Search This Blog

வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜூன், 2013

எப்படி சிறுகதை எழுதுவது?

ஒரு பத்திரிகையில சிறுகதைப்போட்டி அறிவிச்சதும் எழுத ஆசைப்படவேண்டியது. கடைசி தேதிக்கு இரண்டு நாள் முன்பு வரை அப்படி எழுதலாம். இப்படி மிரட்டலாம்னு கற்பனையிலேயே காலம் தள்ள வேண்டியது. அப்புறம் முதல்நாள் காலையில 4 மணிக்கு எழுந்து உட்கார்ந்து 6 மணிக்குள்ள அவசர அவசரமா கதையை எழுதி (இப்போ நாலு வருசமா கம்ப்யூட்டர் டைப்பிங்) அனுப்பிட்டு அந்த கதையை பரிசுக்கு தேர்ந்தெடுக்கலையேன்னு புலம்ப வேண்டியது. கடந்த 10 வருசமா எனக்கு இதே பிழைப்பா போச்சு.

Image Credit : Indiaglitz

அப்படி இருந்தும் சில கதைகள், கட்டுரைகள், நகைச்சுவை துணுக்குகள் பிரசுரம் ஆனதோட கணிசமான தொகையையும் வாங்கித்தந்திருக்கு.

சிறுகதை எழுதுவது எப்படின்னு சுஜாதா எழுதுன சிறுகதைத்தொகுதியை ஆர்வத்தோட எடுத்து படித்துப்பார்த்து அசடு வழிஞ்சவங்கள்ல நானும் ஒருத்தன். முதல்ல எழுதுறதுக்கு என்ன முக்கிய தகுதி தெரியுமா. நிறைய படிக்கணும். அப்புறமா எழுத முயற்சிக்கலாம். சிறுகதை, நாவல் எழுதணும்னா கற்பனை அதிகமா இருக்கணும். பக்கத்து வீட்டு கிருஷ்ணசாமியைப் பத்தி எழுதுனா கூட அவரே இது நான் இல்லைன்னு சொல்ற மாதிரி மாத்தி எழுத கத்துக்கணும்.

இப்போ வலைப்பூ தொடங்கி எழுதுறவங்களுக்கு பத்திரிகை ஆசிரியர், உதவி ஆசிரியர், பக்கம், கருத்து இது மாதிரி எந்த கவலையும் இல்லை. ஆனா அச்சு ஊடகத்துல கதை பிரசுரம் ஆகணும்னா பல நிபந்தனைகளை பூர்த்தி செய்யணும். (இப்போ அனேகமா பல வெகுஜன இதழ்கள் புதியவர்களின் சிறுகதையை பிரசுரிப்பதே இல்லை) அப்படி சில யுக்திகளை நான் கத்துக்க காரணமா அமைந்தது ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது என்ற புத்தகம்தான். இது சென்னை தியாகராயநகரில் உள்ள மதிநிலையத்தின் வெளியீடாக வந்தது. இந்த புத்தகத்தை பொறுமையாக படித்துப்பார்த்தால் போதும். சாதாரணமாக எழுதுபவர்கள் கண்டிப்பாக தங்களை மேம்படுத்திக்கொள்ள இயலும். ஆனால் இப்போது பிரபல இதழ்களில் உங்கள் கதைகள் உடனடியாக பிரசுரமாக வாய்ப்பு இருக்கிறது என்று சொல்வதற்கு இல்லை.

2002ஆம் ஆண்டு நான் இந்த புத்தகத்தை வாங்கினேன் என்று நினைக்கிறேன். திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இந்த புத்தகத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்.

அந்த புத்தகத்தில் உள்ள யுக்திகளைப்படித்து புரிந்து கொண்டு என் கற்பனைக்கு வடிவம் தந்தபிறகுதான் வரிசையா சில பிரபலமில்லாத இதழ்களில் பிரசுரமாயின. (இவற்றிற்கு சன்மானம் எல்லாம் கிடையாது) ஆனால் அப்படி கதைகள் பிரசுரமாக ஆரம்பித்த நாலு மாதத்திற்குள் நான் எழுதி அனுப்பிய சிறுகதை பிரபல நாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. இது தவிர மேலும் பல இதழ்களில் நான் எழுதிய சில சிறுகதைகளும், கோயில்கள் பற்றிய தகவல் கட்டுரைகளும் பிரசுரமாயிருக்கின்றன.

