலை... உன்னை எல்லாம் மதுகோடா மாதிரி
ஆஸ்பத்திரியிலயா வெக்க முடியும்?)
எதுக்கு சொல்ல வந்தேன்னா...இன்னும் கொஞ்ச நாள்ல உங்க வீட்டை விட்டு வெளில வந்தாலே இது தனியார் காண்ட்ராக்ட் மூலமா போட்டது. நடக்கணும்னா அம்பது ரூபா கொடுன்னு கேட்கதான் போறாங்க.
அதுக்கு முன்னோட்டம்தான் ரோட்டுக்கு ரோடு இந்த சுங்கம் வசூல். முப்பதாயிரம் டன் நாற்பதாயிரம் டன் வரை லாரியில சுமை ஏற்றிகிட்டுப் போய் சாலையை வீணடிச்சுட்டா பிறகு மறுபடி முதல்லேர்ந்து ஆரம்பிக்க எங்க போறதுன்னு நீங்க கேட்குறது புரியுது.
இதுல அமைச்சர்லேர்ந்து வட்டம் மாவட்டம் வரை பெரிய ஆளுங்க கோடீஸ்வரனாயிட்டே இருக்காங்க.
அப்ப என்ற கதி? இப்படியெல்லாம் கேள்வி கேட்கப் பிடாது...திருவோடுதான்...அதையும் அவங்க புடுங்கிட்டா ஏன்னு கேட்க கூடாது. இதை எல்லாம் பார்த்துட்டு அங்க எதாவது நான் வாயைத் திறந்தேனா?...நான் பாட்டுக்கு வீட்டுல வந்து உட்கார்ந்து பிளாக்ல எண்ட்ரி போட்டுகிட்டு இருக்கேன்ல...இப்படித்தான் பொழைக்கிற வழியைக் கத்துக்கணும்.
அரசுப் பணத்துல போட்ட சாலையில கூட சுங்கம் வசூல் செய்ய தனியார் குத்தகைக்கு விட்டுடுறாங்க. இதுல எவ்வளவு வசூல், எவ்வளவு ஒப்பந்தத் தொகை அப்படின்னு எதுவுமே வெளிப்படை இல்லை.
இது தவிர, இரவு நேரங்கள்ல கார், வேன் இது மாதிரி வாகனங்கள்ல பயணம் செய்யுற பெண்கள் கிட்ட டோல்கேட் ஆளுங்க பாலியல் தொந்தரவு கொடுக்குறதாவும் புகார் இருக்கு.
நான் என்ன சொல்றேன்னா...எவ்வளவு பணம் வசூலாகுதுன்னு வெளிப்படையா எல்லாரும் தெரிஞ்சுக்குறபடி செய்துட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்துடும்.
உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை?ன்னு யாருப்பா சவுண்ட் விடுறது?
ஒரு நாடு நல்லா இருக்கணும்னா ஒரு ஊர் மட்டும் துன்பம் அனுபவிக்கிறதோ, அழியிறதோ தப்பில்லைன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. நம்ம அரசியல் வியாதிங்க அதுல சின்ன திருத்தம் பண்ணிட்டாங்க. நாலு குடும்பம் நல்லா இருக்கணும்னா நாடு அழிஞ்சா தப்பே இல்லை...- இதைக் கேட்கும்போதே எவ்வளவு கொடூரமா இருக்கு?
இப்ப இந்தியாவோட பயணம் இந்தப் பாதையிலதான் போய்கிட்டு இருக்கு.
நீங்க உடனே சாதனைகளோட பட்டியலைப் படிக்காதீங்க. பால்ல தண்ணீரைக் கலக்கலாம். பெரிய பாதிப்பு வெளியில தெரியாது. ஆனா சிலர் தண்ணியில பாலைக் கலந்தாக் கூட பரவாயில்லைங்க...விஷத்தல்ல கலக்குறாங்க. நினைச்சுப் பார்க்கும்போதே பகீர்னுங்குது.
@@@@@@@@@@@@
தெலுங்கானா கோரிக்கையால ஆந்திராவே அவதிப்பட்டுகிட்டு இருக்கு. நாணயம் மாதிரி இந்தப் பிரச்சனைக்கும் ரெண்டு பக்கம் உண்டு. அதாவது நன்மை - தீமை. அதனால அவங்க கோரிக்கை நியாயமா இல்லையான்னு இப்ப நான் கருத்து சொல்லப் போறது இல்லை.
ஆனா வன்முறை நிரந்தரத் தீர்வு இல்லைன்னு மட்டும் புரியுது.
