Search This Blog

அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 பிப்ரவரி, 2014

முதல்வன்-சில சிந்தனைகள்...

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பதிவு. அதில் எழுதிய விஷயங்களில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் நிலவரம் இன்னும் கேவலமாகி திருவாளர் அப்பாவி பொதுஜனத்திற்கு இன்னும் கலவரம் தருவதாகவே இருக்கிறது.

அதனால் அப்படியே இங்கே மீள்பதிவு இட்டுள்ளேன்.

இன்னும் கோடி மனிதர்கள் பிறந்தாலும் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற பூமியில் இருக்கும் வளங்களுக்கு வல்லமை உண்டு. ஆனால் எத்தனை பூமி உருவாகி நினைத்தாலும் அவற்றால் ஒரே ஒரு மனிதனின் பேராசையை கூட நிறைவேற்ற முடியாது.

இது காந்தியடிகளின் கூற்று. இந்த நிலையை நோக்கி நம் நாடு ரொம்பவும் வேகமாக சென்றுகொண்டிருப்பது கண்டு ரொம்பவே நான் அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். இதைத் தவிர வேறு என்னதான் செய்வது?

எதிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்ற இலக்கு சரிதான். ஆனா அதற்காக தகிடுதத்தம் செய்வது ஆபத்தானது. இது சாதாரண ஆட்களுக்கு.

இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதிலும் முதல்வனாக மட்டுமல்ல எல்லா நம்பராகவும் தானே இருக்க வேண்டும் என்ற கொடூர எண்ணத்துடன். அதாவது மற்றவர்களை ஒழித்துக்கட்டிவிட வேண்டும். இது அதிகாரத்தில் இருப்பவர்களின் பேராசை. ஒண்ணாம் நம்பராக மட்டுமல்ல...ஒரே நம்பராக இருக்க வேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்திருக்கும் பேர்வழிகளிடம்தான் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம்.

திருவாரூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இளையாங்குடி (இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது). அங்கிருந்து சாலைக்கிராமம் செல்லும் சாலையில் சில மைல் தூரத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மாசிமாத மஹா சிவராத்திரி அன்று மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடும்.

நான் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் பௌர்ணமி வழிபாட்டுக்கு சென்று வந்து விட்டதால் இப்போது செல்லவில்லை. இன்னொரு உறவினர் திருவாரூரில் இருந்து கிளம்பி சென்ற நேரத்தையும் வழிபாடு முடித்து இங்கே ஊர் திரும்பிய நேரத்தையும் சொன்னபோது எனக்கு மயக்கம் வராத குறைதான்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ஜெயலட்சுமி என்ற தனியார் பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு கிளம்பினால் கிட்டத்தட்ட ஏழரை மணி வரை பார்த்து பத்திரமா (60 கிலோ மீட்டர்) அழைச்சுட்டு போவாங்க. அப்புறம் அங்க ஒரு ஹோட்டல்ல காலை டிபனை முடிச்சுட்டு எட்டு மணி சுமாருக்கு பரமக்குடி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தால் அது அறந்தாங்கி, காரைக்குடி, காளையார் கோவில், கல்லல், இளையாங்குடி வழியாக ஊர்ந்து மதியம் மூன்று மணிக்கு பரமக்குடிக்கு போய்ச் சேரும்.

அப்போதெல்லாம் நாம என்னமோ நானூறு கிலோ மீட்டர் பயணம் செய்யுறதா நினைச்சுக்குவேன். சும்மாவா...பத்து மணி நேரப் பயணமாச்சே.( காலை 5 மணிமுதல் மதியம் 3 வரை கணக்கிட்டு பாருங்க. சரியா இருக்கும்.)

அப்புறம் 1993, 94ம் வருஷமா இருக்கலாம். பரமக்குடியில இருந்து தஞ்சாவூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அஞ்சரை முதல் அஞ்சே முக்கால் மணி நேரப் பயணம். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு சுமாரா ரெண்டு மணி நேர பயணம்(65 கி.மீ). மொத்தமா எட்டு மணி நேரத்துல ஊருக்கு போக முடியுதேன்னு சந்தோஷப்பட்டோம்.

