Search This Blog

சனி, 9 டிசம்பர், 2017

தமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...











இந்த தொடர் யாரையும் இழிவுபடுத்த வேண்டும்
என்ற எண்ணத்தில் எழுதவில்லை. சமீப காலமாக நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்
போது அவற்றில் சில வேதனையான சம்பவங்கள் மிகவும் மனதை பாதிக்கின்றன. இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு
தீர்வுகள் யார் கையில் இருக்கின்றது என யோசிக்கும்போது, மனிதர்கள் அனைவருமே சூழ்நிலைக்
கைதிகளாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.




ரஜினிகாந்த்துக்கு வேதாளம் சொன்ன பதில்கள்... இப்படித்தான் தலைப்பு வைக்க எண்ணினேன். மக்களின் எதிர்வினை எப்படி இருக்குமோ என்ற அச்சம் இருந்ததால் அந்த எண்ணம் காணாமல் போய்விட்டது.







பதிவை முழுவதுமாக படிக்க...








சனி, 25 நவம்பர், 2017

புத்தக விமர்சனம் - சுழிக்காற்று







இது வரை நான் படித்த புத்தகங்களில் அளவுக்கு அதிகமாக தொடக்கம் முதல் முடிவு வரை ஏகப்பட்ட அச்சுப்பிழைகளுடனும், நாலைந்து வரிகள் ஆங்காங்கே திரும்ப திரும்ப Copy & Paste ஆகி இருப்பதும் இந்த புத்தகத்தில்தான் என்று நினைக்கிறேன்.





எழுதியவர் கௌசிகன்



வெளியீடு : லட்சண்யா பப்ளிகேஷன்


5/4, காந்தி தெரு,


மேற்கு மாம்பலம்,


சென்னை -33






70களில் கல்கியில் வெளிவந்த தொடர்கதை... சுதந்திர இந்தியாவில் நடைபெறும் கதை. கதை நடக்கும் ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்பதால் 1960 முதல் 70 காலகட்ட சம்பவங்கள் போல் சித்தரிக்கப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. 





பண்ணை விவசாயம் செய்து வந்த ஒரு ஜமீன்தார், உலகப்போர் காலகட்டத்தில் ராணுவத்துக்கு உணவு சப்ளை செய்யும் காண்ட்ராட்க்ட் தொழில் செய்து கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதி. யுத்தம் முடிந்து உணவு சப்ளை ஒப்பந்தம் இல்லை என்றாலும் இறைச்சி உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை பாதுகாக்க ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்ட மெகா குளிர்சாதன பெட்டி (ஃப்ரிட்ஜ்) இன்னும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருப்பதாக கதையில் இடையிடையே சொல்லப்படுகிறது. அந்த பண்ணை தொடர்பான ஊழியர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவதும், மர்ம முடிச்சுகள் அவிழ்வதும்தான் கதை.





ஜமீன்தார் தர்மலிங்கம் படுத்த படுக்கையில் இருக்கிறார். ஜமீன்தாரின் மகன் கந்தசாமியும் படுக்கையில். கந்தசாமியின் மனைவி ஒரு மகள் மஞ்சுளாவை விட்டுவிட்டு இறந்துவிட்டதால் கோகிலாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.





தர்மலிங்கம் இறந்துவிட, அவரது அடக்கம் முடிந்தவுடன் மஞ்சுளா திரும்ப ஊருக்கு புறப்படுகிறாள். ரயில் ஏறுவதற்குள் படுக்கையில் இருந்த கந்தசாமியும் இறந்த தகவல் எதேச்சையாக தெரிய வர, மஞ்சுளா ஊருக்கு செல்லாமல், தந்தையின் உடலை பார்க்க வருகிறாள். அவரது உடலும் அவசர அவசரமாக புதைக்கப்படுகிறது. மஞ்சுளாவின் காதலன் துப்பறிகிறான்.





முடிவில் தர்மலிங்கம் இறக்கும் முன்பே 15 நாட்களுக்கு முன்னதாக புயல்காற்று அடித்த நாள் அன்றே கந்தசாமி இறந்துவிடுகிறார். கந்தசாமி இறந்ததை வெளியில் சொல்லாமல் மெகா பிரிட்ஜ்-களில் வைத்து பாதுகாத்து, தர்மலிங்கம் அடக்கம் முடிந்த அன்று இரவே கந்தசாமியும் இறந்து விட்டதாக வெளியில் சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.





தர்மலிங்கத்துக்கு முன்னதாகவே கந்தசாமி இறந்து விட்ட விஷயம் தெரிந்த நர்ஸ், கணக்குப்பிள்ளை, நர்ஸ்-ன் அண்ணன், இந்த உண்மை தெரிந்த அந்த ஊர் டாக்சி டிரைவர் ஆகியோர்தான் கதையின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொருவராக கொல்லப்படுபவர்கள்.





நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த நபர் இறந்தவர் பற்றிய செய்தியை ஏன் அவர் தந்தை இறக்கும்வரை உலகத்துக்கு தெரியவிடாமல் வைத்து விட்டு பிறகு வெளியில் சொல்லப்பட வேண்டும்?





தர்மலிங்கம் இறந்த பிறகு அவர் மகன் கந்தசாமி இறந்தால் மொத்தம் உள்ள 4 கோடி சொத்துக்களில் (இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1950 அல்லது 60களில் 4 கோடி என்று கதை புனையப்பட்டுள்ளது.) கந்தசாமியின் இரண்டாவது மனைவி கோகிலாவுக்கு 2 கோடியும், முதல் மனைவியின் மகள் மஞ்சுளாவுக்கு 2 கோடியும் கிடைக்கும்.


















ஆனால் தர்மலிங்கத்துக்கு முன்பே கந்தசாமி இறந்து விட்டால் கந்தசாமியின் பெயரில் உள்ள சுமார் 6 லட்சம் தொகை கூட சரி பாதியாக இரண்டாவது மனைவி கோகிலாவுக்கும், மகள் மஞ்சுளாவுக்கும் செல்லும். தர்மலிங்கம் இறப்புக்கு பின்னர் 4 கோடி சொத்தும் பேத்தி மஞ்சுளாவுக்கு மட்டும் சொந்தம் என்று உயில் இருப்பதால்தான் கந்தசாமி அவரது தந்தை தர்மலிங்கத்துக்கு முன்பாகவே இறந்ததை மறைத்து விடுகிறார்கள்.





இந்த சதித்திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.





கந்தசாமி தன் தந்தைக்கு பக்கத்தில் இன்னொரு படுக்கையில் இருந்த நிலையில் புயல் அடித்த அன்று கந்தசாமி இறந்ததும் விஷயம் யாருக்கும் தெரியாமல் சீரியஸ் என்று மட்டும் வெளியில் சொல்லப்படுகிறது.





குடும்ப டாக்டருக்கு போன் செய்ததும் அவர் உடனடியாக வர முடியாத அளவுக்கு மழை, இன்னொரு கேஸ் அட்டண்ட் செய்தல் என்று தடங்கல் ஏற்படுகிறது. அடுத்த நாள் காலையில் வரும்போது கந்தசாமியின் இரண்டாவது மனைவி டாக்டரை சத்தம் போட்டு விரட்டிவிடுகிறாள். உங்களை நம்பி அவரை வெச்சிருந்தா இன்னேரம் இறந்திருப்பார். அதனால என் அண்ணன் டாக்டர்தான் அவரை வெச்சி இனிமே சிகிச்சை செய்துக்குறோம் என்று சொல்லவும் டாக்டர் குற்ற உணர்ச்சியில் ஒதுங்கி விடுகிறார்.





அடுத்து உண்மை தெரிந்த நர்சையும் வேலையை வீண் பழி சுமத்தி விட்டு விரட்டி விடுகிறார்கள். (பின்புதான் அவள் கொல்லப்படுவாள்) கணக்குப்பிள்ளையையும் கொலை செய்து, அவன் டிராக்டர் விற்ற பணத்துடன் ஓடிவிட்டதாக கதை கட்டி விடுவார்கள்.





ஜமீன்தார் தர்மலிங்கத்தையே மகனை பார்க்க விடமாட்டார்கள். ஏன், புது நர்ஸ், இரண்டாவது மனைவி கோகிலா, அவள் சகோதரனான டாக்டர் ஆகிய மூவரைத் தவிர வேறு யாருமே கந்தசாமியை பார்க்கவே முடியாது. யார் கேட்டாலும் அவருக்கு ஓய்வு தேவை என்று ஒரே பாட்டைப் பாடி அனுமதிக்கவே மாட்டார்கள். கந்தசாமியின் மகளைக்கூட தந்தையை பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனாலும் அவள் கந்தசாமியை ஒரு முறை பார்த்து பேசுவார். (அது எப்படி பிணத்துடன் பேசினாள் என்று நீங்கள் கேட்கலாம். அது சஸ்பென்ஸ். வேண்டுமானால் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.) 





பிறகு தர்மலிங்கம் இறந்த பிறகு ஒரு நாளைக்குள்ளாகவே கந்தசாமி இறந்ததாக அறிவிக்கப்படும். அப்போது குடும்ப டாக்டர் வந்து, நான் கடைசியா உங்க அப்பாவுக்கு கழுத்துல இருந்த கட்டியை கிழிச்சு மருந்து போட்டேன். ஆனால் அந்த காயம் 15 நாளா கொஞ்சம் கூட ஆறாம இருந்துருக்கு என்று வியப்படைவார். அதை வைத்து கந்தசாமியின் உடல் 15 நாட்கள் ஃப்ரிட்ஜ்-ல் இருந்திருக்கும் என்று துப்பறிபவர் கண்டுபிடிக்கத்தொடங்குவதாக போகும் இந்த மர்ம நாவல்.





கதையை படித்ததும் உங்களுக்கு என்னென்னவோ தோன்றுகிறதா... நல்லது... அது எதையும் கமெண்ட்-டில் சொல்ல வேண்டாம். 





இதை எதுக்கு சொல்றேன்னா, 





நமக்கு ஏன் சார் வம்பு... இருக்குற எடம் தெரியாம இருந்துட்டு போயிடணும்....





*****************************************************


வாண்டுமாமா





இப்போது 32 வயதுக்கு மேல் இருப்பவர்களில் சிறு வயது வாசிப்பு பழக்கம் இருந்திருந்தால் வாண்டுமாமா என்ற பெயரை தெரியாமல் இருக்காது.









சிறுவர் இலக்கியமென்றால் முதலில் நினைவுக்கு வருமிருவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. மற்றவர் வாண்டுமாமா ( இயற்பெயர் வி.கிருஷ்ணமூர்த்தி ). அழ வள்ளியப்பா குழந்தைகளுக்காக, குழந்தைகள் இரசிக்கும்படியான அற்புதமான கவிதைகள் எழுதியவர். வாண்டுமாமாவோ குழந்தைகளுக்காக கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியதுடன் குழந்தைகளுக்கான சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் (பூந்தளிர், கோகுலம்) தன் பணியினைத் தொடர்ந்தவர். அறிவியல், இலக்கியம், வரலாறு எனப் பல்வேறு துறைகளிலும் குழந்தைகளுக்கு எளிமையாக, சுவையுடன், புரியும் வண்ணம் கட்டுரைகளை, கதைகளைப் படைத்தவர் வாண்டுமாமா. இவரது நூல்கள் பலவற்றை வானதி பக்கம் மிகவும் அழகாக, சித்திரங்களுடன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பா சொன்ன கதைகள், தாத்தா சொன்ன கதைகள், பாட்டி சொன்ன கதைகள் என்று பல தொகுதிகளை வானதி பக்கம் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது. வாண்டுமாமா சிறுவர்களுக்காக எழுதியதுடன் பெரியவர்களுக்காகவும் எழுதியிருக்கின்றார். கல்கி சஞ்சிகையுடன், அதன் இன்னுமொரு வெளியீடான கோகுலம் சஞ்சிகையுடன் இவரது வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. கல்கியில் இவர் எழுபதுகளில் கெளசிகன் என்னும் பெயரில் எழுதிய சுழிக்காற்று, சந்திரனே நீ சாட்சி ஆகிய மர்மத் தொடர்கதைகளும், பாமினிப் பாவை என்ற சரித்திரத் தொடர் நாவலும் இன்னும் ஞாபகத்திலுள்ளன.





நாங்கள் சிறுவர்களாக இருந்த சமயம், நானும் என் சகோதர, சகோதரிகளூம் கல்கியில் வெளியான இவரது 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரத் தொடரினை விரும்பி வாசித்தோம். இப்பொழுதும் அச்சித்திரத் தொடரில் வரும் 'தூமகேது' என்னும் பாத்திரம் நினைவில் நிற்கிறது. பால்ய காலத்தில் எமக்குத் திகிலினை ஏற்படுத்திய பாத்திரங்களிலொன்று தூமகேது.





கல்கியில் அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு இதழிலும் சிறுவர் விருந்து என்னும் பெயரில் ஓரிரு பக்கங்கள், அழகான வர்ணச் சித்திரங்களுடன் வாண்டுமாமா தயாரித்து வழங்கிய சிறுவர் பக்கம் வெளிவரும். எனக்கு மிகவும் பிடித்த பகுதி அது. அதன் பக்கங்களைச் சேகரித்து அழகாக 'பைண்டு' செய்து வைத்திருந்தேன் ஏனைய தொடர்களைப் போல. அக்காலகட்டத்தில் ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் மாணவர் மலர் பக்கமும், கல்கியின் சிறுவர் விருந்து பக்கமும் (வாண்டுமாமாவின் தயாரிப்பில்) மிகவும் பிடித்த சிறுவர் பக்கங்கள். ஈழநாட்டின் மாணவர் மலர் என் மாணவப் பருவத்தில் என் எழுத்தார்வத்தை மிகவும் ஊக்கியது. கல்கியின் சிறுவர் விருந்தும், வாண்டுமாமாவின் சிறுவர் படைப்புகளும் அந்த வயதில் என்னை மிகவும் ஈர்த்தவை.





தனது தொண்ணூற்றியொரு வயதில்  (12.6.2014),   வாண்டுமாமா இவ்வுலகை நீத்தார் என்னும் செய்தி சிறிது துயரத்தினைத் தந்தாலும் அவரது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை. தன் வாழ்க்கையையே சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த மிகச்சிறந்த எழுத்தாளர் அவர். ஆனந்த விகடன் சஞ்சிகையில் 2012இல் எழுத்தாளர் சமஸ் இவருடன் கண்ட நேர்காணல் இவ்வாறு முடிவடைகின்றது:





‘‘கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ஓர் எழுத்தாளராக இந்த வாழ்க்கை திருப்தி அளிக்கிறதா?’’





‘‘பெரிய புகார் ஒண்ணும் என்கிட்டே இல்லை. எப்போ கிடைக்கும் எப்போ போகும்னு தெரியாத வேலை, கைக்கும் வாய்க்கும் பத்தாத சம்பளம்னே வாழ்க்கை கழிஞ்சுட்டாலும் குடும்பம் எனக்கு நெருக்கடியைத் தரலை. எனக்கு நாலு பெண் பிள்ளைகள். ஒரு பையன். எல்லாரும் இன்னைக்கு நல்லா இருக்காங்க. காரணம்... என் மனைவி. எழுதுறவன் வாழ்க்கையோட நெருக்கடிகளைப் புரிஞ்சு நடத்துக்கிட்ட புண்ணியவதி. இன்னைக்கும் பணக் கஷ்டங்கள் விட்டுடலை. ரெண்டு புஸ்தகங்கள் எழுதிக்கிட்டு இருக்கேன். ஆனா, பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே?’’





பணம் , பணம் என்று வாழ்க்கையையே பணத்துக்காக வீணாக்குவோர் மத்தியில் 'பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே' என்பதை நன்கு விளங்கி, தன் ஆற்றலை, சமூகப்பங்களிப்பை சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த எழுத்தாளரான வாண்டுமாமாவின் நினைவுகளும் , அவரது படைப்புகளும் என்றென்றும் எம்முடனிருந்து வரும்.





-நன்றி வ.ந.கிரிதரன், 


http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2147:2014-06-14-03-59-50&catid=28:2011-03-07-22-20-27


வியாழன், 26 அக்டோபர், 2017

கண்ணா... சிங்கம் சிங்கிளாத்தான் வரும்...