என்னுடைய அனுபவத்தில் ஆனந்தவிகடன், தினமணி, தினமலர் (சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர்) பதிப்புகள்) மட்டுமே சன்மானத்தொகையினை சரியாக அனுப்பி வைக்கின்றன. சில பிரபல இதழ்களில் இருந்து எனக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் சன்மானங்கள் வராமலேயே போயிருக்கின்றன. அங்கே பணிபுரிபவர்கள் எடுக்கிறார்களா, தபால் துறையில் தவறுகிறதா என்று எந்த பதிலும் கிடைப்பதில்லை.

பிப்ரவரி மாதம் மிகப்பிரபல நாளிதழின் ஆன்மிக இணைப்பில் நான் எழுதிய கோவில் பற்றிய தகவல் கட்டுரை பிரசுரமானது. அதை கம்போஸ் செய்யும்போது மூலவரின் பெயர் குறித்த சந்தேகம் கேட்க அந்த இணைப்பிதழின் ஆசிரியர் எனக்கு போன் செய்தார். சந்தேகங்களை கேட்டுவிட்டு, நீங்கள் எழுதும் நடை நன்றாக இருக்கிறதே. ஏன் நீங்கள் தொடர்ந்து எழுதக்கூடாது என்று கேட்டார். அப்போது பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் நான்கு புகைப்படங்களுடன் இரண்டு பக்கங்கள் அதிகமான தகவல்களுடன் பிரசுரமான அந்த கட்டுரைக்கு எனக்கு தொகை அனுப்பப்படவில்லை. நானும் மெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும்  கேட்டுவிட்டேன். ஒன்றும் வேலைக்காகவில்லை.

கடமையை செய், பலனை எதிர்பாராதே டைப் ஆளுங்களுக்குதான் இது சரிப்பட்டு வரும். அதனால் இப்போது நான் பத்திரிகைகளுக்கு எழுத்துக்கள் அனுப்புவதில் இருந்து சற்று இடைவெளியை கடைப்பிடிக்கிறேன்.

எனக்கு பரிசு வாங்கித்தந்த கதைகள் என்ன கருப்பொருளில் இருந்தாலும் சரி, தொடக்கத்தில் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பாராவுக்குள் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லி அதை வைத்து கதையை நகர்த்துவேன். இறுதியில்தான் அந்த சஸ்பென்ஸ் உடையும். எழுதிப்பழகுபவர்களுக்கு இது மாதிரியான கதைகள் அனுப்ப ஓரளவு செளகர்யமான இதழ்கள் என்றால் பாக்யா, ராணி, தினத்தந்தி குடும்பமலர், ஞாயிறுமலர் ஆகியவைதான்.

ஒருபக்க கதைகள் அனுப்ப குங்குமம் இதழுக்கு முயற்சிக்கலாம். குமுதத்தில் வரும் ஒரு பக்க கதைகள் அதில் பணிபுரியும் ஆசிரியர் குழு எழுதுறதா இருக்கலாம் என்று நண்பன் ஒரு முறை சந்தேகத்தை கிளப்பினான். எனக்கும் அந்த சந்தேகம் இருப்பதால் அவர்களுக்கு எந்த கதையும் நான் அனுப்புவதில்லை. நீங்கள் முயற்சித்துப்பார்க்கலாம். (என் சந்தேகம் தவறாகக்கூட இருக்கலாம் இல்லையா)

சிறு வயதில் இருந்தே எனக்கு கதைப்புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். பாடப்புத்தகத்தை படிக்காமல் இது என்ன வெட்டி வேலை என்று என் அம்மா எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அப்படி நான் கிடைப்பதை எல்லாம் வைத்து படித்ததால்தான் இப்போது தமிழில் தவறின்றி டைப் செய்ய முடிகிறது. சொந்தமாக டிடிபி சென்டர் வைத்து நடத்த முடிகிறது. அந்த வகையில் வாசிப்பு வழக்கம்தான் எனக்கு வாழ்வாதாரத்தை தந்துள்ளது என்று சொல்லலாம்.

வரும் 15ஆம் தேதி கல்கி வார இதழின் சிறுகதைப்போட்டிக்கு கதை அனுப்ப கடைசி தேதி.

