Search This Blog

புதன், 16 பிப்ரவரி, 2011

என்னதான்யா நடக்குது இங்க?...

சமீப காலமாக நடிகர் விஜய் படங்களில் பேசும் பஞ்ச் டயலாக்குகள் அவரையே பஞ்சராக்கும் அளவுக்கு படங்களை கவிழ்த்து விட்டாலும் அவரது  பல படங்களில் பஞ்ச் டயலாக் ரசிகர்களின் ரத்த ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தது உண்மைதான்.

வாழ்க்கை ஒரு வட்டம். இதன் சுழற்சியில் கீழே இருப்பவன் மேலே போவதும் மேலே இருப்பவன் கீழே போவதும் தவிர்க்க முடியாது. (ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்குறவன் ஜெயிப்பான்- இது பல தோல்விகளுப்பின்பு விஜய்க்கு பெரிய ஹிட் கொடுத்த திருமலை படத்தில் வரும் வசனம்.)

இந்த டயலாக்குல இருக்குற உண்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். கிரிக்கெட்ல அத்தனை பேருக்கும் ஆப்பு வெச்சுகிட்டு இருந்த ஆஸ்திரேலியாவுக்கு இப்போ கஷ்ட காலம் அடிக்கடி எட்டிப் பார்க்குது. உலககோப்பை பயிற்சியின் முதல் ஆட்டத்துல இந்திய அணி முதல் ஆப்பை ஆஸ்திரேலியாவுக்கு வெச்சாச்சு. (உபயம்:ஸ்பின்னர்கள்.) அதே வேகத்துல தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த அடி கொடுத்துட்டாங்க.

ஊரையே அடக்கி ஆள்ற தாதா படத்தின் இறுதி காட்சியில ஹீரோகிட்ட அடி வாங்கும்போது ஊர் மக்கள் கூடி நின்னு சந்தோஷமா வேடிக்கை பார்ப்பாங்க. இப்போ ஆஸ்திரேலியா அடி வாங்கும்போதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மன நிலையிலதான் இருக்காங்கன்னு தோணுது. (ஆஸ்திரேலியா தோற்கணும்னு பயபுள்ளைக யாகம் வளர்க்குறாங்களாம்.)

இரண்டாவது பயிற்சி ஆட்டத்துல இந்தியா நியூசிலாந்துக்கு எதிரா படபடன்னு 360ரன் அடிச்சுட்டாங்க. முன்னால எல்லாம் நியூசிலாந்துக்கு ஒரு கெட்ட பழக்கம். 150ரன்னுக்கு 5 விக்கெட் விழுந்தாலும் அதுக்கப்புறம் விக்கெட்டே விழாம 320 ரன் அடிப்பாங்க. அப்படி எதாவது நடக்குமான்னு பார்த்தேன். ஒண்ணும் நடக்கலை.

நம்ம பசங்களோட ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பினிஷிங் எப்படியோ?


ஆட்டம் 50 ஓவரும் பரபரப்பா இருந்தாதான் பவுலர் பந்துல எச்சி தடவுறதுக்குள்ள எட்டு  விளம்பரம் போட முடியும்னு ரன் குவிக்கிறது மாதிரி பிட்ச் தயார் பண்ணியிருக்காங்களாம்.

அதனால டாஸ் விண் பண்ணின உடனே பனி வரும், புயல் வரும்னு யோசிச்சு முதல் பேட்டிங் எடுக்குறது பெருசு இல்லை.அதுல ஏழு ரன்ரேட்ல அடிச்சு சாத்துனாதான் பொழைக்க முடியும். பார்ப்போம் திரும்பப்போறது 1983 வரலாறா? 2003ம் வருஷம் ஆஸ்திரேலியா நமக்கு வெச்ச ஆப்பான்னு.

பட உதவி:தினமலர் இணையதளம்

வண்டி மூவ் ஆக மாட்டெங்குதே...






