Search This Blog

குடும்பத்தில் குதூகலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடும்பத்தில் குதூகலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 7 - நிறைவுப்பகுதி - ஐம்பதாவது பதிவு

குளிர்பானம் வாங்கிக்கொடுத்தால்தான் மாப்பிள்ளை வெளியே வருவார் என்று சில குறும்புக்கார பெண்கள் சொல்லவும் ஆவேசமாக உள்ளே நுழைந்தது வெற்றிதான்.
"அட அறிவுகெட்ட வெண்ணை...கல்யாண ஏற்பாட்டை நாமதாண்டா செஞ்சுகிட்டு இருக்கோம்.இப்ப பொண்ணு வீட்டுல இருந்து பார்மாலிட்டிக்கு அஞ்சு பேர் வந்திருக்காங்க.அவ்வளவுதான்.இதுக்கு மெனக்கிடுறது எல்லாம் நானும் என் நண்பர்களும்தான்.இப்ப நான் போய் கூல்டிரிங்கஸ் வாங்கிட்டு வரணுமா...பிச்சுபுடுவன் பிச்சு...ஒழுங்கா புள்ளையா அடக்க ஒடுக்கமா ரெடியாகு...இல்லன்னா தூக்கிடுவோம்...எல்லாம் இவங்களால வந்தது.பெரும்பாலும் வில்லங்கம் உங்க கிட்ட இருந்து தான் ஆரம்பமாகுது.இவன் பாட்டுக்கு எதுவும் சொல்லாம கிளம்பியிருப்பான்.அவனை உசுப்பேத்தி எங்கிட்ட திட்டுவாங்க விட்டுட்டீங்கிள்ள..."என்று வெற்றி அந்த பெண்களையும் லேசாக கடிந்துகொண்டான்.

அவர்களில் ஒருத்தி,"அப்ப உன் கல்யாணத்தப்ப ஜமாய்ச்சுடுவோம்."என்றாள்.



"பிசாசுங்களா...நீங்க யாரும் ஆணியே புடுங்க வேணாம்.நான் கல்யாணம் முடிச்சு ஹனிமூனும் கொண்டாடிட்டுதான் உங்களுக்கெல்லாம் விஷயத்தை சொல்லுவேன்.தெண்டமா இவளுங்ககிட்ட பேசிகிட்டு இருக்காதடா.நமக்கு நேரமாச்சு."என்று மாப்பிள்ளை அழைப்புக்காக அன்புச்செல்வனை துரிதப்படுத்தினான்.
மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாணவேடிக்கையுடன் மாப்பிள்ளை - பெண் ஊர்வலம் திருமண மண்டபத்தை வந்து அடைந்தது.

ஒரு வயதான அம்மா,"டேய்...வெற்றி...ஊர்வலத்தை நீயும் உன் பிரெண்ட்சும் அமர்க்களப்படுத்திட்டீங்கடா."என்றார்.

"அடப்போங்க பாட்டி...இதுல ஒரு கிக்கே இல்ல...பொண்ணு வீட்டுல இதையெல்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தா அது ஒரு மாதிரி.ஆனா நாங்களே ஏற்பாடு பண்ணி இப்படி ஆட்டம் போடுறது காசு கொடுத்து ஆளுங்களை கூட்டிட்டு வந்து கட்சி மாநாடு நடத்துற மாதிரி இருக்கு."என்று அலுத்துக்கொண்டான்.

காயத்ரியின் கூந்தலுக்கு சந்தியாவின் தோழி மிக அழகாக ஒருவித அலங்காரம் செய்திருந்தாள். ஒளிப்பட ஆல்பத்தில் வரைகலைக்காக பயன்படுத்த காயத்ரியை வெவ்வேறு கோணங்களில் படம்பிடித்துக்கொண்டிருந்தது வெற்றியின் நண்பன்தான்.திடீரென சந்தியாவுக்கும் அவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கே வந்த வெற்றி,"இங்க என்னப்பா சத்தம்..."என்றான்.

"நீ மட்டுமில்ல, உன் நண்பர்களாலயும் பிரச்சனைதான்.என் ஃப்ரெண்ட் எங்க அக்காவுக்கு இந்த தலை அலங்காரம் செய்ய எவ்வளவு சிரமப்பட்டிருப்பான்னு தெரியுமா? அதை மொபைல் கேமராவுல படம் பிடிக்க எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆயிடும்?ஆனா போட்டோகிராபர்கிட்ட இருக்குற கேமராவுல பதிவுசெஞ்சா எவ்வளவு தரமா இருக்கும்... அதை சொன்னா, உன் பிரண்டு மாட்டேன்னு சொல்றார்.
நீயும் உன் நண்பர்களும் என் கிட்ட வம்பு பண்ணிகிட்டே இருக்குறதுன்னு தீர்மானமா இருக்கீங்கிளா?"என்று சந்தியா படபடத்தாள்.

"த்தோடா...நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம்...சக்தி...என்னடா பிரச்சனை..."

"நீயே எடுடா வெற்றி..."என்று அந்த கேமராவை இவனிடம் தந்தான் சக்திவேல்.

வியூ ஃபைண்டர் வழியே பார்த்த வெற்றி, படம்பிடிக்காமல் கேமராவை நகர்த்திவிட்டு,"அண்ணி...கோவிச்சுக்காம வேற பிளவுஸ் மாத்திட்டு வந்துடுங்க. ஆயிரம் வாட்ஸ் பல்ப்...பிளாஷ் லைட்...உங்க கூந்தல் அழகை அழகா படம்பிடிக்கலாந்தான்...ஆனா போட்டோவுல பார்க்கும்போது கொஞ்சம் நெளியுற மாதிரி இருக்கும்.இந்த விளக்கம் உங்களுக்கு போதும்னு நினைக்குறேன்.நாங்க கொஞ்ச நேரம் வெளியில இருக்கோம்...சந்தியாவோட பேச்சைக்கேட்காதீங்க...ஒரு மண்ணும் தெரியாத விவரம் பத்தாத பொண்ணு."என்று நண்பர்களுடன் வெளியேறினான்.

"கேமராமேன் பசங்க எப்படி சொல்றதுன்னு தவிச்சுருக்கானுங்க. வெற்றிக்கு கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல. எப்படி விஷயத்தை உடைச்சுட்டு போறான் பாரு..."என்று சந்தியா, கதவை சாத்தினாள்.

"அடப்போடி இவளே...இங்கிதம் பார்த்துகிட்டு இருந்தா விடிய விடிய அப்படியே சண்டை போட்டுகிட்டு நின்னுருக்கவேண்டியதுதான்.வெற்றி சொன்னதுதான் சரி. முன்பக்கம் புடவை இருக்குறதால ஒண்ணும் பிரச்சனை இல்லை.

வியர்வையில அப்படியே ஸ்ட்ராப் பளிச்சுன்னு தெரியுது பாரு.அதோட லைட் வெளிச்சமும் சேர்ந்தா அவ்வளவுதான். எதை எதை படம்பிடிக்கணும்னு நாகரிகம் தெரிஞ்ச பசங்கதான். அதான் நம்ம பிரின்ஸ்பால், எஸ்.பி அப்படின்னு எல்லார்கிட்டயும் நல்லபேர் எடுத்துடுறான்.
நான் கூட ஒரு சில கல்யாணவீடியோவை பார்த்துருக்கேன்.விவரம் புரியாத பசங்க அப்படியே ஷூட் பண்ணிருப்பாங்க. சில நொடிகள்தான்னாலும் சம்மந்தப்பட்டவங்க கொஞ்சம் சங்கடமா ஃபீல் பண்ற மாதிரி ஆயிடும்.

அதனால இந்த விஷயத்துல நான் வெற்றி பக்கம்."என்றாள் ஒரு தோழி.

இதற்குள் காயத்ரியும் உடை மாற்றியிருந்தாள்.
******
மறுநாள் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரைதான் முகூர்த்தம்.மண்டபம் மிகப்பெரியதாக இருந்ததால் முதலில் கூட்டம் அதிகமானதை கவனிக்கவில்லை.நேரம் ஆக ஆக சுந்தர்ராஜனுக்கு லேசான பதட்டம் தொற்றிக்கொண்டது.

'நானூறு பேருக்குமேல வரமாட்டாங்க...அப்படின்னு சம்மந்தி சொன்னாருன்னு நம்பி ஆயிரத்து நூறு பேருக்குதான் சமைக்க சொன்னேன்.இப்ப அவரோட சொந்தக்காரங்க எண்ணிக்கையே ஆயிரம்பேர் வந்துடுவாங்க போலிருக்கே...இந்த நிலவரத்தை பார்த்தா, பாதிபேர் நேரமாகுறதைப்பார்த்து சாப்பிடாமலேயே போயிடுவாங்க. அப்படியே எல்லாரும் சாப்பிடலாம்னு உட்கார்ந்தா உணவு பத்தாதே...'என்று குழம்பிய சுந்தர்ராஜனால் திருமண சடங்குகளில் மனம் ஒன்றி ஈடுபடமுடியவில்லை.
சமையலறையை கவனித்துக்கொண்டிருந்த வெற்றி எதற்கோ அரங்கத்துக்குள் வந்த நேரத்தில் தந்தையின் முகத்தைக் கவனித்துவிட்டான்.

வற்புறுத்தி கேட்டதும் தன் கவலையை வெற்றியின் காதோடு காதாக சொன்னார்.

"எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.எத்தனை பேர் வந்தா என்னப்பா...சாதாரணமா இவ்வளவு பேருக்கு நம்மால சாப்பாடு போட முடியுமா?...இந்த புண்ணியத்தை நமக்கு தர்ற இவங்களுக்கு நாம சந்தோஷத்தோட நல்லபடியா சாப்பாடு போட்டு அனுப்பணும்.எழுநூறுபேர்தானே அதிகமா வந்துருப்பாங்க...இதெல்லாம் ஒரு மேட்டரா..."என்று அவருக்கு தைரியம் சொன்ன வெற்றி, தன் நண்பர்களை அழைத்தான்.

"டேய்...இந்த விஷயத்துல எங்க சொந்தக்காரங்களை நம்ப முடியாது. நாற்காலியை விட்டு எழுந்திரிக்காம, நாங்க அவங்களை டைனிங் ஹாலுக்கு பஸ்சுல அழைச்சுட்டுப்போய் சாப்பிட வைக்கலைன்னு குத்தம் சொல்லிகிட்டு இருப்பாங்க.அதனால கல்யாணம் முடிஞ்சதும் யாரும் வெளியில போயிடக்கூடாது. அந்த மாதிரி கவனிக்கிறது உங்க பொறுப்பு. ஒரு பந்தியில நானூறு பேர் உட்காரலாம். அதிகபட்சம் ஆறு பந்திக்குதான் ஆள் இருக்கும்.

நான் கூடுதல் சாப்பாட்டுக்கு வேண்டிய வழியை செய்யுறேன்."என்று தலைமை சமையல்கலைஞரிடம் சென்றான் வெற்றி.

"அய்யா...ஆயிரத்து இருநூறு பேருக்கு என்ன சமையல் செய்யுறீங்கிளோ...அதே மாதிரி இன்னும் அறுநூறு பேருக்கும் சமையல் பண்ணிடணும். தேவையான பொருட்களை நாங்க வாங்கிட்டு வர்றோம். உங்களுக்கு பேசிய தொகையை இந்தகூடுதல் வேலைக்கு ஏற்ற மாதிரி நியாயமான அளவுல அதிகரித்து தர்றது என் பொறுப்பு."என்று தெளிவாகப்பேசினான். அவரும் முக மலர்ச்சியுடன் சம்மதித்தார்.

கூடுதல் சமையலுக்கு மூன்று மணி நேரம் அவகாசம் இருந்ததால் வெற்றியின் திட்டப்படி எந்த குளறுபடியும் இல்லாமல் அனைவருக்கும் உணவு உபசரிப்பு நல்லபடியாக நிறைவேறியது.

******

"வெட்டித்தனமா வில்லங்கம் செய்துகிட்டு இருந்தாலும் அவன் மட்டும் இல்லன்னா பாதிப்பேருக்கு சாப்பாடு இல்லாம அசிங்கப்பட வேண்டியதாயிருக்கும்."என்று ஒரு உறவினரிடம் சுந்தர்ராஜன் ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

அது ராமலிங்கத்தின் உறவினர் ஒருவரின் காதுகளில் விழுந்துவிட அவர் மிகச் சரியான முறையில் ஒரு வில்லங்கத்துக்கு நெருப்பு பற்றவைத்தார்.

"சம்மந்தி...இப்ப எவ்வளவு கூடுதலா செலவாயிருக்குன்னு சொல்லுங்க...நான் எப்படியாவது தந்துடுறேன்..."என்று வருத்தம் வார்த்தைகளில் வெளிப்பட்டுவிடாமல் அடக்கிக்கொண்டு பேசினார்.

