Search This Blog

கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜூலை, 2019

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா?


ஒரு வேலையைச் செய்வது போல் போக்கு காட்டுபவர்களும்சும்மாஇருப்பவர்களும்தான் உண்மையாக வேலை செய்பவர்களைவிடஅதிகமாய்வேலை வாங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.


அந்த பணி இடத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.


"ஏம்ப்பா...அவன் சும்மாதான இருக்கான்இந்த வொர்க்க அவன்கிட்ட கொடுங்க...' 


"நீங்க ஃப்ரீயாத்தான இருக்கீங்க... கொஞ்சம் இவருக்கு ஹெல்ப் பண்ணுங்க...'
இப்படி எல்லா வேலைகளிலும் கொஞ்சம் பங்கு இவருக்கு ஒதுக்கப்பட்டுகடைசியில் இவர் செய்கிற வேலையைப் பார்த்தால் அது எல்லோரையும் விடஅதிக அளவில்தான் இருக்கும்இதற்கு உருப்படியாக ஒரே வேலையில் தன்னைஐக்கியப்படுத்தி விட்டுப் போய்விடலாம்அப்போது அவரை யாரும் தொந்தரவுசெய்ய மாட்டார்கள்


"அவர் அந்த வேலைல பிஸிஎன்பார்கள்.






வெள்ளி, 7 அக்டோபர், 2016

இளைய பாரதம் மின்னிதழுக்கு இப்போது என்ன அவசியம்?



சொந்தமாக கணினி வாங்குவதற்கு (2009 பிப்ரவரி வரை) முன்பு நிறைய எழுதினேன். ஒரு முறை தப்பாகி விட்டால் அந்த பக்கம் முழுவதையும் திரும்ப எழுதியாக வேண்டும். அப்போது கற்பனை வளம் நன்றாக இருந்தது. அந்த காலகட்டம் வரை எழுதிய நிறைய கதைகள், துணுக்குகள், கட்டுரைகள் பல பரிசுகளையும் பெற்றுத்தந்தன.





இப்போது கணினியின் உதவியுடன் எழுதி முடித்த பிறகு கூட பலமுறை திருத்தம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் எழுத்தில் மனம் லயிப்பதில்லை. என்னிடம் இருந்த இன்னொரு குறைபாடு என்னவென்றால் சில இதழ்கள் அறிவிக்கும் சிறுகதைப்போட்டிக்காக மட்டும் அவ்வப்போது கதை எழுதவேண்டும் என்று உட்காருவேன். அதுவும் அறிவிப்பை பார்த்த உடன் செய்தாலாவது பரவாயில்லை. கடைசி தேதிக்கு இரண்டு தினம் முன்பு முயற்சி செய்தால் எப்படி சிறக்கும்?





படம் இயக்க ஒப்புக்கொண்டுவிட்டு, நாயகன், நாயகியை ஒப்பந்தம் செய்து விட்டு திரைக்கதை எழுத ஹோட்டலில் ரூம் போடும் செயலுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை இந்த செயல்.





கடந்த ஐந்தாண்டு காலத்திற்கும் மேலாக ஒரு ஆண்டு ஒரு பத்திரிகைக்கு அனுப்பிய கதையை மறு ஆண்டு ட்ச்சப் கூட செய்யாமல் வேறு பத்திரிகை போட்டிக்கு அனுப்புவது என்ற அளவில் சோம்பேறித்தனமாக இருந்திருக்கிறேன்.





மீண்டும் ஒரு கதைகள் கூட பிரசுரம் ஆகாததிலிருந்து என்னை நான் செம்மைப்படுத்திக்கொள்ள முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல், ஏற்கனவே எழுதிய கதைகளை மீண்டும் மீண்டும் அனுப்பும் முயற்சியிலேயே காலம் கடத்தி வந்திருக்கிறேன்.





விளைவு, மனதில் ஒரே நெருடல். அதை எழுத வேண்டுமே, இதை எழுத வேண்டுமே எந்த தவிப்பு. ஒரு படைப்பை உருவாக்கிவிட்டு அது பிரசுரமாகும் வரை மற்றதை எழுத முயற்சிக்காமல் இருப்பது மிகப்பெரிய தவறு என்று என் மனதுக்கு தோன்றியதால் இந்த மின்னிதழை உருவாக்கியுள்ளேன். 





முதல் இதழில் இடம்பெற்றுள்ள கல்லூரிச்சாலை சிறுகதை கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த பத்திரிகையிலும் பிரசுரம் ஆகாமல் இருந்தது. அது தவிர நான் முன்பு வலைப்பூவில் எழுதிய ஒரு சில மேட்டர்களையும், நான் பகிர்ந்து கொள்ள நினைத்த துணுக்குகளையும், ஆயுத பூஜை தொடர்பான கட்டுரை ஒன்றையும் தெளித்து முதல் இதழை உருவாக்கியுள்ளேன்.





இனி பரிசு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்காது. இன்னும் எதையும் எழுதாமல் இருக்கிறோமே என்ற தவிப்பு இருக்காது. எழுதிய கதை பிரசுரத்துக்கு தேர்வாகுமோ ஆகாதோ என்ற கவலை இருக்காது. அவ்வப்போது இணைய இதழில் எழுதி விடுவதால் எழுத்தை மனதிலேயே தேக்கி வைத்திருக்கும்போது ஏற்படும் பிரசவ வேதனை இருக்காது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதினால் இறைவன் கொடுத்த வரமான கற்பனை வளம் இன்னும் மேம்படும் என்ற மன மகிழ்ச்சியில் இளையபாரதம் மின்னிதழ் (1-15 அக்டோபர், 2016)





(இதை நடத்துவதற்கு எங்கே அனுமதி பெற வேண்டும், சட்ட திட்ட நடைமுறைகள் என்ன என்று ஒன்றும் தெரியாது. ஆனாலும் இலவசம், விற்பனைக்கு அல்ல, தனிச்சுற்றுக்கு மட்டும் என்பதால் துணிந்து செயலில் இறங்கி விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்வோம்.!)









************************************************************************


ஆயுத பூஜை கொண்டாட்டத்தை பத்தி அப்புனு என்ன சொல்றாரு?





பொங்கல் பண்டிகை, தமிழ் புத்தாண்டு, ஆயுதபூஜை போன்ற விழாக்கள் கொண்டாடும் மரபு இல்லை என்றால் பெரும்பாலான வீடுகள், தொழிலகங்கள் எங்கேயும் எப்போதும் குப்பைக்கூளங்களாகவும் தூய்மையின்றியுமே காட்சியளிக்கக்கூடும். வசிக்கும் வீட்டையும் தொழில் செய்யும் இடத்தையும் தினசரி சுத்தப்படுத்தி தூய்மையாகவே வைத்திருப்பவர்களுக்கு இது போன்ற பண்டிகைகள் வந்தால் ''அடடா... எல்லாத்தையும் சுத்தம் செய்யணுமே'' என்ற பெருமூச்சு எழாது.





ஆயுத பூஜை பற்றி இணையத்தில் என்னதான் பதிவேற்றி வைத்திருக்கிறார்கள் என்று தேடினால் பெரும்பாலான தளங்களில் பொதுவாக காணப்பட்ட தகவல்கள் இதுதான்:





ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறை பொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை. ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப்  பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும். ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயபடுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமே. விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் மேன்மை தரும்.


இது போல் பல விதமாகவும் ஆயுத பூஜை பற்றி தகவல்கள் இருக்கின்றன. இவை தவிர கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் இது தேவையற்ற வழிபாடு என்ற கோணத்தில் சில வாதங்களை முன்வைக்கிறார்கள்.


பெரும்பாலானவர்கள் ஆன்மிகம் என்ற கோணத்தில் ஆயுதபூஜையை ஒரு வழிபாடு என்ற அளவில் மட்டும் நினைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள். சிலர் கடவுள் மறுப்பு என்ற கோணத்தில் ஆயுதபூஜை பழித்துப் பேசி எதுவும் செய்யாமல் இருக்கக்கூடும்.





ஆயுத பூஜையை பொறுத்தவரை இந்தியா முழுவதும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகிறார்கள். நவராத்திரியை முன்னிறுத்தி வடமாநிலங்களில் துர்க்காபூஜை, கர்நாடகத்தை பொறுத்தவரை தசரா கொண்டாட்டம், தமிழ கத்தில் நவராத்திரி வழிபாடு ஒருபுறம், ஆயுதபூஜை என்று தொழிலகங்களில் மற்றொரு புறம், விஜயதசமி அன்று கல்வி, கணக்கு என்று அறிவு, புத்தி கொள்முதல் தொடர்பான முயற்சிகள் என்று கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை.


மற்ற மாநிலங்களை விட்டுவிடுவோம். தமிழகத்தை பொறுத்தவரை ஆயுதபூஜை மழைக்காலத்தின் ஆரம்பம். பொங்கல் பண்டிகை என்பது மழை, பனி நீங்கி வெயில் சுட்டெரிக்கும் பணியை தீவிரமாக்கும் நேரம். ஆக இந்த இரண்டு பண்டிகைகளின்போதும் வீடு, தொழிலகங்களை சுத்தம் செய்தால் சுகாதாரத்துடன், பொருட்கள் வீணாவதும் தவிர்க்கப்படும் என்ற கோணம்தான் அப்புனுவுக்கு தோன்றுகிறது.





ஆன்மிகம், கடவுள் மறுப்பு என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் நம் இடத்தையும் பொருட்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாக்கவாவது இந்த பண்டிகைகளை நல்லவிதமாக கொண்டாடுங்களேன்.


தம்பி, இந்த சுத்தம் செய்யுற வேலையை நாங்க அப்பப்போ செய்து எப்பவுமே தூய்மையாத்தான் வெச்சிருக்கோம்னு சொல்றீங்களா? 





எதுக்கு சம்பாதிக்கிறோம்... ஆடம்பரம், அநாவசியம் என்று இல்லாமல் அவரவர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் அளவோடு செலவழித்து குடும்பத்தினருடன், ஊழியர்களுடன், ஆதரவற்ற இல்லங்களில் இருப்பவர்களுடன் கொண்டாடுங்களேன். 





மனதுக்கு மகிழ்ச்சியும் நாட்டில் பணப்புழக்கமும், சமூகத்தில் பல பிரிவினருக்கு வருவாயும் கிடைக்கும். இதுதான் அப்புனுவோட தீர்ப்பு. என்ன நாஞ்சொல்றது?





***************************************************************************





நண்பர்களே! வணக்கம்...





காலம் காலமாக பத்திரிகை நடத்துபவர்களே விளம்பரம், விற்பனை என்று பல வகையிலும் நிலை நிறுத்த போராடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் புதுசா இது என்ன மின்னிதழ் என்று நீங்கள் யோசிக்கலாம்.


கரகாட்டக்காரன் திரைப்படத்தில், நாட்டுல எண்பது கோடி பேர் இருக்கானுங்க... அவங்களை திருத்துறது என் வேலையில்லை... என்னை நான் முதல்ல திருத்திக்கிறேன்... கவுண்டமணியின் வசனம் இன்றும் முகநூல் மீம்ஸ்களில் அவ்வப்போது பகிரப்பட்டு வருகிறது. அதே சிந்தனைதான் எனக்கும்.





நான் படிப்பது, பார்ப்பது, கவனிப்பது என்று பலவற்றிலும் இருந்து நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதன்படி பெரும்பாலானவற்றை நான் செயல்படுத்தியும் வருகிறேன். அதன் தாக்கத்தில் எல்லாரும் இப்படி இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும் என்ற பார்வையில் நிறைய யோசனைகள் என் மனதில் இப்போதும் உதித்துக்கொண்டே இருக்கின்றது.  





சிறு வயதில் நான் படித்த பள்ளிக்கு அருகில் இருந்த நூலகம் செல்லும்போது ஒருசில கையெழுத்து பிரதி இதழ்களை படித்திருக்கிறேன். ஒரு ஏ4 தாளில் இரண்டு பக்கமும் எழுதி, நான்கு பக்க கையெழுத்து பிரதியை நாமும் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை அப்போதே எனக்கு இருந்தது. அதை செயல்படுத்த கொஞ்சம் தாமதமானதால் இப்போது கணிணியில் வடிவமைத்தே வெளியிடுகிறேன். 





