Search This Blog

வியாழன், 17 டிசம்பர், 2009

தீதும் நன்றும் பிறர் தர வாரா...போட்டோ ஆல்பத்தால் வந்த சிக்கல்.


இதுவும் திருமண ஒளிப்படத்தொகுப்பு தொடர்பான சிக்கல்தான்.

திருமண போட்டோ ஆல்பத்தைப் பார்த்து வெகுண்டெழுந்து ஒரு தம்பதியர் எங்களைத் தேடி வந்தாங்க. நாங்கள் எதையும் தவறாகவெல்லாம் படம் பிடித்துவிடவில்லை. அப்படி எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதில்தான் கவனமாக இருப்போம்.

அது புரியாமல் வந்த அவங்க எங்களைத் திட்டி துவைச்சு காயப் போட்டாங்க.அட...வார்த்தைகளாலதாங்க. நாங்களும் அவங்க பேசி முடிக்கட்டும்னு காத்திருந்தோம். நாங்க ஒண்ணும் புத்தரை பின்பற்றி நடக்குற அளவுக்கு ரொம்ப நல்லவய்ங்கன்னு  தப்பான முடிவுக்கு வந்துடாதீங்க. அடுத்து டிவிடியைக் கொடுக்கும்போது மீதி பணத்தை வாங்கியாகணும்ல...அதனால கொஞ்சம் பொறுத்துக்கடான்னு எங்களுக்கு நாங்களே சமாதானம் சொல்லிகிட்டு இருந்தோம்.

அவங்களோட முக்கியமான சொந்தக்கார பெண்களில் சிலர் நலுங்கு வெக்கிற போட்டோவுல இல்லையாம். அவங்க எல்லாரும் மணமகளோட அம்மா அப்பாவைத் திட்ட, அவங்களோட பாரத்தை எங்க மேல இறக்கிகிட்டு இருந்தாங்க.

நாங்களும் பெருந்தன்மையோட சுமைதாங்கியா மாறிட்டோம். (வேற வழி?)

அந்த திட்டு மழை ஓய்ந்ததும் எங்களோட தன்னிலை விளக்கத்தை (அரசியல் தலைவர்களோட அறிக்கையைப் படிச்சு இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் வருதுங்க) சொன்னோம்.

அதாவது மணமக்களுக்கு வலப் பக்கம் நின்னு நலுங்கு வெக்கிறது மாதிரியான சம்பிரதாயங்களை செய்தால் பிரச்சனையே இல்லை. இவன் என்ன சொல்றது, நாங்க என்ன கேட்குறதுன்னு நீங்க இடப்பக்கமா வந்து நலுங்கு வெச்சா மத்தவங்க எப்படியோ தெரியாது. நாங்க பெரும்பாலும் அந்த நேரத்துல படம் பிடிக்கிறதை தவிர்த்திடுவோம். (அப்ப பிலிம் இல்லாம வெறும் ஃப்ளாஷை வெச்சுதான் பில்டப்பான்னு யாருப்பா தொழில் ரகசியத்தை வெளில சொல்லி பொழப்ப கெடுக்குறது?)

ஏன்னா நீங்க மணமக்களுக்கு இடப்பக்கம் நின்னு நலுங்கு வெக்கிறதை கொஞ்சம் கற்பனை செஞ்சு பார்த்தா தெரியும். உங்க புடவை லேசா ஒதுங்குனா ரொம்ப ஆபாசமாயிடும். உட்கார்ந்து இருக்குறவங்களுக்கு நீங்க குனிஞ்சு பொட்டு வைக்கும்போது இந்த ஏடாகூட கோணம்தான் அமையும். வீடியோ கேமரான்னா ஜிம்மிஜிப் (?!) எஃபெக்ட்ல பில்டப் கொடுத்து ஒரு சுத்து சுத்தி சமாளிச்சுடுவோம்.

மீறி ஏதாவது பதிவாயிட்டா எடிட்டிங்ல தூக்கிடுவோம். ஸ்டில் கேமராவுல இதெல்லாம் முடியாது. அந்த நொடியில பிரச்சனை இல்லாத கோணம் அமைஞ்சா போட்டோ எடுத்துடுவோம். இல்லன்னா அவ்வளவுதான்.

"ஏன் தம்பி...டக்குன்னு ஒழுங்கா நிக்க சொல்லி படம்பிடிக்க வேண்டியதுதானே. இப்படியா போட்டோவுலயே இல்லாம பண்றது?" - அப்படின்னு அந்தம்மா சொன்னதுலேயே சமாதானமாயிட்டாங்கன்னு புரிஞ்சுடுச்சு. (அப்பாடா...பாக்கி பணம் எப்படியும் கிடைச்சுடும்)

"அட... நீங்க வேற...ஏற்கனவே சில போட்டோகிராபர்கள் செய்யுற தப்பால எங்களுக்கெல்லாம் கெட்ட பேர். அவ்வளவு கூட்டத்துல இந்த மாதிரி ஏதாவது

சொல்லிட்டு கேமராவோட நாங்களும் சட்னியாகுறதுக்கா?

