Search This Blog

புதன், 31 அக்டோபர், 2012

அரசு முட்டை விழுந்தால் அம்மிக்கல்லே உடையும்

அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுஜனம் ஒருவன் மீது குற்றம் சுமத்த  வேண்டும் என்றாலும் ஆயிரம் வழி தென்படும். அதே சமயம் கொடூரமான குற்றம் செய்தவனை காப்பாற்ற வேண்டும் என்றாலும் ஆயிரம் என்ன பத்தாயிரம் விதிகளை மேற்கோள் காட்டுவார்கள் என்று நண்பர் சொல்வார். இப்போது நாட்டு நடப்பை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

50 சதுரடி அளவு இடத்தில் ஒருவன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பெட்டிக்கடைதான் வைத்திருந்தான். ஆனால் அந்தக்கடையால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு 5ஆயிரம் வகையான தொல்லை. அதனால் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமித்து இருப்பதை அகற்ற வேண்டும் என்று நியாயமாக உரிய இடங்களில் புகார் கொடுத்தோம். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்களை படுத்திய பாடு இருக்கிறதே...ஒரு கட்டத்தில் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வளவும் எதற்காக. எல்லாம் அந்த கடைக்காரன் கொடுத்த ஓசி சோப்பு, பவுடருக்காக.

இவ்வளவுக்கும் நாங்கள் ஒரு வார்த்தை அந்த கடைக்காரனையோ, அவனது குடும்பத்தையோ எதிர்த்துப் பேசவில்லை. அப்போதே அந்த கதி. இதனால் சாமானியர்கள் அறிய வேண்டிய நீதி என்னவென்றால் பணமும், புகழும் இருப்பவர்கள் உங்களை ஆயிரம் மடங்கு கேவலமாக பேசினாலும் நீங்கள் பொத்திக்கொண்டு புகார் மேல் புகாராக கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசினாலும் போச்...அதை வைத்து உங்களை அந்தமான் சிறையில் கூட தள்ளிவிடுவோம் ஜாக்கிரதை. இதுதான் இந்த நாட்டு ஜனநாயகம்.

எங்கள் வீட்டில் குடியிருந்த நபர் எந்த சின்ன விசயத்திலும் சகித்துக்கொள்ளாமல் எங்களிடம் வம்பிழுத்துக்கொண்டே இருந்தார். இடையில் சில நேரங்களில் அவ்வளவு இழிவான வார்த்தைப் பிரயோகமும் இருக்கும். இப்போது ஒரு வார்த்தை அவனுக்கு சரியாக எதிர்த்துப் பேசினாலும் நாளைக்கு பஞ்சாயத்தில் நான் பேசிய ஒரு வார்த்தையை சுற்றித்தான் நியாயம் (?) இருக்கும் என்று நான் நன்கு உணர்ந்திருந்ததால் அவனுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க சொன்ன நபரிடமே பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றேன்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் காலை 6.30 மணிக்கு நான் ஒரு செயலை செய்ததாக சத்தமாக பேசினான் அவன். நான் அமைதியாக அந்த நாளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை நான் இருந்த இடத்தை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொன்னேன். பிரச்சனைக்குரியவன் என்னுடைய இந்த வாதத்தை எதிர்கொள்ள முடியாமல், அப்போ என்னை என்ன ..................ன்னு நினைச்சியா என்று ஒரு வார்த்தை கோபத்தில் விட்டான். மத்தியஸ்தம் பேசிய நபர் அவனைப்பிடித்துக்கொண்டார். யோவ்...உன் அக்கா இங்க எதிர்ல இருக்காங்க. இந்த நேரத்துல இப்படி ஒரு இழிவான வார்த்தையால திட்டுற. யாரும் இல்லாதப்ப நீ ரொம்ப கேவலமாத்தான் பேசியிருப்ப. மரியாதையா 3 மாசத்துக்குள்ள வீட்டை காலி செஞ்சுக்குறதுதான் நல்லது என்று பிரச்சனையை முடித்து விட்டார்.

இவ்வளவுக்கும் அந்தஅளவுக்கு எங்கள் வீட்டில் குடியிருந்தவன் பொருளாதாரரீதியாக பெரிய ஆள் இல்லை. ஒரு மளிகைக்கடையில் தினக்கூலி வேலை பார்த்தவன். இதுக்கே இந்த கதி என்றால் பிரபலம், பணம் உள்ளவன் என்றால் என்ன ஆகியிருக்கும் என் கதி?