சில எழுத்தாளர்கள் பேட்டியில், குறிப்பிட்ட படைப்பை எழுதி முடிப்பதற்குள் பிரசவ வேதனையை அனுபவித்ததாக சொல்லுவார்கள். இது என்ன எல்லாரும் இந்த உதாரணத்தையே சொல்றாங்க என்று நினைத்திருக்கிறேன். ஆனால் என் மனதில் எழும் எண்ணங்களை எழுத்தாக்கும்போது அந்த உதாரணத்தின் அர்த்தம் புரிந்தது.





எழுத்தாக்கியாயிற்று. அதை பிரசுரம் செய்ய வேண்டும். வெகுஜன இதழ்களில் நம் படைப்பை அவர்களால் வெளியிட முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது தவிர நான் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக ஒரு சில கதைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன். அவற்றையும் சில வார இதழ்களில் போட்டிகள் அறிவிக்கும்போது மட்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பத்திரிகை, அந்த பத்திரிகை என்று மாற்றி மாற்றி அனுப்ப வேண்டியது. எழுதுபவர்கள் ஒரே கதையைத்தான் திரும்ப திரும்ப எழுதுகிறார்கள் என்று எழுத்தாளர் சுஜாதா ஏதோ ஒரு பத்திரிகை நேர்காணலில் சொல்லியிருந்ததை படித்ததாக நினைவு. 





நானும் அந்த பட்டியலில் சேர்ந்து விடக்கூடாது என்று தோன்றியது. அதனால் ஒரு முறை ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பி பிரசுரமாகாவிட்டால் மீண்டும் அதை வேறு பத்திரிகைக்கு அனுப்பாமல் இளைய பாரதத்தில் பிரசுரம் செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.





கற்பனைக்கு எல்லை ஏது? இப்படி செய்யும்போது புதிது புதிதாக நிறைய எழுதும் எண்ணம் வரும். அதற்காகத்தான் இந்த முயற்சி.





இளையபாரதம் தலைப்பில் இரண்டு படங்கள் இடம்பெற்றிருக்கிறது. நடுவில் உள்ளது மனுநீதி சோழனிடம் பசு தன் கன்று இறந்ததற்காக நீதி கேட்ட படம். இது கற்பனையா, வரலாறா என்ற ஆராய்ச்சிக்குள் நான் செல்லவில்லை. ஒரு தப்பை சுட்டிக்காட்டினால், அவங்க செய்யலையா, அந்த தலைவர் செய்யலையா என்று சப்பைக்கட்டு கட்டும் பழக்கம் திருவாளர் பொதுஜனத்திடமே இருக்கிறது. தாயானாலும், தந்தையானாலும், தன் மகனானாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற மன நிலை அனைவருக்கும் வேண்டும். முக்கியமாக இளைய சமுதாயத்துக்கு வேண்டும். அதற்காக மனுநீதி சோழன் போல் உயிரை எடுக்க சொல்லவில்லை. குற்றம் என்று உணர்ந்தால்தான் மீண்டும் அந்த தப்பு தப்பே இல்லை என்ற மன நிலை வராது. 





தனக்கு பாதிப்பில்லாமல், உதவி செய்கிறேன் என்று ஏமாந்து விடாமல், இரக்கத்தினால் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு அடுத்தவருக்கு உதவ வேண்டும். இதை குறிப்பிடும்விதமாகத்தான் புள்ளி இருக்கும் இடத்தில் அந்த படம் இருக்கிறது. 


***************************************************************************





யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்


சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.





ஒருவன் தன் நாக்கை அடக்காவிட்டால் அதுவே அவனுக்குத் தீராதப் பழியை உண்டாக்கி விடும்.


அதிகாரம் : அடக்கம் உடைமை





குறள் எண் : 127





முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பகிரவில்லை என்றால் பல நல்ல விசயங்களும், சமூகத்தினை சுரண்டும் சில மனிதர்களின் தவறுகளும், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் வெளிச்சத்திற்கே வராமல் போயிருக்கும். ஏனென்றால் ஊடகங்களின் தற்போதைய சூழ்நிலை அப்படி. 





அதற்காக கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறு, பொய்யான தகவல்களை பகிர்தல், மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்தல் மிகவும் தவறு. நம் முன்னோர்கள், அரிசியை கொட்டுனா அள்ளிறலாம். வார்த்தையை கொட்டுனா அள்ள முடியாது என்று சொல்லி வைத்தார்கள். 





அப்போதெல்லாம் சமூக ஊடகங்களும் இணையமும் புழக்கத்தில் இல்லை. சொன்னவருக்கும் கேட்டவருக்கும்தான் தெரியும். அந்த காலகட்டத்திலேயே சொன்ன வார்த்தைகள் காலத்துக்கும் பாதிப்பை தரும் வகையில் ஒருவர் இன்னொருவரிடம் சொல்வது, சம்மந்தப்பட்ட நபரிடமே சொல்வது என்று தவறான வார்த்தைகள் சாகாவரம் பெற்றுவிடும்.





தாய், தந்தை, மனைவி, கணவர், குழந்தைகள், உறவினர்கள், பணியாளர்கள், சக ஊழியர்கள், ஆசிரியர், மாணவர்கள், அக்கம்பக்கத்து வீட்டினர் என்று யாரைப் பற்றியும் தவறான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது எப்போதும் நல்லது. ஜாலியாகத்தானே சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு உறவுகளை, ஆசிரியர்களை, நண்பர்களை மனம் புண்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் எதையும் எழுதுவது நல்லதல்ல.





இன்றைய காலகட்டத்தில் நாம் பகிரும் ஒரு செய்தி இணையத்தில் எத்தனை இடத்தில் பதிவாக தங்கிவிடும் என்பது இணையதளங்களை நிர்வகிப்பவர் களாலேயே கணக்கிட்டு சொல்ல முடியுமா என்றால் சந்தேகம்தான்.


***************************************************************************





சமச்சீர்கல்விக்கும் ஆங்கிலத்திரைப்படத்துக்கும் தொடர்பு  இருக்கா?...





இருக்கே. பள்ளிக்கூடங்கள்ல இருக்குற பாடத்திட்டத்துக்கும் தமிழ் பேசுற ஆங்கிலப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே. ஒரு பட்டிமன்றத்துல கு.ஞானசம்மந்தன் அவர்கள், வரவர ஜாக்கிசான் ரொம்ப அழகா தமிழ் பேசுறார். போற போக்கைப் பார்த்தா பட்டிமன்றத்துக்கு நடுவரா அவர் வந்து உட்கார்ந்துடுவார் போலிருக்கே."ன்னார். அதைக் கேட்கும் போது காமெடியாத்தான் இருந்துச்சு.





ஆனா இப்போ அதனால நமக்கு சில சங்கடங்கள் நமக்குத்தெரியாமலேயே இருக்குறது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிற செய்திதான். புதியதலைமுறை வாரஇதழில் 2010 ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு துறையில் உள்ளவர்களிடமும் நேர்காணல் செய்திருந்தார்கள்.





தமிழ்த்திரைப்படத்துறையில் இருக்கும் வி.சி.குகநாதன்,ஹாலிவுட் படங்களை அந்த மொழியிலேயே வெளியிடுங்கள். அதன் மூலம் அடிமட்ட ரசிகனும் தன் ரசனையை வளர்த்துக்கொள்ளட்டும். அதைவிட்டுவிட்டு யாரோ ஒரு ஆங்கிலேயனின் வாயசைப்பில் தமிழைத்திணித்து தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 2010ம் வருடத்தில் அதைக் கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம், தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சினிமா இளைஞர்களுக்கும் ஏற் பட்டிருக்கிறது." என்று கூறியிருந்தார்.





இதை வெறும் சினிமா தொடர்பான விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது. சமச்சீர்கல்வி பிரமாதம். கலக்கப் போகுதுன்னு ஆளுங்கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் சொல்றாங்க. எதிர்க்கட்சியும் அவங்களைச்சேர்ந்தவங் களும் இது சரியில்லைன்னு வசை பாடுறாங்க. இவங்க எது சூப்பர்னும் விளக்கலை. அவங்க எது சரியில்லைன்னும் சொல்லலை.


நடுவுல பொதுமக்களுக்கே வழக்கம் போல் குழப்பம்.





இப்போது சமச்சீர்க்கல்வித்திட்டத்தின் நிறைகுறையை அலசி ஆராயும் அளவுக்கு நான் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் அளவுக்கு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறனையும் மேம்படுத்தும் வகையில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டுமே தவிர நன்றாகப் படிக்கும் மாணவர்களை நிறைய அரசுப்பள்ளி மாணவர்களைப் போல் எழுபது சதவீதம் எடுத்தால் போதும் என்று கீழே பிடித்து இழுக்கும் வகையில் சமச்சீர் கல்வி அமையக்கூடாது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.





இலவசமும் இப்படித்தான். ஒரு பொருளை காசு கொடுத்து வாங்குற அளவுக்கு ஒருத்தனை பொருளாதார வலு உள்ளவனா மாத்துறதை விட்டுட்டு இலவசம் கொடுத்து ஒரு அடிமையாவே வெச்சிருக்குறதுக்கு உதாரணம் சொல்றேன். இது வண்ணத்துப்பூச்சி புழு உருவமா இருக்கும்போது அதுக்கு உதவி செய்யுறதா நினைச்சு கூட்டை  உடைக்கிறதும்  இலவசம் கொடுக்குறதும் ஒண்ணுதான்.





தன்னால கூட்டை விட்டு வெளியில வர்ற வண்ணத்துப்பூச்சியாலதான் பறக்க முடியும். நாமே கூட்டை உடைச்சு அதை வெளியில விட்டா எதுக்கும் பிரயோசனமில்லாம உயிரிழக்க வேண்டியதுதான்.


(2010ல் வலைப்பூவில் எழுதியது)


***************************************************************************


ஆங்கிலப் படம் பார்த்தால் அதிகரிக்கும் ஆங்கில அறிவு...





நான் பணியாற்றிய ஒரு தியேட்டரில் The Rock, Broken Arrow, Independence day, Golden Eye, Tommorow never dies, Air Force One, Universal Soldire, Jumanji, Evil Dead, Anaconda, The Lost World(jurassic park 3) உட்பட பல படங்களைத் திரையிட்டாங்க.


அந்தப் படங்கள்ல வர்ற வசனங்களோட உச்சரிப்பு பாதி புரியாது. ஆனா ஓரளவுக்கு வசனங்களுக்கு அர்த்தம் விளங்கிடுச்சு. 





அடுத்து 2000வது ஆண்டு வாக்கில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம்ல வேலை செய்த நாட்கள்ல Star Plus சேனலில் அமிதாப் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்த்தேன்.அப்போதும் எனக்கு ஓரளவு ஆங்கில அறிவு மேம்பட்டதை உணரமுடிஞ்சது.





நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற சமயம். எனக்கு கிரிக்கெட் மேல ஆர்வமே இல்லன்னாலும் அப்போ நான் போட்டிகளைப் பார்க்க ரெண்டு காரணம் இருந்தது.இந்தியா ஆஸ்திரேலியாகிட்ட தவிர வேறு யார்கிட்டயும் தோற்காம இறுதிப்போட்டிக்கு முன்னேறினது முதலாவது காரணம்.


அடுத்தது வேற என்ன...மந்த்ராபேடிதான். அந்தம்மா(?!) கிரிக்கெட் பத்தி அரைகுறையா புரிஞ்சுகிட்டு ஆர்வக்கோளாறுல தப்புதப்பாதான் கேள்வி கேட்கும். ரொம்ப பேர் அதைக் கேட்டாங்களோ இல்லையோ...அம்மணியோட தரிசனத்தை நல்லாவே பார்த்தாங்க.





எங்க கல்லூரி ஆசிரியர் ஒருத்தர்தான் மந்த்ராபேடி பேசுறதை டிவியில பாருங்கன்னு சொன்னார்.நாங்க எல்லாரும் சட்டுன்னு சிரிச்சுட்டோம்.





நான் பார்க்கசொன்னது அந்த அம்மாவோட ஆங்கிலத்துக்காக. போட்டுருக்குற டிரஸ்சுக்காக இல்லை." அப்படின்னார்.


நான் கொஞ்சம் ஆர்வமா, சார்..அந்தம்மா தப்புத்தப்பால்ல கிரிக்கெட்டைப்பத்தி பேசுது. அப்போ அந்த இங்கிலீஷ் எந்த கதியில இருக்குமோன்னு கேட்டேன். எதுவுமே தெரியாத உங்க மாதிரி புத்திசாலிங்களுக்கு அந்த இங்கிலீஷ் போதும் அப்படின்னு சொல்லிட்டார்.





