Search This Blog

புதன், 7 நவம்பர், 2012

விநியோகத்தில் குளறுபடிகள்

மத்திய அரசு மண்ணெண்ணை ஒதுக்கீட்டை குறைத்துவிட்டது என்று காரணம் கூறி குறைந்தது 30 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பட்டை நாமம் சாத்தும் போக்கு உத்தேசமாக 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாக இருக்கலாம். அப்போது முதல் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வரும் ஒரே விசயம், 10 லிட்டர் கொடுத்த இடத்தில் 7லிட்டர், 6 லிட்டர் கொடுத்த இடத்தில் 5 லிட்டர், 3 லிட்டர் கொடுத்த இடத்தில் 2 லிட்டர் என்று குறைத்து தகுதியுள்ள எல்லா கார்டு தாரர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் வழங்க வேண்டும் என்பதுதான். (பல கிராமங்களில் எப்போதுமே 2 லிட்டர்தான். அது வேறு விசயம்)

ஆனால் அரசு எந்திரம் எந்திரமாகவே நடந்து கொள்கிறதோ என்று வேதனைப்பட வைக்கும் அளவுக்கு கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருடமாக மண்ணெண்ணைக்காக தொடர்ந்து மக்களை சாலைமறியலில் ஈடுபட வைக்கும் அளவுக்கு விநியோக முறை குளறுபடியாக இருந்தது. இதில் என்னுடைய அனுபவத்தை முதலில் சொல்கிறேன். 1997ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட தலைநகரமாக ஆனது. அப்போதெல்லாம் சம்மந்தப்பட்ட (கிராமங்களைப் போல்) ரேசன் கடைகளிலேயே மண்ணெண்ணை வழங்கினார்கள். பிறகு திருவாரூரை இரண்டு பகுதிகளாக பிரித்து பைபாஸ் ரோட்டில் ஒன்றும், காகிதக்காரத்தெருவில் ஒன்றும் என இரண்டு மண்ணெண்ணை பங்க் அமைக்கப்பட்டது. அந்த ஆண்டு எனக்கு நினைவில்லை. அதன்பிறகு மாவட்ட தலைநகரம் என்ற கணக்கில் 10 லிட்டர் மண்ணெண்ணை வழங்கப்பட்டது. பிறகு எப்படியோ வில்லங்கம் ஆரம்பித்து மாதத்தில் 5 நாட்கள் கூட உருப்படியாக மண்ணெண்ணை வழங்காமல் திருவிழா கூட்டம் போல் மக்களை கூடி அடிதடியில் இறங்க வைத்தார்கள்.

2001-2002 ஆம் ஆண்டு வாக்கில் மண்ணெண்ணை வாங்க போய் வரிசையில் நின்றால் குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஆகும். நான் அப்படி வரிசையில் காத்து நிற்கும் நேரத்தில்தான் பொன்னியின் செல்வன் நாவலின் 5 பாகங்கள் உட்பட பல கதைப்புத்தகங்களை (வெவ்வேறு மாதங்களில்) படித்து முடித்தேன். பிறகு 2004ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 200 கார்டுக்கு மண்ணெண்ணை என்ற சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதுவரை ஒரு நாளில் எவ்வளவு பேர் வருவார்கள் என்று தெரியாமல் எப்படி எந்த பணத்தை கட்டி மண்ணெண்ணை வாங்கி வைக்க முடியும் என்று சாக்குப்போக்கு சொல்லி தப்பித்துவந்தவர்களுக்கு சுழற்சி முறை மிகப்பெரிய ஆப்பு வைத்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கள் கிழமையா?. அன்று உள்ள 200 கார்டில் 10 லிட்டர் எத்தனை கார்டுகளுக்கு, 3 லிட்டர் எத்தனை கார்டுகளுக்கு என்று துல்லியமாக தெரிந்துவிடுவதால் அதிகமாக ஏமாற்றி பொய் கணக்கு எழுத முடியாமல் போயிருக்கும்.

