Search This Blog

விமர்சனங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ரூ.1000.00 பரிசு பெற்ற விமர்சனக்கடிதம் - நன்றி : புதிய தலைமுறை வார இதழ் (19.11.2009)



இந்தியாவில் சாதனைகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் இங்கே பரவியிருக்கும் ஊழல், ஒழுங்கீனம், அலட்சியம் உள்ளிட்ட சில காரணிகள் நமது சாதனைகளின் பலனை முழுமையாக அனைவரையும் அனுபவிக்க விடாமல் செய்துவிடுகின்றன.

முக்கியமாக, லஞ்சத்தை எதிர்பார்த்து மக்களுக்குத் தேவையான ஆவணங்கள், சேவைகள் ஆகியவற்றை கிடைக்க விடாமலோ, தாமதப்படுத்துவதையோ பல அலுவலர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் ஏற்படும் காலதாமதம், விரயங்களுக்கு அஞ்சியே பலரும் லஞ்சம் கொடுத்துவருவது ஊரறிந்த ரகசியம்.

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று அவ்வப்போது பலரும் சொல்கிறார்கள். புதிய தலைமுறையும் இதே அறிவுரையைச் சொன்னது...ஆனால் சொன்னதே தெரியாமல் சொல்லியிருக்கிறது.

நேர்மையாகச் செயல்படும்போது வரும் தடைகளையும், இன்னல்களையும் தகர்க்கச் சிறந்த வழி, தங்கள் நிறுவனத்திலேயே திறமையான வழக்கறிஞர்களை கொண்டு சட்டப்பிரிவை ஏற்படுத்திக்கொள்வதுதான் என சி.கே. ரங்கநாதன் கூறியிருப்பது மிகவும் சிறப்பான யோசனை.

நேரடியாக அறிவுரையைக் கேட்பதை விட அறிவுரையைப் பின்பற்றி சாதித்தவர்களின் அனுபவங்களைப் படிக்கும்போது என்னைப் போன்ற இளைய தலைமுறையின் நம்பிக்கை பல மடங்கு அதிகமாகும்.

- இதுதான் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்ற விமர்சனக்கடிதம்.

நிறுவனம் வைத்திருப்பவர்கள் வழக்கறிஞர்களை  வைத்து சட்டப்பிரிவை ஏற்படுத்திக் கொள்ளலாம். தனி மனிதர்கள், சாதிசான்று, வருமானசான்று பெற முயற்சிக்கும் சாமானியர்கள் எல்லாம் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பலம் என்ன என்று தவறு செய்யும் அதிகாரிகளுக்கு காட்டி விட வேண்டியதுதான். இதைப் பயன்படுத்தும் போது

நாம் கவனமாக இல்லை என்றால் அவ்வளவுதான். இந்த தகவலை வழங்க இத்தனை லட்ச ரூபாய் செலவாகும் என்று நாம் தெறித்து ஓடும்படி செய்துவிடுவார்கள்.



அவர்கள் நம்மை மிரள வைக்காத வகையில் இந்த சட்டத்தைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டால் பிரச்சனையில்லை. கடலில் சிறு மீனாக இருந்தால் பெரியமீன் களுக்கு இரையாக வேண்டியதுதான். அவற்றிடமிருந்து தப்பிக்க திமிங்கிலமாக மாறுவதே சிறந்த வழி.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

கண்ணீர் சிந்த வைத்த கட்டுரை - (நன்றி : தேவதை மாதமிருமுறை இதழ்)


தேவதை டிசம்பர் 1-15, 2009 இதழில் "பிரசவம் ...நடந்தது என்ன? என்ற ஒரு கட்டுரை சேனல் பஃபே பகுதியில் பிரசுரமாகியிருந்தது. நான் ஒரு சில திரைப்படங்கள் பார்த்து கண் கலங்கியது உண்டு. பிறகு திரையரங்கத்தில் திரைப்படம் திரையிடும் வேலை செய்ததுடன் படங்கள் மனதைப் பாதிப்பதும் நின்று போனது.

கண் முன்னால் எங்கள் கல்லூரி மாணவி லாரியில் சிக்கி படுகாயமடைந்த போது கலங்கி இருக்கிறேன். வேறு எந்த நிகழ்வும் கண்ணீரை வரவழைத்தது இல்லை.


