Search This Blog

சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி - 2018ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை


தினமலர் - வாரமலர் (சென்னை, புதுச்சேரி, கோவை, மதுரை பதிப்புகள்)

டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி - 2018ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை



தலைப்பு :மாற்றம் என்பதே மாறாதது...



'இந்தியா சுதந்திரமடைந்து, இத்தனை ஆண்டு காலம் கடந்து, நம்ம ஊர்ல, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில் பாதை அமைக்க, அரசு முடிவு பண்ணியிருக்குறதை நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல, அதுக்காக, நம்ம ஊருல இருக்குற எல்லா விளை நிலம் மற்றும் பாதி பேரின் வீடுகளையும் பறிகொடுத்துட்டு ரோட்டுல நிற்கப் போறோமே... அதை நினைச்சு அழுது புலம்புவதா...' என்று தெரியாமல் தவித்துப் போய் நின்றது, அரசன்பந்தல் கிராமம்.












பக்கத்தில் உள்ள நகரத்திலிருந்து, அந்த கிராமத்துக்கு வரும் வழி முழுவதும், இரு பக்கமும், அரச மரங்கள் பந்தல் போல் குடை பரப்பி நிற்பதால் தான், 'அரசன்பந்தல்' என்று இந்த ஊருக்கு பெயர் வந்ததாக, கிராமத்தில் உள்ள வயதானோர் சொல்வர். அரசன்பந்தல் பெயர், பேச்சு வாக்கில், 'அரசம்பந்தல்' என்றானது.



கிராமத்து நுழை வாயிலில் இருந்த அந்த பெரிய அரச மரத்தடியில், ஊர் மக்கள் அனைவரும், அவர்கள் வாழ்வுக்கான வெளிச்சத்தை கண்டு விடலாம் என்ற நம்பிக்கையில், இரவு, 10:00 மணிக்கு கூடி இருந்தனர்.



''ரயில் பாதை அமைக்கப்பட்டா, நாலு பயணியர் ரயிலும், ஆறு விரைவு ரயில்களும் இயக்கப்படும்ன்னு வழித்தடத்தோட அறிவிச்சிருக்காங்க...



''மத்த ரயிலை விடுங்க... சென்னைக்கு ஒரு ரயில், நம்ம ஊர்ல இருந்து கிளம்புனா, இப்ப, நம் மாவட்டத்துல இருக்குறவங்க பயணம் பண்ணுற, 20 பேருந்துகள் தேவையில்லை... ஒரு ரயில், குறைஞ்சது, 20 பேருந்துகளோட தேவையை பூர்த்தி செய்யுது... அவ்வளவு டீசல் மிச்சம்ன்னு சொல்றதை விட, பேருந்து மட்டுமல்லாம, கார், வேன்னு எவ்வளவு பேர் போறாங்க... அது விடுற புகை, ஏற்படுத்துற விபத்து எல்லாம், ரயில் போக்குவரத்து சிறப்பா இருக்குற பகுதிகள்ல குறையுது. நாம இதையெல்லாம் யோசிக்கணும்... இன்னும் பழங்கால கதைகளையே பேசக்கூடாது,'' என, கூட்டத்திலிருந்து ஒருவர் குரல் கொடுத்தார்.



''எது பழங்கால கதை? எங்க தாத்தா காலத்துலேயே, ரயில் பாதை வேணும்ன்னு அரசாங்கத்துக்கு மனு கொடுத்து கொடுத்து, ஆசை நிறைவேறாம, அவர் மட்டுமில்லாமல், அடுத்த தலைமுறையான எங்க அப்பாவும் போய் சேர்ந்துட்டாரு... இப்போ நாம சமீப காலமா ரயில் பாதை கேட்குறதையே மறந்தாச்சு... ஆனா, திடீர்னு அரசு அறிவிச்சு இருக்குன்னா, அது, நம்ம மேல உள்ள அக்கறையாலயா... இல்லவே இல்லை. அவங்க, 10 டிரெயின் என்ன, 60 டிரெயின் விடட்டும்... அதுல பயணம் பண்ண, நாம இங்க வாழப்போறது இல்லை."

"ரயில் பாதை அமைக்க, நம்ம மொத்த நிலத்தையும் கையகப்படுத்த, அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கு... நம்ம பகுதி பூமிக்குள்ள, ஏதோ தாது இருக்காம். அதை வெட்டி எடுத்து, துறைமுகத்துக்கு கொண்டு போறதுக்காக தான் இந்த திட்டம் வர்றதுன்றது, ஊரறிஞ்ச ரகசியம். இது, உங்க எல்லாருக்கும் கூட தெரிஞ்சிருக்கும்,'' என்றான், மற்றொருவன்.



இப்போது, அந்த கிராமத்திலேயே படித்த, சிந்திக்கக் கூடிய கோபால் பேச ஆரம்பித்தான்...



''நீ சொல்றது, நுாத்துக்கு நுாறு உண்மை தான். ஆனா, நாம இன்னொரு விஷயத்தையும் யோசிக்கணும்...,

''சுந்தரம்...'' என்று தன் நண்பனை விளித்து,

''நம்ம ஊரு கிளை நுாலகத்துல, வைரமுத்துவோட, 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை எத்தனை முறை எடுத்து படிச்ச... வைகை ஆத்துல அணை கட்டும்போது, மக்களோட எத்தனை கிராமம், காணாமப் போனதுன்னு படிச்சிட்டு, எப்படி அழுதுருக்க...