இந்த கேலி கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம முயற்சி பண்ணினா நிச்சயமா ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துக்க முடியும்.





ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா இங்க எல்லாம் ஆங்கிலத்தை நம்பியா இருக்காங்கன்னுதானே நீங்க கேட்குறீங்க. அங்க எல்லாம் நாடு பூராவும் ஒரே மொழிதான். ஆனா நம்ம நாட்டுல சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வுல கலந்துக்க தலைநகர் போனா வழியில குறைந்தது ஆறு மொழியாவது கத்துக்க வேண்டிய நிலை. எத்தனை மொழி கத்துக்குறோமோ அத்தனை மனிதனுக்கு சமம்னு சொல்லுவாங்க.





அதுக்கு நேரம் ஒதுக்க எல்லாராலயும் முடியாது.அதனால நம்ம நாட்டுல எல்லாரும் ஆங்கிலத்தை இணைப்புப்பாலம் மாதிரி பயன்படுத்துற அளவுக்கு கத்துக்குறது அவசியம். அதாவது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தாய்மொழி, ஆங்கிலம் இரண்டும் கட்டாயம். அதுக்கு மேல அவங்கவங்க திறமையைப் பொறுத்து கத்துக்கலாம்.


***************************************************************************


மோசடியில் சிக்கும் மக்கள்





கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பண விஷயத்தில் படித்தவர், படிக்காதவர் என்று பலரும் மிக அதிகமாக ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் பணத்தாசையை அதிகமாக காட்டும் விளம்பரங்களை பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏமாந்தது சரி. இப்போதும் பெரிய அளவில் ஊடகங்களில் விளம்பரம் செய்தால் அவர்கள் மோசடி செய்ய வாய்ப்பிருக்காது என்று முழுவதுமாக தங்கள் பணத்தை அர்ப்பணித்துவிட பெரும்பாலான மக்கள் தயாராக இருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.





1 ரூபா விதைச்சா 1 கோடிரூபாய் அறுக்கலாம் என்ற ரீதியிலான விளம்பரங்களுக்கு பஞ்சமே இல்லை.  பணப்பட்டுவாடாவில் சிக்கல் வந்து முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று பல உதாரணங்களை பேப்பரில் படித்திருக்கிறேன்.





ஆனாலும் சினிமாக்களில் ஒரே பாட்டில் கதா நாயகன் கோடீஸ்வரனாவது போல் திருவாளர் பொது ஜனமும் ஆசைப்படுவதும் இது மாதிரியான சிக்கல்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது செலவினங்கள் எல்லா குடும்பத்தாரையும் கழுத்தை நெரிக்க, செலவுகளில் கால்வாசி அளவுக்கு கூட சம்பாதிக்க முடியாத விரக்தியும் ஒரு காரணமாக இருக்கும்.





மிகப்பெரிய கோடீஸ்வரர் சென்னை சிட்டி பஸ்சில் செல்லும்போது மூன்று ரூபாய் கொடுத்து டிக்கட் எடுக்க காசு இல்லை என்றால் நடத்துனர், யோவ்...சாவுகிராக்கி, எறங்குயா முதல்ல..."என்று நல்ல வார்த்தை(?!) சொல்லி அவரை இறக்கிவிடுவார் அல்லது செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் பிடித்துக்கொடுப்பார்.அந்த நேரத்தில் அந்த பணக்காரரின் சொத்துக்கள் எதுவும் உதவிக்கு வராது.





ஒரு நிதி நிறுவனத்திடம் எல்லாரும் ஒரே நேரத்தில் போட்ட பணத்தை திருப்பிக்கேட்டால் ஏற்படுவதும் இதே நிலமைதான். ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் தவிர்த்து நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சில நிறுவனங்களும் திடீரென மூடப்படுவதற்கும் இதுதான் காரணம். நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பேராசிரியர் கொடுத்த விளக்கம்தான் இது.





ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் புதியதாக சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும் பல விஷயங்களைப் பூசி மெழுகிவிட்டார்கள்.





அதுசரி...நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததில் சில அரசு அதிகாரிகளும் இருந்தார்கள்.பல விதிகளுக்கு உட்பட்டுதானே அவர்களாலும் பேச முடியும்.





இதில் என்னை நெருடிய விஷயம் என்னவென்றால் பதிவு செய்யப்படாத நிறுவனம் பற்றிய தகவல்களை சாதாரண குடிமக்கள்தான் கண்டறிய வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு திறமை இருந்தால் இவ்வளவு நாளும் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்க மாட்டார்களே.





மக்கள் பேராசையால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவது பெரும்பாலும் முறையாக பதிவு செய்யப்படாத நிறுவனங்களில்தான். இதற்கு ஓரளவு எளிமையான தீர்வு என்னவென்றால் அரசின் இணையதளத்தில் முறையான பதிவு பெற்ற எல்லா தனியார் நிறுவனங்களின் பட்டியலையும் துறை வாரியாக வெளியிட்டுவிடலாம்.





கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் இவைதான் மக்களுக்கு அதிக நன்மையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் அவை பதிவு பெற்றால் மட்டும் போதாது. அவர்களின் எல்லை எதுவரை என்பதையும் தெளிவாக வரையறுத்து அதையும் அரசின் இணையதளம் மூலமாக மக்களின் பார்வைக்கு அளிக்கலாம்.





அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்ததும் உரிய துறையில் முழுமையாக மாணவர் பட்டியலையும் அந்த இணையதளத்தில் வெளிப்படையாக்கிவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெறாமலேயே மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களைத் தேர்வு எழுதவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலம் காணாமலேயே போய்விடும்.





ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் சில இணையதளங்களில் உடனுக்குடன் புதிய தகவல்கள் பதிவுசெய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.


இந்தியாவின் பிரதமர் மாண்புமிகு இந்திராகாந்தி என்று இணைய தளத்தில் இருந்தால் அது பழைய தகவல் என்று நமக்கு புரிந்துவிடும். ஆனால் பல தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் தொடர்பான தகவல்களை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.





நிதிநிறுவனத்தில் ஆரம்பித்து கல்விநிறுவனத்துக்கு போய்விட்டேன்.பரவாயில்லை...கல்வி பெற நிதி தேவை. நிதியைப் பெறவும் கல்வி ஒரு கருவியாக இருக்கிறது.





போலிகளை ஒழிக்க மேலே நான் சொன்ன சில வழிமுறைகள் நிச்சயமாக நல்ல பலன் தரும். ஆனால் நல்ல முறையில் நடைபெறும் சில நிதிநிறுவனங்களும் திடீரென மூடப்படுகின்றனவே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்.





ஆப்பு எதுவும் வெளியில் இல்லை. அதற்கும் மக்கள்தான் காரணம். கடன் வாங்கியவர்கள் திரும்ப கட்டவில்லை என்றால் அது முதலீட்டாளர்கள் தலையில்தான் துண்டாக விழும். இதிலும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வங்கியிலும் சரி, சிட்பண்ட்டுகளிலும் சரி சிறு தொகை வாங்கியவர்களில் 95 சதவீதம் பேர் ஒழுங்காக திரும்ப செலுத்துவதாகத்தான் சொல்கிறார்கள். இது உண்மையாகத்தான் இருக்கும்.





அப்போது வில்லங்கம் எங்கே இருக்கிறது. எல்லாம் மிகச் சில பணக்கார முதலைகளால்தான்.அவர்கள் அப்படி பணத்தை திரும்ப செலுத்தாமல் தப்பிக்க யார் காரணம்? நிதி நிறுவனம் என்றால் நிர்வாக இயக்குனர்கள், அரசுடமை வங்கி என்றால் உயரதிகாரிகளிடமிருந்து பல மக்கள் பிரதிநிதிகள் வரை எல்லா மட்டத்திலும் தவறு செய்கிறார்கள்.


அமெரிக்காவில் இரட்டைக்கோபுரத்தை கட்ட எத்தனை ஆயிரம் மூளைகளும் கரங்களும் கால்களும் உழைத்தனவோ? ஆனால் அதை தரைமட்டமாக்கியது நல்லதை யோசிக்காத மூளை இல்லாத ஒரு சிலர்தானே.


அதேபோல் ஊழலுக்கு முக்கியக் காரணம் சிலரின் பேராசைதான்.





நாலுபேர் நல்லா இருக்கணும்னா எதுவுமேதப்பு இல்லை.- இது நாயகன் படத்தில் வரும் வசனம். இதை ரொம்ப தப்பா புரிஞ்சுகிட்டு தப்பாவே செயல்படுத்துறதுக்கு கொஞ்சபேர்தான் இருக்காங்க. ஆனா இதையே நாடு தாங்காது போலிருக்கே.


2010 வலைப்பூவில் எழுதியது


***************************************************************************


கல்லூரிச்சாலை


சிறுகதை





வர்ற ஒண்ணாம் தேதிலேர்ந்து ஹெல்மெட் போடுறதை கட்டாயமாக்கி யிருக்கறதால இனிமே நம்ம முகத்தை பிகருங்களோ... பிகருங்க முகத்தை நாமளோ பார்க்க முடியாது. என்னடா பண்றது?"என்று நாட்டின் மிக முக்கிய பிரச்சனையைப் பற்றி கவலைப்பட்டான் அந்த கல்லூரி மாணவன்.





சென்னை மாதிரி பெரிய நகரங்கள்ல வெயில் பட்டு தோல் கருத்துடக்கூடாதுன்னு உடம்புல எந்த பாகமும் வெளில தெரியாத மாதிரி பொண்ணுங்க கவர் பண்ணிட்டு போறது மாதிரி நம்ம ஊர்லயும் ஒரு சில டிக்கட்டுங்க இப்படி கிளம்பியிருக்குதுங்கடா... நாலஞ்சு நாளா ஒரு பொண்ணு ஹெல்மட், கிளவுஸ் அப்படின்னு ஃபுல் கவரேஜோட ராயல் என்பீல்டு பைக்ல ரைடு வருது. அது மூடிகிட்டு இருக்குறதோட பின்னால உட்கார வெச்சிருக்குற பொண்ணையும் முழுசா மூடி அழைச்சிட்டு வருது. என்ன கொடுமை சரவணன் இது..." என்றான் மற்றொருவன். 





இப்படி பேசிக்கொண்டிருந்த நாளைய இந்தியாவினர் நின்ற இடம், அந்த சிறு நகரத்தில் பிரபல பெண்கள் கல்லூரியும் பள்ளியும் அமைந்திருந்த வீதியின் பெட்டிக்கடை வாசல்.


தம்பிங்களா... சவுண்டை குறைங்கப்பா... முதலுக்கே மோசமாயிடப் போகுது." என்று கடைக்காரர் இவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.





டேய்... அதோ, தெரு முனையில வர்றது அந்த புல்லட்காரிங்கதான்னு நினைக்கிறேன்..." என்று ஒருவன் டூவீலரில் அமர்ந்திருந்தவனிடம் பரபரப் புடன் சொன்னான். 





"அவளுங்களை இப்ப என்ன பண்றேன்னு பார்..." என்றவாறு வண்டியை செல்ஃப் ஸ்டார்ட் செய்த அவன் சாகசம் நிகழ்த்துவதாக நினைத்துக் கொண்டு முன்வீலை தூக்கி மீண்டும் தரையில் குதிக்க வைத்து சாலையைக் கடந்து சீறியவாறு மறுபுறம் சென்றான். 





இந்த ஓரிரு வினாடிகளுக்குள் புல்லட் அவர்கள் அருகே வருவதற்கும் இவன் சாலையின் மறுபுறம் சீறிக்கொண்டு செல்வதற்கும் சரியாக இருந்ததால், புல்லட் நிலைதடுமாறி அருகில் கட்டிடப்பணிக்காக சாலையில் கொட்டப்பட்டிருந்த ஆற்றுமணலில் போய் சொருகிக் கொண்டது. அதில் இருந்த இரண்டு பெண்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக உருண்டு விழுந்தனர்.





இவர்களை கீழே விழ வைத்த அவன், இதைப் பார்த்ததும் அதிர்ந்துபோய் வண்டியை விரட்ட நினைத்து எதையோ செய்யப்போக அது ஆஃப் ஆகி நின்றுவிட்டது. மீண்டும் அவன் ஸ்டார்ட் செய்ய முயற்சிப்பதற்குள் புல்லட்டில் இருந்து கீழே விழுந்த பெண்களில் ஒருத்தி தாவிச் சென்று அவன் சட்டையை கொத்தாக பிடித்துக்கொண்டாள். இப்போது பெட்டிக்கடை வாசலில் நின்ற மற்ற இளைஞர்கள் எஸ்கேப்.





