Search This Blog

புதன், 30 ஜனவரி, 2013

விஸ்வரூபம் - தியேட்டர்களில் பாதுகாப்பு எப்படி?







திருவாரூர் நடேஷ் திரையரங்கில் விஸ்வரூபம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி ரிலீசை முன்வைத்து சுமார்40 அடி உயர பேனர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டது. பிறகு அரசின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக அந்த பேனரை உடனடியாக அகற்றி தியேட்டர் வளாகத்துக்குள் வைத்துவிட்டார்கள். ஆனால் படம் ரிலீஸ் என்றதும் பேனர் தியேட்டர் வாசலுக்கு வந்துவிட்டது.







இன்று(30-1-2013) காலை 9 மணி முதலே கமல் ரசிகர்கள் பேண்ட் வாத்தியம், பட்டாசு, இனிப்பு என்று கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தியேட்டர் வளாகத்துக்குள் மட்டும்தான் வெடி வெடிக்கவும், இனிப்பு வழங்கவும் போலீசார் அனுமதித்தனர். இது ஒரு வகையில் நல்லதுதான். சாதாரண அகலமுள்ள சாலையில் ரசிகர்கள் கூட்டம் போட்டால் போக்குவரத்து பாதிக்கும். எந்த படத்தையும் விரும்பாமல் அன்றைய பிழைப்பை ஓட்டினால் போதும் என்ற மனநிலையில் இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் ஏராளமாய் இருக்கலாம். அவர்களுக்கு இடையூறு தராத வகையில் ரசிகர்களை ஒழுங்குபடுத்தியதுடன் தியேட்டரிலும் எந்த விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாத வண்ணம் போலீசார் பாதுகாப்பை கடுமையாக்கியிருப்பதை பாராட்டலாம்.





இந்த சின்ன ஊரிலேயே இப்படி என்றால் பெரிய நகரங்களில் மிகக் கடுமையாக போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது. விஸ்வரூபம்னு பதிவுக்கு தலைப்பு வெச்சிட்டு வழவழன்னு எழுதியிருக்கேன்னு நினைக்காதீங்க. இப்போவெல்லாம் பெரிய பெரிய ஆளுங்களே பொதுவெளியில வாயைத்திறக்க முடியலை. நான் எதையாச்சும் சொல்ல... பின்விளைவுகளை சந்திக்க என்னால முடியாதுங்கய்யா...









பின் குறிப்பு: இன்று 30-1-2013 பகல் 1.30 நிலவரப்படி திருவாரூரில்விஸ்வரூபம்திரையிடப்படவில்லை.

 


விஸ்வரூபம் - தியேட்டர்களில் பாதுகாப்பு எப்படி?

திருவாரூர் நடேஷ் திரையரங்கில் விஸ்வரூபம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி ரிலீசை முன்வைத்து சுமார்40 அடி உயர பேனர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டது. பிறகு அரசின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக அந்த பேனரை உடனடியாக அகற்றி தியேட்டர் வளாகத்துக்குள் வைத்துவிட்டார்கள். ஆனால் படம் ரிலீஸ் என்றதும் பேனர் தியேட்டர் வாசலுக்கு வந்துவிட்டது.

இன்று(30-1-2013) காலை 9 மணி முதலே கமல் ரசிகர்கள் பேண்ட் வாத்தியம், பட்டாசு, இனிப்பு என்று கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தியேட்டர் வளாகத்துக்குள் மட்டும்தான் வெடி வெடிக்கவும், இனிப்பு வழங்கவும் போலீசார் அனுமதித்தனர். இது ஒரு வகையில் நல்லதுதான். சாதாரண அகலமுள்ள சாலையில் ரசிகர்கள் கூட்டம் போட்டால் போக்குவரத்து பாதிக்கும். எந்த படத்தையும் விரும்பாமல் அன்றைய பிழைப்பை ஓட்டினால் போதும் என்ற மனநிலையில் இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் ஏராளமாய் இருக்கலாம். அவர்களுக்கு இடையூறு தராத வகையில் ரசிகர்களை ஒழுங்குபடுத்தியதுடன் தியேட்டரிலும் எந்த விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாத வண்ணம் போலீசார் பாதுகாப்பை கடுமையாக்கியிருப்பதை பாராட்டலாம்.

இந்த சின்ன ஊரிலேயே இப்படி என்றால் பெரிய நகரங்களில் மிகக் கடுமையாக போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது. விஸ்வரூபம்னு பதிவுக்கு தலைப்பு வெச்சிட்டு வழவழன்னு எழுதியிருக்கேன்னு நினைக்காதீங்க. இப்போவெல்லாம் பெரிய பெரிய ஆளுங்களே பொதுவெளியில வாயைத்திறக்க முடியலை. நான் எதையாச்சும் சொல்ல... பின்விளைவுகளை சந்திக்க என்னால முடியாதுங்கய்யா...



பின் குறிப்பு: இன்று30-1-2013 பகல் 1.30 நிலவரப்படிதிருவாரூரில்விஸ்வரூபம்திரையிடப்படவில்லை.
 

சனி, 19 ஜனவரி, 2013

உங்கள் வாடிக்கையாளரை உங்களை விட்டு விட்டு ஓடச்செய்வது எப்படி?

நாம் அம்பானி, டாடா மாதிரி சரித்திரம் படைக்கும் தொழிலதிபர்களாக ஆக வேண்டாம். மாதத்திற்கு குறைந்தது 4 லட்ச ரூபாய்க்கு வியாபாரம் செய்து 20 ஆயிரம் ரூபாயாவது லாபம் பார்க்கும் வகையில் வெற்றிகரமான தொழில்முனைவோராக பிரகாசிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கலாம். நம் நாட்டைப் பொறுத்தவரையில் அரசாங்க விதிமுறை உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக தொழில் நடத்துவதை விட யாரிடமாவது அடிமையாக இருந்துவிடலாம் என்று நினைப்பவர்கள் ஏராளம். அவ்வளவு இம்சைகளையும் தாண்டி பலர் வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக வலம் வருவது பெருமைப்படத்தக்க தனிக்கதை.