பதிலுக்கு சுந்தர்ராஜனும் எதோ சொல்ல நினைத்தபோது வெற்றி இடையில் புகுந்தான்.
"ஆஹா...ரொம்ப குடும்பங்கள்ல இப்படிதான் தகராறு ஆரம்பமாகுதா...மாமா...இதுல உங்களை யார் தப்பு சொன்னா...திடீர்னு இவ்வளவு கூட்டம் வரும்னு யாருமே எதிர்பார்க்கலைதான். ஏன்னா...நாம எவ்வளவு பத்திரிகை கொடுத்தாலும் அவங்கள்ல எத்தனை பேர் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்துவான்னு யாராலயும் சொல்ல முடியாது.விசேஷம் நடத்துனா இதெல்லாம் சாதாரணம்.

சின்னப்பையன்...எனக்கு தெரியுது...மணிவிழா கொண்டாடுற வயசுல உங்களுக்கு புரியலையே...இவ்வளவு பேருக்கு சாப்பாடு போட்டு அண்ணனும் அண்ணியும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்காங்க...இது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுமா?இதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த கடவுளுக்கும் வந்திருந்தவங்களுக்கும் நன்றி சொல்றதை விட்டுட்டு புதுசா பூத்திருக்குற உறவை சிதைக்கிற முயற்சியில இறங்கிட்டீங்கிளே...அங்க பாருங்க...அண்ணன்-அண்ணி முகத்துல பசியோட வாட்டம் நல்லா தெரியுது.

பெரிய மனுஷன் நான் சொல்றேன்...பேசாம என் கூட வாங்க..."என்று வெளியில் கிளம்பினான்.

"நீ கோவிச்சுகிட்டு எங்கடா போற?"

"அதெல்லாம் யாருக்கு தெரியும்?...நமக்கு இங்க மண்டபத்துல சாப்பாடு இல்லை.வேற ஒரு இடத்துல ஏற்பாடு பண்ணியிருக்கேன்... எல்லாரும் பஸ்சுல ஏறுங்க..."என்று வெற்றி சொன்னதும் மற்றவர்கள் புதிராகப்பார்த்தார்கள்.

"என் பிரெண்ட்ஸ் அஞ்சு பேர், இங்கயே சாப்பிட்டாச்சு. அவனுங்க இப்ப எல்லாத்தையும் பார்த்துக்குவானுங்க.பயப்படாம வாங்க."என்று வெற்றி முதல் ஆளாக பேருந்தில் ஏறினான்.

அந்த பேருந்து பத்து நிமிட பயணத்தில் சென்று அடைந்த இடம், ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம்.

"இவங்களை பேசாம மண்டபத்துக்கு அழைச்சுட்டு வந்துருக்கலாமே..."என்று ஒரு உறவினர் தன் தத்துவ முத்துக்களை உதிர்த்தார்.

"பெரியப்பா...ஒரு வேளை சாப்பாட்டுக்காக இவங்களை அலைக்கழிக்கக்கூடாது.இப்பவே பதினஞ்சு நிமிஷம் லேட். இப்படி ஆகும்னு தெரியும். அதனாலதான் ஒரு மணி நேரம் முன்னால எல்லாடுக்கும் பழங்கள், பிஸ்கட் அப்படின்னு கொஞ்சமா கொடுக்க சொல்லிட்டேன்.

நம்மாளயே பசி பொறுக்க முடியலையே...குழந்தைங்களால மட்டும் முடியுமா?...அதோட கல்யாண சாப்பாட்டுல சேர்க்கப்படுற சில பொருட்கள் இந்தக் குழந்தைகளுக்கு எதாவது சங்கடங்கள் தரலாம். அதனால வழக்கமா அவங்களுக்கு தர்ற உணவோட, குறிப்பிட்ட சில வகைகளை மட்டும் குழந்தைகளுக்கு ஒத்துக்குற அளவுல செய்து அவங்களோட புது தம்பதி சாப்பிடணும்னு பிளான் பண்ணினேன். நல்லபடியா போய்கிட்டு இருக்கு."என்றான் வெற்றி.

அந்த குழந்தைகளுடன் மதிய விருந்து உண்டது அனைவருக்குமே நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

மீண்டும் மண்டபத்துக்கு வந்து அனைவரும் ரிலாக்சாக அமர்ந்தார்கள்.

"சின்ன மாப்ள...உங்களைப்பத்தி என்னவோன்னு நினைச்சேன். ஆனா அசத்திட்டீங்க போங்க..."என்று ராமலிங்கம் நெகிழ்ந்தார்.

"என்ன வேணும்னு கேளுடா..."என்று சுந்தர்ராஜன் சொன்னார்.

"கேட்பேன்...திட்டக்கூடாது..."என்று வெற்றி புதிர் போட்டான்.

"அவன் என்ன சொல்லப்போறான்...எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கப்பான்னு சொல்லுவான். என்ன, அதானே..."என்று அவன் தாத்தா சொன்னார்.

உடனே வெற்றி வெட்கப்படவில்லை.

"எப்படி தாத்தா இவ்வளவு சரியா என் மனசுல உள்ளதை சொன்னீங்க..."

"ஒழுங்கா படிப்பை முடி...அப்புறம் பார்க்கலாம்."

"ஏம்பா...ஒரே மாதிரியே சிந்திக்கிறீங்க...ஹவுஸ் வொய்ஃப் தான் இருக்கணுமா? ஏன், ஹவுஸ் ஹஸ்பெண்ட் இருக்ககூடாதா. நல்ல வேலைக்குப்போற பொண்ணா கல்யாணம் பண்ணிகிட்டா வீட்டுப்பணியில அவளுக்கு ஓய்வு கொடுத்த மாதிரி இருக்கப்போகுது..."என்று வெற்றி சொல்லவும் அங்கே கூடி நின்ற அனைவருமே சிரித்தார்கள்.

"நல்லா காமெடி பண்றடா..."என்று சுந்தர்ராஜனும் சிரித்தார்.

"சீரியசாதாம்பா...எப்படியும் நான் ஆங்கிலப்பேப்பர்களை எழுதி பாஸ் பண்ணி டிகிரி வாங்கப்போறது இல்லை. அதனாலதான் புத்திசாலித்தனமா இந்த முடிவு எடுத்தேன்."

"என்னது...இது புத்திசாலித்தனமா?...அப்புறம் காலத்துக்கும் அவ சொல்றதை கேட்டுகிட்டு இருக்க வேண்டியதுதான்."என்று முதன் முதலாக அன்புச்செல்வன் பேசினான்.

"அண்ணி... அண்ணன் உங்க பேச்சைக் கேட்க மாட்டாராமா...இதுக்குமேல உங்க சாமர்த்தியம்..."என்று வெற்றி சொன்னதும் காயத்ரியின் கன்னங்கள் மேலும் சிவந்தன.

"இப்ப பேசுனதெல்லாம் நல்லாத்தான் இருக்கு...நீயும் உன் ஃபிரெண்ட்சும் பிளக்ஸ் போர்டுல திருவாரூரில் திருவிழான்னு போட்டுருக்கீங்கிளே...அப்ப திருவாரூர் தேர் திருவிழாவுக்கு கூடுற கூட்டத்தை எல்லாம் என்னன்னு சொல்றது?"என்று காயத்ரியின் தோழி ஒருத்தி கேட்டாள்.
"நல்லா பாருங்க சார்...தலைக்கு நூறு ரூபா, ஒரு பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் அப்படின்னு செலவு பண்ணி பொதுக்கூட்டத்துக்கு கூட்டத்தைக் கூட்டிட்டு  திருவாரூர் மாநகரில் திருவிழா அப்படின்னு விளம்பரம் செய்யுவாங்க...அந்த கூட்டத்தோட ஒப்பிடும்போது நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வந்த கூட்டம் சொற்பம்தான்.

ஆனா இந்த கூட்டம் நாம பத்திரிகை வெச்சதை மதிச்சு வந்த கூட்டம். அதனால திருவாரூரில் திருவிழான்னு நாங்க பிளக்ஸ்ல போட்டது தப்பே இல்லை.இதை இவங்க கேட்கலை...சந்தியாதான் கேட்க சொல்லியிருப்பான்னு எனக்கு நல்லா தெரியும்...

இப்பவே இப்படின்னா...காலம் பூரா நான் எப்படி சமாளிக்கிறதுன்னு நீங்களே சொல்லுங்க..."என்று வெற்றி கூறியதின் அர்த்தம் பலருக்கும் உடனடியாக புரியவில்லை.

அவன் தாத்தாதான்,"அட...திருட்டு ராஸ்கல்...உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கா...இது முன்னாலேயே தெரிஞ்சிருந்தா ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து முடிச்சிருக்கலாமே..."என்றார்.

இதைக்கேட்ட சந்தியாவின் முகத்தில் திகைப்பு.

"தாத்தா...நீங்களா எதாவது சொல்லி தீர்மானம் பண்ணிடாதீங்க...அப்புறம் சந்தியா என்னை அடிச்சு தொவைச்சு காயப்போட்டுடுவா...முதல்ல எங்க படிப்பு முடியட்டும்...அப்புறம் சந்தியாவுக்கு ஒரு வேலை கிடைக்கட்டும். நான் அதுக்குள்ள அம்மாகிட்ட நல்லா சமையல் கத்துக்குறேன்...அப்புறம் சம்மதமான்னு சந்தியா சொல்லட்டும். அதுவரை  யாரும் இதைப்பத்தி பேசக்கூடாது...பேசக்கூடாது...பேசக்கூடாது..."என்றான்.

"அதை ஏண்டா மூணு தடவை சொல்ற..."என்று தாத்தா கேட்கவும்,"எல்லாம் ஒரு எஃபெக்டுக்காகதான்."என்று வெற்றி சொன்னான்.

"பய ஒரு தீர்மானத்தோடதான் இருக்கான் போலிருக்கே..."என்று சுந்தர்ராஜன் சொல்லவும், அங்கே மீண்டும் சிரிப்பொலி.

சுபம்.
******

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 4
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 5
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 6

******
பள்ளிப்பருவத்தில் இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் தன் வாழ்வைத் தொலைத்த எவ்வளவோ பெண்கள் உண்டு.
 ஆனால் ஒரு பெண் இதே போல் பள்ளியில் படிக்கும்போதே காதலில் விழுந்தாலும் அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? விகடனின் காதலர் தின சிறப்பிதழில் வெளிவந்த இந்த சிறு கட்டுரையை படிக்க இங்கே க்ளிக்கவும்.

கொஞ்சம் சமூக அக்கறை...இந்த இடத்தில் க்ளிக் செய்து பாருங்களேன்.

சனி, 13 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 6

"ஒரு பிரின்ஸ்பால் எதுக்கு மாணவனோட வீட்டுக்கு பழங்களோட வந்திருக்காருன்னு உங்களுக்கெல்லாம் வியப்பா இருக்கும். அதிகமா யோசிக்க வைக்காம நானே சொல்லிடுறேன். இது என் அண்ணன்.வன இலாகா அதிகாரியா இருக்கார்.
இவருக்கு 'ஓ நெகட்டிவ்' வகை ரத்தம். ரொம்ப பிரச்சனைக்குரியதும் அரிதானதும் கூட.இப்ப ஒரு அறுவை சிகிச்சைக்காக தேவைப்பட்டப்ப போதுமான அளவு ரத்தம் கிடைக்கலை. வெற்றியோட நண்பர் ஒருத்தர் கிட்ட இருந்து அவசரத்துக்கு கிடைச்ச ரத்தம்தான் இப்ப என் அண்ணன் உங்க முன்னால நிற்க காரணம். 


அதுதான் வெற்றியையும் ரத்தம் கொடுத்த அந்தப் பையனையும் பார்த்துட்டுப் போகலாம்னு கிளம்பி வந்துட்டோம்."என்று கல்லூரி முதல்வர் சொல்லி முடித்தபோதுதான் வெற்றி வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

"அடடே...வாங்க சார்...முதல்ல எல்லாரும் உட்காருங்க...எங்க அப்பா உட்கார சொல்லலையேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. என் அளவுக்கு விபரம் பத்தாது."என்று வெற்றி சொன்னதும்தான் சுந்தர்ராஜனுக்கு தன் தவறு புரிந்தது.

"சாரி சார்...இவன் பேசுறதைப் பத்தி உங்களுக்கும் தெரிஞ்சுருக்கும். எதையும் சீரியசா எடுத்துக்காதீங்க...முதல்ல உட்காருங்க..."என்று சுந்தர்ராஜன் வழிந்தார்.

