Search This Blog

வெள்ளி, 28 ஜூன், 2019

செங்கம் டிராவல்ஸ் - 4



முன்கதை சுருக்கம்:




அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.




பத்து ஆண்டுகளுக்கு முன்பு- அர்ச்சனா பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும்போது அவன் சுற்றி வந்த நாட்களில் நடந்த சில சம்பவங்கள் இவள் நினைவுக்கு வருகின்றன. அர்ச்சனாவின் தோழிகள் கூட அவனைப் பற்றிக் குறிப்பிட்டு கிண்டல் செய்கிறார்கள்.


பேருந்தில் அவனைப் பார்த்தது முதல் பழைய நினைவுகளில் அர்ச்சனா மூழ்கிவிடுகிறாள். அதனால்தான் பேருந்து நின்று எல்லோரும் டீ குடிக்க இறங்கிச் சென்றது கூட தெரியாமல் சிந்தனையில் இருப்பவளைப் பார்த்து அவள் தாயார் சித்ரா கடிந்து கொள்கிறாள்.


இந்த எண்ண அலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் பழைய சம்பவங்களின் போது சாட்சியாக இருந்த மலர்விழியிடமே கேட்டு விடலாம் என்று போன் செய்கிறாள்..


*****




செங்கம் டிராவல்ஸ்


தொடர்கதை


திருவாரூர் சரவணன்


பகுதி 4


05–04–2019


சித்ரா வாசல் தெளித்து விட்டு கோலமாவு டப்பாக்கள் அடங்கிய பிளாஸ்டிக் தட்டை எடுத்துக்கொண்டிருக்கும்போதுதான் சத்தம் கேட்டு அர்ச்சனா விழித்தாள்.


சட்டென்று படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தவள், ‘‘அம்மா... என்னை எழுப்பதானே சொன்னேன்... இப்ப நீபாட்டுக்கு என்னைய விட்டுட்டு கோலம் போடப் போனா என்ன அர்த்தம்...’’


‘‘ஏண்டி காலையிலேயே இப்படி கத்துற... நான் தண்ணி தெளிக்க எழுந்திரிச்சப்ப நல்லா அசந்து தூங்கிட்டு இருந்த. பொதுவா நல்ல தூக்கத்துல நீ இருக்கும்போது எழுப்புனா பட்டுன்னு கன்னம், கை, காலுன்னு எது சிக்குதோ அங்க ஒரே அறை விடுவ... அது மட்டுமில்லாம நம்ம காலனியில 12 வீடு இருக்கு. ஒரு வீட்டுக்கு கணக்கு வெச்சா ரெண்டரை நாள்தான் கோலம் போடுற முறை வரும். இன்னைக்கு நாம போட்டா அடுத்து 12 நாள் கழிச்சுதான். இதுக்கு ஏன் உன் தூக்கத்தையும் கெடுத்துகிட்டுன்னு விட்டுட்டேன்... அதுக்கு இவ்வளவு கோபமா?’’


‘‘அப்போ மத்த நாள் எப்பவும் போல காலையில ஆறரை மணிக்கு தண்ணி புடிச்சா போதுமா?’’


‘‘அப்படியே ஒரு டேங்கர் லாரி தண்ணியை புடிச்சு ஊத்தப்போற...ச்சே... மணியாகுது வா கோலம்போட...’’ என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறவும், பின்னாலேயே அர்ச்சனாவும் ஓடினாள்.




திடு திடுவென்று அர்ச்சனா ஓடும் சத்தம் கேட்ட அவள் தாய், ’’ஏய்... டி.விக்கு பக்கத்துல ஸ்கார்ப் இருக்கு பாரு. அதை எடுத்து கட்டிகிட்டு வா... பனியில உடம்பு முடியாம விழுந்துட்டன்னா நாலு நாள்ல மிச்சம் இருக்குற அரையாண்டு பரிச்சை கோவிந்தாதான்...’’


சித்ரா சொன்னதிலும் நியாயம் இருக்கவே, வேறு வழியின்றி தலைக்கு ஸ்கார்ப்பை கட்டிக் கொண்டு கோலம் போட வந்தாள் அர்ச்சனா. ஆனாலும் அவள் மனதில் ஒருவேளை அவன் இந்த நேரத்தில் வந்தால், ஸ்கார்ப் கட்டிக் கொண்டிருக்கும் தன்னை அடையாளம் கண்டு கொள்வானா என்ற சந்தேகம் எழுந்தது.


‘‘ம்ச்ஹ... பசங்களுக்கு உடம்பெல்லாம் கண்ணு... அப்படியா நாம அடையாளம் தெரியாம மாறிடப்போறோம்...’’ என்று மைண்ட் வாய்சில் பேசுவதாக நினைத்து வாய்விட்டு உளறினாள் அர்ச்சனா.


‘‘என்னடி ஏதோ புலம்புற... தூங்குறப்ப கண்ட கனவு இன்னும் கலையலையா... இதுக்குத்தான் நீ எழுந்திரிக்க வேணாம்னு சொன்னேன்.’’ என்ற சித்ராவைப் பார்த்து முறைத்து விட்டு, அம்மா போட்ட கோலத்திற்கு வண்ணம் தீட்டுவதில் கவனம் செலுத்தினாள்.


அப்போது யாரோ சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போடும் சத்தம். நிமிர்ந்து பார்த்தாள். அவனேதான். சைக்கிள் கேரியரில் நாளிதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக