Search This Blog

பார்த்ததும் படித்ததும் கவனித்ததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்த்ததும் படித்ததும் கவனித்ததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 பிப்ரவரி, 2010

எதிர்பார்த்ததும் அதிர்ச்சியும் - வடிவேலு - வைஷ்ணவி - எஸ்தர்

நான் பாக்குறதுக்குதான் காமெடியனா இருப்பேன்.ஆனா உள்ளுக்குள்ள டெரர் அப்படின்னு வடிவேலு ஒரு படத்தில் பேசிய வசனம் இப்போது சிங்கமுத்துவின் செயலில் வெளிப்பட்டு வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருவரைப் பற்றிய உண்மை வெளிவரவேண்டும் என்றால் அவரைப்பற்றி நன்கு தெரிந்த நபருக்கு போதை ஏற வேண்டும் அல்லது இருவருக்கும் ஏதாவது கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்படவேண்டும். வடிவேலு - சிங்கமுத்து விவகாரத்தில் இரண்டாவது விஷயம் நிகழ்ந்திருக்கிறது.

இதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது அவரவர் மனசாட்சிக்குதான் தெரியும்.அதனால் இப்போது நான் பேசப்போவது இந்த செய்தியில் நாம் அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகளைப்பற்றிதான்.

சாப்பாட்டைத் தவிர வேறு எதையுமே நாம் போதும் என்று சொல்வதே இல்லை.மற்ற துறைகளைக் காட்டிலும் சினிமாத்துறையில் புகழேணியில் ஏறத் தொடங்கிவிட்டால் கன்னாபின்னாவென்று பணம் கொட்டத்தொடங்கிவிடும்.

ஒரு சாதாரண வியாபாரி புதிய வண்டி வாங்கினாலே அவரிடம் பணியாற்றுபவர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் தீப்பிடிக்கத்தொடங்கிவிடும். மற்றவர்களின் விவகாரமே இப்படி என்றால்,மீடியாவின் ஒட்டுமொத்த கவனமும் இருக்கும் நடிகர்கள் நிலையைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்.

துரதிர்ஷ்ட வசமாக அவர்களுக்கு முதலீடு பற்றியோ பணத்தைப்பாதுகாப்பது பற்றியோ முழு அளவு விபரம் தெரிந்திருப்பது இல்லை.அதற்கு நேரமும் இருப்பது இல்லை.இதனால் பிறரை நம்பவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

இன்றைய சூழலில் அடுத்தவர் உதவி இல்லாமல் எதையும் செய்ய முடியாது.அதே சமயம் கண்மூடித்தனமாக நம்புவது வேறு. பிறரின் உதவியை அல்லது சேவையைப் பெற்றுக்கொள்வது என்பது வேறு. இந்த வித்தியாசத்தை நாம் புரிந்துகொண்டால் ஏமாந்து நிற்கவேண்டிய சூழ்நிலை அவ்வளவு எளிதில் வராது.

வகுப்பறையில் ஆசிரியை இருக்கும்போது ஐந்து வயது குழந்தைகள் அமைதியாக இருந்தாலும் அவர் எதற்காவது வெளியில் சென்றால் சந்தைக்கடை இரைச்சலின் நிலமைக்கு வகுப்பறையைக் கொண்டுவந்துவிடுவார்கள். கண்காணிப்பு இல்லாத எந்த விஷயமும் உருப்படியாக நடந்தேறாது என்ற உண்மையைப்புரிந்து கொள்ள இந்த ஒரு உதாரணம் போதாதா.

கண்காணிப்பு என்பது ஒரு விஷயத்தைக் கட்டுப்படுத்துவதாக இல்லாமல் நமக்குத் தேவையானதைக் கேட்டுப்பெறும் வகையில் இருக்கவேண்டும்.நம் கார் டிரைவரிடம் இப்படி ஸ்டியரிங்கை திருப்பு, இந்த அளவுக்கு ஆக்சிலேட்டரை அழுத்து என்று அபத்தமாக சொல்வதாக இல்லாமல் நான் இங்கே போக வேண்டும் என்ற விஷயத்தை மட்டும் தெளிவாக கேட்பதாக இருக்கவேண்டும்.

வண்டியில் ஏறி அமர்ந்த பிறகு ஓட்டுநர் சவுகர்யத்துக்கு விட்டுவிட்டு அவர் திருச்சிக்கு பக்கத்தில் ஒரு புளிய மரத்தில் மோதி நிறுத்தியபிறகு "அய்யய்யோ...நான் சென்னையில இருந்து பெங்களூரு போக சொன்னேன். இவன் திருச்சிக்குப்போய் காரை மோதிட்டான்." என்று புலம்புவதில் புண்ணியம் இல்லை.

நண்பர்களுக்கு சுற்றுலா, சினிமா என்று ஆயிரக்கணக்கில் செலவழிக்கும்போது அதெல்லாம் செலவழிப்பவர்களுக்கே ஒரு பொருட்டாக தெரியாது. ஆனால் எதாவது ஒரு சமயத்தில் பத்துரூபாய் என்ற அளவில் பிரச்சனையாகி நிற்கும்போதுதான் சின்ன வயதில் பத்து பைசா மிட்டாய் வாங்கி சட்டையில் வைத்துக் கடித்து பாதி கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வந்துதொலைக்கும்.

சிங்கமுத்து அவர் மகனை வைத்து மாமதுரை என்ற படம் எடுத்தபோதே, இப்படி எதாவது குற்றச்சாட்டு கிளம்பும் என்று நான் எதிர்பார்த்ததுதான்.

சினிமாக்காரர்களுக்கு அவர்கள் ஒரு காலத்தில் பட்ட கஷ்டத்துக்கு, புகழ் பெற்றுவிட்டால் பல நூறுமடங்கு வருமானம் வருவதால் இப்படி அவ்வப்போது ஒரு சிலர் ஏமாறுவதாக சொல்கிறார்கள்.

சில தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நண்பர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு பல வியாதிகளை சுமந்து சம்பாதிக்கும் பணத்தை சில தீய வழிகளில் மகிழ்ச்சி என்ற பெயரில் செலவழிக்கிறார்கள். அவர்கள் தங்கள் துறையிலேயே நல்ல வழிகளில் திட்டமிட்டு செலவழித்து தானும் சுற்றி உள்ளவர்களும் நன்றாக இருக்கிறார்கள். அவர்களை முன்னுதாரணமாகக்கொள்ளலாமே.

******

தொழில் பிரச்சனையில் ஆந்திராவின் தொழிலதிபர் ஒருவரின் மகளைக் கடத்திக் கொன்று பாய்லரில் போட்டு எரித்துவிட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது.இந்த அதிர்ச்சியில் அந்த கோடீஸ்வர தந்தை மாரடைப்பால் மரணம் என்ற செய்தி என் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு வேறுவிதமானது.

சாராய வியாபாரியான அவர் இந்த அளவு மகள் மீது பாசம் வைத்திருப்பதை ஒருபக்கம் பெருமையாகவும் மறுபக்கம் வெறுப்பாகவும் நான் உணர்கிறேன்.
நம் நாட்டில் இன்னும் எத்தனையோ குடும்பங்கள் குடியால் சீரழிந்து நிற்கின்றன.இப்படி சம்பாதித்தவர் தன் குடும்பத்தினரை நான் பாராட்டி சீராட்டி வசதி வாய்ப்போடு வளர்ப்பது போல் மற்றவர்களும் வளர்க்கவேண்டாமா என்று சிந்தித்திருக்கலாமே என்ற எண்ணம் என் மனதில் தோன்றுவதை மறுக்கமுடியவில்லை.

(நான் குறிப்பிடுவது, வருமானத்தை குடித்தே அழித்து குடும்பத்தை பசியால் வாடவிட்டிருப்பவர்களைத்தான்.)

அரசியல்வாதிகளில் ஒப்பந்தங்களைப்பெறுவது, மற்றும் இதுபோன்ற தொழில் போட்டிகள்தான் உயிருக்கே உலைவைக்கும் அளவுக்கு மோசமான பகையை வளர்க்கின்றன என்பது என் கருத்து.பிற தொழில்களில் போட்டிகள் இருந்தாலும் கொலைசெய்யும் அளவுக்குப்போவது மிகவும் அரிதாகத்தான் நடக்கிறது.

******

திருச்சியில் தறிகெட்டு ஓடிய மணல் லாரியின் சக்கரம் எஸ்தர் என்ற பொறியியல் கல்லூரி மாணவி மீதே ஏறி நின்ற ஒளிப்படத்தைப் பார்த்து பல நிமிடங்கள் எனக்கு படபடப்பு குறையவே இல்லை. நம் மோட்டார் வாகன சட்டத்தில் காயமடைந்தால் அவரது மருத்துவசெலவுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் உயிரிழந்துவிட்டால் ஓரிரு ஆயிரங்கள் அபராதம் செலுத்தினால் போதும் என்ற வகையில் விதிமுறை இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த அபத்தமான நடைமுறை கண்டிப்பாக மாற்றப்படவேண்டும்.

மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் இருபத்தைந்து முதல் முப்பது கி.மீ வேகம் மட்டுமே என்பது ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு கோரமான விபத்துகள் நாள்தோறும் அரங்கேறாது.

காயமடைந்தால் செலுத்துவதைவிட உயிரிழப்பு என்றால் பலமடங்கு அதிகமான அபராதம் விதிக்கப்பட வேண்டும்.மேலும் இது போன்ற குற்றவாளிகளுக்கு தனி சிறை ஏற்படுத்தப்பட்டு அவர்களை தொழிலாளர்களாகப் பயன்படுத்தி நஷ்டஈடு வசூலாகும் வரை வெளியில் விடவே கூடாது என்பது போன்று கடுமையான விதிமுறை ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள் குறையும்.

ஏனெனில் விபத்துக்கு எண்பது சதவீதம் ஓட்டுநரின் தவறே காரணமாகிறது.

******
படங்களைப் பெரியதாகப் பார்க்க படத்தின் மீதே க்ளிக் செய்யவும்.

சனி, 30 ஜனவரி, 2010

ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா...

இன்னும் மூன்று மாதங்களுக்குள் நூலகத்தில் 50 லட்சம் மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்கப்போவதாக 30.01.2010 தினமலர் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.இதுவரை பத்து லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும் இவர்களால் இரண்டரைகோடி ரூபாய் வைப்புத்தொகை சேர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இது மட்டுமல்ல, உள்ளாட்சித் துறைகளால் வசூல் செய்யப்படும் வரிகளில் அடங்கிய நூலகம் மற்றும் கல்விக்கான தொகையும் உண்டு.இந்தப் பணம் எல்லாம் உருப்படியாக செலவழிக்கப்படுகின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

சென்னை மாநகராட்சியில் மட்டுமே வரியாக வசூலிக்கப்பட்டதில் கல்விக்கான தொகையில் எத்தனையோ மாநகராட்சிப் பள்ளிகளை சீரமைக்கலாம் என்று சொல்கிறார்கள்.ஆனால் அந்த தொகை வேறு பயன்பாட்டுக்கு செலவழிக்கப்பட்டுவருகிறதாம்.

குடிசைகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில் சென்னை நகரின் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களை எல்லாம் ஐம்பது கிலோமீட்டருக்கு அப்பால் துரத்தி அடித்துவிட்டார்கள். அவ்வளவு தூரம் பிள்ளைகளை படிக்க அனுப்பமுடியாது என்று இந்த அப்பாவிகள் மன்றாடியதற்கு கோர்ட் உத்தரவை மீற முடியாது என்று ஒருவர் சொல்கிறார். சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறிய கட்டிடங்கள் எல்லாம் இதே கோர்ட் உத்தரவை மீறிதான் இவ்வளவு காலமாக இருக்கின்றன. இன்னமும் இருந்து கொண்டே இருக்கும்.சட்டத்தின் பிடியில் சிக்குவதெல்லாம் ஏழைகள்தானே.

இப்படி மாணவர்களை வெளியூருக்கு குடும்பத்துடன் துரத்தி அடித்து விட்டு மாணவர்களே சேரவில்லை என்று நகரின் முக்கியப்பகுதிகளில் இருக்கும் மாநகராட்சிப் பள்ளிகளை எல்லாம் மூடிவிடலாம்.அந்த இடங்களை ஊழல் அரசியல்வாதிக்கு தாரை வார்த்துவிடலாம். அவர்கள் அதை கூறு போட்டு வித்து கறுப்பு பணத்தில் புரளலாம். இந்த உண்மை புரியாமல் ஒருவர் திருட்டு வி.சி.டியால் கறுப்பு பணம் வருகிறது என்று அப்பாவியாக பேசுகிறார்.

மறுபடி நூலக விஷயத்துக்கு வருவோம்.
நூலகம் என்றால் பணம் ஒதுக்கி புத்தகம் வாங்குவதுடன் கடமை முடிந்தது என்று எந்த மடையன் நினைத்திருக்கிறானோ தெரியவில்லை.இன்னும் பல ஊர்களில் நூலகம் வாடகைக் கட்டிடத்தில் என்று இடிந்து விழலாம் என்ற யோசனையில்தான் இருக்கின்றன.