அணையோட நீர்ப்பிடிப்பு பகுதிகள்ல காலம் காலமா வாழ்ந்தவங்களோட தியாகத்தால, எத்தனையோ ஊர், பாசன வசதி பெற்று செழிக்கிறது... ஆக மொத்தத்துல, யாரோ தியாகம் பண்ண, யாரோ வாழப் போறாங்க...

ஆனா, இப்போ, நாம காணாமப் போகப் போறோம்... நம்ம கதையை எழுத யாராச்சும் இருப்பாங்களான்னு தெரியலை... நம்ம சோகக் கதை வெளியில தெரியாமலேயே போகப் போகுது,'' என்ற கோபாலுக்கு, கண்கள் கலங்கின.



''ஏம்ப்பா... நம்ம ஊர்ல நிறைய பேர் படிச்சிருந்தாலும், எதையும் ஆராய்ஞ்சு பார்த்து, கொஞ்சம் புத்தியோட பேசுறது நீயும், சுந்தரமும் தான். இப்போ நீங்களே, அரசாங்கம் கொண்டு வந்த இந்த திட்டத்தால, நாம சமாதியாகப் போறது மாதிரி பேசுறீங்களே,'' என்றார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர், வீரமணி.

அதைத் தொடர்ந்து ஆளாளுக்கு பேசினர்...

''அரசாங்கத்தை எதிர்த்து, நாம எதுவும் செய்ய முடியாது... வலுக்கட்டாயமா கிளம்பணும்ன்னு உத்தரவு போட்டுட்டாங்கன்னா, நாம வேற என்ன செய்யுறது!

''நாட்டுல எத்தனையோ அணை, ரோடு, பஸ் ஸ்டாண்ட் கட்டுறாங்க... எல்லாமுமே விளைச்சல் நிலத்துக்கும், மரம் மட்டைக்கும் சமாதி கட்டித்தான் எழும்பி நிக்குது.



''இன்னைக்கு நஷ்டம் நமக்குன்னு சொன்னதும், புலம்பி தவிக்கிறோம். பக்கத்து ஊர்ல மெடிக்கல் காலேஜ், கலெக்டர் ஆபீஸ், பஸ் ஸ்டாண்ட், கோர்ட்டுன்னு மொத்தமா நிலத்தை வளைச்சப்போ, நாம யோசிச்சோமா?''

''நிலத்தை, வீட்டை விட்டு வெளியேறுறது பிரச்னை இல்லை. அரசாங்கத்தோட திட்டத்துக்காக, நிலம் எடுக்குறப்ப, சில பெரும் முதலாளி, பண்ணையாருங்க, வேணும்ன்னா, அரசாங்கத்துகிட்ட இருந்து, சாமர்த்தியமா, நஷ்ட ஈடு வாங்கி, வேற முதலீடு பண்ணி முன்னேறி இருப்பாங்க...

''ஆனா, நம்மள மாதிரியான சாமானிய ஆளுங்களுக்கு, சந்தை விலை இல்லாம, அரசாங்கத்தோட, 'கைடு வேல்யூ'படி கிடைக்கிற நஷ்டஈடு, நாலு நாளைக்கு கூட காணாது. அந்த பணத்தை வெச்சு எதையும் உருப்படியா பண்ண முடியாம, அடுத்து, என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறப்பவே, அந்த இத்தனுாண்டு காசும், காணாம போயிடும்...''



''விவசாயம் பார்த்துகிட்டு நிம்மதியா இருந்தவனெல்லாம், சென்னை, திருப்பூர் மாதிரி ஊருக்கு, 'வாட்ச்மேன்' வேலைக்கும், ஜவுளிக் கடை, இரும்புக் கடை வேலைக்கும் போயிடுறான்.









''இதிலும் பல பேர், சென்னை மாதிரி ஊர்ல, வாடகைக்கு வீடு பிடிச்சு, தங்க கூட வருமானம் இல்லாம, 'பிளாட்பாரத்'துல வாழ்க்கையை நடத்திட்டு இருக்காங்க... நம்ம நிலைமையும் அப்படி ஆகிடுமோன்னு பயமா இருக்கு,'' என்று, நியாயமான கவலையை வெளியிட்டார், ஒருவர்.

கடைசியாக பேசிய அந்த நபர், நிதர்சனத்தை சொன்னதும், கிராமமே அதிர்ச்சியில் உறைந்தது.



இதுபோல் நடப்பதை பத்திரிகைகளில் அவ்வப்போது படித்திருந்தாலும், ஏதோ ஒரு செய்திக் கட்டுரை என்ற அளவில் கடந்து சென்று விடுவர்.

இப்போது தங்களுக்கும் அந்த நிலைமை ஏற்படப் போகிறது என்ற அச்சம், அந்த கிராம மக்கள் கண்களில் நன்றாகவே தெரிந்தது.



''இதையெல்லாம் யோசிக்கும்போது, போராடித்தான் ஆகணும் போலிருக்கே,'' என்று இன்னொருவர் கூறவும், அவசரமாக இடைமறித்தான், சுந்தரம்...