நாசூக்கா, அம்மா...கொஞ்சம் இந்தப் பக்கம் வந்து நின்னு பொட்டு வைங்கம்மான்னுதான் சொல்லுவோம். அந்த நேரத்துல நீங்க எங்க பேச்சைக்கேட்டா சீன்ல இருப்பீங்க...இல்லேன்னா இல்லை. அவ்வளவுதான்."அப்படின்னு பேசி சமாதானம் செஞ்சு அனுப்பிட்டோம்.

நாங்க என்ன அரசியல்கூட்டத்துலயா பேசுறோம்?... அர்த்தம் இல்லாம போறதுக்கு... இல்லன்னா ஆசிரியரா...ஏன் எங்க பேச்சைக் கேட்க மாட்டேங்குறீங்க?... நகர்ந்து இந்தப் பக்கம் வாங்கன்னு போட்டோகிராபரோ, வீடியோ கேமராமேனோ சொன்னா கேளுங்கம்மா...

ஆனா ரொம்ப பேர், வீடியோ, போட்டோ எடுக்குறவங்கள கல்யாண மண்டபத்துக்குள்ள அத்துமீறி நுழைஞ்சவங்க மாதிரியே பார்க்குறாங்களே...அது ஏங்க?

வேன் ஓடும்போது இடம் மாறிய ஓட்டுநரும் உதவியாளரும்...அலற வைத்த அரைவேக்காடுகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ கேமராமேனாக இருந்தேன். ஒரு திருமணவிழாவை படம் பிடிக்க வழக்கம்போல் முதல் நாளே சென்றுவிட்டேன். திருவாரூரிலிருந்து கும்பகோணத்தில் மணமகளை அழைக்க மாப்பிள்ளை வீட்டாருடன் வழக்கம்போல்(?) இணைந்துகொள்ள வேண்டியதாயிற்று.

இது வரைக்கும் மட்டுமில்ல...பெண்ணை அழைத்துக் கொண்டு திரும்பி பாதி தூரம் வர்ற வரை எல்லாம் சரியாத்தாங்க இருந்துச்சு. பஞ்சு மூட்டை போல பிதுங்கிக்கொண்டிருந்த வேனில் பாதி பேருக்குமேல் இளம்பெண்கள்தான். வாகன ஓட்டுநரும் உதவியாளரும் இருபத்தைந்து வயதை எட்டியிருப்பது சந்தேகமே. அவனுங்க மனசுக்குள்ள கொசு பறக்குறதுக்கு கேட்கவா வேணும்? (பட்டாம் பூச்சி பறந்ததுன்னு சொல்லலாம்...அந்த ரெண்டு பேரும் பண்ணின வேலைக்கு கொசுன்னு சொல்றதே அதிகம்)

வேனுக்குள்ள இருந்த நீயும் யூத்துதானே... உன் நெஞ்சுக்குள்ள எதுவும் பறக்கலையான்னு நீங்க கேட்குறது புரியுது. நான் அப்ப கேமரா மேல மட்டும்தாங்க கவனம் வெச்சேன்.(நம்புங்கப்பா)

அந்த ஓட்டுநரும் உதவியாளரும் வேன் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் இடம் மாறி அமர்ந்து வாகனத்தை இயக்கினார்கள். அதைக் கண்டதும் எனக்கு ஆத்திரமாக வந்தது.(உண்மையை சொல்லப்போனால் உதறல்னுதான் சொல்லணும்.)

ஆனால் மணமகளின் தோழிகளில் சிலர்,"சூப்பர், சூப்பர்" என்று கத்தி ஓட்டுநரையும் உதவியாளரையும் போற்றிப் புகழ்ந்தார்கள். இதைக் கண்டித்த ஒன்றிரண்டு வயதான பெண்களின் குரல் இளம்பெண்களின் இரைச்சலில் காணாமல் போய் விட்டது.

உடனே அந்த உதவியாளர்," இது சாதாரண சாலையாக இருந்ததால்தான் முப்பது கி.மீ. வேகத்தில் மாறி உட்கார்ந்தோம். அதே சமயம் இது மட்டும் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தால், எண்பது கி.மீ. வேகத்தில் கூட இடம் மாறி உட்கார்ந்து ஓட்டுவோம்." என்று பெருமை பொங்க பேசினான்.