திருவாரூர் மாவட்ட மைய நூலகம் இந்த மாதிரி அவல நிலையில் இருந்து  தப்பித்து 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்(?!) புதிய கட்டிடத்தில்தான் இருக்கிறது.இணைய இணைப்புடன் கணிணிகள், பெரிய இடம் என்று கட்டமைப்புக்கு குறைவே இல்லை.ஆனால் பயன்படுத்தும் வாசகர்கள் எண்ணிக்கையைப்பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

நூலகத்தின் உள்ளே உள்ள குறைகள் என்று சொன்னால் பணியாளர்களைத்தான் என் கைவிரல் சுட்டிக்காட்டுகிறது.காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணிவரை என்றுதான் வேலை நேரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் தினமும் காலை 8.15 முதல் 8.30 மணி வரை எப்போது வேண்டுமானாலும் திறப்பார்கள். தனியார் கடைகளில் வேலை செய்பவர்கள் காலை ஒன்பது மணிமுதல் இரவு பத்துமணிவரை அவதிப்படுகிறார்கள்.
ஆனால் இங்கே காலை எட்டு முதல் இரண்டு மணிவரை ஒரு ஷிப்டும் மதியம் இரண்டு மணிமுதல் இரவு எட்டு மணிவரை இரண்டாவது ஷிப்டும் செயல்படும். ஆறுமணி நேரம்தான் நிரந்தர ஊழியர்களுக்கு பணி. ஆனால் காலை எட்டு மணிக்கு ஒரு நாளும் திறப்பது கிடையாது. வருகைப்பதிவேட்டில் மட்டும் காலை ஏழரை மணி என்று குறிப்பிட்டு விடுவார்கள். எனக்கு என்னவோ வாசகர்களுக்குதான் ஏழரை என்று தோன்றுகிறது.

பின்ன என்னங்க.காலையில ஒன்பது மணிக்கு வேலைக்கோ பள்ளிக்கூடத்துக்கோ போக நினைக்குறவங்க எட்டு மணிக்கெல்லாம் நூலகம் வந்துட்டு ஒரு அரைமணி நேரம் எதாவது படிச்சுட்டு இல்ல புத்தகம் தேடி எடுத்துட்டு போகலாம்னு வந்து பார்த்தா எட்டரை மணி வரை திறக்க மாட்டாங்க. அப்புறம் அரை வெளியில போக வேண்டிய அவசரத்துல இருக்குறவங்க எப்படி நூலகத்துக்கு வருவாங்க?

அடுத்து வாரஇதழ்கள் பிரச்சனை.திருவாரூர் நூலகத்துக்கு சில வார இதழ்கள் ஒரு கடையிலதான் வாங்கிட்டு வருவாங்க. அது சரியான நேரத்துக்கு நூலகம் வந்து சேராது.ஆளாளுக்கு இது என் வேலை இல்லை, உன் வேலை இல்லைன்னு பல நேரங்கள்ல பதினைந்து நாட்கள் வரை புத்தகங்கள் வந்து சேராது. திருவாரூர் நகரின் மையப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற நூலகத்துக்கு வந்து புத்தகங்கள் இல்லைன்னா அடுத்து போகத்தான் வேணுமான்னு யோசிப்பாங்க.

ஆனா இப்படி இருபது நாள் கழித்து எடுத்துட்டு வர்ற புத்தகத்தை சில ஊழியர்களே வீட்டுக்கு எடுத்துட்டுப்போய்ட்டு மறு நாள் மதியம்தான் கொண்டுவருவாங்க. அதுக்கு இடையில யாராவது கேட்டா, யாரோ வாசகர்தான் திருடியிருப்பாங்க அப்படின்னு சொல்லிட்டா அவங்க வேலை முடிந்தது.

அப்ப அவங்க சின்சியரா வேலையே பார்க்குறது இல்லையான்னுதானே கேட்குறீங்க? ஏன் இல்லை...இரவு எட்டு மணிக்குப் பூட்டுறதுக்காக ஏழரை மணிக்கே வாசகர்களை மறைமுகமா விரட்ட ஆரம்பிச்சுடுவாங்களே.

அடுத்து திருவாரூர் நூலகத்துக்கு போறதுல வயசானவங்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பிரச்சனையைப் பத்தி பார்ப்போம்.
நாகப்பட்டணம் போற புறவழிச்சாலையில ஒரு வயலுக்குள்ளதான் நூலகம் அமைந்திருக்கு. அரைமணி நேரம் நூலகத்துல இருக்குறதா இருந்தாலும்  திருவாரூர்ல இருந்து போறவங்க சாப்பாடு எடுத்துட்டுப் போறது நல்லது. ஏன்னா, மேம்பாலத்துல ஏறி இறங்குறதுக்குள்ள சாப்பிட்டது எல்லாம் செரிச்சுடும்.

அடுத்த பிரச்சனை, இது தேசிய நெடுஞ்சாலையா இருக்குறதால கனரக வாகனப் போக்குவரத்தும் மிக அதிகம். ரயில்வே மேம்பாலத்துல ரெண்டு பேருந்து போற அளவுக்குதான் வழி இருக்கு. ஆனா இரண்டு பக்கமும் தலா ஒரு அடி அகலத்துக்கு மண் குவிஞ்சு கிடக்கும். அதுல சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓட்டுறது கஷ்டம். அதனால கொஞ்சம் விலகி போகும்போது எதிரும் புதிருமா இரண்டு பேருந்து வந்தா அவ்வளவுதான், அவங்க அடிக்கிற ஹாரன் சவுண்டுல நூலகத்துல எவ்வளவு சத்தம் இருந்தாலும் சைலன்ஸ் தான்.

பெரியவங்களே இந்தப் பாதையில போறது கஷ்டம்.அப்புறம் எப்படி சின்னப்பசங்களை அனுப்புவாங்க?படிக்கிறதுன்னா கஷ்டம் இருக்கத்தான் செய்யும். அப்படின்னு நீங்க சொல்றீங்க. ஆனா அதுக்கு உயிரோட இருக்கணுமே அப்படின்னு அவங்க சொல்றாங்க.

நாயகன் படத்துல "நாலு பேர் நல்லா இருக்கணும்னா எதுவுமே தப்பு இல்லை." -இந்த வசனத்தை அரசியல்வாதிங்கதான் ரொம்ப கெட்டியா புடிச்சுகிட்டாங்க.234 பேர் வருஷத்துக்கு சில நாட்கள் மட்டும் கூடப்போற சட்ட சபைக்கு கொடுக்குற முக்கியத்துவம் ஏழை மாணவர்கள் மேல இல்லை.

கமிஷன் அடிக்கிறதோட அரசியல்வாதி தொடர்புடைய யார் யார் பலனடைவாங்க அப்படின்னு  பார்க்குறதோட சரி.அந்த வேலை மக்களுக்கு உபயோகமா இருக்குமா அப்படின்னு எல்லாம் யோசிக்குறதே இல்லை. திருவாரூர்ல பஸ்ஸ்டாண்ட் நெரிசலான பகுதியில இருக்கு.அதை ஊருக்கு வெளியில கொண்டு போனா மக்களுக்கு நல்லது. ஆனா சில வியாபாரிங்க அப்படி செய்யவிடலை. ஆனா நூலகத்தை பொறம்போக்குல.... ச்சை...புறநகர்ல கட்டிவெச்சுட்டாங்க.
ஐம்பது வரிகளுக்குள்ள இந்த பதிவை எழுதிடலாம்னு நினைச்சேன். முடியலை. எழுத எழுத கோபம்தான் வருது. அதனால இப்ப இதோட நிறுத்திக்குறேன்.

சினிமா தொடர்பான ஒரு சந்தேகம்: சினிமாவைக் கிண்டல் பண்ணி அப்பப்ப படம் வந்திருக்கு. அதோட சில சினிமாக்காரர்களோட கண்டனமும்தான்.இப்ப வந்திருக்குற "தமிழ்ப்படம்"  சினிமாக்காரங்க யாரும் மூச்சு விடலையே. இதுக்குப் பேர்தான் பரமசிவன் கழுத்துல இருந்துகிட்டு பாம்பு கருடன்கிட்ட வாலாட்டுறதோ?

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

நாட்டு நடப்பு - பல சந்தோஷங்களும் சில சங்கடங்களும் - 24.01.2010

தினமணி கதிர் 2009ம் ஆண்டு சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு 10000 ரூபாய் பெற்ற "பரட்டச்சி" சிறுகதையை எழுதியவர் ஷாராஜ்.இந்தக் கதையில் சமனற்ற மனநிலையை உடைய பரட்டச்சியையும் யாரோ ஒரு கயவன் கருவுறச்செய்து விடுவான். வீட்டுத்திண்ணையில் இட்லி வியாபாரம் செய்து வரும் ஒரு பெண்தான் இவளுக்கு உணவு கொடுத்துவருவாள்.




பரட்டச்சிக்கு குழந்தை பிறக்கப்போகும் நேரம், குப்பைத்தொட்டியில் யாரோ ஒருவர் பச்சிளம் குழந்தையை வீசிச்சென்றிருப்பார்கள்.தெருவே கூடி நின்று தொண்டு நிறுவனத்துக்கு போன் செய்வோமா அல்லது காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிப்போமா என்று விவாதித்துக்கொண்டு இருப்பார்கள்.

குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையின் அழுகுரல் திடீரென்று நின்றுவிடும். அந்த நேரத்தில் நிறைமாதமாக அங்கு வந்த பரட்டச்சி குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்தி தன் மார்பில் உயிர்ப்பால் ஊட்ட முயற்சி செய்வாள். பரட்டச்சிக்கு அது நாள் வரை உணவளித்து வந்த இட்லிக்கார அம்மா கூட குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையின் பசிக்கு என்ன செய்வது என்று யோசிக்காததை நினைத்து அதிருவதை கதையைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

அதிர்ந்தது கதையைப் படித்த நானும்தான்.நாம் என்னதான் சமூக சேவை செய்வதாக கூறிக்கொண்டாலும் நம்மைச் சுற்றி ஒரு மெல்லிய வட்டத்தைத் தாண்டி செல்வது இல்லை, ஏன் அது பற்றி யோசிப்பது கூட இல்லை என்ற உண்மையை உணர்ந்தேன்.

இந்த எழுத்தாளருடன் நான் கைபேசியில் பேசியது உண்டு.அவர் தன்னுடைய கைபேசி எண்ணுடன் எனக்கு கடிதம் எழுதுவதற்கு காரணம், தினமலர்-வாரமலருக்கு நான் எழுதிய கடிதம்தான்.

07.06.2009 தினமலர்-வாரமலரில் அம்ரிதவர்ஷிணி என்ற புனைப்பெயரில் விஷவியூகம் என்ற சிறுகதை பிரசுரமாகியிருந்தது.

தற்கொலை செய்யப்போகும் காதலர்கள், தங்களைக் கொத்த வந்த பாம்பிடமிருந்து ஒரு போராட்டம் நடத்தி தப்பித்தபிறகு மீண்டும் வாழ நினைப்பதுதான் கதை.

சின்னக் குழந்தைகளிடம் இருந்து பொம்மையை வாங்க முயற்சித்தால் அவர்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் வேறு பல காரணங்களால் அந்த பொம்மையை சிதைக்கவோ, தூக்கி எறியவோ அவர்கள் தயங்குவது இல்லை.

மனிதர்களும் இப்படித்தான்.கடவுள் கொடுத்த உயிரை அற்பக் காரணங்களால் துறக்க நினைப்பார்கள். ஆனால் ஒருவன் கொலை செய்ய வந்தால் அதிலிருந்து தப்பிக்க அவர்கள் கையாளும் வழிகள் வலிமையானதாக இருக்கும். இதை அழகாக உணர்த்தியது இந்தக் கதை.


-இதுதான் நான் வாரமலருக்கு எழுதி அனுப்பிய வாசகர் கடிதம். இந்தக் கடிதம் வாரமலரின் "அர்ச்சனை" பகுதியில் பிரசுரமாகவில்லை. ஆனால் இதை சம்மந்தப்பட்ட எழுத்தாளரிடம் தினமலர் நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கிறது.இந்த வரிகள் ஈர்த்ததால்தான் எனக்கு ஷாராஜ் அவர்கள் நேரடியாக கடிதம் எழுதியிருக்கிறார்.

விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 1
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 2
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 3
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 4

இதைப் பற்றி நான் இப்போது சொல்லக் காரணம், எனக்குத் தெரிந்தவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்வில் மிகக்குறைவான மதிப்பெண் பெற்றதற்காக ஆசிரியை திட்டியதைத் தாங்க முடியாமல் ஒரு தூக்கு. மனைவி மாற்றானுடன் இருந்ததைப் பார்த்தததும் விஷம்.குடிக்கு அடிமையானதும் தொழிலை இழந்து வருமானம் தடைபட்டு பைத்தியம் பிடிக்கும் நிலைக்குச் சென்று தூக்கு.

இது போல் எனக்குத் தெரிந்து பிரச்சனையை விடத்தெரியாமல் உயிரை விட்டவர்கள் அனைவருமே 17 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போ மற்ற வயதினர் தற்கொலை செய்யலாம் என்று சொல்வதாக நீங்கள் அர்த்தம் கொள்ளக்கூடாது. நமது முன்னாள் குடியரசுத்தலைவர் முதல் கறை படியாத தலைவர்கள், ஊழலில் ஊறும் அரசியல்வாதிகள் - இவர்களில் யாருமே இளைய தலைமுறையை குறைத்து எடை போடுவதில்லை. நல்ல மரியாதைதான் வைத்திருக்கிறார்கள். பிறகு ஏன் மற்றவர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தன்மீது வைக்க தயங்க வேண்டும்?(எதிலும் விதிவிலக்குகள் நிறையவே இருக்கின்றன.அதை எல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய கடமை இளைய தலைமுறைக்கு அதிகமாகவே இருக்கிறது.)

நேற்றும் ஒரு துர்மரணம். தொழிலில் நன்றாக முன்னேறி வந்த அவன் சில காலமாக மதுவுக்கு அடிமையாகி இருந்தான்.நேற்று காலை முதல் அவன் எங்களிடையே இல்லை.

