Search This Blog

பொங்கலோ பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கலோ பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

தை பிறந்தால் வழி பிறக்கும் சரி...சைக்கிள் பிறக்குமா?

திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் சுகி.சிவம்

இந்த பதிவில் சாதாரண புலம்பல்கள்தான் அதிகம் இருக்கும். சாரி பார் த டிஸ்டபன்ஸ்.

கல்கி பத்திரிகைக்கு 12 ஆண்டுகளாக சிறுகதைப்போட்டிக்கு கதைகள அனுப்பி வருகிறேன். அதில் என்னுடைய ஒருசில வாசகர்கடிதங்கள் பிரசுரமானதோடு சரி. கல்கியில் 2011ஆம் ஆண்டு தீபாவளி தமாக்கா என்று தலைப்பிட்டு பல்சுவை போட்டிகளை நடத்தினார்கள்.

போட்டி பற்றிய அறிவிப்புகளப் படித்ததும் முதலில் மலைப்பாகத்தான் இருந்தது. பிறகு கம்ப்யூட்டர் பரிசு, சைக்கிள் பரிசு ஆகிய இரண்டில் மட்டும் கலந்து கொள்வது என்று முடிவு செய்து அதற்கான தயாரிப்பில் இறங்கினேன். கம்ப்யூட்டருக்கான பரிசுப்போட்டிதான் சற்று சவாலாக இருந்தது. அதில் விமர்சனம், கருத்துக்கள பவர்பாயிண்ட் பிரசன்டேஷனாக கேட்டிருந்தார்கள். எனக்கு அது வரை பவர்பாயிண்ட் பற்றி எதுவுமே தெரியாது.

அதைப்பற்றி அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தியதால் அதற்கான படைப்புகளில் கவனம் செலுத்த இயலவில்லை. தனியாக ஜாப் டைப்பிங் சென்டர் வைத்திருப்பதால் அந்த வேலைப்பளு, ஒரு நாளைக்கு மின்சாரம் இருக்கும் 18 மணி நேரத்தில் தூக்கம், சாப்பாடு, குளியல், கோயிலில் சாமி தரிசனம், அலுவலகப்பணி என்று போனது போக மீதம் உள்ள நேரத்தில் அவசரமாக தயார் செய்து அனுப்பிய படைப்புக்களில் எங்கள் தெருவில் உள்ள கோயில் பற்றிய எனது அனுபவத்தை மிகவும் சிம்பிளாக உள்ளது உள்ளபடி எழுதியது எனக்கு சைக்கிள் பரிசை வாங்கித்தந்துள்ளது.

அந்த சைக்கிள் பரிசு கிடைத்த விவரம் தெரிந்ததும் புது சைக்கிளை ஒரு நாள், பழைய சைக்கிள் ஒரு நாள் என்று மாற்றி மாற்றி ஓட்ட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். என்னுடைய காலாக எனக்கு உழைத்த சைக்கிளின் (அந்த சைக்கிளின் பிறந்த தேதி: 08.09.1995) கைப்பிடி துருப்பிடித்து முறிந்து விட்டது.

அந்த கட்டுரை 22.01.2012 தேதியிட்ட கல்கியில் பிரசுரம் ஆகியுள்ளது. எங்கள் தெருவில் உள்ள பிள்ளையார் கோவிலின் மடப்பள்ளியை ஒருவர் ஆக்கிரமித்து இருந்ததால் திருப்பணி தடைபட்டிருந்தது. அந்த ஆக்கிரமிப்பு சட்ட விதிகளின்படி நகராட்சி அதிகாரிகளால் விரைவில் அகற்றப்பட்டு சீக்கிரத்தில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை என்று கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருந்தேன். அந்த கட்டுரை பிரசுரமான இதழ் கடைக்கு வந்த தேதி 14.1.2012 போகிப்பண்டிகை. ஆனால் 12.1.2012 விவேகானந்தர் பிறந்த நாள் அன்று ஆக்கிரமிப்பாளரே கடையை காலி செய்து கொண்டுவிட்டார்.

