Search This Blog

அங்காடித்தெரு பாதிப்பில் ஒரு தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அங்காடித்தெரு பாதிப்பில் ஒரு தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 3

"ஏய்...அந்த பேஷண்ட்ஸ் பணம் கொடுக்காம போயிட்டாங்கன்னா உன் சம்பளத்துல இருந்துதான் புடுங்குவாங்க. போய் வேலையைப் பாருங்கப்பா." என்று அவள் சொன்னதும் ராஜசேகர்"அய்யய்யோ இது வேறயா...ஏங்க...நீங்க சீக்கிரம் வாங்க..."என்றான்.
"நீ சரிப்பட்டு வரமாட்ட போலிருக்கே...டாக்டர்தான் நம்மளை அடிமையா நடத்துறார். வேலை செய்யுற நம்மளுக்குள்ளயாவது கொஞ்சம் ஜாலியா பேசி அந்த வேதனையை மறந்துட்டு இருக்கலாம்னுதான் இவ்வளவு உரிமையோட பேசுறோம். இது கூட புரியலையா...நீ டியூப்லைட் மட்டும் இல்லை...பியூஸ் போன பல்ப்...வா..."என்று சொன்னவாறு சரஸ் நடந்தாள்.

ராஜசேகருக்கு அவள் பேசியது ஒருவித ஆயாசத்தை ஏற்படுத்தியிருந்தது. அவன் ஊரில் இருந்தபோது ஒரு நாளைக்கு ஏழுமணி நேரம் தூங்கியவன். இங்கே அதில் பாதி நேரம் கூட நிம்மதியான தூக்கம் கிடைக்கவில்லை. இது தவிர நின்று கொண்டே நாள் முழுவதும் வேலை செய்வதால் விருந்தாளியாக வந்த முழங்கால் வலி இவன் உடலை நிரந்தரமுகவரியாக்கி ரேஷன் கார்டும் பெற்றுவிட்டது.

இது தவிர இன்னொரு பிரச்சனை. இந்த கிளினிக் அருகில் கையேந்திபவன்கள் இருந்தாலும் அவற்றில் அசைவம்தான். அவை மாட்டுக்கறியா, கோழியா, காக்கையா என்று கூட அங்கே சாப்பிடுபவர்களுக்கு கூட தெரியாது. முதல் நாளே சைவ உணவு கிடைக்கும் இடத்தைப் பற்றி மணிகண்டனிடம் விசாரித்தான்.

"மாப்ள...இப்படியே நேரே போய், வெங்கடநாராயணா ரோட்டுல திரும்பு. கொஞ்ச தூரத்துலயே நடேசன் பார்க் இருக்கும். அது ஓரமா போற பாதியில நுழைஞ்சு பார்க்கோட பின்பக்கம் வந்தீன்னா நீ எதிர்பார்க்குற சைவ சமையல் இருக்கும். ஆனா உனக்கு லஞ்ச் டைம் அரை மணி நேரம்தான். கிளினிக்ல இருக்குற சைக்கிளை எடுத்துகிட்டு போகலாம். அங்க போக பத்து நிமிஷம், வர பத்து நிமிஷம், சாப்பிட பத்து நிமிஷம்னு உன் ஷெட்யூல் இருந்தாதான் தப்பிச்ச. சிக்னல் பிரச்சனையும் இருக்கு. பார்த்துக்க." என்று பயமுறுத்திவிட்டுப் போய்விட்டான்.

ராஜசேகருக்கு அந்தக் கடை உணவு எவ்வளவோ திருப்தியாக இருந்தது. ஆனால் பத்து நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பதுதான் இவனுக்கு இருந்த பெரிய சவால். வைட்டமின் குறைபாட்டால் ராஜசேகர் வாய் முழுவதிலும் அல்சர் வந்துவிட, சூடான மதிய சாப்பாட்டை கண்களில் நீர் வடிய மிகவும் அவதியுடன் சாப்பிட்டு முடித்தான். நீர் அருந்துவது மட்டுமின்றி பேசுவது கூட போராட்டமாகிப்போயின.

இந்த லட்சணத்தில் கிளினிக்கில் இருக்கும் டெலிபோன்களுக்கு வரும் அழைப்புகளுக்கும் பதில் சொல்லும் வேலையையும் அவ்வப்போது கொடுத்தார்கள்.

ராஜசேகர் போனில் பேசிவிட்டு அப்படா என்று அமைதியாகிவிட்டாலும் ஷண்முகப்ரியாவும் அவள் தோழிகளும் விடுவதில்லை."என்ன சார்...பேச கூட மாட்டெங்குறீங்க. ஏன், தமன்னா, ஸ்ரேயா எல்லாம் வெயிட்டிங்க்ல இருக்காங்களா? அதுதான் எங்க கூட பேசுறதுக்கு தடை போடுதா?"என்றால்லாம் கேட்டு வெறுப்பேற்றினார்கள்.