இப்போது சாலையில் கூட்டம் கூடிவிட்டது. பெண்ணிடம் சிக்கிய இளைஞன்,சாரி மேடம்... தெரியாம நடந்துடுச்சு... விட்டுடுங்க..." என்று கெஞ்சியவாறே தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்தான். ஆனால் அவள் விடுவதாயில்லை. ஒரு கையால் அவனைப் பிடித்துக் கொண்டே ஹெல்மெட்டை கழற்றினாள். 





இவ்வளவு அழகான பெண்ணை பார்த்து ரசிக்க முடியாம இப்படியொரு வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டுவிட்டோமே என்ற அவஸ்தை அவன் முகத்தில் தெரிந்தது. 





கவிதா... நூறுக்கு போன் போட்டு இங்க உடனே போலீசை கூப்பிடு..."என்று தன்னுடன் வந்தவளுக்கு உத்தரவு பிறப்பித்தவளின் குரலில் உறுதி தெரிந்தது.





கூட்டத்தினர் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டு ஒதுங்கி நின்றார்களே தவிர யாரும் இவர்களிடம் நெருங்கி வரவில்லை.





சிக்கியவனை பிடித்து இழுத்து வந்து ஆற்று மணலில் உட்கார வைத்து, அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.


பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு போலீசார் வந்தனர். வந்த ஐந்து போலீசாரில் இரண்டு பேர் கூட்டத்தை கலைப்பதில் கவனம் செலுத்த, மற்றவர்கள் அந்த பெண்ணிடம் வந்தனர்.





"என்னம்மா பிரச்சனை..." என்று அலட்சியமாக ஒரு கேள்வியை கேட்டார் உதவி ஆய்வாளர்.


"சார்... என் பேர்  ஜான்சிராணி..." என்று கம்பீரத்துடன் அந்த பெண் தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தவுடன், உதவி ஆய்வாளரிடம் தென்பட்ட அலட்சியம் காணாமல் போனது.





ஜான்சிராணி சொன்னதை கேட்டுக்கொண்ட பிறகு "காயம் எதுவும் இருக்காம்மா?" என்றார்.





"இல்ல சார்... மணல்லதான் விழுந்தோம்..."





"அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டமா?" என்று உதவி ஆய்வாளர் கேட்டதும், ஜான்சிராணியின் பார்வையில் பொறி பறந்தது. அதைக் கண்டதும் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, சரிம்மா... நீங்க ரெண்டுபேரும் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுங்க." என்று சொன்னதுடன், அந்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை காவலர் ஒருவரை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வர சொல்லிவிட்டு அவனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.


காவல் நிலையம்.





புகார் கொடுக்குறதுல உறுதியா இருக்கீங்களாம்மா... ஹெல்மெட் போட்டிருந்ததோட மணல்லதான் விழுந்திருக்கீங்க. அடிதான் எதுவும் படலியே... மன்னிச்சு விட்டுடலாம்ல... பாவம் இவன் படிக்கிற பையன். அது மட்டுமில்லாம, நான் வேணும்னு செய்யல... ஜஸ்ட் ரோட்டை கிராஸ் பண்ணி நான் வண்டியை மூவ் பண்ணும்போது சின்ன ஆக்சிடெண்ட் அப்படின்னு கேசை ஒண்ணுமில்லாம பண்ணிடுவாங்க." என்று இழுத்தார் ஆய்வாளர்.





ஏன் சார்... எங்களுக்கு ரத்தக்காயம் எதுவும் இல்லைன்னா புகார் எடுத்துக்க மாட்டீங்களா... 


நான் நாலஞ்சு நாளாத்தான் இந்தப் பக்கம் போய் வந்துகிட்டு இருக்கேன். இவனும் இவன் நண்பர்களும் பண்ணு சேட்டையை கவனிச்சுகிட்டுதான் இருக்கேன். 





பெண்கள் கல்லூரி, பள்ளி இருக்குற ஒரு வீதியில இப்படி ஈவ்டீசிங் பண்றதை கவனிச்சு தடுக்காம இருந்த உங்க டிபார்ட்மெண்ட்டுக்கும் நோட்டீஸ் அனுப்பினா என்னன்னு தோணுது.





இப்ப நாங்க மணல்ல விழுந்ததால ரத்தக்காயம் இல்லாம தப்பிச்சுட்டோம். இல்லைன்னா, ஈவ்டீசிங் காரணமா பலியான பெண்கள் பட்டியல்ல எங்க பேரும் சேர்ந்திருக்கும். மீடியாவுக்கு ஒரு நாள் செய்தி கிடைச்சிருக்கும். அவ்வளவுதான். 


நானே கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணா இருக்குறதால என்னை உட்கார வெச்சு பேசிகிட்டு இருக்கீங்க. 





இதுவே ஏழைப் பெண் ஒருத்தி பாதிக்கப்பட்டிருந்தா அவளுக்கு ஸ்டேஷன்ல கிடைக்கிற மரியாதையே வேறயாத்தானே இருந்திருக்கும்." என்று ஜான்சிராணி கேட்டதும் அந்த ஆய்வாளருக்கு வார்த்தைகள் எதுவும் கிடைக்காமல் தடுமாறினார்.





ஆனாலும் நீங்க சொன்ன விஷயத்தையும் ஒரு செகண்ட் யோசிச்சேன். என்னோட உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்படாத நிலையில அவன் பண்ணின தப்புக்காக கடுமையா தண்டிச்சா அவன் திருந்துறதுக்கும் வாய்ப்பு இல்லை. 


ஏன்னா, சிறைக்குப் போறவங்க திருந்தி வெளியில வர்றது மாதிரி தெரியலை. பிரிட்ஜ்ல வச்ச பொருள் மாதிரி ஃப்ரெஷ்ஷா அதே மனநிலையோடதான் தண்டிக்கப்பட்டவன் வெளியில வர்றான்னு ஒரு சினிமா வசனம்தான் நினைவுக்கு வருது.





அதனால, இவன் நண்பர்களையும் எல்லாரோட குடும்பத்தினரையும் வரவழைங்க. அவங்க முன்னிலையில இவனும் இவன் நண்பர்களும் மன்னிப்பு கேட்கட்டும். நான் புகார் எதுவும் கொடுக்கலை." என்றாள் அவள்.





***


எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த ஜான்சிராணி, ஹாலில் அமர்ந்து, அன்றைய நாளிதழை புரட்டினாள்.





இதற்குள் விபரம் தெரிந்த அவள் தந்தை, "ஏம்மா... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அவன் மேல ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்க நீ ஸ்டேஷக்கு போக அவசியம் இல்லாம, இன்ஸ்பெக்டரையே வீடு தேடி வரவெச்சிருப்பேன். உனக்கு ஏம்மா இந்த வீண் அலைச்சல்..." என்றார்.





"அப்பா... அந்த பையன் செய்த தப்புக்கு அவன் காரணமே இல்லை... அவன் பெற்றோர்களும், இந்த சமுதாயமும்தான். 


சக மனுசனை எப்படி மதிக்கணும், ஒரு பெண்ணை எப்படி பார்க்கணும், அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம எப்படி வாழணும்... இப்படி எதையுமே நம்ம நாட்டு பள்ளிக்கூடத்துலயோ, கல்லூரிகள்லயோ சொல்லிக்கொடுக்குறதுல்ல... இந்த விசயங்களை எல்லாம் நானே பாடத்திட்டம் தாண்டின வாசிப்பு பழக்கம் இருந்ததாலதான் தெரிஞ்சுக்க முடிஞ்சது. 





தப்பு செஞ்சதும் தண்டனை கொடுக்குறதும் முக்கியம்தான். அதுக்கும் முன்னால தப்பு செய்யறதுக்கு காரணமான விஷயங்களை புரிய வெச்சு அதை மனசுல இருந்து ஒதுக்க நம்ம சமுதாயத்துல என்ன ஏற்பாடு இருக்குன்னு எனக்கு புரியலை." என்ற ஜான்சிராணி, அந்த நாளிதழின் கடைசி பக்கத்தில் அரைப்பக்க வண்ண விளம்பரமாக வெளிவந்திருந்த அவர்கள் கல்லூரியின் விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.





அதை தந்தையிடம் காட்டி, "என்னப்பா இது...?" என்றவள் முகத்திலும் கேள்விக்குறி.





"ஓ... நீ படிப்பை முடிச்சுட்டு வந்து ஒரு வாரம்தான் ஆகுது. நம்ம பிசினஸ் சம்மந்தப்பட்ட விசயம் எதுவும் முழுசா உனக்கு தெரியாதுல்ல... இதுவரை கோஎஜுகேசனா இருந்த நம்ம ஆர்ட்ஸ் காலேஜை இந்த வருசத்துல இருந்து மகளிர் கல்லூரியா மாத்திட்டேன்." என்றார்.





"ஏன்?"





"உனக்கே தெரியும்மா... நமக்கு ஏகப்பட்ட பிசினஸ், எல்லாத்தையும் கவனிச்சாகணும். இந்த ஆர்ட்ஸ் காலேஜுல நல்ல வருமானம்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா பசங்களால ஏகப்பட்ட தொந்தரவு. அடிக்கடி பஞ்சாயத்து. எதாவது நடவடிக்கை எடுத்தா, வார்டு செயலாளர்கிட்ட இருந்து வட்டம், மாவட்டம்னு எல்லா வகை அரசியல்வாதிகிட்ட இருந்தும் இம்சை. 





அது தவிர, இப்போ உன்னைய ஈவ்டீசிங் பண்ணினானே ஒரு பையன், இந்த மாதிரி பிரச்சனை அடிக்கடி வருது. இதுல காதல், கல்யாணம் வேற... அதான் பார்த்தேன். மகளிர் கல்லூரியா மாத்திட்டா எந்த பிரச்சனையும் இல்லாம வருமானம் பார்க்கலாம். அதான் செஞ்சேன்." என்று அலட்சியமாக பதில் சொன்னார்.





"என்னப்பா... நீங்களும் இப்படி இருக்கீங்க... இப்ப நானே தப்பு பண்ணினா, அதை திருத்த வழி பார்க்காம எக்கேடும் கெட்டுப்போன்னு வீட்டை விட்டு விரட்டிடுவீங்களா?"என்ற ஜான்சிராணியின் கேள்வியில் அவர் தந்தை அதிர்ந்ததை அவரின் முகமே காட்டிக்கொடுத்தது.





"நம்ம ஊர் தமிழ்நாட்டுலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்துல இருக்குன்னு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க. ஆனா இந்த மாதிரி பின்தங்கிய ஊர் மக்கள்கிட்ட வியாபாரம் செஞ்சுதான் நீங்க இவ்வளவு பெரிய பணக்காரரா இருக்கீங்க.





இந்த ஊர் பின்தங்கிய மக்களுக்காக, அரசுக் கல்லூரி ஒண்ணு கூட இல்லாத நிலையில, ஓரளவு நியாயமான கட்டணத்துல நீங்க கலைக்கல்லூரி நடத்துனதை நினைச்சு நான் பெருமைப்பட்ட காலம் உண்டு. 


பள்ளி, கல்லூரிகள்ல பாடம் படிச்ச பையனே வீண் வம்பு செய்யுறது, ஊர் சுத்துறது, பெண்கள் மேல வன்முறை பிரயோகம்னு தப்பான வழிகள்ல போறான்.



































அந்த மாதிரி பசங்களை நல்ல வழிக்கு கொண்டு வர நம்ம கல்லூரியில பாடத்திட்டம் தவிர வேற என்ன மாற்றம் கொண்டு வரலாம்... நம்ம கல்லூரி மாணவன் படிச்சவனா வெளியில போறதைக் காட்டிலும் பண்புள்ளவனா வெளியேற என்ன செய்யலாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு நமக்கு தொல்லை ஒழிஞ்சா சரின்னு இந்த ஊர் பசங்களை திக்குத்தெரியாத காட்டுல தொலைச்சிட்டு வர்ற மாதிரி கோஎஜுகேஷன் காலேஜை மகளிர் கல்லூரியா மாத்திட்டீங்களேப்பா... 





தொழில்முறை குற்றவாளிகளா இல்லாம, எதிர்பாராம தப்பு செஞ்சவங்க திருந்த எந்த வாய்ப்பும் கொடுக்காம அவங்களை கொடூர மனம் படைச்ச குற்றவாளிகளாவேத்தான் சிறைச்சாலைகள் வெளியே அனுப்புதுன்னு ஒரு வாசகம் படிச்சேன். அதுக்கும் இதுக்கும் எந்த வித்தியாசமும் தெரியலைப்பா." என்று ஆவேசப்பட்டாள் ஜான்சிராணி.