2004 ல் ஆழிப்பேரலை வந்தபோது நான் வேலை செய்த தனியார் நிறுவன உரிமையாளரும், பிரபல தொண்டு நிறுவனமும் நாகப்பட்டணத்தில் செய்த நிவாரணப்பணிகளில் ஈடுபட்டபோது கூட கண்ணீர் சிந்த நேரம் இல்லை. சிறு வயதில் இருந்து இப்போது வரை போராட்டங்களே வாழ்க்கையானதாலோ என்னவோ, எந்த சம்பவமும் என்னைப் பரிதாபப்பட வைத்ததுடன் சரி...பல மணி நேரம் மனதைப் பாதித்தது இல்லை.

ஆனால் ஒரு கட்டுரையில் இருந்த சாதாரண எழுத்து என்று நான் நினைத்துப் படித்தது... ஒரு தாயின் வேதனையை அருகில் இருந்து உணர்ந்தது போலவே....இல்லை,இல்லை...நானே அனுபவித்தது போல் ஒரு அதிர்ச்சி.

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்று சொல்வார்கள். இந்த வார்த்தை இதுநாள் வரை என் மனதில் எந்த சலனமும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் என்னைப் பெற்றெடுத்த தாயும் மறுபிறவி எடுத்துதானே உலகில் நடமாடிக்கொண்டிருக்கிறார்...அவருக்கு நன்றி செலுத்த இவ்வுலகில் ஈடாக எதுவுமே இல்லையே...நாம் என்ன செய்தாலும் அது அந்தக் கடனுக்கு வட்டியில் ஒரு பகுதியைக்கூட  செலுத்துவதாக அமையாதே...என்றெல்லாம் சிந்தித்து மனம் முழுவதும் தவிப்புடன் இரண்டு நாட்கள் சரியான தூக்கமே இல்லை.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தாயின் மனம் புண்படாமல் நடந்து கொள்வதுதான் உயர்ந்த விஷயமாக இருக்க முடியும். என்பதை உணர வைத்தது இந்தக் கட்டுரை.

மேலே உள்ள வரிகள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதியது. அதற்காக இது அனைத்தையும் மறுக்கப் போகிறேன் என்று நினைக்காதீர்கள்.


மனத் தெளிவுடன் சிந்தித்துப் பார்த்தேன். உண்ர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கும் எந்த முடிவும் தவறாக முடிவதற்கு வாய்ப்பு அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தாயை மதிக்கிறேன் என்று ரொம்பவும் அதிகமாக உணர்ச்சிவசப்படும் ஆண்கள்தான் அடுத்த தாயான மனைவியை புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள்.

இந்த தவறை ஒருபோதும் செய்யக்கூடாது என்பதை நான் புரிந்துகொண்டேன்.

இருவர் மனதும் புண்படக்கூடாது என்பது ஒவ்வொரு ஆணுக்கும் உள்ள மிகப் பெரிய சவால்தான். இதை விட பெரிய அளவில் பெண்கள் எவ்வளவோ பிரச்ச்னைகளை சந்திக்கிறார்கள். ஆண்கள் இந்த ஒரு சவாலில் வென்றால் குடும்பமே சொர்க்கமாகுமே...

தாய்மையின் பெருமையை உணரச் செய்த தேவதைக்கு நன்றி.

விதி மீறலால் விபத்துக்கள் - என்ன தீர்வு? (ஒளிப்படங்கள் - நன்றி : தினமலர்)


1996 மே மாதம் வெளிவந்த படம் "இந்தியன்". அதில் தகுதியற்ற வாகனத்துக்கு அன்பளிப்பு (?!) பெற்றுக் கொண்டு சான்றிதழ் கொடுத்துவிடுவார்கள். அந்த வாகனம் விபத்தில் சிக்கி நாற்பது குழந்தைகள் பலியாவதாக காட்சி.

இப்படியெல்லாம் நடக்குமா? என்ற பிரமிப்பு விலகாமலேயே நான் அந்த படத்தைப் பார்த்திருக்கிறேன். பிரமிப்புக்கு காரணம்,அப்போது எனக்கு பதினாலு வயது.