அங்கேயே தங்கினால் இன்னும் கொஞ்ச நாட்களில் சென்னைக்கு வந்தபோது இருந்த எடையில் பாதி குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும் என்று ராஜசேகர் உணர்ந்தான். அங்கேயே தங்காமல் வெளியில் இருந்து வந்தால் காலை ஒன்பது மணிக்கு வந்து இரவு ஒன்பது மணிக்குச் சென்றுவிடலாம் என்று சொன்னார்கள்.
மிகுந்த போராட்டத்திற்குப் பின் டாக்டரிடம் சம்மதம் வாங்கி நெசப்பாக்கத்தில் உள்ள நண்பன் வீட்டில் இருந்து தினமும் வேலைக்கு வர சம்மதம் வாங்கினான். 17G அல்லது 17A ஆகிய பேருந்துகளில் ஏறி தி.நகர் வரவேண்டும் என்றால் நெரிசலான நேரத்தில் முக்கால்மணிநேரம் கூட ஆனது. இது தவிர, பல பேருந்துகளில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்து தொங்குவதற்குக் கூட இடம் கிடைக்கவில்லை.

அதனால் காலை ஏழு மணிக்கே பேருந்தைப் பிடித்து பனகல் பார்க் அருகில் இறங்கி விடுவான். ஒன்பது மணி வரை பொழுதைப் போக்க வேண்டுமே...அப்படியே நடேசன் பார்க்கில் வந்து அமர்ந்து விட்டு எட்டே முக்காலுக்கு டிபனை முடித்துவிட்டு ஒன்பது மணிக்கு கிளினிக்குக்கு சென்றான்.

இரவு ஒன்பது மணிக்கு வேலை முடிந்து வெளியேறினால், துரைசாமி பேருந்து நிறுத்தத்திற்கு(அங்காடித்தெருவில் ஆரம்ப காட்சியில் வருமே, அந்த பேருந்து நிறுத்தம்தான்.) நடந்து வரவே பதினைந்து நிமிடம் ஆகிவிடும். பிறகு பேருந்தில் ஏறி நெசப்பாக்கம் வந்து இறங்க பத்தேகால் வரை ஆகும். அடுத்து எதாவது ஒரு கையேந்திபவனில் அரை வயிற்றுக்கு இட்லியை தள்ளிவிட்டு சென்று படுக்க பதினோரு மணி ஆகிவிடும். வயிறு பாதிக்கு மேல் காலியாக இருப்பதால் சரியாக தூக்கம் வராது.மறுபடி காலை ஆறு மணிக்கே எழுந்து...இனி எல்லாம் வழக்கம்போல்தான்.

கிளினிக்கிலேயே தங்கியிருந்ததற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. நடுவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஊருக்குப் போய் ஓட்டு போட்டுட்டு வர்றேன். என்று டாக்டரிடம்  அனுமதி கேட்டான்.

"நீயெல்லாம் ஓட்டு போட்டு என்ன ஆகப்போகுது...ஒழுங்கா லீவு போடாம வேலைக்கு வர்ற வழியைப் பாரு..." என்று கண்டித்து விட்டார்.

சென்னைக்கு வந்து கொத்தடிமையா சிக்கிட்டோமோ என்று ராஜசேகர் யோசித்த நேரத்தில் சொந்த ஊரில் இருந்த பழைய நண்பன் இவனிடம் பேசினான்.அவன் வெளிநாடு செல்வதால் ஏற்கனவே இருந்த இடத்தில் ஒரு ஆள் கேட்குறாங்க...என்றான். இவனுக்கு தப்பிச்சோம்டா சாமி என்றுதான் தோன்றியது.

"சென்னைன்னா சும்மாவா...முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு வருஷம் ஓட்டியாச்சுன்னா எல்லாம் பழகிடும். வேலைக்குப் போற பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க... சென்னையில ஒட்டிக்கலாம்."என்று அறிவுரை சொன்னது ஷண்முகப்ரியாதான்.

"ஆளை விடு ஆத்தா..."என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு பிறந்த ஊருக்கே வந்துவிட்டான் ராஜசேகர்.

3-முற்றும்.
*****
இதெல்லாம் என்ன கதை அப்படின்னு கேட்காதீங்க. அங்காடித்தெருவுல சென்னையின் மிகச் சின்ன பகுதியில நடக்குற சுரண்டலை லேசான சினிமா கலரோட சொல்லியிருந்தாங்க. படத்துல காட்டின கஷ்டமாச்சும் பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டு பாவம் என்று சொல்லவைத்தது. ஆனா இந்த கதையில வர்ற ராஜசேகர் மாதிரி ஆளுங்க படுற வெளியில தெரியாத அவதி பெரும்பான்மையான மக்களால கஷ்டமாவே ஒப்புக்கொள்ளப்படுறது இல்லை.

