Search This Blog

கும்பாபிஷேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கும்பாபிஷேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

திருவாரூர் – மருதம்பட்டினம் – ஆழித்தேர் – திருவிழா

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். சிதிலமடைந்திருந்த ஒரு சிவாலயத்தின் நுழைவாயில் மொட்டைக்கோபுரமாக இருந்த இடத்தில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30மணிக்கு மேல் 9.00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ராணி வார இதழ் - 18-09-2005
தினமணி கதிர் - 20-11-2005
குமுதம் பக்தி ஸ்பெஷல் - பிப். 2006
தினத்தந்தி குடும்பமலர் - 02-07-2006
தினகரன் ஆன்மிக மலர் - 03-05-2008
 
திருவாரூரில் ஓடும் ஆழித்தேரின் பெருமைகள் நிறைய பேர் அறிந்ததுதான். அந்தத் தேர் திருவிழாவுக்கு பிள்ளயார் சுழி போடப்படுவது திருவாரூரை ஓட்டிய மருதம்பட்டினத்தில் உள்ள உள்ள அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் என்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கும்.
திருவாரூர் பெரிய கோயிலில் ஆழித்தேரோட்ட திருவிழாவான பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான தொடக்க நிகழ்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் உள்ள சண்டிகேஸ்வரர், மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் ஆலயத்துக்கு வருவார். அங்கு பூமிக்குரிய பூஜைகள் முடிந்த பின்பு திருமண் எடுத்துச்சென்று முளைப்பாலிகை வளர்த்துதான் திருவாரூரின் பெரிய கோயிலில் கொடியேற்றம் நடைபெறும்.

தினமணி 30-08-2013

ஆலயம் உருவான காலம் உறுதியாக தெரியவில்லை. ஆலய அர்ச்சகருக்கு தெரிந்து கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெற்றதில்லையாம். ஆனால் பஞ்ச பாண்டவர் ஐவரும் தனித்தனியே ஒரு லிங்கம் வைத்து பூஜித்த பெருமைக்குரிய தலம் இது என்று செவிவழிச்செய்திகள் உலா வருகின்றன.
அதில் ஒரு கதை,  
பஞ்ச பாண்டவர்களுக்குள் ஒரு முறை யார் அதிகமாக இறைவனை வழிபட்டது என்பதை அறிய விரும்பினார்கள். இறைவன் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டு ஐவரையும் கயிலாயத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கே ஒவ்வொருவரும் பூஜை செய்தபோது இறைவனுக்கு அர்ப்பணம் செய்ததை கொண்டு வந்து காட்டச்சொன்னார். நான்கு வண்டிகள் வந்தன. தருமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்று ஒவ்வொரு வண்டியிலும் தனித்தனியாக எழுதி இருந்தது. பீமனுக்குரிய வண்டியை காணாமல் அனைவரும் திகைத்தார்கள்.

அப்போது இறைவன் பஞ்சபாண்டவர்கள மற்றொரு இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கே கணக்கிட முடியாத அளவில் பூக்கள், பழங்கள் என்று என்னென்னவோ குவிந்து கிடந்தன. நால்வருக்கும் இவற்றைப்பார்த்ததும் அதிர்ச்சி. நாம் அடிக்கடி கோயிலுக்கு போவோம். யாகங்கள் செய்வோம். ஆனால் பீமன் இறைவனை வழிபட்டது மிகவும் குறைவு. பிறகு எப்படி இவ்வளவு புஷ்பங்கள், பழங்கள், இன்னபிற பொருட்கள் என்று குழம்பினார்கள்.

அவர்கள் ஐயத்தை போக்கும்விதமாக சிவபெருமான் பேசினார். "உங்களப்போல் பீமன் வழிபாடு செய்வதற்கு என்று தனியாக நேரம் பார்த்ததோ இடம் ஒதுக்கியதோ கிடையாது. ஆனால் ஒரு இடத்தில் பூவைப்பார்த்தாலோ அல்லது சோலையைப் பார்த்தாலோ அடுத்தநொடி, `ஓம் சிவாய நமஹ... அனைத்தும் உனக்கே சமர்ப்பணம்' என்று சொல்லிவிட்டு மற்ற வேலைகள பார்க்கப்போய்விடுவான். மேலும் சாப்பிடும் முன்பு ஒரு நொடி என்னை நினைப்பான். அதனால் அவனுக்கு கல்லும் நஞ்சும் கூட ஜீரணமாகும். இப்பொழுது உண்மை புரிகிறதா?'' என்றார் இறைவன்.

பீமன் ஒரு இடத்தில் அமர்ந்து வழிபட்டது மிகக் குறைவான இடங்களில்தான் என்று தெரிகிறது. அப்படிப்பட்ட அபூர்வமான இடங்களில் மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் ஆலயமும் ஒன்றாக இருக்கக்கூடும் என்று கூறுகிறார்கள்.