எதாவது ஒரு பிரச்சனைன்னா பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கிற போக்கு இப்ப மறுபடி அதிகமாயிருக்கு. இதுக்கு முக்கிய காரணம், கூட்டம்தான். ஒருத்தனோட அடிமனசுல இருக்குற வன்முறை எண்ணம் இந்த மாதிரி கலவரங்களின் போது ரொம்ப சுலபமா வெளிவந்துடுது.
நேற்றும் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நாங்க வந்துகிட்டிருந்த பேருந்துக்கு பக்கத்துல வந்த மற்றொரு பேருந்தை பெரிய கும்பலே சூழ்ந்துடுச்சு. பஸ்சுக்குள்ள ஏறி டிரைவர், கண்டக்டரை அடிச்சா கேஸ் ஸ்ட்ராங்கா ஆயிடும்னு பயந்த கும்பல், யடேய்... கீழ இறங்குடான்னு கத்தினாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரும் இறங்கவே இல்லை.
அந்த அரசுப்பேருந்து எந்த வண்டியிலயாவது மோதிட்டுதா இல்ல வேற எதுவும் பிரச்சனையான்னு எனக்கு தெரியலை. ஆனா இந்தப் போக்கு மிகவும் தவறானதுன்னு மட்டும் புரியுது.
அவங்க செய்தது மட்டும் சரியான்னு நீங்க கேட்கலாம். எந்த ஓட்டுநரும் அலட்சியமாக இருந்திருக்கலாமே தவிர விபத்தை ஏற்படுத்தி உயிர்களைப் பலியாக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் என்பது பொதுவான கருத்து.
அந்த அலட்சியத்தைப் போக்கும் விதமாகத்தான் தண்டனை இருக்க வேண்டுமே தவிர மேலும் சில உயிர்களை பலியாக்கும் வகையில் நாம் நடந்து கொள்ளக் கூடாது.
சட்டத்தின் கையிலிருந்து எப்படியும் தப்பிவிடலாம். ஆனால் இந்த மக்களின் கையில் சிக்கினால் மரணம்தான் என்ற அச்சமே அவர்கள் இருவரையும் அங்கிருந்து ஓடச் செய்திருக்கிறது. இல்லை என்றால் மேலும் நாலு குழந்தைகளையாவது காப்பாற்றி இருக்கலாம் என்பது நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மை.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலும் பேருந்தையும், அந்த ஓட்டுநர், நடத்துனரையும் அடித்து நொறுக்கும் ஆவேசத்துடன் நெருங்கினார்கள். அப்போது அங்கே வந்த போலீசார் கூட்டத்தை வீடியோ, புகைப்படம் எடுக்கத் தொடங்கியதும் பாதிப்பேர் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
நாங்கள் பயணம் செய்த பேருந்து கிளம்பி விட்டதால் என்ன பிரச்சனை, என்ன ஆனது என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. துணிச்சலாக குற்றத்தை ஒப்புக்கொண்ட வரலாறெல்லாம் சுதந்திரப்போராட்டத்தில்தான். ஏனென்றால் அந்த நோக்கத்தில் ஒரு நியாயம் இருந்தது. அப்படியும் வன்முறையை யாரும் விரும்பவில்லை. ஆனால் இப்போது நிகழும் கலவரங்களில் ஈடுபடுபவரெல்லாம் நானும் தப்பு செஞ்சேன்னு யாருக்கு தெரியப்போகுது...என்ற தப்பித்தல் மனோபாவத்தில் மட்டுமே இப்படி குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கூகிள் எர்த் மூலமா கலவரத்துல ஈடுபடுற ஆளுங்களை அடையாளம் கண்டு கடுமையா தண்டிக்கிற தொழில்நுட்பம் இருந்தா ரொம்பவே நல்லதுன்னுதான் தோணுது.
மக்களின் பிரச்சனைக்கு காரணமான சில அரசியல் வியாதிங்களோட சொத்துக்களை சேதப்படுத்துறவங்களைப் பற்றிய விவரங்களை மறைக்கிற அறிவு அந்த தொழில் நுட்பத்துக்கு இருந்தா அதுதாங்க எனக்கு கடவுள். அரசியல்வாதிகளோட ஊழல் சொத்துக்கள் நொறுங்கி நாசமாயிடும்னா யாருங்க வன்முறையைத் தூண்டுவாங்க?
********************
ரொம்பவே சீரியசா பேசிட்டேனா...பயணத்தை எனக்கு இனிமையாக்குன விஷயம் பற்றி சொல்லிடுறேன்.