சுருக்கமா சொன்னா நம்ம அரசாங்கத்துகிட்ட மாட்டிகிட்டு திண்டாடுற நடுத்தரவர்க்கம் மாதிரிதான். கோடீஸ்வரர்களுக்கு பட்ஜெட்டுகளாலும் வரியாலும் எந்த பாதிப்பும் இல்லை. ஏன்னா அவங்க கிட்ட வசூலிக்கிற வரியை சுமக்கப்போறது நடுத்தர வர்க்கம்தான்.

பிளாட்பாரவாசிகளும் கிடைக்கிற இலவசங்கள் இன்ன பிற சலுகைகள் போன்றவற்றால் வாழ்க்கையை நடத்த பழகிட்டாங்க.

ஆனா நடுத்தர வர்க்கம்தான் கோடீஸ்வரர் லிஸ்ட்டுலயும் சேரமுடியாம பிளாட்பாரத்துக்கும் வர முடியாம தூக்கு மாட்டிகிட்டும் உயிர் போகாம முழி பிதுங்கி போன நிலையில இருக்குறது.

இந்தக் கதையில வர்ற ராஜசேகரோட நிலையும் இதுதான்.

கடைசியா  ஒரு உண்மை.

இந்தக் கதையில எந்த ஒரு இடத்துலயும் (ராஜசேகர் கதாபாத்திரத்தின் பெயர் தவிர) கற்பனையே இல்லை. இப்படி சென்னைக்குப் போய் முதல் முறை புறமுதுகிட்டது நானேதான்.

வியாழன், 15 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 2

"பேர் சொல்லிக்கூப்பிட்டா கோவிச்சுக்க மாட்டீங்கிளா?"என்ற ராஜசேகர் தேவையில்லாமல் சிரித்து வைத்தான்.

"ஷண்முகப்ரியா...-இந்தப்பேர் எப்படி இருக்கு?" என்ற அவள், இரண்டு கண்களையும் சிமிட்டினாள்.

"உங்களை மாதிரியே அழகா இருக்குங்க..."என்று சொல்லும்போதே இவன் மனதுக்குள் குதூகலம்.

"அழகான பேரை சொல்லி கூப்பிடாம இருந்தாதான் என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு கோபம் வரும். இப்படியே வழிஞ்சுகிட்டு நிக்காம போய் சாப்பிட்டுட்டு வாங்க. கையேந்திபவன் காலியாயிடப்போகுது."என்ற ஷண்முகப்ரியா வேலையில் கவனமானாள்.

இவன் வழி கேட்டு ஒரு கையேந்திபவனை அடைந்தபோது அங்கே இட்லி காலியாகியிருந்தது. கடைக்காரர்,காய்ந்துபோயிருந்த பூரியைக் காட்டி,"கெளங்கு இல்லை.சாம்பார்தான் இருக்கு.இன்னா சொல்ற..."என்றார்.

"சரி...திங்கிறேன்." என்று அதை வாங்கிய ராஜசேகர், பூரியுடன் மல்யுத்தம் நடத்தி அவற்றை உள்ளே தள்ளினான்.

இவன் சென்னைக்கு வந்து பசி தீர்க்க எடுத்த முதல் முயற்சியில் வயிற்றுக்குள் ரயில்வண்டி ஓடத்தொடங்கியிருந்தது. கிளினிக்குலதான் டாய்லெட் இருக்கே...சமாளிச்சுக்கலாம். என்று நினைத்தபடியே பணியிடத்துக்கு திரும்பினான் ராஜசேகர்.
கிளினிக்கில் வேலை செய்யும் பெண்களில் நிறையபேர் வந்துவிட்டிருந்தார்கள். ஹாலில் இருந்த இருக்கைகளும் பெருமளவு பேஷண்டுகளால் நிரம்பியிருந்தன.

'அவசரப்பட்டு ஷண்முகப்ரியாவை அழகுன்னு சொல்லிட்டோமோ...இங்க வேலை செய்யுற பொண்ணுங்க எல்லாருமே அழகாத்தான் இருப்பாங்க போலிருக்கே. ராத்திரி பயணத்தால தூக்கமே இல்லை. இவ்வளவு நேரம் கண்ணு எரியுற மாதிரி இருந்துச்சு. இப்ப குளுகுளுன்னு இருக்கே...'என்றெல்லாம் யோசித்துக்கொண்டே ரிஷப்ஷன் டேபிளை நோக்கிச் சென்றான்.