தஞ்சமடைந்தவர்களுக்கு அடைக்கலம் தருபவர் அபிமுக்தீஸ்வரர். பாண்டவர்கள் கவுரவர்களால் அஞ்ஞான வாசம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதால் காட்டில் வாழ்ந்த பிறகு நாடு விட்டு நாடு போய்க்கொண்டே இருந்தார்களாம். அப்போது ஐந்து பேரும் இணைந்து ஒரு இடத்தில் தனித்தனி லிங்கங்கள வைத்து வழிபட்ட தலம்தான் மருதம்பட்டினம். மூலவர் அபிமுக்தீஸ்வரர் சற்று பெரிய லிங்க ரூபத்தில் தரிசனம் தருகிறார். அந்த கருவறையைச் சுற்றி நான்கு மூலைகளிலும் தனித்தனி விமானத்துடன் நான்கு லிங்கங்கள் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளன. கிழக்கு முகமாக இரண்டு. மேற்கு முகமாக இரண்டு. இது அபூர்வமான அமைப்பாகும்.

மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் கோயிலில் தற்போது முதலில் வரவேற்பது மூன்று நிலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட ராஜகோபுரம். திருப்பணிக்கு முன்பு இது மொட்டை கோபுரமாக இருந்தது.
அதனைக்கடந்து வெளிப்பிரகாரத்தினுள் நுழைந்தால் பிரமாண்டமான மகாமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் மையத்தில் நந்திபகவான் வீற்றிருக்கிறார். பழைய ஆலயத்தில் நந்திபெருமானுக்கு மட்டும் சின்னதாக மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. நந்தியம்பெருமானிடம் உத்தரவு பெற்று கருங்கல் தூண் மற்றும் மேற்கூரையுடன் அமைந்த பழமையான மகாமண்டபத்தினுள் நுழைகிறோம். 


எதிரே மூலவர் அபிமுக்தீஸ்வரர் அருள் பொங்க காட்சி தருகிறார். வடக்கே அம்பாள் மதுரபாஷிணி தென்முகமாக தோற்றமளிக்கிறாள். தமிழில் தேன்மொழியாள், இனிமையான குரல்வளம் மிக்கவள் என்று பொருள். மூலவரையும் அம்பாளயும் தரிசித்து விட்டு வெளியே வரலாம். பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் ஏற்கனவே சிதிலமடைந்து பாழடைந்திருந்த மடப்பள்ளி நல்ல முறையில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. பிரகார வலம் வந்தால் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நதி உள்ளது. தெற்கில் குருதெட்சிணாமூர்த்தி தரிசனம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் குருபெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெறும்.

பிரகாரத்தின் மேற்கில் வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலெட்சுமி சந்நதிகள் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளன.  மூலவர், அம்பாள் விக்ரஹகங்களும், நன்கு லிங்கங்களும் சமமாக ஒரே உயரமுள்ள கருங்கல் பீடத்தில் அமைந்துள்ளன.

திருக்கார்த்திகைக்கு சுப்பிரமணியர் சுவாமி வீதி உலாக்காட்சி உண்டு. பிரதோஷ வழிபாடும், மாசி மாத சிவராத்திரியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பழமையான இந்த ஆலயம் போதிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து இருந்த நிலை மாறி முற்றிலும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பாண்டவர்களின் வேதனை தீர்த்த இந்த தலத்தை நாடி வந்தவர்கள் அனைவரது துயங்களயும் போக்கும். நம்பி வந்தோருக்கு நலம் யாவும் நல்கும் இறைவன் இத்தல நாயகர்.












திருவாரூர் பெரிய கோயிலுக்கு கிழக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்மயிலாடுதுறை இருப்புப்பாதையை கடந்ததும் சற்று தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்தும், பெரிய கோயிலிலிருந்தும் ஆட்டோவில் செல்லலாம்.


30-08-2013 தினமணி வெள்ளிமணியில் வெளிவந்த மருதம்பட்டினம் ஆலய கும்பாபிஷேக செய்திக்கு லிங்க் 


பணிச்சுமை காரணமாக எல்லா புகைப்படங்களையும் பதிவேற்ற இயலவில்லை. கும்பாபிஷேக விழா முடிந்ததும் அதிகமான கோணங்களில் ஆலயத்தின் புகைப்படங்களை பதிவிடுகிறேன்.

வியாழன், 11 ஜூலை, 2013

திருவாரூரில் விசேஷம் - வாய்ப்பிருப்பவர்கள் வந்துவிடுங்கள்

மனிதன் நிறைய கேட்க வேண்டும். கொஞ்சமாக பேச வேண்டும் என்பதால்தான் இரண்டு காதுகளும், ஒரு வாயும் இருக்கிறது என்று சொல்வார்கள். இந்த சூட்சுமத்தை மறைமுகமாக நமக்கு உணர்த்துவதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.

லேட்டஸ்ட்டா செல்போனில் கூட இன்கமிங் ப்ரீ, அவுட்கோயிங் செய்ய கட்டணம் என்ற சாதாரண வியாபார தத்துவம் கூட அதிகமாக பேசாதே என்று கூறுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் பதிவை மேலே தொடரவும்.