ஆனால் பொதுமக்களுக்கு இந்த முறை மிகப்பெரிய வரப்பிரசாதம். குறைந்தபட்சம் 10 நிமிடம் முதல் 30 நிமிடத்திற்குள் மண்ணெண்ணை கிடைத்து விடும். இப்போது கடந்த ஆண்டு மத்திய அரசின் ஒதுக்கீடு குறைந்ததை காரணம் காட்டி, பேருந்தில் முதலில் ஏறுபவருக்கு உட்கார இடம் என்ற பாணியில் 5ஆயிரம் கார்டுதாரர்களும் நள்ளிரவு 1 மணிக்கே வந்து வரிசையில் நின்று  மண்ணெண்ணைக்காக போராடி அடிதடியுடன் வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இந்த கலவரத்தை அடக்க மாவட்ட நிர்வாகம் போலீசாரை அனுப்பி வைத்ததுடன் விநியோகமுறையை ஒழுங்கமைக்க உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாருக்கு இது போன்ற வேலைகள் எல்லாம் கூடுதல் பணிச்சுமையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மாதிரி பொருட்கள் எல்லாம் எனக்கு மானிய விலையில் தேவையில்லை, நான் உழைத்து சம்பாதித்துக்கொள்கிறேன் என்ற மனநிலைக்கும் என்னால் செல்ல முடியவில்லை. தினசரி இரண்டு முதல் 4 மணி நேரம் மட்டுமே மின்சார விநியோகம் இருப்பதால் என்னால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிப்பதே பெரும்பாடாகிவிருகிறது. இந்த நிலையில் இப்படி பொதுவிநியோகத்திட்டத்தில் கிடைக்கும் பொருளுக்கு கையேந்தி நாள் முழுவதும் காத்துக்கிடந்தாலும் கிடைக்குமா கிடைக்காதா என்று ஜோசியம் பார்க்க வேண்டிய நிலை.

என்னமோ அரசு எந்திரம் எல்லா விசயத்துலயும் அச்சடிச்சு கையெழுத்து போட்ட ரூல்ஸ் படிதான் செயல்படுற மாதிரியும், வாய்மொழி உத்தரவே எந்த அமைச்சரும், அதிகாரியும் போடாதமாதிரி நடந்துகிட்டாங்க. ஆனால் இப்போது நவம்பர் 2012 ஆம் ஆண்டு மண்ணெண்ணை வழங்கும் இடத்தில் 10 லிட்டர் கார்டுதாரர்களுக்கு 7 லிட்டரும், 3 லிட்டர் கார்டுதாரர்களுக்கு 2 லிட்டரும் மட்டுமே வழங்கப்படும் என்று எழுதி போட்டிருக்கிறார்கள். அதன்படிதான் வழங்குகிறார்கள். அப்புறம் என்ன ...............த்துக்கு எல்லா கார்டுதாரர்களையும் ஒரே நாளில் கூடி கும்மி அடிக்க விடுகிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று 6-11-2012 அன்று எனக்கு தெரிந்த ஒருவர் காலையில் ஒன்பதரை மணிக்கு சென்று பகல் 1 மணிக்குதான் வாங்கியிருக்கிறார். பெண்கள் என்றால் கூட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். அதிகாலை 3 மணிக்கு சென்று வரிசையில் நின்றவர்கள் பகல் 11 மணிக்கு வாங்கியிருக்கிறார்கள்.

வழங்கும் அளவைக் குறைத்தபிறகும் பழையபடி சுழற்சி முறையில் ஒவ்வொரு வாரமும் அந்த நாளில் வழங்கப்பட்ட 200 கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்க வேண்டியதுதானே?

அவ்வளவு சீக்கிரம் செஞ்சுடுவாங்களா என்ன? ஏற்கனவே கடந்த ஒரு வருசமா ஒரு மாசத்துல ஆயிரம் பேருக்கு மண்ணெண்ணை பற்றாக்குறையா வந்திருந்தா இவங்க ஆயிரத்து ஐநூறு பேருக்கு கொடுக்காம ஆட்டைய போட்டிருக்க வாய்ப்பு இருக்கு. இப்போ பழையபடி சுழற்சி முறையில கொடுக்க ஆரம்பிச்சதும் வடைபோச்சேன்னு கவலையாத்தான் இருக்கும்.

ஒருவேளை இந்த மாச தில்லுமுல்லு மூலமா கிடைக்குற பணத்துக்கு தீபாவளி பட்ஜெட் போட்டு கடன் வாங்கி செலவழிச்சிட்டாங்களோ என்னவோ? அப்படி எல்லாம் இல்லைன்னு சொன்னா, எல்லா பொதுமக்களையும் ஏன் ஒரே நாள்ல வரவெச்சு அவனவன் வேலையை விட்டுட்டு வந்து நாள் பூராவும் காத்துக்கிடக்க வெக்கிறீங்கன்னு எனக்கு உண்மை தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு.