"ராஜசேகர்...இதுல எந்த எந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு அமவுண்ட்டுன்னு எழுதியிருக்கேன். டாக்டர் எந்த டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்னு இந்த ஸ்லிப்புல டிக் அடிச்சு தந்துடுவார். அதுக்கு நேரே தொகையை எழுதி டோட்டல் போட்டு ரெசீப்ட் போட்டுட வேண்டியதுதான்.

நல்லா பழகுற வரைக்கும் என் டேபிளுக்கு வந்துடுங்க...அப்புறம் ஒரு ஓரமா சுவத்துல வெச்சு கூட ரெசீப்ட் போட்டுடுவீங்க. எப்படியோ எனக்கு திட்டு வாங்கி கொடுக்காம இருந்தாசரி...உங்களுக்கு இந்த வேலையை எல்லாம் சொல்லிக்கொடுக்கணும்னு சொல்லி டாக்டரோட மிஸஸ் ஆர்டர் போட்டிருக்காங்க."என்ற ஷண்முகப்ரியா வசூலிக்க வேண்டிய தொகைகள் எழுதப்பட்ட ஸ்லிப் ஒன்றை ராஜசேகரிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிய ராஜசேகர் பேஷண்ட் அருகில் காலியாக இருந்த இருக்கையில் போய் அமர்ந்தான்.

"அய்யோ...ராஜசேகர், அங்க எல்லாம் உட்காரக்கூடாது. ரொம்ப சிரமமா இருந்தா இங்க ரிஷப்ஷன் டேபிளுக்குப் பின்னால இருக்குற சேர்ஸ்ல கொஞ்ச நேரம் உட்காருங்க. கண்ட இடத்துலயும் உட்கார்ந்தா டாக்டர் ஒண்ணும் சொல்ல மாட்டார். டாக்டரோட வைஃப் ஒருவழியாக்கிடுவாங்க."

சட்டென்று எழுந்து வந்த ராஜசேகர்,"நான் எங்க உட்கார்ந்துருக்கேன்னு பார்க்க சார் வெளியில ஓடி ஓடி வருவாரா...ஏங்க இப்படி பயமுறுத்துறீங்க?" என்றான்.

"அவரு ஏன் எழுந்து வந்து பார்க்கணும்? இந்த குட்டி கிளினிக்குக்குள்ள ஆறு கேமரா இருக்கு. அவரோட ரூமுக்குள்ள இருக்குற டி.வியில எல்லாத்தையும் கவனிச்சுகிட்டே இருப்பாரு...நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது நிறையவே இருக்கு..."என்று சிரித்தாள் ஷண்முகப்ரியா.

"சின்னப்புள்ளையா இருந்தப்ப, கல்யாண வீட்டுல வீடியோவுல பதிவாகணும்னு வெறியோட அலையுவேன். இனிமே கேமரா என்னைய பார்த்துடுமோன்னு பயந்துதான் வாழணுமா?"என்று ராஜசேகர் புலம்பியதைக் கேட்ட ஷண்முகப்ரியா லேசாக சிரித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

அப்போது அங்கே வந்த மணிகண்டன்,"டேய்...ராஜசேகர்...என்னோட வா..." என்று கிளினிக்கின் பின்புறம் அழைத்துச் சென்றான்.

"எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்த?"என்ற ராஜசேகரின் குரலில் ஒருவித அலுப்பு தெரிந்தது.

"டேய் பட்டிக்காட்டு வெளக்கெண்ணை...ஷண்முகப்ரியாகிட்ட இப்படி கடலை வறுக்குற?...ஒரேடியா சட்டி தீயுற வாடை. இப்படியே அவகிட்ட பேசிகிட்டே இருந்தீன்னா மத்தவளுங்க எல்லாம் சேர்ந்து உனக்கு ஆப்பு வெச்சுடுவாளுங்க..."என்று மணிகண்டன் சொன்னதும் ராஜசேகரின் முகத்தில் பிரகாசம்.

"தம்பி...நீ பெரிய சினிமா ஷீரோ...அதனால பத்துப்பதினஞ்சு பேர் உனக்காக போட்டி போடுறதா நினைச்சுடாத...நிறைய மனிதர்கள்கிட்ட இருக்குற பொறாமைக்குணம்தான் இதுக்கு காரணம். நம்ம கிட்ட மட்டும்தான் அதிகமா பேசணும். முக்கியமான விஷயங்களை நாமதான் கத்துக்கொடுக்கணும். அடுத்தவங்களோட அவருக்கு அல்லது அவளுக்கு டீப்பான ஃப்ரெண்ட்ஷிப் இருக்கக் கூடாது...இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கின அரசியல் இங்கயும் இருக்கு.