தவறோ சரியோ ஒருவரின் மனம் நினைப்பதை அப்படியே ஒப்புக்கொள்ளும் ஆட்களைத் தவிர மற்றவர்களை அருகில் சேர்க்கவோ, அவர்கள் சொல்வதில் நன்மை தரக்கூடியது இருக்கிறதா என்று நினைக்கவோ இன்று பலரும் தயாராக இல்லை.

என்னுடைய 5 வயதில் இருந்தே அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்திருக்கிறேன்.இதில் எதுவும் பள்ளிக்கூட பாடம் தொடர்பானது அல்ல.ஆனால் ஒரு நாளும் உயிரை விடுவது பற்றி சிந்தித்ததே இல்லை.இன்று பலருக்கும் பள்ளிப்பாடம்தான் மிகப்பெரிய பிரச்சனையாகத் தோன்றுகிறது.

இப்படி தப்பான முடிவு எடுப்பவர்கள் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். போனால் வராதது உயிர், காலம் என்பார்கள்.பல விஷயங்களை இன்று செய்யவில்லை என்றால் நாளை அல்லது நான்கு மாதம் கழித்து கூட செய்து கொள்ளலாம். அப்படி செய்வதற்கு முதலில் உயிருடன் இருக்க வேண்டும்.இதை யோசித்தால் யாருக்கும் தற்கொலை எண்ணம் தோன்றாது.

இன்று நாளிதழில் செய்தி ஒன்று படித்தேன். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறான் ஒரு கயவன். அவன் மீது புகார் அளித்துவிட்டார்கள் என்று அத்துமீறிய பையனின் பெற்றோர் பாதிக்கப்பட்ட பெண்ணையே வந்து திட்டியிருக்கிறார்கள். ஊர் முழுவதும் விஷயம் பரவியதால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தப்பு செய்த பையனைத் தண்டிப்பது இருக்கட்டும். முதலில் அவனுக்குப் பரிந்து பேசிய அவன் பெற்றோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

1998ல் சரிகாஷா மரணம்தான் கடைசி ஈவ்டீசிங் பலியாக இருக்கவேண்டும் என்று இதைத் தடுக்க அதிகாரம் படைத்த அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால் தினம் தினம் நடக்கும் பிரச்சனைகளைப் பார்த்தால் பல நேரங்களில் வேதனைப்படுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. நம் நாட்டில் உள்ள சட்டங்கள் பிடிக்காத ஆளின் மீது பொய் வழக்குப் போடவும் பிடித்த ஆள் தவறே செய்தாலும் தப்பிக்க வைக்கவும்தான் அதிகமாக உதவி செய்கின்றன.

இன்னும் ஒரு மாத காலத்தில் பள்ளியில் பத்தாம்வகுப்பு, பிளஸ்டூ பொதுத்தேர்வுகள் தொடங்கப்போகின்றன.தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளை விட பெற்றோர்தான் அதிகமாக டென்ஷன் ஆவார்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். தற்கொலை என்பது நிச்சயம் தீர்வு இல்லை. இதை மனதில் நிறுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை அந்த முடிவெடுக்கத் தூண்டி விடாதீர்கள்.

பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டாலும் அதை அச்சமின்றி பெற்றோரிடம் சொல்லி தீர்வு காணும் துணிச்சல் பலருக்கும் இல்லாமல் போவதற்கும் பெரியவர்கள்தான் காரணம்.

நீ ஒழுங்கா போனா அவன் ஏன் தொந்தரவு செய்யுறான்.-இந்த வார்த்தை மிகவும் தவறு.இது மாதிரி பிரச்சனைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள், சொன்னாலும் பெரிய தண்டனை கிடைக்காது என்ற துணிச்சல்தான் இப்படிப்பட்ட அத்துமீறல்களுக்குக் காரணம்.ஒரு ஊரில் லோக்கல் தாதாவின் பொண்ணுகிட்ட இப்படிப் போய் வம்பு செய்யுறது ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கும். அந்த வயசு காரணமா அந்தப் பொண்ணே யாரையாச்சும் பார்த்தால் கூட தெறிச்சு ஓடுறவங்க எண்ணிக்கைதான் அதிகமா இருக்கும்.

******

சமீபத்தில் என்னைக் கவர்ந்த விளம்பரங்களில் ஒன்று - கல்யாண் ஜூவல்லர்சின் நம்பிக்கை - வாழ்க்கையின் ஆதாரம்.

காதலன், காதலியை அழைத்துச் செல்ல ஆள், வாகனத்துடன் வந்து கோயிலில் காத்திருப்பான். "நம்ம மக ஓடிப்போகப்போறாளாம்" என்று சொல்லும் மனைவியை அடக்கும் தந்தை,"அவ என் பொண்ணு " என்று நம்பிக்கையுடன் சொல்வார்.

அந்த மகளும் காதலனைப் புறக்கணித்து தந்தையிடம் வருவாள். உடனே தந்தை,"அந்தப் பையனை அவங்க அப்பா அம்மாவோட நம்ம வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கச்சொல்லும்மா." என்பார்.

சில நொடிகளில் நெஞ்சை நெகிழவைத்த விளம்பரம்.தந்தை மகளாக இளையதிலகம் பிரபு - சரண்யாமோகன். மிகச்சரியான தேர்வு. அதிலும் தந்தை சம்மதம் கொடுத்ததும் ஆனந்தக் கண்ணீருடன் தந்தையின் தோளில் சரண்யா சாய்ந்து கொள்ளும் காட்சி மிகவும் அற்புதம்.

நம்பிக்கை என்பது இரு தரப்புக்கும் பொதுவான விஷயமாக இருக்கவேண்டும்.ஒருவரிடம் குறைந்தாலும் எதிர்தரப்பின் நம்பிக்கையும் சிதறிவிடும்.

இன்று பல குடும்பங்களில் நடப்பதும் இதுதான்.மகள் அல்லது மகன் தானே தேர்வு செய்த வாழ்க்கைத்துணை என்ற ஒரே காரணத்துக்காக உறவைத்துண்டித்து பல நெகிழ்ச்சியான தருணங்களை இழந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம்.அவர்களே தேர்வு செய்த துணை சரியான நபராக இருக்கும் நிலையில் இதை எதிர்ப்பது அர்த்தம் இல்லாத ஒன்று.ஈகோவால் தாங்கள் தோற்றுவிட்டதாக நினைக்காமல் சரியான விஷயங்களை ஒப்புக்கொண்டால் யாரும் எதையும் இழக்காமல் சந்தோஷங்களை அறுவடை செய்யலாம்.


ஒருவேளை தவறான துணையை தேர்வுசெய்திருந்ததை பெற்றோர் சுட்டிக்காட்டினால் ஈகோ காரணமாக அந்த நபருடனேயே வாழ்க்கையை இணைத்துக்கொண்டு அவதிப்படுவதையும் இளைய தலைமுறை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

எனக்குத்தெரிந்து ஒரு இளம்பெண் தன் தந்தையாலேயே வாழ்வைத்தொலைத்துவிட்டாள்.

நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ம் ஆண்டு அந்தப் பெண் ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.(ஆண்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடக்கடவுளே என்று சொல்ல வைக்கும் செய்தி ஒன்று கட்டுரையின் இறுதியில் இருக்கிறது.)

சாதி, பொருளாதாரம், கல்வி என்று பல வேறுபாடுகளைத் தாண்டி அந்தப் பெண்ணுக்கு  அந்தப் பையன் மீது ஈர்ப்பு வர ஒரே காரணம் இனக்கவர்ச்சி மட்டுமே. இந்த எண்ணத்தை அந்தப் பெண்ணின் மனதில் விதைத்தது அவளுடைய தந்தைதான். இந்தப் பெண்ணின் சித்தி(அவள் தாயாரின் தங்கை) தன் கணவனை விட்டு இவர்கள் வீட்டுக்கே வந்து விட்டாள். தந்தையும் சித்தியும் ஏடாகூடமாக இருந்ததை அவ்வப்போது பார்த்ததோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இந்தப் பெண்ணின் மனதில் "அந்த"ஒரு விஷயம்தான் உலகம் என்று தவறாக எண்ண வைத்துவிட்டது.

விளைவு, ஒரு இளைஞனுடன் திருமணம் (?!) செய்து கொள்ள நினைத்து ஓட்டம். காவல்துறை உதவியுடன் மகளை மீட்டு அழைத்து வந்த அவர் சரியான நிபுணர் மூலமாக ஆலோசனையை வழங்கியிருந்தால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் வீணாகியிருக்காது.

ஆனால் அந்த தந்தை, மகளின் படிப்பை நிறுத்தி வீட்டிலேயே வைத்ததுடன் மச்சினியுடனான லீலைகளை நிறுத்தவே இல்லை. மகளாலும் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு மூன்று முறை அதே ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியில் போய் தங்கியிருந்து பிறகு மீட்டுக்கொண்டு வரப்பட்டாள்.

ஒரு வழியாக அந்த ஒருவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது. இந்தப் பெண்ணின் கவனம் வேறு ஒருவன் மீது.சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் புதியவனுடன் அந்தப்பெண் வெளியேற, காவல்துறை மூலம் மீட்பு.(மறுபடியும் முதல்லேருந்தா?)

அவளை இப்போது அழைத்துச்சென்றவன் "யோவ்...உன் பொண்ணுதான் என்னைக் கூப்பிட்டா.அவளைக் கேளுய்யா!"அப்படின்னு சொல்லிட்டான். இன்னும் அந்த தந்தை தன்னால்தான் தன் மகள் இப்படி வழிதவறிப்போனாள் என்று உணரவே இல்லை(அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்)

முதல்முறை 2003ல் வெளியேறியதும் மீட்டு அழைத்து வந்தபோதே முறையாக ஆலோசனை அளித்து, படிப்புதான் முக்கியம். படித்து முடித்ததும் நீ அவனை விரும்பினா, அவன் உன்னை நேசிச்சா கண்டிப்பா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லி அவள் கவனத்தை படிப்பு மேல திருப்பியிருக்கலாம்னுதான் நான் நினைக்கிறேன்.

படிப்பை நிறுத்தி வீட்டுல போட்டதும் வேறு எந்த எண்ணமும் அவள் மனசுல வரவே இல்லை.சும்மா இருக்கும் மனம் பேய்களின் கூடாரம் என்ற பழமொழிக்கு வாழும் உதாரணமாக இந்தப் பெண்ணை சொல்லத்தோன்றுகிறது.

இப்போது கல்வியும் இல்லாமல், ஊர் முழுவதும் இவள் பற்றிய உண்மை தெரிந்ததால் திருமணமும் கேள்விக்குறியாகி விட்டது. சமீபத்தில் அவளுடன் வெளியில் சென்றவனும் எதை அந்தப் பெண்ணிடம் எதிர்பார்க்கிறான் என்பது தெரிந்துவிட்டது.

முதலில் இவள் வெளியேறிய 2003ம் ஆண்டை நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னது ஏன் தெரியுமா? இவளுக்கு பதினெட்டு வயது நிறைவடையவே இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறதாம்.

இவ்வளவு சின்ன வயதில் இந்தக் குழந்தையின் வாழ்க்கை இப்படி மோசமாக யார் காரணம்?-நிச்சயமாக அவள் இல்லை.

******

சார்லி சாப்ளின் ஒரு பீரங்கியை தயார் செய்து மிகப்பெரிய வெட்டவெளியில் அதை வெடிக்கச்செய்ய மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்வாராம். ஊரே அவர் வெடிக்கச்செய்யப்போகும் பீரங்கிக் குண்டு சத்தத்திற்கு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும்போது அந்த குண்டு மிக லேசான சத்தத்துடன் வெடித்து பீரங்கிக்குழாயின் காலடியிலேயே விழுமாம்.


இன்னைக்கு நானும் இப்படி ஒரு ஏமாற்றத்தை சந்திச்சேன். இந்த மாசம் 2ம் தேதி பகல் முழுவதும் திருவாரூர்ல மின்தடை. பராமரிப்பு பணின்னு சொன்னாங்க. ஆனா அடுத்த சில நாட்கள்லயே ஒரு டிரான்ஸ்பார்மர் வெடிச்சு சிதறினது.அது ஏன்னு கேட்கக்கூடாது.ஆயில் இல்லைன்னு அரசாங்க ரகசியத்தை நாங்கதான் வெளியில சொல்ல மாட்டோமே.

இன்றும் 24.01.2010 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட்டுன்னு பேப்பர், காரைக்கால் பண்பலை உட்பட பல ஊடகங்கள்லயும் அறிவிப்பு செய்தாங்க. எனக்கும் மற்ற வேலைகள் இருந்ததால இரவுதான் புதிய பதிவு போடணும்னு நினைச்சு காலையில பேப்பரை மட்டும் படிச்சுட்டு வெளியில போயிட்டேன்.

காலையில ஒன்பது மணிக்கு அப்புறமும் மின்சாரம் தொடர்ந்து இருந்துச்சு. 9.59க்கு அப்புறம் பத்து மணியும் ஆச்சுங்க. அப்பவும் பவர் கட் ஆகலை. ஆனா அடுத்து அஞ்சு நிமிஷத்துல போயிடுச்சு. சரின்னு நானும் வெளியில போயிட்டேன்.

சில நண்பர்களை சந்திச்சு பேசிகிட்டு இருந்தா ஒருத்தன் "மாப்பு...கிரிக்கெட் பார்க்கப்போறேன். வைக்காத ஆப்பு"ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டான். என்னடான்னு கேட்டா முக்கால்மணி நேரத்துல மின்சாரம் மறுபடியும் வந்துடுச்சேன்னு அவனும் ஜூட் விட்டுட்டான்.