ஆனாலும் இதுபோன்று சுயதொழில் முயற்சியில் முன்னேறிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்களை கூலிக்காரர்கள் (அ) பிச்சைக்காரர்களாக்காமல் விட மாட்டோம் என்ற கொள்கை உறுதியுடன் உயிரில்லாத மின்சாரம் உயிருள்ள மனிதர்களை வதைக்கிறது.

எல்லாரும் தொழிலதிபர்களாக மாற ஆசைப்பட்டாலும், அனைவரும் பணியாளர்களாக மாற நினைத்தாலும் சிக்கல்தான். இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைக்க முக்கிய காரணம், திறமையான பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதில்லை. நல்ல மனம் படைத்த தொழில்முனைவோர்களுக்கு திறமையான பணியாளர்கள் கிடைப்பதில்லை. இந்த முரண்பாடுகளை எல்லா ஊர்களிலும் காணலாம்.

இந்த சிக்கலுக்கு பயந்துதான் தொழிலை நிலைநிறுத்தும் வரை நான் வேறு பணியாளர்களை வைத்துக்கொள்ளும் யோசனையே இல்லாமல் நான் மட்டும் உழைத்து வருகிறேன்.

சென்னையில் இருக்கும் ஒரு திருமண தாம்பூலப்பை தயாரிப்பாளர்களால் ஏற்பட்ட மோசமான அனுபவம்தான் இந்த பதிவை நான் எழுதக் காரணம். ஆயிரம் திருமண தாம்பூலப்பைகளுக்கு ஒரு ஆர்டர் கிடைத்தது. உள்ளூரில் உள்ள பை தயாரிப்பாளர்களிடம் பேசிப்பார்த்ததில் சென்னை விலைக்கும் உள்ளூர் விலைக்கும் அதிக வித்தியாசம் இருந்தது. மேலும் மெசின் தையல் பைகளுக்கு மிக அதிக நாட்கள் அவகாசம் கேட்டார்கள். இடையில் பொங்கல் விடுமுறை ஒரு வாரத்தை விழுங்கி விடும் என்பதால் யோசித்து சென்னையில் உள்ள ஒருவரிடம் ஆர்டரை ஒப்படைத்தேன்.

எங்கள் ஊரிலும், பரமக்குடி, இராமநாதபுரம் பகுதியிலும் பலருக்கு இவர்கள் தாம்பூலப்பை சப்ளை செய்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் ஆர்டர் கொடுக்க முயற்சித்தேன். முதலில் சாம்பிள் பைகள் அனுப்ப சொல்லி கேட்டபோது நிறைய முறை போன் செய்த பிறகுதான் அனுப்பினார்கள். அப்போதே நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். நாங்கள் தேர்வு செய்த மாடலை சொல்லி எத்தனை நாளில் கிடைக்கும் என்று கேட்டபோது ஜனவரி 11க்குள் அனுப்பிவிடுவோம் என்றார்கள். நானும் நம்பினேன். ஆனால் பையில் பிரிண்ட் செய்ய வேண்டிய டிசைனை நான் அனுப்பி வைக்க அவருடைய இமெயில் ஐடி கேட்டபோதும், முன்பணம் செலுத்த நான் வங்கி விவரம் கேட்டபோதும் அநியாயத்துக்கு தாமதம் செய்தார்கள். அப்போதும் நான் கோட்டை விட்டேன்.

என்னால் அப்போது சென்னைக்கு நேரடியாக செல்ல முடியாத சூழ்நிலை. நானும் நண்பர்கள் மூலம் வேறு சில இடங்களில் விசாரித்து விட்டு வேறு வழியில்லாமல் மேற்படி நபரிடமே ஆர்டர் கொடுத்தேன். 15 நாளில் உற்பத்தி தொடங்கிடும்னு ஒருத்தர் பேட்டியா கொடுத்து தள்ற மாதிரி நாளைக்கு மதியம் பார்சல் புக் பண்ணிடுவேன்று ஒரு வாரமா சொல்றார் அந்த நபர்.

பொங்கல் விடுமுறைக்காக 10 ஆம் தேதியே சொந்த ஊருக்கு சென்ற பணியாளர்கள் 18ஆம் தேதிதான் பணிக்கு திரும்பியதாக சொல்கிறார். இது மாதிரியான சிக்கல் வருமே என்று நான் 1ஆம் தேதி வாக்கிலேயே கேட்டதற்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை. 12ஆம் தேதியே உங்களுக்கு 1000 பையும் கிடைச்சுடும் என்று சொன்ன பார்ட்டி இன்று 19 ஆம் தேதி வரை 500 தான் ரெடி, 600 தான் ரெடி என்று மழுப்புகிறார். அது தவிர 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் கேட்டரிங் ஆர்டர் அவசரப்படுத்துனாங்க. அதனால அந்த வேலை குறுக்கே வந்துடுச்சு என்கிறார். இவர்கிட்ட நாணயம், நேர்மை பற்றி எதாவது கேட்டா புரியுமா?