அவ்வளவு ஏன்? ஷண்முகப்ரியாகிட்ட நீ அதிகமா பேசுறது எனக்கே பொசபொசன்னுதான் இருக்கு.சரி...வா...ரொம்ப நேரம் நாம கேமராவுல சிக்கலன்னா டாக்டர் ஓலை அனுப்பிடுவார்."என்று மணிகண்டன் சொல்லிச் சென்றதும் ராஜசேகருக்கு தன் முதுகே தெரிவது போல் இருந்தது.

அரைமணிநேரம் கழித்து முதன்முதலாக ஒரு பேஷண்டுடன் அட்டெண்டராக உள்ளே சென்றான். வெளியில் இருந்த புழுக்கத்துக்கு உள்ளே இருந்த ஏ/சி இவனுக்கு சுகமாகத்தான் தெரிந்தது.

உயரம், எடை போன்றவற்றைக் எப்படி குறிக்க வேண்டும் என்று டாக்டரே ராஜசேகரிடம் சொன்னார்.'இவ்வளவு நல்ல மனுஷனா இருக்காரே...'என்ற எண்ணம் ராஜசேகர் மனதில்.

இவன் வெளியில் கிளம்பும் போது,"ராஜசேகர்...லேப்ல சரஸ்வதின்னு ஒரு பொண்ணு இருக்கும். அதை ரிஷப்ஷன் டேபிளுக்கு வரசொல்லி ரெசீப்ட் போடுங்க. அடுத்த பேஷண்ட்டுக்கு நான் டிக்டேட் பண்ணப்போற ரிப்போர்ட்டை எழுத ஷண்முகப்ரியா இங்க வந்துடுவாங்க."என்று சொல்லி அனுப்பினார் டாக்டர்.

இவன் அமவுண்ட் வாங்க வேண்டிய பேஷண்ட்டை ரிஷப்ஷன் அருகில் அமரசொல்லிவிட்டு, லேப்புக்கு சென்றான்.

"இங்க யாருங்க சரஸ்வதி?...டாக்டர் ரிஷப்ஷன் டேபிளுக்கு வரசொன்னார்."

அங்கு இருந்த ஆறு பெண்களில் ஆரஞ்சு வண்ண சுடிதாரில் இருந்த அவள்,"ஏம்பா சரஸ்வதீன்னு இழுக்குற?...சரஸ் அப்படின்னு சுருக்கு.இப்படி பேர் வெச்ச அப்பா அம்மாவை முதல்ல உதைக்கணும்...இந்த டாக்டரை அடுத்ததா மிதிக்கணும்...சரி...வா..."என்று சொன்ன சரஸ்வதி இவனுக்கு முன்னால் நடந்தாள்.

அவள் பேசியதைக் கேட்டு திகைத்து நின்ற ராஜசேகரைப் பார்த்து, மற்ற பெண்கள் சிரித்தார்கள்.

அப்போது ஒருத்தி சொன்னதைக் கேட்டு பதறிப்போன ராஜசேகர்....

2-தொடரும்
******

அங்காடித்தெரு படம் பற்றி ஒருசிலரால் குறையாக சொல்லப்படும் விஷயம் ஒன்று உண்டு. எந்த முதலாளியும் தங்களின் கொடூர முகத்தை இப்படி பகிரங்கமாக காட்டமாட்டார்கள். படத்துக்காக மிகைப்படுத்திய காட்சிதான் அது என்பது இவர்களின் வாதம்.

இப்படி சொல்பவர்கள் நிச்சயமாக இப்படியும் ஒரு உலகம் இருப்பதைப் பார்க்கும் வாய்ப்பு அமையாதவர்களாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் ஒட்டுமொத்தமாக தொழிலாளியை வஞ்சிக்கும் முதலாளிகளைப் பற்றி கணக்கெடுத்துப் பார்த்தால் வேறொரு உண்மை புலப்படும்.
பேருந்துநிலையம், மதுக்கடை அருகில் உள்ள கடைகள், இரவு நேரக் கடைகள் உட்பட பல இடங்களில் பணியாளர்கள் மீதான வன்முறை இப்படி இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் மிக அதிகமான முதலாளிகள் மோசமான அரசியல்வாதிகள் போலவேதான்.

அதாவது, அவர்கள் பேசும்போது பளிங்குத்தரையாகத்தான் தெரியும். ஆனால் திரைமறைவு நடவடிக்கைகள் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட  சாலையைப் போன்றே மோசம்தான். இந்த மோசமான முகமும் எல்லா இடத்திலும் வெளிப்படாது. தோலில் ஒட்டிக்கொண்டு நமக்கே தெரியாமல் ரத்தம் உறிஞ்சும் அட்டை போலத்தான் எளிய மக்களின் உழைப்பை சுரண்டுவார்கள்.