பிள்ளையார் உருவத்திற்கு யானையின் முகத்தை வைத்து, பெரிய காதுகள், வாயை மறைத்திருக்கும் தும்பிக்கை என்று உருவம் வரையறுக்கப்பட்டிருப்பது கூட அதிகம் பேசாதே என்ற தத்துவத்தைதான் குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். அதிலும் யானையின் வாயை மறைத்து தும்பிக்கை முன் இருக்கும். அதாவது பேச்சை விட செயல் முக்கியம் என்ற கருத்துதானே இது. யானையின் தும்பிக்கையால் எவ்வளவோ பலமான காரியங்களை செய்யலாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

பிள்ளையார் கடவுள் உருவத்தின் பின்னால் எண்ணற்ற கதைகளும் தத்துவங்களும் இருக்கின்றன. இணையத்திலும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த தளங்களின் சுட்டிகளை பிறகு தருகிறேன்.

வரும் ஞாயிறு 14-07-2013 அன்று திருவாரூர் நகரத்தில் இரண்டு ஆலயங்கள் புதுப்பித்து கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முதலாவதாக ஞாயிறு காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கடக லக்னத்தில் திருவாரூரில் புகழ்பெற்ற ஆழித்தேர் நிலைகொண்டிருக்கும் கீழவீதியில் பிள்ளையார் தேருக்கு அருகில் மாணிக்கவல்லி உடனுறை கைலாசநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்.

அடுத்ததாக திருவாரூர் திருமஞ்சனவீதியில் (ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்திற்கு 14.07.2013 ஞாயிறு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருவாரூரில் உள்ளவர்கள் மட்டுமல்ல. வாய்ப்பிருக்கும் அனைவரும் கும்பாபிஷேக தரிசனம் செய்ய வருமாறு பக்தர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். நான்குகால யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு, கும்பாபிஷேகம் தரிசனம் செய்தால் 12 ஆண்டுகள் ஆலயத்திற்கு சென்று வழிபட்ட பலன் உண்டு என்பது ஐதீகம்.

அருள்மிகு பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்திற்கு 1973 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு 25 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பக்கம் - 1
பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பக்கம் - 1

-------------------------------------------------------

திருவாரூரில் ஞான விநாயகர் ஆலயம் தீயணைப்புத்துறை மற்றும் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் முன் மண்டபம் மட்டும் புதிதாக கட்டப்பட்டு 2002ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு 2014ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

--------------------------------------------------------

















திருவாரூர் தேர் திருவிழா புகழ்பெற்றது என்று நிறைய பேருக்கு தெரியும். தேரோட்டம் நடைபெறுவதற்குரிய பங்குனி உத்திர திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவதற்கு முன்னர் பூர்வாங்க பூஜைகள் சண்டிகேஸ்வரர் உற்சவர் முன்னிலையில் திருவாரூர் பெரிய கோயிலுக்கு தென் கிழக்கில் சுமார் ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருதம்பட்டினம் கிராமத்தில் மதுரபாஷினி சமேத அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் நடைபெறும். ஆலயத்தின் மூலவர் இருக்கும் கருவறையை சுற்றி வெளி பிரகாரத்தில் நான்கு லிங்கங்களுடன் பஞ்ச லிங்கங்கள் அமைந்துள்ள  இந்த ஆலயம் மிகப் பழமையாக சிதிலமடைந்து மொட்டை கோபுரத்துடன் காணப்பட்டது. மேலும் மகாலட்சுமி, சுப்பிரமணியர், பைரவர் சன்னதிகள் தரைமட்டமாக இடிந்துவிட்டன. சுமார் 75 வயதாகும் அந்த ஆலய அர்ச்சகருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது இல்லை என்று கூறியிருக்கிறார். அந்த ஆலயத்தின் நிலை பற்றி ராணி, தினமணி கதிர், குமுதம் பக்தி ஸ்பெஷல், தினகரன் ஆன்மீகமலர், தினத்தந்தி குடும்பமலர் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

இறைவன் திருவருளால் அரசிடம் உரிய அனுமதி பெற்று சென்னையில் உள்ள பெரிய தொழில் அதிபர் ஒருவரின் குடும்பத்தினர் திருப்பணி செய்து வருகிறார்கள். பைரவர், மகாலெட்சுமி, சுப்பிரமணியருக்கு மீண்டும் புதியதாக சன்னதிகள், வெளிப்பிரகாரத்தில் முன்மண்டபம், மொட்டை கோபுர நுழைவாயிலில் மூன்று நிலைகளில் புதிய ராஜகோபுரம் என்று சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளன.

அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் விஜய வருஷம் ஆவணி 16ஆம் தேதி 01.09.2013 அன்று நடைபெற உள்ளது. இது பற்றி விரிவான பதிவு, புகைப்படங்களுடன் விரைவில் வெளிவரும்.