Search This Blog

விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

ஏன் கலவரம்? - இலக்கியச்சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு

வரும் திங்கள்கிழமை 14.04.2014 திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு இலக்கியச்சிந்தனை அமைப்பின் 44வது ஆண்டு நிறைவு விழா சென்னை-4, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமுதசுரபி மாத இதழில் வசுமதி ராமசாமி நினைவு முத்திரை சிறுகதையாக நான் எழுதிய தேன்மொழியாள் சிறுகதையை திரு.பாலுமணிவண்ணன் தேர்வு செய்திருந்தார். அருவி என்ற தலைப்பில் அந்த ஆண்டு சிறுகதைத்தொகுப்பு வெளிவந்தது.

அந்த ஆண்டு முதல் எனக்கு இலக்கியச்சிந்தனையிலிருந்து தொடர்ந்து அழைப்பிதழ் வந்துவிடும். பல்வேறு காரணங்களால் என்னால் ஒரு முறை கூட அந்த விழாவிற்கு செல்ல முடிந்ததில்லை. இந்த ஆண்டும் அப்படித்தான் ஆகும் என்று தோன்றுகிறது.

சென்னையில் வசிக்கும், வாய்ப்பு இருக்கக்கூடிய நபர்கள் சென்று வாருங்கள்.

வெகுஜன வார இதழ்களில் வாரம் மூன்று முதல் ஐந்து சிறுகதைகள் ஒரு தொடர்கதை கூட பிரசுரமான காலம் உண்டு. மாதம் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து அதிலிருந்து ஆண்டின் சிறந்த கதை என்று ஒன்றை தேர்வு செய்த காலம் போய் ஒரு ஆண்டில் வெளிவந்த கதைகளில் 12ஐ தேர்வு செய்யும் கதைப்பஞ்ச காலத்தில் இருப்பதாக இலக்கியச்சிந்தனை நிர்வாகிகள் வருத்தப்பட்டதாக எங்கேயோ படித்ததாக நினைவு.

இது உண்மைதான். தொடர்கதைகளின் இடத்தை தொ(ல்)லைக்காட்சிகளின் நெடுந்தொடர்கள் பிடித்துக்கொண்டன என்று கூறலாம். நல்ல எண்ணத்தை விதைத்த வகையில் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். புத்தகம் படிக்க செலவழித்த நேரத்தை களவாடி சகிப்புத்தன்மையை அழித்து பிஞ்சு முதல் பெரியவர்கள் வரை அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காரியம்தான் 99.9 சதவீதம் நடந்து வருகிறது.

கற்றலின் கேட்டல் நன்று என்று கூறியிருப்பது தொ(ல்)லைக்காட்சிகளின் நெடுந்தொடர்களுக்கு பொருந்தாது என்பது என் மனதில் தோன்றிய கருத்து. நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் வரை (2003) வரை எங்கள் வீட்டில் தொ(ல்)லைக்காட்சி கிடையாது. சிறு வயதில் இருந்து பாடப்புத்தகத்தை காட்டிலும் கதைப்புத்தகங்கள் படித்ததுதான் அதிகம். ஆனாலும் நூலகம் அறிமுகமானது 1999 டிசம்பரில்தான். அப்போது முதல் 2003ல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரை நான் வாசித்த புத்தகங்கள் ஏராளம். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் 5 பாகத்தையும் ஒரு வார காலத்துக்குள் வாசித்து முடித்தேன். அது சுகானுபவம்.

அந்த 4 ஆண்டுகளை ஒப்பிட்டால் அதன் பிறகு இந்த 11 ஆண்டில் நான் வாசித்தவை குறைவுதான். அதற்கு காரணம் வேலைப்பளு என்பதைக் காட்டிலும் 200 சதுரடி கொண்ட ஒற்றை அறையை மட்டுமே கொண்டது எங்கள் வீடு என்பதால் புத்தகம் படிக்க இடம் என்பது கிடைக்காமல் போய்விட்டது.

இதெல்லாம் சும்மா... மனசு வைத்தால் மலையைப் புரட்டி விடலாம் என்று கூறும் நண்பர்களுக்கு சில விஷயங்களைக்கூற விரும்புகிறேன். மன உறுதி பற்றி பேசுபவர்கள் எல்லாம் கையில் ஒரு புத்தகத்துடன் தொ(ல்)லைக்காட்சியில் நிகழ்ச்சியின் ஒளி, ஒலியை வைத்துக்கொண்டு அமர்ந்து படியுங்கள். அப்போது தெரிந்து விடும் உங்கள் மன உறுதி. (இதைத் தாண்டிய சத்தத்திலும் மனதை ஒருமுகப்படுத்துவது சிலருக்கு சாத்தியமாகலாம். பெரும்பாலானோருக்கு அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களில் நானும் இருக்கிறேன்.

வீட்டை விட்டு வெளியில் வந்து அமர்ந்து படிக்க வேண்டியதுதானே என்று கேட்பீர்கள். கொசுக்களுக்கு பதில் சொல்ல என் உடலில் வலு இல்லை.

பவர் கட், வேறு ஏரியாவில் பவர் கட்டாகி எங்கள் வீட்டில் கேபிள் டி.வி தெரியாத நிலை என்றால் நிம்மதியாக படிப்பேன். (அந்த நேரத்தில் அம்மா, தாத்தாவுக்கு எதையாவது படித்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து எரிச்சல் வருவது வேறு விஷயம்.)

படிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித சங்கடங்கள் இருந்தாலும் ஜோதிடம், ஆன்மீகம், பணம் சம்பாதிப்பது எப்படி? ஒரே வாரத்தில் சுவிஸ் பாங்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும் அளவுக்கு கொள்ளையடிப்பது ... சாரி... சம்பாதிப்பது எப்படி என்பது போன்ற புத்தகங்கள்தான் அதிக அளவில் விற்பனையாவதாக சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வாசிப்பு அனுபவம் இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் காலத்திலும், இதழ்களில் சிறுகதைகள் பிரசுரமாவது அபூர்வமாகிவிட்ட நேரத்திலும் 44 ஆண்டுகளாக இலக்கியச்சிந்தனையின் பணி தொடர்ந்து கொண்டு இருப்பது பாராட்டத்தக்கது.

இந்த பணி தொடர பல்வேறு நபர்களும் பல விதத்தில் உதவி வருகிறார்கள். அவர்களுக்கு வாசகர் சார்பில் நன்றி.

கல்கி வார இதழில் சிறுகதைப்போட்டி அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்து தினமணி கதிர் - நெய்வேலி புத்தகக்கண்காட்சி சிறுகதைப்போட்டி, தினமலர் வாரமலர் போட்டி என்று வரும் மூன்று நான்கு மாதங்களும் சிறுகதைகளுக்கான போட்டிகள் நடைபெறும். கடைசியாக நான் 2010 ஆண்டு கலந்து கொண்டு ஒரு போட்டியில் 5ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு வாங்கியதுடன் சரி. சொந்த தொழில் செய்ய தொடங்கியதில் இருந்து உருப்படியாக எதையும் எழுதவில்லை. இந்த ஆண்டாவது சோம்பேறித்தனத்தை விட்டு எதையாவது எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.

இலக்கியச்சிந்தனை சார்பில் 2013ம் ஆண்டின் சிறந்த சிறுகதையென கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுத்த பி.சுந்தரராஜன் எழுதிய தினமணி கதிர் 04-08-2013 இதழில் வெளியான ‘ஏன் கலவரம்?’ என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கதை பிரசுரமானபோதே படித்திருப்பேன். தினமணி இணையதளத்தில் இப்போது காணக்கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

புதன், 13 மார்ச், 2013

அணு குண்டுல இருந்து கர்ணன் கவச குண்டலம் காப்பாத்துமா?

18.03.2013 தேதியிட்ட குங்குமம் வார இதழ்ல கே.என்.சிவராமனின் கர்ணனின் கவசம் தொடர்கதையின் முதல் அத்தியாயத்தை படிச்சதும் என்னை மாதிரி சாதாரணர்களுக்கு இந்த சந்தேகம்தான் வரும். அதாவது அணுகுண்டோட பாதிப்புல இருந்து கர்ணனின் கவச குண்டலம் காப்பாத்துமா என்ற கேள்விதான் இது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா செளந்தர்ராஜன் ஒரு நாளிதழின் ஞாயிறு இணைப்பு வாரஇதழ்ல தினம் ஒரு உயிர், சிவம் அப்படின்னு ரெண்டு தொடர்கதை எழுதினாரு. அதை விடாம படிச்சிடுவேன். ஒவ்வொண்ணும் ஒரு வருடம் (சுமார் 50 வாரங்கள்) வெளிவந்தது. நான் இதுமாதிரியான அமானுஷ்ய மர்மத்தொடர்களின் ரசிகன். இப்பவும் இந்த கதைகளை நூலகத்துல இருந்து இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால எல்லாவிதமான தொடர்கதைகளுக்கும் தனி வாசகர் வட்டம் இருந்தது. சென்னை தொலைக்காட்சி வந்ததும் பத்திரிகைகளில் கதை படிக்கிறவங்க எண்ணிக்கையில கேன்சர் மாதிரியான ஒரு பாதிப்பு ஏற்படத்தொடங்கி செயற்கைக்கோள் தொ(ல்)லைக்காட்சிகள் வந்ததும் கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜுக்கே போயிடுச்சு.

புத்தகம் படிக்கிறதுக்கு நாம செலவழிக்கிற நேரத்தைப்போல குறைந்தது 4 மணி நேரத்தை நமக்கு தெரியாம தொல்லைக்காட்சிகள் எடுத்துக்குது. அதை யாரும் உணர்றது இல்லை. அதை இப்போ பேசி என்ன ஆகப்போகுது.

சாதாரணமான திகில் கதைகளை விட அமானுஷ்யங்கள் கலந்த மர்மக்கதைகள் எப்போதுமே வாசகர்களின் ஆதரவைப் பெறக்கூடிய சூழ்நிலை இன்னும் தொடருதுன்னு நினைக்குறேன். அவர்கள் அதற்கு தேர்ந்தெடுக்கும் கதைக்களனும் கருவும் அழுத்தமானதா இருக்கணும். பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இதுமாதிரியான அமானுஷ்ய கதைகளுக்கு கோவில் சிலைகள், அதன் புராணபழமை காரணமாக பலகோடி மதிப்பு, நவபாஷான சிலை மாதிரி சக்தி அது இதுன்னு பல கதைக்கருவை கையாண்டாங்க.

அதெல்லாம் ரொம்ப பழைய பஞ்சாங்கம். அந்த மாதிரி பழைய புராணத்துல உள்ள விசயத்தை கையில் எடுத்துகிட்டு இப்போ உலகையே மிரட்டிகிட்டு இருக்குற அணுஉலை, அணுகுண்டு பிரச்சனையிலிருந்து தப்பிப்பது எப்படின்னு ஒரு டிராக்கை பிடிச்சு இந்த கதையை தொடங்கியிருக்காங்க.

எனக்கு தெரிந்த டாக்டர் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அணுகுண்டு கதிர்வீச்சால கரப்பான்பூச்சி சாகாது. அதன் இறக்கையில சுரக்குற ஒரு திரவம் அணுக்கதிர்வீச்சை தடுக்கும் அதை நசுக்கிதான் கொல்லணும்னு சொன்னார். இது உண்மையா, பொய்யான்னு எனக்கு தெரியலை. நான் இந்த கருவை மையமா வெச்சு ஒருத்தர் சயின்ஸ் பிக்சன் கதை எழுதுனா எப்படி இருக்கும்னு நினைச்சேன்.

அதையெல்லாம் தாண்டி கர்ணனின் கவசகுண்டலம் சூரிய வெப்பம் மட்டுமில்ல, அணு வெப்பத்தை கூட எதிர்க்கும்னு ஒரு வரியை யோசிச்சு அந்த கவச குண்டலங்களை தேடி வர்றவங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை குறிவெச்சு கிளம்புறாங்கன்னு முதல் அத்தியாயத்திலேயே பீதியை கிளப்பியிருக்கார் கே.என்.சிவராமன்.

குங்குமம் சன்குழும பத்திரிகைன்னு எல்லாருக்கும் தெரியும். கர்ணனின் கவசகுண்டலம் தலைப்புலேயே மூணு சூரியன் படம் (தலைப்புள்ளியா). கதையோ அணு வெப்பத்தை தாங்கக்கூடிய கனிமம் குறித்து பேசப்போற மாதிரி தெரியுது. (அது வெப்பத்தை மட்டும் தடுக்குமா, அணுக்கதிர்வீச்சையே தடுக்குமான்னு யாருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறது?) எது எப்படியோ, 25 வாரத்துக்காவது இந்த தொடர் வெளிவந்தா ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல அமானுஷ்ய தொடர்கதை படிச்ச ஃபீலிங் கிடைக்கும்.

பார்ப்போம்...ஏன்னா, கலைஞர் டிவியில ராஜேஷ்குமார் நாவல் ஒண்ணு உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சனிக்கிழமை தொடரா வெளிவந்துச்சு. மால்குடி சுபா அழுத்தமான குரல்ல சொல்லவா சொல்லவா உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சூப்பரா பாடின டைட்டில் பாடல் கூட அனைவரையும் கவரும்படியா இருந்துச்சு. ஆனா 10 வாரம் கூட வெளிவரலைன்னு நினைக்குறேன். (பத்திரிகையில இந்த மாதிரி ஸ்பான்சர் பிரச்சனை இருக்காது)

செவ்வாய், 1 ஜனவரி, 2013

தாய் மண்ணே வணக்கம்!

2013ல் என்ன செய்ய வேண்டும்

இந்திய சுதந்திர தின பொன்விழாவின்போது தாய் மண்ணே வணக்கம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாடி மேலும் புகழ்பெற்றது பெரும்பாலானவர்களுக்கு நினைவிருக்கும்.

7.1.2013 தேதியிட்ட குங்குமம் புத்தகத்தில் எழுத்தாளர்/திரைப்பட இயக்குனர் திருவாரூர் பாபு எழுதிய தாய்மண் சிறுகதை பிரசுரமாகியிருக்கிறது.

கதைச்சுருக்கம்:
பெரிய கோடீஸ்வரர் தன் மகளுக்கு குழந்தை இல்லை என்று ஏகப்பட்ட தான தர்மம், கோவில் புனரமைப்பு என்று கொடைவள்ளலாகிக்கொண்டு இருக்கிறார். அவ்வளவும் தாய்மண்ணை ஆட்டையைப் போட்டு (மணல் குவாரி நடத்துகிறேன் என்ற பெயரில் ஆற்றில் மண் எடுத்து நிலமகளின் வயிற்றை சூறையாடி) கொள்ளை அடித்து சேர்த்த பணம்.