போகும்போது கோவில் பராமரிப்பு செலவைக் குறைக்க நினைத்தாரோ என்னவோ. சங்கடஹர சதுர்த்தி அன்று கோவிலில் விளக்கு எரியக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மீட்டர் போர்டில் ப்யூஸ் கேரியரைப் பிடுங்கி எடுத்துச் சென்றதுடன், மெயின் பாக்ஸ்ஐ சிதைத்து தொங்கவிட்டுவிட்டார்.

ஆனால் 10 நிமிடத்தில் வேறு ஒரு மாற்று ஏற்பாடு மூலம் ஆலயத்தில் மின் விளக்கை எரியச் செய்யும் வேலையை பிள்ளையார் என் மூலமாக நிறைவேற்றிக்கொண்டது போல் தெரிகிறது.

ஏற்கனவே 2009ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதியும் சங்கடஹர சதுர்த்திதான். அன்றுதான் கோவில் மண்டபத்திற்கான பில்லர் போட இடம் போதவில்லை என்று காவல்நிலையத்தில் நாங்கள் புகார் செய்தோம். அப்போது காவல்துறை ஆய்வாளரின் அறிவுரையின் பேரில் ஆக்கிரமிப்பாளரே பாதி கடையை இடித்துக்கொண்டார்.

இப்போது 2012லும் ஒரு சங்கடஹர சதுர்த்தி நாள் அன்றே அவரது முழு ஆக்கிரமிப்பையும் அகற்றிக் கொண்டார். எல்லாம் பிள்ளையார் செயல் என்றே நம்புகிறோம்.

இந்த கட்டுரை வெளிவந்த கல்கி இதழின் அட்டைப்படத்தில் நண்பன் படத்தின் ஸ்டில் இடம்பெற்றிருந்தது. நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போது வெளியான ஜென்டில்மேன் படத்தைப் பார்த்ததுமே இயக்குனர் ஷங்கரை எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அவர் ரீமேக்கிய நண்பன் படத்தின் கலர் ஃபுல் (ராமராஜன் கலர்?) ஸ்டில்லுடன் கல்கி இதழ் வெளிவந்தது மனதுக்கு கூடுதல் சந்தோஷத்தைக் கொடுத்தது என்று சொல்லலாம்.

நண்பன் படம் திருவாரூரில் இரண்டு தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. திருவாரூரில் ஒரு தியேட்டருக்கே சரியாக கூட்டம் வருவதில்லை. நண்பன் படத்தை வெளியிடுபவர்கள் ஒன்றில் மட்டும் வெளியிட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் கொள்ளைக்காரன் திருவாரூரில் ரிலீசாக வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த மூன்று நாட்கள் விடுமுறையின்போது ஒரு சிறிய பட்ஜெட் படம் (நண்பனுடன் ஒப்பிடும் போது சிறிய பட்ஜெட் என்று தாராளமாக சொல்லலாம்.) ஓரளவு வசூல் செய்யும் உரிமையை தடுத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

சினிமாக்காரர்கள சிறிய பட்ஜெட் சினிமாக்கள காலி செய்துவிட்டு திருட்டு விசிடி, கேளிக்கை வரியால் அழிந்து கொண்டிருக்கிறது என்று கூப்பாடு போடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். தைலம்மை தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் நண்பன் பட பிளக்ஸ் போர்டை பார்த்ததும் என் நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.

அப்போதெல்லாம் பெரிய ஹீரோக்கள் நடித்தபடம் அல்லது பொங்கல், தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களுக்கு மட்டுமே துணி பேனர்கள் வரும். தியேட்டர் வாசலில் அதைப் பார்க்கும் போதே என்னால் ஆச்சர்யம் தாங்க முடியாது. உருவம் அப்படியே அசலாக போஸ்டரில் இருந்தாலும் துணி பேனரில் ரஜினி மாதிரியோ, மீனா மாதிரியோ இருக்கும் உருவத்தை பார்த்து இதை வரைய எவ்வளவு கஷ்டப்படுறாங்களா என்று நினைப்பேன். மேலும் திருச்சி ஏரியாவில் 10 தியேட்டரில் படம் ரிலீசாகிறதே. அத்தனை ஊருக்கும் பேனர் வரைஞ்சு அனுப்புறதுன்னா எத்தனை நாளைக்கு முன்னாலயே வரைய ஆரப்பாங்க என்றெல்லாம் என்னை நானே கேட்டுக்கொண்டதுண்டு. அந்த பேனர்களில் போஸ்டருடன் ஒட்டும் தியேட்டர்பெயர் கொண்ட ஸ்லிப்புகள ஒட்டி வைப்பார்கள். தீபாவளி, பொங்கல் சமயங்களில் 30 இன்ச் உயரம், 40 இன்ச் அகலத்தில் லித்தோ போஸ்டர்கள் திடீரென முளைக்கும்.