நல்ல தொழில்முனைவோருக்கு அழகு, பொங்கல் விடுமுறையில் வேலை பாதிப்பு என்றதும் அவரே போன் செய்து, சார்...23 ஆம் தேதி கல்யாணம், 20ஆம் தேதி வேலை முடிச்சு பார்சல் புக் பண்ணிடுவோம். 21ஆம் தேதி நீங்கள் எடுத்து கொடுத்துடலாம் அப்படின்னு நம்பிக்கையோட சொல்லி அதன்படி முன்னால் ஒப்புக்கொண்ட வேலையை முடிச்சு கொடுக்க முழு மூச்சா இறங்கணும். அதை விட்டுட்டு 12ஆம் தேதியிலிருந்தே நாளைக்கு, நாளைக்கு என்று மழுப்புபவரைப்பார்த்தால் வாக்கு முக்கியம் என்பதையே குறிக்கோளாக கொண்டு தொழில் செய்யும் என்னைப்போன்றவர்கள் முட்டாளாகிவிடுகிறோம்.

குறித்த நேரத்தில் ஆர்டரை முடிக்க முடியாத அளவுக்கு எந்த ஒரு தொழிலிலும் ஆயிரம் இடர்ப்பாடுகள் வரலாம். அதை சமாளிக்கத் தெரிவதுடன் வாடிக்கையாளர் நம்பிக்கையுடன் காத்திருப்பதற்கு உரிய பதிலை தெளிவாக கூற வேண்டும். இப்படி இருந்தால்தான் தொழிலை வளர்க்கலாம் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களை மாதிரி மாசத்துக்கு ஒரு வேலை கொடுக்குறவர் முக்கியமில்லை. அடிக்கடி கேட்டரிங் ஆர்டர் கொடுப்பவர்தான் எங்களுக்கு தேவை என்று நினைத்தால் வெளி ஆட்களின் வேலையை ஒப்புக்கொள்ளவே கூடாது.

வாடிக்கையாளரே தெய்வம் என்று மகாத்மா காந்தியின் வார்த்தைகளை பல கடைகளில் ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால் நடைமுறையில் எவ்வளவு பேர் அப்படி மதிக்கிறார்கள் என்றால் சொற்பமே.

இந்த ஒருவரைப்பற்றி குறை சொல்லும் நேரத்தில் இவ்வளவு மின்வெட்டுப்பிரச்சனையிலும் குறித்த நேரத்தில் ஒப்புக்கொண்ட அச்சு வேலைகளை சரியாக டெலிவரி செய்யும் நிறுவனங்கள் கோயம்புத்தூரிலும், சிவகாசியிலும் இருக்கின்றன. அவர்களின் சேவையில் இதுநாள் வரை எனக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை. ஒரு சில முறை ஓரிரு நாட்கள் தாமதமாக எனக்கு பொருட்கள் வந்து சேரும். ஆனால் அவர்கள் அதையும் போன் செய்து நிலவரம் இப்படி இருக்கிறது. இந்த தேதியில் எதிர்பாருங்கள் என்று கூறி விடுவார்கள்.

நான் சென்னையில் உள்ள தாம்பூலப்பை தயாரிப்பாரைப் பற்றி இப்படி பதிவு எழுதக்காரணமே உண்மைக்காரணத்தை மட்டுமின்றி, சரியான பதில் எதுவும் சொல்லாமல் அவர் மழுப்புவதால்தான். வியாபார நிறுவனத்துக்குரிய ஆர்டர்கள் என்றால் ஒருசில தினங்கள் தாமதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் திருமணம் போன்ற விழாக்களுக்குரிய பொருட்கள் தாமதமானால் அவ்வளவுதான். இது எல்லாம் ஒரு தொழில் செய்பவர்களுக்கு நான் சொல்லியா தெரியணும்?

2011 ஜூன் மாதம் நான் தொழில் தொடங்கினாலும், 7 மாதங்களுக்குள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த என்னுடைய அலுவலகத்தை நகரின் மையப்பகுதியில் இடமாற்றம் செய்தது 19.01.2012 அன்றுதான். படிப்பு முடித்த பிறகு சம்பளம் ஒழுங்காக கிடைக்காத ஒரே காரணத்தால் நான் வேலை செய்ய எந்த இடத்திலும் ஒரு ஆண்டினை நிறைவு செய்ய முடிந்ததில்லை.

புதிதாக தொழில் தொடங்கிய பிறகு புறநகர் பகுதியிலிருந்து நகரின் மையப்பகுதிக்கு இடமாற்றம் நிகழ்ந்தாலும் 7 மாதத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று மனதின் ஓரத்தில் உறுத்தல் இருந்தது. புதிய இடத்தில் இன்று தேதி கணக்குப்படி இரண்டாம் ஆண்டு இன்று தொடங்கும் நேரத்தில், வியாபாரத்தில் நேரம், நாணயம் மிக முக்கியம். ஒருவேளை குறித்த காலத்தில் ஒப்புக்கொண்ட வேலையை முடிக்க முடியாதபடி சூழ்நிலை அமைந்தால் வாடிக்கையாளரிடம் உண்மையை சொல்லிவிடுவது நல்லது என்ற உண்மையை ஏற்கனவே அறிந்திருந்தாலும் அனுபவப்பூர்வமாக ஒருவன் என்னை புலம்ப விட்ட பிறகு அழுத்தம் திருத்தமாக உணர்ந்துகொண்டேன்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ் மின்னூல் பணிக்காக சுமார் 500 பக்கங்கள் தமிழில் டைப் செய்ய ஒப்புக்கொண்டேன். சென்னை தவிர தமிழகம் முழுவதையும் மின்வேட்டு மிக மோசமாக புரட்டிப்போடத்தொடங்கிய நாட்கள் அவை. அதனால் ரெகுலர் வேலைகளையும் செய்து கொண்டு, நள்ளிரவு 1 மணிக்கும், இரண்டு மணிக்கும் எழுந்து ஒரு மணி நேரம் விட்டு ஒரு மணி நேரம் மட்டுமே இருக்கும் மின்சார நேரத்துக்கு மத்தியில் குறித்த நேரத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக வேலையை முடித்துக்கொடுத்தேன்.