"கல்லூரியில சேர்ந்த புதுசுல வெற்றி மேல நிறைய புகார் வரும்.ஆனா இவன் மேல எந்த தப்பும் இருக்காது. ஆனா தனக்கு மேல அதிகாரத்தோட இருக்குறவங்க செய்யுற தப்பை சுட்டிக்காண்பிக்கிறதே நம்ம நாட்டுல பெரிய குற்றமாச்சே.

ஜாலியான பையனா இருந்தாலும் இவனோட படிக்கிற மாணவர்கள் மட்டுமில்லாம வெளியில உள்ள பசங்க நிறைய பேரும் சேர்ந்து நிறைய பேருக்கு ரத்த தானம் செய்துகிட்டு இருந்துருக்காங்க. பல பெரிய ஆளுங்க தலைவர்களோட பிறந்த நாள் அன்னைக்கு ரத்த தான முகாம் நடத்துறதோட சரி. இன்னும் ரத்தம் தானம் கிடைக்காம பலர் பாதிக்கப்பட்டுகிட்டுதான் இருக்காங்க.

ஆனா வெற்றியும் அவன் நண்பர்களும் எந்த விளம்பரமும் இல்லாம இந்த உதவியை செய்துகிட்டு வர்றது நான் மட்டுமில்ல நீங்களும் பெருமைப்பட வேண்டிய விஷயம்."என்று பிரின்ஸ்பால் சொல்லவும் சுந்தர்ராஜனின் குடும்பத்தார் சந்தோஷத்தில் எதுவும் சொல்லத் தோன்றாமல் திகைத்தார்கள்.

"நல்லா சொல்லுங்க சார். அப்பவாச்சும் அப்பாவுக்கு நல்ல சிந்தனை வருதான்னு பார்ப்போம்.அண்ணே...உன்னை மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலை பார்க்குறவங்களால நாட்டுக்கும் வீட்டுக்கும் பொருளாதார நன்மை இருக்கு. ஒத்துக்குறோம்.இது மறைமுக பலன்தான். ஆனா என்ன மாதிரி ஆளுங்களாலதான் நேரடி நன்மை இந்த நாட்டுக்கு அதிகமா கிடைக்குதுன்னு புரிஞ்சுக்குங்க."என்று வெற்றி சற்று நேரம் சுயபுராணம் பாடினான்.

"அதெல்லாம் சரிதான் வெற்றி. ஆனா நீ அந்த நாலு பேப்பர் அரியர் வெச்சிருக்கியே...அதாம்பா...ஆங்கிலத்தாள்...அதையும் இப்ப எழுதப்போற கடைசி செமஸ்டர்லயாவது பாஸ் பண்ணிடேன்."என்று பிரின்ஸ்பால் சிரித்தார்.

"சார்...டவர் இல்லை...நீங்க பேசுறது சரியா கேட்கலை...அம்மா...நான் தான் டீ காபி குடிக்கிறது இல்லைன்னு முடிவெடுத்துருக்கேன்.என்னைப் பார்க்க வர்றவங்களும் அப்படியா இருப்பாங்க...

நான் இவங்களுக்கு தண்ணி கொண்டு வந்து தர்றேன். நீங்க காபி, ஹார்லிக்ஸ் எதாவது கொண்டு வந்து கொடுங்க..." என்று சமையலறைக்குள் நுழைந்தான் வெற்றி.

"உயிர்பிழைச்ச பல பேரோட வாழ்த்து வெற்றிக்கு இருக்கு சார். அவன் நல்லா வருவான்.கவலைப்படாதீங்க.நம்ம மாவட்ட எஸ்.பியும் இந்த காலேஜ் ஸ்டூடண்ட்தான்ன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். வர்ற குடியரசு தினத்தன்னைக்கு வெற்றியையும் அவன் நண்பர்களையும் கவுரவிக்கப்போறாங்க.இது மேலும் பல இளைஞர்களுக்கு ஊக்கம் தர்றதா அமையும்.

அடுத்து வெற்றியோட நண்பனையும் போய் பார்க்கணும்.நாங்க புறப்படுறோம் சார்..."என்று பிரின்ஸ்பால் சொல்லவும்,சுந்தர்ராஜன் "எங்க சார் கிளம்பிட்டீங்க...அப்புறம் என் பையன் சொன்னது மாதிரி எனக்கு விவரம் பத்தாதுன்னுங்குறது உண்மையாயிடும்."என்று சிரித்தார்.

உபசரிப்புக்குப் பின் அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள்.

"வெட்டி...ச்ச...வெற்றி...இப்ப உண்மையிலயே எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்குப்பா.நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.என்ன வேணுமோ கேளு..."என்று சுந்தர்ராஜன் உற்சாகமானார்.

"கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்தான் இப்ப சென்னைக்கு போறது இல்லையே...அதை வங்கி கொடுங்க...நான் தூசி தட்டி நம்ம வீட்டு கொல்லைப்பக்கம் நிறுத்திக்குறேன்."என்று வெற்றி வழக்கம்போல் கலாய்க்க, சுந்தர்ராஜன் முகத்தில் வழிசல்.

"சும்மா அரசியல்வாதி மாதிரி வாக்கு கொடுக்க வேண்டியது.நீங்க ஒரு பொருட்டாவே கவனிக்காம இருக்கீங்கிளே...நம்ம தாத்தாவுக்கு எண்பது வயசு பூர்த்தியாகப்போகுது. திருக்கடையூர்ல சதாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்வோம்.இதை நீங்க செய்யுறீங்கிளா...இல்ல... நான்..."என்று வெற்றி பாதியிலேயே நிறுத்தினான்.

"நான் நடத்தாட்டி நீ என்னடா செய்வ..."என்று சுந்தர்ராஜனும் சூடானார்.

"உங்க பணத்தை எடுத்து நானே நடத்துவேன்."என்று வெற்றி சொன்னதும் சுந்தர்ராஜனே சிரித்துவிட்டார்.
******
நெருங்கிய உறவினர்களையும் காயத்ரியின் குடும்பத்தையும்தான் திருக்கடையூருக்கு அழைத்திருந்தார்கள்.கோயிலில் சாஸ்திரிகள், உணவு உபசரிப்பு, தங்குமிடம், ஒளிப்படம், சலனப்படம் என்று எல்லா ஏற்பாட்டையும் வெற்றிதான் நண்பர்களின் உதவியோடு செய்திருந்தான்.

ஹோமம் முடிந்து புனித நீர் அபிஷேகத்தின் போது,வெற்றியின் தாத்தா - பாட்டி குளிரில் லேசாக நடுங்கியதை வெற்றி பார்த்தான்.

"டேய்...தாத்தாவுக்கு ரெண்டுபானை வென்னீர் பார்சல்..."என்று வெற்றி சவுண்ட் விடவும் தாத்தா உஷாரானார்.

"வெற்றி...அதெல்லாம் வேணாம்.நீ எதையாவது மனசுல வெச்சுகிட்டு உடம்பை கொதிக்க வெச்சுடுவ...எனக்கு குளிரவே இல்லை."என்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.

"தெய்வமே... என்னைய நம்புறவங்க யாருமே இல்லையா..."என்ற வெற்றி சுற்றிலும் பார்த்தான்.அனைவரும் தாத்தா பாட்டிக்கு அபிஷேகம் செய்வதில்தான் மும்முரமாக இருந்தார்களே தவிர, இவனை யாரும் கவனிக்கவில்லை.

"அது சரி...இதுவே சினிமாவா இருந்தா,'நான் இருக்கேன் அப்படின்னு ஹீரோயின் வந்துருக்கும்.'இங்க சந்தியா கொஞ்சம் கூட கவனிக்காம நிக்கிறா... எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்." என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான்.

"நாங்க என்ன புது ஜோடியா...ஏண்டா  தாலிகட்டுறதுல இருந்து மாலை மாத்துற வரை எல்லாத்தையும் படம் புடிக்கிறீங்க..."என்று தாத்தா அலுத்துக்கொண்டார்.

"தாத்தா...இவ்வளவு காலம் பாட்டியோட குடும்பம் நடத்தியிருக்க.இப்ப மூணாவது தடவை உனக்கு பாட்டியோடவே கல்யாணம்.இந்த கொடுமையை வீடியோ, போட்டோவுல நீ மறுபடி பார்க்க வேணாம்?"என்று வெற்றி சொல்லவும் சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள்.

"நாங்க பாட்டுக்கு சிவனேன்னுதானே கிடந்தோம்.இப்படி எங்களை கூட்டிட்டு வந்து காலை வாரிவிடுறியே?"என்று வெற்றியை தாத்தா பரிதாபமாக பார்த்தார்.

"தாத்தா...கல்யாணம் நடக்கும்போது இதெல்லாம் சகஜம்.இப்ப நாங்கதான் பெரியவங்க...அதனால நீங்க எதிர்த்துப்பேசக்கூடாது.ஓ.கே..."என்று வெற்றி சிரிக்காமல் சொன்னாலும் மற்றவர்களால் சும்மா இருக்கமுடியவில்லை.

இந்த குடும்பத்தின் குதூகலத்தைப் பார்த்த பிற குடும்பங்களும் தங்கள் வீட்டு மணிவிழா தம்பதியரை அதிகமாகவே சீண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

தினமும் குறைந்தது இருபதுக்கும் குறையாத சுபகாரியங்கள் நிகழும் இந்த தலத்தில் எப்போதும் குதூகலத்திற்குக் குறைவிருக்காது.

வீடியோ எடுக்கும் நண்பனுடன் உதவிக்கு வந்த வெற்றிக்கு இந்த சூழ்நிலை மிகவும் பிடித்துப்போனதும்தான் தாத்தா பாட்டிக்கு இந்த விசேஷத்தை நடத்திப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

******
வெற்றி தாத்தாவின் எண்பது வயது பூர்த்தி திருக்கடையூரில் கொண்டாடிய கையோடு அன்புச்செல்வன்-காயத்ரி திருமண ஏற்பாடுகள் தொடங்கின.
திருமணத்துக்கு முதல் நாள்.மாப்பிள்ளையை அழைக்க பெண்வீட்டார் வந்தார்கள்.அன்புச்செல்வனுக்கு தங்கை முறை வரும் சில பெண்கள் மாப்பிள்ளைக்கு கூல்டிரிங்கஸ் வாங்கிக்கொடுத்தால்தான் வருவார்." என்று சொன்னார்கள்.

அந்த பெண்களும் அதை அப்படியே வந்திருந்தவர்களிடம் சொல்ல, அவர்களில் ஒருவன் உள்ளே நுழைந்து,"அட வெண்ணை...உனக்கு அறிவிருக்கா..."என்று திட்டவும் அங்கிருந்த அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.

6 - தொடரும்.

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 4
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 5

******

சிம்பு - த்ரிஷாவின் பின்னணியில் இருப்பது அபிமுக்தீஸ்வரர் ஆலயம். இது திருவாரூர் நகரின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் கோயில்.ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்று புகழ் பெற்ற ஆழித்தேர் திருவிழா நடைபெறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கொடியேற்றத்தின் போது இந்த அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் மண் எடுத்து அதில் முளைப்பாலிகை வளர்ப்பார்கள் என்பது பலருக்கு புதிய தகவலாக இருக்கும்.
ஆலயத்தைப்பற்றி அறிய...
பஞ்சபாண்டவர் பூஜித்த தலம் என்ற பெருமையை உடைய இந்த ஆலயத்தில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு...

***************************************************

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 5

"அட லூசு..."என்று சந்தியா பேச ஆரம்பித்ததும் "இவ என்ன அரசாங்க ரகசியத்தை எல்லாம் வெளியில சொல்லுறா?"என்ற சிந்தனை வெற்றியின் மனதில் ஓடியது.

"நான் உன்னைய 'அத்தான்' அப்படின்னு கூப்பிட்டு வழியணும்னு நீ ஆசைப்படுறது நல்லாவே தெரியுது.அந்த ஆசையை எல்லாம் ஓரங்கட்டிடு.நியாயமா பார்த்தா உன்னைய பொறுக்கி, அதிகப்பிரசங்கி அப்படின்னுதான் கூப்பிடணும்.மாமா, அத்தான் அதான் உன் அப்பா, அண்ணன் - இவங்களுக்காக உனக்கு கொஞ்சமா மரியாதை கொடுக்கலாம்னு நினைக்குறேன். நீயா அந்த மரியாதையைக் கெடுத்துக்காத.
அக்காவோட கல்யாணத்துக்கு வரப்போற என் பிரெண்ட்சையே எப்படி சமாளிக்கிறதுன்னு நானே குழம்பி இருக்கேன்.ச்சீ போ..."என்று சந்தியா  தன் தோழியின் வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்துவிட்டாள்.



