Search This Blog

சனி, 24 மார்ச், 2012

என்ன கொடுமை சரவணன் ?-6

எனக்கு மட்டும் ஏன் இப்படி? - இந்த கேள்வி உங்களில் பலருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உங்கள் மனதில் எழுந்திருக்கும்,

ஆயிரம் மர்பி விதிகள் இருக்கின்றன. இதில் 600வது தேறும். அந்த விதிகளை படித்தால் இதை எல்லாம் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க பழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான் எனக்கு தெரியுமே. புதுசா சொல்ல வந்துட்டியாக்கும் அப்படின்னு சண்டை போடப்பிடாது. இந்த விதிகள் எல்லாம் நெட்டுல இருந்து ஒரு புண்ணியவான் எனக்கு அனுப்பினது. உண்மையை சொல்லி நான் முதல்லேயே சரண்டர் ஆயிட்டேன்.


மர்பி விதிகள்

26. யார் தயங்குகிறார்களா அவர்கள கடைசி.
27. பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி அதை இழக்காமல் இருப்பதில் இருக்கிறது.
28. ஆலோசகர் என்பவர் உங்களிடமே தகவல்கள வாங்கி உங்களுக்கே திருப்பித் தருபவர் ஆவார்.
29.பணம் சாணத்தைப் போன்றது. அதை கலந்து தெளித்துவிட்டால் நல்ல மருந்தாகும். ஆனால் ஒரே இடத்தில் தேக்கி வைத்துவிட்டால் இடமே நாசமாகி விடும்.
30. ஒன்று சிகரத்தில் இருக்க வேண்டும். அல்லது அதல பாதாளத்தில் இருக்க வேண்டும். பாதியில் இருந்தால் கஷ்டம்தான் எப்போதும்.

-விதிகள் தொடரும்...

வெள்ளி, 23 மார்ச், 2012

திருவாரூர் பாபு இயக்கிய கந்தா படத்துக்கு திருவாரூர் சரவணனின் வாழ்த்துக்கள்!

நூற்றுக்கணக்கான சிறுகதைகள், பல குறு நாவல்கள் எழுதிய எழுத்தாளர் திருவாரூர் பாபு. இவரது தந்தை வைத்திருந்த தட்டச்சுப் பயிலகத்தில் அப்போதே கதைகளை தட்டச்சு செய்து தான் அனுப்புவாராம். இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளுக்கு தட்டச்சு செய்து அனுப்புவது எல்லாம் எல்லோராலும் முடியாத காரியம்.


தட்டச்சு செய்வதில் ஒரு சௌகர்யம். கையால் எழுதினால் 15 பக்கம் வரும் சிறுகதை தட்டச்சில் 3 பக்கத்தை தாண்டினால் அதிகம். அப்போது படிப்பவருக்கும் மலைப்பு தெரியாது. அந்த மூன்று பக்க சிறுகதையையும் அலுப்பு தட்டாமல் சொல்லும் உத்தி தெரிய வேண்டும்.

இதை எல்லாம் சரியாகச் செய்ததால்தான் திருவாரூர் பாபுவால் நூற்றுக்கணக்கில் சிறுகதைகளை எழுத முடிந்தது. தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்த இவர் பின்பு இயக்குனர் கே.வி.சரவணன் - அதாங்க அஜீத்தின் அமர்க்களம், அட்டகாசம் ஆகிய படங்களை இயக்கிய சரணிடம் ஜே.ஜே.,வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் திருவாரூர் பாபு.

இன்று அவர் இயக்கிய "கந்தா" திரைப்படம் ரிலீசாகிறது. ஒரே ஊர்க்காரர் என்ற பாசத்தினால் மட்டும் இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கவில்லை. அவரது சிறுகதைகளிலேயே நிறைய சமூக அக்கறை காணப்படும். படத்தின் கருவும் ஒரு நல்ல ஆசிரியரும், மாணவனும் சம்மந்தப்பட்ட கதை என்று கூறி இருக்கிறார். அந்த நம்பிக்கையுடன் படத்துக்காக காத்திருக்கிறேன்.