2010 அக்டோபர்ல இருந்து வில் போன்னு சொல்ற கிராமத்து வயர்லெஸ் போன் மூலமா இண்டர்நெட் கனெக்ஷன் வாங்கியிருந்தேன். ஒரு டேப் திறந்து பிளாக்ல என்ட்ரி  போடுறப்ப இன்னொரு டேப்ல வேறொரு இணைய தளத்தை ஓப்பன் பண்ணி ரெப்ரஷ் கொடுத்துகிட்டே இருந்தாதான் இணைய இணைப்பு துண்டிக்கப்படாம இருக்கும். இந்த இம்சையில இருந்து எப்படி வெளிய வர்றதுன்னு புரியல. லேண்ட்லைன் இணைப்பு வாங்கி அன்லிமிட்டெட் பிளான் இணைய இணைப்பு கொடுக்க ஆசைதான். ஆனா அந்த போனை பிக்ஸ் பண்ண வர்ற லைன்மேனுக்கு முதல் தடவை காசு கொடுக்குறது கூட பரவாயில்லை. ஆனா அடிக்கடி லைன் ரிப்பேராகும். அவங்களுக்கு அப்பப்போ காசு கொடுக்குறதுக்கு ஊழல் வாதிகளோட பினாமியா இருந்தாதான் முடியும்னு தயங்கினேன்.

இந்த நேரத்துலதான் 3G டேட்டா கார்டு விற்பனைக்கு வந்தது. வாங்கி ஒரு மாசம் சரி ஸ்பீடு. அப்புறம் ஒரு மாசம் அட்டகாசம் பட காமெடிதான்.
ஆட்டோ ஸ்டார்ட் ஆகுது. கியர் விழுகுது. ஆனா வண்டி மூவ் ஆக மாட்டெங்குதுன்னு கருணாஸ் புலம்புவாரே. அப்படி ஆயிடுச்சு என் நிலமை.

இணைய இணைப்பு கனெக்ட் ஆகும். GMail மட்டும் வெல்கம் ஸ்கிரீன் மட்டும் ஓப்பன் ஆகும். பாஸ்வேர்ட் கொடுத்த பிறகு பிராஸசசிங் ஆகிகிட்டே இருக்கும்.

பல பேர்கிட்ட கேட்டும் சரியான விடை கிடைக்கலை.

அப்புறம் திருச்சி பிஎஸ் என் எல் அலுவலக ஊழியர் ஒருத்தர் நெட்ஒர்க் செலக்ஷன்ல ஒரு மாற்றம் செய்ய சொன்னார். ஆட்டோமேடிக் மோடுல இல்லாம மேனுவலா வெச்சு UMTS/HSDPA வை டிக் செய்யணும். GPRS மோடுல இருந்தா மொபைல்லதான் ஒர்க் ஆகும். கம்ப்யூட்டர்ல இணைய இணைப்பு ஓப்பன் ஆகாதுன்னார்.

ஆக மொத்தத்துல அந்த மாச டேட்டா எனக்கு டாட்டா காட்டிட்டு பயன்படாமலேயே போயிடுச்சு. கிட்டத்தட்ட அறுநூறு ரூபா வேஸ்ட்.

போனா போகட்டும்னு இந்த மாசம் அன்லிமிட்டெட் பிளான்ல பணம் கட்டினேன். ஒரு MBக்கு ஒரு ரூபா வழிச்சுகிட்டு போனப்ப இருந்த வேகம் இப்போ சுத்தமா அவுட். ரெண்டு மூணு இணைய தளத்தை திறந்து வேலை பார்க்குற நேரத்துக்குள்ள ஹேங்க் ஆயிடுது. அப்புறம் பிரௌசரையும் மோடத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு மறுபடியும் முதல்லேர்ந்து தொடங்க வேண்டியிருக்கு.

அன்லிமிட்டெட் பிளான் அப்படின்னா வேகம் குறையுறது இயல்புதான். ஆனா அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதடவை மோடத்தை நிறுத்தி நிறுத்தி ரீஓப்பன் பண்ற மாதிரி இருக்குறது எந்த ஊர் நியாயம்னு தெரியலை.

ஒரு ஜி.பி ரெண்டு ஜி.பின்னு போடுற பிளான்ல எவ்வளவு டேட்டா மீதி இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னா டேட்டா கார்டுல இருந்து சிம் கார்டை கழட்டி ஒரு போன்ல போட்டு வாய்ஸ் மெசேஜ் மூலமா கண்டு பிடிக்க வேண்டியிருக்கு. இதுல என்ன சிக்கல்னா அந்த மாசத்துக்குள்ள இலவச டேட்டா காலியாயிட்டா மெயின் பேலன்ஸ் ல இருக்குற தொகை ஒரு எம்.பிக்கு ஒரு ரூபாய்னு புடுங்கிகிட்டு போயிடுது.

இந்த உபயோகம் எல்லாம் எளிமையாக இன்னும் எவ்வளவு நாள் ஆகும்னு தெரியலையே.