'ச்சீ...போன்னு சொல்லிட்டுப்போறா...இப்படித்தானா அசிங்கப்படுறது...ம்...சரி...எங்க போயிடப்போறா...இப்படி கோபப்படுறவளை சுலபமா வழிக்கு கொண்டுவந்துடலாம்.அப்பாதான் கவுத்துவிடாம இருக்கணும்.

எங்க...நான் ஊதுற பலூனை எல்லாம் ஒரே அடியில உடைக்கிறதுதான் அவரு பிழைப்பா இருக்கு.நம்மளைப் பொறுத்த வரை வீட்டுக்குள்ளதான் வில்லன். எதுவா இருந்தாலும் சமாளிச்சுதானே ஆகணும்' என்று நினைத்துக்கொண்ட வெற்றி வீட்டுக்குச் சென்றான்.

இரண்டு மாதங்களுக்குள் திருமணத்தை முடித்துவிடுவது என்று சுந்தர்ராஜனும், ராமலிங்கமும் தீவிரமாக இயங்கினார்கள்.

ராமலிங்கத்தின் பொருளாதார நிலை சற்று சிரமநிலையில் இருந்ததால் சுந்தர்ராஜனே திருமண செலவுகளை ஏற்றுக்கொண்டு நடத்திக்கொள்வதாக சொல்லிவிட்டார்.

கல்லூரியில் ஆண்டு விழா நடத்துவதற்காக சிறப்புவிருந்தினர்கள் இரண்டு பேரை அழைத்திருந்தார்கள்.ஒருவர் தமிழ்த்திரைப்பட இயக்குனர், மற்றொருவர் மாவட்டக்காவல்துறைக்கண்காணிப்பாளர்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துறையாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அந்த இரண்டு பேரும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள் என்ற காரணம்தான் அவர்களை இந்தக் கல்லூரி விழாவின் மேடையில் ஏற்றியிருந்தது.

மாணவர் பேரவை தலைவரும், செயலாளரும் சிறப்புவிருந்தினர்களை அழைத்துவர சென்றபோது வெற்றியும் ஒரு காரை ஏற்பாடு செய்து ஐந்து மாணவர்களுடன் ஏறிக்கொண்டான்.

எஸ்.பியும் இயக்குனரும் காரில் வந்தபோது முன்னால் வந்த பைலட் கார் கண்ணாடியில் ஒட்டியிருந்த போஸ்டரைப்பார்த்து கல்லூரி முதல்வர்தான் முதலில் அதிர்ந்தார்.

விருந்தினர்கள் முன்னால் வெற்றியை என்ன சொல்வது என்ற தயக்கத்தில் அவர்களை முதல்வரும் பேராசிரியரும் வரவேற்றார்கள். அவர்கள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சிக்கு காரணமான போஸ்டரை முன்னாள் மாணவர்களும் பார்த்தார்கள்.

விழா நல்ல முறையில் நிறைவடையும் நேரம், எஸ்.பி, இயக்குனர் இருவரும் சேர்ந்து எழுந்து நின்றார்கள்.

இயக்குனர்,"எங்களுக்கு முன்னால வந்த கார்ல 'பேட் பாய்ஸ்'அப்படின்னு போஸ்டர் ஒட்டி இருந்ததே...அந்த ஐடியாவுக்கு சொந்தக்காரர் கொஞ்சம் மேடைக்கு வர்றீங்களா.?"என்றார்.

"ஏன் சார்...போலீஸ்கிட்ட புடிச்சுக்கொடுக்கப்போறீங்களா?இந்த வெற்றி அவ்வளவு சீக்கிரத்துல சிக்க மாட்டான். ரொம்ப கஷ்டப்படணும்."என்று முன் வரிசையில் நின்று குரல் கொடுத்தான்.

அருகில் நின்ற மாணவர்கள் எல்லாம் பெரியதாக 'ஓ' போடவும் கல்லூரி அரங்கமே அதிர்ந்தது.

"இதெல்லாம் என்ன பெரிய சத்தம்...நாங்க விட்ட சவுண்டுல பத்து சதவீதம் கூட இல்லை.நீங்க எல்லாம் வேஸ்டுப்பா..."என்று எஸ்.பி சொன்னதும் மாணவர், மாணவிகள் கூட்டத்தில் மீண்டும் உற்சாக கூச்சல்.

"மாணவர்கள்னா மனசாட்சியைத் தவிர எதுக்கும் அஞ்சக்கூடாது.வெற்றி உன்னைப் பத்தி உங்க ஹெச்.ஓ.டி கிட்ட கேட்டுட்டேன்.மேடையில ஏறு. உன்னை வெச்சு சில செய்திகளை மற்ற எல்லாருக்கும் சொல்லணும்."என்று இயக்குனர் சொன்னார்.

"அப்பாவுல இருந்து அதிகாரிங்க வரைக்கும் என்னைய காட்சிப்பொருளாக்குறதுலயே குறியா இருக்காங்களே.என்ன கொடுமைடா இது...சரி...எதிர்மறையாவது பப்ளிசிட்டி கிடைக்குதேன்னு பெருமைப்பட்டுக்க வேண்டியதுதான்."என்று வெற்றி மேடையேறினான்.

மாணவர்களின் உற்சாக கூச்சலைக்கேட்டதும் பெரிய தலைவராக தன்னைக்கற்பனை செய்துகொண்ட வெற்றி, கூட்டத்தைப் பார்த்து கையசைத்தான்.

எஸ்.பி."எங்களோட ஜூனியர் மாணவ சமுதாயத்துக்கு மறுபடியும் வணக்கம்.சேட்டை செய்தாதான் அது குழந்தை. இப்படி அட்டகாசம் பண்றியேன்னு குழந்தையை அம்மா அடிக்கிறது சகஜம்.ஆனா அதே குழந்தைக்கு உடம்பு சரியில்லாம படுத்துட்டா அதிகமா தவிச்சுப்போறது தாயாத்தான் இருக்கும்.

மாணவர்களும் ஆசிரியர்களும் கூட தாய் சேய் மாதிரிதான் இருக்கணும்னு நினைக்கிறோம்.மாணவர் பருவம் குறும்பு நிறைஞ்சதா இருக்குறது தப்பே இல்லை.ஆனா அதனால அடுத்தவங்களுக்கு துன்பம் வரக்கூடாது.யாரோட மனசும் புண்படக்கூடாது.முக்கியப்பாடங்களில் வெற்றிதான் தொடர்ந்து நல்ல மார்க் எடுத்துட்டு வர்றதா சொன்னாங்க.

கார்ல ஒட்டுன போஸ்டர்ல பேட் பாய்ஸ் அப்படின்னு போட்டதால யாருக்கும் நேரடியா கஷ்டம் இல்லை. ஆனா அது ஒரு படத்துல இருக்குற காட்சின்னுங்குறதால சினிமா உங்களுக்குள்ள ஏற்படுத்திருக்குற தாக்கம் புரியுது.இந்த மாதிரி யாருக்கும் உதவாத விஷயங்களை செய்து கெட்ட பேர் எடுக்குறதை விட, சொந்தமா யோசிச்சு ஒரு கோமாளித்தனமான போஸ்டர் ஒட்டிருந்தா கூட நகைச்சுவைன்னு நினைச்சு பாராட்டியிருப்பேன்.

கல்லூரி அனுபவம்னுங்குறது  உங்க ஒவ்வொருத்தருக்கும் கிடைச்ச அற்புதமான வாய்ப்பு.பல வருஷம் கடந்து போனாலும் இதைப் பத்தி நினைக்கும்போது உங்க முகத்துல லேசா ஒரு புன்னகையாவது வரும்.அது எந்த வயசா இருந்தாலும்.

இப்ப நான் வெற்றியை மேடையில ஏத்துனதுக்கு வேற ஒரு காரணமும் உண்டு.இவன் செய்யுற செயல்கள் பல ஆசிரியருக்கே பிடிக்கலைன்னு கேள்விப்பட்டேன்.இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னுதானே நினைக்குறீங்க...அவனும் அவனைச் சுத்தி இருக்குறவங்களும் பெருமைப்படுற ஒரு விஷயத்தை வெற்றி விளையாட்டாவே செய்துகிட்டு வர்றான்.ஆனா அது தந்துகிட்டு இருக்குற நல்ல பலன் ஏராளம்.

இது உங்களுக்கு ஊக்கம் கொடுக்குற வகையில இருக்கணும்னு வர்ற குடியரசுதினத்து அன்னைக்கு அந்த விஷயங்களை கொஞ்சம் பப்ளிசிட்டி பண்ணனும்னு முடிவுபண்ணியிருக்கோம்.
வெற்றி, இனி நீ இந்த மாதிரி குறும்புகளை இன்னும் ஆக்கப்பூர்வமா செய்.உன் கிட்ட நாங்க இன்னும் எதிர்பார்க்குறோம்."என்று பேசியதும் பேராசிரியர்களில் சிலரே அவர்கள் கைகள் வலிக்கும் அளவுக்கு கரகோஷம் எழுப்பினார்கள்.
******
அன்று இரவு ஏழு மணி இருக்கும்.வாசலில் வந்து நின்ற காரைப்பார்த்ததும் சுந்தர்ராஜனுக்கு எதுவும் புரியவில்லை.சற்று வயதான இரண்டு தம்பதியர் காரிலிருந்து இறங்கினார்கள்.

அவர்கள் கைகளில் பழங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் அடங்கிய பைகள் இருந்தன.

அவர்களில் ஒருவர்,"சார்...நான் ....................காலேஜ் பிரின்சிபால்.வெற்றியைத் தேடிதான் வந்திருக்கோம்.உள்ள வரலாமா?"என்று கேட்டார்.

பத்திரிகை எழுதுவது தொடர்பாக ராமலிங்கமும் அவர் மனைவியும் வந்திருந்தார்கள். சுந்தர்ராஜனின் குடும்பம் மட்டுமின்றி இவர்களுக்கும் திகைப்பு. ஆனால் எதுவும் கெட்ட விஷயம் இல்லை என்பதே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

5 - தொடரும்.
******
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 4
******
ஐந்தாவது அத்தியாயத்தின் விளம்பரத்தில் அஜீத்குமார், த்ரிஷா ஆகியோருக்கு பின்னணியில் இருப்பது திருவாரூர் நகரில் நாகை புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம்.
இது கட்டப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.முன்பு எல்லாம் கனரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் குறைவாகத்தான் இந்தப் பாதையில் செல்லும். ஆனால் கடந்த பத்து ஆண்டு காலத்தில் திருவாரூர் நகரம் சதை போட்டுக்கொண்டே போவதால் சைக்கிள் முதல் இருசக்கர வாகனப்போக்குவரத்தும் மிக அதிகமாகி விட்டது.மாவட்ட மைய நூலகம் செல்லவேண்டியதும் இந்த வழியாகத்தான்.

ஆனால் பாலமும் இந்தப் பாதையும் பெரியவர்களையே அச்சுறுத்துகிறது. இந்த அழகில் நூலகத்தில் குழந்தைகள் பிரிவுக்கு கூட்டம் வருவதே இல்லை என்று கவலைப்படுகிறார்கள்.

பாலத்தில் சரியாக இரண்டு கனரக வாகனங்கள்தான் செல்ல முடியும். ஆனால் அதன் இணைப்பில் ஆள் விழுகும் பள்ளம், இரண்டு பக்கமும் மணல் குவிப்பு என்று இருப்பதால் இருசக்கர வாகனங்கள் சறுக்கியோ, பள்ளத்தில் சிக்கியோ விழவேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு முறை உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

மேம்பாலத்தில் ஏறும் பாதை கூட இருவழிப்பாதைதான் என்பதால் கனரக வாகனங்கள் முந்திச் செல்லக்கூடாது என்பது அடிப்படை விதி.ஆனா எல்லா தனியார் பேருந்து ஓட்டுனர்களும் சில அரசுப்பேருந்து ஓட்டுனர்களும் இதை மதிப்பதே இல்லை.

சக்திவிலாஸ் என்ற ஒரு தனியார் பேருந்து அரசுப்பேருந்தை இந்த இடத்தில் முந்திச்சென்றதால் எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தன் மனைவியுடன் இருபதடி பள்ளத்தில் விழ வேண்டிய அபாயத்தில் இருந்து மயிரிழையில் தப்பினார்.

இப்படி மனித உயிரை மதிக்காத ஓட்டுனர்களுக்குதான் மிகக்கடுமையான (கொடூரமான) தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
குறைந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனையும் அங்கே வேலை செய்து பெறும் ஊதியத்தில் தவறு செய்த ஓட்டுனரின் செலவு போக மீதி தொகை எல்லாவற்றையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கே கொடுக்கவேண்டும் என்ற வகையில் தண்டனை இருந்தால் மட்டுமே பொறுக்கி ஓட்டுனர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள்.
நான் சொல்வது விதிகளை மதிக்காத ஓட்டுனர்களுக்கு மட்டுமே.