என்னுடைய கோபத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தேன்.உன் கோபம் அவங்க செய்த தப்பை நினைச்சா இல்லன்னா அந்தப் பொண்ணுங்க அவங்களை புகழ்ந்ததுக்கான்னு சந்தேகப்படாதீங்க. மெய்யாலுமே வண்டி

ஓடும்போதே இடம் மாறின அவங்க முட்டாள்தனத்துக்காகதாங்க கோபப்பட்டேன்.

இது போல பல சம்பவங்கள் உண்டு. பஸ்சில் பயணிக்கிறபோது மற்ற பேருந்துகளை முந்திச் செல்ல ஓட்டுநரை ஊக்கப்படுத்தும் பயணிகளைப் பார்த்திருக்கிறேன். சிறிது கவனம் தவறினாலும் மரணம் என்பதையும், வேகம் விவேகமல்ல என்பதையும் உணராமல் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்துவது எவ்வளவு பெரிய விபரீதத்தை விளைவிக்கும் என்பதை ஆர்வக்கோளாறான சிலர் புரிந்துகொள்வது எப்போது?

இதெல்லாம் சரிதான். அந்த அரைவேக்காட்டுக்காரங்களை நீ கண்டிக்க வேண்டியதுதானேன்னுதானே கேட்டீங்க?...வேன்ல நான் ஒரு ஆள் சொன்னா யாருங்க கேட்பா? அதனால மண்டபத்துக்கு வந்ததும் மாப்பிள்ளையோட அப்பாகிட்ட சொல்லி வேன் உரிமையாளரை வேறு ஓட்டுநரை வரவழைத்தோம். அந்த வேன் உரிமையாளர் என்னை விட அதிகமாகவே கொதிப்படைந்து விட்டார்.

ஆனால் எல்லா உரிமையாளர்களும் இப்படி நடந்துகொள்வது சிரமம்தான். பல நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. ஆனால் அந்த சிக்கல்களை எதிர்கொள்ள இரண்டு விஷயங்கள் முக்கியமாக தேவை. முதலாவதாக ஆள் உயிருடன் இருக்க வேண்டும். இரண்டாவதாக வாகனம் முழுதாக இருக்க வேண்டும்.

நாம் புரிந்து கொண்டால் சரி.

இதெல்லாம் நடந்தது 2005ல்

புதன், 16 டிசம்பர், 2009

பயணிகள் கவனிக்கவும்!


நன்றி : சூரிய கதிர் 16-31 டிசம்பர் 2009
சூரிய கதிர் இதழில் வெளிவந்த கட்டுரை  அப்படியே உங்கள் பார்வைக்கு.


நீங்கள் விமானத்தில் பறந்திருக்கிறீர்களா?

'ஆம்' எனில், நிஜமாகவே நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். இந்தியாவின் ஜனத்தொகையில் நூற்றுக்கு ஒன்றிரண்டு பேர்கூட விமானம் ஏறுவதில்லை. பெரும்பான்மை மக்கள் மேலே பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சு விடுவதோடு சரி!

இந்த 'மெஜாரிட்டி' பொதுஜனத்துக்கு விமான அனுபவத்தை சாம்பிள் காட்டுவதற்காக, ஒரு நிஜ ஏரோப்ளேனையே கட்டி இழுத்துவந்திருக்கிறார் ஒருவர். பெயர் பகதூர் சந்த் குப்தா.

ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த குப்தா, இன்ஜினீயரிங் படித்தார். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது.

அவ்வளவுதான், குப்தாவின் கிராமம் மொத்தமும் சந்தோஷத்தில் குதித்தது, 'எங்களையும் ஃப்ளைட் பார்க்கக் கூட்டிக்கிட்டுப் போ' என்று உரிமையோடு கெஞ்சியது.

பரிதாபப்பட்ட குப்தா, அவர்களில் சிலரைமட்டும் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார், 'இவங்கல்லாம் என் கிராமத்திலிருந்து வந்திருக்காங்க, ஏரோப்ளேனைப் பார்க்கணும்ன்னு ஆசைப்படறாங்க' என்றார்.

ம்ஹூம், சான்ஸே இல்லை. வெளியிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்தக் கிராமவாசிகளை விரட்டிவிட்டார்கள். ஏக்கத்தோடு திரும்பிச் சென்ற அவர்களுடைய முகங்களைப் பார்க்கப் பார்க்க, குப்தாவுக்கு மிகவும் ஆதங்கமாக இருந்தது, 'என்னோடசிநேகிதங்க, உறவுக்காரங்க, இந்தியாவோட இதயமான கிராமவாசிங்கல்லாம் வாழ்க்கையில எப்பவும் விமானத்தைப் பார்க்கமுடியாதா? என்ன கொடுமை சரவணன்!'