அன்லிமிட்டெட் பிளானா இருக்குறதாலதான் அஞ்சு நிமிஷத்துல ஹேங்க் ஆயிடுதா இல்ல வேற காரணமான்னு எனக்கு தெரியல. உங்கள்ல யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. புண்ணியமா போகும்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதல் என்பது...

தமிழ் சினிமாவில் காதலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மோசமாக அடித்து துவைத்து பிழிந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் இப்போது வரும் படங்களில் வரும் காதல் காட்சிகள் பெரும்பாலும் அபத்தமாகவே இருக்கின்றன.

2000வது ஆண்டுக்கு முன்பு வரை படங்களில் வரும் காதல் காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இப்போது வித்தியாசம் என்ற பெயரில் அபத்தமாகத்தான் எதையாவது செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. என் வயது முப்பதை தொடப்போவது கூட  இதற்கு காரணமாக இருக்கலாம்.

அது போகட்டும். சென்ற ஆண்டு யூத்ஃபுல் விகடனில் நான் கண்ட நிஜக்காதல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. நான் கல்லூரியில் படிக்கும்போது சக மாணவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு கனவு தேவதையை மனதில் நினைத்து டூயட் பாடிக்கொண்டிருந்த நேரம், சக மாணவி ஒருத்தி என்னிடம் வந்தாள். "நான் பதினோராம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே ஒருவரை நேசிக்கிறேன். இது சரியா, நான் அவரை நம்பி கல்யாணம் பண்ணிக்கலாமா என்று அவள் கேட்கும் அளவுக்கு நான் பொறுப்பான ஆளாக தெரிந்திருக்கிறேன்.(நான் ரொம்ப நல்லவனாக்கும் அப்படின்னு பில்டப் கொடுக்க விரும்பலை. டீனேஜ் வயதில் எல்லோரையும் போல் இளம் பெண்களைப் பார்க்கும்போது மனதில் ஈர்ப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை முழு நேரம் படிப்பு பகுதி நேரம் என்ற அளவில் ஆகிவிட்டது.வருமானத்தை தேடி ஓடினேன்...ஓடினேன் என்ற அளவில்தான் இன்னமும் இருக்கிறேன்.)

அந்த மாணவி என்னிடம் ஆலோசனை கேட்பதற்கு முக்கிய காரணம், அப்போது என்னுடன் படித்துக்கொண்டிருந்தவர்களில் நான்தான் நன்றாக படிப்பவன் (செய்தி, கதை, கட்டுரை என்று கையில் சிக்கும் எல்லாவற்றையும்) என்பதால்தான்.

அந்த மாணவி வீட்டின் எதிர்ப்பை மீறி உறுதியாக நின்று காதலித்தவனையே திருமணமும் செய்து கொண்டாள். இப்போது ஒரு குழந்தை இருக்கிறது.


இதே போல் வேறு சில காதலர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்த இருவர் காதலித்தார்கள். அந்தப் பெண் தன் காதலனின் ஜாதகத்திற்கு பொருந்தும் வகையில் தனக்கும் ஜாதகம் தயார் செய்து இரு  வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டாள். இருவரும் வேறு வேறு ஜாதி. ஆனால் இருவரின் வீட்டிலும் ஜாதி நம்பிக்கையை காட்டிலும் ஜாதக நம்பிக்கை அதிகமாக இருந்தது இவர்களின் அதிர்ஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெண் தன் காதலனின் சகோதரன் மனைவி கொண்டுவந்ததைக் காட்டிலும் அதிகமான வரதட்சணைதான் வேண்டும் என்று பிறந்த வீட்டிடம்  அடம் பிடித்ததுதான்.


அடுத்த சில காதல் விவகாரங்கள் உறவினர் வீடுகளில் நடந்தது. முன்பெல்லாம் மிக அதிகமாக எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை ஒதுக்கி வைத்திருந்த சம்பவங்கள் எல்லாம் என் கண் எதிரே நடந்திருக்கிறது. ஆனால் இப்போது எல்லாம் அந்த அளவுக்கு எதிர்ப்புகள் இல்லை. அதற்கு முக்கிய காரணம், கணிணிப்புரட்சிதான். இப்போது தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பின்பு ஒரு காலத்தில் பலரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக இளம் வயதில் மிக அதிகமாக சம்பாதிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

அந்த பணம்தான் பல பெற்றோர்களின் காதல் ஏற்பு கொள்கைக்கு காரணமாக இருக்கிறது.