குழந்தை இல்லாத மகள் கேட்கிறாள்...தாய் (ஆற்றின்) வயிற்றை சுரண்டுவதை நிறுத்துங்கப்பா. எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கும். (இதற்கு வேறு அர்த்தம் கொடுத்து குதர்க்கமாக பேசுபவர்கள் விலகிக்கொள்ளவும்) நிலமகளின் சாபம்தான் எனக்கு பிள்ளை இல்லாமல் போய்விட்டதோ என்னவோ என்று சொல்கிறாள்.

மெத்தப்படித்த அறிவுஜீவிகள், ஆற்றில் மணல் அள்ளக்கூடாது என்றால் அப்புறம் எப்படி வீடு கட்டுவதாம் என்று கேட்பார்கள்.

1. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் பயன்பாட்டை அதிகரித்தல் (நிலத்தடியில் இருக்கும் கச்சா எண்ணை தீர்ந்து போனால் அவ்வளவுதான். ஆனால் எத்தனாலை கரும்பு சாகுபடி மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் பெருக்கிக்கொள்ளலாம்.)

2. ஆற்றுமணலுக்கு பதில் செயற்கை மணலை உபயோகித்தல். (ப்ளைஆஷ் கற்கள் உபயோகம் இதுபோன்று மாத்தி யோசிப்பதில் மணல் பயன்பாட்டை கணிசமாக குறைக்கலாம்.) மேலும் அனல்மின்நிலையங்களில் உண்டாகும் சாம்பலை இஷ்டத்துக்கு விற்றால் சிமெண்டில் கலந்து வில்லங்கம் செய்துவிடுவார்கள் என்று பயந்தால் அந்த சாம்பலை வைத்து உரிய முறையில் கற்கள் தயாரித்து விற்பனை செய்தால் என்ன குடிமுழுகிப்போய்விடும்?

3. சூரிய ஒளி, காற்றாலை ஆகிய இயற்கை வளங்கள் மூலம் எந்த இடத்தில் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கவ்வளவு மின்சாரத்தை தயாரித்து அருகிலேயே பயன்படுத்திக்கொள்ளுதல்.

தீர்ந்து போகும் வளங்களை அசுர வேகத்தில் சுரண்டி சில அரசியல் வியாதிகளும், சில பணக்கார முதலைகளும், சில அசுரகுண அதிகாரிகளும் கோடீஸ்வரர்களாகிவருகிறார்கள்.

எதிர்காலத்தை நினைத்து நான் அச்சமடைய இவை மட்டுமல்ல காரணம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை முழுவீச்சில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் இயற்கை நம்மை அடிக்கப்போகும் மரண அடியை தாங்க மாட்டோம். அடுத்ததாக குப்பைகளை சேரவிட்டு வியாதிகளை பரப்பும் மையங்களாக்கி வைத்திருப்பதை தவிர்த்து அவற்றில் இருந்து எரிசக்தியை பெற முயற்சிக்க வேண்டும்.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இந்த இரண்டு விசயங்களை திறம்பட செயல்படுத்தினால் எதிர்காலத்தை நினைத்து அச்சப்படத்தேவையில்லை.

ஆனால் கல்வி, மருத்துவம் வியாபாரமாகிவிட்டது. டோல்கேட் வைத்து பயணம் செய்பவர்களை ஒரு ஆள் விடாமல் நிறுத்தி சுரண்டி விடுகிறார்கள். இது தவிர மதுவால் க்ரைம்ரேட் அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை சிலர் ஒப்புக்கொள்ளாமல் (தங்களுக்கு கொள்ளை லாபம் அளிக்கும் (அமுதசுரபி அல்ல) விஷ சுரபி மூலம் கிடைக்கும் வருமானம் போய்விடுமோ என்ற பயத்தில்) மது இல்லை என்றாலும் மக்கள் தப்பு செய்துகொண்டேதான் இருப்பார்கள் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

புதிய ஆண்டிலாவது உலகம் மேம்பட புதிய வழி பிறக்கட்டும். (இப்போது உலகம் வளரவில்லையா என்று சிலர் கேட்கலாம். நான் சென்ற பதிவில் சொன்னது போல் நிழலுக்கு சிமெண்ட், கம்பி வைத்து நிழற்குடை கட்டுவதைக்காட்டிலும் சாலையோரம் மரங்களை நட்டு வளர்த்து பராமரிப்பது மிக அவசியம்)

சனி, 29 டிசம்பர், 2012

டெல்லி துயரம் தொடராமல் இருக்க என்ன செய்யப் போகிறோம்?

பேருந்து நிறுத்தத்துக்கும் மரத்துக்கும் என்ன சம்மந்தம்? ... விடை இந்த பதிவிற்குள் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனில்லாமல் இன்று சிங்கப்பூரில் உயிரிழந்து விட்டார் என்றதும் நீதி கேட்டு கடுமையாக பொதுமக்கள் போராட்டம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று அரசு கவனமுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

தினம் தினம் இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் இந்த ஆவேசம் என்று சிலர் சில ஊடகங்களில் கேள்விகளை எழுப்பினார்கள்.

எல்லா சம்பவங்களையும் பார்த்து மனம் கொதித்துப்போய் இருந்தவர்கள் ஒரேடியாக பொங்கிவிட்டார்கள் என்று சிலரும் சில ஊடகங்களும் கருத்து சொன்னதாக அறிகிறேன். இது உண்மையாக கூட இருக்கலாம்.

இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு தண்டனை தேவைதான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பெண்ணை சக மனுஷியாக பார்க்காமல் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய பொருளாக சில கயவர்கள் நினைத்து இப்படிப்பட்ட கொடூரங்களை அரங்கேற்றச் செய்யும் மனநிலை எவ்வாறு உருவாகிறது. அந்த மனதை எப்படி சரிசெய்யப்போகிறோம் என்பதில்தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதும் கிடைக்காததும் இருக்கிறது.

பலர் பல நூறு காரணங்கள் சொன்னாலும் மதுதான் இது போன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. சிலர், மதுப்பழக்கம் இல்லாதவர்கள் கூட பெண்களையும், குழந்தைகளையும் சிதைக்கும் கொடூர காரியங்களை செய்கிறார்களே என்று கேட்கிறார்கள்.

அதுவும் உண்மைதான். சும்மா இருக்கும் மனம் சாத்தானின் குடியிருப்பு என்று சொல்வார்கள். வேலையில்லாதவன்தான் இப்படியயல்லாம் தவறு செய்கிறானா? நல்ல பணியில் இருப்பவர்கள் இப்படி தவறு செய்யாமலா இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

மனிதனின் மனம் ஓய்வை நாடும்போது அது நல்ல திசையில் திருப்பப்படாமல் வக்கிர திசையை நோக்கி செலுத்தப்படும்போதுதான் இப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கின்றன.

நான் சிறுவனாக இருக்கும்போது பாடப்புத்தகங்கள் தவிர்த்து எனக்கு பொழுதுபோக்க கிடைத்த முக்கிய பொருள் புத்தகங்கள்தான். தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால், ஈசாப் நீதிக்கதைகள், விக்கிரமாதித்தன் என்று பலதரப்பட்ட நல்ல கருத்துக்களை சொல்லும் கதைகளுடன் தினசரி நாளிதழ்கள் கூட சிறுவருக்கான இணைப்புகளை புத்திக்கூர்மையை பலப்படுத்தக்கூடிய, நல்ல எண்ணங்களை விதைக்கக்கூடிய உள்ளடக்கங்களுடன்தான் வெளியிட்டார்கள்.

எனக்கு 25 வயதில் சாத்தியப்பட்ட செல்போன் இன்று 3 வயதுக்குழந்தைக்கு கிடைக்கிறது. அவர்கள் வெளியில் போய் விளையாட வழி இருப்பதில்லை. வீடியோ கேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவில் ரத்தவெறியைத் தூண்டும் கார்ட்டூன், விளையாட்டுக்கள் என்று பலவும் மனித மனத்தை வக்கிரபுத்தியுடன் கொடூரமான திசையை நோக்கி செலுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த போக்கு நல்ல வசதி படைத்த குடும்பங்கள் மற்றும் ஓரளவு நடுத்தர வசதியுடன் கூடிய குடும்பங்களில் வளரக்கூடிய குழந்தைளைப் பற்றி.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத குடும்பங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் சுற்றுப்புறத்தில் சாக்கடை கூட சரியாக இருப்பதில்லை. அவர்கள் படிக்கும் பள்ளியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இருப்பதில்லை. பிறகு அவர்களுக்கு எப்படி நூலக அனுபவம் கிடைக்கும்?

அப்படி வசதி இல்லாதவர்கள் தங்கள் சக்திக்கு மீறி படிக்க வைத்தாலும் அந்த பள்ளிகள் பாடப்புத்தகங்களை துரத்துவதற்கு மட்டுமே பழக்கப்படுகிறார்கள். சகிப்புத்தன்மை, நற்பண்புகள் இது போன்று எந்த ஒரு விசயமும் சில இடங்களில் கட்டாயத்தின்பேரில் அவர்கள் பின்பற்றுகிறார்களே தவிர, கூட்டம் சேர்ந்தால், யாரும் கவனிக்கவில்லை என்று உணர்ந்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி எவ்வளவு கொடூரமான செயல்களையும் கண நேரத்தில் தெரிந்து வேண்டுமென்றோ அல்லது அவர்களை மீறியோ செய்து விடுகிறார்கள்.

பெரும்பாலும் அவர்கள் செய்யும் செயல் தவறு என்று அவர்கள் புத்தி எச்சரித்தாலும், அதை செய்து பார்க்க வேண்டும் என்று அவர்கள் மனதில் குடியிருக்கும் சாத்தான் சொல்வதையே செய்து விடுகிறார்கள்.

இது போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் கடுமையான கண்காணிப்பு அவசியம். எல்.கே.ஜி மாணவர்கள் கூட வகுப்பில் ஆசிரியை இல்லை என்றால் சளசளவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் போது குரங்கு என்று வர்ணிக்கப்படும் மனித மனம் சும்மாவா இருக்கும்?

சில வெளிநாடுகளில் துண்டுக்காகிதத்தை குப்பைத்தொட்டியை விட்டு வெளியில் போட்டால் கூட அடுத்த 5வது நிமிடம் போலீஸ் வீடு தேடி வரும் என்ற சூழ்நிலை இருப்பதால் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கும் நபர், நம் நாட்டில் பத்து வீடுகள் கொண்ட குடியிருப்புக்குள் நுழையும் 4 அடி அகல வாசலின் குறுக்கே யாரும் நுழைய முடியாதபடி அதே நாலடி நீள இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் பழக்கத்துடன் இருப்பதை என்னவென்று சொல்வது?

வெயில் தாங்க முடியவில்லை. போகும் வழியில் ஆங்காங்கே நிழலில் இளைப்பாறிச் செல்லலாம் என்று (காரில் சென்றால் கூட) நினைப்போம். அப்படி நிழல் தருவதற்காக சிமெண்ட், மணல், ஜல்லி கொண்டு நிழற்குடையை கட்டி வைப்போம். தமிழகத்தில் ஏதாவது ஒரு தேசிய நெடுஞ்சாலையில் மே மாதம் கத்திரி வெயிலில் இப்படி ஒரு நிழற்குடையில் அரை மணி நேரம் நீங்கள் ஓய்வெடுப்பதற்கும், குளு குளு என்று இயற்கை காற்றுடன் நிழல் தரும் பெரிய மரத்தடியில் நின்று ஓய்வெடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? (அந்த மரம் தரும் நன்மைகளை பட்டியலிட்டால் மிகப்பெரியதாக நீளும். நமக்கு ஆக்சிஜன், மழை தருவதிலிருந்து கரியமில வாயுவை கிரஹித்துக்கொள்வது வரை எவ்வளவோ நன்மைகள்.)

பேருந்து நிறுத்தமும் கட்டிடங்களும் தேவைதான். நான் இல்லை என்று சொல்ல வில்லை. நம் நாட்டில் டெக்னாலஜி டெவலப்மெண்ட் என்று வெறும் நிழற்குடைகளைத்தான் கட்டிக்கொண்டிருக்கிறோமே தவிர, மரங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போது மனித மனங்களும் இப்படித்தான், ஏதோ ஒரு இயந்திரம் தயாரிக்கும் பொருள் போல ஆகிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் தான் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள். 50 வருசத்துக்கு முன்னால இப்படி எல்லாம் இல்லையா என்று கேட்காதீர்கள். அப்போது குற்றம் செய்பவர்களை விரல் விட்டு எண்ண வேண்டியிருந்தது. இப்போது குற்றம் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

ஒருவன் வேலையை முடித்து விட்டு ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதை விட நல்ல நூல்களை படித்தால் அவன் மனதில் எவ்வளவு மாற்றங்கள் இருக்கும் தெரியுமா?

அதெல்லாம் சரி...நல்ல புத்தகங்கள் எங்கே வருகிறது என்றும் நீங்கள் கேட்கலாம். நிறைய எழுத்துக்களில் நேர்மை இருப்பதில்லை என்பதும் உண்மைதான். நிறைய படிக்கும்போது சரடு விட்டு மக்களை முட்டாளாக்குபவர்களையும் அந்த மாதிரியான எழுத்துக்களையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி புரிந்து கொண்டுவிட்ட மக்கள் தொகை அதிகரித்தால் யாருக்கெல்லாம் ஆபத்து வருமோ அவர்கள் என் மீது எதாவது பொய்ப்புகார் கொடுக்க முயற்சிக்கலாம்.

.............அதனால இத்தோட இந்த பதிவை நிறுத்திக்கிறேன்.

புதன், 31 அக்டோபர், 2012

அரசு முட்டை விழுந்தால் அம்மிக்கல்லே உடையும்

அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுஜனம் ஒருவன் மீது குற்றம் சுமத்த  வேண்டும் என்றாலும் ஆயிரம் வழி தென்படும். அதே சமயம் கொடூரமான குற்றம் செய்தவனை காப்பாற்ற வேண்டும் என்றாலும் ஆயிரம் என்ன பத்தாயிரம் விதிகளை மேற்கோள் காட்டுவார்கள் என்று நண்பர் சொல்வார். இப்போது நாட்டு நடப்பை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

50 சதுரடி அளவு இடத்தில் ஒருவன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பெட்டிக்கடைதான் வைத்திருந்தான். ஆனால் அந்தக்கடையால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு 5ஆயிரம் வகையான தொல்லை. அதனால் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமித்து இருப்பதை அகற்ற வேண்டும் என்று நியாயமாக உரிய இடங்களில் புகார் கொடுத்தோம். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்களை படுத்திய பாடு இருக்கிறதே...ஒரு கட்டத்தில் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வளவும் எதற்காக. எல்லாம் அந்த கடைக்காரன் கொடுத்த ஓசி சோப்பு, பவுடருக்காக.