இதுல என்ன கொடுமைன்னா பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியா பரமக்குடி போனா நூற்றி தொண்ணூறுல இருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவுதான்னு நினைக்கிறேன். சமீபமா பத்து ஆண்டுகளுக்குள்ளதான் இந்த சாலைகளை முழுமையா இருவழி போக்குவரத்துக்கு ஏதுவா அகலப்படுத்துனாங்க. ஆனா தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியா போனா இருநூற்று நாற்பது முதல் இருநூற்று அம்பது கிலோமீட்டர் தொலைவு இருக்கும். ஒவ்வொரு ஊருக்குள்ளயும் பேருந்து நிலையம் சென்று ஊருக்குள்ள சுத்தி திரும்புற தொலைவு தனி.

அப்புறம் இந்த நேரத்தையும் குறைக்க முடியுமான்னு யோசிச்சேன். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடின்னு போனா  இருநூற்று நாற்பது கிலோ மீட்டர் தொலைவுதான். ஆனா சரியா பஸ் கிடைத்து போனா ஏழு மணி நேரத்துக்குள்ள போயிடலாம்.

அதிலும் பரமக்குடியில் அதிகாலை 4 மணிக்கு திருச்சிக்கு மானாமதுரை, திருப்பத்தூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏறினால் பெரும்பாலும் காலை ஏழு இருபத்து ஐந்துக்குள் புதுக்கோட்டை வந்துவிடலாம். அடுத்த இரண்டு நிமிடங்களில் அடுத்த பேருந்தில் ஏறிவிட்டால் எட்டே முக்காலுக்குள் தஞ்சைக்கு செல்வதும் உறுதி. பிறகு அங்கிருந்து ஒண்ணே முக்கால் மணி நேரம். பெரும்பாலும் பத்தரை மணிக்குள் திருவாரூர் வந்து விடலாம். ஏறத்தாழ ஆறரை மணி நேர பயணம்.

இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் மாறி செல்லும்போது சில நாட்களில் அதிக கூட்டம், ஊர்வலம் என்று எதாவது காரணங்களினால் சரியான சமயத்தில் பஸ் கிடைப்பது சிக்கலாகிவிடும்.

பத்து மணி நேர பயணம் ஆறரை மணி நேரமாக சுருங்குவதற்கு எவ்வளவு போராட்டம் நடக்கிறது என்று பாருங்கள்.

பயணதூரம் குறையும் வகையில் வழி இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக முத்துப்பேட்டை சென்ற உடன் அடுத்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் செல்ல கிட்டத்தட்ட இருநூறு கிலோ மீட்டர் தொலைவு இருந்தாலும் சொந்த வாகனம் என்றால் அதிகபட்சம் மூன்று மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.

எங்கள் உறவினரில் சிலர், இந்த பாதையில் ராமநாதபுரம் வரை செல்லாமல் தொண்டியை அடுத்த உப்பூர் வழியாக சாலைக்கிராமம் சாலையில் சென்று கோவிலை அடைந்திருக்கிறார்கள். மொத்த பயண நேரம் மூன்றரை மணி நேரத்திற்கும் குறைவுதானாம்.

ரோடு சூப்பர் என்று என்னிடம் பாராட்டிப் பேசினார்கள். அதெல்லாம் சரிதான். இப்போ இருக்கும் சந்தோஷம் இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போய்விடும். ஆங்காங்கே டோல்கேட் அமைத்து சுங்கவரி என்ற பெயரில் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

சாலை நன்றாக இருக்கவேண்டும் என்றால் இந்த மாதிரியான செலவினங்களை சமாளித்துதானே ஆக வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இந்த சாலைகளுக்கு எவ்வளவு செலவாகிறது, அதில் அரசின் பங்கு எவ்வளவு, தனியாரின் பங்கு எவ்வளவு, அதற்கு குறிப்பிட்ட தொகை லாபம், வட்டி, பராமரிப்பு, ஊழியர்களின் ஊதியம் போன்ற செலவுகள் போக எவ்வளவு தொகை மிக அதிகமாக வசூலிக்கிறார்கள் என்ற விபரமே தெரியவில்லை.

ஒரு நகராட்சிக்கு சொந்தமான கடைக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாடகை தருவதாகத்தான் அரசியல்வாதி ஒப்பந்தம் செய்திருப்பார். ஆனால் உள் வாடகையாக தினமும் ஆயிரம் ரூபாய் கூட வசூலிப்பார். இதே மாதிரியான கொள்ளைகள்தான் சுங்க வரி வசூல் செய்வதிலும் இருக்கும்.