"நீ ஏதோ ஒரு முடிவோட பேசுற... என்கிட்ட சொல்லு. முடியும்னா அதை செஞ்சிடுறேன்." என்றார் அவர்.





"முடியும்னா இல்லை... கண்டிப்பா செய்யணும். ரொம்ப சிம்பிள். மறுபடி கோஎஜுகேசனா மாத்துங்க. மனுசனுக்கு அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை பத்தி கதை, கவிதை, கட்டுரை, களப்பணி போன்ற விசயங்கள்ல போட்டி வையுங்க. இங்க படிக்கிற பசங்க பொருளாதார நிலையில பின்தங்கிய நிலையில இருக்குறதால வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு தர்றது நல்லாயிருக்கும்.





அது மட்டுமில்லாம, எல்லா மாணவ, மாணவிகளின் பெற்றோரும் மாசம் ஒருநாள் கட்டாயம் நம்ம கல்லூரிக்கு வந்து ஆசிரியர்கள்கிட்ட தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து பேசிட்டு போகணும். வேலை நேரத்துல இங்க வர்றது அவங்க வருமானத்தை பாதிக்கும்னா, மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியில இருந்து எட்டு அல்லது ஒன்பது மணி வரை இந்த சந்திப்பை வெச்சுக்கலாம்னு அறிவிப்போம். ஆசிரியர்கள் முகம் சுளிப்பாங்கன்னு நினைச்சா, ஒரு நாள் சம்பளம் கூடுதலா கொடுத்துடலாம்.





இது மாதிரி என்னென்ன விசயம் செஞ்சா சமுதாயத்துக்கு நன்மையோ, அதை எல்லாம் செய்வோம். நிச்சயம் இதுக்கு நல்ல பலன் கிடைக்கும்." என்றாள் ஜான்சிராணி.





அவள் சொன்ன அனைத்து விஷயங்களும் மனிதன் மனம் வைத்தால் சாத்தியமான ஒன்றுதான் என்ற உண்மையை புரியவைத்தது. 





"ஜான்சி... புது வழி காட்டியிருக்க... ஒவ்வொண்ணா நிச்சயம் செய்வோம்." என்று சொல்லி புன்னகைத்தார் அவள் தந்தை.


***********************************************************************


பள்ளி மற்றும் கல்லூரிகளில் குளிரூட்டப்பட்ட அறை தேவையா?





இன்று ஒரு சில தனியார் பள்ளிகளில், வகுப்பறை மற்றும் விடுதி அறைகள், ஏசி வசதி செய்யப்பட்டுள்ளன.


பொதுவாகவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில், போதுமான அளவு காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இருக்குமாறு தான் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அவற்றில் ஏன் குளிர்சாதன வசதி... கட்டடங்களே வெளியில் தெரியாத அளவுக்கு மரங்களை வளர்ப்பதுடன், கொசு உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் இருக்க, மூலிகைச் செடிகளையும் வளர்க்கலாமே!


மேலும், மின் விசிறி கூட தேவைப்படாத அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகுப்பறைகள் மற்றும் விடுதி அறைகளை உருவாக்குவது, கல்வி நிறுவனங்களுக்கு, சாதாரண விஷயம்!





படிப்பு பாதிக்காத அளவு, குறிப்பிட்ட நேரம் செலவழித்து, மரம், செடி, கொடிகளை வளர்க்க மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்தினால், அது, அவர்களுக்கு உடற்பயிற்சி செய்தது போன்றும், மீண்டும் வகுப்பறைக்கு வரும் போது, புத்துணர்வுடன் படிக்கவும் தூண்டும். படித்து முடித்து, வேலைக்கு செல்லும் காலத்தில், தங்கள் வீட்டிலும் இதை கடைப்பிடிக்க முயற்சிப்பர். 





பல லட்ச ரூபாய் சம்பாதிக்கும் கல்வியை கற்று தருவதுடன், பூமியை பத்திரமாக பார்த்துக் கொள்வது எப்படி என்பதையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கற்றுத் தருமா?





- ஜி.சிவராஜ், திருவாரூர்





18.09.2016 தினமலர்-வாரமலர் இது உங்கள் இடம் பகுதியில் பிரசுரமான கடிதம் (சென்னை - கோவை - புதுச்சேரி- மதுரை பதிப்புகள்)


***********************************************************************


ஆங்கில டப்பிங் படங்களால் நன்மையா ? தீமையா?





ஈரமான ரோஜாவே பட புகழ் இயக்குனர் கேயார் எழுதிய இதுதான் சினிமா" என்ற புத்தகத்தில் சினிமா உலகத்தில் இருக்கின்ற படத்தயாரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் சிக்கல்களை தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். 





இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். அதைப் பற்றி நான் இப்போது பேசவில்லை. நான் சொல்ல வந்த விஷயம் வேறு. அதில் டப்பிங் படங்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மறைமுகமாக சில சங்கடங்கள் தருவதை பற்றி எழுதியிருந்தார். 





அதை அப்படியே நான் தட்டச்சினால், யாராவது என் மனம் புண்பட்டுவிட்டது என்று வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறதா என்ற அச்சம் இருக்கிறது. அதனால் இத்தோடு நிறுத்திக்குவோம். அது என்ன என்று யோசிப்பவர்கள் அந்த புத்தகம் கிடைத்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.





இந்த புத்தகத்தை 2010ல் படித்தேன். அதில் சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகளின் காலகட்டம் மலையேறி விட்டது. தற்போது கேபிள் சங்கர் என்பவர் சினிமா வியாபாரம் என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அவற்றில் சமகால சினிமா உலக மார்க்கெட்டிங் பிரச்சனைகளை அலசி இருப்பார்.





***********************************************************************


படித்ததில் கவனித்தது...





பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது- இது ஒரு சூட்சுமமான பழமொழி. ஒருவர் ஜாதகத்தில் புதன் என்றும் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க முடியும். 





பொன் என்பது இங்கே பொன்னன் என்றாகி குரு கிரகத்தைக் குறிக்கும். கல்வி, கேள்விகளை நமக்கு அளிப்பவர் குருதானே... அவர் நமக்கு நல்லவிதமாக கிடைத்திட அவர் எவ்வளவுதான் சொல்லித்தந்தாலும் புதன் கிடைக்காத நிலையில், நன்றாக இல்லாத பட்சத்தில் நம்மால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க முடியாது. அப்படி அது கிடைத்துவிட்டால் அது பொன்னை விடப் பெரியது என்பதை உணர்த்தும் பொருளில்தான் அப்படி ஒரு சொலவடையைச் சொல்லிச்சென்றார்கள்.





இந்திரா சௌந்தர்ராசன் எழுதிய என் இனிய இந்துமதம் என்ற நூலில் படித்தது.


-------------------------------------------


உலகம் எப்பவுமே இப்படித்தான்...





ஏம்ப்பா நேக்கு இந்த பேர் வெச்சேள் என்று சேது திரைப்பட நாயகி தன் தந்தையிடம் கேட்கும் அதே மாடுலேஷனில் நம் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு அடிக்கடி ஒரு கேள்வி எழும். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?





இதுல எனக்கு மட்டும் அப்படிங்குற வார்த்தையை தூக்கிடுங்க. ஏன்னா இங்க ஒவ்வொருத்தர் நிலையும் இதுதான். அப்படி நமக்கு மட்டும் நடப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவை உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஏதாவது ஒரு வகையில் ஆப்பு வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.





அப்படி பட்டியலிடப்பட்ட விஷயங்களை ஒரு புண்ணியவான் தொகுத்து இணையத்தில் உலவவிட்டிருக்கிறார். அவை கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பார்வைக்கு...





நீங்கள் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தால் அடுத்த வரிசைதான் வேகமாக நகர ஆரம்பிக்கும்.


நீங்கள் எந்த விளையாட்டில் நன்றாக விளையாடினாலும் அது தனியாக விளையாடும்போது மட்டுமே நிகழும்.


உங்கள் நகத்தை வெட்டிய ஒரு மணி நேரத்தில் அதை வைத்து செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு வந்து சேரும்.


***********************************************************************


இதையும் கொஞ்சம் கத்துக்குங்களேன்...





இருசக்கர வாகனங்களை வாங்கியோ இரவல் பெற்றோ ஓட்டுபவர்கள் சாலைவிதிகளை கட்டாயம் அறிந்து கொண்டு பின்பற்றுங்கள். முக்கியமாக இண்டிகேட்டர் போட்டுவிட்டு அல்லது சைகை காண்பித்து விட்டு திரும்புங்கள்... ஆண், பெண் பேதமின்றி தானும் சாலையும் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொண்டு திரும்புபவர்கள் இம்சை தாங்க முடியலை...


***********************************************************************


திருவாரூர் பெருமை அடைவதில் முக்கிய விஷயம் ஆழித்தேர். ஐந்தாண்டுகளுக்கு பிறகு 2016ம் ஆண்டு தேர் நிலையடியை விட்டு புறப்பட்டு சிறிது தூரம் கடந்த போதே அலங்கரிக்கப்பட்டிருந்த தொம்பைகள் தூவாய்நாதர் கோவில் கோபுரத்தில் சிக்கி கழன்று விட்டன. அலங்கரித்த துணி பிய்ந்து விட்டதே என்று வருத்தம் இல்லாமல், நம்ம ஊர் தேர் எவ்வளவு பெருசுடா என்று மனம் மகிழ்ந்தது.   


புதன், 20 ஜூலை, 2016

நண்பன் - சிறுகதை - மணிரத்னம் – தினமணி சிறுகதைப்போட்டி முடிவுகள்



ரஜினி, கமல் போன்றோரை வைத்து
மசாலா படங்களாக எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்த படங்களில் டைட்டிலின்போது கதை வசனம்
- பஞ்சு அருணாச்சலம் அல்லது வேறு யார் பெயரையாவது பார்க்க முடியும்.


கே.எஸ்.ரவிகுமார் படங்களில்
கூட கதை வசனம் ஈரோடு சௌந்தர், கமலேஷ்குமார் என்ற பெயர்களை அவ்வப்போது பார்க்க முடியும்.
ஏன், கமலஹாசன் கூட (தன் படங்களில் முழு தலையீடு இருந்தாலும்) டைட்டிலில் கதை, வசனம்
என்று அனந்து, கிரேசிமோகன் உள்ளிட்ட சில பெயர்களை அவ்வப்போது காண முடிந்தது.


அதெல்லாம் ஒரு காலகட்டம் 





அதன்பிறகு
பல படங்களில் எழுத்து இயக்கம் என்று மட்டும் டைட்டில் போட்டார்கள். இந்த மாதிரி டைட்டில்
போடும் வழக்கம் ஆங்கிலப் படங்களில் இருந்து சுட்டிருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது
பல படங்களே சுட்ட கதைதான். அது மட்டுமல்ல... கதைன்னு ஒருத்தர் பேரைப் போட்டுட்டா பிறகு
ரீமேக் ரைட்ஸ் விற்கும்போது கதாசிரியருக்கும் பங்கு கொடுக்கணும். இது மாதிரி ஆயிரம்
விஷயங்கள் இருக்கு, அது புரியாம என்னய்யா நீ இன்டர்நெட்ல புழங்குற என்று ஒருவர் என்
மண்டையில் குட்டினார்.




//////////////////////காற்று வெளியிடை, மணிரத்னத்தின் முதற்படமான பல்லவி அனுபல்லவி படத்தின் ரீமேக் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இதுவரை மகாபாரத ராமயன உல்டாக்கள் எடுத்துக்கொண்டிருந்தவர் தனது உல்டாவையே மீண்டும் எடுக்கப்போகிறாராம்.


-அவ்வ்வ்வ்வ்வ் அந்தளவுக்காடா "தேஞ்சு "போயிட்டிங்க///////////////////////////////////////


இப்படி
ஒரு தகவல் நான் ஏதோ ஒரு முகநூல் பக்கத்தில் படித்தேன். இது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை.
ஆனால் கதை
எழுதும் பலர் ஒரே
கதையைத்தான் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று எழுத்தாளர் சுஜாதா
சொன்னதாக ஒரு பத்திரிகையில் சமீபத்தில் படித்தபோது உண்மை என்றே தோன்றியது.