ஆனா ஒண்ணு சார், ரேசன் பொருள் வாங்குறவங்க, அரசாங்க  அலுவலகங்கள்ல ஏதாவது வேலை முடிய வேண்டியவங்க எல்லாம் வேற வேலை எதுவும் இல்லாம வெட்டி ................னுங்கன்னு ஒரு நினைப்பு அரசுப்பணியாளர்கள்ல பலருக்கு இருக்குறதை யாரும் மறுக்க முடியாது. ரொம்ப கூலா, நாளைக்கு வாங்க பார்த்துக்கலாம்னு  இந்த ரெடிமேட் பதில் சொல்லாத அரசுப்பணியாளர்களை விரல்விட்டு எண்ணிடலாம். இந்த கேவலமான நிலை இப்போதைக்கு மாறும்னு தோணலை.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

அலுவலகத்துக்குள் மழை

ஒரு வில்லங்க சான்று வாங்குறதுக்கு இவ்வளவு வில்லங்கமா? இப்படி நினைச்சு நொந்து போற மாதிரி ரெண்டு நாள்ல கிடைக்கக்கூடிய வில்லங்க சான்றிதழ் வாங்குறதுக்கு 15 நாள் அலையுற மாதிரி ஆயிடுச்சு. அந்த நாட்கள்ல ஒரு வாரம் திருவாரூர்ல கனமழை.

எங்க வீட்டு உத்திரத்துல என் விரலால லேசா குத்துனா சட்டுன்னு உள்ள போகுது. போதி தர்மனுக்கு உள்ள சக்தி நம்மளுக்கு வந்துடுச்சோன்னு நல்லா பார்த்தா மிஸ்டர் கரையான் எல்லா மரத்துலயும் புகுந்து விளையாடி வெச்சிருந்தார். இதுல மழை பெய்ய ஆரம்பிச்ச உடனேயே 6 இடத்துல வீட்டுக்குள் மழை.

உத்திர மரத்துல மட்டுமில்லாம செங்கல்-சேறு கலவையால கட்டப்பட்ட வீடா இருந்ததால சுவற்றிலும் கரையான் ராஜ்ஜியம். சரி... இடிச்சுட்டு கட்டுறதுக்கு ஏற்பாடு செய்யலாம்னு கரையான் கிட்ட சிக்காத வீடு சம்மந்தப்பட்ட பேப்பர்களை எடுத்துட்டு ஒரு பத்திர எழுத்தர்கிட்ட போனேன். அவர் எழுதிக்கொடுத்த மனு ஒர்க்அவுட் ஆகாம ஒரு வாரம் அலைஞ்சு, அதுல தப்பா விவரம் தந்துட்டீங்க. வேற மனுதான் எழுதி புதுசா பணம் கட்டணும்னு சொல்லிட்டாங்க. நான் மறுபடியும் முதல்லேருந்தா அப்படின்னு மலைச்சுப் போய் ரெண்டாவது தடவை பணம் தெண்டம் அழுதது தனிக்கதை.

ரெண்டாவது மனு கொடுத்துட்டு தினமும் அலைஞ்சப்பதான் சார்பதிவு அலுவலகத்துக்குள்ள டேபிள், ரெக்கார்டு இருக்குற அலமாரி, பீரோ எல்லாத்தையும் அங்க இங்க நகர்த்தி பரமபதம் ஆடிகிட்டு இருந்ததைப் பார்த்தேன். காரணம் வேற ஒண்ணும் இல்லை. எங்க வீட்டுல ஆறு இடத்துலதான் மழைத்தண்ணி ஒழுகுதுன்னு எண்ணி சொல்லிட்டேன். இந்த சார்பதிவாளர் அலுவலகத்துல என்னால எத்தனை இடத்துல மழைத்தண்ணீர் லீக்கேஜ் அப்படின்னு கால்குலேட் பண்ண முடியலை.

இந்த லட்சணத்துல கரண்ட் கட் ஆனதும் லைட் எரிய மட்டும்தான் யுபிஎஸ் இருக்கு. பிரிண்டர் கரண்ட் இருக்கும்போது மட்டும்தான் வேலை செய்யும்னு சொல்லி அந்த தாமதத்தையும் காரணமா சொல்லி இன்னும் ரெண்டு நாள் அலைய விட்டாங்க.

அப்போ பத்திரப்பதிவுக்கு வந்திருந்த திருவாளர் பொதுஜனம் ஒருத்தர், இவங்க வாங்குற காசை வெச்சு 25 கிலோ வாட் ஜெனரேட்டர் பத்து வாங்கிப்போடலாம். அதுக்கு ஒரு வருசத்துக்கு டீசல் வாங்கி ஊத்தலாம்னு சொன்னார். அவர் சொன்னது பத்திரப்பதிவு கட்டணமா இல்ல அன்பளிப்பு (?!) பணமான்னு எனக்கு புரியலை.