கண்ணா... சிங்கம் சிங்கிளாத்தான் வரும்... இந்த மாதிரி டயலாக் எல்லாம் சினிமாவுக்கு ஓ.கே... ஆனா சிங்கிளா டிராவல் பண்ணினா எவ்வளவு அக்கப்போர் என்று இப்போதும் தனியாக பயணம் செய்து அவதிப்படுபவர்களுக்கு தெரியும். தனியா போனா யாரும் அடிக்க மாட்டாங்க... உதைக்க மாட்டாங்க... ஆனா "எக்ஸ்க்யூஸ்மீ... சாரி ஃபார்த டிஸ்டபன்ஸ்... கொஞ்சம் மாறி உட்காருரீங்களா?" இப்படி சிலர் கேட்பாங்க. இது முதல் ரகம்.



இன்னும் சிலர் "எல்லாரும் இப்படி தனித்தனியா உட்கார்ந்துகிட்டா நாங்க எங்கதான் உட்காருறது... மாறி உட்காருங்க" என்று அதிகார தோரணையுடன் சொல்வார்கள்... லக்கேஜ் அதிகமா இருக்கும்போது பரவாயில்லை. கையில ஒரு சின்ன பை தவிர வேற எதுவும் இல்லாதப்ப கூட இப்படித்தான் நடந்துக்குவாங்க. (நானெல்லாம் லக்கேஜ் அதிகமா இல்லாத நேரத்துல இப்படி சேர்ந்துதான் உட்காரணும்னு அடம் பிடிக்கிறதில்லை.)



நாம் அப்படியே பார்வையை ஓட்டினோம் என்றால் இரண்டு மூன்று இடங்களில் பெண்கள் பக்கத்தில் ஒரு இருக்கை காலியாக இருக்கும். அங்க அவர் மனைவியை உட்கார சொல்லிட்டு, இவர் நம்ம பக்கத்துல உட்காரலாம். ஆனா செய்ய மாட்டாங்க. திருமணம் செய்யும்போது எந்த சூழ்நிலையிலும் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருப்போம்னு புரியாத பாஷையில புரோகிதர் சொல்லிக்கொடுத்த சங்கல்பத்தை பிரிக்க வந்த ஆளாவே நம்மள பார்ப்பாங்க. இது ரெண்டாவது ரகம்.





இன்னும் சிலர் இருப்பாங்க. நேரே கண்டக்டர்கிட்ட போய், "சார்... நான் நாகர்கோவில் போறேன்... கோயம்புத்தூர் போறேன்... அவ்வளவுதூரமெல்லாம் தனித்தனியா உட்கார்ந்து போக முடியாது என்று முறைப்பார்கள். உடனே கண்டக்டர் வந்து பார்த்து தனியாக இருக்கும் பாச்சுலர்சைதான் நகர்த்த பார்ப்பார்.





2010ஆம் ஆண்டில் சீசன் இல்லாத நேரத்தில் குற்றாலம் சென்றபோது வழியில் எனக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களை அப்போது வலைப்பூவில் பதிவிட்டிருந்தேன். இப்போது அவற்றை நான் பேசி வீடியோவாக பதிவிட்டிருக்கிறேன்...

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

மெர்சல் கதை பழைய படங்களின் காப்பியா?


எப்படி கதை எழுதுவது என்ற கேள்வி இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் விடை முழுவதுமாக கண்டறியாமலேயே இருக்க சாத்தியம் இருப்பதாகத்தான் தெரிகிறது. 



கே டிவி, சமூக வலைதளங்களைப் பார்த்தே படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையை அட்லீ விதைத்திருக்கிறார் என்று முகநூலில் ஒரு பதிவு பார்த்தேன். இது மாதிரி சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பிறகு பார்ப்போம்.



எழுத்தாளர் சுஜாதா ஒரு பேட்டியில், எல்லா எழுத்தாளர்களுமே ஒரே கதையத்தான் திரும்ப திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். உடனே, நான் எழுதியிருக்கும் பெரும்பாலான கதைகளை மனதில் ஓட்டிப்பார்த்தேன். அட... ஆமா, நாம கூட பெரும்பாலான கதைகளில் ஒரே கருவைத்தான் அடிப்படையா வெச்சிருக்கோம்னு தோணுச்சு.









ஏன் இப்படி எழுதிகிட்டு இருக்கோம்னு யோசிச்சா இந்த ஒரு கருவை வெச்சு ஒரு கதையிலயே முழுசா எல்லாத்தையும் சொல்ல முடியாது. இன்னும் ஆயிரம் கோணங்களில் ஐயாயிரம் சிறுகதைகள் கூட எழுத முடியும் என்று என்னையறியாமல் என் ஆழ்மனது நம்பிக்கொண்டிருப்பது புரிந்தது.



எழுத்து துறையில் ஜாம்பவான்கள் பலரும் கூட இந்த மன எண்ணத்தில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. சுஜாதாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சுஜாதா எழுதிய ஆரியபட்டா என்ற நாவலைப் படித்தேன். நூலின் முன்னுரையில், தமிழில் எழுதப்பட்ட இந்த நாவலை திரைக்கதையாக மாற்றி கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், சௌந்தர்யா நடித்து வெளிவந்ததாம். தமிழில் எழுதிய கதையும் கல்கி வார இதழில் 1998ல் தொடர்கதையாக வெளிவந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.



நல்ல திறமைசாலியான விஞ்ஞானி பல வகையிலும் அவமானப்படுத்தப்படுகிறார். அவரது கண்டுபிடிப்புகளுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய பாராட்டைக்கூட அடுத்தவர் தட்டிக்கொண்டு சென்று விடுவதால் கோபம் எல்லை மீறிப்போய் நாட்டை அழிக்க நினைக்கும் தீவிரவாத கும்பலுக்கு விலைபோய் விடுகிறார். உண்மை தெரிந்ததும் விஞ்ஞானியின் மனைவியே நாட்டைக்காப்பாற்ற வேண்டி கணவனை சுட்டுக்கொன்று விடுகிறார்.



இந்த ஒன் லைனை படிப்பவர்களுக்கு சிவாஜிகணேசன் நடித்த அந்த நாள் படமே நினைவுக்கு வரலாம். அந்த படமே ரோஷமான் என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்வார்கள்.



ஆரியபட்டா நாவல் திருமகள் நிலையம் 2000ல் நூலாக வெளியிட்டு 2013ல் நாலாம் பதிப்பு வெளிவந்துள்ளது. 150 பக்கம். சுமார் 130 பக்கங்களுக்கு பிறகுதான் கொலை செய்தவர் விஞ்ஞானியின் மனைவிதான் என்ற உண்மை வாசகர்களுக்கு புரியவந்தது. இன்னும் சிலருக்கு, கொலை நடந்த நேரத்தில் அவரது மனைவி வெளியூரில் இருப்பதாக சொல்லப்பட்டதுமே அவர்தான் கொலையாளி என்று யூகித்திருப்பார்கள். நான் கொஞ்சம் லேட்.



(சர்க்கரை)ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூதான் சர்க்கரை என்று சொல்வார்கள். உலகம் முழுவதும் உள்ள படைப்புகள் இணைய உதவியினால் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து விடுவதால் காப்பி, தழுவல் எல்லாம் முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு விடுகின்றன.



சினிமா ரசிகர்கள் எல்லாரும் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். நான் பார்த்த சில படங்களை வைத்து என்னுடைய பார்வையை சொல்கிறேன்.



80கள் முதல் வெளிவந்த ரஜினிகாந்த் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்... பணக்கார நண்பனால் அவமானப்படுத்தப்படுவார். அல்லது அங்கே வேலைக்காரனாக இருப்பார். கடைசியில் பார்த்தால் அந்த சொத்து முழுவதற்கும் அவர்தான் சொந்தக்காரனாக இருப்பார்.



விஜயகாந்த் படங்களை எடுத்துக்கொண்டால் நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் அவரது கதாபாத்திரங்களின் முக்கிய வேலையாக இருக்கும்.



இயக்குனர்களை எடுத்துக்கொண்டாலும் இப்படி நிறைய சொல்லலாம். விக்ரமனை எடுத்துக்கொண்டால் ரொம்ப நல்லவங்க, குடும்பம், நட்புக்காக நம்ப முடியாத அளவுக்கு தியாகம் செய்யுவாங்க.



ஆர்.கே.செல்வமணியை எடுத்துக்கிட்டா அவ்வப்போது நாட்டை உலுக்கிய செய்திகள்தான் அவர் படங்களுக்கு ஒன் லைன் ஆக இருக்கும். (புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், குற்றப்பத்திரிக்கை இன்னும் பல.)