''ஊரே திரண்டு நின்னு போராட்டம் பண்ணினா, அரசு அதிகாரி யாராச்சும் வந்து, பிரச்னையை கேட்டுட்டாச்சும் போனாங்க... அது எல்லாம் இப்ப வழக்கொழிஞ்சு போச்சு... நாம அமைதியா போராடினாலும், அதுல ஏதாவது ஒரு முறையில வன்முறையை வெடிக்க வெச்சு, போராட்டத்தை அடக்க நினைச்சா, நாம என்ன செய்ய முடியும்?



''அதனால, நான் ஒரு வழியை யோசிச்சு வச்சிருக்கேன்... அரசாங்கம் அதை செஞ்சு குடுக்கும்ன்னு நம்பறேன். நாம, நம்பிக்கையோட கேட்டுத்தான் பார்ப்போம்.



''ஒருவேளை, நம்ம கோரிக்கையை அரசு ஏத்துக்கிட்டா, நாம யாரும் சென்னை, திருப்பூர்ன்னு கூலி வேலைக்கு போய், 'பிளாட்பாரத்'துல வாழ்ந்து, 'அட்ரஸ்' இல்லாம தொலைஞ்சு போக வேணாம்,'' என்ற சுந்தரத்தை, எல்லாரும் ஆவலுடன் பார்த்தனர்.



''மார்க்கெட் விலையை விட, அஞ்சு மடங்கு நஷ்டஈடு வேணும்ன்னு கேட்கணும்...''



அப்போது ஒருவர் எழுந்து, ''அப்படி கேட்டோம்ன்னு வெச்சுக்க... இன்னைக்கு நம்மளை காலி பண்ணி விரட்டுறதுக்காக, முதல்ல சரின்னு சொல்லிட்டு, பிறகு, எத்தனை வருஷம் ஆனாலும் கண்டுக்கவே மாட்டாங்க... நாம தான் கோர்ட்டுல வழக்கு போட்டுட்டு அலையணும்.



''முன்பெல்லாம், அப்படி வழக்கு போட்டா, 20 வருஷம் கழிச்சாவது தீர்ப்பு வந்துச்சு. இப்போ, மக்கள் நலனுக்காக, நிலத்தை அரசு எடுக்குறப்ப, அது குடுக்குறதை வாங்கிட்டு போங்கன்னு, வழக்கு தள்ளுபடியானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை,'' என்றார்.





















''ஏண்ணே அவசரப்படுறீங்க... என்று இடைமறித்த சுந்தரம், 'ரேஷன்ல அரிசியா கொடுக்குறதால தான் பல குடும்பங்கள்ல சாப்பிட முடியுது... மானியத்தை, பணமா போட்டிருந்தாங்கன்னா, நிச்சயம் பொறுப்பில்லாத குடும்பத் தலைவர்கள் உள்ள குடும்பத்தினர் பட்டினி தான் கிடக்கணும்... உங்களுக்கு விஷயம் புரிஞ்சிருக்கும்'ன்னு நினைக்கிறேன்.



''அதனால, நான் என்ன சொல்றேன்னா, நாம பாடுபட்டு, நிலத்தை பசுமையா மாற்றி வெச்சிருக்கோம். அதை, நாட்டு மக்கள் நலனுக்காக, அரசாங்கம் எடுக்குறதை தடுக்குறது நியாயம் இல்லை. அதுக்கான சக்தியும் நம்மகிட்ட இல்லை.



''ஒவ்வொருத்தர்கிட்டயும் எடுக்குற நிலத்துக்கு ஈடா, அரசுக்கு சொந்தமான, ரெண்டு மடங்கு தரிசு நிலத்தை கொடுக்கட்டுமே... அந்த தரிசு நிலத்துல நமக்கு தனித்தனியா வீடும் கட்டி கொடுக்கட்டும்.



''அந்த நிலத்துல, இலவசமா, 'போர்' போட்டு தரட்டும்... இலவச மின்சாரம் கொடுக்க வேண்டாம்... அதுக்கு பதில், சூரிய மின் சக்தி மோட்டார் செட் அமைச்சு கொடுக்கட்டும்.



''ராஜஸ்தான் பாலைவனத்துல, குளங்கள் வெட்டி, மழை தண்ணீரை சேமிச்சு, சிறப்பா விவசாயம் செய்யுறாங்க... நாம, நம்ம செலவுலயோ, அரசு செலவுலயோ கூட குளம் வெட்ட வேண்டாம்... மண் பாண்டங்கள், செங்கல் செய்யுறவங்களுக்கு மண்ணை வித்தா, அவங்களே குளத்தோட அளவுக்கு மண்ணை வெட்டி எடுத்துட்டு, நமக்கான குளத்தையும், பணத்தையும் தந்துடப் போறாங்க.



''குளத்து தண்ணீரை வீணடிக்காம, சொட்டு நீர் பாசனமோ, அதைவிட மேம்பட்ட தொழில்நுட்பம் என்ன இருக்கோ அதை பயன்படுத்தி, தரிசு நிலங்களை, விளை நிலமா மாத்துவோம்... யாரோ போட்ட பாதையில போறதை விட, நாமே புது ராஜபாட்டையை உருவாக்கி, அதுல பயணம் செய்யுறது எவ்வளவு சுகம் தெரியுமா?