இவ்வளவு சுற்றி வளைத்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், பிரபலங்கள் நாக்கை அடக்குகிறார்களோ இல்லையோ, சாமானியர்கள் எல்லாம் நாவை காத்தே ஆக வேண்டும். ஏனென்றால் அதிகார இயந்திரம் பிரபலங்கள் பின்னால் மட்டுமே வாலை ஆட்டும். அதையும் மீறி பொதுஜனம் பின்னால் வாலை ஆட்ட வைக்க வேண்டும் என்றால் நம் மீது ஒரு குற்றச்சாட்டு கூட இருக்க கூடாது. பிரபலம் ஆயிரம் தப்பு செய்தாலும் அப்படி இருப்பது சகஜம் என்று ஊதி விட்டு அடுத்த வேலை பார்க்கும் அதிகார வர்க்கம், பொது ஜனம் ஒரே ஒரு வார்த்தையை ஆத்திரத்தில் ரிலீஸ் செய்தால் கூட அதை வைத்து நம்மை குழி தோண்டி புதைக்க தயாராக இருக்கும்போது நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*****************************
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

இந்த தமிழ் ஆண்டு (நந்தன வருடம்) பிறந்த போது என் நண்பர் ஒருவர் இது அசுரகுரு சுக்ரனின் ஆதிக்கத்தில் பிறந்த ஆண்டு. அசுரர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கும். நாட்டு நடப்பை பார்த்து யார் அசுரர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதற்கு விளக்கம் சொல்ல எனக்கு தெரியாது. எங்கேயுமே வாயை அடக்கி கவனமா இருந்துக்க. ஏப்ரல் 2014 வரை இந்த நிலை தீவிரமா இருக்கும் என்றார். அதை நான் அப்போது நம்பவில்லை. இப்போது சூழ்நிலையைப் பார்த்தால் அவர் சொன்னது உண்மைதானோ என்று என் மனதில் சிறு சலனம் தோன்றுகிறது.

ஏங்க நான் சரியாத்தான் பேசியிருக்கேனா? இந்த கட்டுரையில கேஸ் போட எதுவும் இல்லையே?

புதன், 24 அக்டோபர், 2012

படிக்காதவங்க எல்லாம் என்னப்பா பண்றது?

அடுத்ததாக அரசு வைக்கப்போகும் ஆப்பு. தனுஷ்-தமன்னா நடித்த படிக்காதவன் படத்தில் பலமுறை அட்டெம்ப்ட் அடித்தும் பள்ளி இறுதி வகுப்பை தாண்ட இயலாத வருத்தத்தில் ஹீரோ இருக்கும்போது அவன் நண்பர்கள் ஒரு ஐடியா கொடுப்பார்கள்.

ஐ.ஏ.எஸ் படித்த பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துவிட்டால் அந்த பெண்ணின் பெயருக்கு பின்னால் கணவனின் பெயரையும் சேர்த்து எழுதி அதற்கு அடுத்ததாக ஐ.ஏ.எஸ் என்று போட்டால் மட்டும்தான் நம் பெயர்களின் பின்னால் டிகிரி வரும். இல்லை என்றால் இந்த ஜென்மத்துக்கு சான்சே இல்லை என்று கூறுவார்கள்.

உள்ளாட்சி துறைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்த பிறகு உண்மையிலேயே திறமையான நிர்வாகத்தால் கிராமங்களை சீர்ப்படுத்திய தாய்க்குலங்களை வெகு விரைவில் எண்ணி முடித்துவிடலாம். ஆனால் அவர்களை கையெழுத்து போட மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அந்த கையொப்பத்தின் கீழ் ரப்பர் ஸ்டாம்ப் வைப்பது முதல் அனைத்து வேலைகளையும் அந்த மக்கள் பிரதிநிதியின் கணவரோ, அப்பாவோ, சகோதரரோ, மகனோதான் செய்கிறார்கள்.

அதிலும் பல பெண்களின் பெயர்களுடன் அவர்களின் கணவர்கள் பெயரையும் சேர்த்துதான் நாளிதழ்களுக்கு செய்தியே கொடுக்கிறார்கள். நான் ஒரு குறிப்பிட்ட நாளிதழுக்கு நிருபர் எழுதி தரும் செய்திகளை ஒப்பந்த அடிப்படையில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் அனுப்பும் பணி செய்து வருகிறேன். அவர் இப்படிப்பட்ட செய்திகளில் மக்கள் பிரதிநிதியின் பெயருக்கு பின்னால் இருக்கும் ஆண் பெயரை தூக்கிவிட்டு அதன் முதல் எழுத்தை மட்டும் இன்ஷியலாக போட்டுவிடுவார்.