நான் ஆரம்பித்த விஷயத்தை விட்டு எங்கேயோ சென்று விட்டேன்.

இந்த பாதையில் சாலை ஓரமாக சைக்கிள்களும் இரு சக்கர வாகனங்களும் பாதுகாப்பாக செல்ல வழி ஏற்படுத்திக்கொடுப்பார்களா என்ற ஏக்கம்தான் எங்களுக்கு.வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

மிக மிக மிக குறுகிய காலத்தில் பிரமாண்டமான சட்டசபை வளாகத்தையே கட்டுபவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன?

******

வியாழன், 11 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 4

"என்னடா...எதோ ஆப்பு அது இதுன்னு சொன்ன?"என்று சுந்தர்ராஜன் கேட்கவும்,
"இல்லப்பா...அந்த வீட்டுல யாரோ தெரிஞ்சவங்க இருக்காங்களோன்னு யோசிச்சேன்." என்று வெற்றி கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

"அந்த வீட்டுல இருக்குறது மூணும் பொண்ணு.சின்ன பொண்ணு ஸ்கூல்லதான் படிக்குது.ரெண்டாவது பொண்ணு காலேஜீல படிக்கிறாளாம். அவ உனக்கு சினேகமா?...எவ்வளவு நாளா இதெல்லாம்."

"அய்யோ...அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா...அந்த பொண்ணு படிக்கிறதே என் கிளாஸ்லதான்.அதனால தெரியும்.வேற ஒண்ணும் இல்லப்பா."



"இந்த முகரைக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்.நீ ஓட்டு கேட்கப்போறேன்னு ஊர் பூராவும் சுத்தும் போதே நினைச்சேன்.இந்த மாதிரி எல்லா பொண்ணுங்களோட முகவரியைத் தெரிஞ்சுக்கதான் அலைஞ்சுருக்க.அங்க வந்து எதாவது ஏடாகூடமா பேசுன, தொலைச்சுடுவேன்.நீ கல்லூரியில என்ன வில்லங்கம் பண்றன்னு இனி நானும் தெரிஞ்சுக்கலாம்.ஒழுங்கா நேரத்தோட வீடு வந்து சேர்."என்ற சுந்தர்ராஜன் வீட்டுக்குள் சென்று விட்டார்.

"சொந்தமாகப்போறோமேன்னு நம்பி ஒரு வார்த்தை கூடுதலா பேசினேன்.அப்பாகிட்ட அது உல்டாவாயிடுச்சே.சந்தியா இனி எனக்கு தொடர்ந்து வேட்டு வெப்பாளே.இது என்னடா வெற்றி புது சோதனை."என்று மீண்டும் புலம்பிய வெற்றி, கல்லூரிக்குச் சென்றான்.

வகுப்புக்குள் சென்று,"டேய்...மாப்ள...கூடிய சீக்கிரம் என்னைய அத்தான் அப்படின்னு ஒரு பொண்ணு கூப்பிடப்போகுதுடா..."என்று பன்னீர்செல்வத்திடம் சொன்னான்.

உடனே மற்ற மாணவர்களும் சூழ்ந்து கொண்டார்கள்.மாணவிகளுக்கும் ஆச்சர்யம். ஆனால் சந்தியாவின் முகம் மட்டும் இறுக்கமாகவே இருந்தது.

"யார்றா அது...போட்டோ வெச்சிருக்கியா?"என்று ஆளாளுக்கு வெற்றியை கேள்வி கேட்டு சுற்றி வந்தார்கள்.

"இன்னைக்கு சாயந்திரம்தான் தெரியும். நாளைக்கு சொல்றேன். ஆனா ஒரு க்ளூ தர்றேன். அந்த பொண்ணு நம்ம வகுப்புலதான் இருக்கா."என்று சொன்னதும் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகள் சிலரிடமிருந்தும் 'ஓ'என்ற சத்தம்.

"பார்த்து...நம்ம சோப்பு புரொபசர் தூக்கத்துல இருந்து எழுந்து வந்துடப்போறாரு..."என்று வெற்றி சொன்னதும் வகுப்பறை மீண்டும் அதிர்ந்தது.

"ஆஹா...இந்த கொரங்கோட குடும்பம்தான் இன்னைக்கு சாயந்திரம் வரப்போகுதா...இரு உன்னைய கவனிச்சுக்குறேன்."என்று மனதுக்குள்ளேயே சந்தியா சொல்லிக்கொண்டாள்.

******
உள்ளூராக இருந்ததால் டாடா சுமோவில் பெரியவர்களும் சில பெண்களும் ஏறிக்கொள்ள மற்ற முக்கிய உறவினர்கள் தங்களின் டூவீலரிலேயே ஐயனார் கோவில் தெருவில் இருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றார்கள்.

"போட்டோவுலயே எங்களுக்கு புடிச்சுப்போச்சு.ஜாதகமும் பிரமாதமா பொருந்திருக்கு.பையனும் பொண்ணும் நேர்ல பார்த்து புடிச்சிருக்குன்னு சொல்லிட்டா மத்த விஷயங்களைப்பேசிடலாம்னுதான் இப்ப வந்துருக்கோம். உள்ளூரா இருக்குறதால எங்களோட நெருங்கிய உறவினர்கள் எல்லாம் அடிக்கடி வந்து பொண்ணைப் பார்க்கணும்னு உங்களுக்கு தொந்தரவு கொடுத்தா அது கொஞ்சம் சிரமம் பாருங்க.அதனாலதான் இப்பவே எல்லாரையும் அழைச்சுட்டு வந்துட்டேன்."சுந்தர்ராஜன்தான் முதலில் பேசினார்.

"இதுல சிரமப்படுறதுக்கு என்னங்க இருக்கு.நீங்க இத்தனை பேர் வருவோம்னு சொல்லிட்டுதானே வந்துருக்கீங்க.இந்த செயலே உங்க உயர்ந்த குணத்தை சொல்லிடுச்சு."என்று பெண்ணின் தந்தை ராமலிங்கம் லேசாக குழைந்தார்.

'அப்பாவைக் கவுத்துட்டார்.மேட்டர் ஓவர்.'என்று வெற்றி வழக்கம்போல் முணுமுணுத்தான்.

"தம்பி என்னவோ சொல்றாரே..."என்று ராமலிங்கம் சுந்தர்ராஜனிடம் கேட்டார்.

"இவன் என் சின்னப்பையன்.காலேஜீல படிக்கிறான்னு ஜாதகத்துல குறிச்சிருந்தோமே. அந்த ஆர்வக்கோளாறுதான் இது. ஆனா என் பெரிய பையன் ரொம்ப அமைதி.பேங்க்ல வேலைக்குப் போறதோட சரி. அனாவசியமா எங்கயும் அலைய மாட்டான்."என்று பெருமிதமாக சுந்தர்ராஜன் தன் மூத்த மகன் அன்புச்செல்வனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

'ஆஹா...ஒத்தப்படையா இருக்கணும்னு ஒரு எண்ணிக்கைக்காகதான் நம்மளைக் கூட்டிட்டு வந்தாருன்னு நினைச்சா அண்ணனை விலைபேச என்னைய வில்லனாக்கிடுவாரு போலிருக்கே.இப்படி நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைச்சா நாளைக்கு எனக்கு பொண்ணு கிடைக்குறதுல பிரச்சனையாயிடுமே...டேய் வெற்றி...இதுவரை எவ்வளவோ அவமானப்பட்டுருக்க...இதையும் கொஞ்சம் தாங்கிக்க.உன் அண்ணன் நல்லவனா இருந்தாலும் உன் தயவாலதான் இப்ப அவனுக்கு பொண்ணு கிடைக்கப்போகுது.'என்று வெற்றி மீண்டும் தனக்குள்ளேயே பேசிக்கொண்டான்.

"அன்னைக்கு மாணவர் தலைவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்டுவந்தப்ப அரசியல்வாதிகளே தோத்துப்போற மாதிரி பேசுன தம்பி, இப்ப வாயையே திறந்து பேச மாட்டெங்குறாரு...அப்பாவுக்கு அவ்வளவு பயமா?"என்று ராமலிங்கம் சிரித்தார்.

"இவனா...எனக்கு பயப்புடுறவனா...இப்படி எல்லாம் காமெடி பண்ணாதீங்க சார்.இவனைப்பத்திப் பேசி நேரத்தை வீணடிக்க வேணாம்.பொண்ணை வரசொல்லுங்க. ஆவுற விஷயத்தைப் பத்தி பேசுவோம்."என்று சுந்தர்ராஜன் சொல்லவும் காபி டம்ளர்கள் வைத்த டிரேயை காயத்ரி எடுத்து வந்தாள்.அவள் உடன் துணைக்கு ஒரு வயதான பெண்.

'அடச்சே...கூட வர்ற பிகர் தேறுமான்னு பார்த்தா உஷாராயிட்டாங்களே.அது சரி...இவங்க சொந்தக்கார பொண்ணு எதையாவது எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க நினைச்சாலும் அப்பாதான் விடமாட்டாரே. நமக்கு நாமே உதவி...பேசாம யாரையாவது லவ் பண்ணிடவேண்டியதுதான்.'என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தபோது காயத்ரி இவன் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

"டேய்...என்னடா யோசனை.எவ்வளவு நேரம் காத்துகிட்டு நிப்பாங்க...சீக்கிரம் எடுத்துக்கடா..."என்று சுந்தர்ராஜன் அதட்டினார்.
"அண்ணி...எனக்கு வேண்டாம்."என்று வெற்றி சொன்னதும் காயத்ரி முகத்தில் வெட்கத்துடன் ஏன் என்ற கேள்வியும் எழுந்தது.

கூடியிருந்த பலரும் வாய்விட்டு சிரித்துவிட, அன்புச்செல்வன், காயத்ரியின் அம்மா உள்ளிட்ட சிலரின் முகத்தில் புன்னகை அளவோடு வெளிப்பட்டது.

"ஏண்டா...வெற்றி...நீ இந்தப்பொண்ணுதான் அண்ணின்னு முடிவே பண்ணிட்ட மாதிரி பேசுற?...அப்புறம் பெரியவங்க நாங்க எல்லாம் எதுக்குடா...?"

"இந்த மாதிரி டயலாக் பேசுறதுக்குதான்.

மாமா...அண்ணன் விட்ட ஜொள்ளுல முக்கா டம்ளர் காபி முழு டம்ளர் ஆயிடுச்சு. அப்பா இப்பவே மருமகளுக்கு ஆதரவா என்னைய திட்ட ஆரம்பிச்சுட்டாரு.இனிமே நான் எதாவது சொன்னா எடுபடுமா என்ன.அதான் நான் முடிவே பண்ணிட்டேன்."என்று வெற்றி மிக சாதாரணமாக பேசினான்.

"அதுக்கு ஏண்டா காபியை வேணாம்னு சொல்றே...மரியாதை தெரியாதா உனக்கு."என்று சுந்தர்ராஜன் சீறினார்.

"அப்பா...நம்ம வீட்டு வென்னீரைக்
குடிக்கிறதுல இருந்து எப்படா தப்பிக்கிறதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.அதனாலதான் இந்த திடீர் முடிவு.

அண்ணி எடுத்துட்டு வந்துருக்குற காபியோட ருசியை அதோட வாசனையே சொல்லுது. எல்லா நாளும் அண்ணியே காபி போட்டு தர முடியுமா...அடிக்கடி அம்மாவோட காபியையும் குடிக்கவேண்டியதா இருக்கும். இதெல்லாம் தேவையா. புது வருஷத்தன்னைக்கு தீர்மானம் எடுக்குறதெல்லாம் சும்மா.இப்படி தடாலடியா முடிவெடுத்தாதான் அது உறுதியா இருக்கும்.

நடிகர் சிவகுமார் பல வருஷங்களா டீ,காபியையே தொடுறது இல்லையாம்.இதுவும் அவரோட இளமைக்கு ஒரு காரணம். அதுக்காக நீங்க வருத்தப்படாதீங்க அண்ணி. வெறும் தண்ணி கொடுத்தாலும் ஓ.கே...அது இல்லன்னாலும் பூரி, பொங்கல் அப்படின்னு எதாவது செஞ்சு வெச்சிருந்தாலும் கொடுங்க...நான் வேணான்னு சொல்லமாட்டேன்."என்று சொல்லவும் அந்த இடமே கலகலப்பானது.

"அன்பு...நீ பேசாததுக்கும் உன் தம்பி சேர்த்து பேசுறாண்டா..."என்ற அந்தப் பெரியவர் திரும்பி சுந்தர்ராஜனிடம்,"மச்சான்...உன் நிலமை பரிதாபம்தான்.இவனை எப்படி வெச்சு இத்தனை வருஷமா மேய்ச்சீங்க...."என்றார்.