இவ்வளவுக்கும் நாங்கள் ஒரு வார்த்தை அந்த கடைக்காரனையோ, அவனது குடும்பத்தையோ எதிர்த்துப் பேசவில்லை. அப்போதே அந்த கதி. இதனால் சாமானியர்கள் அறிய வேண்டிய நீதி என்னவென்றால் பணமும், புகழும் இருப்பவர்கள் உங்களை ஆயிரம் மடங்கு கேவலமாக பேசினாலும் நீங்கள் பொத்திக்கொண்டு புகார் மேல் புகாராக கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசினாலும் போச்...அதை வைத்து உங்களை அந்தமான் சிறையில் கூட தள்ளிவிடுவோம் ஜாக்கிரதை. இதுதான் இந்த நாட்டு ஜனநாயகம்.

எங்கள் வீட்டில் குடியிருந்த நபர் எந்த சின்ன விசயத்திலும் சகித்துக்கொள்ளாமல் எங்களிடம் வம்பிழுத்துக்கொண்டே இருந்தார். இடையில் சில நேரங்களில் அவ்வளவு இழிவான வார்த்தைப் பிரயோகமும் இருக்கும். இப்போது ஒரு வார்த்தை அவனுக்கு சரியாக எதிர்த்துப் பேசினாலும் நாளைக்கு பஞ்சாயத்தில் நான் பேசிய ஒரு வார்த்தையை சுற்றித்தான் நியாயம் (?) இருக்கும் என்று நான் நன்கு உணர்ந்திருந்ததால் அவனுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க சொன்ன நபரிடமே பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றேன்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் காலை 6.30 மணிக்கு நான் ஒரு செயலை செய்ததாக சத்தமாக பேசினான் அவன். நான் அமைதியாக அந்த நாளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை நான் இருந்த இடத்தை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொன்னேன். பிரச்சனைக்குரியவன் என்னுடைய இந்த வாதத்தை எதிர்கொள்ள முடியாமல், அப்போ என்னை என்ன ..................ன்னு நினைச்சியா என்று ஒரு வார்த்தை கோபத்தில் விட்டான். மத்தியஸ்தம் பேசிய நபர் அவனைப்பிடித்துக்கொண்டார். யோவ்...உன் அக்கா இங்க எதிர்ல இருக்காங்க. இந்த நேரத்துல இப்படி ஒரு இழிவான வார்த்தையால திட்டுற. யாரும் இல்லாதப்ப நீ ரொம்ப கேவலமாத்தான் பேசியிருப்ப. மரியாதையா 3 மாசத்துக்குள்ள வீட்டை காலி செஞ்சுக்குறதுதான் நல்லது என்று பிரச்சனையை முடித்து விட்டார்.

இவ்வளவுக்கும் அந்தஅளவுக்கு எங்கள் வீட்டில் குடியிருந்தவன் பொருளாதாரரீதியாக பெரிய ஆள் இல்லை. ஒரு மளிகைக்கடையில் தினக்கூலி வேலை பார்த்தவன். இதுக்கே இந்த கதி என்றால் பிரபலம், பணம் உள்ளவன் என்றால் என்ன ஆகியிருக்கும் என் கதி?

இவ்வளவு சுற்றி வளைத்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், பிரபலங்கள் நாக்கை அடக்குகிறார்களோ இல்லையோ, சாமானியர்கள் எல்லாம் நாவை காத்தே ஆக வேண்டும். ஏனென்றால் அதிகார இயந்திரம் பிரபலங்கள் பின்னால் மட்டுமே வாலை ஆட்டும். அதையும் மீறி பொதுஜனம் பின்னால் வாலை ஆட்ட வைக்க வேண்டும் என்றால் நம் மீது ஒரு குற்றச்சாட்டு கூட இருக்க கூடாது. பிரபலம் ஆயிரம் தப்பு செய்தாலும் அப்படி இருப்பது சகஜம் என்று ஊதி விட்டு அடுத்த வேலை பார்க்கும் அதிகார வர்க்கம், பொது ஜனம் ஒரே ஒரு வார்த்தையை ஆத்திரத்தில் ரிலீஸ் செய்தால் கூட அதை வைத்து நம்மை குழி தோண்டி புதைக்க தயாராக இருக்கும்போது நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*****************************
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

இந்த தமிழ் ஆண்டு (நந்தன வருடம்) பிறந்த போது என் நண்பர் ஒருவர் இது அசுரகுரு சுக்ரனின் ஆதிக்கத்தில் பிறந்த ஆண்டு. அசுரர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கும். நாட்டு நடப்பை பார்த்து யார் அசுரர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதற்கு விளக்கம் சொல்ல எனக்கு தெரியாது. எங்கேயுமே வாயை அடக்கி கவனமா இருந்துக்க. ஏப்ரல் 2014 வரை இந்த நிலை தீவிரமா இருக்கும் என்றார். அதை நான் அப்போது நம்பவில்லை. இப்போது சூழ்நிலையைப் பார்த்தால் அவர் சொன்னது உண்மைதானோ என்று என் மனதில் சிறு சலனம் தோன்றுகிறது.

ஏங்க நான் சரியாத்தான் பேசியிருக்கேனா? இந்த கட்டுரையில கேஸ் போட எதுவும் இல்லையே?

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆயுத பூஜை தேவையா?

இப்படி சில தரப்பினர் கேள்வி எழுப்பி ஆயுத பூஜை தொடர்பான புராணக்கதைகளை கடுமையான சொற்களால் சாடுகின்றார்கள். நான் அந்த விசயத்துக்குள் செல்ல விரும்பவில்லை. ஆயுதபூஜை, பொங்கல் போன்ற பண்டிகை கொண்டாட்டங்கள் இல்லை என்றால் நம் வீடும், தொழிலகமும் உலகமகா குப்பைமேடாகத்தான் இருக்கும்.

இந்த மாதிரி பண்டிகை எல்லாம் தேவையில்லை. நான் வீட்டையும், தொழிலகத்தையும் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு வருடமும் மிகச் சுத்தமாக சீரமைத்து வைத்துக்கொள்வேன் என்று உறுதி கூறுங்கள் பார்க்கலாம். நிச்சயமாக முடியாது.

இந்து மதம் தவிர்த்த மாற்று மதத்தினர் கூட பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜைக்கு வீடு, கடைகளை சுத்தம் செய்யவில்லை என்றாலும் அவர்கள் மத பண்டிகையின் போது இடத்தை புதுப்பொலிவுடன் ஜொலிக்கச்செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி எல்லாம் இல்லாவிட்டாலும் அவர்கள் வீட்டில் ஏதாவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சியின் போது வீட்டை சுத்தம் செய்து புது வர்ணம் அடிப்பார்கள்.

வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள், பொது பண்டிகைகள் இது போன்று எதுவுமே இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். உப்புசப்பில்லாத வாழ்க்கையாகத்தான் அது இருக்கும். ஆனால் எந்த பண்டிகை கொண்டாட்டத்தையும் ஒரு அளவுடன் வைத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 500 ரூபாய் வியாபாரம் நடக்கும் கடையில் 200 ரூபாய் செலவில் கொண்டாட்டம் என்றால் அது ஓ.கே. ஆனால் கடன் வாங்கி 2000 ரூபாய் செலவு செய்வது என்பது ரொம்பவே ஓவர். இந்த விசயத்தில்தான் பலர் சறுக்கி விடுகிறார்கள்.

இது போன்ற கொண்டாட்டம் தேவைதான். ஆனால் அவை நம்விரலை வீங்கச்செய்யாத அளவில் இருக்க வேண்டும். இதுதான் என் கருத்து.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஆண்களுக்கு குழந்தை பிறக்கும்?

உடல் கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் சென்னை பள்ளிக்குழந்தைகள் என்று வேறு ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அந்த ஆய்வு கூறியிருப்பது வளிமண்டலக்காற்று மாசு. உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு ஹார்மோன்கள் மிக அவசியம். தொடர்ந்து இது போல ரசாயன மாசடைந்த காற்றை சுவாசிக்கும்பொழுது, உடலுக்குள் செல்லும் இந்த ரசாயனங்கள் நாளடைவில் ஹார்மோன்களைப் போல செயலாற்ற ஆரம்பிக்கின்றன. இதனால், நெற்றியில் ஒற்றைக்கண்ணுடன் ஆடு பிறந்ததைப்போல உடல் உறுப்புகளில் தாறுமாறான வளர்ச்சி ஏற்படுகிறது.

தற்போது பரவலாக பயன்பாட்டில் உள்ள களைக் கொல்லிகள், ஆண் விலங்குகளிடம் (தொடர்ந்து களைக்கொல்லி பயன்படுத்திய பயிரைச் சாப்பிடும்) பெண் தன்மையை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. புளோரிடாவில் உள்ள ஒரு ஏரியில் பிறக்கும் அலிகேட்டர் முதலைக்குட்டிகளின் உடலில் இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வேறு சில ஏரிகளில் ஆண் மீன்கள் முட்டையிடத் துவங்கியதற்கு நீரில் கலக்கும் ரசாயனங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் தற்போது மனிதர்களிடமும் வர ஆரம்பித்துள்ளன. மார்பகப் புற்றுநோய், மலட்டுத்தன்மை, 10 வயதிற்கு முன்பே பெண் குழந்தைகள் வயதுக்கு வருவது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த ரசாயனப் பொருட்களே காரணம் என்று அமெரிக்க குழந்தை நல மருத்துவர் பிலிப் லான்ட்ரிகன் செய்த ஆய்வில் உறுதி செய்துள்ளார்.

மேலே உள்ள இரண்டு பாராக்களும் 27.09.2012 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் ஒரு கட்டுரையில் உள்ளவை.

நாம ரொம்ப நாளாவே பூச்சிமருந்து கலந்துதானே !? காய்கறி, அரிசி எல்லாம் சாப்பிடுறோம். அப்போ ரொம்ப சீக்கிரமே ஆண்களுக்கு கருப்பை கூட வளருமோ? இதெல்லாம் நடக்குதோ இல்லையோ உரம், பூச்சிமருந்து கலந்த காய்கறிகளாலே ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சாப்பாட்டுக்கு செலவு செஞ்சுட்டு, அடுத்த 5 நிமிசத்துல நம்ம உடம்புல வர்ற கோளாறுக்கு 50 ஆயிரம் ரூபாயை ஆரம்ப கட்ட வைத்திய செலவா செய்யப்போறாம்னு தோணுது.

இதுக்கு போய் யாராச்சும் கவலைப்படுவாங்களா? அரசாங்கத்துல இலவச காப்பீடு இருக்கு. மிக்சி, கிரைண்டர், டி.வி, மின்விசிறி உள்பட என்னென்னவோ தர்றாங்க. இன்னும் எதெதுக்கோ அரசாங்கத்துல பணம் தரலாம். அப்புறம் ஏன் கவலைப்படணும்?

திங்கள், 23 ஏப்ரல், 2012

ஓஹோ ப்ரொடக்சன்ஸ் ஆக ஓடும் ஓ.கே. ஓ.கே


15 ஆண்டுகளுக்கு முன்பு மாப்பிள்ளை கவுண்டர் படத்தில் வடிவேலு, ஒரு லெட்டரைப் பார்த்து பிரபு மற்றும் வினுச்சக்கரவர்த்தியிடம் ''ஒவ்வொரு எழுத்தையும் முத்து முத்தா, அச்சடித்த மாதிரி, கண்ணுல ஒத்திக்கலாம் போல எழுதியிருக்கான்யா...ஆனா என்ன எழுதியிருக்கான்னுதான்யா தெரியல.'' அப்படின்னு சொல்லுவார். அப்படித்தான்யா நானும் ஓ.கே.ஓ.கே படத்துல என்னதான் இருக்குன்னு தேடிப்பார்த்தேன். ஒண்ணுமே தெரியலய்யா...அடுத்தவனை வம்புல மாட்டி விட்டாத்தான் காமெடின்னு சொல்லி படத்தை தேத்திட்டாங்கய்யா.

கோடை விடுமுறை நேரம். இந்த நேரத்துல ரிலீசான மற்ற படங்களும் தேறலை. 3 படம் பட்டை நாமம் போட்டுடுச்சு. பிரண்ட்ஸ், லவ்வர், மனைவி இப்படி யாரோடயாச்சும் போகும்போது சீரியசா ஒரு கதை சொல்லி நெத்தியில ஆணி அடிச்சா படம் கோவிந்தாதான். தமிழன்னு இல்லை. பொதுவாவே எல்லாருக்கும் மத்தவங்களை கலாய்க்குறது ரொம்ப பிடிக்கும். அதை வெச்சு ராஜேஷ் ஹாட்ரிக் அடிச்சுட்டார். பலரும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தோட அளவுக்கு இதுல விஷயம் இல்லைன்னு சொல்றாங்க. அதுல ஆர்யா பழைய முகம். இதுல உதயநிதி புதுமுகம். ஆகவே இந்த குறைகள் அடுத்தடுத்த படங்கள்ல சரிசெய்யப்படும்னு நம்பலாம்.

திருவாரூரில் ஓ.கே.ஓ.கே படம் ஓடிக்கொண்டிருக்கும் நடேஷ் தியேட்டருக்கு எதிரில்தான் என்னுடைய அலுவலகம் நடத்தி வர்றேன். இந்த பதிவில் இருக்கும் தியேட்டரின் முகப்புத்தோற்றம் இந்த பொங்கல் சமயத்தில் வேட்டை படம் ஓடிக்கொண்டிருக்கும்போது என் அலுவலகத்தில் இருந்து எடுத்தது. 14 வருஷத்துக்கு முன்னால முரளி நடிச்ச பொற்காலம் படம் வரை இந்த தியேட்டர்ல வேலை பார்த்திருக்கேன். பெரும்பாலும் பகுதி நேரப் பணிதான். அந்த காலகட்டத்துல  உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு, பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, பாஞ்சாலங்குறிச்சி, லவ்டுடே, பொற்காலம் போன்ற படங்கள் இந்த திரையரங்கில் சூப்பர் ஹிட்டாகவும் பரம்பரை, சிவசக்தி, சுபாஷ், கல்கி போன்ற படங்கள் ஆவரேஜாகவும் நடேஷ் தியேட்டரில் ஓடின.

15 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஹிட் என்று எப்படிப்பட்ட படங்களை சொல்வோம் என்றால், பொற்காலம் சுமார் 80 நாட்கள் ஓடியது. பூவே உனக்காக 50 நாட்களும், நாட்டுப்புறப்பாட்டு, உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்கள் 35 முதல் 40 நாட்களும் ஓடின. சிவசக்தி, சுபாஷ், கல்கி போன்ற படங்கள் மூன்று வாரங்கள் ஓடினாலும் தியேட்டருக்கு லாபம் சம்பாதித்து கொடுத்த படங்களாகவே இருந்தன.

பிறகு நான் படிப்பு, கல்லூரி, வேறு பணி என்று வந்த பிறகு படம் பார்ப்பதில் அவ்வளவாக நாட்டமில்லாமல் போய்விட்டது. தீபாவளி, பொங்கல் போன்ற விசேச தினங்கள் தவிர்த்து ஒரு புதிய முகத்துக்கு (கலைஞர் குடும்பம் என்ற பெயரே சூப்பர் வேல்யூதான் - தியேட்டர் கிடைப்பதற்கு) இவ்வளவு பெரிய ஓப்பனிங் கிடைத்திருப்பது திரைத்துறையிலேயே பலரது காதுவழியாக புகைவரச்செய்திருக்கும்.

ஆளானப்பட்ட விஜய்க்கே வேட்டைக்காரன், சுறா போன்று ஓவர் பில்ட் அப் கொடுத்து மொக்கை போட வைத்து ரசிகர்களுக்கு வெறுப்பேற்றி காலி செய்தது சன் பிக்சர்ஸ். தனுஷ் கூட சுள்ளான் படத்தில் ரசிகர்களை கொலை வெறி ஏற்படச்செய்திருப்பார். ஆனால் அரசியல் வாதி குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி மிகத் தெளிவாக வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சந்தானத்தையும், திம்சுகட்டையையும் முன்வைத்து எந்த பில்ட்அப்பும் இல்லாமல் படம் கொடுத்து படத்தை ஹிட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்.

கே.எஸ்.ரவிக்குமாரா அல்லது விக்ரமனா என்று தெரியவில்லை. படம் முடிந்து வெளியே வந்த ரசிகன் படத்தைப் பற்றி ஆயிரம் கேள்வி கேட்கலாம். கிண்டல் அடிக்கலாம். ஆனால் படத்தில் முதல் சீனைப் பற்றி இரண்டாவது சீனிலேயே கிண்டல் செய்தால் படத்திற்கு சீன் முடிந்தது என்று சொல்லியிருந்தார். படத்தின் முதல் சீனில் உதயநிதி 10 பேரை பந்தாடினால் நிச்சயம் ரசிகர்கள் வெறுத்துப்போயிருப்பார்கள். (அவருக்கு இருக்கும் அரசியல், பணபலத்திற்கு 100 பேரை கூட பந்தாடலாம். அது வேறு விஷயம்.) ரசிகர்களை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருக்க வைத்து கதையை காணோம்னு படம் முடிந்து தியேட்டருக்கு வெளியே வந்து கேட்க வெச்சாங்க பாருங்க. அங்கதான் படம் பிழைச்சுடுச்சு. எனக்குத் தெரிஞ்சு நான் பணிபுரிந்த காலகட்டம் தவிர்த்து ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டர்ல டிக்கட் இல்ல. அப்படின்னு சொல்லி நிறைய பேரை திருப்பி அனுப்புறாங்க.

அதுலயும் வழக்கமா மாலைக்காட்சி ஆறரை மணிக்குதான் போடுவாங்கன்னு நினைச்சு நிறையபேர் ஆறு மணிக்கு வந்தும் டிக்கட் இல்லை. காவலர்களை வைத்து மக்களை திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டது. சில புதுமணத் தம்பதியர் கூட பத்துப் பதினைந்து நிமிடம் வரை தியேட்டர் வாசலை விட்டு கிளம்ப மனமில்லாமல் நின்று கொண்டே இருந்தார்கள். நான் தியேட்டரில் பணிபுரிந்த 1990களின் பிற்பகுதியில் இது மிகவும் சாதாரணம். ஆனால் இப்போது அது எனக்குள் பல கேள்விகளை ஏற்படுத்தியது.

பலருக்கு சினிமா பார்க்க கிளம்பி வந்து விட்டு டிக்கட் இல்லாமல் திரும்பி போவது என்பது கவுரப்பிரச்சனையாகி விடுகிறது என்று நினைக்கிறேன். நானும் அப்படித்தான் இருந்தேன். என்னுடைய பத்து பன்னண்டு வயதில். அப்புறம் பதினாலு பதினஞ்சு வயசுக்கெல்லாம் தியேட்டர்ல வேலைக்கு வந்துட்டேனே. ஆனால் இப்போது படித்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் மனிதர்களும் இப்படி இருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. மனித மனம் சில விஷயங்களில் எப்போதும் ஒரு குழந்தைத்தனத்துடன்தான் இருக்கும்போல் இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அது வெளிப்படுகிறது. அவ்வளவுதான்.

பாட்டி சொல்லைத் தட்டாதே, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி இது மாதிரி பெயருக்காவது கதையுடன் வந்த (சுட்ட கதையோ, சுடாத கதையோ) முழு நீள காமெடிப்படங்கள் பெரும்பாலும் சோடை போவதில்லை. எஸ்.எம்.எஸ், பாஸ், ஓ.கே.ஓ.கே அப்படின்னு கதை தயார்பண்ற கேப்புல மூணு படம் பண்ணிட்டார் ராஜேஷ். விருந்தும் மருந்தும் 3 நாள் என்பது அனைவருக்கும் தெரியும். ரொம்ப நாளக்கு ஒண்ணுமில்லாத படத்தை ஓஹோன்னு ஓட வைக்க மாட்டாங்க. அதுக்காக படுதோல்வி அடையும்னு சொல்லலை. 10 கோடி லாபம் சம்பாதிச்சு கொடுக்க வேண்டிய படம் 5 கோடியோட நிறுத்திக்கலாம். அதைச் சொன்னேன்.

அப்புறம், எனக்கு தெரிஞ்சு தோற்றத்துல ரொம்ப சுமாரா இருக்குறவங்களாட (விதிவிலக்கும் உண்டு) குணம் பல அழகான பொண்ணுங்களுக்கு இல்லை. அழகான ராட்சசி...இல்ல...இல்ல...அழகான அரக்கியாத்தான் இருக்காங்க. மூஞ்சைப் பார்த்தா வாந்தி வருது. தப்பித்தவறி பார்த்தா அவன் சாக வேண்டியதுதான் இந்த மாதிரி நெகட்டிவ் வசனங்கள் இல்லாம நல்ல காமெடிப்படம் குடுக்க முடியும். அதுக்கு முயற்சி பண்ணுங்க. இப்ப கொஞ்ச நாளாத்தான் மாற்றுத்திறனாளிகள கிண்டல் பண்ணி வர்ற படங்கள் குறைஞ்சுகிட்டு இருக்கு. தெனாவட்டு, காஞ்சனா மாதிரி படங்கள்ல திருநங்கைகளுக்கும் உரிய மரியாதை தர்ற கேரக்டர்களயும் உருவாக்க ஆரம்பிச்சிருக்காங்க.

இந்த படத்துல சொல்ற மாதிரி எல்லாரும் ஹன்சிகா மாதிரியான ஆளுங்கள லவ் பண்றதெல்லாம் முடியுமா? உதயநிதி அப்பா, தாத்தா பெரிய புள்ளிகள். அவர் ஹீரோவாகுறது ரொம்ப சுலபமா நடந்தது மாதிரி படத்துல ஹன்சிகா லவ்வும் ஓகே ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் மச்சம் வேணும்பா.

என்னென்னமோ சொல்ற...படத்தைப்பத்தியும் ஒண்ணும் சொல்லலை. ஒரு கல் ஒரு கண்ணாடின்னு முழு டைட்டிலையும் சொல்லலைன்னு தானே கேட்குறீங்க. இந்த படத்துல கொஞ்சம் ஓவராவே ஆங்கில வசனம் இருக்கு. அதனால வரிவிலக்கு தர முடியாதுன்னு சொல்லிட்டதா ஏதோ ஒரு பத்திரிகையில படிச்சதா நினைவு. வரிவிலக்குக்கு பயன்படும்னுதான் ஒரு கல், ஒரு கண்ணாடின்னு தலைப்பு வெச்சோம். அதுவே கிடைக்கலைன்னா அந்த கண்ணாடி எதுக்கு அப்படின்னுதான் சும்மா ஓ.கே. ஓ.கேன்னு மட்டும் இந்த பதிவில் எழுதியிருக்கேன்.

சந்திரமுகியில் ரஜினி, சரவணாவில் சிம்பு, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சீடன் படங்களில் தனுஷ் என்று பலரும் இந்த சரவணன் என்ற பெயரில் நடித்து விட்டார்கள். ஏற்கனவே திரைத்துறையில் சரவணன் நடிகர் இருந்ததால் சரவணன் என்ற ஒரிஜினல் பெயரில் இருந்து சூர்யாவாகி விட்டார். (எனக்கு என்னவோ சரவணன்-இந்த பேர் எனக்கு இருக்குறது புடிக்கலை.) ஓகே.ஓகே படத்துல உதயநிதியின் கேரக்டர் பெயர் சரவணன். ரெண்டு தடவை பின்னால போனதும் ஹன்சிகா உதயநிதியை ரசிக்கத்தொடங்கி விட்டதுதான் இந்த படத்தில் ஹீரோயிசம் என்று சொல்லலாம். மற்றபடி என்னை மாதிரி சாதாரண பிரஜையாக இருக்கும் எத்தனையோ சரவணன்களில் ஒருவராகவே உதயநிதி நடித்திருப்பதும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

நாற்பது பேரை அடிச்சு பந்தாடிட்டு, ரகசியாவோட ஒரு ஓப்பனிங் சாங் இருந்துச்சுன்னா ரிசல்ட் வேற மாதிரி ஆகியிருக்கும்னு ஒருத்தர் சொன்னார். உண்மையாங்க?

ஒரு நேரத்துல நான் கோர்வையா பதிவு எழுதுன மாதிரி இது இருக்குறதா தெரியலை. கதையே இல்லாத கே.ஓகே படம் ஏற்படுத்துன பாதிப்போ?

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

அங்காடித்தெருவில் நான் கண்ட சில விஷயங்கள்

"இலவசமா கொடுக்க இது என்ன கவர்மெண்ட்டா, இப்படி இலவசம் கொடுத்து கொடுத்துதான் உங்களை எல்லாம் கெடுத்து வெச்சிருக்காங்க." என்ற வசனத்தை கேள்வி கேட்ட புதுப்பையனுக்கு ஒரு அறை விட்டபிறகுதான் அந்த பணியாளர் பேசுவார்.அந்த அடி, இலவசங்களை சாதனையாக நினைத்து பெருமைப்படும் சில பொதுமக்களின் கன்னத்தில் விழுந்த அறையாகத்தான் எனக்குத் தோன்றியது.
அங்காடித்தெரு படம் பற்றி பல விதமாகவும் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. படத்தின் நிறைகளை விட குறைகள் என்று குறிப்பிட்டு மிகக் குறைவான விமர்சனங்களே வந்திருப்பது ஆரோக்கியமான விஷயமாகவே எனக்குத்தோன்றுகிறது.

தந்தை, லெவல்கிராசிங் விபத்தில் உயிரிழந்ததால் கல்லூரிக்குச் சென்று உயர்கல்வியைத் தொடரமுடியாமல் வேலைக்குச்சென்று அவதிப்படும் ஜோதிலிங்கம், தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதால் கால்களை இழந்து சாலை ஓரத்தில் பூ வியாபாரம் செய்யும் கனி- விபத்தால் சிதைந்துகொண்டிருக்கும் வாழ்க்கையின் அடையாளம்.

ஏதோ நலத்திட்ட உதவிகளுக்கான புள்ளிவிவரங்களை தெரிவிப்பது போல் சாலை விபத்துக்களைப்பற்றி நாள்தோறும் தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவை எத்தனை குடும்பங்களை நிலைகுலையச்செய்து விடுகின்றன என்பதை இந்தப் படத்தின் ஜோதிலிங்கம், கனி கதாபாத்திரங்களின் மூலம் நான் புரிந்துகொண்டேன்.

நிலையான முகவரி இல்லாமல் கைகளும் கால்களும் உழைக்கத்தயாராக இருக்கையில் வேறு மூலதனம் எதற்கு என்று தன்னம்பிக்கையுடன் கோடானுகோடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால் நாள்தோறும் ஏகப்பட்ட விபத்துக்களால் பிழைப்பை இழந்து இயல்பாக வாழும் உரிமை பறிக்கப்பட்டு அவதிப்படும் இந்த நிலைக்கு தொண்ணூறு சதவீதம் மனிதத்தவறுகள்தான் காரணமாக இருக்கின்றன. சில விஷயங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு இயந்திரம் பாராமுகமாகவே இருந்து வருகிறது.

ஊழியர்களை வாடிக்கையாளர்கள் முன்னிலையில் அடித்து ரத்தக்காயப்படுத்துவது படத்தில் மிகைப்படுத்திக்காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் காட்சி.

அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். கடுஞ்சொற்களால் திட்டிவிட்டு, தனி அறைக்குள் அழைத்துச் சென்றுதான் பிரித்து மேய்வார்கள்.
அப்புறம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை. இது சாதாரண கடைகளில் கூட இருக்கிறது. படத்தில் கிளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது கனி,"முன்னாடி எல்லாம் சரிதான் போன்னு விட்டுடுவேன். இப்ப முடியலை..."என்று சொல்வாள். நிஜ வாழ்க்கையிலும் பல பெண்கள் இப்படித்தான் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.(இலவசக்கழிப்பறையில் மூக்கைப்பிடித்துக்கொண்டு நுழையும் மனோபாவத்துடன் தான் என்று கூட சொல்லலாம்.)

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். நாலுமணி நேரம் அலைந்து பொருட்கள் வாங்கியதற்குள்ளேயே எங்கள் கால்கள் ஓய்வு கேட்டு கெஞ்சத்தொடங்கிவிட்டன. பனிரெண்டு மணி நேரத்துக்குமேல் நின்று, நடந்து, ஓடி வேலை செய்பவர்களின் கால்கள் எப்படிக் கதறும் என்பதை என்னால் அதிகமாகவே உணரமுடியும்.