பக்கத்து மாநிலமான கேரளாவில் படகுப்போக்குவரத்து நிறையவே நடக்கிறது. சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவுக்கு, இரண்டரை மணி நேர படகுப்பயணத்துக்கு பத்து ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறதாம். ஆனால் இங்கே கன்னியாக்குமரியில் ஐந்து நிமிட பயண தூரத்தில் இருக்கும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல முப்பது ரூபாய் கட்டணம். அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வேண்டுமானால் அதற்கு தனி கட்டணமாம்.

அரசியல் வியாதிகள் செலவழிக்கும், பத்து தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் எல்லா பணமும் கோவில்களில் இருந்து கழிப்பறை வரை எல்லா இடத்திலும் இப்படித்தான் சாதாரண பொது மக்களிடமிருந்து அநியாய கட்டண முறையில் வலுக்கட்டாயமாக பிடுங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இரட்டை ரயில் பாதை இருந்தால் எவ்வளவு எரிபொருள் மிச்சமாகும், எவ்வளவு சாலை விபத்துகள் குறையும்?...அது அவ்வளவு எளிதானது இல்லைன்னு சொல்லிடாதீங்க. ஆறு மாசத்துல அவ்வளவு பெரிய தலைமைச் செயலகம் கட்ட முடியும்போது இது முடியாதா. நான் சொல்வது போல இரட்டை ரயில் பாதை வந்துவிட்டால் ஆம்னி பஸ் பிஸினஸ் படுத்து விடும். அப்புறம் எங்களுக்கு வருமானம்?- இப்படி ஒரு எண்ணம்தான் அரசியல்வாதிகள் மனதில் ஓடும்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

முதல்வன், நாடோடிகள் வெற்றி - கந்தா - ஆனந்த விகடனில் கதையும்

ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா என்ற சிறுகதையை 10.04.2013 தேதியிட்ட ஆனந்த விகடனில் திருவாரூர் பாபு எழுதியிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் உருவான முதல் சினிமாவான கந்தா படம் வெற்றியை எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பதை விட பல மடங்கு அதிர்ச்சியை இந்த சிறுகதையின் முடிவு எனக்கு ஏற்படுத்தியது. 
அதற்காக கதையின் முடிவு பெரிய மலையைப் புரட்டுவது போல கனமான விசயத்தை எல்லாம் வைத்து எழுதப்படவில்லை. கதைமாந்தர் ஒருவரின் மனைவி போகிற போக்கில் சொல்கிற ஒற்றை வாக்கியத்துடன் கதை முடியும். அந்த வாக்கியம் வாசகர் எதிர்பாராதவகையில் இருக்கும். நானும் கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கதைகளைப் படித்திருப்பேன். சமீப காலத்தில் நான் வாசித்த கதைகளில் கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று மனதின் ஓரத்தில் லேசான யூகம் எட்டிப்பார்த்ததை தகர்த்து வேறு வகையில் அமைந்திருந்தது இந்தக் கதையில்தான்.

சிறுகதைகள் வாசிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு திருவாரூர் பாபு என்ற பெயர் கண்டிப்பாக பரிச்சயமாகியிருக்கும். சுமார் ஆயிரம் சிறுகதைகளுக்கு மேல் எழுதிய அவருடைய முதல் சிறுகதை பிரசுரமாவதற்கு நான்கு ஆண்டுகள் ஆனதைப்போலவே அவர் இயக்கிய முதல் படம் திரையைத் தொடுவதற்கும் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று திருவாரூரில் கந்தா படம் ரிலீஸ் வெளியான நாளன்று குறிப்பிட்டார்.

நான்கு ஆண்டுகள் கழித்து அவருடைய முதல் கதை பிரசுரமானாலும் அதன் பிறகு ஆயிரம் கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஆனால் முதல் படம் கந்தா பல பிரச்சனைகளால் மிகவும் தாமதமாக திரையைத் தொட்டது அதன் வெற்றியை பாதித்த முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.