''நிலத்தை தர மறுத்தா தான் அரசு வலுக்கட்டாயமா நம்மை வெளியேற்றும். அதுக்கு முன், நாமளே மாற்று வழியை சொல்லி, வாழ வழி கேட்டா, செய்யாமலா போவாங்க... நம்ம கிராமம் முன்னுதாரணமாகும். தொழிற்சாலைகளும் பெருகி, இன்னொரு பக்கம் தரிசு நிலங்கள், விவசாய நிலமாவும் மாறினா, நாடு எங்கேயோ போயிடும்; நம் வாழ்வாதாரமும் பாதிக்காது.



''நாளைக்கு, இந்த மாற்று யோசனையை முன் வைத்து, அதிகாரிகள்கிட்ட கோரிக்கை வைப்போம்... இதுக்கு எத்தனை பேர் சம்மதிக்கிறீங்க,'' என்று கேட்டான், சுந்தரம்.



எல்லாவற்றுக்கும் மாற்றம் உண்டு; மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை, அரசன்பந்தல் கிராம மக்கள் ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக, அனைத்து மக்களின் கைகளும் உயர்ந்தன.

****

கதாசிரியர் பற்றிய குறிப்பு:



க.சரவணன்

வயது: 36, சொந்த ஊர்: திருவாரூர், படிப்பு: பி.காம்., பணி: சொந்த தொழில் - கம்ப்யூட்டர் சென்டர் வைத்து, டி.டி.பி., வேலை, அழைப்பிதழ் மற்றும் புத்தக வடிவமைப்பு பணிகளை செய்து வருகிறார்.

சிறு வயதில், தினமலர் - சிறுவர்மலர், அம்புலிமாமா, பூந்தளிர், ராணிமுத்து காமிக்ஸ் என்று படிக்க ஆரம்பித்து, ஆனந்த விகடன், வாரமலர் மற்றும் நாவல்கள் என வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்கி, கல்லுாரி ஆண்டு விழா மலரில், சிறுகதை எழுதி, தன் எழுத்துப் பணிக்கு, அஸ்திவாரம் போட்டுள்ளார்.

இன்று, பல இதழ்களில் இவரது சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் வெளியாகின்றன. பல்வேறு சிறுகதை போட்டியில் பங்கேற்று, பரிசுகளையும் பெற்றுள்ளார்.



இந்த ஆண்டு, 'டி.வி.ஆர்., நினைவு சிறுகதை' போட்டியில், முதல் பரிசு பெற்றிருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.



திங்கள், 16 அக்டோபர், 2017

தீப ஒளி



தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியில் உள்ளது திருமலை வீதி. பாதி தூரம் வரை அடுக்கு மாடிக் கட்டிடங்கள். அதைத் தாண்டி ஆற்றின் கரையை நெருங்க நெருங்க சாலையின் இரு புறமும் குடிசைப் பகுதிகள். செங்கல்வர், மண்வர், கீற்றுத்தடுப்பு, ஏன் சுவரே இல்லாமல் கூரை மட்டும் உள்ள வீடுகளும் (?) உண்டு. இந்தியாவின் சமத்துவத்தை இதில் அறிந்து கொள்ளலாம்.



















 மறுநாள் தீபாவளி. பலருடைய வீடுகளில் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டதற்கு அடையாளமாக பட்டாசு ஒலிகள் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தன. அந்த இருந்த நேரத்தில் திருமலை வீதியில் மண்வர், மண்தரையால் ஆன ஒரு வீட்டில் இருட்டும் நேரத்தில் விளக்கு வெளிச்சம் கூட இல்லாமல் இருந்தது. உழைத்த களைப்பு நீங்க வேண்டும் என்று குடிபானம் அருந்தி வந்த முனியப்பன், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அந்த வீட்டையே கலவரம் நடந்த கடைவீதியாக்கிவிட்டுப் போயிருந்தான்.


மயக்கம் தெளிந்த வளர்மதி மெள்ள கண்களைத் திறந்தாள்.








உடலில் எந்த பாகமும் மிச்சம் இல்லாமல் வலித்துக் கொண்டிருந்தது. தட்டுத் தடுமாறி எழுந்து அமர்ந்தாள். தரை முழுவதும் சோற்றுப் பருக்கைகள் சிதறிக் கிடக்க, பேராசிரியர் வீட்டில் இருந்து எடுத்து வந்த குழம்பு தரை முழுவதும் கொட்டி நாற்று நடத் தயாராக இருக்கும் வயல்போல் ஆகியிருந்தது. தீபாவளிக்காக என்று அவர்கள் கொடுத்திருந்த ஆடைகளும், பலகாரங்களும் முனியப்பனின் வன்முறையில் தப்பவில்லை.

நெற்றியில் வலி மிக அதிகமாகவே இருக்க, இடது கைவிரல்களால் லேசாகத் தடவிப் பார்த்தாள். எலுமிச்சைப்பழத்தின் ஒரு பாதியைக் கவிழ்த்து வைத்தது போல் வீங்கியிருந்தது. அவள் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து நிலைப்படியில் மோதியும் ஆத்திரம் அடங்காத முனியப்பன், கீழே தள்ளி கண்ட இடத்திலும் மிதித்துவிட்டு வெளியேறியது நினைவுக்கு வரவும் அவள் கண்கள் மீண்டும் கலங்கின.









சனி, 22 அக்டோபர், 2016

கல்லூரிச்சாலை



ஈவ்டீசிங் செய்யும் ஆண்களிடமிருந்து பெண்கள்
தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி, இளைஞர்கள் இந்த தவறுகளை செய்ய காரணம் என்ன? அவர்களை
நல்வழிப்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி சில யோசனைகளை முன் வைக்கும் சிறுகதை.





2015ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கதை. பல பத்திரிகைகளுக்கும்
அனுப்பி பிரசுரமாகவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எழுதியது அச்சில் ஏற வேண்டும்
என்று நினைத்ததற்கு காரணம், அப்போதுதான் பலரையும் சென்றடையும் என்பதால்தான். இப்போது
நம் எழுத்துக்கள் மக்களை சென்றடைய பல வழிகள் இருக்கும்போது ஏன் அச்சு ஊடகத்தில் மட்டும்தான்
பிரசுரமாக காத்திருக்க வேண்டும். அவர்களுக்கு என்னென்ன அளவுகோலோ, எந்த விதமான நெருக்கடியோ...
யாரையும் குற்றம் சொல்வதை விட்டு, இனி எழுதுபவற்றை வலைப்பூ, முக நூலில் நானே பிரசுரித்துவிடலாம்
என்று முடிவெடுத்ததன் விளைவு... கல்லூரிச்சாலை சிறுகதை இங்கே...





*************************************************





கல்லூரிச்சாலை


சிறுகதை










 "வர்ற ஒண்ணாம் தேதிலேர்ந்து ஹெல்மெட் போடுறதை கட்டாயமாக்கி யிருக்கறதால இனிமே நம்ம முகத்தை பிகருங்களோ... பிகருங்க முகத்தை நாமளோ பார்க்க முடியாது. என்னடா பண்றது?"என்று நாட்டின் மிக முக்கிய பிரச்சனையைப் பற்றி கவலைப்பட்டான் அந்த கல்லூரி மாணவன்.





"சென்னை மாதிரி பெரிய நகரங்கள்ல வெயில் பட்டு தோல் கருத்துடக்கூடாதுன்னு உடம்புல எந்த பாகமும் வெளில தெரியாத மாதிரி பொண்ணுங்க கவர் பண்ணிட்டு போறது மாதிரி நம்ம ஊர்லயும் ஒரு சில டிக்கட்டுங்க இப்படி கிளம்பியிருக்குதுங்கடா... நாலஞ்சு நாளா ஒரு பொண்ணு ஹெல்மட், கிளவுஸ் அப்படின்னு ஃபுல் கவரேஜோட ராயல் என்பீல்டு பைக்ல ரைடு வருது. அது மூடிகிட்டு இருக்குறதோட பின்னால உட்கார வெச்சிருக்குற பொண்ணையும் முழுசா மூடி அழைச்சிட்டு வருது. என்ன கொடுமை சரவணன் இது..." என்றான் மற்றொருவன்





இப்படி பேசிக்கொண்டிருந்த நாளைய இந்தியாவினர் நின்ற இடம், அந்த சிறு நகரத்தில் பிரபல பெண்கள் கல்லூரியும் பள்ளியும் அமைந்திருந்த வீதியின் பெட்டிக்கடை வாசல்.





"தம்பிங்களா... சவுண்டை குறைங்கப்பா... முதலுக்கே மோசமாயிடப் போகுது." என்று கடைக்காரர் இவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.





"டேய்... அதோ, தெரு முனையில வர்றது அந்த புல்லட்காரிங்கதான்னு நினைக்கிறேன்..." என்று ஒருவன் டூவீலரில் அமர்ந்திருந்தவனிடம் பரபரப் புடன் சொன்னான்





"அவளுங்களை இப்ப என்ன பண்றேன்னு பார்..." என்றவாறு வண்டியை செல்ஃப் ஸ்டார்ட் செய்த அவன் சாகசம் நிகழ்த்துவதாக நினைத்துக் கொண்டு முன்வீலை தூக்கி மீண்டும் தரையில் குதிக்க வைத்து சாலையைக் கடந்து சீறியவாறு மறுபுறம் சென்றான்





இந்த ஓரிரு வினாடிகளுக்குள் புல்லட் அவர்கள் அருகே வருவதற்கும் இவன் சாலையின் மறுபுறம் சீறிக்கொண்டு செல்வதற்கும் சரியாக இருந்ததால், புல்லட் நிலைதடுமாறி அருகில் கட்டிடப்பணிக்காக சாலையில் கொட்டப்பட்டிருந்த ஆற்றுமணலில் போய் சொருகிக் கொண்டது. அதில் இருந்த இரண்டு பெண்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக உருண்டு விழுந்தனர்.





இவர்களை கீழே விழ வைத்த அவன், இதைப் பார்த்ததும் அதிர்ந்துபோய் வண்டியை விரட்ட நினைத்து எதையோ செய்யப்போக அது ஆஃப் ஆகி நின்றுவிட்டது. மீண்டும் அவன் ஸ்டார்ட் செய்ய முயற்சிப்பதற்குள் புல்லட்டில் இருந்து கீழே விழுந்த பெண்களில் ஒருத்தி தாவிச் சென்று அவன் சட்டையை கொத்தாக பிடித்துக்கொண்டாள். இப்போது பெட்டிக்கடை வாசலில் நின்ற மற்ற இளைஞர்கள் எஸ்கேப்.





இப்போது சாலையில் கூட்டம் கூடிவிட்டது. பெண்ணிடம் சிக்கிய இளைஞன்,"சாரி மேடம்... தெரியாம நடந்துடுச்சு... விட்டுடுங்க..." என்று கெஞ்சியவாறே தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்தான். ஆனால் அவள் விடுவதாயில்லை. ஒரு கையால் அவனைப் பிடித்துக் கொண்டே ஹெல்மெட்டை கழற்றினாள்





இவ்வளவு அழகான பெண்ணை பார்த்து ரசிக்க முடியாம இப்படியொரு வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டுவிட்டோமே என்ற அவஸ்தை அவன் முகத்தில் தெரிந்தது





"கவிதா... நூறுக்கு போன் போட்டு இங்க உடனே போலீசை கூப்பிடு..." என்று தன்னுடன் வந்தவளுக்கு உத்தரவு பிறப்பித்தவளின் குரலில் உறுதி தெரிந்தது.





கூட்டத்தினர் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டு ஒதுங்கி நின்றார்களே தவிர யாரும் இவர்களிடம் நெருங்கி வரவில்லை.





சிக்கியவனை பிடித்து இழுத்து வந்து ஆற்று மணலில் உட்கார வைத்து, அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.


பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு போலீசார் வந்தனர். வந்த ஐந்து போலீசாரில் இரண்டு பேர் கூட்டத்தை கலைப்பதில் கவனம் செலுத்த, மற்றவர்கள் அந்த பெண்ணிடம் வந்தனர்.





"என்னம்மா பிரச்சனை..." என்று அலட்சியமாக ஒரு கேள்வியை கேட்டார் உதவி ஆய்வாளர்.





"சார்... என் பேர்  ஜான்சிராணி..." என்று கம்பீரத்துடன் அந்த பெண் தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தவுடன், உதவி ஆய்வாளரிடம் தென்பட்ட அலட்சியம் காணாமல் போனது.





ஜான்சிராணி சொன்னதை கேட்டுக்கொண்ட பிறகு "காயம் எதுவும் இருக்காம்மா?" என்றார்.





"இல்ல சார்... மணல்லதான் விழுந்தோம்..."





"அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டமா?" என்று உதவி ஆய்வாளர் கேட்டதும், ஜான்சிராணியின் பார்வையில் பொறி பறந்தது. அதைக் கண்டதும் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, "சரிம்மா... நீங்க ரெண்டுபேரும் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுங்க." என்று சொன்னதுடன், அந்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை காவலர் ஒருவரை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வர சொல்லிவிட்டு அவனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.





காவல் நிலையம்.





"புகார் கொடுக்குறதுல உறுதியா இருக்கீங்களாம்மா... ஹெல்மெட் போட்டிருந்ததோட மணல்லதான் விழுந்திருக்கீங்க. அடிதான் எதுவும் படலியே... மன்னிச்சு விட்டுடலாம்ல... பாவம் இவன் படிக்கிற பையன். அது மட்டுமில்லாம, நான் வேணும்னு செய்யல... ஜஸ்ட் ரோட்டை கிராஸ் பண்ணி நான் வண்டியை மூவ் பண்ணும்போது சின்ன ஆக்சிடெண்ட் அப்படின்னு கேசை ஒண்ணுமில்லாம பண்ணிடுவாங்க." என்று இழுத்தார் ஆய்வாளர்.





"ஏன் சார்... எங்களுக்கு ரத்தக்காயம் எதுவும் இல்லைன்னா புகார் எடுத்துக்க மாட்டீங்களா... 


நான் நாலஞ்சு நாளாத்தான் இந்தப் பக்கம் போய் வந்துகிட்டு இருக்கேன். இவனும் இவன் நண்பர்களும் பண்ணு சேட்டையை கவனிச்சுகிட்டுதான் இருக்கேன்





பெண்கள் கல்லூரி, பள்ளி இருக்குற ஒரு வீதியில இப்படி ஈவ்டீசிங் பண்றதை கவனிச்சு தடுக்காம இருந்த உங்க டிபார்ட்மெண்ட்டுக்கும் நோட்டீஸ் அனுப்பினா என்னன்னு தோணுது.