பல வருடங்கள் கழித்து, டெல்லியில் ஒரு பழைய விமானம் விற்பனைக்கு வந்தது. சட்டென்று அதை ஏலம் கேட்டுச் சகாய விலையில் வாங்கிப் போட்டுவிட்டார்.

உடனடியாக, அந்த விமானம் பார்ட்-பார்ட்டாகப் பிரிக்கப்பட்டது, மொத்தத்தையும் தனித்தனியே பொட்டலம் கட்டித் தன்னுடைய வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார் குப்தா.


நம்மாள்தான் இன்ஜினீயராச்சே, அந்த விமானத்தை மீண்டும் பழையபடி பூட்டினார், சில மாற்றங்கள் செய்தார், பத்திரமாகக் காங்க்ரீட் தூணெல்லாம் அமைத்துத் தன் வீட்டின் பின்பகுதியில் கம்பீரமாக நிறுத்திவிட்டார்.

'குப்தா ஏர்லைன்ஸ்' விமானத்தைக் கிராமவாசிகள் பிரமிப்புடன் பார்த்தார்கள். அதில் ஏறி உட்கார்ந்து வாயைப் பிளந்தார்கள்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த விமானம் எங்கேயும் பறக்காது. எப்போதும் ஒரே இடத்தில்தான் நின்றுகொண்டிருக்கும். ஆனாலும், அன்றாடங்காய்ச்சிகளும் மிடில் க்ளாஸ் மாதவன்களும் ஒரு நிஜ விமானத்துக்குள் நுழைந்து பார்ப்பது சாதாரண விஷயமா? குப்தாவின் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் தங்களுடைய வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதுபோல் மகிழ்ந்து போனார்கள்.

இன்றைக்கும், டெல்லி அருகில் உள்ள துவாரகாவில் அந்தப் பறக்காத விமானத்தை நீங்கள் பார்க்கலாம். இருநூறு ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போய் சில மணி நேரங்களுக்கு 'விமானப் பயண'த்தை அனுபவிக்கலாம். ஏழை, எளியவர்களிடம் காசு வாங்குவதில்லை குப்தா.

நிஜ விமானம் போலவே, இங்கேயும் 'போர்டிங் பாஸ்' வாங்கவேண்டும், இரும்புப் படிகளில் ஏறி மேலே சென்றால், சீருடை அணிந்த விமானப் பணிப்பெண்கள் 'நமஸ்தே' சொல்லி வரவேற்பார்கள். உங்களைக் குஷன் இருக்கையில் உட்காரவைத்து சாக்லெட் கொடுப்பார்கள்.

அதன்பிறகு, விமானத்தில் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மைக்கில் அறிவிக்கிறார்கள். சீட் பெல்ட் அணிவது, ஆபத்து நேரத்தில் ஆக்ஸிஜன் முகமூடிகளைப் பொருத்திக்கொள்வது, தண்ணீரில் மிதப்பதற்கான பாதுகாப்பு உடைகளை அணிவது என்று சகலமும் அக்கறையாகச் சொல்லித்தரப்படுகின்றன.

இதையெல்லாம் அறிவிக்கும் நேரத்தில், உடல் ஆரோக்கியம், குடும்பக் கட்டுப்பாடு, எயிட்ஸைத் தடுப்பது போன்ற பொதுநலச் செய்திகளையும் கலந்து பரிமாறுகிறார் குப்தா. மக்களும் ஆர்வமாகக் கேட்கிறார்கள்.

அடுத்து, சாப்பாட்டு நேரம். நிஜ விமானத்தில் வருவதுபோலவே அட்டைப்பெட்டிச் சாப்பாடு, கூல் டிரிங்ஸ். ஒவ்வொருவரும் தங்களுடைய இருக்கையிலேயே தாற்காலிக மேஜை அமைத்துக்கொண்டு ஜாலியாகச் சாப்பிடுகிறார்கள்.

கடைசியாக, விமானத்திலிருந்து கீழே இறங்குவதற்கு ஒரு சூப்பர் சறுக்குமரம் அமைத்திருக்கிறார்கள். அதில் எல்லோரும் சின்னக் குழந்தைகளைப்போல் ஜம்மென்று சறுக்கிக் கீழே வரவேண்டியதுதான்.

குப்தாவின் விமானம் தரையிலிருந்து கால் இஞ்ச்கூட மேலே எழும்பப்போவதில்லை. ஆனால், அதில் ஏறி, இறங்குகிற மக்களின் முகங்களைப் பார்க்கவேண்டுமே, அப்படி ஒரு சந்தோஷம், த்ரில்!

இந்த கட்டுரையை படித்து முடித்தபோது எனக்கே விமானத்தில் ஏறி இறங்கிய பரவசமான அனுபவம் ஏற்பட்டது. அப்படி என்றால் இதை அனுபவித்த ஏழை எளிய மக்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்?