படத்தின் ஆறு பாடல்களையும் ஆடியோவில் கேட்கும் போது நன்றாகத்தான் இருந்தது. மூன்று பாடல்களை படமாக்கிய விதமும் குறைசொல்லும்விதமாக இல்லை. (படத்தில் மூன்று பாடல்கள்தான்) பிறகு ஏன் மக்களிடம் பிரபலமடையவில்லை என்று பார்க்கும்போது சேனல்கள் எதிலும் திரும்பத்திரும்ப ஒளி (ஒலி) பரப்பாகவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இப்போது படம் எடுப்பது கூட பெரிய விசயம் இல்லை. அதை மார்க்கெட்டிங் செய்வதும், தியேட்டர்களை பிடிப்பதும், அதற்கு முதல் இரண்டு வாரங்கள் கூட்டம் சேர்ப்பதும்தான் பெரிய வேலையாக சவாலாக இருக்கும் என்று பலரும் சொல்வது கந்தா படத்திலும் உண்மையாகிவிட்டது.

படம் நல்ல கருத்தைதான் சொன்னது என்றாலும் அதையும் தாண்டி முழு அளவில் மனது திருப்தி அடைந்தது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. படத்தில் ஒரு மெசேஜ் கூட சொல்லாமல் வெற்றிபெறும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு அமைந்துவிடுகிறது. பாபு எதுவும் மெசேஜ் சொல்லவில்லையோ என்று நினைத்துவிடவேண்டாம். ஆசிரியரும், பெற்றோரும்தான் சமூக விரோதிகள் உருவாக காரணம் என்ற அழுத்தமான மெசேஜ் படத்தில் இருக்கிறது. ஆசிரியரும், பெற்றோரும் தவறானவராக இருந்துதான் பிள்ளையை வீணடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கேட்காத கடனும், பார்க்காத பயிரும் பாழ் என்ற விதிக்கேற்ப பிள்ளையை கவனிக்காமல் விட்டால் கூட சிக்கல்தான் என்ற கருத்து மறைமுகமாக படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் கந்தா படத்தில் சொல்ல வந்த விசயம் மக்கள் மனதை தொடுவதற்கு தவறிவிட்டது. மேக்கிங்கில் குப்பை என்று சொல்லும்படி எல்லாம் எந்த தவறும் இல்லை. இந்த காரணத்தால்தான் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று அறுதியிட்டு கூறுவது கடினம்.

முதல்வன் படம் படு ரிச்சான ஒரு பேண்டசி கதைக்களம். அந்த படத்தை நான் பார்க்கும்போது, படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரிய சேசிங், அதிரடி சண்டை என்றெல்லாம் இருக்கலாம் என்று யூகித்தேன். ஆனால் யாரும் அவ்வளவு எளிதில் யூகிக்காத வகையில் நாலு சுவற்றுக்குள் ரகுவரனை வைத்து முதல்வரின் பாதுகாவலர்களையே சுட்டுக்கொல்லவைத்தது என்று ரொம்ப சிம்பிளான கிளைமாக்ஸ்தான் இருந்தது. ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்திவிட்டது. 

என் பார்வையில் அதற்கு காரணம், கிளைமாக்ஸ் வருவதற்கு சில காட்சிகள் முன்பாகவே இளைஞர்கள் கையில் ஆட்சி, ஊழல் பெருச்சாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் என்ற வகையில் காட்சிகள் அமைந்ததிலேயே ரசிகர்கள் திருப்தி அடைந்திருக்க வேண்டும். பெரிய விசயத்தையே சாதித்தாயிற்று. மூட்டைப்பூச்சியை நசுக்க ராணுவம் என்பதெல்லாம் தேவையில்லை. சின்ன விசயத்தை வைத்து ரகுவரனை காலிசெய்துவிடலாம் என்று காட்சி அமைந்ததால் ரசிகனும் திருப்தியாகி விட்டான் என்று சொல்லத் தோன்றுகிறது.

1994ன் இறுதியில் வெளிவந்த படம் புதிய மன்னர்கள். இப்போதும் பொதிகை, மெகா மற்றும் பல தொ(ல்)லைக்காட்சிகளிலும் இந்தப் படம் அவ்வப்போது ஒளிபரப்பாகிறது. படம் வந்தபோது மட்டுமல்ல இப்போதும் தொலைக்காட்சிகளில் படத்தைப் பார்த்த யாரும் படம் நல்லாயில்லை என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனாலும் படம் ஓடவில்லை. இப்படியும் சில படங்களுக்கு பரிதாப ரிசல்ட் கிடைக்கும்.