மதுவுக்கும் பிரியாணிக்கும் சொற்பத் தொகைக்கும் அடிமட்டத்தொண்டன் இவர்களுக்கு அடிமையாக கிடப்பது இந்த வகைதான்.

இப்போது நான் வேலை செய்யும் இடத்தில் இரண்டு கால்களும் முற்றிலும் செயலிழந்த பெண்ணும் வேலை பார்க்கிறாள். இன்று மதியம் அழுதுகொண்டிருந்த அவளை சக ஊழியைகள் சமாதானப் படுத்தினார்கள். காரணம் என்ன தெரியுமா?

காலை ஒன்பது மணி முதல் மாலை ஏழு மணி வரை வேலை செய்யும் அந்தப் பெண்ணிற்கு மாதம் ஆயிரத்து நூறு ரூபாய்தான் ஊதியம். அதையும் இன்று (15ந்தேதி) வரை வழங்கவில்லை. மேலாளரிடம் கேட்டதற்கு, என் வேலை உங்களிடம் வேலை வாங்குவதுதான். சம்பளம் வேணுன்னா முதலாளிகிட்ட பேசிக்குங்க... என்று சொல்லியிருக்கிறார்.

இப்படி வேலை செய்பவர்களுக்கான சொற்பக்கூலியைக் கூட மிக மிக காலதாமதமாக தரும் முதலாளிகளும் என் பார்வையில் மிக மிக ஆபத்தானவர்களே.

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 1

புதன், 14 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...குட்டித்தொடர்கதை-அத்தியாயம் 1

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜசேகர் தெருவுக்குள் நுழையும் முன்பு இவனிடம் இருந்த சுமைகளைப்பார்த்துவிட்டு  ஒன்றிரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் சற்று முன்னால் வந்தார்கள். ஆனால் இவன், எந்த வித தயக்கமும் இல்லாமல் ரங்கநாதன் தெருவிற்குள் இறங்கி நடந்ததும் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள். இதைப்பார்த்த ராஜசேகருக்கு அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது போல் மகிழ்ச்சி.
வேலை கிடைத்து புறப்பட்ட இவனுக்கு, சென்னை ரிட்டன் நண்பன் (எவ்வளவு நாள்தான் துபாய் ரிட்டன், சிங்கப்பூர் ரிட்டன் இப்படியே சொல்றது?) சில ஆலோசனைகளை சொல்லியிருந்தான். "உனக்கே நேரம் சரியில்லை. ஊருக்குப் புதுசுன்னு தெரிஞ்சா ஆப்படிக்கிற ஆட்டோக்காரங்க கிட்டதான் நீ போய் மாட்டுவ. அதனால, நடந்தே இந்த முகவரிக்குப் போற மாதிரி நான் வழி சொல்றேன்" என்ற அவன், ராஜசேகரிடம் எப்படி நடந்து செல்ல வேண்டும் என்று கூட பாடம் எடுத்தான்.

அதைக்கேட்ட ராஜசேகர், பிறந்து வளர்ந்த ஊரில் நடப்பது போல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து செல்வது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவன் வைத்திருந்த சுமைகள் அப்படி. ஆனால் ஆட்டோவுக்கு கொடுக்கும் நூறு ரூபாய் இருந்தால் கையேந்தி பவனில் ரெண்டு நாளைக்கு சாப்பிடலாம். அங்க போனா ஒவ்வொன்னுக்கும் காசு. உள்ளூருன்னா சொந்தக்காரங்க வீட்டுக்கு சும்மா பார்க்கப்போற மாதிரி விசிட் விட்டுட்டு வயித்தை நிரப்பிட்டு வந்துடலாம். அங்க அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லடி மாப்ளே...என்று நண்பன் சொன்னது நினைவுக்கு வரவும் ராஜசேகர் வைத்திருந்த பேக்கும், ப்ரீஃப் கேசும் கனமாகவே தெரியவில்லை.

பெரிய மருத்துவமனையை எதிர்பார்த்திருந்த ராஜசேகருக்கு பர்கிட் ரோட்டில் அமைந்திருந்த அந்த கிளினிக்குக்கு சென்றதும் சின்ன ஏமாற்றம். அங்கே உள்நோயாளிகள் அனுமதி எல்லாம் கிடையாதாம். பரிசோதனைகள், ஆலோசனைகள் மட்டுமே. இதிலேயே ஒரு நாளைக்கு இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கும் கிளினிக் அது. மருத்துவரின் பெரியப்பா ஆள்பிடிக்கும் தேடுதலில் இறங்கியபோது ராஜசேகர் சிக்கியிருந்தான்.