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு எலக்ட்ரீஷியனிடம்  வேலை செய்த நாட்களில் நானும் உடலளவில் அதிகமான துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். எப்படி என்றால், கான்கிரீட் கூரை அமைக்கும்போது கம்பிகளின் மேல் பிளாஸ்டிக் குழாய் அமைக்கும் பணி பார்க்கும்போது சாதாரணமாகத்தான் இருக்கும்.  வெயில் இல்லாத நேரத்தில் என்றால் சாமர்த்தியமாக கம்பி மீதே அமர்ந்து ஓய்வு எடுக்கலாம். உச்சிவெயில் என்றால் அவ்வளவுதான். குத்துக்காலிட்டு முழங்கால் வலிக்க,பைப்புகளைப் பொருத்த வேண்டும்.
ஒரே நாளில் மூன்று கட்டிடங்களுக்கு குழாய் பொருத்தும் சூழ்நிலை வந்தது. காலை ஆறு மணிக்குத் தொடங்கிய பணி, இரவு பத்து மணிக்குதான் முடிந்தது. அன்றுதான் முதன் முதலில் என்கால்கள் கெஞ்சின. மறு நாள் கான்கிரீட் அமைக்கும்போது குழாய்கள் உருவிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது முடிந்த பிறகு சுவரில் குழாய், ஸ்விட்ச் போர்டு அமைக்க உளி சுத்தியல் பயன்படுத்தி உடைக்க வேண்டும். இப்போது கோடு போட்டுக் கிழித்து விட மெஷின் வந்தாலும், நடுவில் உள்ள பகுதியை நாம்தான் உடைக்க வேண்டும்.

நான் வேலை கத்துக்கும்போது நாற்பது முறை உளியை சுத்தியலால் அடித்தால் அதில் முப்பத்து ஒன்பது முறை இடக்கையில் புறங்கை மீதுதான் சுத்தியலின் அடி விழுந்தது. மஞ்சள் பத்து போட்டுக்கொண்டு இரண்டு நாட்களில் மீண்டும் அதே வேலையை செய்யச் சென்றது உண்டு. பிறகு உடைக்கும்போது மண் துகள் என் மேலே கூட படாமல் உடைக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றது வேறு கதை.

அப்போதெல்லாம் தொடர்ந்து படிக்கணும்னு தோணலை. நீங்க நம்புறீங்களோ இல்லையோ, நான் பனிரெண்டாம் வகுப்பு பிரைவேட்டா படிச்சு தேர்வு எழுதி காலேஜூல சேர்ந்து படிக்கணும்னு முடிவெடுக்க காரணம்,"ஜாலி" படத்துல வந்த ஃபேர்வெல்டே பாடல் காட்சிதான்.

எதுக்காக இதையெல்லாம் சொல்றேன்னா படத்துல காட்டுற மாதிரி வேலை செய்யுறவங்க மேல வன்முறையைக் காட்டுறவங்க இருக்குற அதே அளவுக்கு, வெளியில தெரியாம நசுக்குற முதலாளிங்களும் ரொம்பவே இருக்காங்க.

அங்காடித்தெருவுல காட்டுன முதலாளிங்க நிக்கவெச்சே கொத்தடிமையா நடத்துறாங்கன்னா, மென்பொருள் நிபுணர்களை உட்காரவெச்சே பிழிஞ்சு எடுத்துடுறாங்க. என்ன ஒரு வித்தியாசம், மென்பொருள் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமா கிடைச்சுடுறதால வாழ்க்கையில பல வசதிகளை அடைஞ்சுட முடியுது. ஆனா அவங்க அதுக்காக இழக்குற விஷயங்கள் ஏராளம்.முக்கியமா, அமைதியான குடும்ப சூழ்நிலை அவங்களுக்கு ரொம்ப அரிதாகத்தான் கிடைக்கும்.

இப்ப கூட நான் ஒரு தனியார் நிறுவனத்துல ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துக்கு (ஐந்து மணி நேரம்) வேலை செய்யுறேன். முழு நேரப்பணியாளர்களுக்கு மூவாயிரம் ரூபாய் தர்றேன்னு சொல்றாங்க. இந்த காசுக்கெல்லாம் நாள் பூராவும் கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து வேலை செய்து என் உடம்பை ரிப்பேர் ஆக்கிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.

நாட்டுல முதலாளியா இருந்தாலும் தொழிலாளியா இருந்தாலும் அதுலயும் ரெண்டு வகைதான் உண்டு. புலி, மான்.

ஒண்ணு வேட்டையாடணும் இல்லை...வேட்டையாடப்படணும். இதுதான் உலகம். சில இடங்கள்ல பணியாளர்கள் முதலாளியை அலற விட்டுகிட்டு இருப்பாங்க. பல இடங்கள்ல தொழிலாளிகள் அவதிப்பட்டுகிட்டே இருக்காங்க. இதை மாத்துறது ரொம்ப கடினம்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.- இதை நான் அனுபவப்பூர்வமா உணர்ந்துருக்கேன். சென்னையில கம்பெனி வேலை சரியா அமையாம அவதிப்பட்டப்ப, எலக்ட்ரிக்கல் வேலைக்குதான் போனேன். மதியம் சாப்பாடு + முன்னூறு ரூபாய் சம்பளம். ஆர்வத்தால வீடியோ எடுக்க கத்துகிட்டேன். சில திருமண நிகழ்ச்சிகளை கவரேஜ் செய்யப்போனப்ப நானூறு ரூபாய் வரை சம்பாதிச்சதுண்டு.

தொழில் தெரிஞ்சா தவறான பழக்கங்களுக்கும் சில ஆடம்பரங்களுக்கும் அடிமையாகாம இருந்தா நல்ல படியா பிழைக்கலாம். ரிஸ்க் எடுக்குறதுன்னா பெரிய பணக்காரங்க வாழ்க்கையில என்ன அர்த்தமோ எனக்குத் தெரியாது. ஆனா சிரமம் பார்க்காம உழைக்கத் தயாரா இருந்தா வாழ ஆயிரம் வழிகள்- இதைத்தான் அங்காடித்தெரு சொல்ற மெசேஜா நான் புரிஞ்சுகிட்டேன்.

******
இந்தப் படத்துல பல காட்சிகள் மிகைப்படுத்திக் காட்டப்பட்டதா சிலர் விமர்சனத்தை முன் வெச்சிருக்காங்க. நிஜ வாழ்க்கையில சுரண்டுறது தெரியாம அட்டை மாதிரி உறிஞ்சுற முதலாளிகளைப் பத்தி படம் எடுத்தா என்னய்யா டாக்குமெண்ட்ரி எடுத்துருக்கான்னு ஒதுங்கிப்போறது ரசிகர்களோட தப்பு. அதனால இந்த மாதிரி காட்சிகளை அமைச்சது சரிதான்னு சொல்லுவேன்.

பெரிய ஹீரோக்களோட படங்கள்ல லட்சம் மடங்கு மிகைப்படுத்தல் இருக்குறதை விட்டுடுவாங்க. இந்த மாதிரி படங்கள்ல இருக்குற ஒண்ணு ரெண்டு சீன்ஸ் தான் உறுத்தும்.

******
சில வாரங்களுக்கு முன்னால விகடன்ல உதயநிதி ஸ்டாலினோட பேட்டி வந்துருந்துச்சு. புது டைரக்டருங்களுக்கு வாய்ப்பு கொடுப்பீங்களான்னு கேட்டதுக்கு, பெரிய ஹீரோக்கள்னா விளம்பரம் கூட அதிகம் தேவையில்லை அப்படின்னு ஏதோ சொல்லி மழுப்பிட்டாரு. அதாவது இந்த மாதிரி படங்களை எடுக்க மாட்டோம்னு சொல்லாம சொல்லிட்டாரு.  அவரு என்ன பண்ணுவாரு பாவம், கஷ்டப்பட்டு உழைச்ச காசு. காப்பாத்தணும்னு நினைக்குறது நியாயம்தான்.

டைரக்டர் ஷங்கர் மேல பல விமர்சனம் இருந்தாலும் எனக்கு அவரை ஒரு விஷயத்துக்காக ரொம்பவே பிடிக்கும். காதல், இம்சை அரசன், ஈரம், வெயில் போன்ற படங்களைத் தயாரித்ததற்காக.
இந்த அங்காடித்தெரு படம் முடிவடைஞ்சும் பல மாதங்கள் ரிலீசுக்காக தவம் இருந்துருக்கு. ரஜினி, சன் பிக்சர்ஸ் மாதிரியான ஆட்கள் நினைச்சிருந்தா ரொம்ப எளிதா வெளியிட்டு ஒரே வாரத்துல லாபம் சம்பாதிச்சிருக்கலாம். அவதார் படமும் பிரமாண்டம் வசூலும் பிரமாண்டம்.ஏதோ பில்லியன் கணக்குல சொல்றாங்க.
ஆனா ஆறு ஆஸ்கர்  அள்ளுன தி ஹர்ட் லாக்கர் படம் பதினோரு மில்லியன்ல தயாராகி பதினாறு மில்லியன் வசூலாம். இது மாதிரி தமிழ்ல வருஷத்துக்கு பத்து படம் வரவைக்குறது பெரிய விஷயமே இல்லை.  அதற்குரிய திறமைசாலிகள்  நிறையவே இருக்காங்க. தயாரிப்பாளர்கள்தான் இல்லை.

பெரிய தயாரிப்பாளர்கள் இப்படி நல்ல படங்கள் தயாரிக்கலைன்னாலும் பரவாயில்லை.மசாலாப்படங்கள் ரிலீசைக் காரணம் காட்டி நல்ல படங்களுக்கு தியேட்டரே கிடைக்காம பண்ணிடுறது ரொம்ப கொடுமையான விஷயம்.

அங்காடித்தெரு படத்துல, கடை யூனிபார்ம் கொடுக்க ஏன் காசு கேட்குறீங்கன்னு ஒரு பையன் கேட்டதும், "ஏலே...இலவசமா கொடுக்க இது கவர்மெண்ட்டா...இப்படி கொடுத்து கொடுத்துதாம்லே உங்களை எல்லாம் கெடுத்து வெச்சிருக்காங்க."அப்படின்னு சொல்லுவார்.(இலவசமாக அந்தப்பையனுக்கு ஒரு அடி கிடைக்கும்.)

இப்படி படங்கள் தயாரித்து பெரிய தயாரிப்பாளர்களை நஷ்டமடைய சொல்லவில்லை. ஷங்கர் செய்வது போல் பெரிய தலைகளும் ஆண்டுக்கு ஒரு படம் சின்ன பட்ஜெட்டில் அற்புதமாக தயாரித்தால் போதும். அவர்களும் நாலு காசு பார்க்கலாம். அடுத்த ஆண்டு இன்னொரு படம் தயாரிக்கலாம்.தமிழ் சினிமாவும் மேம்படும்.
இவர்கள் சுயநலத்துடன் இருக்கட்டும். பொதுநலமும் கலந்தால் நல்லது என்று சொல்கிறேன். சிலருக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக்கொடுப்பதும் திருமணம் செய்து வைப்பதும் மட்டும் தொண்டு இல்லை. தன்னை வாழ வைக்கும் கலைக்கு கொஞ்சமாவது ஆக்சிஜன் கொடுப்பதும் இந்த வகைதான்.

******
நாளை முதல் ஒரு தொடர்கதை எழுதப்போவதாக அறிவித்திருந்தேன். குறுகியது வீதி மட்டுமல்ல...மனமும்தான்.

புதன், 31 மார்ச், 2010

அங்காடித்தெருவும் சூதாட்டமும்

கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் 28.03.2010 அன்று சற்று வித்தியாசமான சுற்று. இதுவரை பல சுற்றுக்களில் பிரகாசிக்க முடியாமல் படங்கள் விலக்கப்பட்டாலும் அந்த இயக்குனர்களிடம் திறமை இருப்பதாக நம்பி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள்.
ஆல்பம் படம் எடுத்து தோற்ற வசந்தபாலன் வெயிலில் ஜெயித்தார். இந்த வாரம் கலைஞர் தொலைக்காட்சியில் சூதாட்டம் என்ற குறும்படம் எடுத்த சாமும் அப்படித்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

பெண்ணின் திருமணத்துக்காக இருபத்தைந்தாயிரம் கடன் கேட்கும் வேலைக்காரியிடம்,"ஏன் நாட்டோட பொருளாதாரம் கீழே போகும்போது இவ்வளவு செலவு பண்ணி பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நினைக்குற. நாலு பேர அழைச்சுட்டு போய் கோவில்ல வெச்சு தாலிகட்டினா போதாதா." என்று கேட்பார்.

ஆனால், வாகனத்துக்கு பேன்சி நம்பர் வாங்க ஒரு லட்ச ரூபாய் செலவழிப்பார். ஆனால் அவரது மேனேஜர், ஐம்பதாயிரத்தை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஐம்பதாயிரத்தை மட்டும்தான் பேன்சி நம்பர் வாங்க லஞ்சமாக கொடுப்பார்.

இந்த தொழிலதிபரிடமே வருமானவரித்துறை ரெய்டு வருவதாக பயமுறுத்தி விலை உயர்ந்த வைரங்களை அவரிடமிருந்து போலி ஆபிசர் வைத்து ஒரு நபர் ஏமாற்றுவார்.

இப்படி பல தொழிலதிபர்களிடம் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதும், அவரிடமே இருக்கும் மேலாளர் போன்றவர்கள் தில்லுமுல்லு செய்து கொழுத்து வளருவதும், இவர்கள் சூதாட்டம், லஞ்சம், ரெய்டு, போலீஸ் என்று செலவு செய்வதும் இயல்பாக நடந்துகொண்டே இருக்கிறது என்ற கசப்பான உண்மையை உணர்த்தியது இந்த குறும்படம்.

அங்காடித்தெரு படத்தில் கூட பணியாளர்கள் அவதிப்பட்டு பல தொந்தரவுக்கும் ஆளாகும் நேரத்தில் கருங்காலி போன்றவர்கள் அடுத்தவர்களை இம்சித்துக்கொண்டு, தாங்கள் ஜாலியாகத்தானே இருக்கிறார்கள்.

என் மனதைக் கவர்ந்த இந்த குறும்படம் கலைஞர் தொலைக்காட்சியில் 01.04.2010 இரவு பத்தரை மணிக்கு மறு ஒளிபரப்பாகும்.
******
தமிழ்ப்புத்தாண்டு வருகிறது. எடுறா அந்த கீபோர்ட...தட்றா ஒரு தொடர்கதையை அப்படின்னு எனக்குள்ளே ஒரு அவலக்குரல்...ச்சே...அற்புதமான குரலைக்கேட்டு ரெடியாயிட்டோம்ல.
ஏப்ரல் 14, 2010 புதன்கிழமை அன்னைக்கு ஆரம்பம்.

வியாழன், 18 மார்ச், 2010

தோட்டா - விலை என்ன? ...........துறையின் சட்டையைப்பிடித்து ஒரு கேள்வி.