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற கருத்தை முன்வைத்து நாடோடிகள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தக் கதை யாருடை மனதிலும் சொந்தக்கற்பனையாக உருவான கதையோ, அல்லது தழுவல், உருவலோ என்று நான் வாதிடவில்லை. ஆனால் அந்தப் படத்தை நான் முதன்முதலில் பார்த்ததும் 2000 அல்லது 2001ஆக இருக்கலாம். கல்கி வார இதழ் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற தொலைந்தகாலம் என்ற சிறுகதைதான் என் நினைவுக்கு வந்தது.

ஜி.ஆர்.சுரேந்தர்நாத் எழுதி இரண்டாம்பரிசு ரூ.7,500 பரிசு பெற்றதுடன் அதை எழுதிய எழுத்தாளர் 35 வயதுக்குட்பட்டவர் என்பதற்காக கூடுதலாக 500 ரூபாயும் பரிசு பெற்ற கதை அது.

நண்பனின் காதலுக்கு உதவப்போய் நண்பன் காதலியின் அப்பாவையோ அண்ணனையோ தவறுதலாக கொலைசெய்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வருவான். ஆனால் நண்பனின் பணக்கார மனைவி வசதி வாய்ப்பில்லாத சூழ்நிலையில் வாழ விருப்பமின்றி அவனை விட்டு பிரிந்து சென்றிருப்பாள். வாரத்தில் இரண்டுநாட்கள் குழந்தையை பார்க்கலாம் என்ற அளவில் விவாகரத்து வழக்கு தீர்ப்பாகி இருக்கும்.

நண்பனின் அரைவேக்காட்டு காதலுக்காக தன் இளமைக்காலம், தன் சகோதரியின் நின்றுபோன திருமணம் என்று பல இழப்புகளை தந்துச் சென்ற தொலைந்த காலத்தை நினைத்து அந்த கதாபாத்திரம் வருந்துவதாக கதை முடியும்.

பொதுவாக சிறுகதைகள், நாவல்களை படமாக்குவதில் பல சிரமங்கள் உண்டு. கதாசிரியரை திருப்திபடுத்த நினைத்தால் ஆடியன்ஸ் எஸ்கேப்பாகிவிடுவார்கள். அதற்காக கதையின் மையக்கருவையே சிதைத்து சின்னாபின்னமாக்கி கதை அல்லது நாவலின் பெயரைக்கெடுக்கும் காரியங்களையும் பல இயக்குனர்கள் செய்ததுண்டு. ஆனால் நாடோடிகள் படத்துக்கு அமைக்கப்பட்ட திரைக்கதை ரசிகர்களைக் கட்டிப்போட்டதன் காரணமாக பெரிய வெற்றி பெற்றது.

கல்கியில் வெளிவந்த சிறுகதையை ஒருபாராவில் சொன்னாலும் முழுக்கதையும் புரிந்துவிடுகிறது. இந்த கதைக்கரு இரண்டரை மணி நேரப்படமாக வந்தபோதும் ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தது.
திகில், முழு நீளக்காமெடி படங்கள் சில நேரங்களில் விதிவிலக்காகிவிடும். ராஜேஷ் இயக்கிய மூன்று படங்களில் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் மட்டும் லேசாக கதை இருந்தது மாதிரி (அது எங்க சார் இருந்தது. நானே கதை இல்லைன்னு ஒத்துகிட்டேன் அப்படின்னு இயக்குனர் ராஜேஷ் சொல்லலாம்.) எனக்கு தெரிந்தது. காமெடி என்ற பெயரில் மொக்கை ஜோக் சிலவற்றை வைத்து படத்தை முடிக்காமல் காட்சி அமைப்புகளே சிரிப்பை வரவழைத்ததும், சந்தானத்தின் முகபாவனைகளும் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். அத்துடன் பாடல்களும் நயன்தாராவும் பக்கபலமாக இருந்தனர்.