இப்ப நாங்க மணல்ல விழுந்ததால ரத்தக்காயம் இல்லாம தப்பிச்சுட்டோம். இல்லைன்னா, ஈவ்டீசிங் காரணமா பலியான பெண்கள் பட்டியல்ல எங்க பேரும் சேர்ந்திருக்கும். மீடியாவுக்கு ஒரு நாள் செய்தி கிடைச்சிருக்கும். அவ்வளவுதான்





நானே கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணா இருக்குறதால என்னை உட்கார வெச்சு பேசிகிட்டு இருக்கீங்க





இதுவே ஏழைப் பெண் ஒருத்தி பாதிக்கப்பட்டிருந்தா அவளுக்கு ஸ்டேஷன்ல கிடைக்கிற மரியாதையே வேறயாத்தானே இருந்திருக்கும்." என்று ஜான்சிராணி கேட்டதும் அந்த ஆய்வாளருக்கு வார்த்தைகள் எதுவும் கிடைக்காமல் தடுமாறினார்.





"ஆனாலும் நீங்க சொன்ன விஷயத்தையும் ஒரு செகண்ட் யோசிச்சேன். என்னோட உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்படாத நிலையில அவன் பண்ணின தப்புக்காக கடுமையா தண்டிச்சா அவன் திருந்துறதுக்கும் வாய்ப்பு இல்லை





ஏன்னா, சிறைக்குப் போறவங்க திருந்தி வெளியில வர்றது மாதிரி தெரியலை. பிரிட்ஜ்ல வச்ச பொருள் மாதிரி ஃப்ரெஷ்ஷா அதே மனநிலையோடதான் தண்டிக்கப்பட்டவன் வெளியில வர்றான்னு ஒரு சினிமா வசனம்தான் நினைவுக்கு வருது.





அதனால, இவன் நண்பர்களையும் எல்லாரோட குடும்பத்தினரையும் வரவழைங்க. அவங்க முன்னிலையில இவனும் இவன் நண்பர்களும் மன்னிப்பு கேட்கட்டும். நான் புகார் எதுவும் கொடுக்கலை." என்றாள் அவள்.





***


எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த ஜான்சிராணி, ஹாலில் அமர்ந்து, அன்றைய நாளிதழை புரட்டினாள்.





இதற்குள் விபரம் தெரிந்த அவள் தந்தை, "ஏம்மா... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அவன் மேல ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்க நீ ஸ்டேஷக்கு போக அவசியம் இல்லாம, இன்ஸ்பெக்டரையே வீடு தேடி வரவெச்சிருப்பேன். உனக்கு ஏம்மா இந்த வீண் அலைச்சல்..." என்றார்.





"அப்பா... அந்த பையன் செய்த தப்புக்கு அவன் காரணமே இல்லை... அவன் பெற்றோர்களும், இந்த சமுதாயமும்தான்





சக மனுசனை எப்படி மதிக்கணும், ஒரு பெண்ணை எப்படி பார்க்கணும், அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம எப்படி வாழணும்... இப்படி எதையுமே நம்ம நாட்டு பள்ளிக்கூடத்துலயோ, கல்லூரிகள்லயோ சொல்லிக்கொடுக்குறதுல்ல... இந்த விசயங்களை எல்லாம் நானே பாடத்திட்டம் தாண்டின வாசிப்பு பழக்கம் இருந்ததாலதான் தெரிஞ்சுக்க முடிஞ்சது





தப்பு செஞ்சதும் தண்டனை கொடுக்குறதும் முக்கியம்தான். அதுக்கும் முன்னால தப்பு செய்யறதுக்கு காரணமான விஷயங்களை புரிய வெச்சு அதை மனசுல இருந்து ஒதுக்க நம்ம சமுதாயத்துல என்ன ஏற்பாடு இருக்குன்னு எனக்கு புரியலை." என்ற ஜான்சிராணி, அந்த நாளிதழின் கடைசி பக்கத்தில் அரைப்பக்க வண்ண விளம்பரமாக வெளிவந்திருந்த அவர்கள் கல்லூரியின் விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.





அதை தந்தையிடம் காட்டி, "என்னப்பா இது...?" என்றவள் முகத்திலும் கேள்விக்குறி.





"... நீ படிப்பை முடிச்சுட்டு வந்து ஒரு வாரம்தான் ஆகுது. நம்ம பிசினஸ் சம்மந்தப்பட்ட விசயம் எதுவும் முழுசா உனக்கு தெரியாதுல்ல... இதுவரை கோஎஜுகேசனா இருந்த நம்ம ஆர்ட்ஸ் காலேஜை இந்த வருசத்துல இருந்து மகளிர் கல்லூரியா மாத்திட்டேன்." என்றார்.





"ஏன்?"





"உனக்கே தெரியும்மா... நமக்கு ஏகப்பட்ட பிசினஸ், எல்லாத்தையும் கவனிச்சாகணும். இந்த ஆர்ட்ஸ் காலேஜுல நல்ல வருமானம்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா பசங்களால ஏகப்பட்ட தொந்தரவு. அடிக்கடி பஞ்சாயத்து. எதாவது நடவடிக்கை எடுத்தா, வார்டு செயலாளர்கிட்ட இருந்து வட்டம், மாவட்டம்னு எல்லா வகை அரசியல்வாதிகிட்ட இருந்தும் இம்சை





அது தவிர, இப்போ உன்னைய ஈவ்டீசிங் பண்ணினானே ஒரு பையன், இந்த மாதிரி பிரச்சனை அடிக்கடி வருது. இதுல காதல், கல்யாணம் வேற... அதான் பார்த்தேன். மகளிர் கல்லூரியா மாத்திட்டா எந்த பிரச்சனையும் இல்லாம வருமானம் பார்க்கலாம். அதான் செஞ்சேன்." என்று அலட்சியமாக பதில் சொன்னார்.