அதேபோல் 2012 ஜுன் மாதத்தில் பள்ளிக்குழந்தைகளின் அடையாள அட்டை தயாரிப்பாளர்களிடம் இருந்து சுமார் 10ஆயிரம் குழந்தைகளின் பெயர், ரத்தவகை, தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட தகவல்களை இதே போல் இரவில் மாலை  6 மணி முதல் காலை 6 மணி வரை மொத்தம் 12 மணி நேரத்தில் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கும் நேரத்தில் கண் விழித்து பதிவேற்றி கொடுத்ததை நினைத்துப்பார்க்கிறேன்.

இப்போது சென்னையில் தாம்பூலப்பை தயாரிப்பாளர் செய்வதைப் பார்க்கும்போது நான் கண் விழித்து குறித்த நேரத்தில் வேலையை முடித்துக்கொடுத்தது முட்டாள்தனமா அல்லது அவர் செய்வது முட்டாள்தனமா என்ற குழப்பம்தான் என் மனதில் மிஞ்சியிருக்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இனிமேல் ஜென்மத்துக்கும் இப்போது ஆர்டர் கொடுத்த நபர் இருக்கும் பக்கம் கூட போகமாட்டேன். இப்படி நாலு வாடிக்கையாளர்களை அலைக்கழித்தால் நாம் இருக்கும் திசை பக்கம் அவர்கள் தலை வைத்துப்படுப்பார்களா? அது சரி...நான்தான் இப்படி புலம்புறேன். சம்மந்தப்பட்ட நபர் இதைப்பத்தி அலட்டிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. ஏன்னா, இப்போ எனக்கு பை கையில் கிடைக்கணும். அதனால ஒரு வார்த்தை கூட அவர்கிட்ட தவறா பேசலை. திட்டி என்ன ஆகப்போகுது?...

வாக்குல சுத்தம் இல்லாம அலட்சியமா இருந்தபடியே பணம் சம்பாதிக்க கூட அதிர்ஷ்டம் வேணுமோ?

சனி, 12 ஜனவரி, 2013

போன 12க்கும் இந்த 12க்கும் என்ன வித்தியாசம்

12-12-12 என்று அபூர்வ தேதி ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறது என்று கடந்த மாதம் அச்சு ஊடகங்கள் மிக அதிகமாகவே சிறப்பிதழ் அது இது என்று தீயாக வேலை செய்தன.

2001 ஆம் வருசம் 1-1-1, 2002ஆம் வருசம் 2-2-2, இப்படி 2009 வரைக்கும் வரிசையா அப்படித்தான். இதுல 12-12-12 க்கும் மட்டும் அந்த பிரபலத்துக்காக இவ்வளவு விளம்பரம் தேவையான்னு ஒரு எண்ணம் என் நினைவுக்கு வந்து தொலைச்சது. அதை சொல்லிட்டு நான் தப்பிச்சுட முடியுமா? அதனால வாயைத் திறக்கலை.

டிசம்பர் 12 என்ற மந்திர சுழலில் டிசம்பர் 11 பாரதியார் பிறந்ததினம் ஊடகங்களால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. அவ்வளவு ஏன், நான் வசிக்கும் ஊரிலும் எந்த பள்ளியிலும் பெரிதாக பாரதியார் பிறந்த நாளை யாரும் கொண்டாடியதாக தெரியவில்லை.

ஆனால் விவேகானந்தரின் 150வது பிறந்ததினம் பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. வரும் 21 ஆம் தேதி வரை திருவாரூர் தெற்குவீதியில் விவேகானந்தர் தொடர்புடைய புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. 2013 ஜனவரி 23 அன்று திருவாரூர் வாசுநிவாஸ் திருமண மண்டபத்தில் தமிழருவிமணியன், சாலமன்பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இன்று 12-01-2013-ல் சில இடங்களில் ரத்ததான முகாமும் நடைபெற்றது.

கல்லூரியில் என்னுடன் படித்த இரண்டு வகுப்புத்தோழிகளுக்கு இன்று பிறந்த தினம். கரண்ட் பிரச்சனையால நமக்குதான் ஒரு நாளைக்கு ஆறு தடவை லஞ்ச்பிரேக் கிடைக்குது. அந்தப்புள்ளைங்க காலையில அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்புற நேரத்துல ஏன் போன் பேசி இடையூறு செய்யணும்னு ஒரு எண்ணம். அதனால  அவர்களுக்கு காலையில் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி வாழ்த்து சொன்னதோடு சரி.

போன ஆண்டு 12-01-2012 அன்று ரொம்ப நாளா எங்களுக்கு தலைவலி கொடுத்த கோயில் ஆக்கிரமிப்பு அந்த ஆக்கிரமிப்பாளராலேயே காலிசெய்யப்பட்டது. ஆக்கிரமிப்பு இல்லாததால சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னால நிம்மதியா அந்த கோவில்ல சுவாமி தரிசனம் செய்தோம்.