அடக்கடவுளே...இப்படின்னு தெரிஞ்சுருந்தா பதினோரு மணிக்கெல்லாம் பதிவை ரிலீஸ் பண்ணிட்டு அடுத்த முக்கியமான வேலையைப் (தூக்கம்தான்)பார்த்திருக்கலாமே அப்படின்னு புலம்பிட்டு வீட்டுக்கு வந்தேன்.

ரொம்ப மும்முரமா கம்ப்யூட்டர்ல வேலை பார்த்துகிட்டு இருந்தா பொசுக்குன்னு பவரைத் துண்டிப்பாங்க. இப்ப நான் இவ்வளவு ஏற்பாட்டோட வேற வேலையைப் பார்த்தா ஒழுங்கா கொடுத்து வெறுப்பேத்துறாங்க.

மின்சாரவாரியம்:பவரைக் கட் பண்ணினாலும் திட்டுறீங்க...ஒழுங்கா கொடுத்தாலும் சாபம் கொடுக்குறீங்க...வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் இந்த உலகம்.பழமொழி சரியாத்தான் இருக்கு.
******

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

ஒரு ரேஸ் பாதை சுரங்கப்பாதையாய் ஆனதே!

திருவாரூரின் பெரிய கோயிலைச்சுற்றி உள்ள நான்கு பிரமாண்டமான வீதிகளிலும் ஆண்டுக்கு இரண்டு முறை மிகப்பெரிய அளவில் கூட்டம் சேரும். உலகத்துக்கு திருவாரூரை அடையாளம் காட்டும் தேர்த்திருவிழாவின்போது மக்கள்வெள்ளத்தால் களைகட்டுவதுபோல் இல்லை என்றாலும் பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு காணும்பொங்கல் அன்றும் கூட்டம் சேரும்.

எனக்குத்தெரிந்து இருபது ஆண்டுகளில் சுனாமி ஏற்படுத்திய வடுவால் 2005ம் ஆண்டு மட்டும்தான் விளையாட்டுவிழா அஞ்சலி செலுத்தும் நிகழ்வாகிப்போனது.மற்றபடி கடந்த ஆண்டு வரை விளையாட்டுப்போட்டிகளைக்காண சுற்றி இருக்கும் ஊர்களில் உள்ள மக்கள் அனைவரும் திருவாரூரில் வந்து குவிந்துவிடுவார்கள்.


முப்பது ஏக்கருக்குமேல் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான கோயில் குளமான கமலாலயத்தில் நீச்சல் போட்டியுடன் விளையாட்டுப்பந்தயங்கள் தொடங்கும்.ஓட்டப்பந்தயம்,சைக்கிள், குதிரை வண்டி, மோட்டார்சைக்கிள் உட்பட பல போட்டிகள் நடைபெற்றாலும் மக்கள் அனைவரும் காணவிரும்புவது மோட்டார்சைக்கிள் பந்தயம்தான்.

பொதுக்கூட்டத்தில் பேச வேண்டிய சிறப்புப் பேச்சாளருக்கு மைக்கைக் கொடுக்கும் முன்பு மற்ற எல்லாரும் ஆசைதீர பேசி முடிப்பதைப்போல்தான் இங்கும் நடக்கும்.மோட்டார்சைக்கிள் ரேசுக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து காரணமாக போட்டிகளின் நிறைவாகத்தான் மோட்டார்சைக்கிள்கள் வர்ர்ர்ர்ரூம்.

இதேபோல் கூட்டம் கூடும் இடங்களுக்கே உரிய நாளைய பெருசுகளின் கடைகண் பார்வை, நேற்றைய இளசுகளின் சுட்டெரிக்கும் பார்வை, கேலி, கிண்டல், விசில், அடிதடி எல்லாம் இருக்கும். ஆனால் மோசமான விளைவை ஏற்படுத்தும் அளவுக்கு எதுவும் இருக்காது.

புதை சாக்கடைப்பணிக்காக திருவாரூர் நகர் முழுவதும் சாலைகளில் ஏர்கலப்பை இல்லாமலேயே உழுதுவிட்டதால் இன்னும் இயல்பு நிலைக்கு சாலைகள் திரும்பவில்லை.நடுவில் முதல்வர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்துக்காக தெற்குவீதி முழுவதும் தங்கநாற்கரசாலையைப்போல் போட்டார்கள். அடுத்த மழை வந்ததும்தான் இது ரோடு மாதிரி, ரோடு இல்லைன்னு புரிந்தது.


ரேஸ் பாதை இந்த மாதிரி சுரங்கப்பாதையாக தயாரா நின்னா எப்புடி போட்டிகளை நடத்துவாங்க?


அதான் இப்படி இருக்கவேண்டிய கூட்டம்,

இப்படி ஆயிடுச்சு.

ஒரு மாசத்துக்குள்ள மூணு பேர காவு வாங்கியிருந்தாலும் வழக்கமா கலந்துக்குற அளவுக்கு இந்த ஆண்டும் நீச்சல் போட்டியில வீரர்கள் பங்கேற்றதுதான் ஒரே ஆறுதல். ஓட்டப்பந்தயம் தேரோடுற நாலு வீதியில இருந்து ஷிப்ட் ஆகி குளத்துடைய நாலு கரையையும் சுத்தி உள்ள சாலைக்குப் போயிடுச்சு.


இந்தப் போட்டி ஆரம்பமானப்ப ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா ஃபினிஷிங்க் சரியில்லைங்க. எப்படி இருந்தாலும் நம்பிக்கையோட கலந்துகிட்ட வீரர்களுக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்.


இது முழுக்க தனியார் நடத்துற விளையாட்டுப்போட்டி. இனி வர்ற ஆண்டுலயாவது அரசு இன்னும் ஊக்கம் கொடுத்து இந்த விளையாட்டுவிழாவை ஒரு பிரமாண்டமான நிகழ்வா மாத்தணும். சுதந்திரதினம், குடியரசுதினம் ஆகிய ரெண்டு நாட்கள்லயும் திருவாரூர் நகரத்தை விட்டு நாலுகிலோமீட்டர் தள்ளி இருக்குற மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்துல பள்ளி மாணவர்கள் கலந்துக்குற விளையாட்டுவிழா நடத்துறாங்க.


ஆனா அதுக்கு பொதுமக்கள் கூட்டம் குறைவாத்தான் போகுது. ஆனா நகரின் மையப்பகுதியில இந்த பொங்கல் விளையாட்டுவிழா நடக்குறதால கலந்துக்குறதுலயும் சரி, பார்க்க வர்றவங்கள்லயும் சரி பொதுமக்கள்தான் அதிகம்.

புதுசா எதையும் அரசாங்கம் தொடங்குறதுதான் தலைகீழா நின்னு தண்ணி குடிக்கிற மாதிரி இருக்கு. 27 வருஷமா ஆரூரான் விளையாட்டுக்கழகம் நடத்திட்டு வர்ற இந்த போட்டிகளை இன்னும் மெருகேத்தி நிறைய விளையாட்டு வீரர்களைக் கண்டெடுக்கும் களமா ஏன் மாத்தக்கூடாது?

இன்னும் நல்ல முறையில செய்தா உள்ளூர் வணிக நிறுவனங்கள் பொருளாதார ஒத்துழைப்பு கொடுக்க தயாராவே இருக்காங்க.

முதல்வர் பொதுக்கூட்டம் என்றதும் வழவழ சாலை போட்டவங்க, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகளை நடத்த சாலையை சீரமைக்கலை. இதைப் பார்த்த ஒரு நண்பர்,"போறபோக்கைப் பார்த்தா, அதிகாரிங்களும் நாம ஜெயிக்கவெச்சவங்களும் தன் மனைவியோட தான் சந்தோஷமா இருக்கவே நம்மகிட்ட லஞ்சம் கேட்பாங்க போலிருக்கே."ன்னு கிரீன் கலர்ல ஒரு கமெண்ட் அடிச்சார்.(அதாங்க பச்சையா பேசினார்.)

இந்த வரிகள் உங்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். ஆனா போற போக்கைப் பார்த்தா இப்படி ஆயிடுமோ?


(ஒளிப்படங்கள் எல்லாம் நண்பரின் சாதாரண மொபைல்போன் கேமராவில் எடுத்தது. அதனால் தரத்தை எதிர்பார்க்காதீர்கள்.)

வெள்ளி, 15 ஜனவரி, 2010

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...எந்திரன் - அசல் - சில தகவல்கள்.

அசல் படப்பிடிப்பில் உயிரிழந்த நகல் - ஒரு வேதனையான சம்பவம்.

மலேசியாவில் உள்ள டூரிஸ்ட் ஸ்பாட்டான ஈயக்குட்டையில ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கியிருக்காங்க. இதுல அஜீத்துக்கு டூப் போட்டது 

மலேசியாவுல இருந்த சீன நீச்சல் வீரர். லாங் ஷாட், க்ளோசப் - ரெண்டு காட்சிகள்லயும் டேக் ஓ.கே ஆகியிருக்கு. மூணாவது தடவையா லோ ஆங்கிள்ல கேமராவை வெச்சு எடுத்தப்ப குட்டையில் டைவ் அடிச்ச நீச்சல் வீரர் ஷாட் முடிஞ்சதும் தண்ணீரில் போட்ட கயிற்றைப்பிடிக்க முடியாம அப்படியே உள்ள போயிட்டாராம்.

மூணு நாள் கழிச்சுதான்  சடலம் மேல வந்துருக்கு. அஜித், இறந்து போனவரோட இறுதிசடங்குக்கு உதவிசெஞ்சாராம். இது போதுமா?

படப்பிடிப்பு முடியாத நிலையில இது மாதிரியான சம்பவங்கள் நடந்தா அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்னு ஒரு சென்டிமெண்ட் தமிழ்த்திரைப்பட உலகத்துல உண்டு. நீங்க மனவருத்தம் அடையாதீங்க-அப்படின்னு அஜித்தோட நண்பர்கள் அவருக்கு ஆறுதல் சொன்னாங்களாம்.இந்த கொடுமையை எங்க போய் சொல்றது.எவன் செத்தா எனக்கென்ன...என் கல்லாப்பொட்டி நிரம்பினாப் போதும்னு நினைக்குற இந்த மனோபாவத்தை வெச்சுகிட்டு திருட்டு வி.சி.டியப் பத்தி பேசுறாங்க.

அடப்பாவிகளா...நடிகருக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்குறீங்க. அந்த பணத்தை வெச்சு இறந்த நீச்சல் வீரருக்கு உயிர் கொடுக்க முடியுமா? இது மாதிரி படப்பிடிப்புகள்ல ஹீரோக்கள் பேர் வாங்குறதுக்காக நிறையபேர் உயிரையும் உடல் உறுப்புக்களையும் இழந்துகிட்டு இருக்காங்க.

ஆங்கிலப்படங்களோட கதையை சுடுற நம்ம ஆளுங்க அவங்களோட திட்டமிடலை மட்டும் திரும்பிக்கூடப்பார்க்குறது இல்லை. நாட்டைக் காப்பாத்த உயிர்த்தியாகம் செய்யுறதுலயாவது ஒரு பெருமை இருந்துச்சு. இந்த மாதிரி ஹீரோக்கள் பேர் வாங்க உயிரிழக்குற ஸ்டண்ட் நடிகர்கள் பற்றி வெளியே தெரியுறதே இல்லை. இனிமேலாச்சும்

எதையும் பிளான் பண்ணி செய்யுங்கப்பா.

ஹீரோ, ஹீரோயினுக்கு ஹோட்டல்ல ரூம் போடுறதுல காட்டுற அக்கறையை ஸ்டண்ட் நடிகர்களோட உயிரைக் காப்பாத்துறதுலயும் காட்டுங்க.

******

எந்திரன்...அடுத்து?
ரஜினி திடீர் முடிவு! - இந்த தலைப்பைப் படிச்சதும் "இவரு ஆரம்பிச்சுட்டாருப்பா"அப்படின்னுதான் நினைச்சேன். ஆனா இந்த தடவை வேற மாதிரி அறிவிப்பு கசிஞ்சிருக்கு.

"யூத்ஃபுல் அன்ட் கல்ர்ஃபுல்லா இந்தப்படம் அமையணும். இந்தப் படத்துக்குப்பிறகு நான் பண்ணும் படங்கள் எல்லாமே என் வயதிற்கேற்ப உள்ள கேரக்டர்கள் பண்ணவே விரும்புறேன்."அப்படின்னு ரஜினி சொல்லிட்டாராம்.

இத...இதத்தான் சார் நாங்க எதிர்ப்பார்க்குறோம். குறிப்பிட்ட வயசைத்தாண்டினதும் அமிதாப் இந்தப் பாதையில ரொம்பச்சரியா பயணம் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. ஆனா நம்ம நடிகர்திலகத்தை தமிழ்சினிமா, கடைசி பதினைந்து ஆண்டுகள் ரொம்ப நல்லபடியா பயன்படுத்திக்காம விட்டுடுச்சு. அதற்குக் காரணம் நம்ம யூத்து(?!) எல்லாரும் அவரு மேல காட்டின அதீத மரியாதைதான்.

அவருக்கு அந்த மதிப்பு கொடுத்தது சரிதான். ஆனா படப்பிடிப்புல அவர்கிட்ட அதிகமா வேலை வாங்கினா அந்த மகாகலைஞன் வருத்தப்பட்டிருப்பாருன்னா நினைக்குறீங்க... இல்ல...கண்டிப்பா சந்தோஷமாத்தான் ஒத்துழைப்பு கொடுத்திருப்பார்.

இது அவருக்கு மட்டுமில்லைங்க, ஒவ்வொருத்தர் வீட்டுல உள்ள பெரியவங்களுக்குமே நாம கொடுக்குற மரியாதையைக் காட்டிலும் அவங்களால நமக்கு இன்னும் பிரயோஜனம் இருக்குன்னு ஒரு உணர்வுதான் அவங்களுக்கு முக்கிய தேவை.