இப்போது தொடரும் விபத்துக்களைப் பார்க்கும் போது, தகுதியற்ற வாகனங்களை இயக்குவதில் நாம் பெருமளவு முன்னேறியிருக்கிறோம் என்று மட்டும் புரிந்தது.

அதிலும், பல பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்கள் வெறும் மண் குதிரையாக இருப்பது நமது அச்சத்தினை பல மடங்கு அதிகரிக்க வைக்கிறது. பெயர் சொல்ல விரும்பாத ஒருவர், "சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய பள்ளி வேன் ஒன்றில் டீசல் டேங்க் இல்லாமல், பத்து லிட்டர் மண்ணெண்ணெய் கேன் வைத்து வேனை இயக்கி வந்தார்கள்." என்றார்.

"என்ன சார்...இதையெல்லாம் பிடிக்க மாட்டார்களா? "என்று கேட்டேன்.

"அடப்போங்க தம்பி...நிறைய வண்டியில பிரேக்கே இருக்காது. இதென்ன பிரமாதம். உங்களுக்கு உலக அனுபவம் போதலை" அப்படின்னு சொல்லிட்டு அவர் போயிட்டார். ஆனால் என் மனதில் இந்த மாதிரி விபத்துக்களை எப்படி தவிர்ப்பது என்ற யோசனை.



கண்காணிப்பு, கடுமையான தண்டனை - இவை இரண்டும் இல்லை என்றால் எதையும் தடுக்கவே முடியாது என்பது புரிந்தது.

ஒன்றாம் வகுப்பு பிள்ளைகள் கூட வகுப்பில் ஆசிரியை இருக்கும் வரைதான் சத்தம் போடாமல் இருக்கும். இதுதான் மனித இயல்பு. அப்படி இருக்கும் போது சரியான கண்காணிப்பு இல்லை என்றால் வாகன ஓட்டுநர்கள் மட்டும் எப்படி கட்டுப்பாடாக நடந்துகொள்வார்கள்?


நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியின் கணக்குப் பிரிவில் வேலை செய்தேன். ஒரு நாள் மதியம் என்னுடைய வாகனம் பழுது என்பதால் போகும் வழியில் இறங்கிக் கொள்ளலாம் என்று பள்ளி வேனில் ஏறிச் சென்றேன்.

அந்த வேனில் பாடல் எதுவும் போடாமல் இருந்ததைப் பார்த்ததும் எனக்கு வியப்பு. ஏன் சந்தேகத்தை ஓட்டுநரிடமே கேட்டதற்கு,"பிள்ளைகள் வாகனத்தில் இருக்கும்போது பாடல் போடக்கூடாது. வாகனம் எடுக்கும் முன்பு பள்ளியில் காத்திருக்கும் நேரத்தில் மட்டும் குறைவான சத்தத்தில் கேட்டுக் கொள்ளலாம். இதை மீறினால் என்னிடம் வழியில் பார்த்து சொல்வதற்கு ஆள் இருக்கிறது" என்று பள்ளி நிர்வாகி சொன்னதை தெரிவித்தார்.

இப்படியும் நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் இவர்களின் எண்ணிக்கை இரண்டு விரல்களுக்குள் அடங்கிவிடும். இதுதான் பிரச்சனை.

 விதிகளை மீறி வாகனம் இயக்குவது முழுவதும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. இதில் எந்த சமரசமும் கூடாது. மது, செல்போன், என்று எல்லா ஒழுங்கீனங்களும் சாலைவிதி மீறலின் கீழேயே வந்துவிடும். வாகன ஓட்டுநர்களிடம் மட்டுமே தவறு இல்லை.


டிசம்பர் 3ந் தேதி வேதாரண்யம் பகுதியில் நடந்த விபத்தில் பதினோரு குழந்தைகள் காப்பாற்றப்பட்டதற்கு முக்கிய காரணம், அந்த விபத்தில் உயிரிழந்த ஆசிரியையும், கிளீனரும்தான் என்பது சிலர் கொடுத்த தகவல். ஆனால் கூட்டம் சேர்ந்ததும் கிளீனர் அங்கிருந்து தப்பித்து ஓடியதாகவும் கூறுகிறார்கள்.