"தாத்தா உங்களை பாட்டி வெச்சு சமாளிச்சதைக்காட்டிலுமா நான் படுத்துறேன்."என்று வெற்றி அவரை வார்விடவும், இதற்கும் மற்றவர்கள் சிரித்தார்கள்.

"மாமா...இவன் கிட்ட பேச்சுக்கொடுக்காதீங்க...எது சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுவான்.பொண்ணும் பையனும் தனியா பேசிக்கட்டும்.அவங்களுக்கு சம்மதம்னா நாம மற்ற ஏற்பாடுகளை செய்யலாம்."என்று வந்த விஷயத்தில் சுந்தர்ராஜன் தீவிரமானார்.
******
அடுத்த நாள், தன் தோழியின் வீட்டுக்கு சந்தியா சென்றுகொண்டிருந்தாள்.அங்கிருந்துதான் இருவரும் கல்லூரிக்குச் செல்வது வழக்கம்.
கடைத்தெரு சென்றுவிட்டுத் திரும்பிய வெற்றி, சந்தியாவை ஓவர்டேக் செய்யும்போது,"மிஸ் சந்தியா...இனி நீங்க என்னைய எப்படி கூப்பிடுவீங்க?"என்றான்.

"அட லூசு..."என்று ஆரம்பித்து அவள் பேசியதைக் கேட்ட வெற்றியின் முகத்தில்...

4 - தொடரும்.

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
******
நான்காம் அத்தியாயத்திற்கான விளம்பரத்தில் விஜய் - அசின் ஆகியோருக்கு பின்னணியாக நான் வைத்திருக்கும் இடம் திருவாரூர் - குளுந்தான்குளம்தான்.முதல் அத்தியாய விளம்பரத்தில் வைகறைப்பொழுதில் இருந்த இந்த இடம்தான் மதிய நேர வெளிச்சத்தில் கொரியா மொபைல் போன் கேமராவின் உதவியுடன் உங்களுக்கு காட்சியளிக்கிறது.
இந்த பகுதிக்கு மற்றொரு சிறப்பு உண்டு.
நம் தமிழக முதல்வர் கலைஞரின் சிறுவயது தோழர்தான் இப்போது திருவாரூர் நகர்மன்றத் தலைவர். அவர் போட்டியிட்டு வென்ற திருவாரூர் நகராட்சியின் பதினைந்தாவது வார்டுதான் இது.
இப்படி சாக்கடை வழிந்தோடும் வீதியும் இந்த இடம்தான்.
இதைத்தான் சிறப்புன்னு சொல்றியான்னு நீங்க காதைத் திருகாதீங்க.அதிகாரத்துல இருக்குறவங்களை நான் என்ன சொல்றது?
******
படங்களைப் பெரியதாக்கிப் பார்க்க படத்தின் மீதே க்ளிக் செய்யவும்.

புதன், 10 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 3

"ஆயிரம் ரூபாய்க்கா சோப்பு வாங்கிப் போட்டுக் குளிக்கப்போற?...ரொம்ப பில்டப் கொடுக்காம சொல்லு..."என்று பேராசிரியர் சாதாரணமாகத்தான் கேட்டார்.
"ரின் சோப்."என்று துணிக்குரிய சலவை சோப்பின் பெயரை சொன்னதும் மற்ற மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க, பேராசிரியரின் முகம் சுருங்கி விட்டது.

"என்ன கிண்டலா?"

"இல்ல சார்.உங்க மிசஸ் கிட்ட வேணுன்னா கேளுங்க...காஸ்ட்லியான புடவையைத் துவைக்க பயன்படுத்துற காஸ்ட்லியான சோப்."என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னதும் உடனடியாக வெற்றியை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தார்.

"அது சரி...நீ குளிக்கிறதே இல்லைன்னு சொன்னாங்களே...ஆனா ரின் சோப் போட்டு குளிக்கிறேன்னு நீ ராங் டேட்டாதானே கொடுக்குற?"என்று சமாளிக்கப்பார்த்தார்.

"குருநாதரான நீங்க குளிச்சே பல வருஷம் ஆகுது.நான் உங்களுடைய உண்மையான சிஷ்யன் சார்."என்ற வெற்றி எதற்கும் துணிந்து விட்டதாகத் தோன்றியது.



'இவன் பேசுறதுலயே பி.ஹெச்.டி பண்ணிட்டு வந்துருப்பான் போலிருக்கே.'என்று தனக்குள்ளேயே முணுமுணுத்த பேராசிரியர், இவனிடம் நேரடியாகப் பேசி புண்ணியம் இல்லை என்று உணர்ந்தார்.

"ஏய்...வெற்றி...இந்த மாதிரி வெட்டித்தனமா பேசி நேரத்தை வீணடிக்கிறியா...ஹெச். ஓ. டி ரூமுக்கு வா.உனக்கு தண்டனை கொடுத்தாதான் மத்தவங்களுக்கு பயம் இருக்கும்."என்று சொன்னதும் மற்ற மாணவர்களும் மாணவிகளும் வெற்றிக்கு ஆப்புதான் என்று முடிவு செய்துவிட்டார்கள்.

"ஓ...நான் ரெடி...வாங்க...நீங்க பேசுனதை நானும் சொல்றேன்.யார்மேல நடவடிக்கை எடுக்குறதுன்னு அவரே முடிவு பண்ணட்டும்."என்ற வெற்றி அவன் அமர்ந்திருந்த இடத்தை விட்டு பேராசிரியரின் அருகில் சென்றான்.

"நான் என்ன பேசினேன்...ரின் சோப் போட்டு குளிக்கிறேன் அப்படின்னு திமிரா பேசினது யாரு...பக்கத்துல ஒரு பொண்ணு இருந்தாலே உங்க சவுண்டு அதிகமாயிடும். இப்ப கேட்கவா வேணும்..."

"சார்...எங்க வயசுக்கு இந்த மாதிரி தோணலைன்னாதான் அது அப்நார்மல்.பொண்ணுங்களைப்பார்த்ததும் பசங்க ரத்தம் சுறுசுறுப்பாகும்.பொண்ணுங்களுக்கு பசங்களைப்பார்த்ததும் உள்ளுக்குள்ள பொங்கும். இதெல்லாம் அவங்க செய்யலை. ஹார்மோன் பண்ற வேலை. இப்படி எல்லாம் நடக்கலைன்னாதான் எதோ கோளாறுன்னு அர்த்தம்.என்ன...எதுக்கும் ஒரு வரையறை உண்டு. அத்துமீறினா யாராச்சும் அடங்க வெச்சிடுவாங்க.இது எனக்கு தெரியும்.

ஆனா எங்களுக்கு வழிகாட்டியா இருந்து நாங்க தப்பா வார்த்தைகளை விட்டா கண்டிக்க வேண்டிய நீங்க பேசுன வார்த்தை எதுவும் சரியில்லையே."என்று வெற்றி சொன்னதும் அடுத்து அவன் என்ன சொல்லப்போகிறான் என்று மாணவர்கள் மாணவிகளுடன் பேராசிரியரும் ஆர்வமானார்.

"ராம்குமார் கறுப்பா பிறந்தது அவன் தப்பா.அவங்க இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிகிட்டு இருக்காங்க.வகுப்புல நாங்க இத்தனை பேரு இருக்கும்போது இவன் கலரைப் பார்த்தா குளிக்கவே மாட்டான்னு தெரியுதுன்னு நீங்க எப்படி சொல்லலாம்.

இந்த மாதிரி வார்த்தைகளை நாங்க பயன்படுத்தினா எங்க தலையில தட்ட வேண்டிய நீங்களே இப்படின்னா நான் ஹெச் .ஓ.டி கிட்டதான் போகணும்னு நினைச்சிருந்தேன். பரவாயில்லை. நீங்களே கூப்பிட்டுட்டீங்க...வாங்க போகலாம்.ஹெச். ஓ.டி என்ன சொல்வாரோ...

ஆனா நான் இந்த பிரச்சனையை வெளியில கொண்டு போனா சாதிக்கலவரம் வருமேன்னுதான் கொஞ்சம் யோசிக்கிறேன்."என்றவன் சட்டென்று ராம்குமார் பக்கம் திரும்பி,"டேய்...நான் உனக்காக இவரைப் பகைச்சுக்குறேன்.நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா சார் என்னைய நல்லவரு...வல்லவருன்னுதான் சொன்னாரு. வெற்றி கொஞ்சம் செவிடு...அவன் தப்பா காதுல வாங்கியிருக்கான்னு சொல்லி எனக்கே ஆப்பு வெச்சுடமாட்டியே."என்றான்.

"எது நடந்தாலும் நான் உன் பக்கம் இருப்பேண்டா..."என்று அவன் மறுபடி கண்கள் கலங்கினான்.

"இப்படியே நின்னுகிட்டே இருந்தா எப்படி...வாங்க சார்...போகலாம்."என்று வெற்றி வகுப்பறையை விட்டு வெளியேறப்போனான்.

"என்னைக்காவது நீ என் கிட்ட வசமா சிக்காமயா போயிடுவ?...அன்னைக்கு கவனிச்சுக்குறேன்...இப்ப போய் உட்கார்." என்று பேராசிரியர் எங்கேயோ பார்த்துக்கொண்டு சொன்னார்.

"எஸ்கேப்..."என்று வெற்றி ஒரு சத்தம் கொடுத்தான்.

பேராசிரியர் இவனைப் பார்த்து முறைக்கவும்,"நான் என்னைச் சொன்னேன்."என்று கூறிவிட்டு ஏற்கனவே அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்றான்.

இந்த ஒரே ஒரு காரணத்தால்தான் வணிகவியல் துறையில் உள்ள பெரும்பாலான  பேராசிரியர்கள் வெற்றியை எதுவும் கேட்பதில்லை.

சிலர் அவன் மீது வன்மமாக இருப்பதால் சின்ன பிரச்சனையிலாவது சிக்க மாட்டானா என்றுதான் காத்திருந்தார்கள்.

ஆனால் வெற்றி அந்த வயதுக்கே உரிய குறும்புகளோடு இருந்தாலும் அவன் அதிகமாக மூக்கை நுழைக்கும் சம்பவங்களில் எதிராளியின் மீதே முழுத் தவறும் இருந்தது. இதனால் எல்லாப் பேராசிரியர்களும் இவன் விஷயத்தில் செயலற்றவர்களானார்கள்.

முதல் செமஸ்டர் முடிந்து தேர்வுமுடிவுகளும் வந்தன. இருபத்தெட்டு மாணவிகளும் எழுபது சதவீதத்துக்குமேல் மதிப்பெண் எடுத்திருந்தார்கள்.மாணவர்களில் வெற்றியைத் தவிர மற்ற அனைவரும் அறுபது சதவீதத்தை எட்டவில்லை.

மதிப்பெண் பட்டியலை வாசித்த பேராசிரியர், எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க என்று சொன்னதும் முதல் ஆளாக மதிப்பெண்ணை மீண்டும் மீண்டும் கேட்டது வெற்றிதான்.

ஒரு நிலையில் வெறுத்துப்போன அந்த பேராசிரியர்,"இந்தா...லிஸ்ட்...நல்ல பூதக்கண்ணாடியை வெச்சு பார்த்துட்டு கொடு..."என்று அவனிடமே மதிப்பெண் பட்டியலைத் தந்துவிட்டார்.

விஷயம் இதுதான்.வெற்றி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் மட்டும் பார்டரில் பாஸ் பண்ணியிருந்தான். ஆனால் கணக்கு உள்ளிட்ட பிரதான பாடங்கள் மற்றும் துணைப்பாடங்களில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்ததுதான் அவனாலேயே நம்ப முடியவில்லை.சராசரி எண்பத்தாறு சதவீதம் வந்தது.

அந்த வகுப்பு நேரம் முடிந்து ஆசிரியர் வெளியில் சென்றதும்,"மாப்ள...நம்ம மானத்தைக் காப்பாத்திட்டடா..."என்று வெற்றியை சூழ்ந்து கொண்டார்கள்.

அடுத்த வகுப்பு, சோப்பு பேராசிரியர்.

வந்ததுமே வெற்றியை எழுந்து நிற்க சொன்னார்.

"நீ பரிட்சை எழுதுன ஹாலுக்கு நான் மட்டும் சூப்பர்வைசரா வந்திருக்கணும்...கண்டிப்பா நீ மாட்டிருப்படா..."