அதிகம் பழக்கமில்லாத ஒரு நண்பர் குடும்பத்து திருமணவிழாக்கு நீங்க போறீங்க. அங்க உங்க நடவடிக்கை எப்படி இருக்கும்?

உங்க உறவினர் அல்லது நண்பர் இல்லத்திருமணத்துல கல்யாண ஏற்பாடுகள்ளயும் பங்கெடுத்துக்குறீங்கன்னு வெச்சுகுவோம்.இந்த இடத்துல உங்க நடவடிக்கைகள் எவ்வளவு உற்சாகமா இருக்கும்? இந்த வேறுபாடு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

பெரியவங்களை சும்மா இருக்கவெக்கிறது மரியாதை இல்லை. அவங்களை நல்ல முறையில பயன்படுத்திக்கிறதுதான் உண்மையான மதிப்பு.அதுக்காக ஒரு சில குடும்பங்கள்ல மருமக சீரியல் பார்த்துகிட்டு, மாமியாரை மட்டும் சமையல் செய்யச்சொல்றதோ, கடைசிநாள்ல மாமனாரை மின் கட்டணம் செலுத்த அனுப்புறதோ தப்புங்க.

இனி வரும் காலங்கள்ல ரஜினியோட  வயசுக்குத் தகுந்த கம்பீரமான கேரக்டர் கொடுத்தா அதுவும் மறக்கமுடியாத படங்களா அமையும்.

ரஜினியை என்றும் இளமையா பார்க்க நினைக்கிற ரசிகர்களுக்காக பிளாஷ்பேக்ல ஒரு பதினைந்து நிமிடங்கள் மட்டும் அந்த மாதிரி கெட்அப்ல சில காட்சிகள் வெச்சிடலாம்.

நானே இவ்வளவு யோசிக்கிறப்ப நீங்களும் ஹோம் தியேட்டர விட்டு கொஞ்ச நேரமாச்சும் வெளியில வந்து யோசிங்கப்பா.

******

எந்த ஒரு இடத்திலும் விதிவிலக்குகள் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி தமிழ்த்திரைப்படத்துறையின் முக்கியமான முன்னுதாரணமாக இருப்பது AVM Productions.

எதையும் பிளான் பண்ணியேதான் அவர்கள் செய்வார்கள் என்பதை புத்தகங்களில்தான்

படித்திருந்தேன். நேரில் உணர்ந்த அனுபவம் என்றால் தமிழகத்தையே ஓ போட வைத்த "ஜெமினி" படத்தின் பட பூஜையின்போதே ரிலீஸ் தேதியை அறிவித்தார்கள். நான் கூட ஆச்சர்யப்பட்டேன்.

இதெல்லாம் நடக்குற விஷயமான்னு எனக்கு வந்த சந்தேகம் நிரூபணமானுச்சு. சொன்ன தேதியில அவங்க ஜெமினியை ரிலீஸ் பண்ணலை. ஆமாங்க. ரெண்டு நாள் முன்னாலயே வெளியிட்டுட்டாங்க.

ஆனா அவங்களாலயே ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தோட ரிலீஸ் தேதியை சொல்லமுடியலைன்னுங்குறது விதிவிலக்குதான்.

அப்புறம் ஏ.வி.எம். சரவணனின் எளிமை எல்லாரும் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒண்ணு. ஆனா சின்ன நடிகர்கள் கூட பந்தா பண்றதை என்னால தப்புன்னு சொல்லமுடியலை. அதுக்கு காரணமா மக்கள்தானே இருக்காங்க.

நடிகர், நடிகைகள் பொது இடத்துக்கு வந்தா ரயில் இஞ்சின் பின்னாலயே ஒட்டிகிட்டு இருக்குற பொட்டி மாதிரி கூட்டம் கூடுனா அவங்க இப்படித்தான் தெறிச்சு ஓடுவாங்க.

ஏ.வி.எம் நிறுவனம் தொடர்பா எந்த பத்திரிகையில செய்தி வந்தாலும் சம்மந்தப்பட்ட பத்திரிகைக்கு நன்றி சொல்றது சரவணன் சாருடைய வழக்கமாம். இதைக்கேட்டு நான் ரொம்பவும் வியப்படையலை. ஏவி.மெய்யப்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, மனதில் நிற்கும் மனிதர்கள், ஏ.வி.எம் 60 - இந்த புத்தகங்களை எல்லாம் படிச்சு முடிச்சதும் நான் கத்துக்க நிறைய நல்ல விஷயங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு கடிதம் எழுதினேன்.

மூன்று முறையும் அவர் கையெழுத்துடன் பதில் கடிதம் வந்தது. எல்லாரையும் மதிக்கிற இந்த பண்பும் நாம கத்துக்க வேண்டிய ஒண்ணுதான்.

ஏ.வி.எம் ஸ்டுடியோவுல அர்ஜூன் நடிச்ச "வாத்தியார்" படத்தின் எடிட்டிங் வேலை நடந்துகிட்டு இருந்தப்ப பீட்டாகேம் பிளேயர் எடுத்துகிட்டு அங்க போயிருக்கேன்.

******

ராமசாமி மெஸ் - சினிமாத்துறையில் இந்தப் பெயர் மிகவும் பிரபலம். ரஜினி, கமல்,

விக்ரம்,அஜித்,விஜய்  அப்படின்னு தொடங்கி இன்றைய நடிகர், நடிகை வரை இந்த மெஸ் சாப்பாட்டை ரொம்பவும் விரும்பி சாப்பிடுவாங்களாம்.

யார் யாருக்கு பிடிச்சதுன்னு ஒரு லிஸ்ட் போட்டுருக்காங்க. எனக்கு அந்த வெரைட்டிகள் பேர் எல்லாம் தெரியாது. தொலைக்காட்சி நிகழ்ச்சி போஸ்ட்புரொடக்ஷன் ஸ்டுடியோவுல வேலை செய்தப்ப பல நாட்கள் ராமசாமி மெஸ்லதான் சாப்பாடு வாங்கிட்டு வருவாங்க. மதிய சாப்பாட்டை (சைவம்தான்)ரொம்ப திருப்தியா சாப்பிட்டுருக்கேன்.

சூரியகதிர் - ஜனவரி 16-31, 2010 இதழில் வெளிவந்த தகவல்களை அடிப்படையா வெச்சுதான் இந்த கட்டுரையை எழுதியிருக்கேன்.

வியாழன், 14 ஜனவரி, 2010

பத்திரிகை செய்திகளும் - என்னுடைய அனுபவங்களும் - ஒரு ஒற்றுமை - பொங்கல் சிறப்பு பதிவு 2



2008ம் ஆண்டு அக்டோபர் மாத சமயத்தில் சில புலனாய்வு வாரஇதழ்கள் பணம் கொடுத்தால் மொட்டை என்ற உண்மையை எழுதி எச்சரித்திருந்தார்கள். இப்போது அந்த மொட்டை மிகப்பெரிய அளவில் அடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் முற்றும் போடுவார்களா என்றால் நம் மக்கள் அவ்வளவு தெளிவானவர்களா என்ன?

ஒருபிடி மண்ணுன்னாலும் அதை ஜே.பி.ஜே சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்துலதான் வாங்கணும் அப்படின்னு பல பெரியதிரை நட்சத்திரங்கள் விளம்பரத்துல சொன்னதும் இலவச மனை, கார், தங்கநாணயம் அப்படின்னு எல்லாத்துக்கும் மயங்கிட்டாங்க. இப்ப மோசடி வெளியில தெரியவும் மறுபடியும் மயங்கி விழ வேண்டியதுதான்.

அரசு நிலம், அடுத்தவன் நிலம் அப்படின்னு ஊரான் வீட்டு சொத்துக்களைக் காட்டிதான் பொங்கல் வெச்சிருக்காங்க.இந்த சம்பவம் தொடக்கமும் இல்லை. இதோட முடியவும் செய்யாதுன்னுதான் தோணுது.(தகவல் உதவி: ஜூ.வி 17.01.2010)

உலகத்துக்கே நிலம் தந்த வள்ளல் இப்பவும் இருக்குறது வாடகை வீட்டுலதானாம். என்ன சென்டிமெண்ட்டோன்னு கேள்வியை ஒரு பத்திரிகையில எழுப்பியிருக்காங்க.இதுல பெருசா 'சென்'டிமெண்ட்டும் கிடையாது.'மாருதி'மெண்ட்டும் கிடையாது. பினாமி பேருல எல்லா சொத்துக்களையும் வெச்சிகிட்டு நான் பிளாட்பாரம், கையில கறை படாத (பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவியிருப்பாங்களோ) ஒரு ரூபா காசு கூட இல்லாத ஆத்மா நான்னு சொல்லுவாங்க. இந்த வாதத்தை ஏத்துகிட்டு ஆறு மாசமோ ஒரு வருஷமோ தண்டனை கொடுக்க வாய்ப்பு உண்டு 2050ம் வருஷம்.

நான் இதுவரை இந்த மாதிரி சிக்கல் எதுலயுமே மாட்டிக்கலை.உங்கிட்ட பணம் இருந்திருக்காதுன்னுதானே சொல்றீங்க. நிறைய பேர் கடன் வாங்கியும் இந்த மாதிரி ஏமாற்றுப்பேர்வழிகிட்ட மாட்டியிருக்காங்க. நிறைய பேர் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்க நினைத்து தவறான ஏஜண்ட்டிடம் பணத்தை இழக்கும் தவறையும் நான் செய்யலை.நூறு ரூபாய் கொடுத்து படம்பார்க்கச்சென்று இப்புடி போட்டு சாகடிக்கிறாங்களேன்னு புலம்பலை.

இந்த மாதிரி கர்வத்தோட இருந்ததுக்கு ஒருத்தன் எனக்கு வெச்சான் பாருங்க ஆப்பு...எல்லாம் முடிஞ்சதும்தான் சுதாரிச்சேன். அடப்பாவி இப்படியெல்லாம் யோசிக்க எந்த ஊர்ல யாரோட ரூம் போட்டு தங்கியிருந்தடான்னுதான் என்னையே நான் கேட்டுக்க முடிஞ்சது.

2006ம் வருஷத்தோட பிற்பகுதியில சென்னைக்குப் வேலைக்காக போய் இருந்தேன். உணவு ஒத்துக்காம மிக மோசமான அவதியோடதான் வேலைக்குப் போய்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல போய் திருவாரூர்ல என்கூட கல்லூரியில படிச்ச ஒருத்தன்கிட்ட நான் சிக்குவேன்னு எதிர்பார்க்கவே இல்லைங்க.ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துல வேலை வாங்கித்தர்றேன்.அப்படின்னு அவங்க வீட்டுக்கு அப்பப்ப அழைச்சுட்டு போயிடுவான்.

நானும் கட்டிடங்கள்ல எலக்ட்ரிக்கல் வேலை, கேமராமேன் பணின்னு பல வேலைகளையும் பார்த்துகிட்டே இவனையும் நம்பிகிட்டு இருந்தேன்.ஒருபக்கம் பணிச்சுமை,(சொற்ப ஊதியம்தான்) இன்னொரு பக்கம் நண்பனுக்கு (?!) எடுபிடி வேலை.மற்றுமொரு பக்கம் மருத்துவ சிகிச்சை இப்படியெல்லாம் அவதிப்பட்டாலும் அவன் வாங்கித்தர்றேன்னு சொன்ன வேலை மேலதான் என் கவனம் இருந்தது. அதனால எல்லாத்தையும் சகிச்சுகிட்டேன்.

எனக்கு சில மாதங்கள்லயே நம்பிக்கை போயிடுச்சு. ஆனாலும் அவன்கிட்ட எதுவும் சொல்லலை.என் அம்மாவுக்கு கண்ணுல அறுவைசிகிச்சை செய்து லென்ஸ் வைக்கவேண்டிய நேரம்.ஒரு மாசம் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்ய வேறு யாரும் இல்லை.நானே வெளியில போகாம வீட்டுல இருந்து அந்த வேலைகளோட, அம்மா கண்ணுக்கு அந்த ஒரு மாசமும் மிகச்சரியான நேரத்துல மருந்து போடுறதையும் செய்தேன்.

அந்த வில்லங்கம் எங்க வீட்டுக்கும் வந்தான். என் அம்மா கிட்ட "சரவணனோட அக்கவுண்டண்ட் திறமை என்னன்னு எனக்கு தெரியும்.ஆனா அவன் எல்லா வேலையையும் பார்த்து வீணாப்போறதுல எனக்கு இஷ்டம் இல்லை. நான் வேலைக்கு சொல்லியிருக்குற இடத்துல புது கட்டிடம் கட்டுறாங்க. அதனால இப்ப உடனே வேலைக்கு இவனை அனுப்பி அங்க தங்க வைக்க முடியாத சூழ்நிலை.ஒரு வருஷத்துக்கும் மேல எங்களை நம்பிகிட்டே இருந்துட்டான். ஆனா இது எங்க தவறு. அதனால இவன் வேலைக்குப் போறவரைக்கும் பாதி சம்பளமா மூவாயிரம் ரூபாய் தந்துடுறோம்."அப்படின்னு அந்த தொகையை கொடுத்துட்டும் போயிட்டான்.

அம்மாகிட்ட பேசிட்டுப் போனதால என்னால மறுக்கவும் முடியலை. பழையபடி சென்னைக்குப் போய் என்னுடைய தற்காலிக வேலைகளோட அவனுக்கு எடுபிடியாவும் வாழ்க்கையைத்தொடர்ந்தேன். பதினைந்து நாட்களில் ஆர்டர் வந்துவிடும்.அடுத்து ஒரு சில நாள் கழிச்சு கொஞ்சம் கூட பிசுறு இல்லாம ஒரு கதை சொல்லுவான்.