வரும் 30ஆம் தேதி தினமலர்-வாரமலர் இதழுக்கு கதைகள் அனுப்ப கடைசி தேதியாகும்.

இரண்டு போட்டிகளுக்குமே அந்த இதழ்களில் வெளிவந்த கூப்பனை கத்தரித்து இணைத்து அனுப்ப வேண்டியிருக்கும்.

நிறைய படிங்க. அப்புறமா எழுதுங்க. இது நான் சொன்னது இல்லை. பிரபல எழுத்தாளர்கள் சொன்னது.

இப்படி நானும் அடிக்கடி படித்துக்கொண்டே இருப்பதால்தான் பல நேரங்களில் நான்கு வரியில் இருக்கும் ஒரு தகவலைக்கூட செய்தியாக்கி கடந்த இரண்டு வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் ஒரு நாளிதழுக்கு அனுப்பி வருகிறேன்.

என்னதான் ஒருவர் உத்திகளை சொல்லிக்கொடுத்தாலும் எழுத வேண்டிய விஷயங்கள் ஒருவரது மனதில் தோன்றி டெவலப் ஆக வேண்டும். அதை ஒருவர் இன்னொருவருக்கு சொல்லித்தரமுடியாது. உங்களுக்காக நான் சாப்பிட முடியாது. உங்களுக்காக நான் படித்து தேர்வெழுத முடியாது (எழுதினால் மாட்டிக்கொள்வோம்) என்பது போல.
---------------------------------------------
சிறுகதை எழுதுவது குறித்து இணையத்தில் தேடியபோது கிடைத்த சில கட்டுரைகளின் சுட்டிகளை கொடுத்திருக்கிறேன்.
---------------------------------------
1. இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. சுட்டி : http://solvanam.com/?p=15167
------------------------------------------

சுஜாதா கருதியதைப் போல யாரும் விரல் பிடித்தெல்லாம் சொல்லித் தந்துவிட முடியாது. ஆனால் இப்போது பத்திரிகைகளில் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்களை விட பல திறமையான கதை சொல்லிகள், தங்கள் திறமையை அறியாமலேயே ஆயா வடை சுட்டக் கதையை தினுசு தினுசாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறார்கள். நேரமும், வாய்ப்பும் வாய்த்தவர்கள் இன்று இணையங்களில் எழுதுகிறார்கள். எதை எழுதவேண்டும் என்று தெரிந்தவர்கள் கூட எப்படி எழுதுவது என்று தெரியாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள். சுட்டி : http://www.luckylookonline.com/2009/08/blog-post_17.html
-----------------------------------------
பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு. சுட்டி :http://etamil.blogspot.in/2008/01/blog-post.html
------------------------------------

புதன், 17 ஏப்ரல், 2013

பொதுமக்கள் நூலகம் வருவதை நூலக ஊழியர்கள் தடுக்கிறார்களா?



திருவாரூர் மாவட்ட மைய நூலகம் அனைத்து வசதிகளுடன் இருந்தாலும் தினசரி வாசகர்களின் எண்ணிக்கை 300 முதல் 600 என்ற சராசரி  அளவில்தான் இருக்கிறது. திருவாரூர் நகரின் மையப்பகுதியான தெற்குவீதியில் இருக்கும் கல்யாணசுந்தரம் நூலகத்திற்கே  20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி 400 முதல் 500 வாசகர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகளில் கல்வித்தரம் கூடியிருக்கிறது, மக்கள் தொகை கூடியிருக்கிறது என்று புள்ளி விபரங்கள்தான் சொல்கின்றனவே தவிர பாடப்புத்தகம் தவிர்த்த படிப்பு கேவலமான சூழ்நிலையில்தான் இருக்கிறது. தொலைக்காட்சியை முக்கிய காரணியாக சுட்டிக்காட்டினாலும் ஒரு மாவட்ட மைய நூலகத்திற்கு தினசரி 2ஆயிரம் வாசகர்களாவது பயன்படுத்தவில்லை என்றால் எங்கே பிரச்சனை என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

போட்டித்தேர்வு எழுதும் பலருக்கு திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இயங்கும் தனிப்பிரிவு மிகவும் உதவியாக இருக்கிறது. ஒத்துக்கொள்கிறோம். ஆனால் சாதாரண பொழுதுபோக்கு என்ற அளவில் தொலைக்காட்சியை தவிர்த்து எதாவது படிப்போம் என்று நூலகத்திற்கு வரும் வாசகர்கள் நொந்து போய் வருகையை நிறுத்திக்கொள்ளும் அளவுக்குதான் வெகுஜன இதழ்கள் இங்கே வாசிக்க கிடைக்கின்றன.