ஏனென்றால் ஊழலை
ஒழிப்பது என்ற ஒரே ஜானரில்தான் ஷங்கர் தன் படங்களை எடுத்து ஹிட்டடித்தார். அந்நியன்
படத்துக்கு பிறகு அவர் கையிலிருந்த அட்சய பாத்திரம் காலியானது போல் எனக்கு ஃபீல் வருகிறது.
(மற்றவர்களுக்கு எப்படியோ?)
 


மற்றவர்கள் எழுதுவதை
ஆராய்வது பிறகு இருக்கட்டும். நான் எழுதுவதை சற்று திரும்பிப் பார்க்கலாம் என்று யோசித்தேன்.
சுஜாதா சொன்னது போல் ஒரே கதையை திரும்பத்திரும்ப எழுதவில்லை என்றாலும் என்னைச் சுற்றி
கண்ணுக்குத்தெரியாத ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு அதைத் தாண்டி வெளியில் நான் வந்து
எழுதவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.


அது தவிர, ஒவ்வொரு
ஆண்டும் தினமலர், தினமணி, கல்கி சிறுகதைப்போட்டிகளுக்கு அவசர அவசரமாக எழுதி அனுப்பிய
கதை பிரசுரம் ஆகவில்லை என்றால் மீண்டும் அடுத்த ஆண்டு இந்த மூன்றில் ஏதாவது ஒரு பத்திரிகைக்கு
மாற்றி மாற்றி அனுப்பிக் கொண்டிருந்தேன். இப்படி நான் எழுதிய கதைகள் என்னுடைய வலைப்பூவில்
கூட அச்சேறாமல் என் கணிணிக்குள்ளேயே தூங்கிக் கொண்டிருக்கிறது. எனக்கு தற்சமயம் கற்பனை
வறட்சி ஏற்பட்டதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.





சில தினங்களுக்கு
முன்பு தினமணி-நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் 2016ல் பரிசு பெற்ற கதைகளின் பட்டியல்
பார்த்தேன். வழக்கம்போல் 16 வது ஆண்டாக நான் எழுதிய கதைகளில் ஒன்று கூட தேர்வு பெறவில்லை.
அவற்றை இனி அடைகாத்து மீண்டும் மீண்டும் வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பாமல் இணையத்தில்
பதிவேற்றிட நினைத்திருக்கிறேன். அப்படி செய்தால்தான் புதிது புதிதாக யோசித்து எதையாவது
எழுத முடியும். தற்சமயம் நான் 2012ஆம் ஆண்டில் தமிழகத்தில் மின்வெட்டு உச்சத்திலிருந்த
நேரத்தில் எழுதிய கதையை மீண்டும் வலையேற்றிருக்கிறேன்.






----------------------------------------------


பல காரணங்களால் புதியதாக புனைவுகள்
எழுதுவதை நிறுத்தியிருந்த நான், மின்வெட்டு காரணமாக கிடைத்த நேரத்தில் நண்பன் என்ற
தலைப்பில் சிறுகதை எழுதியிருந்தேன். கதையை எழுதி 8 மாதங்கள் இருக்கும். இப்போது தீபாவளிக்குப்
பிறகு தேவி வார இதழுக்கு அனுப்பி வைத்த கதை 12-12-2012 தேவி வார இதழில் 8 பக்கத்துக்கு
பிரசுரமானது. தமிழ் என்பவர் வெகு அழகாக ஓவியம் வரைந்திருக்கிறார். தேவி ஆசிரியர் குழுவுக்கும்,
ஓவியருக்கும் நன்றி. எவ்வளவுதான் வலைப்பூவில் நம் இஷ்டத்துக்கு எழுதினாலும் அச்சில்
ஏறும் எழுத்துக்கள் நம் மனதுக்கு தரும் ஊக்கம் தனிதான்.


எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்
எழுதிய "எப்படி கதை எழுதுவது?" என்ற புத்தகத்தில் அவர் முக்கியமாக வலியுறுத்தியிருந்த
உத்தி, முதல் பாராவிலேயே கதையை தொடங்கி விடுங்கள் என்பதுதான். நான் அப்படி எழுதிய கதைகள்தான்
பெரும்பாலும் பிரசுரமானதுடன் பல பரிசுகளையும் பெற்றுத்தந்திருக்கின்றன.


ஆனால் நான் அனுப்பிய நண்பன்
என்ற இந்த கதையில் கிட்டத்தட்ட பத்து பாராக்களை தூக்கிவிட்டு பதினோராவது பாராவில் இருந்துதான்
தேவி இதழில் பிரசுரம் செய்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது கதை தொடங்கும் இடத்தில்
இருந்து சரியாகத்தான் பிரசுரித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.


இவ்வளவுக்கும் நெடுந்தொடர் எதையும்
நான் பார்ப்பதில்லை. (கதை எழுதிய காலத்தில் மின் வேட்டு காரணமாக தாய்க்குலங்களும் அழுகாச்சி
சீரியல்களை பார்க்க முடியாத கதையை தனி மெகா சீரியலாக எடுக்கலாம்.) பிறகு ஏன் கதைக்கு
அவசியமில்லாத 10 பாராக்களை அப்படியே வைத்து அனுப்பினேன் என்ற கேள்வி என் மனதை குடைந்தது.


1. வலைப்பூவில் இஷ்டத்துக்கு
எழுதுவதன் காரணமாக ஏற்பட்ட அலட்சியம்.


2. முன்பு பேப்பரில் நாலைந்து
முறை எழுதி, திருத்தி, மீண்டும் எழுதி நகல் எடுத்து வைத்துக்கொண்டு அனுப்பியபோது எடுத்துக்கொண்ட
அக்கறையை, கணிணியில் டைப் செய்து அனுப்பும்போது காட்ட முடியவில்லை. அதற்கு முக்கிய
காரணம், கணிணியில் பிழைப்பை பார்க்கவே மின்சாரம் கிடைப்பதில்லை. இதில் எங்கே கதையை
வெட்டி, ஒட்டி ட்ரிம் செய்வது?


3. மனதில் நினைப்பதை எல்லாம்,
வாழ்வில் கிடைத்த அனுபவம் என்று எல்லாவற்றையும் வலிந்து கதையில் திணிக்க நினைத்தால்
இதுபோல் ஆகிவிடுகிறது.


 எனக்கு முக்கியமாக இந்த மூன்று
காரணங்கள்தான் தோன்றின.


 நான் வளவளவென்று எழுதிய கதை
இங்கே இருக்கிறது. புத்தகத்தில் பிரசுரமான கதை ஸ்கேன் செய்து இமேஜ் பைலாக.






 -----------------------------------------------------------------------


நண்பன் - சிறுகதை


 1996ஆம் ஆண்டு கோடை விடுமுறை
தொடங்கிய நேரம்:


திருவாரூர் அய்யனார் கோவில்
தெருவில் இருந்த முடிதிருத்தகத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் இரண்டு சிறுவர்களின்
அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.


"டேய்...வர்ற 9ஆம் தேதி
இந்தியன் படம் ரிலீசாகுதுடா...­ங்கர் டைரக்­ன். படம் சூப்பரா இருக்கும். கமல் ஹீரோ.கேட்கவா
வேணும்...தைலம்மை தியேட்டர்ல வரப்போகுது. நான் முதல்நாளே போய்டுவேம்பா...'' என்றான்
வடிவேல்.


"ச்சே...நம்ம ஊர்ல ஏ/சி
தியேட்டர் இல்லடா. இருக்குற தியேட்டர்லயும் ஏசி மிசின் ரிப்பேராயிடுச்சாம். இங்க பாரேன்.
தஞ்சாவூர் விஜயா ஏ/சி, குடந்தை விஜயா ஏ/சி, மாயவரம் விஜயான்னு போட்டிருக்கு. மூணு ஊர்லயும்
ஒரே தியேட்டரா பார்த்து படத்தை குடுத்துருக்காங்க.''என்ற மற்றொரு சிறுவனான பிரசாத்தின்
பேச்சில் வியப்பு தெரிந்தது.


"அது வேற ஒண்ணும் இல்லடா...இந்த
விஜயா தியேட்டர் எல்லாம் படத்தை திருச்சி ஏரியாவுல டிஸ்ட்ரிபியூட் பண்ற முருகன் பிக்சர்ஸ்
காரங்களோடதுதான் . அதுனாலதான் அவங்க தியேட்டர்லயே ரிலீஸ் பண்றாங்க.''


 "இதெல்லாம் உனக்கு எப்படிடா
தெரியும்?'' என்று பிரசாத் கேட்கவும்,


வடிவேல் முகம் நிறைய பெருமையுடன்,
""சோழா தியேட்டர்ல ஆப்ரேட்டரா இருக்குறவர் என் பிரண்டு வீட்டு மாடியிலதான்
குடியிருக்கார். அவருதான் இந்த செய்தியயல்லாம் சொல்லுவாரு. ம்ப்ச். என்ன...இந்தியன்
படம் தைலம்மையில வராம சோழா தியேட்டர்ல வந்துருந்தா நான் க்யூல நின்னு டிக்கட் வாங்காம
அவரோடயே நேரே உள்ள போயி....'' என்று பேசி முடிக்கும் முன்பே முதுகில் அடி விழுந்தது.


வடிவேல் கையில் இருந்த பேப்பரை
பிடுங்கி கடைக்குள் வீசிவிட்டு அவன் முதுகில் கிருஷ்ணமூர்த்தி மத்தளம் வாசித்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஜெயராமன், பதறிப்போய் சைக்கிளை விட்டு இறங்கினார். வடிவேலுடன்  நின்றுகொண்டிருந்த பிரசாத் திரும்பிப்பார்க்காமல்
ஓடிக்கொண்டிருந்தான்.


இந்த பாரா வரை தேவி இதழில் பிரசுரம்
செய்தபோது கத்திரி போட்டுவிட்டார்கள். (சரியான செயல்தான்- வாசிப்பு பழக்கம் காணாமல்
போய் மக்கள் தொலைக்காட்சியில் மூழ்கிய காரணத்தால் படிப்படியாக மங்கி  மறைந்துபோன இதழ்களில் தேவி வார இதழும் ஒன்று.)


----------------------------------------------------


"அப்பா...அடிக்காதீங்கப்பா...பேப்பர்
படிச்சா என்னப்பா தப்பு...'' என்று அலறியதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணமூர்த்தி தன் மகனை
வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்.


"யோவ் கிருஷ்ணமூர்த்தி,
அவன் உடம்பு என்ன இரும்பா...இந்த அடி குடுத்து புரட்டி எடுக்குற?'' என்று ஜெயராமன்
அடிவாங்கிக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு ஆதரவாக பேசவும், அவன் வந்து இவர் பின்னால் ஒளிந்தான்.


"உனக்கு விஷ­யம் தெரியாது
கிருஷ்ணமூர்த்தி. ஒரு வீட்டுல எல்லா புள்ளையும் ஒரே மாதிரி இருக்காதுன்றது சரியாப்போச்சு.
இவனுக்கு மூத்த பிள்ளைங்கள்ல  ஒருத்தன் பதினொன்னாவது
படிக்கிறான். இன்னொருத்தன் ஒன்பதாவது படிக்கிறான். அவனுங்க பாடப்புத்தகத்தை தவிர வேற
எதையும் புரட்டிக்கூட பார்க்க மாட்டானுங்க. ஆனா இவன் எந்த நேரத்துல பொறந்தான்னே தெரியலை.


யார் வீட்டுல கதைப்புத்தகத்தைப்
பார்த்தாலும் எடுத்து வெச்சுகிட்டு உட்கார்ந்துடுறான். இப்ப புதுசா பேப்பர் படிக்க
எங்க போய் பழகுனான்னு தெரியலை. ஏழாவது படிக்கிறதுக்குள்ள எந்த தியேட்டர்ல என்ன படம்...அந்த
தியேட்டருக்கு யார் முதலாளின்னு ஆராய்ச்சி பண்றது உருப்புடுறதுக்கா...


அப்புறம் என்னை மாதிரி ஏதாவது
துணிக்கடையிலேயோ, மளிகைக்கடையிலேயோ கூலி வேலை பார்க்குறதுலேயே ஆயுசு போயிடும். இதை
இவனுக்கு எப்படி புரிய வெக்கிறது?'' என்று தலையில் அடித்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.


"சின்ன பையனுக்கு என்னய்யா
தெரியும்...கொஞ்ச நாளானா சரியாயிடுவான். பள்ளிக்கூடத்துல சரியா படிக்காம இப்படி கண்டதையும்
படிச்சா தப்பு. ஆனா கிளாஸ்லேயே நானூறு மார்க் எடுக்குற ஒரே ஆள் உன் புள்ளை தான்னு நீயே
சொல்லியிருக்க.''என்று ஆறுதலாக பேசினார் ஜெயராமன்.