பொதுவா ஹீரோ சாதாரண ஆளா இருந்து மன பலம், உடல் பலத்தால் மட்டுமே சர்வ சக்தி படைச்ச வில்லனை எதிர்க்குற மாதிரி படம் எடுத்துகிட்டிருந்தாங்க. ரஜினியின் பல படங்களில் கூட இதுதான் கதையா இருக்கும். ஆனா விஷாலை எடுத்துக்குங்க, வருமான வரித்துறை அதிகாரிகள் மேல் அவருக்கு என்ன பிரியமோ தெரியல. செல்லமே படத்துல இன்கம்டாக்ஸ் ஆபீசரா (அதாவது கதா நாயகனுக்கு வலுவான பின்புலம் இருப்பதாக) வருவார். சண்டக்கோழி உள்பட பல படங்களில் வில்லன் இவரை விட பலம் குறைஞ்சவனாவே இருப்பாங்க.



சுந்தர்.சி படத்தை எடுத்துக்கிட்டா எல்லா படங்களிலும் உருட்டுக்கட்டையால் ஒருத்தர் மண்டையில இன்னொருத்தர் 'டொம் டொம்' என்று அடிக்கும் காட்சிகள் கன்ஃபர்ம்.



இப்படி எந்த படைப்பாளியை எடுத்துகிட்டாலும் ஏதோ ஒரு அடிப்படை விஷயம் அவருடைய எல்லா படைப்புகளிலும் தொடருவதை காணலாம்.



பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அப்படின்னு இயக்குனர் பேர் வரும்போது, புத்தகத்துல எழுதுனா அது கதை. படமா எடுத்தா திரைக்கதைன்னு நான் சின்ன புள்ளையா இருக்குறப்ப நினைச்சுக்குவேன்.



ஒரே கதையை எப்படி சொல்றோம்னுங்குற திறமையினால பல விதமா சுவாரஸ்யமா சொல்ல முடியும். அதுதான் திரைக்கதை அமைக்கும் விதம்.



இசையைப்பொறுத்தவரை ச ரி க ம ப த நி அப்படின்னு ஏழு ஸ்வரம்தான். அதை எப்படி பயன்படுத்துறோம்னுங்குறதை பொறுத்துதான் இசை ரசிகனை கவரும்னு சொல்லுவாங்க.



கதைகளும் அப்படித்தான். கதைகளின் மொத்த வகையே சில பிரிவுகள்தான். திரைக்கதை அமைக்கும் சாமர்த்தியத்தில்தான் எல்லாம் இருக்கிறது என்று உலகம் முழுவதும் நம்புகிறார்கள்.



இப்போது ரசிகர்கள் என்பவர்கள் இயக்குனர், ஹீரோ, கதாசிரியர்களை விட அதிகமா படிக்கிறாங்க, உலகப்படம் பார்க்குறாங்கன்னு உண்மை புரிந்தவர்கள் படம் பார்க்கும்போது ரசிகனுக்கு போரடிக்குற காட்சிகளை வெச்சு, இந்த சீன் 1936லயே வந்துடுச்சுன்னு ஸ்டேட்டஸ் போட வைக்க மாட்டாங்க. படம் எடுப்பவர்கள் அதிகமாகவே மாத்தி யோசிக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது.



அது சரி... மெர்சல் படத்தின் கதை விஜயேந்திர பிரசாத் (இயக்குனர் ராஜமௌலியின் அப்பா) என்று சொன்னார்களே... ஆனா பழைய படங்களை நினைவுபடுத்துகிறதே... நீ என்ன சொல்ல வர்ற? இந்த கதை காப்பியா, இல்லையா என்று கேட்பது புரிகிறது.



படம் பார்க்குறவங்களுக்கு நான் சொல்றது சின்ன விஷயம்தான்.



பம்மல் கே.சம்மந்தம் படத்துல கமல் அடிக்கடி சொல்ற டயலாக்: பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.



இந்த வசனத்தை ரசிகர்களை நோக்கி சொல்லவேண்டும் என்றால் படம் எடுப்பவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது.



இயக்குனர் விக்ரமன் "நான் பேச நினைப்பதெல்லாம்" அப்படின்னு ஒரு புத்தகத்துல, ரசிகன் ஒருபடத்தை முழுசா பார்த்துட்டு வந்து, ஆயிரம் குறை சொல்லலாம். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சியிலேயே நெளியக்கூடாதுன்னு சொல்லியிருப்பார். இதை மனதில் கொண்டால் நல்லது.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

வேலை தேடுவோரே... இளம் புயல்களே... உஷார்...


முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல, அரசு அலுவலக ஊழியர்களில் சிலரும் இப்படி ஏமாற்றலாம்...



வங்கி பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பற்றி முதலில் பார்ப்போம்...



நமக்கு போன் செய்யும் மர்ம நபர் நம்மிடமே ஆதார் எண், அலைபேசி எண் அது இது என்று எதையாவது கேட்டு அதன் மூலம் அக்கவுண்ட்டில் உள்ள மொத்த பணத்தையும் ஸ்வாஹா செய்யும் போக்கு அடிக்கடி நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து படித்தவர்கள், உலகம் தெரிந்தவர்கள் கூட அவர்களை அறியாமல் ஏமாந்துவிடுவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.



எனக்கு இப்படி எல்லாம் போன் வராது. ஏன்னா, சிலிண்டர் மானியம்னு அக்கவுண்ட்ல ஏறும் சொற்ப தொகையும் வங்கி அபராதம் என்று துடைக்கப்பட்டுவிடும்போது முகம் தெரியாத ஃப்ராடுகள் எடுக்குறதுக்கு பணம் எங்க இருக்கும். அதனால நான் எப்பவும் எஸ்கேப்தான்.



நண்பர் ஒருவர் குடும்பஸ்தர். வருமானத்துக்கு சிரமமாக இருக்கிறது என்று செய்து வந்த தொழிலை மனைவியை கவனிக்க சொல்லிவிட்டு சென்னையில் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து விட்டதாக சொன்னார்.



இது என்ன புது கதையா இருக்கு...



கோட்டையும் இல்ல... கொடியும் இல்ல... அப்பவும் நான் ராஜான்னுங்குறது மாதிரி, ஒரு இண்டர்வியூ இல்ல, அப்ளிகேஷன் போட்டதா தெரியல... அப்புறம் எப்படி வேலைன்னு கேட்டேன்.



தெரிஞ்சவங்க மூலமா வேலைக்கு சேர்ந்துருக்கேன். ரெண்டு வருஷம் முடிஞ்சதும் நிரந்தரமாக்கிடுவாங்களாம் என்றார்.



அரசு நிதி உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள்ல நிர்வாகம் ரேட் பேசி வாங்கிட்டு போஸ்டிங் போடுறது வழக்கம். சில அரசு அலுவலங்கள்ல அவ்வப்போது காலிப்பணியிடம் எப்படி நிரப்புறாங்கன்னு யாருக்கும் தெரியாத ரகசிய பட்டியல்ல இருக்கும். ஆனா நீ சொல்றத பார்த்தா, அவங்க வேலை நெருக்கடி முடிஞ்சதும், இவ்வளவு நாள் என் கைப் பணத்துல இருந்துதான் சம்பளம் கொடுத்தேன். எங்களால தாக்குப்பிடிக்க முடியாது. கஷ்டப்பட்டும் நாங்களே இனி இந்த வேலைய பார்த்துக்குறோம்... சாரி தம்பின்னு உன்னைய வெளியில அனுப்பிட்டு உன்னை மாதிரி அடுத்த அடிமையை அடுத்த வருஷம் தேடிக்குவாங்க என்று எச்சரித்தேன்.



அப்படி எல்லாம் இல்ல நண்பா. எனக்கு சம்பளம் கவர்மெண்ட் கிட்ட இருந்துதான் வருதாம்.



எவ்வளவு வந்துச்சு...



இன்னும் ஒரு மாசம் ஆகலை...



சரி... வாங்கினதும் சொல்லு.

******

தீபாவளிக்கு ஊருக்கு வந்திருப்பானே என்று போன் செய்தேன்.