சாப்பாடு மட்டும் வெளியில பார்த்துக்க. ஆஸ்பத்திரியிலேயே தங்கிக்கலாம். வாடகையும் அட்வான்சும் மிச்சம் அப்படின்னு அவர் சொன்னதை நம்பி வந்த ராஜசேகருக்கு காட்டப்பட்ட அறையைப் பார்த்ததும் பகீர் என்றது. பனிரெண்டுக்கு பத்து என்ற அளவுடைய அறையில் ஆறு பேருக்கு அலாட்மெண்ட் என்று சீனியர் சொன்னான்.

"தம்பி...ரொம்ப பயப்படாத...இந்த ரூம்ல ஏசி வெச்சாதான் படுக்கமுடியும். இல்லன்னா லாயக்கில்லை. அதனால பேஷண்ட் வெயிட்டிங் ஹால்லயே படுத்துக்கலாம். என்ன...ராத்திரி பதினோரு மணிக்கு முன்னால படுக்க முடியாது. காலையில ஆறரை மணிக்கப்புறம் தூங்க முடியாது. போகப்போக பழகிடும்.

ஊருல உட்கார்ந்த இடத்துலயே வேலையா...இல்ல...அலைஞ்சு திரிஞ்சு பழக்கமா..." என்றான் மணிகண்டன்.

"ஏன்?"

"இங்க உட்கார வாய்ப்பே இல்லை. அதான் கேட்டேன்."

"என்னது...உட்கார முடியாதா. நான் டிகிரி படிச்சுருக்கேன். லேப்ல எந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு ஃபீஸ் அப்படின்னு குறிச்சு கொடுக்குறதுதான் வேலைன்னு சொன்னாங்களே." என்ற ராஜசேகரின் கண்களில் லேசான பதற்றம் தெரிந்தது.

இதைப் பார்த்ததும் சிரித்த மணிகண்டன்,"சரியாத்தான் சொல்லியிருக்காங்க. ஆனா ஒரு பேஷண்ட் டாக்டர் ரூமுக்குள்ள போகும்போது நீயும் கூடவே போகணும். உயரம், எடையை குறிச்சு டாக்டர்கிட்ட சொல்லணும். அவர் குறிச்சு கொடுக்குற டெஸ்ட்டுக்கான ஸ்லிப்பை எடுத்துகிட்டு பேஷண்ட்டோட வெளியில வந்து தொகையைக் குறிச்சு பணம் வாங்கி, கட்டி பெய்டு சீல் வெச்சு லேப்புக்குள்ள அனுப்பணும். அதுக்குள்ள வேற பேஷண்ட்டுகள் சிலரை மற்ற ஸ்டாஃப் கவனிச்சுக்குவாங்க. மறுபடி நீ முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்."என்றான்.

இப்போது ராஜசேகர் மனம் முழுவதும் வெறுப்பு. இந்த வெறுப்பு மனதில் இருக்கும்போது கலெக்டர் வேலையே கிடைத்தாலும் ஈடுபாடு வராது.

"அட்டெண்டர் வேலைன்னு சுருக்கமா சொல்லக்கூடாதா?" என்றான்.

இதைக் கேட்ட மணிகண்டன்,"அட...நீ டிகிரி படிச்ச ஆளுதாம்பா...இவ்வளவு சரியா புரிஞ்சுகிட்ட...பத்து நாள் வரை நீ இங்க இருக்குற யார்கிட்ட வேணுன்னாலும் வேலை தொடர்பான சந்தேகம் கேட்கலாம். யாரும் திட்ட மாட்டாங்க. அதுலயும் லேபுக்கு வர்ற பொண்ணுங்க எல்லாம் அழகா அம்சமா இருக்கும். அவங்ககிட்ட ஜாலியா கடலை போடுறது ஒண்ணுதான் எனக்கு இப்ப இருக்குற ஒரே ஆறுதல். நீயும் என்ஜாய். இப்ப போய் குளிச்சுட்டு வா. நான் தாங்கிக்குவேன். நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் என்னைய தப்பா நினைச்சுடுவாங்க."என்று சொல்லிவிட்டு அகன்றான்.

குளித்துவிட்டு உடைமாற்றி மேக்கப்புடன் வந்த ராஜசேகர், ரிஷப்ஷன் டேபிளின் பின்னால் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த பெண்ணிடம்,"மேடம்...நான் இங்க புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கேன். இப்ப என்ன செய்யணும்." என்றான்.