"பாடப்புத்தகத்தை ஒழுங்கா
படிச்சா நானூத்தம்பதுக்கு மேல எடுக்கலாம்னுதானே இந்த கருமத்தையயல்லாம் படிக்காதேன்னு
சொல்றேன்.''


அவ்வளவு அடி வாங்கியும் வடிவேல்,
"படிச்சா என்ன தப்பு' என்றுதான் சொன்னானே ஒழிய இனிமே இப்படி செய்யமாட்டேன் என்ற
வார்த்தை அவன் வாயில் இருந்து வரவே இல்லை.


இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு
வராது என்று உணர்ந்த ஜெயராமன்,  "ரொம்ப
அடிக்காதய்யா...பயந்துடப்போறான்'' என்று கிருஷ்ணமூர்த்தியை சமாதானப்படுத்த பார்த்தார்.


"எது...இதுவா பயப்படப்போகுது''
என்று சொன்னவாறே வடிவேலை எட்டி உதைக்க கிருஷ்ணமூர்த்தி முயற்சித்தபோது, சட்டென்று வடிவேல்
நகர்ந்துவிட்டான். இதை எதிர்பார்க்காமல் கீழே விழப்போன கிருஷ்ணமூர்த்தியை ஜெயராமன்
தாங்கிப்பிடித்தார்.


"எதுவா இருந்தாலும் வீட்டுல
வெச்சுக்க...இப்போ உன் மானம்தான் போகுது. கெளம்புப்பா...'' என்று ஜெயராமன் கிருஷ்ணமூர்த்தியை
ஒருவழியாக புறப்பட வைத்தார்.


"வீட்டுல, வெளியில, கடையிலன்னு
என்கிட்ட இவன் எங்கதான் உதை வாங்கல...ஆனாலும் திருந்த மாட்டெங்குறான். மூணுல ஒண்ணை
கோயிலுக்கு நேர்ந்து விட்டதா நினைச்சுக்க வேண்டியதுதான். எல்லாம் தலைவிதி. அப்புடி
இந்த பேப்பர்ல என்னதான் இருக்கு? ஒண்ணு கொலையைப் பத்தி போடுறாங்க. இல்ல கொள்ளை. அதை
விட்டா சினிமா. இதைப் படிச்சுகிட்டே இருந்தா சோறு போடுமா? நான் படிக்கும்போதும் சரி.
இப்பவும் சரி. பேப்பரை பார்த்தாலே பத்திகிட்டு வருது.'' என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு
கிருஷ்ணமூர்த்தி சென்றுவிட்டார்.


ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக
பணிபுரியும் ஜெயராமன் சில காலம் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு அருகில் குடியிருந்தபோது
பழக்கம்.


"நாளைக்கே உடம்பு முடியாம
படுத்துட்டா அந்த ஜவுளிக்கடையில இருந்து மொத்தமா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. இவனுங்களை
கடன் வாங்கி பெரிய படிப்பு வைக்க முடியுமா? நல்ல மார்க் எடுத்துட்டா பணம் குறைவா இருக்குற
காலேஜ்ல சேர்த்துடலாம். மூத்தவனுங்க ரெண்டு பேரும் என் பேச்சை கேட்டு ஒழுங்கா படிக்கிறாங்க.
சின்னதுதான் தறுதலையா நிக்கிது' என்று அடிக்கடி ஜெயராமனிடம் கிருஷ்ணமூர்த்தி புலம்புவார்.


"வடிவேலு நல்லாத்தான் படிக்கிறான்.
அது போதாதுன்னு அவனை கரிச்சு கொட்டிகிட்டே இருக்காரு...' என்று கிருஷ்ணமூர்த்தியின்
மனைவி கனகவள்ளி  மகனை விட்டுக்கொடுக்காமல் பேசுவாள்.


ஆனால் யாருடைய சமாதானமும் கிருஷ்ணமூர்த்தியிடம்
எடுபடாது.


+++


ஜெயராமன் பணிபுரிந்த நிறுவன
முதலாளிக்கு காரைக்குடியில் ஒரு கிளை இருந்தது. அங்கே பொறுப்பான ஆள் தேவைப்படவே, ஜெயராமன்
காரைக்குடிக்கு ஜாகையை மாற்றினார். ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை.


வேலையை விட்டு ஓய்வு பெற்ற பிறகு,
மருமகளுக்கு அவரை தங்களுடன் வைத்திருக்க விருப்பமில்லாமல் போய்விடவே, ஏதாவது குறை சொல்லிக்கொண்டே
இருந்தாள். அவர் மகனும் தன் மனைவியை கண்டிக்கவே இல்லை.


இவருக்குதான் ரோ­ஷம் அதிகம்
ஆயிற்றே. மனைவியை அழைத்துக்கொண்டு திருவாரூருக்கு வந்துவிட்டார்.


+++


2011ஆம் ஆண்டு மார்கழி மாதம்
அதிகாலையில் பனிபொழியும் நேரம்:


டீக்கடை, சலூன் என்று எங்காவது
வடிவேலு பேப்பர் படிப்பதை பார்த்தால் விரட்டி விரட்டி அடித்து துரத்திய கிருஷ்ணமூர்த்தியை
16 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த நிலையில் ஜெயராமன் எதிர்பார்க்கவே இல்லை.


திருவாரூர் பெரிய கோவிலில் மார்கழி
மாதம் திருப்பள்ளியெழுச்சி பூஜை முடிந்ததும் தியாகராஜர் சன்னதியை விட்டு பக்தர்கள்
வெளியேறிக் கொண்டிருந்தார்கள். உள் பிரகார வாசலில் வழக்கம்போல் வெண்பொங்கல் பிரசாதம்
வினியோகம் நடந்துகொண்டிருந்தது. ஜெயராமன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பிரசாதத்தை
வாங்கிக்கொண்டார். வெறும் கையில் பொங்கலை வாங்கிய சிலர் சூடு தாங்காத காரணத்தால் உள்ளங்கையில்
அந்த பொங்கலை பந்து போல் உருட்டி சமாளித்துக் கொண்டிருந்தனர்.


இதே மாதிரி நடக்கும்னு எதிர்பார்த்துதானே
நான் வீட்டுல இருந்து பிளாஸ்டிக் பை எடுத்துட்டு வந்தேன் என்று நினைத்தபடி இரண்டாம்பிரகாரத்தில்
வலம் வந்த ஜெயராமனின் முகத்தில் சில்லென்று ஊசி குத்துவது போல் பனிச்சாரல் அடித்தது.
நான்கு அடி தூரத்துக்கு அப்பால் வந்தவர்களின் முகம் தெரியவில்லை. காதுக்குள் காற்று
நுழையாதவாறு மப்ளரை சுற்றியிருந்தாலும் அதை மீறி குளிர் தாக்கியதால் மீதமிருந்த ஒன்றிரண்டு
பற்கள் மோதிக்கொண்டன.


கொஞ்ச நேரம் பேப்பர் படிச்சுட்டு
கிளம்பினா ஓரளவுக்கு பனிமூட்டம் விலகிடும் என்று நினைத்தவாறே கோயில் அலுவலகத்துக்கு
எதிரில் உள்ள நூலக அறைக்குள் நுழைந்தார் ஜெயராமன். அங்கே அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்த
கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்ததும் வியப்பில் வாய்பிளந்துவிட்டார்.


"அய்யா...கிருஷ்ணமூர்த்தி...என்னைத்தெரியுதா?''என்று
கேட்டவாறு அருகில் வந்த ஜெயராமனை அவர் ஏறிட்டு பார்த்தார்.


"அடடே...என்னப்பா ஜெயராமா...ரொம்ப
வருஷ­மா ஆளையே காணோம்...நான் தினமும் கோயிலுக்கு வர்றேன் உன்னைப் பார்க்கவே இல்லையே...''என்று
கிருஷ்ணமூர்த்தியின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.


அருகில் இருந்து நாளிதழ்கள்
படித்துக்கொண்டிருந்த மற்ற வாசகர்கள் சட்டென்று இவர்களைப் பார்த்தார்கள்.


"சாரிங்க...''என்று கிருஷ்ணமூர்த்தி
அந்த நூலகத்திலிருந்தவர்களைப் பார்த்து சொல்லி விட்டு, கமலாம்பாள் சன்னதிக்கு செல்லும்
வழியில் கோயில் அலுவலகத்தின் பக்கவாட்டில் இருக்கை போன்ற அமைப்பில் வசதியாக ஜெயராமனுடன்
அமர்ந்தார். இப்போதும் பனி மெல்லிய சாரல் மழையாக பெய்துகொண்டே இருந்தது.


"என்ன ஜெயராமா...காரைக்குடிக்கு
போனதுக்கு அப்புறம் ரெண்டு வரு­ஷம் கடிதம் 
போட்ட. அப்புறம் சுத்தமா தொடர்பே இல்லையே...என்னாச்சு.'' என்ற கிருஷ்ணமூர்த்தியின்
குரலில் பழைய சிநேகிதனை மீண்டும் பார்த்த ஆர்வம் தெரிந்தது.


"ம்ப்ச்...அதை ஏம்பா கேட்குற...மருமகளுக்கு
நாங்க இருக்குறது புடிக்கலை போலிருக்கு. நடந்தா தப்பு. உட்கார்ந்தா தப்புன்னு ஒரே இம்சை.
டாய்லட்ல தண்ணி ஊத்தலைன்னு மகன் கிட்ட புகார் செய்யுறா. இதுக்கு மேல அவமானம் தேவையான்னு
இங்கேயே வீடு பார்த்து பொண்டாட்டியோட வந்துட்டேன்.


ஆர்டிஆர் கம்பெனியில வேலைக்கும்
சேர்ந்துட்டேன். மார்கழி மாசத்துல ஒரு நாள் காலையில மரகதலிங்க தரிசனம் பார்க்கணும்னு
ஆசை. வந்துட்டேன். நாளைக்கெல்லாம் எழுந்து வர முடியாது போலிருக்கு. ஏழு மணிக்கு வேலை
முடிஞ்சிடும். வீடு எங்க அதே இடம்தானே. முடிஞ்சா வர்றேன். இனி எங்க உயிர் போறது இந்த
ஊர்லதானே'' என்று பேசிய ஜெயராமனின் குரலில் விரக்தி தெரிந்தது.


"பொழுது விடிஞ்ச நேரத்துல
இது என்ன பேச்சு. நாங்க இருந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டுட்டு கீழே நாங்க வந்தா
போனா தங்குறதுக்கு வச்சிருக்கோம். இன்னும் ஒரு வாரம் இங்கதான் இருப்பேன். வர்றதுன்னா,
போன் பண்ணிட்டு வா.''என்று ஒரு துண்டு சீட்டில் நம்பரை எழுதிக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.


"நீங்களும் இந்த ஊர்ல இல்லையா.
அது கெட்டுச்சு போ. எங்க சென்னையா?''


"எப்படிப்பா கரெக்டா சொல்ற?''


"நம்ம ஊர்ல இருந்து சென்னைக்கு
போனது போக மிச்சம்தானே வேற ஊர்களுக்கு போறது. அது சரி...நீ மட்டும்தான் வந்துருக்கியா.
மனைவி, பிள்ளைங்க எல்லாம்?''


"மனைவி தவறி ஆறு வருஷ­ம்
ஆயிடுச்சு. பையன் மனைவியோட பத்து நாள் டூர் போயிருக்கான். நான் இங்க வந்துட்டேன்.''


"அடடா...கனகவள்ளி இறந்த
வி­ஷயம் எனக்கு தெரியலையே. பத்து நாள் டூர் போற புள்ள உன் ஒரு ஆளை இப்படியா மார்கழி
மாச குளிர்ல தவிக்க விட்டுட்டு போறது? அது சரி...உனக்கு மூணு புள்ளைங்களாச்சே. ஒருத்தன்
டூர் போயிருக்கான்னா மத்தவங்க? மூணு பேரும் நல்லாத்தானே இருக்காங்க. சின்னவன் உருப்படியா
எதாவது வேலைக்கு போறானா?''