திருவாரூர் மாவட்ட மைய நூலகம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நாகைபுறவழிச்சாலையில் அபாயகரமான கனரகப் போக்குவரத்தைக் கடந்து செல்லும் வகையில் இருக்கிறது. இது வயதானவர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்த தடையாக இருக்கும் முதல் காரணியாகும்.

அடுத்து நூலகத்தின் தினக்கூலி பணியாளர்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் திருவாரூர் கடைத்தெருவில் சென்று வார இதழ்களை வாங்கி வர ஆள் இல்லை என்று உயர் அலுவலர்கள் சாக்குப்போக்கு சொல்லிவிடுகிறார்கள். நகரிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஒரு மேம்பாலத்தில் ஏறி இறங்கி சிரமப்பட்டு சென்று பார்த்தால் முதல் வாரம் வரவேண்டிய வார இதழ்கள் கூட இருக்காது.

11-4-2013 முதல் 14-4-2013 வரை நான்கு நாட்கள் தொடர்ந்து நூலகம் விடுமுறை. அடுத்து வந்த திங்கள், செவ்வாய் இரண்டு வேலை நாட்களில் கூட 10-4-2013 வரை வரவேண்டிய வார இதழ்களைக்கூட வாங்கி வைக்கவில்லை. கேட்டால் ஆள் இல்லை என்று சால்சாப்பு.

மாதம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொள்வோம். வாசகர்கள் கணிணியில் பிரெளசிங் செய்ய இருக்கும் அறையிலிருந்து கணிணியை வெளியே எடுத்துவைத்துவிட்டு அந்த அறையில் ஏசியில் தூங்குவோம். ஆனால் யாரும் எதையும் கேட்டுவிடக்கூடாது. வாசகர்கள் வந்தால் இருப்பதை படித்துவிட்டு பேசாமல் போக வேண்டியதுதானே. நிர்வாகத்தில் தலையிட இவர்கள் யார் என்று கூட சிலரை திட்டுவதாக கேள்வி. உண்மை என்னவென்று தெரியவில்லை.

நூலகத்தில் வாங்கச்செய்வதற்காக சில வார இதழ்களும், மாத இதழ்களும் நூலக அலுவலர்களுக்கு பணம் கொடுத்திருக்க கூட வாய்ப்பு உண்டு. அந்த பணம் மட்டும் வேண்டும். ஆனால் நூலகத்திற்கு வர வேண்டிய புத்தகங்களை ஒழுங்காக வாங்கி வர மாட்டோம். மேலும் தினசரி 10 முறை டீ, காபி, சாப்பாடு வாங்கி வர ஆட்களை எப்படியாவது தயார் செய்து பேருந்துநிலையம், கடைத்தெரு பகுதிக்கு அனுப்புவோம். அது எங்கள் உரிமை என்று கூட நூலக ஊழியர்கள் கேட்க வாய்ப்பு இருக்கிறது.

மக்கள் குடித்து சீரழிந்து பிறரையும் சாகடிக்கும் வகையில் வாகனம் ஓட்டுகிறார்கள். அந்த மது வியாபாரம் செய்யும் இடங்கள் ஆண்டுக்கு 4நாள் அல்லது 5 நாட்கள்தான் விடுமுறை. ஆனால் மக்கள் அறிவை விருத்தி செய்துகொள்ள வேண்டிய நூலகத்தை எல்லா அரசு விடுமுறை நாட்களிலும் சாத்திவிடுகிறார்கள். வேலை வெட்டி இல்லாதவனும் போட்டித்தேர்வுக்கு படிப்பதற்காக எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பவனும் மட்டும்தான் நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அளவில்தான் இப்போதைய வேலை நாட்களும் வேலை நேரமும் இருக்கிறது.

தாலுக்கா நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகத்தின் வேலை நேரம் 12 மணி நேரம். நிரந்தர ஊழியர்களுக்கு ஆறு மணி நேர வேலை வீதம் 2 பிரிவாக இருக்கிறார்கள். நாட்டில் எந்த துறையில் ஆறு மணி நேர வேலை இருக்கிறது. அந்த நேரத்தில் கூட இவர்கள் வேலை செய்யமாட்டார்கள் போலிருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறது.