என்ன கொடுமை சரவணன் ?-5

மர்பி விதிகள்

21.மேலாளரைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது என்று  எதுவுமே கிடையாது அவர் செய்து பார்க்கும் வரை.
22. நீங்கள் உங்கள் வாகனத்தை கழுவி முடித்ததும் மழை வந்து இன்னும் நன்றாக கழுவி விடும்.
23. மக்களை ஒரு விஷயத்தை நம்ப வைக்க வேண்டும் என்றால் அதை கிசுகிசுப்பாக சொன்னால் போதும்.
24.பொதுமக்கள் யாரென்றால் செய்தித்தாள்களில் பெயர் இடம்பெறாதவர்களே ஆவார்கள்.
25.நீங்கள் ஒரு வேலையை சரியாக செய்து கொண்டிருந்தால் அது யார் கண்ணிலும் படாது.
விதிகள் தொடரும்...

வியாழன், 22 மார்ச், 2012

எழுத்தாளர் திருவாரூர் பாபு இயக்கிய படம் நாளை ரிலீஸ்

ஜே.ஜே., வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களில் இயக்குனர் சரண் உதவி இயக்குனராக பணியாற்றியவர் திருவாரூர் பாபு.

திருவாரூர் பாபுவின் இயற்பெயர் பாபு காமராஜ்.  இவர் பாபு K.விசுவநாத் என்ற பெயரில் கரண் நடித்த கந்தா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நாயகி மித்ரா. இந்த படத்திற்குப் பிறகு இவர் விஜய் படமான காவலனில் இரண்டாவது நாயகியாக நடித்தவர்.

பள்ளியிலும், கல்லூரியிலும் எனக்கு படிப்பில் உதவியவர்கள் மூன்று ஆசிரியர்களே. இன்னும் எத்தனையோ சிறப்பான ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறேன்.

ஆனால் சமீப காலமாக பெற்றோர், ஆசிரியர், மாணவர் என்று அனைவருமே ஒரு ஒழுங்கற்ற தன்மையை நோக்கி போய்க்கொண்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. (இங்கு நான் அனைவரையும் குறிப்பிடவில்லை.)

இந்த சூழ்நிலையில் ஆசிரியர், மாணவன் உறவை மையமாக வைத்து திருவாரூர் பாபு "கந்தா" படத்தை இயக்கியிருக்கிறார். காமெடிக்கு விவேக் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள். தஞ்சாவூர் பகுதிகளில் பெருமளவு படப்பிடிப்பு நடந்திருக்கிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. மணிரத்னம் தயாரித்து அழகம்பெருமாள் இயக்கிய "டும்...டும்...டும்..." படத்தில் தேசிங்கு ராஜா என்ற பாடல் மாதவன்-ஜோதிகா டூயட் தஞ்சை பெரியகோவில், அரண்மனை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டிருந்தது பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.

இந்தப்படம் நாளை (மார்ச் 23) ரிலீஸ். இப்படத்தின் இயக்குனரை நான் நேரில் பார்த்தது இல்லை என்றாலும் அவரது தந்தை, அண்ணன், தம்பி ஆகியோருடன் எனக்கு ஓரளவு பழக்கம் உண்டு. நானும் அவ்வப்போது சிறுகதை எழுதி வருகிறேன். இந்த ஆர்வம் எனக்குள் சற்று ஆழமாக வேரூன்றியதற்கு திருவாரூர் பாபுவும் ஒரு காரணம்.