ஆக்கிரமிப்பை சுத்தமாக காலி செஞ்ச அந்த ஆசாமி மின்சார மெயின்சுவிட்ச், சுவிட்ச் போர்டு ஆகியவற்றை பெயர்த்து உடைத்து ஒன்றுக்கும் உதவாமல் செய்துவிட்டார். அது ஒரு பிள்ளையார் கோவில். அந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. சாயங்கால பூஜைக்காக மாலை 5.30 மணிக்கு தான் வந்து திறக்குறோம். சாமிகும்பிட வந்தவங்க, கோவில்ல விசேசம் நடக்குற நாள்ல போய் இப்படி செஞ்சுட்டு போயிருக்காரேன்னு புலம்புனாங்க. அவங்களுக்கு அது அதிர்ச்சியா இருக்கலாம். ஆனா ஆக்கிரமிப்பு செஞ்ச பார்ட்டி இப்படி எதையாவது உடைக்காம போயிருந்தாதான் நான் ஷாக் ஆகியிருப்பேன். அவரோட நடவடிக்கைகளை பார்த்து கோயிலுக்குள்ளாற இருக்குற சுவிட்ச் போர்டுல ரொம்ப எளிமையா கனெக்சன் கொடுக்குற மாதிரிதான் தயார் செய்து வெச்சிருந்தேன். அதனால மத்தவங்க மாதிரி புலம்பாம தயாரா நான் உள்ளே வெச்சிருந்த ரெண்டு வயரை பக்கத்துவீட்டுல கொடுத்து 5 நிமிசத்துல மின்விளக்கை எரிய வெச்சுட்டேன். அப்புறம் அன்னைக்கு ராத்திரி 9 மணி வரை, ஆக்கிரமிப்பு பார்ட்டி மட்டுமின்றி அவரது குடும்பமே லைட் எரிஞ்சதைப் பார்த்து வயிறு எரிய இங்கும் அங்கும் அலைஞ்சது தனிக்கதை.

அந்த கோவில் ஆக்கிரமிப்பு பற்றி ஒரு கட்டுரையை நான் கல்கி வார இதழின் போட்டிக்காக அனுப்பியிருந்தேன். அது பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு சைக்கிள் பரிசு கிடைத்தது. அந்த கட்டுரை அச்சான கல்கி இதழ் தேதி 22.01.2012. அந்த இதழ் கடைகளில் விற்பனைக்கு வந்த தேதி 14.01.2012. ஆனால் ஆக்கிரமிப்பு 12.01.2012 அன்றே அகற்றிக்கொள்ளப்பட்டது.

என்னவோ சொல்லப்போற மாதிரி ஆரம்பிச்சு இப்படியா மொக்க பதிவு போடுறதுன்னு கோபப்படாதீங்க. இந்த 12ஆம் தேதி வந்ததும் இப்படி ஒருசில சம்பவங்கள் நினைவுக்கு வந்துடுச்சு.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

டெல்லி மாணவிக்காக குரல் கொடுத்தவர்கள் கவனிக்க...

டெல்லி மாணவிக்கு நேர்ந்த கொடூரத்துக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது உண்மை. அதுபோன்ற கொடூரச்செயலுக்கு கொஞ்சமும் சளைக்காத மற்றொரு செயல் ஆசிட் வீச்சு. விருப்பமில்லாத பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து நாடு முழுவதும் அவ்வப்போது இது போன்று ஆசிட் வீச்சு சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது.

கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு கொடுக்கும் தண்டனையைப் போலவே இதற்கும் கொடுக்கலாம்.

இந்த பதிவில் நான் சொல்ல வந்தது பொருளாதார உதவியை எதிர்நோக்கியிருக்கும் ஒரு சகோதரியைப்பற்றி.

கடந்த தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு சென்னைக்கு திரும்பிய வினோதினி என்ற பெண்ணின் மீது ஒரு கொடூர மனம் கொண்ட மிருகம் ஆசிட் வீசியது பெரும்பாலானவர்கள் அறிந்த செய்திதான்.

16-01-2013 தேதியிட்ட விகடனில் இது குறித்த கட்டுரை வெளிவந்திருக்கிறது. சந்தாதாரகள் மட்டுமின்றி அனைவரும் படிக்கக்கூடிய வகையில் இந்த கட்டுரையை பிரசுரம் செய்திருக்கிறார்கள். அதைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து கடன் வாங்கி பி.டெக் படித்து பணியில் சேர்ந்த அந்த பெண் இப்போது உயிருக்குப் போராடுகிறார். அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்ய நினைக்கும் நபர்கள் நேரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அணுக முடியவில்லை என்றால் விகடனை தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்து கட்டுரையின் இறுதியில் வந்த பகுதி

////////////////
காதலை மறுத்த ஒரே காரணத்துக்காக கயவன் ஒருவனால் ஆசிட் வீசப்பட்டு உடல் கருகி உயிருக்குப் போராடும் வினோதினிக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ண பரிதவிப்புடன் பல வாசகர்கள் விகடனை தொடர்புகொண்டு வருகிறீர்கள். வாசகர்களின் இந்த உதவிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் readers@vikatan.com என்ற புதிய மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டிருக்கிறது. வாசகர்கள், தங்கள் உதவிகள் மற்றும் ஆலோசனைகளை இந்த புதிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இப்போதும், இனிமேலும் விகடனில் வெளிவரும் கட்டுரைகளின் அடிப்படையில், இதுபோன்ற மனிதாபிமான உதவிகளை செய்திட வாசகர்கள் இந்த மின்னஞ்சல் முகவரியையே தொடர்பு கொள்ளலாம். நன்றி!
///////////

செவ்வாய், 8 ஜனவரி, 2013

புத்தக திருவிழா - எனக்கு ஏமாற்றமே

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சி 30ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தாலும் இது பற்றிய செய்திகளை கடந்த 10ஆண்டுகளுக்குள்ளாகத்தான் நான் கவனித்து வருகிறேன்.

வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் கண்காட்சி இந்த ஆண்டு வேறு இடம், ஏற்கனவே அங்கு நடைபெற்ற விழா அரங்கத்தை மாற்றிஅமைத்தல் உள்ளிட்ட காரணங்களால் 2013 ஜனவரி 11 முதல் 23 வரை என்று மாற்றியிருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு மட்டும்தான் நான் புத்தக கண்காட்சிக்கு சென்றிருக்கிறேன். அங்கே நான் புத்தகம் வாங்க செலவிட்ட தொகை வெறும் பார்மாலிட்டியாகத்தான் அமைந்தது. 50 ரூபாய் விலையில் இரண்டு (கிழக்கு பதிப்பகம்) புத்தகங்கள் வாங்கினேன். 10 சதவீத கழிவில் ஒன்றின் அடக்கவிலை 45 ரூபாய் வந்தது.

இதற்கு காரணம், என்னுடைய பொருளாதாரம்தான். காயிதே மில்லத் கல்லூரி எங்கே இருக்கிறது என்று பார்த்தாயிற்று. நான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து சைக்கிளிலேயே போய்விட்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டேன். அதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டுதான் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள பள்ளிக்கு புத்தக கண்காட்சியை மாற்றிவிட்டார்கள்.

நான் தங்கியிருந்த இடத்திற்கும் கண்காட்சி நடந்த இடத்திற்கும் உள்ள தூரத்தை 15 நிமிடங்கள் நடந்தால் கடந்து விடலாம். மேலும் நான் ஒரு வீடு புதுப்பிக்கும் பணியில் மேற்பார்வையாளராக இருந்தேன். அந்த வீட்டுக்கும் கண்காட்சிக்கும் 5 நிமிட நடை தூரம்தான்.

ரொம்ப வசதியா போச்சு. கண்காட்சிக்கு தினமும் போயிட்டு வரலாம்னு நினைச்சேன். அரைநாள் லீவு சொல்லிட்டு கிளம்பினப்போ வேலை நடந்த பிரமாண்டமான வீட்டில் 6 இடத்தில் டாடாஸ்கை டி.டி.ஹெச் இணைப்பு கொடுக்க கம்பெனி ஆள் வந்துட்டாங்க. அதனால அன்றைய புரோகிராம் பணால்.

கையில் வெச்சிருந்த பணத்துக்கு வேற செலவு வந்துட்டு. அடுத்த நாள் என்னோட பேங்க் அக்கவுண்டுல இருந்த 500 ரூபாய் பணத்தை எடுக்கலாம்னு போனேன். காலையில வேலைக்கு கிளம்பின நேரத்துல அபிராமி தியேட்டருக்கு எதிரில் இருந்த ஒரு வங்கி ஏடிஎம் மிசின்ல கார்டை சொருகினேன். மெசின் ரிப்பேர்.

காலையில இருந்து 4 கார்டுக்கு பணம் வந்தா 2 கார்டு உள்ளே போயிடுது. கம்ப்ளைண்ட் எழுதி வெச்சிட்டு போங்கன்னு செக்யூரிட்டி ரொம்ப கூலா சொன்னார். அண்ணா சாலையில உள்ள வங்கி தலைமையிடத்துக்கு வந்து லெட்டர் எழுதி பார்மாலிட்டி எல்லாம் முடிச்சுட்டு வந்தேன். செக் புத்தகம் கிடையாது. அதனால நான் அக்கவுண்ட் வெச்சிருக்குற திருவாரூர் கிளையிலதான் வித்ட்ராயல் சிலிப் மூலம் பணம் எடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க.

புத்தகம் வாங்குற ஆசையே போயிடுச்சு. நண்பர் காண்ட்ராக்ட் எடுத்த கட்டிடத்துலதான் நான் வேலை செய்தேன். அவர் அவசர செலவுக்குதான் பணம் தருவார். சம்பளம் 10 நாளைக்கு ஒரு முறைதான் சேர்த்து கிடைக்கும். ஏற்கனவே வேற செலவுகளுக்காக அவர்கிட்ட வாங்கின கடன் வேற பயமுறுத்துனுச்சு. கூட வேலை செய்த பையன்கிட்ட கடனா 100 ரூபாய்தான் கிடைச்சது. அதை வெச்சு அடுத்த நாள் போய் தள்ளுபடி விலையில ரெண்டு புத்தகங்கள் 90 ரூபாய்க்கு வாங்கினேன்.

அடுத்து ஒரு நாள் என்றாவது ஒரு நாள் வாய்ப்பிருந்தால் வாங்கலாம் என்று நினைத்து ஒரு பட்டியல் தயார் செய்யலாம் என்று சென்றேன். குமுதம் ஸ்டாலில் அப்போதைய ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன் தன் கையெழுத்திட்டு ஒரு நூலை 50 பேருக்கு இலவசமாக தந்தார். (இலவசத்தை திட்டி இப்போ பதிவு எழுதுற நானும் போய் வரிசையில நின்னு அந்த புத்தகத்தை வாங்கிட்டு வந்தேன்.)

அடுத்தடுத்த வருசமெல்லாம் போறதுக்கு வாய்ப்பே இல்லை. சென்னையில இருந்தப்பவே ரெண்டுநாள்தான் கண்காட்சியை பார்க்க போனேன். அதுல ஒரு நாள்தான் புத்தகம் வாங்க முடிஞ்சது.

அதுக்கப்புறம் திருவாரூர் வந்ததுக்கு பிறகும் நிலைமை பெருசா மாறிடலை.

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் ஒரு முறை 1000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்குள் உள்ளூரில் இப்படி புத்தக கண்காட்சியின் போது வாங்கிய புத்தகங்கள் மதிப்பு 7 ஆயிரம் ரூபாய்களுக்கு குறையாது. அது தவிர வார இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ் என்று நான் கடந்த 10 ஆண்டுகளாக செலவிடும் தொகை மாதம் ஒன்றுக்கு சராசரியாக 500 ரூபாய் இருக்கும்.