தொலைக்காட்சியில் நான் நிகழ்ச்சிகள் பார்க்கும் நேரம் மிகவு........ம் குறைவு. அப்படி நான் பார்த்த கலைஞர் தொலைக்காட்சியின்  நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் என் கண்களில் சிக்கிய படம், என்னை அதிகமாக யோசிக்க வைத்த படம் "தோட்டா - விலை என்ன?" (தலைப்பில் வார்த்தைகள் இடம் மாறி இருக்கலாம். பொறுத்துக்கொள்ளவும். அல்லது சரியான வரிசையை தெரிவிக்கவும்.)
சாகும்போது ஒருவரின் கதறலைக் கேட்க விரும்பி பத்துப்பேரைக் கொன்று புதைத்திருக்கிறேன். என்று ஒரு இளைஞன் அந்த சத்தம் பதிவுசெய்யப்பட்ட டேப் ரெக்கார்டருடன் போலீசாரிடம் சரணடைகிறான்.அவனுடைய பேச்சு, நடவடிக்கை எல்லாமே ஒரு சைக்கோ கொலைகாரனைப்போல்தான் இருக்கிறது.

இதற்கிடையில் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரின் மகளும் பாட்டு கற்றுக்கொள்ள செல்லும்போது அப்பாவிடம் செய்யும் சிறு குறும்பால் பார்வையாளரின் மனதிலும் இடம்பிடிக்கிறாள்.

கொலை செய்த குற்றவாளியை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது அந்த இளைஞன், "நீங்க கேட்குறதெல்லாம் ஒரு இசையா?...உயிர் போகும்போது ஒருத்தன் கத்துற கத்தல் இருக்கே...அதுக்கு எந்த இசையும் ஈடாகாது.அதனாலதான் பாட்டு பாடுறவங்களா பார்த்து கொலைசெஞ்சு புதைச்சேன்." என்று சொல்கிறான். இந்தக் காட்சியின் போது எனக்கும் அவன் மீது எரிச்சல்தான் வந்தது.

அவன் தொடர்ந்து,"இன்ஸ்பெக்டர்...உங்க வீட்டுல யாராவது பாட்டு கத்துக்குறவங்க இருக்காங்களா?"அப்படின்னு கேட்பான்.உடனே அவருக்கு பாட்டு கத்துக்கப் போறப்ப எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி பாடுன மகளோட நினைப்பு வந்துடும்.(நமக்கும்தான்.)இனிமே இவனை விட்டு வைக்க கூடாதுன்னு நினைச்சு அவனை ஜீப்புல இருந்து கீழ இறக்கி சுட்டுக்கொன்னுடுவார்.

இந்த மாதிரி ஆளுங்களை இப்படித்தான் போட்டுத்தள்ளணும். அப்படின்னு ஒரு எண்ணம்தான் இது வரை படம் பார்த்தவங்களுக்கு தோணும். எனக்கும் அப்படித்தான்.

ஆனா படத்துல முக்கிய திருப்பமே இனிமேதான்.என்கவுண்ட்டர் செய்த இன்ஸ்பெக்டருக்கு போன் வருது. அதுல பேசுறது, அந்த பத்து பிணங்களை பரிசோதனை செய்த டாக்டர்.

"கேன்சர் உட்பட பல காரணங்களால இயற்கையா மரணமடைஞ்ச பத்துபேரோட உடல்கள்தான் அவை. இவங்க கொலை செய்யப்பட்டிருக்க சான்சே இல்லை. அவன் ஏன் இப்படி கொலை செய்ததா பொய் சொல்லி சரணடைஞ்சான்னு தெரியலை. நல்லா விசாரிங்க சார். அவசரப்பட்டு அவனுக்கு தண்டனை வாங்கித்தந்துடாதீங்க.டீடெய்ல்டு ரிப்போர்ட் சீக்கிரம் தந்துடுறேன்."

இதுதான் அந்த டாக்டர் பேசின விஷயம்.இப்போ அதிர்ச்சி அடையுறது இன்ஸ்பெக்டர் மட்டுமில்ல...நாமும்தான்.

இந்தக் காட்சிக்குப்பிறகு போலி என்கவுண்ட்டரில் கொலைசெய்யப்பட்ட இளைஞனின் வாக்குமூலமாக அடுத்த காட்சி வீடியோவில் வருகிறது.

"இந்த வீடியோவை நீங்க பார்க்குறீங்கன்னா என்னைய போலி என்கவுண்ட்டர்ல என்னைய போட்டுத்தள்ளிட்டாங்கன்னு அர்த்தம்.ஏற்கனவே இது மாதிரி போலியான என்கவுண்ட்டர்ல என் அண்ணனை இழந்தேன். அதனால மனித உரிமைகளுக்காக உயிரைக்குடுத்துப் போராடுற போராளிதான் நான்.

இதுக்காகவே ரொம்ப சிரமப்பட்டு நான் குற்றவாளின்னு நம்பவைக்கிற மாதிரி போலி ஆதாரங்களை உருவாக்கியிருக்கேன். இந்த வழக்கை போலீஸ் உணர்ச்சிவசப்படாம நேர்மையா விசாரிச்சா நான் குற்றவாளி இல்லைன்னு சுலபமா கண்டுபிடிச்சுருக்கலாம். ஆனா அதுக்கெல்லாம் போலீஸ்காரங்க தயாரா இல்லைன்னுங்குறதை  என் உயிரைக் கொடுத்து உங்களுக்குப் புரிய வெச்சிருக்கேன்." இது தவிர இன்னும் சில விஷயங்களை அந்த இளைஞன் பேசுவதுடன் அந்த வாக்குமூலம் முடியும்.

இதைப் பேசி முடித்ததும் அந்த இளைஞனின் முக பாவம் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.எதையோ இழந்தது போன்ற உணர்வு.அந்த இயக்குனர் ஐந்து நிமிடத்தில் இப்படி ஒரு அழுத்தமான படம் கொடுத்தது நான் எதிர்பார்க்காத ஒன்று.
******
இந்த நிகழ்ச்சி இன்று 18 மார்ச் 2009 இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகும்.
******
இப்போது என் மனதில் தோன்றிய எண்ணங்கள்.கொலை, தற்கொலை போலவே மிகவும் மடத்தனமான ஒன்றுதான் இந்த என்கவுண்ட்டரும்.
சட்டத்தில் கடுமையான விதிகள் குற்றவாளிகளை இறுக்கிப்பிடிக்கவும் நியாயமான பார்வை அப்பாவிகளைக் காப்பாற்றவும் என்று நினைத்தே உருவாக்கப்பட்டன. ஆனால் நடப்பது என்ன? சட்டத்தில் உள்ள ஓட்டைகள் தொழில்முறை குற்றவாளிகள் தப்பிக்கவும், சட்டத்தில் உள்ள கடுமையான விதிமுறைகள் அப்பாவிகளை செய்யாத குற்றங்களை சுமத்தி சிக்கவைக்கவும் மட்டுமே அதிகமாகப் பயன்படுகின்றன.

கடுமையான குற்றம் செய்பவர்களை இப்படி தண்டித்தால்தானே பயம் இருக்கும் என்று நீங்கள் சொல்லலாம்.அந்த ரவுடிகள் இப்படி வளர முக்கியக் காரணமாக இருப்பதே சில அரசியல்வாதிகளும் சில காவல்துறை அதிகாரிகளும்தானே. அதிலும் பல என்கவுண்ட்டர்கள், இந்த ரவுடிகளை கோர்ட்டில் நிறுத்தினால் தாங்கள் சிக்கிக்கொள்வோமே என்ற பயத்தில் அரசியல்வாதிகள் செய்யச்சொல்வதால்தான் அரங்கேற்றப்படுகின்றன.

வல்லரசு படத்தில் ஒரு வசனம் வரும். மன்சூர்அலிகான் பேரணிக்கு அனுமதி கேட்கச் செல்லும் போது அத்தனை பேரை வெட்டுனேன். இத்தனை பஸ்சைக் கொளுத்தினேன்னு சொல்லிகிட்டே போவார்.  அவரை அடிச்சு துவைக்கும் விஜயகாந்த்,"நீ ஜாதி பேரை சொல்லி ஒரு பஸ் மேல கல்லை வீசுனப்பவே லோக்கல் ஸ்டேஷன்ல இருந்த கான்ஸ்டபிள் உன் கையை உடைச்சுருந்தா நீ இந்த அளவுக்கு ரவுடியா மாறி இருக்க மாட்ட." என்று பேசும் வசனம் நூறு சதவீதம் உண்மை என்பது என் கருத்து.

பல நாடுகளிலும் மரண தண்டனையை முற்றிலும் நீக்கியிருக்கும்போது, அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே இங்கே என்கவுண்டர் என்ற பெயரில் போலி முகமூடிக்குப்பின்னால் படுகொலைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் கூட பல கைதிகளை வைத்து கோயில்கள், அணைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்போதும் இப்படி கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டிய குற்றவாளிகளை ஏன் இப்படி ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளக்கூடாது?...அவர்கள் தண்டனைக்காலம் முடிந்து மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழவே முடியாது. ஆயுளுக்கும் இப்படி பொதுப்பணியில் இருந்தே காலம் கழிக்கவேண்டும் என்று ஒரு நிலை இருந்தால் தொடர்ச்சியாக குற்றம் செய்ய ரவுடிகளுக்கு மனம் வருமா? சிறையில் முதல்வகுப்பு,....................ர் வகுப்பு என்று இருப்பதையே நீக்க வேண்டும்.
காலத்தை இழந்தால் கூட நாம் பெற வேண்டிய எதோ ஒன்று தள்ளிப்போகும். ஆனால் உயிரை எடுத்துவிட்டால் பிறகு எந்த சூழ்நிலையிலும் அதற்கு மாற்று என்பது கிடையவே கிடையாது.

இது என்னுடைய கருத்து.இதில் உடன்பாடு இல்லாதவர்கள் என்னைத் திட்டாமல் அவர்களின் கருத்தை அவரவர் வலைப்பூவில் பதிவாக வெளியிடக்கோருகிறேன்.

புதன், 10 மார்ச், 2010

நித்தியானந்தா நீலப்படமும் ஷோலே திரைக்காவியமும்

'ஏய்யா பையை வெச்சிட்டு வந்துட்டியே அது தனியா மெட்ராஸ் வருமா?' இந்த வசனத்தைப் பற்றி சொல்லும்முன் ஷோலே படம் பற்றி பேசி விடுகிறேன்.

வாடகை கொடுத்து தினசரி ஒரு காட்சிகாளாக ஒரு படத்தை ஆளில்லா தியேட்டரில் காட்டிவிட்டு திரையுலக வரலாற்றுச் சாதனை என்று சொல்பவர்கள் "பணம் கொடுத்து படம் பார்க்க வர்றவனுங்க தப்பிச்சாச்சு.சம்பளம் வாங்குறதால நான்தான் மாட்டிகிட்டேன்."அப்படின்னு கதறுற ஆப்ரேட்டர்களோட குரலையும் கொஞ்சம் கேட்டால் தேவலை.

இப்படி எல்லாம் இல்லாம மெய்யாலுமே சாதனை பண்ணின ஹிந்திப்படம்தான் ஷோலே. திருவள்ளுவரே கதறுற மாதிரியெல்லாம் அவங்க தமிழ் பேசலை. நேரடி ஹிந்திப்படமாவே ரிலீஸ் ஆனாலும் பள்ளிக்கூடத்தின் பக்கமே ஒதுங்காதவங்க கூட அவ்வளவு ஆர்வமா பார்த்தாங்க.

ஆனா எனக்கு இந்தப்  படத்தைப் பார்க்குற வாய்ப்பு 1997ல தான் கிடைச்சுது.(வழக்கம்போல நான் தியேட்டர்ல வேலை பார்த்தது பத்தின புராணம்தான் இது. கொஞ்சம் பொறுத்துக்குங்க.) இருபத்துமூணு ரீல் கொண்ட படம்.ஒரே டிக்கட்டில் இரண்டு படங்கள் அப்படின்னு விளம்பரம் பண்ணலாம். அந்த அளவுக்கு நீ.............ளமானது.

புரொஜக்டர் அறையிலதான் எனக்கு வேலைன்னுங்குறதால சென்சார் சர்ட்டிபிகேட்ல இருந்து முழுப்படத்தையும் பார்த்துடுறது வழக்கம்.1975 ம் வருஷம் ஆகஸ்ட் 22ம் தேதி ரிலீசானதுன்னு நினைக்கிறேன். தேதி தவறா இருக்கலாம்.ஆனா வருஷம் இதுதான்.

இப்ப எதுக்கு இந்த புள்ளி விவரம்னுதானே கேட்குறீங்க.இப்ப எவ்வளவோ நாகரீகம் வளர்ந்துருக்குன்னு சொல்றோமே...இந்தப் படத்துல நான் ரொம்பவும் பிரமிப்போட கவனிச்ச ஒரு காட்சி இப்ப நினைவுக்கு வரக்காரணம் நித்தியானந்தா வீடியோ விவகாரத்துல சில ஊடகங்களின்  கேவலமான அணுகுமுறைதான்.
ஷோலே படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் குடும்பத்தையே வில்லன் அம்ஜத்கான் அழிப்பதாக காட்சி வரும்.பெரியவர்கள் சிலரை அவர் சுட்டுக்கொன்றதும் சிறுவன் ஒருவன் அங்கே ஓடி வருவான். அப்போது துப்பாக்கியை வைத்து அம்ஜத்கான் குறி பார்ப்பார். விசையை அழுத்து நொடி, நீராவி ரயில் எஞ்சினின் சக்கரம் சுழலுவதும்  இரைச்சலான சத்தத்துடன் நீராவி வெளியேறுவதும்தான் காண்பிக்கப்படும்.

இந்தப் படத்தை நான் திரையிட்டும் பதினாலு ஆண்டுகள் ஆகின்றன.இவ்வளவு நாட்கள் கழித்தும் இந்தக் காட்சி என் மனதில் நிற்கிறது. ஆனால் எவ்வளவோ படங்களில் மிக மோசமான ரத்தக் காட்சிகளைப் பார்த்தும் அவை அந்த நேரம் கூட ஒழுங்காக பதற வைக்கவில்லை.
இயக்குனர் மகேந்திரன், நானும் சினிமாவும் என்ற புத்தகத்தில் "எதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்று சில இயக்குனர்கள் அருவருக்கத்தக்க காட்சிகளைப் படமாக்குகிறார்கள் என்று வருத்தப்பட்டிருந்தார். கிராமங்களில் புதர் மறைவில் மக்கள் ஒதுங்குவதும் இயற்கைதான். அந்த இயக்குனரின் தாய்-தந்தை கூடுவதும் இயற்கைதான். அதற்காக அவற்றை அப்படியே படமாக்க முடியுமா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.இதையேதான் நானும் கேட்கிறேன்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் மகன் அவமானப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட தந்தை, கத்தியுடன் தண்ணீரில் மூழ்குவார். வெளியே அவரது உடல் வராது. தண்ணீரில் ரத்தம் மட்டும் கொப்பளிக்கும். இந்தக் காட்சியும் நம்மை பதற வைத்ததுதான்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும் தண்ணீரில் மூழ்கி இறந்த  குழந்தையை காட்டாமல் பொம்மை மிதப்பதைதான் காட்டுவார்கள்.இது போல் எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம்.