1994ஆம் ஆண்டு வாக்கில் ராணி வார இதழில் ஒரு பக்க கதை ஒன்றை படித்தேன். அந்த கதையும் கதையும் தலைப்பும் நினைவில் இல்லை. ஆனால் அதை எழுதிய திருவாரூர் பாபு என்ற பெயர் மட்டும் என் மனதில் நிலைத்து விட்டது. அப்போதே, திருவாரூர் சரவணன் என்ற பெயருடன் கதைகள் பிரசுரமானால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன். அந்த கனவு நனவாகி விட்டது. ஒரு வகையில் நான் எழுத்துப்பணியில் மானசீக குருவாக நினைக்கும் திருவாரூர் பாபுவின் கந்தா திரைப்படம் திருவாரூரில் நடேஷ் தியேட்டரில் ரிலீசாகிறது. அதன் எதிரில் தான் நான் Graphics Design Centre வைத்திருக்கிறேன். இந்த இடுகையில் இணைத்திருக்கும் தியேட்டரின் முகப்பு தோற்றம் என் அலுவலகத்தில் இருந்து எடுத்ததுதான்.

இந்த தியேட்டரை இயக்குனர் ஷங்கர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். (எந்திரன் படம் அந்த தியேட்டரிலும் ரிலீசானது) இப்போதும் அவர்தான் நடத்தி வருகிறாரா என்று தெரியாது. எது எப்படியோ, படம் அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.

அனைத்து தரப்பினர் என்று நான் சொல்வது ரசிகர்களையும்தான். காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்களும் ஓரளவாவது மன நிறைவு அடையும் வகையில் இருந்தால் படம் வெற்றிதான்.

புதன், 14 மார்ச், 2012

கரகாட்டக்காரன் காமெடியும் - மின்சார வாரியமும்

ரெண்டு பழம் வாங்குனியா? கடைக்காரன் கொடுத்தானா?

ஒண்ணு இங்க இருக்கு. இன்னொன்னு எங்க? -- சினிமாவுலயாச்சும் இப்படி செந்திலிடம் கேட்டு கவுண்டமணியால் அடிக்க முடிஞ்சது.
  
நம்மால் அதுவும் செய்ய முடியாது.

நீ யாரை அடிக்கப் போறன்னுதானே கேட்குறீங்க?

தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் (ஞாயிறுடன் சேர்த்தால் இரண்டு இரண்டு நாள்) மின்சார விடுமுறை விட்டால் வீடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் மின்வெட்டு அளிக்கலாம் அப்படின்னு சொன்னாங்க.

நாங்களும் நம்பிட்டோம்.
தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை, சென்னைக்கு கூடுதலா ஒரு மணி நேர மின்வெட்டு இதெல்லாம் விட்டபிறகு நிலைமை ரொம்ப கேவலமா போயிட்டுதே. ஏன் அப்படின்னு கேட்டா இப்படி சிறு தொழில் நிறுவனங்கள் கிட்டயும் வீடுகள் கிட்டயும் ஏமாத்தி புடுங்குன மின்சாரத்தை நட்சத்திர ஹோட்டல்கள், மெகா மால், தியேட்டர்கள் இவங்களுக்கு எல்லாம் மின்சார விடுமுறை அளிக்காம கொடுத்துகிட்டு இருக்காங்களாம்.

அது சரி. ஐயாயிரம் ரூபாய்க்கு டீசல் போட்டு ஜெனரேட்டரை ஓட்டுறதுக்கு பதிலா ஐநூறு ரூபாயை அதிகாரிகளுக்கு கொடு. பிரச்சனை சால்வுடு.-இப்படிப்பட்ட நிர்வாகம் இருக்குற நாட்டுலதான நாம இருக்கோம்.

இப்படி வள வளன்னு எழுதாம ஏழை மேலும் பிச்சைக்காரனாகிறான். கோடீஸ்வரன் மேலும் கொள்ளையடிக்கிறான் அப்படின்னு எழுதுனா போதும். ஆனா என்ன பண்றது. சில நேரங்கள்ல எல்லாத்தையும் விளக்கமா சொல்லித்தான் ஆகணும்.