"கடைசி பெஞ்ச்ல இருந்தா மார்க் வாங்க கூடாதுன்னு உங்களுக்கு யாரு சார் சொன்னா...ரவிஷங்கர் சார்கிட்ட போய்தான் அக்கவுண்ட் ரூல்ஸ் கத்துகிட்டேன்.இந்த அடிப்படையை ஒழுங்கா புரிஞ்சுகிட்டா உலகத்துல எந்த கம்பெனி கணக்கா இருந்தாலும் போட்டுடலாம்னுதானே சொல்லுவாங்க.அவரு எனக்கு தெளிவா புரிய வெச்சுட்டாரு.மார்க் எடுத்துட்டேன்."வெற்றி தன்னம்பிக்கையுடன் பதில் சொன்னான்.

ரவிஷங்கர் பெயரை சொன்னதும் இந்த பேராசிரியரின் முகத்தில் எரிச்சல்.மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் மட்டும் போதாது. நம்முடைய சில அலட்சியம்தான் அவர்கள் வீணாப்போவதற்கு காரணம் என்று அழுத்தமாக சொல்பவர்தான் ரவிஷங்கர். அதனால் சக பேராசிரியர்களுக்கே இவரைப் பிடிக்காது.

"அப்புறம் ஏன் பத்து தடவை மார்க் ஷீட் வாங்கிப்பார்த்த?"

"மெயின் பேப்பர்கள்ல எடுத்த மார்க்குல ஒண்ணும் சந்தேகம் இல்ல சார்.தமிழ் கூட ஓ.கே. ஆனா ஆங்கிலத்துல எப்படி பாஸ் பண்ணினேன்னு எனக்கே புரியலை."என்றதும் மாணவர்கள் மத்தியில் உற்சாக கூச்சல்.

இதற்கு அந்த பேராசிரியரால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை.

அப்போது ஹெச்.ஓ.டி இந்த வகுப்புக்குள் நுழைந்தார்.

எல்லாரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள்.

"உட்காருங்கப்பா."என்றவர், வெற்றியைப் பார்த்து"தம்பி...வாழ்த்துக்கள்.நம்ம கல்லூரியில இந்த டிபார்ட்மெண்ட் ஆரம்பிச்சு இருபத்தஞ்சு வருஷம் ஆகுது.முதல் செமஸ்டர்லயே யாரும் இவ்வளவு மார்க் எடுத்தது இல்லை.உன் பேர்ல அடிக்கடி பெட்டி கேஸ் மாதிரி ஏகப்பட்ட புகார் வருது. ஆனா எல்லாமும் நேர்மையா நடக்கணும்னு நினைக்கிற பையன்னு ஒரு குற்றச்சாட்டைத் தவிர வேறு எதையும் சொல்லமுடியலை.அதனாலதான் விட்டு வெச்சிருக்கோம்.

இனியாவது படிப்புல முழு கவனம் செலுத்து.ஏன்னா இந்த ஒரு செமஸ்டர்ல நிறைய மார்க் எடுத்தா போதாது.தொடர்ந்து இதே அளவு மார்க் எடுத்தாதான் முதலிடத்தை தக்க வெச்சுக்க முடியும்."என்றார்.

"சார்...என்னைய நம்பாதீங்க.நாங்க எல்லாம் பவுலர் மாதிரி. அடிச்சா சிக்சர். சொதப்புனா கிளீன் போல்டு. இப்ப இவ்வளவு மார்க் வாங்கின நான் அடுத்த செமஸ்டர்லயே எல்லா சப்ஜெக்ட்லயும் அரியர் வைக்க வாய்ப்பு உண்டு.

நம்பகமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்னு சொல்லணும்னா இவங்கதான் சார்."என்று பெண்களைக் காட்டினான்.

"மார்க் எடுக்க மாட்டேன்னு எவ்வளவு அழகா சொல்றான் பாரு..."என்று சிரித்த ஹெச்.ஓ.டி மாணவிகளைப் பார்த்து,"இதுக்குப் பேர்தாம்மா தன்னடக்கம்.விளையாட்டுல கூட ஒருத்தர் வெற்றி பெற்றா இன்னொருத்தர் தோல்வி அடைஞ்சுதான் ஆகணும்.

ஆனா படிப்புல அப்படி இல்லை.எல்லாருமே நூறுசதவீதம் எடுக்கலாம். யாருக்கும் பாதிப்பு இல்லை.அதுலயும் உங்க  படிப்பு இருக்கே...இது எல்லா இடங்களிலும் அற்புதமான வேலை வாய்ப்பை அடக்கி வெச்சிருக்குற அமுதசுரபி.

சூப்பர் மார்க்கெட்ல இருந்து விண்வெளி ஆராய்ச்சிமையம், பெரிய மருத்துவமனை,மென்பொருள் நிறுவனம்னு எல்லா இடத்துலயும் அக்கவுண்ட் படிச்சவங்களுக்கு ஒரு வேலையாவது இல்லாம போகாது. அதனால தன்னம்பிக்கையோட படிங்க. எல்லாரும் சூப்பரா மார்க் எடுங்க.

போட்டி இருக்கட்டும். உங்க விஷயத்துல பொறாமை வேண்டாம்."என்று சொன்ன ஹெச்.ஓ.டி கிளம்பிவிட்டார்.

'குருட்டுப்பூனை விட்டத்துல பாய்ந்ததுன்னு சொல்லுவாங்க.அந்த மாதிரி முதல் செமஸ்டர்ல ஓஹோ புரொடக்ஷன்சா மார்க் எடுத்தது தப்பா போச்சே.ஹெச்.ஓ.டி வேற நம்பிக்கையோட சொல்லிட்டுப் போறாரு. அவருகிட்ட என்னைய நம்பாதீங்க... அப்படின்னு கேர்ள்சை காண்பிச்சா தன்னடக்கம்னு சொல்லிட்டுப்போறாரு...சரி...எவ்வளவோ பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டோமா.'என்று வெற்றி தனக்குத்தானே பேசிக்கொண்டான்.

"அடுத்த செமஸ்ட்டர்ல எப்படி காப்பி அடிக்கிறதுன்னு யோசிக்கிறியா"என்று சோப்பு பேராசிரியர் கேட்டார்.

"உங்களை மாதிரியே நான் இருப்பேன்னு நினைக்காதீங்க சார்.ஒருத்தன் தற்கொலை செஞ்சுக்க நினைச்சு உங்க கிட்ட வந்தா அந்த நொடியே அவன் செத்துடுவான் சார்.உங்களை மாதிரி ஒரு அவ நம்பிக்கையை விதைக்கிற ஆசிரியரை நான் பார்த்ததே இல்லை."என்று வெற்றி சொன்னதும் பேராசிரியர் வாயை மூடிக்கொண்டார்.

வெற்றியோட கல்லூரி அனுபவத்தை விவரிச்சுகிட்டே போனா கதை முடிய மாசக்கணக்காயிடும்.அதனால முதல் வருஷப் படிப்புல இருந்து மூணாவது வருஷத்துக்கு ஆறு நட்சத்திர எழுத்துலயே மாறிடுவோம்.யாரும் தமிழ் பிளாக் அப்படின்னு படம் எடுத்தா இதைக் கிண்டல் செய்யாதீங்கப்பா.
******
வெற்றி - வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறான்.

மூன்று ஆண்டுகளும் வெற்றி சிக்சராக அடித்தது வணிகவியல் தொடர்பான பாடங்களில்தான். இரண்டாவது செமஸ்டரில் இருந்து மூன்று ஆங்கிலத் தாள்களிலும் அவன் பாஸ் மார்க் எடுக்கும் முடிவில் இல்லை என்றுதான் மற்றவர்கள் நினைத்தார்கள்.
வெற்றி சக மாணவிகள் பலரிடமும் நல்ல தோழனாகப் பழகினான்.ஆனால் எப்போதுமே சந்தியாவுக்கும் அவனுக்கும் மட்டும் அடிக்கடி முட்டிக்கொண்டது. சந்தியாவின் உள் மனம் அவனை வெறுக்கச் சொல்லவில்லை என்றாலும் எதோ ஒரு ஈகோ அவனிடம் மனம் விட்டுப் பழக நினைப்பதை தடுத்தது.

அன்று புதன்கிழமை.சந்தியா, கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.

அவள் அம்மா சிவகாமி,"சந்தியா...சாயந்திரம் சீக்கிரம் வந்துடு.மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க..."என்றாள்.

"சரிம்மா..." என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டுக்கிளம்பினாள்.

கட் பண்ணினா, வெற்றியின் வீடு.(கட்பண்ணலைன்னா?)

"வெற்றி...இன்னைக்கும் வெட்டித்தனமா சுத்திகிட்டு இருக்காம நேரத்தோட வீடு வந்து சேர்.சாயந்திரம் பொண்ணு பார்க்கப்போறோம்."என்று அவன் அப்பா சொன்னார்.

"இதுக்கெல்லாம் நான் எதுக்குப்பா...நீங்க போய் பார்த்துட்டு வந்தா பத்தாதா?"

"அப்படியே மண்டையில போட்டேன்னா...எங்களுக்கு தெரியாதா...பெரும்பாலும் என் பேச்சைக் கேட்கவே மாட்ட.இப்பவாச்சும் எதிர்த்துப் பேசாம சொன்னபடி செய்."என்று அவரின் குரல் கடுமையானது.

"எந்த ஊருக்குப்பா..."

"வெளியூரா இருந்தா மத்தியானமே கிளம்ப மாட்டோமா?...இங்க ஐயனார் கோயில் தெருவுலதாண்டா. அந்த பாராமெடிக்கல் காலேஜீக்குப் பக்கத்து வீடு."என்ற அவர் அலுவலகம் கிளம்பிவிட்டார்.

வெற்றிக்குதான் சொரேர் என்றது.

இதைக்கேட்டதும் அவன்,"அய்யய்யோ...அது அந்த சந்தியாவோட வீடாச்சே...மாப்பு...உனக்கு வெச்சுட்டாங்கடா ஆப்பு..."என்று சத்தமாகவே பேசிவிட்டான்.

வெளியில் கிளம்பிய அவன் தந்தை, "என்னடா சொன்ன..."என்று திரும்பி வந்துவிட்டார்.

3 - தொடரும்.

******

திருவாரூர் திருவிழா - தொடர்கதை 1
திருவாரூர் திருவிழா - தொடர்கதை 2

படங்களைப்பெரியதாக்கிப் பார்க்க படத்தின் மீதே க்ளிக் செய்யவும்.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 2

மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் திருவாரூர் அண்ணாசிலைக்கு மாலை போட இறங்கியதும் "வருங்கால முதல்வர் மூர்த்தி வாழ்க..."என்று வெற்றி மிகப்பெரிய குரலில் கோஷம் போட்டதும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களும் சாலையில் போய்க்கொண்டு இருந்த பொதுமக்களும் ஸ்தம்பித்துப்போனார்கள்.
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி திகைச்சுப்போயிட்டீங்க? நம்ம முன்னாள் ஜனாதிபதி ஐயாவே கனவு காணுங்கள்னு சொல்லியிருக்கார்.நாங்களும் ஆசைப்படுறதுல என்ன தப்பு?...வருங்கால முதல்வர் மூர்த்தி வாழ்க..." என்று மீண்டும் கோஷம் போட்ட வெற்றி, இன்ஸ்பெக்டர் அருகில் சென்று"சார்...நம்ம முதலமைச்சரே இந்த ஊர்ல படிச்சு வளர்ந்தவர்தானே. ஆசைப்படுறது தப்பு இல்லை. ஆனா அதை நேர்மையான வழியில அடைய முயற்சி செய்யணும்....

இப்படி நாங்க பேசுறதை நீங்க கேட்டுகிட்டு இருக்க காரணம் என்ன? மாணவர்கள் அப்படின்னுங்குற ஒரே தகுதிதான்.இந்த சமயத்துல இந்த மாதிரி எல்லாம் வாழ்ந்து பார்த்துடணும். படிப்பு முடிஞ்சுட்டா அப்புறம் நாங்க உலகத்தோட எந்த மூலையில என்ன செஞ்சுகிட்டு கிடப்போம்னு யாருக்கு தெரியும்?...நீங்களும் உங்களோட மாணவர் பருவத்தை மலரும் நினைவுகளா நினைச்சுப்பார்த்து எங்களை வாழ்த்துங்க சார்..."என்றான்.
இப்போது இன்ஸ்பெக்டர் முகத்தில் புன்னகை.

"நல்லா பேசுற தம்பி...யாருக்கும் துன்பம் செய்யாம உங்க மாணவர் பருவத்தை கொண்டாடுங்க..."என்று அவர் பச்சைக்கொடி காட்டி விடவே, இப்போது வெற்றியின் குரலில் மேலும் உற்சாகம்.