நீ சொன்னது சரிதான். இன்னும் கவர்மெண்ட்ல இருந்து ஆர்டர் வரலை. என் பணத்தைதான் தர்றேன் என்று சொல்லி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாராம் அந்த அலுவலர். சென்னையில் 1 1/2 மாதம் தங்கி வேலை பார்த்தவனுக்கு கிடைத்த தொகை இது.



காலங்கள் மாறும்...

கோலங்கள் மாறும்...

காட்சியின் கருத்து மட்டும் மாறாதோ....



--------------------------------------------------------------------------------------------

இனி தொடர்வது பழைய பதிவில் ஒரு பகுதி...



சில தினங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் வந்து என்னுடைய புதிய செல்போன் நம்பர் அவனிடம் இல்லாததால் அம்மாவிடம் பேசியிருக்கிறான்."எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்-ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.



எங்க அம்மாவுக்கா, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட சொன்னாங்க. எனக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.



போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நான் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம சாப்பிட மாட்டாங்கன்னு எனக்கு தெளிவா புரிஞ்சது.



அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி என் அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் அந்த நண்பனை பார்க்கப்போனேன். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் எனக்கு கிடையாதே.





Image Credit: womenseducationproject.org

அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.



"ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொன்னார்.



அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. என்னுடைய திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்தேன்.ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தா  முப்பது வேலை நாள் தேவைப்படும்.



"எவ்வளவு சார் தருவீங்க.வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேட்டேன்.



"இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசினார் அந்த ஆபிசர்.



எனக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.



நான் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டேன். ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நானும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. எனக்கு தமிழ்-ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.



எனக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சுகிட்டேன். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் பார்த்திருக்கேன்.



சில பழமைவாதிங்க  புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில மொள்ளமாறித்தனமெல்லாம் செய்துகிட்டு இருப்பாங்க.



இப்ப இரண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு இடத்துல பகுதிநேரப்பணிக்கு சேர்ந்துருக்கேன். அந்த நிறுவனத்துல பத்து வருஷமா பொழுதை ஓட்டிகிட்டு இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், அடிமட்ட வேலையா நினைக்குற போஸ்டிங்குக்கு வர்ற ஆளுங்களை எதுவும் சொல்றது இல்லை. கொஞ்சம் படிச்சுட்டு கம்ப்யூட்டர் அறிவோட வர்ற ஆளுங்களை சம்பளம் எதுவும் ஒழுங்கா கிடைக்காதுன்னு சொல்லி பயமுறுத்தி நாலே நாள்ல விரட்டிகிட்டே இருந்தாங்க.



அலுவலகத்தை எப்படியோ டெவலப் செய்திருக்கலாம். நானும் வளரணும், நிறுவனமும் வளரணும்னுங்குற கொள்கை என்னுடையது. ஆனா பலருக்கு அந்த எண்ணம் இல்லை. முதலாளி அல்லது மேலதிகாரியோட நான் நெருங்கிடுவேனோனுன்னு பயத்துல என்னைப் பத்தி நிறையவே வத்தி வெச்சுடலாம்னு முயற்சி நடந்துருக்கு. ஆனா நான் வேலைக்கு சேர்ந்த ரெண்டே நாள்ல வேட்டு வெக்கிற ஆளுங்களை கவனிச்சதுல அவங்க எந்த எந்த விஷயத்துல பிரச்சனை பண்ணுவாங்கன்னு புரிஞ்சுகிட்டு என்னோட நடவடிக்கைகளை அமைச்சுகிட்டதால  ஒண்ணும் பண்ண முடியாம தவிக்கிறாங்க.



ஆனா ஒரு விஷயம். இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யுற இடத்தையும் உருப்புட விட மாட்டாங்க. கூட வேலை செய்யுறவனையும் காலி பண்றதுலயே கவனமா இருப்பாங்க.



வேலை பார்த்து செட்டிலாகணும்னு நான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்குறது சென்னை அல்லது கோவைதான். பார்ப்போம். எந்த ஊர் கொடுத்துவெச்சிருக்குன்னு.



எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.



பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நான் எஸ்கேப். மறு வருஷம் என்ன செய்வாங்க.



"சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.



முதன் முதலில் இந்த பதிவு எழுதப்பட்டது - 25-மார்ச்-2010

வியாழன், 19 அக்டோபர், 2017

5 வருஷத்துக்கு முன்னால மோட்டல்களோட இந்த படத்தை ஏன் ஒப்பிட்டிருக்கேன்?



முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற அழுத்தமான படங்களைக் கொடுத்த இயக்குனர் மகேந்திரன், தன்னுடைய ஒரு புத்தகத்தில், ''எப்படி படம் எடுத்தாலும் அதற்கு ஒரே உழைப்புதான். அப்புறம் ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு திரைக்கதையில் சொதப்பி ரசிகர்களையும் ஏமாற்ற வேண்டும். எல்லாமே நல்ல படங்களாக எடுத்துவிடவேண்டியதுதானே'' என்று குறிப்பிட்டிருந்தார்.


(2012ல் வெளியான இந்த பதிவுக்கு அப்போது வைத்த தலைப்பு: சகுனி - ரோட்டோர மோட்டல்கள் - ஓர் ஒப்பீடு)






எவ்வளவோ பேர் வாய்ப்பு கிடைக்காமல் அழுத்தமான, அதிரடியான கதைகளுடன் சுற்றிக்கொண்டிக்கும்போது கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பவர்களை என்ன சொல்லலாம்?



விவேக் இண்டர்வியூவிற்காக திருவான்மியூர் செல்லும்போது டேக் டைவர்ஷன் என்று ஆளாளுக்கு திருப்பி விட்டே அவரை திருப்பதிக்கு அனுப்பிவிடுவார்கள்.



அதே போல் இந்தப் படத்தின் இயக்குனரும் நல்ல கதை, திரைக்கதையுடன் தான் வந்திருப்பார் என்பது என் யூகம். தமிழ் சினிமாவின் சாபக்கேடு அவரையும் விடுமா? எத்தனை பேர் அவரது திரைக்கதையை படித்து டேக் டைவர்ஷன் என்று ரிவிட் அடித்தார்களோ?



சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு குறும்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். போலீசாக வேண்டும் என்ற கனவுடன் பள்ளியில் படிக்கும் சிறுவன் அவன் குடும்ப சூழ் நிலை காரணமாக வீட்டு வேலைக்கு செல்வான். அங்கே அந்த வீட்டு முதலாளியம்மாவால் அவன் திருடனாவதுதான் கதை.



21 காட்சிகள்தான். அதையே எங்களால் நினைத்தபடி எடுக்கமுடியவில்லை. காரணம் பைனான்ஸ். பணப் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு காட்சியிலும் காம்ப்ரமைஸ் செய்து செய்து எப்படியோ எடுத்து முடித்தோம். அவ்வளவு சிக்கல்களுக்கு காரணம், குறும்படத்தை அப்போது மார்க்கெட்டிங் செய்வது ரொம்பவே சிரமம்.(இப்போதும் சில விதிவிலக்குகள்தான் உண்டே தவிர, வேறு ஒன்றும் பெரிய மாற்றமில்லை).



ஆனால் சகுனி, 3 போன்ற படக்குழுவினருக்கெல்லாம் என்ன குறை? அது சரி. காரணம் கேட்டால், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்...இல்ல...ஒவ்வொரு சிரமம்னு ஒரு கதையை சொல்லுவாங்க.



கடைசியா முட்டாளா ஆகுறது யார் தெரியுமா? ரசிகன்தான். படம் தேறாதுன்னு தெரிஞ்சுதானோ என்னவோ 1150 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணியிருக்காங்க. இப்படி ரிலீசாகுற படங்களோட மவுத் டாக், அல்லது விமர்சனம் படித்து படம் பப்படம்னு (சுஜாதா உபயம்) தெரிஞ்சுக்குறதுக்குள்ள லாபமே பார்த்துடுறாங்க.



தேசிய நெடுஞ்சாலைகள்ல இருக்குற மோட்டல்கள்ல 5 ரூபா பொருளுக்கு 20 ரூபாய் விலையை சர்வ சாதாரணமா சொல்லுவாங்க. ஏன்னு கேட்டா உருட்டுக்கட்டை அடி இலவசம். சமீப காலமா படங்கள் வெளிவர்றதைப் பார்த்தா இந்த மோட்டல் நிர்வாகத்துக்கும் சினிமா வியாபாரத்துக்கும் அடிப்படை தத்துவத்துல பெரிய வித்தியாசமே இல்லை.