ஒரு தப்பு நடந்துவிட்டது...அந்த நேரத்தில் செய்ய வேண்டியது என்ன என்பதை மறந்து இதற்கு காரணம் யார் என்று கருதுகிறார்களோ அவரை நையப் புடைக்கும் போக்கு உணர்ச்சிவசப்பட்ட நேரத்தில் வேண்டுமானால் சரியாகத் தெரியலாம்.

ஆனால் சற்று சிந்தித்துப்பாருங்கள்...கிளீனர் மட்டும் பாதியில் ஓடிப்போகாமல் இருந்திருந்தால் இன்னும் ஐந்து பிள்ளைகளை காப்பாற்றியிருக்கலாமோ என்னவோ?

இந்த விஷயத்தில் கிளீனர் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பு அதற்கு காரணம் இந்த சமூகம்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஓட்டுநர் செல்போனில் பேசிக் கொண்டே வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சாத்தியம் அதிகம். ஆனால் தான் அப்படி செய்வது நிர்வாகத்துக்கு தெரிந்து விடும்...நடவடிக்கை இருக்கும் என்ற சூழ்நிலை இருந்தால் இந்த தவறு நிகழ்ந்திருக்காது.

நிர்வாகம் இவ்வளவு அலட்சியமாக இருக்க காரணம் என்ன?... இப்படி பள்ளி வேன்கள் ஓட்டுபவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம்தான் வழங்கப்படுகிறது. குறைவான பணி நேரத்தை இதற்கு காரணமாக சொல்வார்கள்.

இந்த ஓட்டுநர்களை அலுவலகப் பணிக்கும் பயன்படுத்திக் கொண்டு, கணிசமான ஊதியம் வழங்கி இருந்தால் அவர்கள் ஈடுபாட்டுடன் பணி புரிந்திருப்பார்கள். இதுபோல் பள்ளி - கல்லூரி வாகனம் இயக்குபவர்களுக்கு இது எவ்வளவு முக்கியமான உயிர் காக்கும் பணி என்பதை கவுன்சிலிங் மூலம் புரிய வைப்பதை நிர்வாகங்கள் கட்டாயமாக்க வேண்டும்.


மற்ற தொழிலில் ஒருவர் தவறு செய்தால் அது அவரையும், அவர் குடும்பத்தையும் மட்டுமே பாதிக்கும்.அவர் தன்  தவறுகளையும் திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வாகன ஓட்டுநர்கள் பிழை செய்தால் திருத்தவே வாய்ப்பு இல்லை. அது மட்டுமின்றி, தவறு செய்பவரால் அதற்கு துளியும் சம்மந்தமில்லா அப்பாவி உயிரிழப்பதோடு, எத்தனையோ குடும்பங்களும் பாதிக்கப்படும்.

அதனால் தான் கூறுகிறேன் - கண்காணிப்பு, கடுமையான தண்டனை - இவை இரண்டும் இல்லை என்றால் எதையும் தடுக்கவே முடியாது.

ஒன்றாம் வகுப்பு பிள்ளைகள் கூட வகுப்பில் ஆசிரியை இருக்கும் வரைதான் சத்தம் போடாமல் இருக்கும். இதுதான் மனித இயல்பு. அப்படி இருக்கும் போது சரியான கண்காணிப்பு இல்லை என்றால் வாகன ஓட்டுநர்கள் மட்டும் எப்படி கட்டுப்பாடாக நடந்துகொள்வார்கள்?

பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பான வாகனத்தில் செல்வதை உறுதி செய்யும் பொருட்டு நாம் எவ்வளவுதான் பேசினாலும் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது. அதுதான் பொருளாதாரம். அந்த சிக்கல் இருக்கும் வரை பழைய இரும்புக் கடைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் புத்தம் புது வர்ணப் பூச்சுடன் வலம் வந்து குழந்தைகளை பலி வாங்குவது குறைவது கடினம்.

இதற்கு மேம்போக்கான நடவடிக்கைகள் எதுவும் பலன் தரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. பிறகு என்ன செய்யலாம் என்று கேட்கிறீர்களா?