அடுத்த இரண்டு நாட்கள் திருவாரூர் முழுவதும் இந்த மாணவர்களைப் பற்றிய பேச்சுதான்.
***
அடுத்த நாள் வகுப்புக்கு வந்த பேராசிரியர் சாமிநாதன்,"என்னப்பா, வெட்டி...நேத்து ஒரே கலக்கலாமே...அதை எல்லாம் நல்லாவே செய்யுற...எழுந்து அக்கவுண்டன்சியில உள்ள கோல்டன் ரூல் என்னன்னு சொல்லு." என்றார்.

"கோல்டன் ரூலா? அப்படின்னா என்ன சார்..." இதைக்கேட்டதும் மாணவிகள் எல்லாரும் சிரித்தார்கள்.

அதைக் கவனித்த வெற்றி,'அப்பாடா...பசங்கள்ல ஒருத்தனுக்கும் இந்த கேள்விக்கு விடை தெரியாது போலிருக்கு...கம்பெனி கொடுக்க இருக்கானுங்க.'என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தான்.

"வெட்டி...கொரங்கு சேட்டை எல்லாம் பண்ணினா கூடப்படிக்கிற பசங்க, பொண்ணுங்க எல்லாம் சிரிப்பாங்கதான். ஆனா படிப்புலயும் பெரிய ஆளா இருந்தாதான் இவங்க கிட்டயே மதிப்பு இருக்கும். நான் உன்னை கேள்வி கேட்டா நீ என்கிட்ட எதிர் கேள்வி கேட்டு ஹீரோவாயிடலாம்னு பார்க்குறியா?

ஒழுங்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு."என்று முறைத்தார்.

"உங்களை காமெடி பீசா நினைச்சதா நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க சார்.உண்மையிலேயே எனக்கு பதில் தெரியாது.நீங்களே சொல்லிடுங்களேன்."என்ற வெற்றியை வகுப்பறை மொத்தமும் பரிதாபமாக பார்த்தது.

"அக்கவுண்ட்ல உள்ள அடிப்படை பாடம் தெரியாம நீ பிளஸ்டூவைத் தாண்டி காலேஜீக்கும் வந்துட்ட.இதுதான் நேரக்கொடுமை.அந்த ஆறு ரூல் ஒழுங்கா புரிஞ்சா உலகத்துல உள்ள எந்த நிறுவனத்து கணக்கையும் சரியா செஞ்சுடலாம். இதை உனக்கு பள்ளிக்கூடத்துல சொல்லிக்கொடுக்கலையா?" என்று சாமிநாதன் கேட்டபோது அவரது குரலில் முன்பிருந்த கடுமை இல்லை.

"சார் நான் பத்தாவதுல ரெண்டு அட்டை. பிரைவேட்டா அதை எழுதி பாஸ் பண்ணினதும் பிளஸ்டூவும் இப்படியே பிரைவேட்டாதான் முடிச்சேன்.நீங்க சொன்னது பதினோராம் வகுப்புல இருந்துருக்கலாம். நான் நேரடியா பிளஸ்டூ சார்."

"அது சரி...இனிமேலாச்சும் இது மாதிரி அடிப்படை விஷயங்களை ஒழுங்கா தெரிஞ்சுக்க வழி பாரு. அடிப்படை விதிகள் தெரியாம ஒருத்தன் ஒரு பாடம் படிச்சு கல்லூரி வரை வர்ற. நம்ம கல்வி முறையோட யோக்கியதை இப்படி இருக்கு.உன்னைக் குத்தம் சொல்லி என்ன ஆகப்போகுது."என்ற சாமி நாதன் வெற்றியை உட்கார சொன்னார்.

இப்போது மாணவிகளில் பலர் வெற்றியைப் பார்த்த பார்வையில் ஒருவித ஏளனம் தெரிந்தது. திருவாரூரில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து மிக அதிக மதிப்பெண்களுடன் இருபத்து எட்டு பேர் சேர்ந்திருந்தார்கள். மாணவர்களில் பலர் வெளியூர் பள்ளியில் படித்து வந்தவர்கள் என்பதால் இவனைப் பார்த்த பார்வையில் தவறாக எதுவும் இல்லை.

வெற்றி, மாணவிகளிடம் சென்று,"பஸ்சுல உட்கார்ந்தா என்ன, புட்போர்டு அடிச்சா என்ன? திருச்சி போற பஸ்சுல ஏறுனா சீட்டுல உட்கார்ந்து இருக்குறவங்களை மட்டும் சென்னைக்கா அழைச்சுட்டு போகப்போறாங்க? முதல்ல மனுஷனை மதிக்க கத்துக்குங்க..."என்று சீறினான்.

"ஹலோ...உங்க கிட்ட நாங்க எதாவது சொன்னோமா?...சும்மா கத்தாம போய் உட்காருங்க..." என்று ஒரு மாணவி பதிலளிக்கவும் அவள் தோழிகள்,"பேசாம இருடி..."என்றார்கள்.

"மிஸ் சந்தியா...கொஞ்சம் அடங்குங்க...நீங்க நூறுக்கு நூத்திப் பத்து மார்க் எடுத்தா அதை பத்திரமா நீங்களே வெச்சுக்குங்க.யார் கேட்டா? எல்லாரும் எல்லா வேலையும் செஞ்சுட முடியாது. அதை மனசுல வெச்சுகிட்டா போதும்." என்று அங்கிருந்து தன் இடத்தில் வந்து அமர்ந்தான்.

"சந்தியா...அவன் நம்ம புரொபசரையே மடக்கி பதில் சொல்ல விடாம திணற வெச்சுட்டான். அதனால இப்ப அவனை யாரும் கண்டுக்குறது இல்லை. ஆனா ஒரு வெறியோடதான் இருப்பாங்க.என்னைக்காவது வசமா சிக்கப்போறான் பாரு...அப்ப நாம வேடிக்கை பார்ப்போம். இப்ப நம்ம வேலையை மட்டும் பார்க்குறது நல்லது."என்று அவள் தோழி ஜெயந்தி சொல்லவும் சந்தியா அமைதியானாள்.

***
ஐம்பது இடங்களுக்கு ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்தாலும் மூன்று முறை வெயிட்டிங் லிஸ்ட் போட்டும் ஒரு இடம் காலியாக இருந்தது. ஒரு அரசியல் பிரமுகர் மூலமாக அந்த இடத்தைக் கைப்பற்றியவன்தான் வெற்றி. அவன் முதலாமாண்டு வகுப்பில் சேர்ந்த சில தினங்களிலேயே பேராசிரியர்கள் யாரும் அவ்வளவாக கண்டுகொள்வது இல்லை.

இதற்குக் காரணமும் ஒரு பேராசிரியர்தான். புள்ளியியல் பாடம் நடத்த வந்த அவர், சரியான டேட்டா, தவறான டேட்டா என்பதற்கு ஒரு உதாரணம் சொன்னார். அதில் தவறான விஷயத்தை சொல்லிவிட, வெற்றி இந்த வார்த்தைகளை வைத்தே அந்த பேராசிரியரை மடக்கி விட்டான். அதிலிருந்து எல்லா பேராசிரியர்களும் எச்சரிக்கையாகி விட்டார்கள்.
அந்த பேராசிரியர், ஒரு நாள்,"ஒரு ஊரில் ஒரு லட்சம் பேர்கிட்ட நேரடியா நீங்க என்ன சோப் போட்டு குளிக்கிறீங்க அப்படின்னு கேட்டு தகவல் சேகரிக்கிறோம்னா அதுக்குப் பேர்தான் டேட்டா கலெக்ஷன். அதாவது தகவல் சேகரிப்பு.

அதுல மக்கள் உண்மையான தகவலை சொன்னா அதுக்குப்பேர் ரைட் டேட்டா.ஐ மீன் சரியான தகவல். இதுல நிறைய பேர் தப்பான தகவல் சொல்லவும் வாய்ப்பு இருக்கு."என்றவர் வெற்றிக்கு அருகில் அமர்ந்திருந்த ராம்குமாரை எழுந்து நிற்கச் சொன்னார்.

தயக்கத்துடனேயே அவன் எழுந்தான்.

"ஒண்ணும் பயப்படாத...இவனைக்கவனிங்க...இவன் இருக்குறதைப்பார்த்தா குளிக்கவே மாட்டான்னு நினைக்குறேன்.ஆனா இவன் கிட்ட சர்வே எடுக்கும்போது லக்ஸ் சோப் போட்டுக் குளிக்கிறேன்னு சொல்லிட்டான்னா அப்பதான் ரைட் டேட்டா ராங் டேட்டாவாயிடுது."என்று பேராசிரியர் சொன்னதும் வெற்றியைத் தவிர அனைவரும் சிரித்தார்கள்.

ராம்குமாரின் கண்கள் கலங்கி விட்டன.

'இந்த ஆள் ரத்த சோகை புடிச்சு வெளுத்துருக்காரு.அந்த திமிருதான் இப்படி பேச சொல்லுது.'என்று முனகினான்.

"ஏய் வெற்றி...என்ன வெட்டித்தனமா எதோ பேசிகிட்டு இருக்க..."

"ஒண்ணும் இல்ல சார்."

"நான் பார்த்தேன். எழுந்து நில்லு."

வெற்றி எதுவும் பேசாமல் எழுந்து நின்றான்.

"நீ எதுவோ சொன்ன.நான் திட்ட மாட்டேன். நீ என்ன பேசினன்னு மரியாதையா சொல்லிடு."

"நாங்க எதுவும் சொல்லலீங்க சார்."

"நீ மட்டும்தானடா பேசின...இப்ப நாங்க எதுவும் சொல்லலைன்னா என்ன அர்த்தம்."

"நீங்க மரியாதையா பேசுன்னு சொன்னதை நான் மதிக்கிறேன்னு அர்த்தம்."இதைக் கேட்டு மற்ற மாணவர்கள் மாணவிகள் சேர்ந்து சிரித்துவிட, பேராசிரியர் கோபமானார்.

"சரி...நீ என்ன சோப் போட்டு குளிக்கிற?"

"அது கொஞ்சம் காஸ்ட்லியான சோப்பு சார்."

"அதுதான் என்னதுன்னு சொல்லு. பேர் இருக்குல்ல?"

பேராசிரியரின் இந்தக் கேள்விக்கு வெற்றி விடை சொன்னதும் வகுப்பறையில் இருந்த வெற்றியையும் பேராசிரியரையும் தவிர மற்ற அனைவரும் சிரித்தார்கள்.

பேராசிரியரே ஒருசில நொடிகள் தடுமாறித்தான் போனார்.

2-தொடரும்.
******
திருவாரூரைப் பற்றி பெருமையாக உலகத்திற்கு அறிமுகம் செய்யும் விஷயங்கள் பெரிய கோயிலும் ஆழித்தேரும்தான்.ஐந்து வேலி பரப்பளவில் அமைந்திருக்கும் திருவாரூர் பெரிய கோயிலின் பெரிய சன்னதிகளில் ஒன்று அசலேஸ்வரர் கோயில்.தஞ்சை பெரிய கோயிலை நிலை நிறுத்தி தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்த ராஜராஜசோழன்  தன்னுடைய இளைமை பிராயத்தில் திருவாரூர் தியாகராஜரை வந்து வழிபட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்தக் கோயிலில் கீழராஜ கோபுரம், வடக்கு கோபுரம் என்று பல பகுதிகள் பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றனவாம். ஆனால் இந்த ஆலயம் உருவான காலம் யாராலும் கணிக்கப்படவில்லை.

அசலேஸ்வரர் சன்னதிக்கும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த சன்னதியை இராஜராஜசோழனின் பாட்டி செம்பியன்மாதேவி திருப்பணி செய்ததாக வரலாறு உண்டு. நானும் பிறந்து வளர்ந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கும் திருவாரூரைப்பற்றிய வரலாறை முழுவதுமாக  பதிவிட்டால்   எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.

இந்த அசலேஸ்வரர் சன்னதியின் விமான அமைப்பு ராஜராஜன் தஞ்சை பெருவுடையார் கோயிலின் கருவறை விமானத்தை அமைக்க தூண்டுகோலாக இருந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு.

இந்த ஆலய விமானத்தை நான் 2002ம் ஆண்டு நண்பரின் ஆட்டோ போகஸ் வசதியுள்ள யாஷிகா கேமராவால் படம்பிடித்தேன்.இந்த இடத்தை சூரியன் மறையும் நேரத்தில் பதிவு செய்த ஒளிப்படம் இணையத்தில் கிடைத்தது. அதைத்தான் ஜெயம்ரவி, ஜோதிகா உருவங்களுக்குப் பின்னணியாக்கியிருக்கிறேன்.

நாளை திருவாரூர் திருவிழாவின் மூன்றாவது அத்தியாயத்தில் சந்திப்போம்.

பின் குத்தாத குறிப்பு:வழக்கம் போல்தான். ஒளிப்படங்களைப் பெரியதாக பார்க்க படங்களின் மீதே  க்ளிக் செய்யவவும்.

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1