Search This Blog

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

நாட்டு நடப்பு - பல சந்தோஷங்களும் சில சங்கடங்களும் - 24.01.2010

தினமணி கதிர் 2009ம் ஆண்டு சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு 10000 ரூபாய் பெற்ற "பரட்டச்சி" சிறுகதையை எழுதியவர் ஷாராஜ்.இந்தக் கதையில் சமனற்ற மனநிலையை உடைய பரட்டச்சியையும் யாரோ ஒரு கயவன் கருவுறச்செய்து விடுவான். வீட்டுத்திண்ணையில் இட்லி வியாபாரம் செய்து வரும் ஒரு பெண்தான் இவளுக்கு உணவு கொடுத்துவருவாள்.




பரட்டச்சிக்கு குழந்தை பிறக்கப்போகும் நேரம், குப்பைத்தொட்டியில் யாரோ ஒருவர் பச்சிளம் குழந்தையை வீசிச்சென்றிருப்பார்கள்.தெருவே கூடி நின்று தொண்டு நிறுவனத்துக்கு போன் செய்வோமா அல்லது காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிப்போமா என்று விவாதித்துக்கொண்டு இருப்பார்கள்.

குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையின் அழுகுரல் திடீரென்று நின்றுவிடும். அந்த நேரத்தில் நிறைமாதமாக அங்கு வந்த பரட்டச்சி குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்தி தன் மார்பில் உயிர்ப்பால் ஊட்ட முயற்சி செய்வாள். பரட்டச்சிக்கு அது நாள் வரை உணவளித்து வந்த இட்லிக்கார அம்மா கூட குப்பைத்தொட்டியில் கிடந்த குழந்தையின் பசிக்கு என்ன செய்வது என்று யோசிக்காததை நினைத்து அதிருவதை கதையைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

அதிர்ந்தது கதையைப் படித்த நானும்தான்.நாம் என்னதான் சமூக சேவை செய்வதாக கூறிக்கொண்டாலும் நம்மைச் சுற்றி ஒரு மெல்லிய வட்டத்தைத் தாண்டி செல்வது இல்லை, ஏன் அது பற்றி யோசிப்பது கூட இல்லை என்ற உண்மையை உணர்ந்தேன்.

இந்த எழுத்தாளருடன் நான் கைபேசியில் பேசியது உண்டு.அவர் தன்னுடைய கைபேசி எண்ணுடன் எனக்கு கடிதம் எழுதுவதற்கு காரணம், தினமலர்-வாரமலருக்கு நான் எழுதிய கடிதம்தான்.

07.06.2009 தினமலர்-வாரமலரில் அம்ரிதவர்ஷிணி என்ற புனைப்பெயரில் விஷவியூகம் என்ற சிறுகதை பிரசுரமாகியிருந்தது.

தற்கொலை செய்யப்போகும் காதலர்கள், தங்களைக் கொத்த வந்த பாம்பிடமிருந்து ஒரு போராட்டம் நடத்தி தப்பித்தபிறகு மீண்டும் வாழ நினைப்பதுதான் கதை.

சின்னக் குழந்தைகளிடம் இருந்து பொம்மையை வாங்க முயற்சித்தால் அவர்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் வேறு பல காரணங்களால் அந்த பொம்மையை சிதைக்கவோ, தூக்கி எறியவோ அவர்கள் தயங்குவது இல்லை.

மனிதர்களும் இப்படித்தான்.கடவுள் கொடுத்த உயிரை அற்பக் காரணங்களால் துறக்க நினைப்பார்கள். ஆனால் ஒருவன் கொலை செய்ய வந்தால் அதிலிருந்து தப்பிக்க அவர்கள் கையாளும் வழிகள் வலிமையானதாக இருக்கும். இதை அழகாக உணர்த்தியது இந்தக் கதை.


-இதுதான் நான் வாரமலருக்கு எழுதி அனுப்பிய வாசகர் கடிதம். இந்தக் கடிதம் வாரமலரின் "அர்ச்சனை" பகுதியில் பிரசுரமாகவில்லை. ஆனால் இதை சம்மந்தப்பட்ட எழுத்தாளரிடம் தினமலர் நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கிறது.இந்த வரிகள் ஈர்த்ததால்தான் எனக்கு ஷாராஜ் அவர்கள் நேரடியாக கடிதம் எழுதியிருக்கிறார்.

விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 1
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 2
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 3
விஷவியூகம் (சிறுகதை) பக்கம் 4

இதைப் பற்றி நான் இப்போது சொல்லக் காரணம், எனக்குத் தெரிந்தவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்வில் மிகக்குறைவான மதிப்பெண் பெற்றதற்காக ஆசிரியை திட்டியதைத் தாங்க முடியாமல் ஒரு தூக்கு. மனைவி மாற்றானுடன் இருந்ததைப் பார்த்தததும் விஷம்.குடிக்கு அடிமையானதும் தொழிலை இழந்து வருமானம் தடைபட்டு பைத்தியம் பிடிக்கும் நிலைக்குச் சென்று தூக்கு.

இது போல் எனக்குத் தெரிந்து பிரச்சனையை விடத்தெரியாமல் உயிரை விட்டவர்கள் அனைவருமே 17 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போ மற்ற வயதினர் தற்கொலை செய்யலாம் என்று சொல்வதாக நீங்கள் அர்த்தம் கொள்ளக்கூடாது. நமது முன்னாள் குடியரசுத்தலைவர் முதல் கறை படியாத தலைவர்கள், ஊழலில் ஊறும் அரசியல்வாதிகள் - இவர்களில் யாருமே இளைய தலைமுறையை குறைத்து எடை போடுவதில்லை. நல்ல மரியாதைதான் வைத்திருக்கிறார்கள். பிறகு ஏன் மற்றவர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தன்மீது வைக்க தயங்க வேண்டும்?(எதிலும் விதிவிலக்குகள் நிறையவே இருக்கின்றன.அதை எல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய கடமை இளைய தலைமுறைக்கு அதிகமாகவே இருக்கிறது.)

நேற்றும் ஒரு துர்மரணம். தொழிலில் நன்றாக முன்னேறி வந்த அவன் சில காலமாக மதுவுக்கு அடிமையாகி இருந்தான்.நேற்று காலை முதல் அவன் எங்களிடையே இல்லை.

தவறோ சரியோ ஒருவரின் மனம் நினைப்பதை அப்படியே ஒப்புக்கொள்ளும் ஆட்களைத் தவிர மற்றவர்களை அருகில் சேர்க்கவோ, அவர்கள் சொல்வதில் நன்மை தரக்கூடியது இருக்கிறதா என்று நினைக்கவோ இன்று பலரும் தயாராக இல்லை.

என்னுடைய 5 வயதில் இருந்தே அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்திருக்கிறேன்.இதில் எதுவும் பள்ளிக்கூட பாடம் தொடர்பானது அல்ல.ஆனால் ஒரு நாளும் உயிரை விடுவது பற்றி சிந்தித்ததே இல்லை.இன்று பலருக்கும் பள்ளிப்பாடம்தான் மிகப்பெரிய பிரச்சனையாகத் தோன்றுகிறது.

இப்படி தப்பான முடிவு எடுப்பவர்கள் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். போனால் வராதது உயிர், காலம் என்பார்கள்.பல விஷயங்களை இன்று செய்யவில்லை என்றால் நாளை அல்லது நான்கு மாதம் கழித்து கூட செய்து கொள்ளலாம். அப்படி செய்வதற்கு முதலில் உயிருடன் இருக்க வேண்டும்.இதை யோசித்தால் யாருக்கும் தற்கொலை எண்ணம் தோன்றாது.

இன்று நாளிதழில் செய்தி ஒன்று படித்தேன். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறான் ஒரு கயவன். அவன் மீது புகார் அளித்துவிட்டார்கள் என்று அத்துமீறிய பையனின் பெற்றோர் பாதிக்கப்பட்ட பெண்ணையே வந்து திட்டியிருக்கிறார்கள். ஊர் முழுவதும் விஷயம் பரவியதால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தப்பு செய்த பையனைத் தண்டிப்பது இருக்கட்டும். முதலில் அவனுக்குப் பரிந்து பேசிய அவன் பெற்றோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

1998ல் சரிகாஷா மரணம்தான் கடைசி ஈவ்டீசிங் பலியாக இருக்கவேண்டும் என்று இதைத் தடுக்க அதிகாரம் படைத்த அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால் தினம் தினம் நடக்கும் பிரச்சனைகளைப் பார்த்தால் பல நேரங்களில் வேதனைப்படுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. நம் நாட்டில் உள்ள சட்டங்கள் பிடிக்காத ஆளின் மீது பொய் வழக்குப் போடவும் பிடித்த ஆள் தவறே செய்தாலும் தப்பிக்க வைக்கவும்தான் அதிகமாக உதவி செய்கின்றன.