நான் சிறுவனாக இருக்கும்போது, இளம்பெண்கள் பின்னாலேயே சைக்கிளில் செல்லும் இளைஞர்களை மோசமாக திட்டிய ஒருவர் சமீபத்தில் தனது மகளுக்கு அவள் காதலனையே திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

அதற்கு அவர் சொல்லும் காரணம், வளர்ந்த புள்ளை, அவளுக்கு நல்லது கெட்டது தெரியாதா என்ன...இப்படி அவர் பேசக் காரணம் காதலித்த அந்த பெண் சென்னையில் ஒரு கணிணி நிறுவனத்தில் மாத சம்பளமாக அரை லகரத்துக்கு மேல் வாங்குகிறாள்.

பல பெற்றோர்களுக்கு தங்கள் மகனோ, மகளோ தேர்ந்தெடுத்திருப்பது நல்ல வாழ்க்கைத்துணைதானா என்ற அக்கறை அவ்வளவாக கிடையாது. நாம் சொல்பவரை திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் வெளியில் இருப்பவர்களிடம் தன் மகன், மகள் தன்னுடைய பேச்சை மீற மாட்டார்கள் (அடிமைகள்) என்பதை சொல்லிக்கொள்ளும் ஆசை மட்டுமே. இப்போது இந்த மனோபாவம் மாறியிருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பொருளாதாரக்காரணங்கள் பல பெற்றோர்களை வேறு வழியின்றி மாற வைத்திருக்கிறது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

கிட்டத்தட்ட முப்பது வயதாகும் பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரது வருமானத்தை முக்கியமாக கருதும் அவரது பெற்றோர் மகளின் திருமணப்பேச்சை எடுப்பதே இல்லை என்பதை விட கவனமாக தவிர்த்துவருகிறார்கள் என்று சொல்லாம். இப்படிப்பட்டவர்களை நான் இது நாள் வரை கதைகளிலும் சினிமாக்களிலும் மட்டும்தான் அறிந்திருந்தேன். கல்லூரியில் என்னுடன் படித்த மாணவியையே இந்த நிலையில் பார்க்கும்போது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பல சூழ்நிலைகளில் ஒரு சாமானியனாக வெறும் பார்வையாளனாகவே கடந்து செல்லவேண்டியிருக்கிறது.

இந்த இருபத்து ஒன்பது வயது பெண்ணின் கதை இப்படி என்றால் மூன்று தினங்களுக்கு முன்பு 20வயது நிரம்பாத பத்தாம் வகுப்பு கூட படிக்காத பெண் காதலனுடன் தலைமறைவாகிவிட்டாள். தந்தை இறந்து விட்ட நிலையில் அந்தப் பெண்ணின் தாய் மிகக்கடுமையாக உழைத்து மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் காதலுக்கு எதிர்ப்பு வருமோ என்று அஞ்சி இவள் அவனுடன் தலைமறைவாகி விட்டாள்.

தினம் தினம் இப்படி பல சம்பவங்களைப் பார்க்கிறேன். பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் பலரும் எனக்கு நண்பர்களாக இருப்பதால் இது போன்ற பல செய்திகள் என் கவனத்துக்கு வந்து விடுகின்றன.

இதையெல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் காதலா...அடச்சே...என்று துப்பத் தோன்றுகிறது. அப்படி சொன்னால் கார் ஓட்டத்தெரியாதவன் காரைக் கொண்டு போய் மோதிவிட்டு காரைக் குற்றம் சொன்ன கதையாகிவிடும்.

காதல் என்பது காதலர்களுக்கும் சரி, அவர்களது குடும்பத்துக்கும் சரி மன வேதனையை, இழப்பை கொடுக்காமல் இருக்க வேண்டும். பல நேரங்களில் பையனோ/பெண்ணோ சரியான துணையை தேர்வு செய்திருந்தாலும் ஈகோ காரணமாக பகைமை பாராட்டுவது இதில் சேராது.

மொத்தத்தில் காதல் என்பது சரியா தவறா என்று வரையறுத்துக்கூறிவிட என்னால் முடியவில்லை.

இருவரது மனம் ஒத்துப்போவதில் தொடங்கி படிப்பு, வேலை, குடும்ப நிலை என்று பல புறக்காரணிகள்தான் காதலை சரி, தவறு என்று எண்ண வைக்கின்றன.