5 கோடிரூபாய் கூட வசூல் செய்யாத அளவுக்கு திரைக்கதை அமைச்சு உருவாக்கியிருக்குற படத்தைப் பத்தி இயக்குனர், நடிகர், தயாரிப்பாளருக்கு நல்லா தெரிஞ்சுருந்தும் விஷயம் புரியாம வந்து சிக்குற வினியோகஸ்தர்கள் தலையில 20 கோடி ரூபாய்க்கு வித்துடுவாங்க.





இந்த வினியோகஸ்தரும் விவரம் புரியாம வர்றதில்லை. இளிச்சவாய் ரசிகர் ஏமாந்தா 40 கோடி ரூபா வசூலாயிடாதான்னு நப்பாசை. இப்படி ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் ஒவ்வொருத்தரோட பேராசைதான் நஷ்டத்தை கொடுக்குது. இதுல யாரை குறை சொல்றது.



ஏதோ ஒரு விமர்சனத்துல படிச்சேன். ஏன் ஓடுச்சுன்னு தெரியாம கலகலப்பு ஓடுன அளவுக்கு கூட இது ஓடாதுன்னு எழுதியிருந்தாங்க.



ஒரு உதாரணத்துக்கு சொல்றேன். கலகலப்பு சாதாரண நடிகர்கள், (அதிக ஸ்டார் வேல்யூன்னா அந்த படத்துல அஞ்சலியை சொல்லலாம்.) ஜாலி காமெடின்னு 2 கோடியில படமெடுத்து 3 கோடிக்கு வித்துருப்பாங்கன்னு வெச்சுப்போம். (யாரும் புள்ளி விவரத்தோட வந்துடாதீங்கப்பா...ஒரு உதாரணத்துக்குதான் சொன்னேன்.) இந்தப்படம் பெரிய அளவுல யாரையும் ஏமாத்தியிருக்கப்போறது இல்லை.



ஆனா சகுனி, 3 மாதிரியான படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மண்ணைக்கவ்வுறதுனால எவ்வளவு பேருக்கு பண நஷ்டம். நான் சாதாரண ரசிகர்களை சொன்னேன். இந்த 150 ரூபா டிக்கட் பலருக்கு ஒரு நாள் சம்பளமா கூட இருக்கலாம். (ஒரு நாள் சம்பளத்தை அப்படியே படம் பார்க்க செலவழிக்க நினைச்சதுக்கு இன்னும் மோசமான மொக்கை படமா எடுத்து உடுங்க. படம் பார்க்குற ஆள் நாக்கை புடுங்கிட்டு சாகட்டும்)



ஜாகிர்கான் (ஐபிஎல் நடந்ததால லேட்டஸ்ட்டா இந்தியா டீம்ல ஆடுன பௌலர் பேர் கூட மறந்துடுச்சு. சாரி) ரன் ஏதும் எடுக்காம அவுட் ஆனா பல நேரத்துல பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அவர் விக்கெட்டை எடுத்து சமாளிச்சுடுவார்னு வெச்சுக்குவோம். கவுதம் கம்பீர், சுரேஷ்ரெய்னா, வீரேந்தர் சேவாக் மாதிரி ஆளுங்க ஓப்பனிங் இறங்கி வாத்து முட்டை போட்டா எவ்வளவு கோபம் வருது (ஏமாந்த ரசிகனுக்கு).



அதேமாதிரிதான். நல்ல ஸ்டார் வேல்யூவோட எக்கச்சக்கமா எதிர்பார்த்து போய் படம் பார்க்க உட்காந்ததும் இப்ப கூட டிவியில அடிக்கடி பார்க்குற 10 வருஷத்துக்கு முந்தைய படம் நினைவுக்கு வந்தா கோபம் வருமா வராதா?



நல்ல தரமான சேவையை கொடுத்து வாடிக்கையாளரை திருப்தி படுத்தி நாமும் நிறைய லாபம் சம்பாதிக்கணும்னு நினைக்குறதுதான் நல்ல வியாபாரத்துக்கு அழகு.



அதை விட்டுட்டு மோட்டல்கள், பஸ் ஸ்டாண்ட் கடைகள்ல செய்யுற மாதிரி மனோபாவத்தோட, படம் எப்படி இருந்தா என்ன, இளிச்சவாய் ரசிகர்கள் ரெண்டு நாள்ல முண்டியடிச்சுகிட்டு படம் பார்த்த பிறகு அது நல்லா இருந்தா என்ன இல்லாட்டி என்ன என்ற மனோபாவத்துடன் இருந்தா ஒரு நாள் இன்னொரு விஷயம் நடந்துடும்.



அதாவது, இவய்ங்க இப்படித்தான் பில்ட்அப் குடுப்பாய்ங்க மாப்ளே. ரெண்டு நாள் ஆகட்டும் பார்க்கலாம்னு பேச ஆரம்பிச்சா இப்படி 1000 ரூபாய்க்கு பில்ட் அப்  பண்ணிட்டு 100 ரூபாய்க்கு படமெடுக்குறவங்களுக்கெல்லாம் ஆப்புதான்.



அப்படி எல்லாம் நடந்துடுமா? எப்படி நடக்கும். நம்ம நாட்டு வாக்காளர்களும், ரசிகர்களும் முழிச்சுகிட்டதா சரித்திரமே இல்லையே. இதை நம்பிதானே பலருக்கு இங்க பிழைப்பு ஓடுது.



ஆனா என்னால ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம் இருக்குங்க. மொக்க படம்னு முதல்லேயே தெரிஞ்சுட்டா மூணாவது நாளே படம் பார்க்க ஒருத்தன் கூட வரமாட்டான்னு தெரிஞ்சுகிட்டு ஒரே நேரத்துல ஆயிரம் ரெண்டாயிரம்னு அதிக எண்ணிக்கையில தியேட்டரை புடிச்சு ரிலீஸ் பண்றதுக்கு ஒரு காரணம் சொல்லுவாங்க பாருங்க...



''திருட்டு விசிடியில படம் பார்த்துட்டா தியேட்டருக்கு வரமாட்டாங்க. அதனாலதான் அதிக தியேட்டர்ல ரிலீஸ் பண்றோம்.'' -தாங்க முடியல சாமி.


***********



காலங்கள் மாறும்...


கோலங்கள் மாறும்...


காட்சிகள் எதுவும் மாறாதோ...





ஏன்னா 2012ல் எழுதுன இந்த பதிவுல தொகையை மட்டும் மாத்திகிட்டு படிச்சா வருஷ வித்தியாசமே தெரியாது போலிருக்கே...





புதன், 18 அக்டோபர், 2017

ஆத்தாடி... மெர்சல் படம் இம்புட்டு தியேட்டர்ல ரிலீசா?



வேலை இல்லாதவன் எதையோ புடிச்சு வெச்சி என்னவோ செய்துகிட்டிருந்தானாம். அந்த கதையா, இன்னைக்கு தினகரன் பேப்பர்ல திருச்சி ஏரியாவுல எத்தனை தியேட்டர்ல ரிலீஸ் என்று பார்த்தேன். ஐம்பதை தாண்டி போய்கிட்டிருந்தது. இன்னும் கூடுதலா இருக்கலாம், ஏன்னா திருச்சி சோனா காம்ப்ளக்ஸ்லயே மூணு ஸ்கிரீன்ல் திரையிடுறதா தினத்தந்தியில விளம்பரம்.





நெட்ல எல்லா ஏரியாவுலயும் மெர்சல் வெளியிடப்படும் தியேட்டர் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தேன்... என்னால எண்ணி சொல்ல முடியாது. குத்து மதிப்பா பார்த்தா தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டரை தாண்டும் போலிருக்கு. (அறு நூறுன்னா எவ்வளவு? அது நூறை எல்லாம் தாண்டி போயிடுச்சுப்பா...)





காலையில் 7 மணிக்கு கடைத்தெரு பக்கம் சென்றேன். திருவாரூர் தைலம்மை தியேட்டரில் (750 இருக்கைகள் இருக்கும். எக்ஸ்ட்ரா சேர் போடுவாங்களா, எத்தனை போடுவாங்கன்னெல்லாம் தெரியாது.) மூணு ஷோவுக்குரிய கூட்டம் வெளியில் நின்றது.