திருவாரூர் மாவட்டம் உருவாகி 15 வருசம் ஆகுது. திருவாரூர் பகுதி சொத்துக்களோட ஆவணங்களை பாதுகாத்து பதிவு செய்ய வேண்டிய அலுவலகம் முழுவதும் அலுவலகத்திற்குள் மழை. வெளங்கிடும். வேற என்ன சொல்றது. அரசாங்க சொத்துதான் முறையான பராமரிப்பு இல்லாம நாசமா போற மாதிரி பத்திரப்பதிவு ஆவணங்களும் நாசமா போறதுக்கு வாய்ப்பு இருக்கு.

இந்த மாதிரி எவ்வளவோ அரசு அலுவலகங்கள், உயிர் காக்க வேண்டிய மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் இதைவிட கேவலமான நிலையில இருக்கு. நாம பாட்டுக்கு புலம்பிகிட்டே இருக்கவேண்டியதுதான். நீ சார்பதிவாளர் அலுவலகத்துல சீக்கிரம் வேலையை முடிச்சுகிட்டு கட்டிடம் இடிஞ்சு விழறதுக்குள்ள வந்துடுன்னு காமெடி பண்றார் நண்பர் ஒருத்தர்.

அவ்வளவு சீக்கிரம் அந்த கட்டிடம் இடிஞ்சு விழுந்துடும்னு எனக்கு தோணலைன்னேன். அந்த நண்பர் எப்படி சொல்றேன்னு கேட்டார். அரசாங்க அலுவலகத்துக்கு போனா நம்ம வேலை எப்போ முடியும்னு அவ்வளவு சீக்கிரம் தெரியுறது இல்லை. அதே மாதிரி கட்டிடமும் அவ்வளவு சீக்கிரம் இடிஞ்சுடாதுன்னு நினைக்கிறேன் என்றேன்.

இதையயல்லாம் பார்க்கும் போது பில்டிங் ஸ்டிராங்கு... பேஸ்மெண்ட் வீக் கதைதான் நினைவுக்கு வருது. இப்படி மருத்துவமனை, பள்ளிக்கூடம், அரசு அலுவலங்கள் போன்ற ஆயிரமாயிரம் கட்டிடங்கள் சிதிலமடைஞ்சுகிட்டு இருக்கும்போது அதை எல்லாம் சரிசெய்யாம வேற எது எதுலயோ கவனம் செலுத்தி அழகுபடுத்துறாங்க-----------------இதுல குறிப்பா யார் பேரையும் நான் சொல்லலீங்க.

புதன், 31 அக்டோபர், 2012

அரசு முட்டை விழுந்தால் அம்மிக்கல்லே உடையும்

அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுஜனம் ஒருவன் மீது குற்றம் சுமத்த  வேண்டும் என்றாலும் ஆயிரம் வழி தென்படும். அதே சமயம் கொடூரமான குற்றம் செய்தவனை காப்பாற்ற வேண்டும் என்றாலும் ஆயிரம் என்ன பத்தாயிரம் விதிகளை மேற்கோள் காட்டுவார்கள் என்று நண்பர் சொல்வார். இப்போது நாட்டு நடப்பை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

50 சதுரடி அளவு இடத்தில் ஒருவன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பெட்டிக்கடைதான் வைத்திருந்தான். ஆனால் அந்தக்கடையால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு 5ஆயிரம் வகையான தொல்லை. அதனால் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமித்து இருப்பதை அகற்ற வேண்டும் என்று நியாயமாக உரிய இடங்களில் புகார் கொடுத்தோம். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்களை படுத்திய பாடு இருக்கிறதே...ஒரு கட்டத்தில் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வளவும் எதற்காக. எல்லாம் அந்த கடைக்காரன் கொடுத்த ஓசி சோப்பு, பவுடருக்காக.

இவ்வளவுக்கும் நாங்கள் ஒரு வார்த்தை அந்த கடைக்காரனையோ, அவனது குடும்பத்தையோ எதிர்த்துப் பேசவில்லை. அப்போதே அந்த கதி. இதனால் சாமானியர்கள் அறிய வேண்டிய நீதி என்னவென்றால் பணமும், புகழும் இருப்பவர்கள் உங்களை ஆயிரம் மடங்கு கேவலமாக பேசினாலும் நீங்கள் பொத்திக்கொண்டு புகார் மேல் புகாராக கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசினாலும் போச்...அதை வைத்து உங்களை அந்தமான் சிறையில் கூட தள்ளிவிடுவோம் ஜாக்கிரதை. இதுதான் இந்த நாட்டு ஜனநாயகம்.