பாத்திரம் ஓட்டையா இருந்தா உலகத்துல இருக்குற எல்லாரும் சேர்ந்து ............................. அடிச்சா கூட பாத்திரம் நிரம்பாதுன்னு நம்ம நாட்டு அரசியல் வியாதிகளுக்கு யார் புரிய வெக்கிறது.

இவ்வளவு பேசுறியே? தனி மனிதனா மின்சார சிக்கனத்துக்கு என்ன செய்யுறன்னு நீங்க கேட்கலாம். கடந்த மூணு வருஷத்துக்கு முன்னாலயே எங்க வீட்டுல சிஎஃப்எல் பல்ப்புக்கு மாறியாச்சு. வெளியில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை கூடுதல் ஒளி தர்ற சிஎஃப் எல் பல்ப்பும், 9 முதல் காலை 5.30 மணி வரை 5 வாட் சிஎஃப் எல் பல்ப்பும் போட்டிருக்கோம்.

என் எல்லைக்கு உட்பட்ட விஷயம் இவ்வளவுதான்.

ஆனா பெரிய தனியார் நிறுவனங்களும், உள்ளாட்சி அமைப்புகள்ல இருக்குறவங்களும் மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்கிறத விரல் விட்டு எண்ணிடலாம்.

இப்போ காலை 6 மணியிலேர்ந்து 9 மணி வரை கரண்ட் இல்லாததால தெரு விளக்கை ஒழுங்கா நிறுத்துறது இல்லை.

காலை 9.30 அல்லது 10 மணிக்கு மேலதான் நிறுத்துறாங்க. இந்த அரை மணி நேரத்துல எவ்வளவு மின்சாரம் விரயம்?

அவ்வளவு ஏன்?

திருவாரூர் பெரிய கோவிலுக்கு தினமும் காலையில போறது என் வழக்கம். அங்கேயும் அடிக்கடி இந்த கதிதான். என் உயரத்துக்கு எட்டுற அளவுல சுவிட்ச் இருக்குறது ரௌத்ர துர்க்கை சன்னதியிலயும், மகாலஷ்மி சன்னதியிலயும்தான். நான் சுற்றி வரும்போது அந்த இடத்துல மட்டும் சுவிட்சை நிறுத்திடுவேன். மற்ற லைட்டுகளுக்கு எங்கே சுவிட்ச் இருக்குன்னு கோவில் எலக்ட்ரீஷியனுக்கு மட்டும்தான் தெரியும்னு நினைக்கிறேன்.

இந்த மாதிரி அலட்சியமா மின்சாரத்தை வீணாக்குறவங்களை சாமானியன் என்ன செய்ய முடியும்?

கண்ட, கண்ட ............................ எல்லாம் இலவசமா கொடுக்குறவங்க சி எப் எல் பல்ப்புகளை அதிக எண்ணிக்கையில தயாரிச்சு நியாயமான லாபத்துல விற்பனை செய்துட்டு குண்டு பல்ப் இருந்தா அந்த வீட்டுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்னு சொன்னாலே போதும். 500 மெகா வாட் மிச்சமாகும்.

வெளி மாநிலத்துல வாங்கின மின்சாரத்தை கொண்டு வர வழியில்லைன்னு ஒரு பக்கம் செய்தி வெளிவருது.

அது சரி, 50 ரூபா மதிப்புள்ள ஸ்டாம்ப் பேடு வாங்க டெல்லியில இருக்குற தலைமையிடத்துக்கு எழுதி 1000 ரூபா செலவழிச்சு கொண்டுவர்ற அளவுக்கு நிர்வாகத்துல சட்டச் சிக்கலை வெள்ளைக்காரன் உருவாக்கி வெச்சிட்டு போயிட்டான்.

அந்த காலத்துல இது மாதிரி சில பொருட்கள் எல்லா ஊர்லயும் கிடைக்காது. அதனால அப்படி நடைமுறை இருந்துருக்கலாம். இன்னும் அதையே புடிச்சுகிட்டு தொங்குறோம்.