அவள் நிமிர்ந்து,"மணிகண்டன் சொன்னார். வேலையைத் தொடங்குறதுக்கு முன்னால போய் சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்புறம் ரெண்டு மணி வரை எங்கயும் போக முடியாது. இன்னொரு விஷயம்...நான் உங்களோட சின்னப்பொண்ணாத்தான் இருப்பேன். அதனால மேடமெல்லாம் வேண்டாம். கால் மீ ஷண்முகப்ரியா..."என்றாள்.

1-தொடரும்

******
இந்தக் கதையை நான் எழுத தூண்டுதலாக இருந்தது அங்காடித்தெரு படம்தான். படத்தில் மூன்றாவது தளத்தின் சூப்பர்வைசராக வரும் இயக்குனர் A.வெங்கடேஷ்,"என்னலே சிரிப்பு..."என்று பல்லைக்கடித்துக்கொண்டு கேட்கும் காட்சியில் பாண்டியும் மகேஷும் அலறுவது காமெடிக்காட்சியாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக, அவருடைய அட்டகாசத்தைப் பார்க்கும்போது பிடித்து அடித்து விடலாமா என்று கூட நினைக்க வைத்தது. அதுதான் அவருடைய நடிப்புக்கு கிடைத்த வெற்றி.

இந்தப் படம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் பத்து இயக்குனர்கள் சந்தித்த காட்சியைப் பார்த்தேன். வசந்தபாலன் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தபோது A.வெங்கடேஷ் அசோசியேட் டைரக்டராம். வசந்தபாலன் படப்பிடிப்பின்போது முக்கியமான ஒரு நோட்டைத் தொலைத்து விட்டபோது ஒரு வெங்கடேஷ் டெரர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

வசந்தபாலன் அப்போது அவரைப்பார்க்கவே அஞ்சி நடுங்கிய அனுபவம்தான் இந்த கேரக்டரில் வெங்கடேஷை நடிக்கவைக்க காரணம் என்று சொன்னார்.

ஆனால் ஒன்றிரண்டு முறை இயக்குனர் வெங்கடேஷைப் பார்த்தால் அவர் இவ்வளவு டெரர் என்று சொல்லவே முடியாது.
நீ எத்தனை தடவை அவரைப் பார்த்துருக்கன்னுதானே கேட்குறீங்க. ஒரே ஒரு தடவை ஏ.வி.எம் ஸ்டுடியோவுலதான் சந்திச்சிருக்கேன்.

2006ம் வருஷம் தீபாவளி நெருங்கிய சமயம், ஏவிஎம் ஸ்டுடியோவுல வாத்தியார் படத்தோட எடிட்டிங், கே.பாக்யராஜ் ஸ்டுடியோவுல சரத்குமாரின் நூறாவது படமான தலைமகன்  எடிட்டிங் நடந்துகிட்டு இருந்தது. நெகட்டிவை பிராசஸ் பண்ணின பிறகு பிரிண்ட் போட்டுட்டு அதை அப்படியே எடிட்டிங் செய்யப் பயன்படுத்துற சிரமமெல்லாம் இப்ப கிடையாது. டெலிசினி மெஷின் மூலமா வீடியோ டேப்புக்கு கன்வர்ட் பண்ணிடுவாங்க.

அந்த டேப்புல பதிவான படத்தை கணிணிமூலமா அவிட், எஃப் சி பி போன்ற தொழில்நுட்பம் மூலமா  தொகுத்து, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் முடிஞ்சு திருப்தி வந்த பிறகுதான் ஒரிஜினல் நெகட்டிவ்ல மாற்றம் செய்யுறதெல்லாம் நடக்கும்.

வீடியோ டேப்புல இருக்குற படத்தை கணிணியில ஏற்ற பீட்டா கேம் பிளேயர் தேவை. பல லட்ச ரூபாய் விலையுள்ள அந்த பிளேயரை நான் இந்த எடிட்டிங் நடக்குற இடத்துக்கெல்லாம் எடுத்துட்டுப் போனேன். இருபது கிலோவுக்கு குறையாத எடை இருக்கும்.

வாத்தியார் பட எடிட்டிங் வேலைக்காக பிளேயரை எடுத்துட்டுப் போகும்போது ஏவிஎம்ல அர்ஜூன், A.வெங்கடேஷ், எடிட்டர் வி.டி.விஜயன்  எல்லாம் இருந்தாங்க. அப்ப வெங்கடேஷ் பேசிகிட்டு இருந்ததை பார்த்துருக்கேன். அவரைப்பார்த்தா கோபப்படுவாரான்னு கேட்குற மாதிரிதான் இருந்துச்சு. ஆனா வசந்தபாலன் வெங்கடேஷ் கோபத்தைப் பத்தி சொன்னதும்,"நம்பமுடியவில்லை..."அப்படின்னு பாடத்தான் தோணுச்சு.

******
அங்காடித்தெருவில் நான் கண்ட விஷயங்கள்