"என்னப்பா... நீங்களும் இப்படி இருக்கீங்க... இப்ப நானே தப்பு பண்ணினா, அதை திருத்த வழி பார்க்காம எக்கேடும் கெட்டுப்போன்னு வீட்டை விட்டு விரட்டிடுவீங்களா?"என்ற ஜான்சிராணியின் கேள்வியில் அவர் தந்தை அதிர்ந்ததை அவரின் முகமே காட்டிக்கொடுத்தது.





"நம்ம ஊர் தமிழ்நாட்டுலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்துல இருக்குன்னு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க. ஆனா இந்த மாதிரி பின்தங்கிய ஊர் மக்கள்கிட்ட வியாபாரம் செஞ்சுதான் நீங்க இவ்வளவு பெரிய பணக்காரரா இருக்கீங்க.





இந்த ஊர் பின்தங்கிய மக்களுக்காக, அரசுக் கல்லூரி ஒண்ணு கூட இல்லாத நிலையில, ஓரளவு நியாயமான கட்டணத்துல நீங்க கலைக்கல்லூரி நடத்துனதை நினைச்சு நான் பெருமைப்பட்ட காலம் உண்டு.





பள்ளி, கல்லூரிகள்ல பாடம் படிச்ச பையனே வீண் வம்பு செய்யுறது, ஊர் சுத்துறது, பெண்கள் மேல வன்முறை பிரயோகம்னு தப்பான வழிகள்ல போறான்.








அந்த மாதிரி பசங்களை நல்ல வழிக்கு கொண்டு வர நம்ம கல்லூரியில பாடத்திட்டம் தவிர வேற என்ன மாற்றம் கொண்டு வரலாம்... நம்ம கல்லூரி மாணவன் படிச்சவனா வெளியில போறதைக் காட்டிலும் பண்புள்ளவனா வெளியேற என்ன செய்யலாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு நமக்கு தொல்லை ஒழிஞ்சா சரின்னு இந்த ஊர் பசங்களை திக்குத்தெரியாத காட்டுல தொலைச்சிட்டு வர்ற மாதிரி கோஎஜுகேஷன் காலேஜை மகளிர் கல்லூரியா மாத்திட்டீங்களேப்பா... 





தொழில்முறை குற்றவாளிகளா இல்லாம, எதிர்பாராம தப்பு செஞ்சவங்க திருந்த எந்த வாய்ப்பும் கொடுக்காம அவங்களை கொடூர மனம் படைச்ச குற்றவாளிகளாவேத்தான் சிறைச்சாலைகள் வெளியே அனுப்புதுன்னு ஒரு வாசகம் படிச்சேன். அதுக்கும் இதுக்கும் எந்த வித்தியாசமும் தெரியலைப்பா." என்று ஆவேசப்பட்டாள் ஜான்சிராணி.





"நீ ஏதோ ஒரு முடிவோட பேசுற... என்கிட்ட சொல்லு. முடியும்னா அதை செஞ்சிடுறேன்." என்றார் அவர்.





"முடியும்னா இல்லை... கண்டிப்பா செய்யணும். ரொம்ப சிம்பிள். மறுபடி கோஎஜுகேசனா மாத்துங்க. மனுசனுக்கு அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை பத்தி கதை, கவிதை, கட்டுரை, களப்பணி போன்ற விசயங்கள்ல போட்டி வையுங்க. இங்க படிக்கிற பசங்க பொருளாதார நிலையில பின்தங்கிய நிலையில இருக்குறதால வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு தர்றது நல்லாயிருக்கும்.





அது மட்டுமில்லாம, எல்லா மாணவ, மாணவிகளின் பெற்றோரும் மாசம் ஒருநாள் கட்டாயம் நம்ம கல்லூரிக்கு வந்து ஆசிரியர்கள்கிட்ட தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து பேசிட்டு போகணும். வேலை நேரத்துல இங்க வர்றது அவங்க வருமானத்தை பாதிக்கும்னா, மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியில இருந்து எட்டு அல்லது ஒன்பது மணி வரை இந்த சந்திப்பை வெச்சுக்கலாம்னு அறிவிப்போம். ஆசிரியர்கள் முகம் சுளிப்பாங்கன்னு நினைச்சா, ஒரு நாள் சம்பளம் கூடுதலா கொடுத்துடலாம்.





இது மாதிரி என்னென்ன விசயம் செஞ்சா சமுதாயத்துக்கு நன்மையோ, அதை எல்லாம் செய்வோம். நிச்சயம் இதுக்கு நல்ல பலன் கிடைக்கும்." என்றாள் ஜான்சிராணி.





அவள் சொன்ன அனைத்து விஷயங்களும் மனிதன் மனம் வைத்தால் சாத்தியமான ஒன்றுதான் என்ற உண்மையை புரியவைத்தது





"ஜான்சி... புது வழி காட்டியிருக்க... ஒவ்வொண்ணா நிச்சயம் செய்வோம்." என்று சொல்லி புன்னகைத்தார் அவள் தந்தை.


***************************************************