குஜராத்துல இருந்து தமிழ் நாட்டுக்கு 1000 வாட் மின்சாரம் போகணுமா? ரைட். நெய்வேலியில இருந்து ஆந்திராவுக்கு போற ஆயிரம் வாட் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கே கொடுத்துடுங்க.

குஜராத்ல இருந்து இங்க விலைக்கு கொடுக்க வேண்டிய ஆந்திராவுக்கோ கர்நாடகாவுக்கோ பண்ட மாற்று முறையில கொடுக்க முடியாதா என்ன?

செய்ய முடியும். ஆனா நாங்க செய்ய மாட்டோமே. அப்படி செய்தா Line Loss அப்படின்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு மின்சாரத்தை திருட முடியாதே.

பகலிலாவது 12 மணி நேரத்துல 6 மணி நேரம் மின்சாரம் இருக்கு. ஆனா ராத்திரியில ஒண்ணரை மணி நேரத்துக்கு ஒரு முறை முக்கால் மணி நேரம்னு போட்டு சாகடிக்கிறாங்களே. இது ஏன்னு நான் சர்வே எடுத்தேன்.

ஆளுங்கட்சி காரர்: ராத்திரியில தொடர்ந்து 3 மணி நேரம் கட் பண்ணினா ஜனங்க பொங்கிடுவாங்க.

(கிழிச்சாங்க. அப்படி பொங்கியிருந்தா முதல் நாள் பன்னண்டு மணி நேரம் கட் பண்ணினப்பவே, எவனைக் கேட்டு வெளி நாட்டு கம்பெனிக்கு 24 மணி நேரமும் மின்சாரம் தர்றேன்னு ஒத்துகிட்டீங்க அப்படின்னு கேட்டுருக்க மாட்டாங்களா?

எதிர்க்கட்சிகளில் ஒருவர் : மூணு மணி நேரம் தொடர்ந்து கட் பண்ணினா சொரணை இல்லாத தமிழன் அதுக்கும் பழகிடுவான். அப்பப்ப திங்கிற சோத்தைப் புடுங்குற மாதிரி கட் பண்ணினாத்தான் கூடங்குளம் வேணும்னு போராடுவான்.

(இதுல லாஜிக் இருக்கே)

எதிர்க்கட்சிகளில் இரண்டாமவர் : ஒரு காலத்துல குலக்கல்வி முறை கொண்டு வந்தாங்க. ஆனா அது ஃபெயிலியர். இப்போ தேர்வு தொடங்க 2 மாசம் இருக்கும்போதுல இருந்து இஷ்டத்துக்கு கட்பண்ணி படிக்க விடாம கவனத்தை சிதற வெச்சாச்சுன்னா, காசு இருக்குறவன் தவிர மற்ற யாரும் பெரிய படிப்பெல்லாம் படிக்க முடியாது.

(இதுவும் உண்மையோன்னு தோணுது. ஏன்னா ஒரு காலத்துல தெரு விளக்கு வெளிச்சத்துல இருந்தே படிச்சு முன்னேறினவங்க உண்டு. ஆனா இப்போ முடியாது. காரணம், அப்போ இந்த அளவுக்கு தான் வீட்டுக்கே காற்று நுழையாத அளவுக்கு வீடு கட்டுற பழக்கம் இல்லை. இவ்வளவு சாக்கடை இல்லை. கொசுவும் இவ்வளவு அதிகமாக இல்லை.)