"அது பெரிய கதை. மூணு பசங்களுமே
இஞ்சினியரிங் தான் படிச்சாங்க. பெரிய பசங்க ரெண்டுபேருமே குடும்பத்தோட அமெரிக்காவுல
இருக்காங்க. சின்னவனும் சென்னை டிசிஎஸ் கம்பெனியில மாசம் நாப்பதாயிரம் ரூபா சம்பளம்
வாங்குறான். நாலு மாசத்துக்கு முன்னாலதான் கல்யாணமாச்சு. அவன் மனைவி வேலை பார்க்குறதும்
அதே கம்பெனிதான். புதுசா கல்யாணம் ஆனவங்க. இதுல நான் வேற எக்ஸ்ட்ரா லக்கேஜா கூட போகணுமா?
ஒரு குழந்தை பிறக்குறதுக்குள்ள இப்படி டூர் போய் ஜாலியா இருந்தாதான். அப்புறம் குழந்தை,
பணிச்சுமைன்னு ஆயிட்டா எங்கேயும் போக முடியாது. அதே வீடு, அதே கம்பெனி, அதே முகங்கள்,
ஏன் டிவியில கூட அதே மெகா சீரியல்னு இருந்தா குடும்பத்துக்குள்ள ஏன் உரசல் வராது?


ஆனா, முதல்ல நீங்க ஆசைப்பட்ட
கோயில்கள் சிலதுக்கு போயிட்டு வந்துடலாம்னு என் புள்ளையும் மருமகளும் கூப்பிட்டாங்க.
நான்தான், இப்ப நீங்க விருப்பப்பட்ட இடத்துக்கு போங்க. பேரனோ, பேத்தியோ பிறந்த பிறகு
நானும் வர்றேன்னு சொல்லிட்டேன்.


சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத...நாம
தூக்கி வளர்த்த புள்ள நம்மள கண்டிச்சுட்டான்னு கோபப்படுறோமே...அறுபது வயசைத் தாண்டி
நமக்கே இவ்வளவு ஈகோ இருக்குன்னா முப்பது வயசுல இருக்குற புள்ளைக்கும் மருமகளுக்கும்
எவ்வளவு இருக்கும்.


நாம பெத்து வளர்த்த புள்ளை நம்ம
நடவடிக்கையை குத்தம் சொல்றானேன்னு கோபப்படுறோம். அதுவே நெருங்கிய நண்பன் சொன்னா தப்பா
எடுத்துப்போமா? அந்த மாதிரி புள்ளையையும் நண்பனா நினைச்சா ஏன் கோபம் வரப்போகுது?''
என்று பேசிய கிருஷ்ணமூர்த்தியின் பேச்சில் மட்டுமல்ல. முகத்திலும் அமைதி தெரிந்தது.


"நீ சொல்றதை நான் ஒத்துக்க
மாட்டேன். அவன் வயசைத் தாண்டிதானே நாமளும் வந்துருக்கோம். நமக்கு தெரியாத நாகரிகமா?''
என்ற ஜெயராமனின் குரலில் லேசான காரம்.


"இந்த ஈகோதான்யா நிறைய
குடும்பத்தை குலைச்சுப் போட்டுடுது. நம்ம காலத்துல பொண்ணுங்களுக்கு வேற வருமானம் கிடையாது.
வேற வழியில்லாம புரு­னையும், மாமனார் மாமியாரையும் அவங்க இம்சைகளோட சகிச்சுகிட்டு இருந்தாங்க.
இப்ப காலம் மாறிப்போச்சு.


புரு­னோட அஞ்சு நிமி­ஷம் தனியா
உட்கார்ந்து பேசிகிட்டு இருக்குறதைக் கூட குற்றம் சொல்ற மாமனார், மாமியார் அதிகம்.
அவங்க மனசு விட்டு பேச சந்தர்ப்பம் கிடைச்சா, மனசுல இருக்குற தேடல் குறைஞ்சுடும். எதையும்
எரிச்சலோட பார்க்குற மனோபாவம் மாறிடும்.


இந்த மாதிரி சின்ன சின்ன விஷ­யங்கள்ல
கிடைக்கிற சின்னப் புள்ளைத்தனமான ஏமாற்றம்தான் குடும்பத்துல பெரிய பிரச்சனையை உருவாக்குது.
புள்ளை தன் பொண்டாட்டியோட சினிமாவுகோ கோயிலுக்கோ கிளம்பி போனதுக்கப்புறம், அக்கம்பக்கத்து
வீடுகள்ல, நான் இங்க ஒருத்தி சமையலறையில கிடந்து அல்லாடிகிட்டு இருக்கேன். அவ எதைப்பத்தியும்
கவலைப்படாம புரு­னோட ஜோடி போட்டு கிளம்பிட்டான்னு பேசுற மாமியார்கள் எவ்வளவு பேர் இருக்காங்கன்னு
தெரியுமா?


இந்த வி­ஷயம் இன்னும் பல மோசமான
வார்த்தைகளோட மகன் மருமகள் காதுக்கு போகும்போது விரிசல் ஆரம்பமாகுது.


ஜோடியா சந்தோஷ­மா இருக்கணும்னுதானே
கல்யாணம் பண்ணி வெச்சோம். இப்ப பெரியவங்களே அதைப்பார்த்து எரிச்சலடைஞ்சா என்ன அர்த்தம்.''
என்ற கிருஷ்ணமூர்த்தி ஜெயராமனைப் பார்த்தார்.


"வெளில போய்ட்டு நல்லா
சுத்திப்பார்த்துட்டு வாங்கன்னு அனுப்புனா மட்டும் மாமனார் மாமியார் மேல மருமகளுக்கு
பாசம் வந்துடுமா?''என்று ஜெயராமன் எரிச்சலுடன் கேட்டார்.


"பாசம் வருதோ இல்லையோ,
மாமனார் மாமியார் நம்மளுக்கு இடைஞ்சலா இருக்காங்கன்னு ஒரு எண்ணம் வராது. பையன் ஆபீஸ்லேர்ந்து
சீக்கிரம் வந்துட்டான்னா, டிபன் நான் பண்ணி வைக்கிறேன். ரெண்டு பேரும் வெளில போயிட்டு
வாங்கன்னு சொல்லிப்பாருங்க. அது புள்ளைக்கும் மருமகளுக்கும் எவ்வளவு சந்தோ­ஷத்தை கொடுக்கும்
தெரியுமா?


ரெண்டு தடவை அப்படி நடந்தா,
மூணாவது தடவை கிளம்பும்போது உங்களுக்கும் சேர்த்து டிபன் செஞ்சு வெச்சுட்டு கிளம்புவா.
இல்லன்னா, நீங்க சிரமப்படவேண்டாம். "நாங்க ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு உங்களுக்கும்
வாங்கிட்டு வந்துடுறோம் அத்தை.' அப்படின்னு சொல்லுவா. தொண்ணூறு சதவீதம் இப்படித்தான்
நடக்கும்.


அதை விட்டுட்டு, எங்க காலத்துல
அப்படி செஞ்சோம். இப்படி இருந்தோம் அப்படின்னு குறை சொல்லிகிட்டே இருந்தா நம்மளை எப்படா
அடிச்சு முதியோர் இல்லத்துக்கு துரத்தலாம்னுதான் யோசிப்பாங்க.


அந்த காலத்துல நடந்து போனாம்.
ஏதாவது முக்கிய செய்தின்னா தந்தி அடிப்போம். இல்ல டிரங்கால் புக் பண்ணி பேசுவோம். இப்ப
அப்படியா? எவ்வளவு வசதிகளை அனுபவிக்கிறோம். அந்த மாதிரி புள்ளைங்க விஷயத்துலயும் நம்ம
அணுகுமுறையை மாத்திக்கணும்.'' என்று கிருஷ்ணமூர்த்தி தெளிவாகவே பேசினார்.


"அதுசரி...உனக்கு எப்படிய்யா
இவ்வளவு பக்குவம் வந்துச்சு? நல்ல மருமக கிடைச்சதுனால இப்படி பேசுறியா? எல்லாத்துக்கும்
குடுப்பினை வேணும். எனக்கு வந்து வாய்ச்ச மருமக ராட்சசியால்ல இருக்கா.'' ஜெயராமனின்
குரலில் விரக்தி தெரிந்தது.


"நான் இந்த மாதிரி பக்குவப்பட
காரணமே என் சின்னப் புள்ளைதான். மூத்தவனுங்க ரெண்டுபேரும் படிப்பு படிப்புன்னு இருந்தாங்க.
வேலை கிடைச்சதும் அம்மா அப்பாவை வெச்சு பார்த்துக்கணும்னு நினைக்கவே இல்லை.


ஆனா வடிவேல், நீங்க காலம் பூராவும்
என் கூடவே இருந்துடுங்கன்னு சொல்லிட்டான். மருமகளும் கல்யாணமாகி வந்த புதுசுல, உங்க
அப்பா மூணு புள்ளைங்ககிட்டயும் ஆளுக்கு ஒருமாசம்னு இருந்து சாப்பிடுறதுதானே நியாயம்னு
கேட்டா. ஆனா இவன், அப்பா அம்மாவை வெச்சு பார்த்துக்க லாப நஷ்ட கணக்கு பார்க்க கூடாது.
ஆயிரக்கணக்கான ஏழைங்களுக்கு அன்னதானம் செய்யுறது, கோவில் உண்டியல்ல லட்ச லட்சமா பணம்
போடுறதைக் காட்டிலும் பெத்தவங்களை வெச்சு காப்பாத்துறது உயர்ந்த விஷயம். அதை செய்ய
நமக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன்களுக்கு நன்றி சொல்லணும்.


அவருக்கு நான் ஒரே புள்ளையா
பிறந்ததா நினைச்சு என் கூடவேதான் வெச்சுப்பேன். உன்னால முடியலைன்னா விடு. எங்க அப்பாவை
நான் பார்த்துக்குவேன்னு சொன்னான். அதுக்கு 
அவன் மனைவி, என் அம்மா அப்பாவை நான் இந்த மாதிரி கூட வெச்சுக்க அனுமதிப்பீங்கிளான்னு
கேட்டா.


இதுக்கு என் அனுமதி எதுக்கு.
தாராளமா வந்து இருக்கலாம். ஆனா அவங்க சம்மந்தி வீட்டுல போய் தங்குறதான்னு யோசிப்பாங்க.
அப்படி நினைச்சா, தனி வீட்டுல இருக்கட்டும். வேணுன்னா தனியா வீடு புடிச்சு கொடுத்து
மாசத்துல பாதி நாள் நாம அவங்க கூட போய் தங்குவோம். அப்படின்னு சொன்னான். அவன் மனைவி
மறு பேச்சு பேசலை. உங்க குணத்தை இப்பதான் முழுசா புரிஞ்சுகிட்டேன்னு சொல்லி அழுறா.


வடிவேலுக்கு இந்த பக்குவத்தை
கொடுத்தது, புத்தகங்கள்தான். பேப்பரை கூட படிக்க கூடாதுன்னு அவனை எத்தனையோ நாள் அடிச்சு
துவைச்சிருக்கேன். ஆனா அந்த வாசிப்பு பழக்கம்தான், என்னைய நடுத்தெருவுல நிறுத்தாம அவன்
கூட வெச்சு பராமரிக்கிற குணத்தை கொடுத்திருக்கு. ஒருத்தனுக்கு நல்ல புத்தகத்தை விட
சிறந்த நண்பன் வேற யாரும் இருக்க முடியாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.


கடைசியா ஒண்ணு சொல்றேன். பெத்தவங்க,
நம்ம புள்ளை நம்மளை வெச்சு பராமரிக்கணும்னு நினைச்சா சந்தோ­ம். ஆனா ஒவ்வொரு விஷ­யத்தையும்
நம்மளை கேட்டுதான் முடிவெடுத்து நடக்கணும்னு நினைச்சா வருத்தம்தான் மிஞ்சும்.










காலம் மாறிப்போச்சுன்னு பேசிகிட்டு
இருந்தா மட்டும் போதாது. நாமளும் பல வி­யங்கள்ல நம்மளை மாத்திக்கணும். மாதா, பிதா,
குரு, தெய்வம்னு சும்மா மனப்பாடம் செஞ்சு எழுத வெச்சா ஒரு மனுஷ­ன் மாறிட மாட்டான்.
அதை உணர வைக்கணும். என் புள்ளையை புத்தகங்கள் உணர வெச்சிருக்கு.'' என்று கிருஷ்ணமூர்த்தி
சொல்லி முடித்தபோது, புத்தகங்கள் ஒரு மனுஷ­னை இந்த அளவு பக்குவப்படுத்துமா என்று நினைத்த
போது, அவர் மகனும் மருமகளும் அவர் நினைவில் வந்து போனார்கள்.


---------------------------