இன்னும் ஒரு மாத காலத்தில் பள்ளியில் பத்தாம்வகுப்பு, பிளஸ்டூ பொதுத்தேர்வுகள் தொடங்கப்போகின்றன.தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளை விட பெற்றோர்தான் அதிகமாக டென்ஷன் ஆவார்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். தற்கொலை என்பது நிச்சயம் தீர்வு இல்லை. இதை மனதில் நிறுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை அந்த முடிவெடுக்கத் தூண்டி விடாதீர்கள்.

பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டாலும் அதை அச்சமின்றி பெற்றோரிடம் சொல்லி தீர்வு காணும் துணிச்சல் பலருக்கும் இல்லாமல் போவதற்கும் பெரியவர்கள்தான் காரணம்.

நீ ஒழுங்கா போனா அவன் ஏன் தொந்தரவு செய்யுறான்.-இந்த வார்த்தை மிகவும் தவறு.இது மாதிரி பிரச்சனைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள், சொன்னாலும் பெரிய தண்டனை கிடைக்காது என்ற துணிச்சல்தான் இப்படிப்பட்ட அத்துமீறல்களுக்குக் காரணம்.ஒரு ஊரில் லோக்கல் தாதாவின் பொண்ணுகிட்ட இப்படிப் போய் வம்பு செய்யுறது ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கும். அந்த வயசு காரணமா அந்தப் பொண்ணே யாரையாச்சும் பார்த்தால் கூட தெறிச்சு ஓடுறவங்க எண்ணிக்கைதான் அதிகமா இருக்கும்.

******

சமீபத்தில் என்னைக் கவர்ந்த விளம்பரங்களில் ஒன்று - கல்யாண் ஜூவல்லர்சின் நம்பிக்கை - வாழ்க்கையின் ஆதாரம்.

காதலன், காதலியை அழைத்துச் செல்ல ஆள், வாகனத்துடன் வந்து கோயிலில் காத்திருப்பான். "நம்ம மக ஓடிப்போகப்போறாளாம்" என்று சொல்லும் மனைவியை அடக்கும் தந்தை,"அவ என் பொண்ணு " என்று நம்பிக்கையுடன் சொல்வார்.

அந்த மகளும் காதலனைப் புறக்கணித்து தந்தையிடம் வருவாள். உடனே தந்தை,"அந்தப் பையனை அவங்க அப்பா அம்மாவோட நம்ம வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கச்சொல்லும்மா." என்பார்.

சில நொடிகளில் நெஞ்சை நெகிழவைத்த விளம்பரம்.தந்தை மகளாக இளையதிலகம் பிரபு - சரண்யாமோகன். மிகச்சரியான தேர்வு. அதிலும் தந்தை சம்மதம் கொடுத்ததும் ஆனந்தக் கண்ணீருடன் தந்தையின் தோளில் சரண்யா சாய்ந்து கொள்ளும் காட்சி மிகவும் அற்புதம்.

நம்பிக்கை என்பது இரு தரப்புக்கும் பொதுவான விஷயமாக இருக்கவேண்டும்.ஒருவரிடம் குறைந்தாலும் எதிர்தரப்பின் நம்பிக்கையும் சிதறிவிடும்.

இன்று பல குடும்பங்களில் நடப்பதும் இதுதான்.மகள் அல்லது மகன் தானே தேர்வு செய்த வாழ்க்கைத்துணை என்ற ஒரே காரணத்துக்காக உறவைத்துண்டித்து பல நெகிழ்ச்சியான தருணங்களை இழந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம்.அவர்களே தேர்வு செய்த துணை சரியான நபராக இருக்கும் நிலையில் இதை எதிர்ப்பது அர்த்தம் இல்லாத ஒன்று.ஈகோவால் தாங்கள் தோற்றுவிட்டதாக நினைக்காமல் சரியான விஷயங்களை ஒப்புக்கொண்டால் யாரும் எதையும் இழக்காமல் சந்தோஷங்களை அறுவடை செய்யலாம்.