கண்காட்சியில் நான் வாங்குற புத்தகங்களில் 75 சதவீதம் கணிணி துறையில் என் தொழிலுக்கு உதவி செய்யுறதாத்தான் இருக்கும். 15 சதவீதம் புத்தகங்கள் மலையை புரட்டலாம், கடலை பாட்டிலுக்குள்ள அடைச்சுடலாம்னு அந்த சமயத்துல மாஸ்ல இருக்குற புத்தகங்களா இருக்கும். கொஞ்சம் கொஞ்சம் கதை, கட்டுரை எழுத முயற்சி செய்துகிட்டு இருக்குற நான் எழுத்துக்களுக்காக ஆசைப்பட்டு வாங்கிய புத்தகங்கள் 10 சதவீதம் இருந்தாலே அதிகம்.

தொழில் ஆரம்பிக்கிறதுன்னா குறைந்தது 60 சதவீதம் சொந்தப்பணம் வெச்சு ஆரம்பிச்சாதான் சமாளிக்கலாம்னு சொல்லுவாங்க. ஒரு பைசா கூட சொந்தக்காசு இல்லாம கோடிக்கணக்குல பெருக்குறவங்களோட வித்தை எனக்கு தெரியாது. அதனாலதான் சொந்த பணம் ஒரு ரூபாய் கூட இல்லாம தொழில் ஆரம்பிச்சுட்டு திணறிகிட்டு இருக்கேன்.

பொருளாதார சூழ்நிலை காரணமா நாம விரும்பி படிக்கணும்னு நினைக்குற புத்தகங்களை வாங்க முடியலையேன்னு ஒரு ஆதங்கம் ஒவ்வொரு ஜனவரி மாதம் வந்ததும் என் மனசுல குடியேறிடும். அடுத்த வருசமாவது அதுக்கு தகுதியான பொருளாதார சூழ்நிலை நமக்கு வாய்க்காதான்னு ஒரு ஆர்வம் மனசுக்குள்ள ஏதோ ஒரு ஓரத்துல இருக்கும். அந்த நம்பிக்கையிலதான் வாழ்க்கை ஓடுது.

தொலைக்காட்சி பார்க்க பிடிக்காத எனக்கு இப்போ பெரிய ஆறுதலா இருக்குறது மாவட்ட மைய நூலகம்தான். நிறைய படித்து ஓரளவு பக்குவம் கிடைச்சது அங்கதான். அது தவிர நிறைய புத்தகம் படிச்சதுல தமிழில் இலக்கணப்பிழைகள் மிக மிக மிக அரிதாகவே நான் டைப் செய்யும் போது வரும். இது எனக்கு கூடுதலா வாடிக்கையாளர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கு. சுருக்கமா சொன்னா எனக்கு சோறு  போடுறதுல தமிழுக்கும் முக்கிய பங்கு இருக்கு.

என்ன வருத்தம்னா மாவட்ட மைய நூலகத்துல கடந்த மூணு நாலு வருசமா புது புத்தகம் எதுவும் வாங்குறது இல்லை. சொத்து வரி உள்ளிட்ட வரிகளோட நூலக வரியும் சேர்த்துதான் வசூல் செய்யுறாங்க. அந்த பணம் என்னாச்சுன்னு கேட்டா வாய்மொழியா பல தகவல் வருது.

ஓரளவு அதிக வாசகர்கள் படிக்கக்கூடிய வார இதழ்கள், நாளிதழ்கள் போன்றவற்றில் சிலவற்றை நூலகத்துக்கு வாங்குறதில்லை. அவங்க அரசியல்ல வாசகர்களை பலிகொடுக்குறாங்க. பள்ளிக்கூடத்துலேர்ந்து சுமாரா 200 அடி தூரம் நடந்து திரும்புனா ஒண்ணுக்கு ரெண்டு டாஸ்மாக் கடை இருக்கு. ஆனா மாவட்ட மைய நூலகம் ஊருக்கு ஒதுக்குப்புறத்துல காட்டு பங்களா மாதிரி மேம்பாலத்தை தாண்டி இருக்கு.

தேசிய நெடுஞ்சாலையில வாகனங்கள்கிட்ட தப்பிச்சு இருபது நிமிசம் சைக்கிள்ல போய் அரைமணி நேரம் கூட எதையும் படிக்க முடியுறது இல்லை. எட்டரை மணிக்கு கிளம்பினாதான் திரும்ப 9 மணிக்குள்ள வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு என் தொழிலை கவனிக்க போக முடியும்னு அவதி அவதியா ஓடுவேன்.

இந்த லட்சணத்தில் நூலகம் அமைந்திருக்கும் இடம் இருந்தால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எங்கே வாசிக்கும் பழக்கம் வரப்போகுது?

இதை தனி பதிவா இன்னொரு நாள் போடணும்.

புத்தக கண்காட்சி எனக்கு ஏமாற்றமேன்னு தலைப்பு வெச்சதுக்கு காரணம், இந்த ஆண்டும் என்னால அங்க போக முடியாது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....நான் என்னை சொன்னேன்.

வாய்ப்பிருக்கும் வாசகர்கள் கண்டிப்பாக செல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் புத்தகங்களை நேரடியாக வரவழைப்பது என்றால் புத்தக விலையுடன் கூடுதலாக தபால் செலவும் கேட்பார்கள். அது தவிர எந்த பதிப்பகம், எந்த புத்தகம் என்று பல சிக்கல் இருக்கிறது. ஆனால் இங்கே நாம் வாங்க நேரமும் பணமும்தான் பற்றாக்குறையாக இருக்குமே தவிர புத்தகங்களுக்கு பஞ்சம் இருக்காது.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

தாய் மண்ணே வணக்கம்!