எங்கள் வீட்டில் குடியிருந்த நபர் எந்த சின்ன விசயத்திலும் சகித்துக்கொள்ளாமல் எங்களிடம் வம்பிழுத்துக்கொண்டே இருந்தார். இடையில் சில நேரங்களில் அவ்வளவு இழிவான வார்த்தைப் பிரயோகமும் இருக்கும். இப்போது ஒரு வார்த்தை அவனுக்கு சரியாக எதிர்த்துப் பேசினாலும் நாளைக்கு பஞ்சாயத்தில் நான் பேசிய ஒரு வார்த்தையை சுற்றித்தான் நியாயம் (?) இருக்கும் என்று நான் நன்கு உணர்ந்திருந்ததால் அவனுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க சொன்ன நபரிடமே பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றேன்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் காலை 6.30 மணிக்கு நான் ஒரு செயலை செய்ததாக சத்தமாக பேசினான் அவன். நான் அமைதியாக அந்த நாளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை நான் இருந்த இடத்தை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொன்னேன். பிரச்சனைக்குரியவன் என்னுடைய இந்த வாதத்தை எதிர்கொள்ள முடியாமல், அப்போ என்னை என்ன ..................ன்னு நினைச்சியா என்று ஒரு வார்த்தை கோபத்தில் விட்டான். மத்தியஸ்தம் பேசிய நபர் அவனைப்பிடித்துக்கொண்டார். யோவ்...உன் அக்கா இங்க எதிர்ல இருக்காங்க. இந்த நேரத்துல இப்படி ஒரு இழிவான வார்த்தையால திட்டுற. யாரும் இல்லாதப்ப நீ ரொம்ப கேவலமாத்தான் பேசியிருப்ப. மரியாதையா 3 மாசத்துக்குள்ள வீட்டை காலி செஞ்சுக்குறதுதான் நல்லது என்று பிரச்சனையை முடித்து விட்டார்.

இவ்வளவுக்கும் அந்தஅளவுக்கு எங்கள் வீட்டில் குடியிருந்தவன் பொருளாதாரரீதியாக பெரிய ஆள் இல்லை. ஒரு மளிகைக்கடையில் தினக்கூலி வேலை பார்த்தவன். இதுக்கே இந்த கதி என்றால் பிரபலம், பணம் உள்ளவன் என்றால் என்ன ஆகியிருக்கும் என் கதி?

இவ்வளவு சுற்றி வளைத்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், பிரபலங்கள் நாக்கை அடக்குகிறார்களோ இல்லையோ, சாமானியர்கள் எல்லாம் நாவை காத்தே ஆக வேண்டும். ஏனென்றால் அதிகார இயந்திரம் பிரபலங்கள் பின்னால் மட்டுமே வாலை ஆட்டும். அதையும் மீறி பொதுஜனம் பின்னால் வாலை ஆட்ட வைக்க வேண்டும் என்றால் நம் மீது ஒரு குற்றச்சாட்டு கூட இருக்க கூடாது. பிரபலம் ஆயிரம் தப்பு செய்தாலும் அப்படி இருப்பது சகஜம் என்று ஊதி விட்டு அடுத்த வேலை பார்க்கும் அதிகார வர்க்கம், பொது ஜனம் ஒரே ஒரு வார்த்தையை ஆத்திரத்தில் ரிலீஸ் செய்தால் கூட அதை வைத்து நம்மை குழி தோண்டி புதைக்க தயாராக இருக்கும்போது நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*****************************
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

இந்த தமிழ் ஆண்டு (நந்தன வருடம்) பிறந்த போது என் நண்பர் ஒருவர் இது அசுரகுரு சுக்ரனின் ஆதிக்கத்தில் பிறந்த ஆண்டு. அசுரர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கும். நாட்டு நடப்பை பார்த்து யார் அசுரர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதற்கு விளக்கம் சொல்ல எனக்கு தெரியாது. எங்கேயுமே வாயை அடக்கி கவனமா இருந்துக்க. ஏப்ரல் 2014 வரை இந்த நிலை தீவிரமா இருக்கும் என்றார். அதை நான் அப்போது நம்பவில்லை. இப்போது சூழ்நிலையைப் பார்த்தால் அவர் சொன்னது உண்மைதானோ என்று என் மனதில் சிறு சலனம் தோன்றுகிறது.

ஏங்க நான் சரியாத்தான் பேசியிருக்கேனா? இந்த கட்டுரையில கேஸ் போட எதுவும் இல்லையே?