ஒருவேளை தவறான துணையை தேர்வுசெய்திருந்ததை பெற்றோர் சுட்டிக்காட்டினால் ஈகோ காரணமாக அந்த நபருடனேயே வாழ்க்கையை இணைத்துக்கொண்டு அவதிப்படுவதையும் இளைய தலைமுறை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

எனக்குத்தெரிந்து ஒரு இளம்பெண் தன் தந்தையாலேயே வாழ்வைத்தொலைத்துவிட்டாள்.

நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது 2003ம் ஆண்டு அந்தப் பெண் ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.(ஆண்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடக்கடவுளே என்று சொல்ல வைக்கும் செய்தி ஒன்று கட்டுரையின் இறுதியில் இருக்கிறது.)

சாதி, பொருளாதாரம், கல்வி என்று பல வேறுபாடுகளைத் தாண்டி அந்தப் பெண்ணுக்கு  அந்தப் பையன் மீது ஈர்ப்பு வர ஒரே காரணம் இனக்கவர்ச்சி மட்டுமே. இந்த எண்ணத்தை அந்தப் பெண்ணின் மனதில் விதைத்தது அவளுடைய தந்தைதான். இந்தப் பெண்ணின் சித்தி(அவள் தாயாரின் தங்கை) தன் கணவனை விட்டு இவர்கள் வீட்டுக்கே வந்து விட்டாள். தந்தையும் சித்தியும் ஏடாகூடமாக இருந்ததை அவ்வப்போது பார்த்ததோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இந்தப் பெண்ணின் மனதில் "அந்த"ஒரு விஷயம்தான் உலகம் என்று தவறாக எண்ண வைத்துவிட்டது.

விளைவு, ஒரு இளைஞனுடன் திருமணம் (?!) செய்து கொள்ள நினைத்து ஓட்டம். காவல்துறை உதவியுடன் மகளை மீட்டு அழைத்து வந்த அவர் சரியான நிபுணர் மூலமாக ஆலோசனையை வழங்கியிருந்தால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் வீணாகியிருக்காது.

ஆனால் அந்த தந்தை, மகளின் படிப்பை நிறுத்தி வீட்டிலேயே வைத்ததுடன் மச்சினியுடனான லீலைகளை நிறுத்தவே இல்லை. மகளாலும் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு மூன்று முறை அதே ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியில் போய் தங்கியிருந்து பிறகு மீட்டுக்கொண்டு வரப்பட்டாள்.

ஒரு வழியாக அந்த ஒருவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது. இந்தப் பெண்ணின் கவனம் வேறு ஒருவன் மீது.சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் புதியவனுடன் அந்தப்பெண் வெளியேற, காவல்துறை மூலம் மீட்பு.(மறுபடியும் முதல்லேருந்தா?)

அவளை இப்போது அழைத்துச்சென்றவன் "யோவ்...உன் பொண்ணுதான் என்னைக் கூப்பிட்டா.அவளைக் கேளுய்யா!"அப்படின்னு சொல்லிட்டான். இன்னும் அந்த தந்தை தன்னால்தான் தன் மகள் இப்படி வழிதவறிப்போனாள் என்று உணரவே இல்லை(அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்)

முதல்முறை 2003ல் வெளியேறியதும் மீட்டு அழைத்து வந்தபோதே முறையாக ஆலோசனை அளித்து, படிப்புதான் முக்கியம். படித்து முடித்ததும் நீ அவனை விரும்பினா, அவன் உன்னை நேசிச்சா கண்டிப்பா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லி அவள் கவனத்தை படிப்பு மேல திருப்பியிருக்கலாம்னுதான் நான் நினைக்கிறேன்.

படிப்பை நிறுத்தி வீட்டுல போட்டதும் வேறு எந்த எண்ணமும் அவள் மனசுல வரவே இல்லை.சும்மா இருக்கும் மனம் பேய்களின் கூடாரம் என்ற பழமொழிக்கு வாழும் உதாரணமாக இந்தப் பெண்ணை சொல்லத்தோன்றுகிறது.

இப்போது கல்வியும் இல்லாமல், ஊர் முழுவதும் இவள் பற்றிய உண்மை தெரிந்ததால் திருமணமும் கேள்விக்குறியாகி விட்டது. சமீபத்தில் அவளுடன் வெளியில் சென்றவனும் எதை அந்தப் பெண்ணிடம் எதிர்பார்க்கிறான் என்பது தெரிந்துவிட்டது.