**********************************


செவ்வாய், 17 அக்டோபர், 2017

கிரிவலம் சென்றவர் மலையுச்சியில் இருந்து தவறி விழ என்ன காரணம்?



திருச்சி மாவட்டம், சஞ்சீவராயன் பெருமாள் கோவிலில் 2 அங்குலத்துக்கு குறைவாக விளிம்புகள் உள்ள சுவரில் கிரிவலம் வர முயன்ற நபர் தவறி விழுந்து மரணம் அடைந்ததற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்? 






தவறி விழுந்த நபருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.





இந்த தகவல் உண்மையா இல்லையா என்று நான் விவாதிக்கப்போவதில்லை.





ஆனால் அந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், குழந்தை இல்லை என்ற விஷயத்தால் இவ்வளவு ஆபத்தான நேர்த்திக்கடனை செலுத்த ஒரு நபர் துணிந்திருக்கிறார் என்றால் அந்த நபர் தன்னுடைய அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த சமுதாயத்தால் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கக்கூடும்?




பழங்காலத்தைப் போல் குழந்தை இல்லை என்றால் பெண்ணை கொளுத்தி விடுவது, விவாகரத்து செய்துவிடுவது, இரண்டாவது திருமணம் செய்வது போன்று கொடுஞ்செயல்கள் அவ்வளவாக நடைபெறுவதில்லை என்றாலும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மன உளைச்சலை தரும் வேலையை சமுதாயம் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது.





திங்கள், 16 அக்டோபர், 2017

தீப ஒளி



தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியில் உள்ளது திருமலை வீதி. பாதி தூரம் வரை அடுக்கு மாடிக் கட்டிடங்கள். அதைத் தாண்டி ஆற்றின் கரையை நெருங்க நெருங்க சாலையின் இரு புறமும் குடிசைப் பகுதிகள். செங்கல்வர், மண்வர், கீற்றுத்தடுப்பு, ஏன் சுவரே இல்லாமல் கூரை மட்டும் உள்ள வீடுகளும் (?) உண்டு. இந்தியாவின் சமத்துவத்தை இதில் அறிந்து கொள்ளலாம்.



















 மறுநாள் தீபாவளி. பலருடைய வீடுகளில் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டதற்கு அடையாளமாக பட்டாசு ஒலிகள் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தன. அந்த இருந்த நேரத்தில் திருமலை வீதியில் மண்வர், மண்தரையால் ஆன ஒரு வீட்டில் இருட்டும் நேரத்தில் விளக்கு வெளிச்சம் கூட இல்லாமல் இருந்தது. உழைத்த களைப்பு நீங்க வேண்டும் என்று குடிபானம் அருந்தி வந்த முனியப்பன், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அந்த வீட்டையே கலவரம் நடந்த கடைவீதியாக்கிவிட்டுப் போயிருந்தான்.


மயக்கம் தெளிந்த வளர்மதி மெள்ள கண்களைத் திறந்தாள்.








உடலில் எந்த பாகமும் மிச்சம் இல்லாமல் வலித்துக் கொண்டிருந்தது. தட்டுத் தடுமாறி எழுந்து அமர்ந்தாள். தரை முழுவதும் சோற்றுப் பருக்கைகள் சிதறிக் கிடக்க, பேராசிரியர் வீட்டில் இருந்து எடுத்து வந்த குழம்பு தரை முழுவதும் கொட்டி நாற்று நடத் தயாராக இருக்கும் வயல்போல் ஆகியிருந்தது. தீபாவளிக்காக என்று அவர்கள் கொடுத்திருந்த ஆடைகளும், பலகாரங்களும் முனியப்பனின் வன்முறையில் தப்பவில்லை.

நெற்றியில் வலி மிக அதிகமாகவே இருக்க, இடது கைவிரல்களால் லேசாகத் தடவிப் பார்த்தாள். எலுமிச்சைப்பழத்தின் ஒரு பாதியைக் கவிழ்த்து வைத்தது போல் வீங்கியிருந்தது. அவள் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து நிலைப்படியில் மோதியும் ஆத்திரம் அடங்காத முனியப்பன், கீழே தள்ளி கண்ட இடத்திலும் மிதித்துவிட்டு வெளியேறியது நினைவுக்கு வரவும் அவள் கண்கள் மீண்டும் கலங்கின.









ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தமிழ் திரைப்படத்துறையை லாபம் பெற வைப்பது எப்படி? பகுதி 2



முதலில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் ஆதிக்கம் பெருகாத காலகட்டத்தில் திரையரங்குகளில் படம் பார்ப்பது தொடர்பான எனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பார்ப்போம்.









1999 வரை திருவாரூரில் 5 தியேட்டர்கள் இருந்தன. மற்ற திரையங்கங்களை விட எனக்கு சோழாவில் படம் பார்ப்பதுதான் ரொம்ப பிடிக்கும். மொக்க படமாக இருந்தாலும் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் வெல்வட் துணியாலான திரை மேலெழும்பும்போது ஒரு மியூசிக் போடுவார்கள். பாடல் நிறுத்தப்பட்டு அந்த மியூசிக் கேசட் போட்டவுடன் தியேட்டர் பணியாளர்கள் பக்கவட்டுக்கதவுகளுக்கு முன்னால் இருக்கும் ஸ்கிரீனை இழுத்துவிட்டு அரங்கத்தின் கதவுகளை மூடுவார்கள். அப்போது ஸ்கிரினில் மாட்டியிருக்கும் வளையம் கதவுகளுக்கு மேலே இருக்கும் இரும்பு குழாயில் உரசும் சத்தம் கூட கேட்பதற்கு ஆசையாக இருக்கும்.



 வெண்திரைக்கு முன்னால் உள்ள வெல்வெட் ஸ்கிரீன் 5 அடி உயரம் மேலெழும்புவதற்குள் தியேட்டர் சோழா உங்களை வரவேற்கிறது என்று சிலைடு போடப்படும். திருவாரூர் புகழாக சொல்லப்படும் மனுநீதி சோழனை மனதில் கொண்டு, மாடு ஆராய்ச்சி மணி அடித்து நீதிகேட்பதை ஸ்டில்லாக வைத்திருப்பார்கள். முழுவதும் படிக்க...





சனி, 14 அக்டோபர், 2017

உலகம் உன் வசம்


வாசிப்பில் எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் ஆர்வம் உண்டு. அப்படி சமீபத்தில் படித்த புத்தகம் "உலகம் உன் வசம்.". இதன் ஆசிரியர் சோம.வள்ளியப்பன்.



சிலர் பக்கத்து வீடு, எதிர் வீட்டில் இருப்பவர்களிடம் கூட பேச மாட்டார்கள். வெளி உலகத்திடம் இப்படி தொடர்பே இல்லாமல் இருக்கிறார்களே... அவர்களால் எப்படி இருக்க முடிகிறது என்று யோசித்திருக்கிறேன். இந்த புத்தகம் படித்த பிறகு மனிதன் அவன் குடும்பத்தார்களிடம் பேசாமலிருக்கலாம், பக்கத்து வீடு, எதிர்வீடு ஏன் மேலதிகாரிகளிடம் கூட பேசாமல் இருக்கலாம். ஆனால் யாராவது ஒருவரிடம் கூட பேசாமல் ஒருவன் இருந்தால் என்ன ஆகும் என்பதை மறைமுகமாக இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே புரிந்து கொண்டேன்.



 ஒன்று கிடைக்காதபோதுதான் அதன் அருமை தெரியும் என்பது எல்லா விஷயங்களுக்கும் பொருத்தமாகத்தான் தெரிகிறது. புத்தகத்தை பற்றியும் அதில் உள்ள விஷயங்களில் எனது அனுபவமும் வீடியோவாக...







செவ்வாய், 10 அக்டோபர், 2017

தமிழ் திரைப்படத்துறையை லாபம் பெற வைப்பது எப்படி? - பகுதி 1


தமிழ் சினிமாத்துறையில் இருப்பவர்கள் அனைவரும் நன்றாக இல்லை என்றாலும் அதனால் புகழும் செல்வமும் பெற்றிருப்பவர்கள் ஏராளம் உண்டு. ஆனால் தமிழ்த்திரைப்படத்துறை நன்றாக இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பினால் இருக்கிறது என்று பதில் சொல்ல முடியவில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை சிலர் ஏற்றுக்கொள்ள மறுப்பதால்தான் தமிழ் திரைப்படத்துறை தடுமாறிக்கொண்டிருக்கிறது.



அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?



முடியும். தயாரிப்பாளர், நடிகர்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள், ரசிகர்கள் என்று பலரும் சேர்ந்த கூட்டு முயற்சிதான் திரைப்படத்துறை. திரைப்படத்துறை இன்றைய நிலையில் மிகவும் ஆபத்தான சூழலில்தான் இருக்கிறது. அதற்கு திரைப்படத்துறை சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் சில மாற்றங்களை ஏற்றுகொண்டாக வேண்டும். அவற்றைப் பற்றி பார்த்து விட்டு கடைசியாக வரிவிகிதம் பற்றி அரசுக்கு என்ன வேண்டுகோள் வைக்க வேண்டும் என்பதைப்பற்றியும் பார்க்கலாம்.



நேரடியாக ஆள் மூலம் தகவல் பெற்றது முதல் தபால், தந்தி, பேக்ஸ், மொபைல், மின்னஞ்சல், வீடியோ சாட்டிங் என்று தகவல் தொடர்பு நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் பெற்று மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது.



எஸ்.டி.டி பூத்துக்கு சென்று போன் பேசிய காலம் போய், மொபைல் போன் 500 ரூபாய்க்கும் கிடைக்கிறது. 50 ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது.





புடவை, வேஷ்டி, சட்டை, பேண்ட் 100 ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய் விலைகளில் கிடைக்கிறது.



கால்நடை, மாட்டு வண்டி, குதிரை வண்டியிலிருந்து தற்போது போக்குவரத்துக்கு சைக்கிள், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், பேருந்து, ரயில் வண்டி, கப்பல், விமானம் என்று நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப பயன்படுத்துகிறோம்.



இப்படி நம் சமூகத்தில் பலவற்றைப் பற்றி உதாரணம் காண்பித்துக்கொண்டே செல்லலாம்.



எல்லாவற்றிலும் நுகர்வோரின் வசதி, செலவழிக்கும் தன்மை உள்ளிட்டவைகளுக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுக்கும் வழிகள் இருக்கும்போது, திரைப்படங்களை மட்டும் திரையரங்கங்களில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைப்பது சரியாக இருக்க முடியுமா?



25 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலை நம் நாட்டில் பரவும் முன்பு பொழுது போக்கு என்றால் திரைப்படம், ஆர்க்கெஸ்ட்ரா, ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மட்டும்தான்.



இப்போது தினமும் 24 மணி நேரமும் தொலைக்காட்சியிலும், இணையத்திலும், ஸ்மார்ட்போனிலும் சினிமா, பேச்சு, பாட்டு அது இது என்று வீடியோக்கள் கிடைக்கும்போது மூன்று மணிநேரம் படம் பார்க்க குடும்பத்துடன் வருபவர்கள் குறைந்தது 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் எப்படி சரியானதென்று கூற முடியும்?



அரசு நினைத்தால் திருட்டு சி.டி, திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வது ஆகியவற்றை முற்றிலும் தடுத்துவிடலாம். அப்படி தடுத்துவிட்டால் கூட தியேட்டர்களுக்கு கூட்டம் வரும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கட்டணம் அதிகம், படம் சரியில்லாமல் இருப்பது மட்டும் தியேட்டர்களில் கூட்டம் குறைய காரணம் இல்லை.



முதலில் திரையரங்கத்தில் படம் திரையிடப்படும் நேரத்தில் திரைப்படம் பார்க்க செல்லும் அளவுக்கு யாருக்கு நேரம் கிடைக்கிறது?



வேலையில்லாதவர்கள், வகுப்பை புறக்கணித்துவிட்டு வரும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் போன்ற மிகச் சிலர்தான் நேரம் கிடைக்கப்பெற்றவர்கள்.



ஏனென்றால் தற்போது எல்.கே.ஜி மாணவர்களுக்கே காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஷெட்யூல் இருக்கிறது. மேலும் அரசுப்பணி, தனியார் பணி என்று எந்த துறையாக இருந்தாலும் பல்வேறு காரணங்களால் தினமும் பொழுது விடிவதற்கு முன்பே வீட்டை விட்டுக் கிளம்பி நள்ளிரவில் வீடு திரும்புபவர்கள் உண்டு. இன்னும் பலர் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட கடுமையாக உழைக்கிறார்கள்.



தயாரிப்பாளரே சி.டி. மற்றும் டிஜிட்டல் வடிவத்தில் படத்தை 50 ரூபாய்க்கு ரிலீஸ் செய்தால் ஒரு படத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் 4 நாட்களில் கூட பார்த்துவிடுவார்கள்.



இப்படி செய்தால் கோடி கோடியாக முதலீடு செய்து திரையரங்கங்கள் கட்டி வைத்திருக்கும் நாங்கள் என்ன செய்வது என்று திரையரங்கு உரிமையாளர்கள் கேட்கலாம். அதற்கும் இந்த தொடரில் எனது யோசனையை கூறுகிறேன்.



அதற்கு முன்பாக பல விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.




தொடரும்...


வெள்ளி, 6 அக்டோபர், 2017

சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற திருவாரூர்க்காரர்கள்




தமிழ் நாட்டைப்பொறுத்தவரை 1993ஆம் ஆண்டு முதல் செயற்கைக்கோள் ஒளிபரப்பில் தனியார் நிறுவனங்கள் இறங்கியபிறகு சிறுகதை, தொடர்கதை, குறு நாவல், நாவல் போன்றவற்றை குறைந்து கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. இப்போது அச்சு ஊடகமாக வெளிவரும் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் கூட பல்வேறு அரசியல் நிகழ்வுகள், சிறப்புக்கட்டுரை என்ற அளவில்தான் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றன. இதைப் பற்றி விவாதித்தால் வாசகர்கள் விரும்புவதில்லை. அதனால் கதைகளுக்கான ஒதுக்கீட்டை குறைத்துவிட்டோம் என்பதுதான் பத்திரிகைகளின் பதிலாக இருக்கிறது.









பல பத்திரிகைகள் சிறுகதைகள் பிரசுரம் செய்வதையே நிறுத்திவிட்ட நிலையில் கல்கி, தினமணி, தினமலர் போன்ற பிரபல இதழ்களும் சில பல சிற்றிதழ்கள், அமைப்புகளும் இன்னும் சிறுகதைப்போட்டிகளை அறிவித்து பல புதிய எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்கு வர காரணமாக இருக்கின்றன.





2017ல் தினமலர் வாரமலர் (திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம் பதிப்புகள்) நடத்திய போட்டியில் நான் கலந்துகொள்ளவில்லை. நான் ஏற்கனவே 2003ல் ஆறுதல் பரிசும், 2010ல் இரண்டாம் பரிசும் பெற்றிருக்கிறேன். தினமலர் மதுரை, சென்னை, கோவை, புதுச்சேரி பதிப்பில் 2007ஆம் ஆண்டு ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறேன். சில ஆண்டுகளாக நான் எழுதுவதில் சரிவர கவனம் செலுத்தாததால் என்னுடைய படைப்புகளில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதை என்னாலேயே உணர முடிகிறது. அதனால் இந்த ஆண்டு கலந்துகொள்ள தோன்றவில்லை.







கடந்த 01.10.2017ல் தினமலர்-வாரமலர் சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியாகியிருந்தது. ஆறுதல் பரிசு விபரத்தில் திருவாரூரை சேர்ந்த சுப ஸ்ரீவெங்கடேஸ்வரன், இந்திரா பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும், விளமல் முகவரியை சேர்ந்த லதா சங்கரலிங்கம் ஆக திருவாரூரைச் சேர்ந்த மூன்று பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள விபரம் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.





ஒரு சிறுகதை பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த எழுத்தாளர்கள் அத்துடன் தேங்கி விடாமல் தொடர்ந்து எழுதி சிறப்பிடம் பெற வாழ்த்துகள்.


 இந்திரா இ.ஆ.ப - சிறுகதை தொகுப்பு 60 பக்க சிறிய மின்னூல்








நான் எழுதியவற்றில் ஆறு சிறுகதைகளை மட்டும் தொகுத்து மின்னூலாக வெளியிட்டிருக்கிறேன். அதை இங்கு இலவசமாக பதிவிறக்கம்செய்து அனைவரும் படிக்கலாம், பகிரலாம்.