சுனாமியில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்திருந்தாலும் மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிய ஒரு புகைப்படக்கலைஞருக்கு விலை உயர்ந்த கேமராவையும் கிட்டத்தட்ட ஐந்தரை லட்ச ரூபாய் பரிசையும் பெற்றுத்தந்த ஒளிப்படம் எது தெரியுமா?
வேறு யாருமில்லாத கடற்கரையில் மண்டியிட்டுக் குனிந்து கதறும் பெண்மணி. அவரின் அருகில் பிரேமின் ஓரத்தில் ஒரு சடலத்தின் கை மட்டும். ஒட்டு மொத்த சுனாமியின் அவலத்தை செய்தி சேனல்களில் வந்த லட்சக்கணக்கான சடலங்களைக்காட்டிலும் இந்த ஒரு ஒளிப்படம் சொன்னது.

மக்களுக்கு துயரத்தையோ ஒரு விஷயத்தையோ உணர்த்த வேண்டும் என்று அவ்வளவு அசிங்கங்களையும் அள்ளித் தெளித்தால் அது வெறும் வியாபார உத்திதான் என்பது அனைவருக்கும் தெரியும்.

படங்களில் மோசமான காட்சிகள் இடம்பெற்றாலும் அவற்றை தியேட்டருக்குச் சென்றுதான் பார்ப்போம்.அருவருக்கத்தக்க காட்சிகள் தொலைக்காட்சியில் வந்தாலும் வேறு சேனல் மாறி விடுவோம். ஆனால் எல்லாரும் பரிந்துரைக்கும் சேனல் என்றால் டிஸ்கவரி, நியூஸ் சேனல் பாருங்கள் என்பதுதான். தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிக அளவில் அனைவரும் பார்க்கும் செய்தி சேனல் ஒன்றில் சாமியாரின் லீலைகளை அம்பலப்படுத்துகிறேன் என்ற போர்வையைப்போர்த்திக்கொண்டு கண்ணியமான பெற்றோர்களை இப்படி அலற விட வேண்டுமா என்பதுதான் என் கேள்வி.

பொங்கல் அன்று குருவி படத்தை திரையிட்ட கலைஞர் தொலைக்காட்சியில் நான் ஒரு விஷயத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். சண்டைக் காட்சிகளில், அரிவாள் வெட்டு வரும்போது எல்லாம் காட்சிகள் கருப்பு வெள்ளையாகிவிடும்.படத்திலேயே இப்படியா அல்லது சேனலில் செய்த நல்ல காரியமா என்பது தெரியவில்லை.

விஜய் நடித்த கில்லி படத்தில் அவர் த்ரிஷாவுடன் மதுரையில் இருந்து முதலில் தப்பிக்கும் காட்சியில் டாடா சுமோ சேசிங் எடுக்கும்போது ஒரு வாகனம் மோதி படத்தின் கேமராமேன் கோபிநாத் படுகாயமடைந்ததாக எல்லாம் செய்திகள் வெளியானது. அந்தக் காட்சிகளில் என் கவனத்தைக் கவர்ந்தது இரண்டு ஷாட்டுகள்.

ராஜா என்ற ஸ்டண்ட் நடிகர் (மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரில் வீரப்பனின் கேரக்கடரில் நடித்தவர். அந்த வேடத்திற்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தினார்.இதைப்பார்க்கவில்லையா நீங்கள். போக்கிரி படத்தில் வடிவேலுவின் 'வட போச்சே' காமெடியில் காதலி கெ ளரி எழுதிய கடிதத்தை இழப்பாரே அவர்தான்.) ஏற்கனவே சுமோ ஓட்டிச் செல்லும் ஒருவரை எட்டி கீழே உதைத்துத் தள்ளிவிட்டு இவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கதவை சாத்திக்கொண்டு தொடர்ந்து வாகனத்தை இயக்கும் ஷாட் ஒன்று.

அந்த சுமோவை ஆட்டு மந்தைக்குள் விடும் காட்சியில் ஆட்டின் மீது கார் ஏறும் காட்சியைக் காட்டாமல் முன் பக்க கண்ணாடி முழுவதிலும் ரத்தத்தைக் காட்டுவதோடு, அதை வைப்பர் துடைப்பதாக காட்டுவார்கள்.

சன் தொலைக்காட்சியில் முன்பு கில்லி படத்தை ஒளிபரப்பும்போது ரத்தத்தை வைப்பர் சுத்தம் செய்யும் ஷாட்டை நீக்கியிருந்தார்கள். அவ்வளவு கவனமாக இருந்தவர்கள் நித்தியானதா தொடர்பான காட்சிகளை அருவருக்கத்தக்க வகையில் காட்டியதாக சிலர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.(நாலு ஆட்டோவுல இருபது பேர் உருட்டுக்கட்டையோட வந்து பதில் சொல்லாம இருந்தா சரிதான்.)

எங்க வீட்டுல கேபிள் இணைப்பை துண்டிச்சு ஒரு வருஷமாச்சு.இப்ப சாதாரண டி.டி.ஹெச் இணைப்பு மட்டும்தான். பொதிகை, மக்கள், மெகா, கலைஞர் - இவை மட்டுமே தமிழ் சேனல்கள்.நம்புங்கப்பா.

*******
அடுத்து வெட்டித் தனமா ஒரு தகவல்.

மௌன கீதங்கள் படத்தில் முதல் காட்சியில் பஸ் வந்து நிற்கும். பாக்யராஜ் சூட்கேசுடன் பஸ்சில் ஏறுவார்.அவருடைய லெதர் பேக் கீழே இருக்கும். டைரக்டர் பேக்கை மறந்து விட்டார் என்பது புத்திசாலி ரசிகரின் புளகாங்கிதம். ஆனால் படத்தில் கண்டக்டர் பாக்யராஜிடம்,'ஏய்யா பையை வெச்சிட்டு வந்துட்டியே அது தனியா மெட்ராஸ் வருமா?'  என்று கேட்பார். அசடு வழிய அதை எடுத்துக்கொள்வார் பாக்யராஜ். அசடு ஹீரோதானே தவிர டைரக்டர் அல்ல என்று உணர்த்தி ரசிகர்களை அமைதியாக படம் பார்க்கச் செய்துவிடுவார். ரசிகர்களுடன் கண்ணாமூச்சு ஆடும் இந்த டெக்னிக்கை அடிக்கடி பயன்படுத்துவார், பாக்யராஜ்.

******
ஷோலே படத்தை 1997ல் நாங்கள் மீண்டும் திரையிட்டபோது இருபத்து மூன்று ரீல் ரொம்ப அதிகம்னு நினைச்சு சில காட்சிகளை தவிர்த்து திரையிட்டோம்.படம் பார்க்க வந்திருந்த ஆளுங்க,"என்னப்பா, ஹேம மாலினி மாங்கா தோப்புக்குள்ள மாங்கா பறிக்க போன காட்சியை காணோம்...நீ சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டியா?"அப்படின்னு நீக்கிய காட்சிகளை ரொம்ப ஞாபகமா கேட்டாங்க.அதுக்கு இருபத்தி ரெண்டு வருஷத்துக்கு முன்னால திரையிட்ட படம். இந்த அளவுக்கு காட்சிகள் படம் பார்த்தவங்க மனசுல பதிஞ்சது.ஆனா இப்ப ஒரு படம் பார்த்தா அது எந்தப் படம்னு நினைவுக்கு கொண்டுவரவே வல்லாரை கீரை சாப்பிட வேண்டியிருக்கு. அது சரி...ஒரு படத்துல இருந்து சுட்டா நம்மால கண்டுபிடிக்க முடியும்.டைரக்டருங்க சின்ன வயசுல இருந்து பார்த்த எல்லா படத்துல இருந்தும் சுட்டு சுட்டு படம் எடுத்தா இப்படித்தான்.

வியாழன், 18 பிப்ரவரி, 2010

பட்டிக்காட்டை விட்டுப் பறந்து போன பச்சை போர்டு...

(இலவச இணைப்பு பரிசலின் புத்தகம் பற்றிய என் கருத்து)
 
சிவகங்கை பகுதி(சீமை)யில் ஆலவிளாம்பட்டிக்காடுன்னு ஒரு கிராமமாம்.அங்க ஒரு மதுக்கடை திறந்திருக்காங்க.பேர சொல்லி அதோட ஓனர் யாருன்னு எழுதுனா உடனே ....................அவமதிச்சுட்டதா வழக்கு போட்டாலும் போட்டுடுவாங்க. (முதல்ல வெச்ச பச்சைக்கலர் போர்டுதான் இப்பவும் இருக்கா இல்ல, மஞ்சளுக்கு மாத்திட்டாங்களான்னு தெரியலையே)

அதுதான் தெருவுக்குத்தெரு குடி நீருக்கான குழாய் இல்லன்னாலும் யாரும் 'குடி'மகன்களுக்கான நீர் கிடைக்காம திண்டாடக்கூடாதுன்னு அரசு முயற்சி எடுக்குறது உனக்குப் பிடிக்கலையான்னுதானே கேட்குறீங்க.

விஷயம் அது இல்லை சார்.அந்த கிராமத்துல வரதட்சணை வாங்கக்கூடாது, புகை ,மது இதையெல்லாம் பயன் படுத்தக்கூடாதுன்னு பல வருஷங்களுக்கு முன்னாலயே சத்தியப்பிரமாணம் பண்ணி அதை ஓலைச்சுவடியிலயும் எழுதி வெச்சிருக்காங்களாம்.(அந்த மக்களோட உரிமையைப் பறிச்சு அடிமையா வெச்சிருக்குறதா ரெண்டு பகுத்தறிவு பேர சொல்லி சண்டைக்கு வராம இருந்தா சரிதான்.)

மக்கள் குடிக்கிறதாலதான் நாங்க மதுக்கடை திறந்தோம். அப்படின்னு அதிகாரத்துல இருக்குறவங்க சொல்லுவாங்க. கடை இருக்குறதாலதான் நாங்க குடிக்கிறோம்...கடை முதலாளியும் பொழைக்கணும்ல அப்படின்னு போதையில உளறுற ஆட்களையும் நாம பார்த்திருப்போம்.

ஆனா இந்த கிராமத்துல மதுக்கடை திறந்திருந்தாலும் ஒருத்தர் கூட அதை வாங்க வரலையாம்.கடையைத்திறந்தவங்களே மூடிட்டாங்களாம்.கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு புரட்சின்னு சொல்லுவாங்க. இது சத்தமும் இல்லாத புரட்சி.

குடும்பத்துக்குள்ள அனாவசிய சச்சரவு இல்லை.அக்கம்பக்கத்து ஆட்களோட குடிச்ச போதையால தகராறு இல்லை.தொண்ணூறு வயசு வரை நிறைய பேர் ஆரோக்கியமா இருக்காங்க.-இதெல்லாம் அந்த கிராமத்து ஆட்களோட ஸ்டேட்மெண்ட்.

24.02.2010 தேதியிட்ட குமுதம் வார இதழ்ல இந்த கட்டுரை வந்துருக்கு.

எக்கச்சக்கமா சம்பாதிக்கிற பணத்தை எப்படி செலவு செய்யுறதுன்னு தெரியலை,வேலைப்பளு காரணமா ஏற்பட்ட அசதியை மறக்க கொஞ்சம் ஜாலியா இருக்கோம் இப்படி விதவிதமா காரணம் சொல்ற புண்ணியவான்களே...உங்களை நான் எதுவும் சொல்லலை.அது உங்க சவுகர்யம். ஆனா அதே போதையோட வண்டியோட்டிகிட்டுப் போய் யாரையாச்சும் காலிபண்ணிட்டு, குடிக்காதவன் ஆக்சிடண்ட் பண்றது இல்லையான்னு உங்க தப்பை நியாயப்படுத்தாதீங்கன்னு தான் சொல்றேன்.

 தினமும் நிச்சயமில்லாத கூலி வேலை செய்து இருநூறு ரூபா சம்பாதிச்சு அவ்வளவையும் குடிச்சு காலி பண்ணிட்டு சிகரட் கடன் கேட்டு கொடுக்காத பெட்டிக்கடைக்காரனோட பொறப்பை கேவலமா பேசிட்டு,வீட்டுல பணம் இல்லாததால சமைக்காத மனைவியை அடிச்சு உதைச்சுட்டு, ஆசிரியர் நோட்டு வாங்கிட்டு வரலைன்னா நாளைக்கு பள்ளிக்கூடத்துக்குள்ள விடமாட்டாராம்னு சொல்ற பையனை,"ஏண்டா...ஒரு பொட்டிக்கடைக்காரன் என்னைய கேவலமா பேசிட்டான். உனக்கு படிப்பு ஒரு கேடா"ன்னு திட்டுற மோசமான மனிதர்களும்,

மது அருந்தி தைரியம் வரவழைத்துக்கொண்டு(?!) கொலைசெய்ய செல்லும் கூலிப்படையினரையும்தான்  குமுதத்துல வெளிவந்த கட்டுரை எனக்கு நினைவூட்டியது.

******

துணிச்சலுக்கு பாராட்டுகள் என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார் நம்ம பரிசல் அண்ணன்.அதனால குழிகளுக்கு நடுவுல இருக்குற சாலைகள்ல(?1) போற எச்சரிக்கையோடதான் தொகுப்புக்குள்ள பயணம் பண்ணினேன்.
பரவாயில்லை...எதிர்பார்த்ததோட நல்லா வந்துருக்கு.(அடப்பாவி...என் தொகுப்போட உள்ளடக்கம் பத்தி எனக்கு தெரியும்.எதிர்பார்த்ததோட நல்லா வந்திருக்குன்னா அப்ப எதையுமே நீ எதிர்பார்க்கலையான்னு பரிசல் அண்ணன் கேட்குறது எனக்கு புரிஞ்சு போச்சு.)