எனக்கு ஓரளவு சந்தேகம் வந்தாலும் அம்மாவுக்கு அடுத்த கண்ணும் ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நிலையில இருந்ததால வேற நிரந்தர வேலைக்கு முயற்சிக்கலை. திருவாரூர்ல நாங்க வீடுகள் வாடகைக்கு விட்டிருக்குறதால அது தொடர்பான பஞ்சாயத்து, பராமரிப்பு, அரசு அலுவலகம் தொடர்பான வேலைகள் அப்படின்னு எல்லாத்துக்கும் நான் அலைய வேண்டிய சிக்கலான சூழ்நிலை.

சுருக்கமா சொன்னா எதுக்கோ நிற்க நேரமும் இல்லையாம். வேலையும் இல்லையாம் அப்படின்னுங்குற பழமொழிக்கு என் வாழ்க்கை என்னையும் மீறி உதாரணமாயிடுச்சு.

பாதி சம்பளம் வாங்கிக்கலாம்னு சொல்லி அம்மாகிட்ட ஒரு மாசம் பாதி சம்பளம் தந்த அவன் அதுக்கப்புறம் நான் கேட்டப்ப எல்லாம் ரெண்டு நாள்ல தர்றேன். அடுத்த வாரம் பார்க்கலாம் அப்படின்னு சொல்லியே காலம் கடத்துனான். நான் கூட உழைக்காம வர்ற காசு எதுக்கு. வேலை கிடைச்சா போதும்னுதான் நினைச்சேன்.(அவனுக்கு எடுபிடி வேலை செய்ததெல்லாம் ஏமாளி கணக்குதான்)

ஒரு சூழ்நிலையில என்னைய கேட்காம எதோ ஒரு கூட்டுறவு வங்கியில நான் ரெண்டு வருஷம் வேலை செய்ததா போலிச்சான்றிதழ் வாங்கிக்கொடுத்துட்டதா சொன்னான்.

எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு. ஏன் இப்படி பண்ணினேன்னு கேட்டேன்.அதெல்லாம் ஒரு பார்மாலிட்டிதான்னு சொல்லவும் நானும் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன். அடுத்து ரெண்டு நாள்ல, அந்த சான்றிதழைப் பத்தி அந்த பேங்க்ல விசாரிச்சிருக்காங்க. உண்மை தெரிஞ்சுடுச்சு. அதனால உனக்கு தெரிஞ்ச எதாவது  ஒரு இடத்துல இன்னொரு சர்ட்டிபிகேட் வாங்கிட்டு வான்னு சொன்னான்.

ஒண்ணு அவன் எதோ ஒரு பேங்க்ல அனுபவ சான்றிதழ் வாங்கினதா சொன்னது தப்பா இருக்கணும். ஒருவேளை அது உண்மையா இருந்தா பொய் சர்ட்டிபிகேட் கொடுத்த ஆளை அவங்க வேலைக்கு கண்டிப்பா எடுக்க மாட்டாங்க.

இப்பதான் நான் முழுசா தெளிஞ்சேன். இனிமே நான் என் வழியைப் பார்த்துக்குறேன்.அப்படின்னு ஒதுங்குனதும் "ஒரு மாசம் நான் வாங்கிக்கொடுத்த பாதி சம்பளத்தையும் நிறைய நாள் ஹோட்டலுக்கு அழைச்சுட்டு போய் சாப்பாடு வாங்கிக்கொடுத்ததுக்கான ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் நாலாயிரம் ரூபாயை ரெண்டு நாளைக்குள்ள குடுத்துடுன்னான்.

2009ம் ஆண்டு ஜனவரி 30ந் தேதி காந்தி நினைவு நாள் அன்னைக்கு இந்த சம்பவம் நடந்துக்சு. நான் உடனே வெள்ளிக்கிழமை சாயந்திரம்னு பார்க்காம இன்னொரு நண்பன் கிட்டதான் உதவி கேட்டேன். அந்த நண்பர் கோயிலுக்கு பூஜை செய்யுற குருக்கள் குடும்பம். சில நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களை ரொம்பவும் கவனமா கடைப்பிடிக்கிறவங்க அவங்க.ஆனாலும் வெள்ளிக்கிழமை, மாலை விளக்கேற்றும் நேரம் என்று பார்க்காமல் எனக்கு பணம் தந்து உதவுனாங்க.

நான் பணத்த அவன் வீட்டுல கொண்டு போய் கொடுத்தப்ப அவன் இல்லை. அவன் அம்மாகிட்ட கொடுத்ததும் அவங்களுக்கு விஷயம் புரியலை. மறுநாள் என்னுடைய இன்னொரு நண்பன்கிட்ட,"சரவணன் பணத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறான்.நான் இப்ப நாலாயிரம் கேட்டா என்கிட்ட மறுபடி வந்து வேலைக்கு சேர்த்துவிட சொல்லுவான்னு எதிர்பார்த்தேன். (எவ்வளவு தன்னம்பிக்கை?)இன்னைக்கு  சனிக்கிழமை பெரும்பாலும் வங்கிகளில் அடகு வைக்குறது கஷ்டம். நேற்று வெள்ளிக்கிழமை, ரொம்ப பேர் கடன் குடுக்க மாட்டாங்க. அப்படின்னு நினைச்சேன். எப்படியோ பணம் கொடுத்துட்டான்." அப்படின்னு சொல்லியிருக்கான்.

அந்த மீடியேட்டருக்கு நான் சொன்ன பதில்,"கவுத்துவிட இவன் ஒருத்தன் இருக்கான். பள்ளத்துல விழாம காப்பாத்த ஆயிரம் நண்பர்கள் இருக்காங்க. அவன் கடனை நான் தீர்த்துட்டேன்.அவனுக்கு எடுபிடி வேலை செய்ததுக்கான கூலியை அவன் தான் தரணும். விபத்துல சிக்கி ஒரு நாள் பூராவும் பேச்சு மூச்சு இல்லாம அவன் கிடந்தப்ப அவன் பக்கத்துல இருந்து அழுத அவனோட அம்மாவுக்கும், பாட்டிக்கும் ஆறுதல் சொன்னதுக்கு கூலியே நிர்ணயிக்க முடியாது. இப்போ என்கிட்ட அவன்தான்  கடன்காரன்." அப்படின்னு சொல்லிட்டேன்.

எப்படியெல்லாம் ஏமாந்துருக்கேன் பாருங்களேன். இதை இவ்வளவு பகிரங்கமா நான் ஒத்துக்க காரணமே, நமக்குத்தெரியாம நம்ம உழைப்பை உறிஞ்சுற அட்டைகளுக்கு உலகத்துல பஞ்சமே இல்லைன்னு நீங்களும் புரிஞ்சுக்கணும்னுதான்.

******

இந்திய தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனா அந்த வீரர்களுக்கு சம்பளபாக்கி. ஒரு தொழிற்சாலை தொழிலாளர்கள் போராடுறமாதிரியான நிலைமைக்கு அவங்களைக் கொண்டு போய் விட்டுட்டாங்க. கலை, விளையாட்டு இதுல எல்லாம் இருக்குறவங்களுக்கு குடும்பம் நடத்த ஆதாரமா கிடைக்கவேண்டிய வருமானம் பற்றிய நிச்சயத்தன்மை இல்லைன்னா அவங்களால அந்த துறையில எப்படி பிரகாசிக்க முடியும்?

இப்ப என்னோட நிலைமையும் அதுதாங்க. கல்லூரியில படிச்சு முடிச்சதும் ஒரு ஆடிட்டரோட அலுவலகத்துலதான் வேலைக்கு சேர்ந்தேன். மேனேஜர்னு சொல்லிட்டாங்க. அந்த அலுவலகத்துல மொத்தமே நான் நான் ஒரு ஆளுதாங்க.(மத்த எல்லாரும் ஒல்லியான்னு கேட்கப்பிடாது.) தலைமை அலுவலகம் வேற ஊர்ல இருக்கு. திருவாரூர் கிளை அலுவலகத்துக்கு நான் தான் ஆல் இன் ஆல். அப்போ சம்பளம் எக்கச்சக்கமா வருமேன்னு கேட்கப்பிடாது.

எழுநூற்றுஐம்பது ரூபாய் சம்பளம் (2003 - ல) ஆடிட்டர் மனசு வெக்கிறபோதுதான் கிடைக்கும்.அப்புறம் அதை உதறிட்டுதான் சென்னைக்கு போனேன்.அங்கயும் நான் போய் சிக்கின இடம் ஒரு கொத்தடிமைகளை வெச்சிருக்குற இடம்.ஆனா மருத்துவமனைன்னு பேரு.

வாங்கின சம்பளம் சாப்பாட்டுக்கே பத்தலை.இதுல முதன்முதல்ல புகலிடம் கொடுத்த என் நண்பரின் அண்ணனுக்கு திருமணம் செய்ய நாள் குறிச்சாங்க. அதுக்கப்புறம் அங்க இருக்குறது எப்படின்னு குழம்பிப்போய் இருந்தேன். அந்த சூழ்நிலையில எங்க ஊருக்குப் பக்கத்துல நூறு வருஷத்துக்கும் மேல இருக்குற ஒரு தொழிற்சாலைக்கு ஆள் அவசியம் வேணும். அப்பதான் நான் வெளிநாடு போகமுடியும்னு ஒரு நண்பர் அழைச்சார்.

நானும் இதுதான் சாக்குன்னு கிளம்பிட்டேன். அந்த நிறுவனத்துல கோடிரூபாயைத்தாண்டி ஆண்டு விற்பனை நடக்கும்.அக்கவுண்டண்ட் என்ற பெயரில் அங்கே வேலை செய்தாலும்  வருமானவரி, விற்பனைவரி, வருங்கால வைப்புநிதி,பொருட்கள் பேக்கிங், பில்லிங், கேஷியர், டெஸ்பாட்ச் என்று எல்லா இடத்திலும் ஆள் வராத நாளில் நான்தான் அந்தப் பணியை முடிக்க வேண்டியது இருக்கும்.

இது மட்டுமின்றி அவர்களின் மிகப்பெரிய பள்ளிக்கூடத்திலும் தினமும் மதிய நேரத்தில் நானேதான் கணக்குகளைப் பராமரிக்கணும். இவ்வளவுக்கும் சேர்த்து நான் வாங்கின சம்பளம் 2004-2005 ல மாசம் ரெண்டாயிரம் ரூபாய். வருஷத்துக்கு 75 ரூபாய் சம்பள உயர்வு.

நான் இந்த நிறுவனத்துல மூவாயிரம் ரூபாய் வாங்கணும்னா பதிமூணு வருஷம் ஆகும். அதுவரை கம்பெனி இருக்கணும், நான் இருக்கணும், இந்த முதலாளி இருக்கணும் - இவ்வளவு ரிஸ்க் இருக்கேன்னு யோசிச்சேன்.

இதுல ரெண்டாயிரமும் ஒரே தவணையா கிடைக்காது. ஆயிரத்து ஐநூறு ரூபா லிஸ்டுல போட்டுடுவாங்க.லீவு நாட்களுக்கு சம்பளம் கட்.  ஆனா நான் போகாத நாட்கள்ல அந்த வேலையை யாரும் முடிச்சிருக்க மாட்டாங்க. மறுநாள் நான் போய்தான் செய்யணும். இது என்ன நியாயம்னு கேட்காதீங்க. இதுதான் அங்க உள்ள நடைமுறை. எனக்கு இதுல எல்லாம் வருத்தம் இல்லை.வரவேண்டிய சம்பளமும் ஒழுங்கான தேதிக்கு வராது.

அந்த நிறுவனத்துல ஒரு கணக்குப்பிள்ளை இருபது வருஷமா வேலை செய்து 1650 ரூபாதான் வாங்குறார். அதனால எனக்கு அவரோட அதிகமா சம்பளம் போடக்கூடாதாம். இன்னொருத்தர் அவரோட ஏழு வயசுல பாட்டில் கழுவ வந்து அறுபத்துஅஞ்சு வயசு வரைக்கும் இங்கேயே வேலை செய்து தினக்கூலி ஐம்பது ரூபாய்தான் வாங்குறார்னு ஒரு அதிர்ச்சித்தகவலையும் சொன்னார். இந்த நிறுவனத்துலயே நீதான் அதிக சம்பளம் வாங்குற என்ற தகவல் வேறு முதலாளியிடமிருந்து.

அவர் நேரடியா தர்றதா சொன்ன ஐநூறு ரூபாயை லஞ்சம் வாங்குறது மாதிரி அட...அதக்கூட சுலபமா வாங்கிடுறாங்களே. வேற எப்படியோ நான் வாங்குறதுக்குள்ள இன்னும் ரெண்டு மாச பாக்கி சேர்ந்துருக்கும். இந்த யோக்கியதையா இருந்தா எப்படிங்க வேலையில கவனம் போகும்.

ஆனா எனக்கு போச்சே. எதுவோ குரைக்கும்போது நாமும் திரும்பி கத்துனா வித்தியாசம்

இல்லாம போயிடும்னு சொல்லுவாங்க. அதனால நானும் வள்ளுவர் வாக்குப்படி அவர் ஒழுங்கா சம்பளம் கொடுக்கலைன்னாலும் வேலையை ரொம்ப சரியா செய்தேன்.

கடைசியா சம்பள பாக்கியாலதான் நான் வேலையை விட்டு ஓடினேன்.