மூன்று புகைப்படத்தையும் பார்த்தால் காட்டு பங்களா போல் இருக்கும் நூலகத்தின் நிலையும், மேம்பாலத்துக்கு செல்லும் அபாயகரமான சாலையின் அமைப்பும் புரியும்.

இது திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தின் நிலை. இன்னும் தமிழ்நாடு பூராவும் சுற்றி வந்தால் என்ன கதியாக இருக்குமோ தெரியவில்லை.

வேறு சில வாசகர்கள் இந்த நூலகத்தின் செயல்பாடு குறித்து புகார் கொடுத்ததாகவும் அந்த புகார்கள் இந்த நூலக உயரதிகாரிக்கே உரிய விசாரணை மேற்கொள்ளும்படி வந்ததாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் பொய்ப்புகார் கொடுத்துவிட்டதாக பைல்கள் மூடப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். இதுவும் எந்த அளவுக்கு உண்மை என்றே தெரியவில்லை.

நூலக ஊழியர்களின் போக்கு மறைமுகமாக நூலகத்திற்கு வருபவர்கள் தாமாகவே வராமல் இருந்துவிடச்செய்யும் நோக்கத்துடன் செய்வதாக கூட இருக்கலாம்.

உண்மை அவரவர் மனசாட்சிக்குதான் தெரியும்.
---------------------------------

பெரும்பாலும் அரசு ஊழியர்களின் அராஜகம் எப்படி இருக்கிறது என்ற சாம்பிளுக்கு பின்வரும் தகவல் கூடுதல் இணைப்பு.
***************
சேலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் தரமுடியாத பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர் விரட்டி அடித்து அந்த பெண்ணுக்கு பேருந்து நிலையத்தில் குழந்தை பிறந்த செய்தி பரபரப்பாக இருக்கிறது. பிரச்சனையை விசாரிக்கும் அதிகாரி, கடந்த சில மாதங்களில் 600 பிரசவம் ஆன இந்த ஆஸ்பத்திரியில் இது ஒன்றுதான் இப்படியாகிவிட்டது என்று சொல்கிறார்.

ஆமாம் அது உண்மைதான் ஐயா...எல்லாரிடமும் காசு கேட்டதும் கொடுத்திருப்பார்கள். இந்த பெண்ணிடம் அதற்கு பணம் இல்லாததால் விஷயம் வீதிக்கு வந்துவிட்டது.

புதன், 13 மார்ச், 2013

அணு குண்டுல இருந்து கர்ணன் கவச குண்டலம் காப்பாத்துமா?

18.03.2013 தேதியிட்ட குங்குமம் வார இதழ்ல கே.என்.சிவராமனின் கர்ணனின் கவசம் தொடர்கதையின் முதல் அத்தியாயத்தை படிச்சதும் என்னை மாதிரி சாதாரணர்களுக்கு இந்த சந்தேகம்தான் வரும். அதாவது அணுகுண்டோட பாதிப்புல இருந்து கர்ணனின் கவச குண்டலம் காப்பாத்துமா என்ற கேள்விதான் இது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா செளந்தர்ராஜன் ஒரு நாளிதழின் ஞாயிறு இணைப்பு வாரஇதழ்ல தினம் ஒரு உயிர், சிவம் அப்படின்னு ரெண்டு தொடர்கதை எழுதினாரு. அதை விடாம படிச்சிடுவேன். ஒவ்வொண்ணும் ஒரு வருடம் (சுமார் 50 வாரங்கள்) வெளிவந்தது. நான் இதுமாதிரியான அமானுஷ்ய மர்மத்தொடர்களின் ரசிகன். இப்பவும் இந்த கதைகளை நூலகத்துல இருந்து இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால எல்லாவிதமான தொடர்கதைகளுக்கும் தனி வாசகர் வட்டம் இருந்தது. சென்னை தொலைக்காட்சி வந்ததும் பத்திரிகைகளில் கதை படிக்கிறவங்க எண்ணிக்கையில கேன்சர் மாதிரியான ஒரு பாதிப்பு ஏற்படத்தொடங்கி செயற்கைக்கோள் தொ(ல்)லைக்காட்சிகள் வந்ததும் கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜுக்கே போயிடுச்சு.

புத்தகம் படிக்கிறதுக்கு நாம செலவழிக்கிற நேரத்தைப்போல குறைந்தது 4 மணி நேரத்தை நமக்கு தெரியாம தொல்லைக்காட்சிகள் எடுத்துக்குது. அதை யாரும் உணர்றது இல்லை. அதை இப்போ பேசி என்ன ஆகப்போகுது.

சாதாரணமான திகில் கதைகளை விட அமானுஷ்யங்கள் கலந்த மர்மக்கதைகள் எப்போதுமே வாசகர்களின் ஆதரவைப் பெறக்கூடிய சூழ்நிலை இன்னும் தொடருதுன்னு நினைக்குறேன். அவர்கள் அதற்கு தேர்ந்தெடுக்கும் கதைக்களனும் கருவும் அழுத்தமானதா இருக்கணும். பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இதுமாதிரியான அமானுஷ்ய கதைகளுக்கு கோவில் சிலைகள், அதன் புராணபழமை காரணமாக பலகோடி மதிப்பு, நவபாஷான சிலை மாதிரி சக்தி அது இதுன்னு பல கதைக்கருவை கையாண்டாங்க.

அதெல்லாம் ரொம்ப பழைய பஞ்சாங்கம். அந்த மாதிரி பழைய புராணத்துல உள்ள விசயத்தை கையில் எடுத்துகிட்டு இப்போ உலகையே மிரட்டிகிட்டு இருக்குற அணுஉலை, அணுகுண்டு பிரச்சனையிலிருந்து தப்பிப்பது எப்படின்னு ஒரு டிராக்கை பிடிச்சு இந்த கதையை தொடங்கியிருக்காங்க.

எனக்கு தெரிந்த டாக்டர் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அணுகுண்டு கதிர்வீச்சால கரப்பான்பூச்சி சாகாது. அதன் இறக்கையில சுரக்குற ஒரு திரவம் அணுக்கதிர்வீச்சை தடுக்கும் அதை நசுக்கிதான் கொல்லணும்னு சொன்னார். இது உண்மையா, பொய்யான்னு எனக்கு தெரியலை. நான் இந்த கருவை மையமா வெச்சு ஒருத்தர் சயின்ஸ் பிக்சன் கதை எழுதுனா எப்படி இருக்கும்னு நினைச்சேன்.

அதையெல்லாம் தாண்டி கர்ணனின் கவசகுண்டலம் சூரிய வெப்பம் மட்டுமில்ல, அணு வெப்பத்தை கூட எதிர்க்கும்னு ஒரு வரியை யோசிச்சு அந்த கவச குண்டலங்களை தேடி வர்றவங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை குறிவெச்சு கிளம்புறாங்கன்னு முதல் அத்தியாயத்திலேயே பீதியை கிளப்பியிருக்கார் கே.என்.சிவராமன்.

குங்குமம் சன்குழும பத்திரிகைன்னு எல்லாருக்கும் தெரியும். கர்ணனின் கவசகுண்டலம் தலைப்புலேயே மூணு சூரியன் படம் (தலைப்புள்ளியா). கதையோ அணு வெப்பத்தை தாங்கக்கூடிய கனிமம் குறித்து பேசப்போற மாதிரி தெரியுது. (அது வெப்பத்தை மட்டும் தடுக்குமா, அணுக்கதிர்வீச்சையே தடுக்குமான்னு யாருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறது?) எது எப்படியோ, 25 வாரத்துக்காவது இந்த தொடர் வெளிவந்தா ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல அமானுஷ்ய தொடர்கதை படிச்ச ஃபீலிங் கிடைக்கும்.

பார்ப்போம்...ஏன்னா, கலைஞர் டிவியில ராஜேஷ்குமார் நாவல் ஒண்ணு உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சனிக்கிழமை தொடரா வெளிவந்துச்சு. மால்குடி சுபா அழுத்தமான குரல்ல சொல்லவா சொல்லவா உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சூப்பரா பாடின டைட்டில் பாடல் கூட அனைவரையும் கவரும்படியா இருந்துச்சு. ஆனா 10 வாரம் கூட வெளிவரலைன்னு நினைக்குறேன். (பத்திரிகையில இந்த மாதிரி ஸ்பான்சர் பிரச்சனை இருக்காது)