தனிமை-கொலை-தற்கொலை * இந்தக்கதை நம்மில் பெரும்பாலானோர் மிகச்சரி என்று நினைத்துக்கொண்டு ரொம்ப ரொம்ப தவறான காரியத்தில் ஈடுபடுவோம் என்பதை உணர்த்துகிறது. பில் தொகையை எத்தனை முறை கூட்டினாலும் நாம் முதல் முறை போலவே தவறாகத்தான் கூட்டிக்கொண்டிருப்போம். அது போலதான்.

காதல் அழிவதில்லை * மொக்க படத்தோட தலைப்புல (சிம்பு மன்னிக்க)குடும்பத்துல குதூகலம் குறையாம இருக்குற ரகசியத்தை சொல்ற கதை.

காதலிக்கும் ஆசையில்லை * எனக்கு டீ,காப்பி குடிப்பதை நிறுத்தி ரொம்ப நாட்களாகிவிட்டது.இப்போதும் யார் வீட்டுக்காவது போகும்போது அவர்களிடம் எனக்கு வேணாம் என்று மறுக்கும்போது அவர்களின் முகம் களையிழப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

நாம் ரொம்ப பெருமையாக ஒரு விஷயத்தை சொல்லும்போது எதிராளியின் இதயம் கிழிந்து தொங்குவதை கவனிப்பதே இல்லை.அதை எப்படி சொல்ல வேண்டும், என்ற நேர்த்தியை இந்த கதை சொல்கிறது.

நான் ரொம்ப நல்லவனாக்கும் என்று சொல்வது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு பெருமை தரலாம். ஆனால் அந்த வார்த்தைகளும் சிலரை காயப்படுத்தும் என்பதை அழகாக புரிந்துகொண்டேன்.

BUTTERFLY EFFECT *இந்தக்கதை , இந்த நிமிடம் வாழ் என்ற ஞானியரின் தத்துவத்தை அது தத்துவம் என்று புரியாமலேயே கடைப்பிடிப்பது குழந்தைகள்தான் என்று சொல்கிறது.

இருளின் நிறம் * நாணயத்துக்கு மட்டுமல்ல...இருளுக்கும் இன்னொரு பக்கம் உண்டு என்று புரியவைத்த கதை

நான் அவன் இல்லை*ச்சே...இப்படித்தானா போய் சிக்குறது...என்று சார்லியைப் பார்த்து காமெடியாத்தான் சொல்லத்தோன்றியது. நிஜ வாழ்க்கையிலும் பல சம்பவங்கள் இப்படித்தான் யு டர்ன் அடித்து கவிழ்த்து விடும் என்ற நிதர்சனம் இந்தக்கதையில்  உண்டு.

மனிதாபிமானம்*என்ன நடந்தது என்று புரியாமல் நாம் உதிர்க்கும் சொற்கள் பல நேரங்களில் மிகவும் தவறாகப் போய் விடும் வாய்ப்பு உண்டு.இந்தக்கதையில் எதுவும் நடக்கவில்லை.ஆனால் எதிர்பாராத வில்லங்கத்தை உருவாக்கிவிடலாம். எனவே போனில் பேசும்போதும் கவனம் தேவைன்னு சொல்லிட்டீங்க.

நட்பில் ஏனிந்த பொய்கள்* பல நேரங்களில் ஒருவரின் நடத்தைதான் மதிப்பை உருவாக்கும் என்பது புரியாமல் ஏன் இந்த பொய்கள் என்று யோசிக்கவைத்த கதை.

கைதி* ஒரு பக்கத்தில் ஒரு கிரைம் ஸ்டோரி. நான் எதாவது டென்ஷனில் இருக்கும்போது சட்டென்று நூலகத்துக்குப்போய் இது மாதிரியான கதைகளைத்தான் எடுத்துப்படிப்பது வழக்கம்.கதைக்கு கையுண்டா காலுண்டான்னு எல்லாம் கேட்காம படிக்கணும் என்று நினைக்கவைத்த கதை.

ஜெனிஃபர் * இது கதையின் இறுதியில் சொன்னதைப்போல் கவர் ஸ்டோரியாகவே போடலாம்.மற்றபடி என்னைப்போல சாமானியர்களுக்கெல்லாம் சாத்தியமில்லை என்று நான் யார் என்பதை புரியவைத்த கதை.

கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன் * செல்போன் ஆடம்பரப்பொருள் என்று ஒரு விவாதம் எழுந்த நேரத்தில் இது மாதிரியான அவசரத்துக்கெல்லாம் உதவுமே என்று சமாதானம் சொன்னார்கள்.ஆனால் இந்த கதையில் உள்ளது போல் நடப்பதை எல்லாம் பார்க்கும்போது (படிக்கும்போது) செல்போன் அநாவசியம் என்றும் கத்தத் தோன்றுகிறது.

டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும் * இது ராஜேஷ்குமார் பாணியில் தாவித்தாவிச்செல்லும் கதை. கதையின் தட்டச்சு வடிவமைப்பு எனக்கு உறுத்தியது இந்தக் கதையில்தான்.

மனசுக்குள் மரணம் * ஆண்ட்டி கிளைமாக்ஸ் என்று சொல்வார்களே...அது இந்தக்கதையில் மிகப்பொருத்தமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஸ்டார் நெம்பர் ஒன்!* இதுதான் உலகம்.எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பது பணம்தான். வேறென்ன சொல்ல.

 நட்சத்திரம் *அழகி படத்தில் வந்த ரோட்டோர மனிதர்கள் என் நினைவில் வந்து போனார்கள்.இதையெல்லாம் பார்க்கும்போது நான் ரொம்பத்தான் வசதியா இருக்கேனோன்னு ஒரு எண்ணம்.

சமூகக்கடமை * பலர் தனக்கு என்ன பொருந்தும் என்று பார்க்காமல் அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தே பொழுதை போக்குவார்கள். இப்படிப்பட்ட மனிதர்களில் பலர் தாங்களே அழிவார்கள், இந்தக்கதையில் வரும் நபர் மற்றவரின் திறமையை ஒன்றுமில்லாமல் செய்வதைப்பார்க்கும்போது அவர்மீது ஆத்திரம் வருகிறது.....அட...பரிசல் அண்ணா...என்னைப்பொறுத்தவரை இந்த ஒரு இடத்துலேயே நீங்க ஜெயிச்சுட்டீங்க....

(பரிசல்,கேபிள் அப்படின்னு லேபிள் போட்டா கூட நாலு ஹிட்ஸ் கிடைக்குது.எதோ உங்க புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுறதால கம்ப்யூட்டரால அதுல ஒர்க் பண்ற ஆளுக்கும் ஏ/சி கிடைக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்-

இதெல்லாம் ஒரு விமர்சனமான்னு ஒரு கேள்வி வரணும்...வந்தாதான் நாங்களும் ரவுடின்னு நாலு பேர் ஒத்துக்குவாங்க.மானத்தைக் காப்பாத்திடுங்கண்ணே...)

புதன், 17 பிப்ரவரி, 2010

ரொம்பவும் துணிச்சல்தான்...அப்படின்னு நான் சொல்லலீங்க...

விளம்பரத்துல கேபிள் அண்ணனோட புத்தக தலைப்பை அவசரமா படிச்சப்ப டக்கீலான்னுங்குறதை ஷக்கீலான்னுதான் முதல்ல படிச்சேன்.(எனக்கு வயசாகிப்போச்சோ...முதல்ல கண்ணை ஒழுங்கா செக்கப் பண்ணணும்.)
தொகுப்பு முழுக்க கதைகளோட வர்ணனை ஒரு மாதிரியாத்தான் இருந்தது.மனசுக்குள்ள இருக்குறது வெளியில தெரிஞ்சுடக்கூடாதுன்னு நினைச்சுகிட்டு முகமூடியோட இந்த சிறுகதைகளை விமர்சனம் பண்ணினா அது எப்படி இருக்கும்னு தெரியுமா?

அளவுக்கு அதிகமா பெண்ணின் அங்கங்களை இப்படி வர்ணிச்சா, அது எல்லார் மனசையும் கெடுத்துடும்.-இப்படி சொல்லி, கதைகள்ல இருக்குற, சிந்திக்க வைக்கிற விஷயங்களையும் இருட்டடிப்பு செய்துடுற விமர்சனமாத்தான் இது இருக்கும்.

நாம கண்ணை மூடிட்டா உலகத்துல நடக்குற எல்லா சம்பவங்களும் நின்னா போயிடுது?அதனால எது நல்லது, எது மோசம்னு குற்றம் குறை கண்டுபிடிக்காம, ஒரு ஓரமா நின்னு என் மனசுக்குத் தோணின விஷயங்களை தட்டச்சிருக்கேன்.

முத்தம் கதையில் வரும் நிஷாவைப்போல் அவதிப்படும் பெண்கள் நம் நாட்டில் ஏராளமாக இருக்கிறார்கள்.அவளிடம் எதையும் எதிர்பார்க்காமல் அவன் உதவி செய்தான் என்பதற்கு காரணம், இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பதுதான். அதாவது இதுவரை இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. சில விஷயங்களில் ஆற அமர யோசித்து முடிவெடுப்பதற்குள் அந்த சூழ்நிலைகள் நம்மை விட்டு எங்கோ போய்விடும்.

ஆண்டாள் கதையில் வருவது போன்று நம்மில் பெரும்பாலானோருக்கு பால்ய வயது அனுபவங்கள் கொஞ்சமாவது ஏற்பட்டிருக்கும்.அந்த வயது பொறாமையில் எந்த உள் நோக்கமும் இருக்காது.அவங்க நம்ம கூட மட்டும் நட்பா இருக்கணும் என்ற ஒரே ஒரு குறிக்கோள்தான் இருக்கும்.(ஆனால் இப்போது ஊடகங்களின் தாக்கத்தால் பெரியவர்களையும் தாண்டிய கறை படிந்த மனசு பால்ய வயதிலேயே ஏற்பட்டு வருவதாக எனக்குத் தோன்றுகிறது.)

ஒரு காதல் கதை, இரண்டு கிளைமாக்ஸ் - இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்துக்கே இடமில்லாமல் ஒப்புக்கொள்ள வைக்கும்  வகையில் உறுதியாக சொல்லப்பட்ட கதை.

துரை, நான்...ரமேஷ் சார் - கோடம்பாக்கத்தை நம்பி வந்த ஆயிரக்கணக்கான ராஜூக்களை நினைவூட்டிய கதை.இப்படிப்பட்ட மனிதர்கள் யாரும் இல்லை என்று மறுக்க யாரும் இல்லை.

என்னைப்பிடிக்கலையா கதை, இப்போது நிறைய குடும்பங்களில் உள்ள தலையாய பிரச்சனையை அப்பட்டமாக்குகிறது.செய்தித்தாள்களில் வரும் கள்ளக்காதல் கொலைகள் பற்றிய செய்திகளுக்கு இந்தக்கதையில் அந்தப்பெண் சொல்லும் காரணம்தான் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மாம்பழ வாசனை - தொடக்கத்தில் ஒரு மாதிரியாகவே போனாலும் கதையின் இறுதியில் எல்லாவற்றையும் மறந்து அடப்பாவமே என்று சொல்ல வைத்துவிட்டது.

நண்டு சிறுகதை, நம் நாட்டின் மருத்துவ சிகிச்சை ஏழைகளை ஓரங்கட்டுவதில் எவ்வளவு தீவிரமாக இருக்கின்றன என்பதை மறைமுகமாக சொல்கிறது.இவர்களுக்கெல்லாம் நம்பிக்கைதான் வாழ்க்கை.

ஒட்டுமொத்தமாக இந்த சிறுகதைத்தொகுதியைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் மனதில் உள்ள ஒரு மாதிரியான உணர்வுகளைத்தூண்டின என்று சொல்லவில்லை என்றால் நான் பொய் சொன்னவனாவேன்.

ஆனால் இதுதான் உண்மை.இந்தக்கதையில் உள்ள கதாபாத்திரங்கள் யாருமே முழுவதும் கற்பனையானவர்கள் என்று சொல்லவே முடியாது. எங்கோ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் கதையில் உள்ள அவலங்களை, நம் சமூகத்தில் உள்ள அவலமாக கருதி, அதற்கு நாமும் நேரடியாகவோ மறைமுகமாவோ காரணமாக இருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டு, நம் மீதே கோபப்பட வேண்டியதுதான்.

இதை  விமர்சனம் என்று சொன்னாலும் அவ்வளவுக்கு எனக்கு திறமை போதாது. சாதாரண வாசகனின் உளறல் என்று இதை எடுத்துக்கொள்ளவும்.
******

துணிச்சலுக்கு பாராட்டுகள் என்று எழுதி பரிசல் அண்ணன் அவரோட புத்தகத்தில் கையொப்பமிட்டிருந்தார். அட்டையைத் திருப்பியதும் நான் பார்த்தது இந்த வார்த்தைகளைத்தான்.தன் புத்தகத்தை படிக்கப்போகும் வாசகருக்கு இப்படி ஒரு வரவேற்பு கொடுத்ததால் உண்மையில் அவருக்குதான் துணிச்சல் அதிகம் என்று சொல்வேன்.

எவ்வளவோ பண்ணிட்டோம்...இதைப்பண்ண மாட்டோமா...படிச்சு முடிச்ச பிறகும் பதிவு எழுதிகிட்டு இருக்கேனே.இப்ப சொல்றேன். நானும் துணிச்சல்காரன் தான்.


நேரமின்மை காரணமாக டைரிக்குறிப்பும், காதல்மறுப்பும் புத்தகம் பற்றிய விமர்சனம் நாளைக்கு.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கேபிள் - பரிசல் - புத்தக விமர்சனம் - விரிவான விபரம் நாளைக்கு...

கேபிளின் புத்தகத்தில் இருந்த சில கதைகளை நான் விகடனில் வெளிவந்தபோதே படித்திருக்கிறேன்.தொகுப்பில் முதல் கதையான முத்தத்தில் ஏறிய கிக், புத்தகம் முழுவதையும் படித்து முடித்தவரை இறங்கவே இல்லை.கேபிள் அண்ணன் வித்தியாசமான கோணங்களில் இயல்பான மனிதர்களை படம்பிடித்துக் காட்டியிருந்தார்.

பரிசல் அண்ணன் ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு களத்தில் அமைத்துக்கொடுத்திருந்தார்.தொகுப்பில் இருந்த பல கதைகள் அட என்று சொல்ல வைத்தன.

பணிச்சுமை காரணமாக விரிவான விமர்சனத்தை நாளை எழுதுகிறேன்.ஆனால் பரிசல் அண்ணனோன புத்தகத்துல முதல் பக்கமே இப்படி எனக்கு அதிர்ச்சி கொடுக்கும்னு நினைக்கலை. அந்த ரெண்டு வார்த்தைகளைப்படிச்சதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(வடிவேலுவின் வசன உச்சரிப்பில் படிக்கவும்.)