நான் இன்னும் சின்ன புள்ளைதாங்க. (ஆரம்பிச்சுட்டான்யா...)காலை நேரத்துல பேருந்துப் பயணம் எனக்கு வாந்தியை வரவழைச்சுடும். திருவாரூர்ல இருந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் 65 கி.மீ. தூரம். ஆனா முப்பது கிலோ மீட்டர் தூரம் போறதுக்குள்ள வாந்தி கியாரண்டியாத்தான் இருந்துச்சு. இப்ப நிலைமை கொஞ்சம் தேவலாம். ஆனா ரொம்ப அசதியா இருக்கும்.
இரவு நேரப் பயணம் இந்த மாதிரி தொந்தரவு தந்ததில்லை. அது ஏங்க? அது மட்டுமில்லை. சில சமயம், பரமக்குடியிலேர்ந்து அதிகாலை நாலுமணிக்கு திருச்சி போற பஸ்சுல ஏறி சிவகங்கை, திருப்பத்தூர், புதுக்கோட்டை (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்) தஞ்சாவூர் வழியா திருவாரூர் ஆறே மணி நேரத்துல வந்துடுவேன். அப்பவும் வாந்தி தொந்தரவு இருந்ததில்லை.
இதுக்கு என்ன காரணம்னுதானே கேட்டீங்க?...
தெரியலையேப்பா...தெரியலையே....
எதுக்கு இந்த விஷயங்களை சொல்றேன்னா, பேருந்துப் பயணம் ஒத்துக்கொள்ளாத ஆசாமிங்களுக்கு ஒரு இருக்கையில இருந்து இன்னொரு இருக்கைக்கு மாறுற விஷயம் இருக்கே...அது கூட இமயமலையில இருந்து தலைகீழா(?!) இறங்குற மாதிரி.
யோவ்... நீ என்ன .................................................கட்சித் தலைவரா.ஒரு ஊர்ல இருந்து இன்னொரு இடத்துக்குப் போறதுக்குள்ள நாலு இருக்கைக்கு மாறினாதான் மரியாதைன்னு நினைப்பு அப்படின்னு திட்டாதீங்க.
உடம்பு இந்த கண்டிஷன்ல இருக்கும்போது பஸ்சுல இருக்குற ஐம்பத்தேழு இருக்கையிலயும் மாறி உட்காரணும்னு வேண்டுதலா என்ன? நம்ம நாட்டுக் கலாச்சாரம் செய்யுற அக்கப்போர்தான் இது. "சார்...கொஞ்சம் மாறி உட்காருங்களேன்..." அப்படின்னு ஒரு அழகான பொண்ணோ மரியாதைக்குரிய தாய்க்குலமோ யார் சொன்னாலும் மாறி உட்கார்ந்துக்க வேண்டியதுதான். இல்லன்னா நடத்துனர் வந்து சாவுகிராக்கின்னு ஒரு புது விருது கொடுத்து நம்மளை இருக்கையை விட்டு (முரண்டு பிடிச்சா பேருந்தை விட்டே) நகர்த்திட்டுதான் மறுவேலை பார்ப்பார். ஏன் இந்த வம்பு...( சுனாமி இந்தோனேஷியாவுல பஸ்...ச்சை..கப்பல் ஏறின உடனேயே சென்னை எல்.ஐ.சி பில்டிங் மொட்டை மாடிக்கு போயிடுற அளவுக்கு நாங்க எல்லாம் அப்பாவி.)
திருமலை படத்துல விஜய் கூட இண்டர்வியூவுக்கு கிளம்புற விவேக்கை, டேக் டைவர்ஷன் அப்படின்னு சொல்லியே திருப்பதியில கொண்டுபோய் விட்டுடுவாங்க. ஆறு மாசத்துக்கு முன்னால இப்படித்தான் தஞ்சாவூர்ல இருந்து திருவாரூர் வர்றதுக்குள்ள (65 கி.மீ தூரம்தான்) டிரைவருக்கு பின் சீட்டுல உட்கார்ந்து இருந்த நான் இப்படி இடம் மாறி மாறி கடைசி வரிசைக்கு வந்துட்டேன். ஏற்கனவே நான்கு மணி நேரம் பயணம் பண்ணி வந்த எனக்கு இந்த அனுபவம் எப்படி இருந்திருக்கும்?(இதுல லக்கேஜ் வேற)
கடைசி வரிசைக்கு போகும்போது "இனிமேலும் பின்னால போகச் சொன்னா கண்ணாடியை உடைச்சுட்டு கீழ குதிக்க வேண்டியதுதான்" அப்படின்னு சொன்னேன். அதுக்கு அந்த யுவதி (சரித்திர நாவல்கள் அதிகமா படிச்சதோட பாதிப்பு) லேசா சிரிச்சதோட சரி...