முதலில் இவள் வெளியேறிய 2003ம் ஆண்டை நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னது ஏன் தெரியுமா? இவளுக்கு பதினெட்டு வயது நிறைவடையவே இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறதாம்.

இவ்வளவு சின்ன வயதில் இந்தக் குழந்தையின் வாழ்க்கை இப்படி மோசமாக யார் காரணம்?-நிச்சயமாக அவள் இல்லை.

******

சார்லி சாப்ளின் ஒரு பீரங்கியை தயார் செய்து மிகப்பெரிய வெட்டவெளியில் அதை வெடிக்கச்செய்ய மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்வாராம். ஊரே அவர் வெடிக்கச்செய்யப்போகும் பீரங்கிக் குண்டு சத்தத்திற்கு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும்போது அந்த குண்டு மிக லேசான சத்தத்துடன் வெடித்து பீரங்கிக்குழாயின் காலடியிலேயே விழுமாம்.


இன்னைக்கு நானும் இப்படி ஒரு ஏமாற்றத்தை சந்திச்சேன். இந்த மாசம் 2ம் தேதி பகல் முழுவதும் திருவாரூர்ல மின்தடை. பராமரிப்பு பணின்னு சொன்னாங்க. ஆனா அடுத்த சில நாட்கள்லயே ஒரு டிரான்ஸ்பார்மர் வெடிச்சு சிதறினது.அது ஏன்னு கேட்கக்கூடாது.ஆயில் இல்லைன்னு அரசாங்க ரகசியத்தை நாங்கதான் வெளியில சொல்ல மாட்டோமே.

இன்றும் 24.01.2010 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட்டுன்னு பேப்பர், காரைக்கால் பண்பலை உட்பட பல ஊடகங்கள்லயும் அறிவிப்பு செய்தாங்க. எனக்கும் மற்ற வேலைகள் இருந்ததால இரவுதான் புதிய பதிவு போடணும்னு நினைச்சு காலையில பேப்பரை மட்டும் படிச்சுட்டு வெளியில போயிட்டேன்.

காலையில ஒன்பது மணிக்கு அப்புறமும் மின்சாரம் தொடர்ந்து இருந்துச்சு. 9.59க்கு அப்புறம் பத்து மணியும் ஆச்சுங்க. அப்பவும் பவர் கட் ஆகலை. ஆனா அடுத்து அஞ்சு நிமிஷத்துல போயிடுச்சு. சரின்னு நானும் வெளியில போயிட்டேன்.

சில நண்பர்களை சந்திச்சு பேசிகிட்டு இருந்தா ஒருத்தன் "மாப்பு...கிரிக்கெட் பார்க்கப்போறேன். வைக்காத ஆப்பு"ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டான். என்னடான்னு கேட்டா முக்கால்மணி நேரத்துல மின்சாரம் மறுபடியும் வந்துடுச்சேன்னு அவனும் ஜூட் விட்டுட்டான்.

அடக்கடவுளே...இப்படின்னு தெரிஞ்சுருந்தா பதினோரு மணிக்கெல்லாம் பதிவை ரிலீஸ் பண்ணிட்டு அடுத்த முக்கியமான வேலையைப் (தூக்கம்தான்)பார்த்திருக்கலாமே அப்படின்னு புலம்பிட்டு வீட்டுக்கு வந்தேன்.

ரொம்ப மும்முரமா கம்ப்யூட்டர்ல வேலை பார்த்துகிட்டு இருந்தா பொசுக்குன்னு பவரைத் துண்டிப்பாங்க. இப்ப நான் இவ்வளவு ஏற்பாட்டோட வேற வேலையைப் பார்த்தா ஒழுங்கா கொடுத்து வெறுப்பேத்துறாங்க.

மின்சாரவாரியம்:பவரைக் கட் பண்ணினாலும் திட்டுறீங்க...ஒழுங்கா கொடுத்தாலும் சாபம் கொடுக்குறீங்க...வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் இந்த உலகம்.பழமொழி சரியாத்தான் இருக்கு.
******

1 கருத்து:

  1. தொகுத்து வழங்கி இருந்ததில், அந்த சிறு வயது பெண், தான் வாழ்க்கையை தொலைத்தது தெரியாமல் குழம்பி போய் இருப்பது கண்டு வருத்தமாக இருந்தது.

    பதிலளிநீக்கு