முதல் முறை இப்படி செய்யும்போது அவரிடம் நான் காரணம் கேட்டேன். "அவங்க பேரை கெஜட்ல இப்படி மாத்திக்கட்டும். அப்புறம் நான் அதே மாதிரி செய்தியில எழுதி தர்றேன். இப்போ நான் எழுதி தர்ற பேர்தான் அவங்க போட்டியிட்ட வாக்குச்சாவடி நோட்டீஸ் போர்டுல இருந்துருக்கும்." என்பார்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலயும் ஒரு பெண் இருப்பாள்னு சொல்லுவாங்க. அதே மாதிரி இப்படி ஒரு முக்கிய பொறுப்புல இருக்குற பொண்ணு பின்னால ஒத்தாசையா இருந்துட்டு போனா யாருங்க தடுக்கப்போறா? ஆனா பல ஊர்கள்ல ஓட்டு கேட்டப்பவும் நன்றி சொல்றப்பவும்தான் அந்த ஊர் மக்கள் தங்கள் மக்கள் பிரதிநிதியை பார்த்திருப்பாங்க. மத்த எல்லா நேரமும் அந்த பெண்ணோட புருஷன்தான் எல்லா அலப்பறையும் கொடுத்துகிட்டு திரியுவாரு.

அது எப்படி சார்...ஒரு டீச்சர், கலெக்டர், காவல்துறை அதிகாரி போன்ற பணிகள்ல எல்லாம் அந்த அம்மாக்களோட கணவர்கள் நேரடியா களமிறங்குறதுல்ல. மக்கள் தேர்ந்தெடுக்கும் பதவியில் இருக்கும் பெண்களை மட்டும் ஒரு வேலையும் செய்ய விடாம இவய்ங்க முந்திரிகொட்டையாட்டம் வந்துடுறாங்க?

இன்னைக்கு ஒரு பேப்பரோட முதல் பக்கத்துல செய்தி படிச்சேன். இப்படி பதவியில இருக்குற பெண் தலைவர்கள், உறுப்பினர்களோட கணவர் உள்ளிட்ட நிழல் தலைவர்கள் ஆட்டம் போட்டா பதவி க்ளோஸ் ஆகுற மாதிரி சட்டத்திருத்தம் வரும் சட்டசபை கூட்டத்தொடர்லேயே மசோதாவா தாக்கலாக வாய்ப்பு இருக்குன்னு தெரிய வருது. பொருத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆயுத பூஜை தேவையா?

இப்படி சில தரப்பினர் கேள்வி எழுப்பி ஆயுத பூஜை தொடர்பான புராணக்கதைகளை கடுமையான சொற்களால் சாடுகின்றார்கள். நான் அந்த விசயத்துக்குள் செல்ல விரும்பவில்லை. ஆயுதபூஜை, பொங்கல் போன்ற பண்டிகை கொண்டாட்டங்கள் இல்லை என்றால் நம் வீடும், தொழிலகமும் உலகமகா குப்பைமேடாகத்தான் இருக்கும்.

இந்த மாதிரி பண்டிகை எல்லாம் தேவையில்லை. நான் வீட்டையும், தொழிலகத்தையும் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு வருடமும் மிகச் சுத்தமாக சீரமைத்து வைத்துக்கொள்வேன் என்று உறுதி கூறுங்கள் பார்க்கலாம். நிச்சயமாக முடியாது.

இந்து மதம் தவிர்த்த மாற்று மதத்தினர் கூட பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜைக்கு வீடு, கடைகளை சுத்தம் செய்யவில்லை என்றாலும் அவர்கள் மத பண்டிகையின் போது இடத்தை புதுப்பொலிவுடன் ஜொலிக்கச்செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி எல்லாம் இல்லாவிட்டாலும் அவர்கள் வீட்டில் ஏதாவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சியின் போது வீட்டை சுத்தம் செய்து புது வர்ணம் அடிப்பார்கள்.

வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள், பொது பண்டிகைகள் இது போன்று எதுவுமே இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். உப்புசப்பில்லாத வாழ்க்கையாகத்தான் அது இருக்கும். ஆனால் எந்த பண்டிகை கொண்டாட்டத்தையும் ஒரு அளவுடன் வைத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 500 ரூபாய் வியாபாரம் நடக்கும் கடையில் 200 ரூபாய் செலவில் கொண்டாட்டம் என்றால் அது ஓ.கே. ஆனால் கடன் வாங்கி 2000 ரூபாய் செலவு செய்வது என்பது ரொம்பவே ஓவர். இந்த விசயத்தில்தான் பலர் சறுக்கி விடுகிறார்கள்.

இது போன்ற கொண்டாட்டம் தேவைதான். ஆனால் அவை நம்விரலை வீங்கச்செய்யாத அளவில் இருக்க வேண்டும். இதுதான் என் கருத்து.