ஆறு மாசத்துக்கு முன்னால நடந்தது இருக்கட்டும்... நேத்து என்ன ஆச்சுன்னுதானே உங்க கேள்வி?
போகும்போது ரெண்டு பேர் உட்காருற இருக்கையில மதுரை வரை ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் உட்கார்ந்து வந்ததால பிரச்சனை இல்லை.
திரும்பி வரும்போது அம்மா வெளியூர்ல இருந்து எடுத்துவந்த பைகள் இருந்ததால மூணு பேர் சீட்டுல உட்காரவேண்டியதாயிடுச்சு. என்ன ஆகப் போகுதோன்னு பயந்தேன். (காலை நாலு மணியிலேர்ந்து தூக்கம் இல்லை. மருத்துவமனை பகுதியில சரியான சாப்பாடும் இல்லை. வயிறை நிறைக்க
நினைச்சு சாப்பாடு ஒத்துக்காம வயிறு காலியாக ஆரம்பிச்சுட்டா என்ன பண்றதுன்னு ஒரு குழப்பம். அதனால வயிறு காலி. டெஸ்ட் கிரிக்கெட்ல நாலு நாளா தொடர்ந்து பீல்டிங் பண்ணின மாதிரி ஆயிட்டேன்.
ஜன்னல் ஓரத்துல வாந்தி எடுக்க வசதியா(?!) நான் உட்கார்ந்துட்டேன். பக்கத்துல அம்மா. அடுத்ததா ஒரு இளம்பெண் (கல்லூரி மாணவியாத்தான் இருக்கும்.) ரெண்டு பெரிய பைகளோட வந்து உட்கார்ந்து புதுக்கோட்டைக்கு பயணச்சீட்டு வாங்கியதும் அப்பாடா...மூணு மணி நேரத்துக்கு கவலை இல்லைன்னு நிம்மதியாச்சு.
அந்தப் பொண்ணோட புண்ணியத்தால சீட் டைவர்ஷன் அப்படின்னு யாரும் அக்கப்போர் பண்ணலை. நானும் நிம்மதியா தூங்கினேங்க.(அம்மா பக்கத்துல இருக்கும்போது வேற என்ன பண்றது.)
அந்தப் பொண்ணு புதுக்கோட்டையில இறங்கினதும் சுப்பிரமணியபுரம் சுவாதி மாதிரியெல்லாம் திரும்பிப் பார்க்கலைங்க. (உன்னைய மூணு மணி நேரம் ஒரே இடத்துல உட்காரவிட்டதே பெரிசு. இதுல என்ன லுக்கு?)
நான் அடுத்த ஷெட்யூல் தூக்கத்தைக் கண்டினியூ பண்ண ஆரம்பிச்சேன்.
கல்லூரியில படிச்சப்ப முதல் சில வாரங்கள்தான் நான் மாணவிகள் யார்கிட்டயும் பேசலை. அப்புறம் சக மாணவிகள்கிட்ட பேச தயக்கமே இல்லைங்க. ஆனா பஸ்சுல பழக்கமில்லாத ஒரு பொண்ணு ஒரு ஆள் இடைவெளியில வந்து உட்கார்ந்ததும் நம்ம இதயத்துடிப்போட வேகம் கொஞ்சம் அதிகமாத்தான் இருந்துது. இந்த லட்சணத்துல வெளிநாடு மாதிரி ஆணும் பெண்ணும் பக்கத்துல உட்கார்ந்து போற அளவுக்கு பக்குவப்பட நாளாகும்னுதான் தோணுது. (நன்கு பழகியவர்களையும் சில நகரங்களின் பழக்கத்தையும் சொல்லவில்லை. அறிமுகம் இல்லாத ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் விஷயத்தில் எல்லாருடைய மனதிலும் ஒரு குறுகிய வட்டம் இருந்து கொண்டு தடை செய்வதைத் தவிர்க்க முடியாது.
அப்போ என்னை மாதிரி மயக்கம் வர்ற பார்ட்டிங்களுக்கு என்னதான் வழி?
ரெண்டு பேரா போனா, இடப்பக்க இருக்கையில யாரும் இடம் மாற சொல்ல மாட்டாங்க.
தனியா போனா?
வேற வழி...சீட் டைவர்ஷன்தான்.