முனி பார்ட் 1-ஐ விட காஞ்சனா (முனி பார்ட் 2)  அதிரடி வெற்றி. அதற்கு முக்கிய காரணம் திகில் சமாச்சாரத்துடன் காமெடியைக் கலந்ததுதான். இதையயல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு விசயம் மட்டும் ஓரளவு விளங்குகிறது. கருத்து சொல்லு, சொல்லாம போ... பாடல்கள் ஓரளவு கேட்கும்போதே தாளம் போடச்செய்வதாக இருக்க வேண்டும். சிரிப்புக்கு உத்திரவாதம் தரவேண்டும். அதனால் வயிற்று வலி என்று ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் ரசிகர்களில் பெரும்பாலனவர்கள் இருக்கிறார்கள்.

திருவாரூர் பாபுவும் காமெடிக்கு என்று குண்டு ஆர்த்தி, சத்யன், விவேக்கின் தனி காமெடி டிராக் என்று பயன்படுத்தி காட்சிகள் அமைத்திருந்தார். அத்துடன் பாடல்களும் நன்றாகத்தான் இருந்தன. ஆனாலும் வெற்றிக்கனியைப் பறிப்பதைத் தடுக்கும் வில்லனாக சரியான நேரத்தில் படம் ரிலீசாகாதது அமைந்துவிட்டது.

அவருடைய பேட்டி தினகரன் வெள்ளி மலரில் 5-4-2013 பிரசுரமாகியுள்ளது.
Page 1
Page 2

தில், கில்லி உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளரான கோபிநாத் தயாரித்து ஒளிப்பதிவு செய்யும் படமாக தேரடிவீதி திருக்கண்ணபுரம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இது திருவாரூர் பாபுவின் இரண்டாவது படம். இந்தப்படத்தில் அவருக்கு எல்லாவிசயமும் கூடி வந்து வெற்றி தேவதை அவரது படத்தை முத்தமிடவேண்டும் என்று என்னுடைய மானசீக குருவுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.














10 ஏப்ரல் 2013 ஆனந்த விகடன் இதழில் திருவாரூர் பாபு எழுதிய கதையின் சில பாராக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.


-----------------------------------------------------

யாருக்கும் சொல்ல வழி இல்லை. போலீஸ் எப்பவும் கண்காணிச்சுக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு உணர்வு. செல்போன்கூட வெச்சுக்கலை. உன்னைக் கண்காணிச்சுட்டு இருப்பாங்களோ... என்னால கஷ்டப்படுவியோனு நெனப்பு. அதான் உனக் குக்கூடச் சொல்லாம... எல்லாம் நாசமாப்போச்சுடா.
நான் காணாப் போனதும் உன்னையும் ரெண்டு நாள் ஸ்டேஷன்ல வெச்சு விசாரிச்சதா கேள்விப்பட்டேன்... அழுதேன். எனக்கு வேற வழி தெரியலடா. என்னை மன்னிச்சிரு... உன்னைப் பார்க்கணும்... உன்கூடப் பேசணும்னு துடிச்சிருக்கேன். ஆனா, பொண்டாட்டி குழந்தைகளோடு இருக்கற உனக்கு, என்னால சங்கடம் வந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன். அதனாலதான் இத்தனை வருஷமா உன்னைத் தவிர்த்தேன்!''

வேட்டியால் முகம் துடைத்துக்கொண்டான். 20 வருட சோகத்தை, ஆற்றாமையைத் தன்முன்னே இறக்கிவைக்கிறான் என்பது பரமேஸுக்குப் புரிந்தது . 

''ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா அகால மரணம் அடைந்தார். இந்த போட்டோவ பெரிசா வெச்சு நான் பிறந்த தேதி, இறந்த தேதி எல்லாம் போட்டு, போட்டோ பின்னால  எழுதியிருக்கேன். நாற்பத்துச் சொச்சம் வயசுல நான் செத்துப் போனதை இந்த ஊருக்குச் சொல்லணும்டா. பழைய போட்டோவைப் போட்டாதான் என்னை அடையாளம் தெரியும். ஆயிரம் போஸ்டர் அடிச்சு தெருத் தெருவா ஊர்ல உள்ள அத்தினி சுவத்துலயும் ஒட்டு. என்கிட்ட ஏமாந்தவன், நான் ஏமாத்தினவன் எல்லாம் போஸ்டரைப் பார்த்து 'தொலைஞ்சான்’னு ஒரு பெருமூச்சுவிடுவான். அதுதான் என் ஆத்மா சாந்தி அடையறதுக்கான மந்திர வார்த்தை. எனக்காக இதைச் செய்வியா? என்னோட கடைசி ஆசைடா...''