******

இந்த காலங்கள்ல கேமரா, எழுத்து மேல இருந்த தீராத ஆசையால திருமணவிழாக்களைப் படம்பிடிக்க கொஞ்ச நாள் போனேன். அங்கயும் எனக்கு பேசிய பணத்தை ஒழுங்கா கொடுக்கலை. மறுபடியும் ஓடினேன்.

இந்த முறை மீண்டும் சென்னைக்கு.

அங்கயும் ஒரு நிறுவனத்துல பல லட்சரூபா மதிப்புள்ள கேமராவை நம்பி கொடுத்து தனியா அனுப்பினாங்க. ஆனா சம்பளம் சரியா கொடுக்க மட்டும் மனசு இல்லை. கேமராவைக் கொடுத்து அனுப்பக் காரணம், என் மேல உள்ள நம்பிக்கையா இல்ல, இவனால எங்க ஓடிட முடியும்...ஓடினா விட்டுடுவோமான்னு அவங்க மேல உள்ள நம்பிக்கையான்னு தெரியலை.

இந்த சூழ்நிலையிலதான் ஒருத்தன் என் வாழ்க்கையில ரெண்டு வருஷத்தைக் காலி பண்ண என்னை அறியாம நானும் உடந்தையா இருந்திருக்கேன்.

இனிமே இந்த மாதிரி அக்கப்போர் எல்லாம் வேண்டாம்னு ஒரு பிரஸ்ல பிளக்ஸ் டிசைன், பத்திரிகை டிசைன் இதெல்லாம் கத்துகிட்டு பத்திரிகைத்துறையிலயே நுழைஞ்சுடலாம்னு போனேன். இவ்வளவு(?!) படிச்சிருக்கீங்க. மேனேஜரா இருங்கன்னு சொல்லிட்டாய்ங்க. சரின்னு அதுல சின்சியரா உழைக்க ஆரம்பிச்சா அடுத்த ஆப்பு. ஒண்ணரை மாசமாகியும் தினப்படிதான் கிடைச்சது. அதுவும் அந்த தொகையை எல்லாருக்கும் நானே கொடுக்க வேண்டிய பொறுப்புல இருந்ததால ஒழுங்கா கிடைச்சது.

சம்பளம் கேட்டதும், வாங்கிக்கலாம். என்ன பணம் பணம்னு புலம்புறீங்கன்னு அட்வைஸ் வேற. இதுல பெரிய கொடுமை என்னன்னா ஒரு வருஷமா என் நண்பர் ஒருத்தர்கிட்ட சொல்லி என்னைய வேலைக்கு கூப்பிட்டதே அந்த பிரஸ்காரங்கதான்.

******

பிளஸ்டூ பரிட்சையை தனித்தேர்வரா எழுதப் போனப்ப ஒருத்தன் ஒரு வருஷம் பரிட்சை எழுத விடாம பிள்ளையார் சுழி போட்டான். இன்னமும் இந்த சோகம் தொடருது.

பத்து முறை முயற்சி செய்தால் ஒரே ஒரு தடவைதான் வெற்றியா.கவலைப்படாதீர்கள். இதை மாற்றி பத்து தடவை வெற்றி அடைய ஒரு வழி இருக்கிறது.  நூறுமுறை முயற்சித்தால் எப்படியும் பத்துமுறை சக்சஸ்தான்.என்று எதோ ஒரு புத்தகத்தில் படிச்சேன்.

எனக்கு இதைக் காட்டிலும் கூடுதலாக முயற்சி தேவைப்படுது. அதிகமில்லை நண்பர்களே...ஆயிரம் முறை முயற்சித்தால் ஒரு தடவை வெற்றியை நெருங்குறேன். இன்னும் தொடவில்லை. எவ்வளவோ செஞ்சுட்டோம். இதைப் பண்ண மாட்டோமா.

தமிழ்ப்பட்டிமன்ற நடுவராக ஜாக்கிசான் - பொங்கல் சிறப்புப்பதிவு

சமச்சீர்கல்விக்கும் ஆங்கிலத்திரைப்படத்துக்கும் தொடர்பு  இருக்கா?...


இருக்கே. பள்ளிக்கூடங்கள்ல இருக்குற பாடத்திட்டத்துக்கும் தமிழ் பேசுற ஆங்கிலப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே.

நீ எந்த பதிவு போட்டாலும் சினிமாவைத்தொடாம எழுதமாட்ட போலிருக்கேன்னு வீட்டுக்கு ஆட்டோவை அனுப்பிடாதீங்கப்பா.

ஒரு பட்டிமன்றத்துல கு.ஞானசம்மந்தன் அவர்கள், "வரவர ஜாக்கிசான் ரொம்ப அழகா தமிழ் பேசுறார். போற போக்கைப் பார்த்தா பட்டிமன்றத்துக்கு நடுவரா அவர் வந்து உட்கார்ந்துடுவார் போலிருக்கே."ன்னார். அதைக் கேட்கும் போது காமெடியாத்தான் இருந்துச்சு.

ஆனா இப்போ அதனால நமக்கு சில சங்கடங்கள் நமக்குத்தெரியாமலேயே இருக்குறது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிற செய்திதான்.

சில தினங்களுக்கு முன்பு புதியதலைமுறை வாரஇதழில் 2010 ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு துறையில் உள்ளவர்களிடமும் நேர்காணல் செய்திருந்தார்கள்.

தமிழ்த்திரைப்படத்துறையில் FEFSI தலைவர் வி.சி.குகநாதன்,"ஹாலிவுட் படங்களை அந்த மொழியிலேயே வெளியிடுங்கள். அதன் மூலம் அடிமட்ட ரசிகனும் தன் ரசனையை வளர்த்துக்கொள்ளட்டும். அதைவிட்டுவிட்டு யாரோ ஒரு ஆங்கிலேயனின் வாயசைப்பில் தமிழைத்திணித்து தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 2010ம் வருடத்தில் அதைக் கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம், தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சினிமா இளைஞர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது."என்று கூறியிருந்தார்.

இதை வெறும் சினிமா தொடர்பான விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது.

சமச்சீர்கல்வி பிரமாதம். கலக்கப்போகுதுன்னு ஆளுங்கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் சொல்றாங்க. எதிர்க்கட்சியும் அவங்களைச்சேர்ந்தவங்களும் இது சரியில்லைன்னு வசை பாடுறாங்க. இவங்க எது சூப்பர்னும் விளக்கலை. அவங்க எது சரியில்லைன்னும் சொல்லலை.

நடுவுல என்னை மாதிரியான அப்பாவிகள் மண்டைதான் காயுது.

இப்போது சமச்சீர்க்கல்வித்திட்டத்தின் நிறைகுறையை அலசி ஆராயும் அளவுக்கு நான் பெரிய படிப்பாளி இல்லை. ஆனால் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் அளவுக்கு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறனையும் மேம்படுத்தும் வ்கையில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டுமே தவிர நன்றாகப் படிக்கும் மாணவர்களை நீ, நிறைய அரசுப்பள்ளி மாணவர்களைப் போல் எழுபது சதவீதம் எடுத்தால் போதும் என்று கீழே பிடித்து இழுக்கும் வகையில் சமச்சீர் கல்வி அமையக்கூடாது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இலவசமும் இப்படித்தான். ஒரு பொருளை காசு கொடுத்து வாங்குற அளவுக்கு
ஒருத்தனை பொருளாதார வலு உள்ளவனா மாத்துறதை விட்டுட்டு இலவசம் கொடுத்து ஒரு அடிமையாவே வெச்சிருக்குறதுக்கு உதாரணம் சொல்றேன்.இது வண்ணத்துப்பூச்சி புழு உருவமா இருக்கும்போது அதுக்கு உதவி செய்யுறதா நினைச்சு கூட்டை  உடைக்கிறதும்  இலவசம் கொடுக்குறதும் ஒண்ணுதான்.

தன்னால கூட்டை விட்டு வெளியில வர்ற வண்ணத்துப்பூச்சியாலதான் பறக்க முடியும். நாமே கூட்டை உடைச்சு அதை வெளியில விட்டா எதுக்கும் பிரயோசனமில்லாம உயிரிழக்க வேண்டியதுதான்.

******

நான் 1996க்குப் பிறகு சில ஆண்டுகள் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி செல்லும் வரை அவ்வப்போது பகுதிநேரமாக திரையரங்குகளில் பணியாற்றி வந்தேன்.(பார்த்ததே பகுதி நேரம். இதுல என்ன அவ்வப்போது?...அதையும் தொடர்ந்து பார்க்கலைன்னு அர்த்தம்.)

அதில் ஒரு தியேட்டரில் The Rock, Broken Arrow, Independence day, Golden Eye, Tommorow never dies, Air Force One, Universal Soldire, Jumanji, Evil Dead, Anaconda, The Lost World(jurassic park 3) உட்பட பல படங்களைத் திரையிட்டாங்க.

அந்தப் படங்கள்ல வர்ற வசனங்களோட உச்சரிப்பு பாதி புரியாது. ஆனா ஓரளவுக்கு வசனங்களுக்கு அர்த்தம் விளங்கிடுச்சு. அடுத்து 2000வது ஆண்டு
வாக்கில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம்ல வேலை செய்த நாட்கள்ல Star Plus சேனலில் அமிதாப் தொகுத்து வழங்கிய குரோர்பதி நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்ப்பேன்.அப்போதும் எனக்கு ஓரளவு ஆங்கில அறிவு மேம்பட்டதை உணரமுடிஞ்சது.

நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற சமயம். எனக்கு கிரிக்கெட் மேல ஆர்வமே இல்லன்னாலும் அப்போ நான் போட்டிகளைப் பார்க்க ரெண்டு காரணம் இருந்தது.இந்தியா ஆஸ்திரேலியாகிட்ட தவிர வேறு யார்கிட்டயும் தோற்காம இறுதிப்போட்டிக்கு முன்னேறினது முதலாவது காரணம்.

அடுத்தது வேற என்ன...மந்த்ராபேடிதான். அந்தம்மா(?!) கிரிக்கெட் பத்தி அரைகுறையா புரிஞ்சுகிட்டு ஆர்வக்கோளாறுல தப்புதப்பாதான் கேள்வி கேட்கும். ரொம்ப பேர் அதைக் கேட்டாங்களோ இல்லையோ...அம்மணியோட தரிசனத்தை நல்லாவே பார்த்தாங்க.

எங்க கல்லூரி ஆசிரியர் ஒருத்தர்தான் மந்த்ராபேடி பேசுறதை டிவியில பாருங்கன்னு சொன்னார்.நாங்க எல்லாரும் சட்டுன்னு சிரிச்சுட்டோம்.

"நான் பார்க்கசொன்னது அந்த அம்மாவோட ஆங்கிலத்துக்காக. போட்டுருக்குற டிரஸ்சுக்காக இல்லை." அப்படின்னார்.

நான் கொஞ்சம் ஆர்வமா, சார்..அந்தம்மா தப்புத்தப்பால்ல கிரிக்கெட்டைப்பத்தி பேசுது. அப்போ அந்த இங்கிலீஷ் எந்த கதியில இருக்குமோன்னு கேட்டேன்.

எதுவுமே தெரியாத உங்க மாதிரி புத்திசாலிங்களுக்கு அந்த இங்கிலீஷ் போதும் 
அப்படின்னு சொல்லி, கோ எஜுகேஷன் வகுப்புல மானத்தை வாங்கிட்டார்.

இந்த கேலி கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம முயற்சி பண்ணினா நிச்சயமா ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துக்க முடியும்.

ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா இங்க எல்லாம் ஆங்கிலத்தை நம்பியா இருக்காங்கன்னுதானே நீங்க கேட்குறீங்க. அங்க எல்லாம் நாடு பூராவும் ஒரே மொழிதான். ஆனா நம்ம நாட்டுல சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வுல கலந்துக்க தலைநகர் போனா வழியில குறைந்தது ஆறு மொழியாவது கத்துக்க வேண்டிய நிலை. எத்தனை மொழி கத்துக்குறோமோ அத்தனை மனிதனுக்கு சமம்னு சொல்லுவாங்க.

அதுக்கு நேரம் ஒதுக்க எல்லாராலயும் முடியாது.அதனால நம்ம நாட்டுல எல்லாரும் ஆங்கிலத்தை இணைப்புப்பாலம் மாதிரி பயன்படுத்துற அளவுக்கு கத்துக்குறது அவசியம். அதாவது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தாய்மொழி, ஆங்கிலம் இரண்டும் கட்டாயம். அதுக்கு மேல அவங்கவங்க திறமையைப் பொறுத்து கத்துக்கலாம்.

******

திங்கள், 11 ஜனவரி, 2010

நிதி நிறுவனங்களில் மக்கள் ஏமாற அல்லது ஏமாற்றப்படக் காரணம் என்ன?

மிகப்பெரிய கோடீஸ்வரர் சென்னை சிட்டி பஸ்சில் செல்லும்போது மூன்று ரூபாய் கொடுத்து டிக்கட் எடுக்க காசு இல்லை என்றால் நடத்துனர்,"யோவ்...சாவுகிராக்கி, எறங்குயா முதல்ல..."என்று நல்ல வார்த்தை(?!) சொல்லி அவரை இறக்கிவிடுவார் அல்லது செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் பிடித்துக்கொடுப்பார்.அந்த நேரத்தில் அந்த பணக்காரரின் சொத்துக்கள் எதுவும் உதவிக்கு வராது.

ஒரு நிதி நிறுவனத்திடம் எல்லாரும் ஒரே நேரத்தில் போட்ட பணத்தை திருப்பிக்கேட்டால் ஏற்படுவதும் இதே நிலமைதான். ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் தவிர்த்து நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சில நிறுவனங்களும் திடீரென மூடப்படுவதற்கும் இதுதான் காரணம்.நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பேராசிரியர் கொடுத்த விளக்கம்தான் இது.