ஆனால் இப்போது ஒரே நாள் இரவில் 100 அல்லது 200 அடி நீளமுள்ள பிளக்ஸ் போர்டுகளக்கூட மெஷின்கள் அலட்சியமாக பிரிண்ட் செய்து தள்ளி விடுகின்றன. அதுதான் படத்தின் ஸ்டில்லுடனே தைலம்மையின் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று பிளக்ஸ் போர்டு வைக்க முடிகிறது. டெக்னாலஜி வளர்ச்சி நல்ல விஷயம்தான். ஆனால் துணி பேனரில் வரைந்து கொண்டிருந்தவர்களில் எத்தனை பேர் கம்ப்யூட்டர் டிசைன் கற்றுக்கொண்டு வளர்ச்சியடைந்திருப்பார்கள்?

விவசாயம், ஓவியம் என்று பல துறைகளிலும் தொழில்நுட்பப் புரட்சி வந்து பலரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. உயர்த்தியும் விட்டிருக்கிறது. ஆனால் எவ்வளவு பேரை முகவரி இல்லாமல் ஆக்கியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது.

காலத்தின் வேகத்தில் பலர் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேகமான இந்த உலகத்தில் தடுக்கி விழுந்தவனை தூக்க ஒருவன் முயற்சித்தால் அவனையும் சேர்த்து சமாதியாக்கிவிட்டு ஓடத்தான் பின்னால் வருபவர்கள் முயற்சிக்கிறார்கள். அதையும் சமாளித்து கீழே விழுந்தவனையும் காப்பாற்றி, தானும் சேர்ந்து ஓடுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.


திருவாரூரில் சில தொழில்அதிபர்கள் சேர்ந்து ஆன்மீகம் ஆனந்தம் என்ற குழுவாக செயல்பட்டு வருகிறார்கள். திருவாரூர் நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில கோயில்களில் வழிபாடு, சொற்பொழிவு நிகழ்ச்சி என்று பல காரியங்கள செய்து வருகிறார்கள். இந்த பொங்கலுடன் ஓராண்டு நிறைவு பெறும் நேரத்தில் இன்று 15.1.2012 அன்று திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் சுகி.சிவம் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மாலை 6.01 என்று நேரம் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி குறித்து திருவாரூர் நகர் முழுவதும் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

எதற்காக போகி?

ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகை வரும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழும். இந்த பண்டிகைகள் இப்போது வரவில்லை என்று யார் அழுதா?...இப்படி ஒரு எண்ணம் பலருக்கும் தோன்றக்காரணம் இந்த நேரத்தில் மட்டும்தான் வீடு கடை போன்ற இடங்களை சுத்தம் செய்வதில் ஏற்படும் சிரமங்கள்தான். ஆனால் இப்படி ஒரு பண்டிகை இல்லை என்றால் ஒவ்வொரு இடமுமே அகற்ற முடியாத குப்பைகளை மட்டுமே சுமந்து கொண்டிருக்கும்.

போகிப் பண்டிகை  வேண்டாத பொருட்களை கழித்துக்கட்டுவதற்காகவேதான் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சும்மா இருப்பவன் ஆணி புடுங்கிய கதையாக, போகி அன்று எதையாவது கொளுத்த வேண்டும் என்பதற்காகவே டயர் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பலவற்றை எரிக்கும் அறிவுஜீவிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். வேண்டாத குப்பைகளை உரிய முறைப்படி வெளியேட்ற்றுபவர்கள்தான் உண்மையிலேயே போகிப்பண்டிகையை கொண்டாடி வீட்டுக்கும் உலகத்துக்கும் நன்மை செய்பவர்கள் என்பது என் எண்ணம்.

போகிப்பண்டிகை அன்று வேண்டாத பொருட்களை மட்டும்தான் உதற வேண்டுமா? தீய எண்ணங்களை அகற்றுவதும் நல்ல விஷயம்தான். சமீபத்தில் நான் பார்த்த இரண்டு தொ(ல்)லைக்காட்சி விளம்பரங்கள் புது ஆண்டில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது சற்று வியப்பை ஏற்படுத்தியது. சிறுவர்களுக்கிடையே படகுப்போட்டி. குறிப்பிட்ட பிஸ்கட் தின்பவர்கள் நல்ல எனர்ஜியுடன் சுறுசுறுப்பாக படகை இயக்குவார்கள். அந்த பிஸ்கட் சாப்பிடாத இன்னொரு குழு சோர்ந்து இருப்பார்கள். பிஸ்கட் தின்றால் மட்டுமே எனர்ஜி முழு அளவில் வந்து விடும் என்று சொல்வதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனால் சோர்ந்து போய் இருக்கும் சிறுவர்களுக்கும் அந்த பிஸ்கட்டை உற்சாகமாக இருப்பவர்கள் தந்தவுடன் இருவரும் சம வேகத்தில் செல்வதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

விளையாட்டுப்போட்டியில் வேண்டுமானால் யாராவது ஒருவர் வெற்றி பெறுவது அவசியமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் எல்லாருமே வெற்றி பெறுவதற்கு உரிமை உள்ளது. ஒருவருடைய சாப்பாட்டை இன்னொருவர் தட்டிப்பறிக்க அவசியமில்லை. இத்தகைய எண்ணம்தான் அந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. மற்றவர்களுக்கு எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.

இன்னொரு விளம்பரத்தில் ராகிங் செய்து தன் கால்சட்டையை கழட்டி விடும் சக மாணவர்களை அந்த சிறுவன் ஆசிரியையிடம் காட்டிக்கொடுக்காமல் இருப்பான். குறும்பு செய்த சிறுவர்களும் திருந்தி நண்பர்களாகி விடுவார்கள். இதில் பெரியவர்களும் பாடம் கற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு விஷயம், இப்படி ஒவ்வொரு முறையும் மன்னித்துக்கொண்டிருக்கத்தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு முறை போதும். மன்னிப்பதே வேலையாக இருந்தால் சில நேரங்களில் அது நமக்கே ஆபத்தாக முடியலாம்.

எல்லா விளம்பரங்களுமே இப்படி நேர்மறை எண்ணங்களைத்தாங்கி வந்தால், பாட்டி சொல்லும் நீதிக்கதைகள் குறைந்து வரும் இந்த நேரத்தில் நல்ல மாற்றாக அமையும் என்று நினைக்கிறேன்.

10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு தியேட்டரில் வேலைபார்த்து வந்த நான் ஒரு சில காரணங்களுக்காக அந்த வேலையை விட்டு விலகி வெளியில் வந்தேன். பிறகு மீண்டும் நான் தனித்தேர்வராக பிளஸ் டூ எழுதி கல்லூரியில் படித்து இப்போது ஒரு பிரபல நாளிதழில் பக்க வடிவமைப்பாளராக இருக்க முக்கிய காரணம் மிகச்சிறிய சம்பவம் என்று மற்றவர்கள் சொல்லும் ஒரு விஷயத்துக்காக நான் கோபத்துடன் தியேட்டர் வேலையை விட்டு வந்ததுதான். கோபம் கூடாது என்று சொல்வார்கள். அப்படி இல்லை. கோபம் வேண்டியதுதான். அது நமக்கு மட்டுமல்ல. பிறருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது.  ஆனால் நமக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும். என் வாழ்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய அந்த நாள் 1998ம் ஆண்டு போகிப்பண்டிகை.

2000ம் ஆண்டில் நான் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து அவ்வப்போது எழுதி வந்தேன். கல்லூரி ஆண்டு மலரிலும் கதை வெளிவந்தது. ஆனால் வெளி பத்திரிகையில் முதல் கதை பிரசுரமானது 2003ம் ஆண்டு போகி அன்று வெளிவந்த திருச்சி மாலைமுரசு பொங்கல் மலரில்தான்.

இதுபோல் பலருக்கும் பல சிரமங்கள் அழிந்து நன்மைகள் பிறக்கும் திருநாளாக இந்த போகி அமைய வாழ்த்துக்கள்.