2013ல் என்ன செய்ய வேண்டும்

இந்திய சுதந்திர தின பொன்விழாவின்போது தாய் மண்ணே வணக்கம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாடி மேலும் புகழ்பெற்றது பெரும்பாலானவர்களுக்கு நினைவிருக்கும்.

7.1.2013 தேதியிட்ட குங்குமம் புத்தகத்தில் எழுத்தாளர்/திரைப்பட இயக்குனர் திருவாரூர் பாபு எழுதிய தாய்மண் சிறுகதை பிரசுரமாகியிருக்கிறது.

கதைச்சுருக்கம்:
பெரிய கோடீஸ்வரர் தன் மகளுக்கு குழந்தை இல்லை என்று ஏகப்பட்ட தான தர்மம், கோவில் புனரமைப்பு என்று கொடைவள்ளலாகிக்கொண்டு இருக்கிறார். அவ்வளவும் தாய்மண்ணை ஆட்டையைப் போட்டு (மணல் குவாரி நடத்துகிறேன் என்ற பெயரில் ஆற்றில் மண் எடுத்து நிலமகளின் வயிற்றை சூறையாடி) கொள்ளை அடித்து சேர்த்த பணம்.

குழந்தை இல்லாத மகள் கேட்கிறாள்...தாய் (ஆற்றின்) வயிற்றை சுரண்டுவதை நிறுத்துங்கப்பா. எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கும். (இதற்கு வேறு அர்த்தம் கொடுத்து குதர்க்கமாக பேசுபவர்கள் விலகிக்கொள்ளவும்) நிலமகளின் சாபம்தான் எனக்கு பிள்ளை இல்லாமல் போய்விட்டதோ என்னவோ என்று சொல்கிறாள்.

மெத்தப்படித்த அறிவுஜீவிகள், ஆற்றில் மணல் அள்ளக்கூடாது என்றால் அப்புறம் எப்படி வீடு கட்டுவதாம் என்று கேட்பார்கள்.

1. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் பயன்பாட்டை அதிகரித்தல் (நிலத்தடியில் இருக்கும் கச்சா எண்ணை தீர்ந்து போனால் அவ்வளவுதான். ஆனால் எத்தனாலை கரும்பு சாகுபடி மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் பெருக்கிக்கொள்ளலாம்.)

2. ஆற்றுமணலுக்கு பதில் செயற்கை மணலை உபயோகித்தல். (ப்ளைஆஷ் கற்கள் உபயோகம் இதுபோன்று மாத்தி யோசிப்பதில் மணல் பயன்பாட்டை கணிசமாக குறைக்கலாம்.) மேலும் அனல்மின்நிலையங்களில் உண்டாகும் சாம்பலை இஷ்டத்துக்கு விற்றால் சிமெண்டில் கலந்து வில்லங்கம் செய்துவிடுவார்கள் என்று பயந்தால் அந்த சாம்பலை வைத்து உரிய முறையில் கற்கள் தயாரித்து விற்பனை செய்தால் என்ன குடிமுழுகிப்போய்விடும்?

3. சூரிய ஒளி, காற்றாலை ஆகிய இயற்கை வளங்கள் மூலம் எந்த இடத்தில் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கவ்வளவு மின்சாரத்தை தயாரித்து அருகிலேயே பயன்படுத்திக்கொள்ளுதல்.

தீர்ந்து போகும் வளங்களை அசுர வேகத்தில் சுரண்டி சில அரசியல் வியாதிகளும், சில பணக்கார முதலைகளும், சில அசுரகுண அதிகாரிகளும் கோடீஸ்வரர்களாகிவருகிறார்கள்.

எதிர்காலத்தை நினைத்து நான் அச்சமடைய இவை மட்டுமல்ல காரணம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை முழுவீச்சில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் இயற்கை நம்மை அடிக்கப்போகும் மரண அடியை தாங்க மாட்டோம். அடுத்ததாக குப்பைகளை சேரவிட்டு வியாதிகளை பரப்பும் மையங்களாக்கி வைத்திருப்பதை தவிர்த்து அவற்றில் இருந்து எரிசக்தியை பெற முயற்சிக்க வேண்டும்.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இந்த இரண்டு விசயங்களை திறம்பட செயல்படுத்தினால் எதிர்காலத்தை நினைத்து அச்சப்படத்தேவையில்லை.

ஆனால் கல்வி, மருத்துவம் வியாபாரமாகிவிட்டது. டோல்கேட் வைத்து பயணம் செய்பவர்களை ஒரு ஆள் விடாமல் நிறுத்தி சுரண்டி விடுகிறார்கள். இது தவிர மதுவால் க்ரைம்ரேட் அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை சிலர் ஒப்புக்கொள்ளாமல் (தங்களுக்கு கொள்ளை லாபம் அளிக்கும் (அமுதசுரபி அல்ல) விஷ சுரபி மூலம் கிடைக்கும் வருமானம் போய்விடுமோ என்ற பயத்தில்) மது இல்லை என்றாலும் மக்கள் தப்பு செய்துகொண்டேதான் இருப்பார்கள் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

புதிய ஆண்டிலாவது உலகம் மேம்பட புதிய வழி பிறக்கட்டும். (இப்போது உலகம் வளரவில்லையா என்று சிலர் கேட்கலாம். நான் சென்ற பதிவில் சொன்னது போல் நிழலுக்கு சிமெண்ட், கம்பி வைத்து நிழற்குடை கட்டுவதைக்காட்டிலும் சாலையோரம் மரங்களை நட்டு வளர்த்து பராமரிப்பது மிக அவசியம்)