கூடங்குளம் வேண்டாம்னு ஏழெட்டு மாசத்துக்கு முன்னால பிரச்சனை வெடிச்சப்பவே நான் ஒருத்தர்கிட்ட "இப்ப பாருங்க சார்...வெறும் நூறு இரு நூறு மெகா வாட்டுக்காக கூடங்குளத்தை திறக்கணும்னு சொன்னா எல்லாரும் உதைக்க வருவாங்கன்னு அவங்களுக்கும் தெரியும். அதனால, ஒரு நாளைக்கு 12 முதல் 15 மணி நேரம் கரண்ட்-டை கட் பண்ண ஆரம்பிப்பாங்க. மக்களே போராடி கூடங்குளம் வேணும்னு சொன்னதும் நெய்வேலி, தூத்துகுடி, மேட்டூர்னு இருட்டடிப்பு செய்திருக்குற மெஷினை எல்லாம் ஓட விட்டுட்டு, கூடங்குளத்தாலதான் தமிழ் நாடே ஒளிருதுன்னு சொல்லப்போறாங்கன்னு பேசினேன்.

நல்ல விஷயம் எதுவும் நான் நினைக்குற படி நடக்க மாட்டெங்குது. ஆனா உருப்புடாத விஷயம் எப்படி சார் அப்படியே நடக்குதுன்னு எனக்கு இப்பவும் ஒரு குழப்பம் இருக்கு.

காற்றாலை மின்சாரத்தை வாங்குறதுல பிரச்சனை இல்லை. ஆனா அதன் விலை மிக அதிகம்னு சொல்றாங்க. அப்படி அதிக விலைக்கு வாங்கி வீட்டுக்கு மட்டும் மாச மாசம் ரேஷன் அளவு மாதிரி கொடுத்துட்டு கூடுதல் பயன்பாட்டுக்கு லாபம் வெச்சே கொடுக்க வேண்டியதுதானே.

ஆடம்பர விளக்குகளுக்கு, வியாபார நிறுவனங்களுக்கு குறிப்பா சொல்லப்போனா கல்யாண மண்டபத்துக்கு கூட ஒரு கல்யாணத்துக்கு அரசு மின்சாரம் இவ்வளவுதான்னு ஸ்லோப் வெச்சுடலாம். இதை ஏன் சொல்றேன்னா, காசு கொடுக்குறோம். அதை ஏன் சிக்கனமா செலவழிக்கணும்னு ஒரு எண்ணம் நிறைய மக்களுக்கு இருக்கு. 15 ரூபா பொருளை 1 ரூபாய்க்கு கொடுக்குறதாலதானே இப்படி. 15 ரூபா பொருளுக்கு 17 ரூபா விலை இருந்தா அப்படி செய்ய தோணுமா?

அரசு விரைவுப்பேருந்து முன்பதிவு பயணப்படிவம் இலவசமா கொடுத்தப்போ நிறைய வீணாக்குவாங்க. ஒரு படிவம் 1 ரூபா அப்படின்னு விலை வெச்சதும் இஷ்டத்துக்கு எழுதி கிழிச்சு போடுறது அனேகமா இல்லைனே சொல்லலாம்.

சரி...இந்த மின்வெட்டால நீயும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கன்னு தெரியுது... போய் தூங்கு தம்பின்னு யாரோ சொல்றாங்க.

அது உண்மைதாங்க. நானும் ரொம்ப பாதிக்கப்பட்டது உண்மைதான். இதை இன்னும் வெளிப்படையா கேட்டா, என்னையும் ஹீரோவாக்கிடுவாங்களோன்னு பயமா இருக்கு.

டென்சன் ஆகாதீங்க சார். நான் ஹீரோன்னு சொன்னது, சூப்பர் ஸ்டார் மாதிரி இல்லை.(கொஞ்சம் ஓவர்தான்) மௌனகுரு ஹீரோ சார். எப்படின்னா, ஒருத்தனை சாகடிக்கவும் கூடாது. அவன் பேசுறது யார்கிட்டயும் எடுபடவும் கூடாது அப்படின்னு, பைத்தியம்னு முத்திரை குத்தினாலும் குத்திடுவாங்க. என்ன பண்றது...நாம ஜன நாயக நாட்டுல வாழ்றோம்.

என்ன கொடுமை சரவணா இது.