10.01.2020 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் இது தொடர்பான விவாதம் நடந்தது.அதில் புதியதாக சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும் பல விஷயங்களைப் பூசி மெழுகிவிட்டார்கள்.

அதுசரி...நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததில் சில அரசு அதிகாரிகளும் இருந்தார்கள்.பல விதிகளுக்கு உட்பட்டுதானே அவர்களாலும் பேச முடியும்.

இதில் என்னை நெருடிய விஷயம் என்னவென்றால் பதிவு செய்யப்படாத நிறுவனம் பற்றிய தகவல்களை சாதாரண குடிமக்கள்தான் கண்டறிய வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு திறமை இருந்தால் இவ்வளவு நாளும் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்க மாட்டார்களே.

மக்கள் பேராசையால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவது பெரும்பாலும் முறையாக பதிவு செய்யப்படாத நிறுவனங்களில்தான். இதற்கு ஓரளவு எளிமையான தீர்வு என்னவென்றால் அரசின் இணையதளத்தில் முறையான பதிவு பெற்ற எல்லா தனியார் நிறுவனங்களின் பட்டியலையும் துறை வாரியாக வெளியிட்டுவிடலாம்.

கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் இவைதான் மக்களுக்கு அதிக நன்மையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் அவை பதிவு பெற்றால் மட்டும் போதாது. அவர்களின் எல்லை எதுவரை என்பதையும் தெளிவாக வரையறுத்து அதையும் அரசின் இணையதளம் மூலமாக மக்களின் பார்வைக்கு அளிக்கலாம்.

அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்ததும் உரிய துறையில் முழுமையாக மாணவர் பட்டியலையும் அந்த இணையதளத்தில் வெளிப்படையாக்கிவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெறாமலேயே மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களைத் தேர்வு எழுதவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலம் காணாமலேயே போய்விடும்.

ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் சில இணையதளங்களில் உடனுக்குடன் புதிய தகவல்கள் பதிவுசெய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி என்று இணைய தளத்தில் இருந்தால் அது பழைய தகவல் என்று நமக்கு புரிந்துவிடும்.ஆனால் பல தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் தொடர்பான தகவல்களை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நிதிநிறுவனத்தில் ஆரம்பித்து கல்விநிறுவனத்துக்கு போய்விட்டேன்.பரவாயில்லை...கல்வி பெற நிதி தேவை. நிதியைப் பெறவும் கல்வி ஒரு கருவியாக இருக்கிறது.

போலிகளை ஒழிக்க மேலே நான் சொன்ன சில வழிமுறைகள் நிச்சயமாக நல்ல பலன் தரும். ஆனால் நல்ல முறையில் நடைபெறும் சில நிதிநிறுவனங்களும் திடீரென மூடப்படுகின்றனவே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்.

ஆப்பு எதுவும் வெளியில் இல்லை. அதற்கும் மக்கள்தான் காரணம். கடன் வாங்கியவர்கள் திரும்ப கட்டவில்லை என்றால் அது முதலீட்டாளர்கள் தலையில்தான் துண்டாக விழும். இதிலும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வங்கியிலும் சரி, சிட்பண்ட்டுகளிலும் சரி சிறு தொகை வாங்கியவர்களில் 95 சதவீதம் பேர் ஒழுங்காக திரும்ப செலுத்துவதாகத்தான் சொல்கிறார்கள். இது உண்மையாகத்தான் இருக்கும்.

அப்போது வில்லங்கம் எங்கே இருக்கிறது. எல்லாம் சில பணக்கார முதலைகளால்தான்.அவர்கள் அப்படி பணத்தை திரும்ப செலுத்தாமல் தப்பிக்க யார் காரணம்? நிதி நிறுவனம் என்றால் நிர்வாக இயக்குனர்கள், அரசுடமை வங்கி என்றால் உயரதிகாரிகளிடமிருந்து பல மக்கள் பிரதிநிதிகள் வரை எல்லா மட்டத்திலும் தவறு செய்கிறார்கள்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுரத்தை கட்ட எத்தனை ஆயிரம் மூளைகளும் கரங்களும் கால்களும் உழைத்தனவோ? ஆனால் அதை தரைமட்டமாக்கியது மூளை இல்லாத ஒரு சிலர்தானே.

அதேபோல் ஊழலுக்கு முக்கியக் காரணம் சிலரின் பேராசைதான்.

நாலுபேர் நல்லா இருக்கணும்னா எதுவுமேதப்பு இல்லை.- இது நாயகன் படத்தில் வரும் வசனம். இதை ரொம்ப தப்பா புரிஞ்சுகிட்டு தப்பாவே செயல்படுத்துறதுக்கு கொஞ்சபேர்தான் இருக்காங்க. ஆனா இதையே நாடு தாங்காது போலிருக்கே.

சனி, 9 ஜனவரி, 2010

மதிப்பெண் என்னும் மாயத்தோற்றம்

என்ன வேணுன்னாலும் சாப்பிடுங்க...உண்மையை சொல்லுங்க என்று நல்ல செய்தி சொல்லும் விளம்பரம் என்று சில தினங்களுக்கு முன்புதான் பெப்சோடண்ட் பற்பசை விளம்பரத்தைப் பாராட்டி ஒரு பதிவு எழுதினேன். நாங்க அவ்வளவு சீக்கிரம் திருந்திடுவோமான்னு உடனே ஒரு ஆப்பு வெச்சுட்டாங்க.

இப்ப போடுற பெப்சோடண்ட் விளம்பரத்துல தேர்வு எழுதிட்டு வர்ற ஒரு மாணவனின் தாய்கிட்ட ஒரு நிருபர் உங்க பையன் ஃபெயிலாயிட்டானான்னு திரும்பத்திரும்ப கேட்குறதா காட்சி. இந்த மாதிரி விளம்பரங்களை சென்சார் வெச்சு தடை செஞ்சாதான் சரிவரும்.

நம்ம கல்விமுறையும் தேர்வுகளும் படுத்துறபாடு தாங்காம தற்கொலை செஞ்சுக்குற மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கணும்னுதான் நிறைய பேர் போராடிகிட்டு இருக்கோம்.

இதுக்காக நான் தேர்வுகளே வேண்டாம்னு சொல்ல வரலை. இந்த தேர்வுகள்ல மார்க் வாங்கலைன்னா உலகத்துல வாழவே தகுதியில்லாத மாதிரி தற்கொலை

செய்துக்குறதுதான் கூடாதுன்னு சொல்றேன்.

எல்லாரும் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் எடுத்துடுற திறமையோட இருக்க மாட்டாங்க. கல்லூரியில என்னோட குறைவான மார்க் எடுத்த என் வகுப்புத் தோழன் எம்.காம், எம்.ஃபில் படிச்சு நெட் தேர்வும் எழுதி ஒரே தடவையில பாஸ் பண்ணிட்டான்.நிறைய பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகளுக்கு டியூஷன் எடுக்குறான். ஆனா நான் எழுத்து மேல உள்ள ஆர்வத்தால படிப்பை அதுக்கு மேல தொடரலை.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை. அதை வளர்க்குறதுதான் நம்மோட கடமையா இருக்கணும்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

நல்லது சொல்லும் விளம்பரங்கள்



மிட்டாய் தின்றால் அடுத்தவரின் மனைவியை அழைத்துச் சென்று விடலாம் என்ற கீழ்த்தரமான உள்ளடக்கத்துடன் வெளிவந்த விளம்பரம் போலவேதான் நிறைய இருக்கின்றன.

தன் நிறம் குறித்த தாழ்வுமனப்பான்மை, குறிப்பிட்ட பொருள் இல்லை என்றால் உடன் படிக்கும் பிள்ளைகள் கூட மதிக்காது என்று கூறி குடும்ப பொருளாதாரம் தெரியாமல் குழந்தைகளை அடம்பிடிக்கச் செய்தல், உடலுக்கு ஒவ்வாத பொருளை வாங்கித் தரச்சொல்லுதல், மற்றவர் மதிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த நேரத்தில் தேவையற்ற ஆடம்பரத்தால் பொருளாதார சுனாமியில் சிக்கிக் கொள்ளுதல் - இது போன்ற பல தீமைகளுக்கு விளம்பரங்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன என்ற எண்ணம் என் மனதில் அழுத்தமாகவே பதிந்திருக்கிறது.

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் வரை எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. தெருவில் உள்ள பலரின் வீட்டிற்கும் சென்று நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன். அப்போது எங்களின் ஒரே விருப்பம், திரைப்படமும் புதிய பாடல்களும் மட்டுமே. விளம்பரம் தொடங்கிய நொடி வேறு சானலுக்கு மாறிவிடுவோம்.  பிறகு நான் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆப்ரேட்டராக இருந்தபோதும் நான் படங்களின் இடையே விளம்பரத்தை ஒளிபரப்பினாலும் அந்த நேரத்தில் வேறு எதாவது பாடல்களையோ, படத்தையோதான் பார்ப்பேன். இந்த அளவுக்கு விளம்பரத்தின் மீது வெறுப்பு இருந்தது.

அதற்காக கொஞ்சம் கூட ரசனையே கிடையாது என்றும் சொல்ல இயலாது. முதன் முதலில் பொதிகை தொலைக்காட்சியில் சாலிடெர் டெலிவிஷனின் விளம்பரம்தான் என்னைக் கவர்ந்தது. இருக்கு இருக்கு இதில் எல்லாம் இருக்கு என்று தொடங்கும் பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடியிருப்பார். அவரது பெயரெல்லாம் அப்போது தெரியாது. ஆனால் அந்த பாடலும் நடனமும் மிகவும் பிடித்துப் போனதால் சென்னைத் தொலைக்காட்சியில் திங்கள்தோறும் அம்பிகாபதி என்ற தொடரைப் பார்க்கச் சென்று விடுவேன்.1992 அல்லது 1993 தொடக்கமாக இருக்கலாம். அந்த தொடர் ஆரம்பிக்கும் முன்பு மட்டுமே அந்த விளம்பரம் ஒளிபரப்பாகும்.

அடுத்தது, ஹமாரா பஜாஜ் விளம்பரம்.இது எந்த ஆண்டு என்று தெரியவில்லை. ஆனால் கோலத்தை அழிக்காமல் ஒதுங்கிச் செல்லுதல், கணவனின் தோள் மீது கை வைத்துக்கொண்டு டூவீலரில் செல்லும் பெண், வயதான தம்பதியரை எதிரில் பார்த்ததும் வண்டியில் உள்ள கைப்பிடியை பிடித்துக்கொள்ளுதல், என்று ஆறு ஏழு சீக்வென்ஸ் கொண்ட இந்த விளம்பரம் ஒரு சில முறைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதனால் மற்ற சீக்வென்ஸ் நினைவில் இல்லை.

அடுத்தது செயிண்ட் கோபைன் கிளாஸ் விளம்பரம். ஒரு அம்மா, சாப்பிட உட்கார்ந்திருக்கும் தம்பதி மீது தண்ணீரை ஊற்ற வருவார். இவர்கள் பதறிப் போய் விலக, அவர்களுக்கு முன்னால் இருக்கும் கண்ணாடியை சுத்தம் செய்வார் அந்த பெண். இந்த விளம்பரங்களில் எல்லாம் ஓரளவு நம்பகத்தன்மை இருந்தது.


அதன்பிறகு நான் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் அரிதாகிப் போனதால் சில சர்ச்சைக்குரிய விளம்பரங்களைப் பற்றி நாளிதழ்கள், வாரஇதழ்கள் வாயிலாக தெரிந்து கொண்டதுடன் சரி.

அதிலும் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக கேபிள் இணைப்பை துண்டித்துவிட்டதால் எந்த வில்லங்க விளம்பரங்கள் மட்டுமின்றி நல்ல விளம்பரங்களையும் (வருகிறதா என்ன?) காணவில்லை.

பிறகு கடந்த ஆண்டு இறுதியில் டி.டி.ஹெச் ஆண்டனாவை அதற்குரிய டெக்னீஷியன் யாரும் வராததால் நானே பொருத்திவிட்டேன். கலைஞர், பொதிகை, மக்கள், மெகா ஆகியவைதான் தமிழ் சானல்கள்.

இதில் எதோ ஒரு சானலில் பெப்சோடண்ட் பற்பசைக்கான விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது. மூன்று ரூபாய் விலைகுறைவு என்ற விளம்பரம். விலை ஏற்றும்போது அதை லஞ்சம் வாங்குவதைப் போன்று அதிகம் வெளியே தெரியாமல் செய்யும் இவர்கள், விலை குறைப்பை மட்டும் நாடறிய வாக்குப்பதிவைப் போல் நடத்துவார்களே. இதில் எத்தனை கிராம் எடையைக் குறைத்திருக்கிறார்களோ என்றுதான் நினைத்தேன்.

ஆனால் விளம்பரத்தின் இறுதி வாசகம் "அட... இவங்களுக்கும் சமூகத்துமேல கொஞ்சூண்டு பொறுப்பு வந்துடுச்சே..."என்று நினைக்கத் தோன்றியது.

பத்து ரூபாய்க்கு பற்பசை வாங்கிய குழந்தை மீதி மூணு ரூபாய்க்கு ஐஸ்கிரீம் வாங்கி தின்னுட்டேன். என்று மழலை மொழியில் கூறும். உடனே ஒரு பின்னணிக் குரல்," என்ன வேணுன்னாலும் சாப்பிடுங்க...ஆனா உண்மையை சொல்லிடுங்க..." என்று ஒலித்தது.

இந்த அறிவுரை குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். குழந்தைகளை உண்மை சொல்ல வைப்பது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை. இது பற்றி தனிப்பதிவு விரைவில் இளைய பாரதத்தில்.