ஒவ்வொரு குழந்தையும் தன் தாய் தந்தை அழைத்துச் சென்று விடும் தூரத்தில் அரசுப்பள்ளிகள் நிறையவே உண்டு. அவற்றில் தரமான இலவசக் கல்வி சாத்தியமானால் மட்டுமே இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இலவசமாக்க வேண்டியதை எல்லாம் தனியார்மயமாகி மக்களுக்கு தீங்கிழைக்கும் துறைகள் எல்லாம் அரசுமயமாகிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் என்னுடைய எதிர்பார்ப்பை படிக்கும் நீங்கள், "சரியான பைத்தியக்காரன்" என்று சொல்வது என் காதில் விழுகிறது.

நான் இதுக்கெல்லாம் கவலைப்படுறதா இல்லைங்க. ஊதுற சங்கை ஊதிட்டேன். அதுக்கு மேல என்ன செய்ய முடியும்?

(மீண்டும் நன்றி: தினமலருக்கு.-புகைபடங்களைப் பயன்படுத்தியதற்காக.- அவற்றில் லோகோவையும் இணைத்தது  என்னுடைய முயற்சி)

வியாழன், 3 டிசம்பர், 2009

நாடு உருப்புடுற மாதிரி ஐடியா இருக்கா? ஆயிரம் ரூபாய் பரிசு காத்திருக்கு.



சமீப காலமா தமிழ்ல பல பத்திரிகைகள் வெளிவரத்தொடங்கி இருக்கு.ஒவ்வொண்ணுலயும் ஒரு சிறப்பு உண்டு. ஏன்னா, தனித்தன்மை இல்லாம வாசகர்களை கவர முடியாதுன்னு அவங்களுக்கும் நல்லாவே தெரியும்.

அப்படி மாதம் இருமுறை இதழா சூரிய கதிர்னு ஒரு பத்திரிகை நவம்பர் 16,2009 முதல் வெளிவரத்தொடங்கியிருக்கு. விஷயங்களும் கனமாத்தான் இருக்கு. பாலகுமாரன், மதன் - அப்படின்னு பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இதழை அலங்கரிக்கிறதே ஒரு பரிசுதான்.

ஆனா மெகா பரிசுப்போட்டியால் வாசகர்களும், பத்திரிகை விற்பனை உயர்வால் தாங்களும் மட்டும் நன்றாக இருந்தால் போதாது...நாடும் நலம் பெற வேண்டும் என்று நல்லெண்ணத்தில் ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார்கள்.

கல்வி, போக்குவரத்து, பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் என்று எல்லா வகையிலும் நாடு முன்னேற உங்களிடம் அற்புதமான யோசனை இருக்கிறதா?...அதை எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் ஐடியா ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு உண்டு. அதை பிரசுரம் செய்வதோடு நிற்காமல் செயல்வடிவம் கொடுக்கவும் சூரிய கதிர் தயாராக இருப்பதுதான் மற்ற பத்திரிகைகளைவிட தனித்திருக்கும் விஷயம்.

வேறு ஒரு சில போட்டிகளும் உண்டு. எட்டு வாரங்கள் கொண்ட தொடர் போட்டியும் இதில் அடக்கம். இப்போதே பத்திரிகை வாங்கிப் படியுங்கள். ஐடியா போட்டி மற்றும் அதில் இருக்கும் போட்டிகள் அனைத்திலும் கலந்து கொள்ளுங்கள். பரிசுகளை வென்று குடும்பத்துடன் குதூகலமாக இருங்கள்.

ஆம்...குடும்பத்துடன் குதூகலமாக இருக்க ஒரு அற்புத போட்டியையும் அறிவித்திருக்கிறார்கள்.

இப்போதே சூரிய கதிர் மாதம் இருமுறை பத்திரிகையை வாங்க கிளம்பி விட்டீர்களா?

நன்றி : சூரிய கதிர் மாதம் இருமுறை இதழ்.

செவ்வாய், 1 டிசம்பர், 2009

பணத்துடன் குடும்பத்தில் நிம்மதியையும் சம்பாதித்து குழந்தைகளையும் நல்வழிப்படுத்த அற்புத வழி - நாணயம் விகடன் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ்


தமிழக மக்களில் பெரும்பாலானோர் இன்று பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றைப் பற்றியும் பொருளாதார விஷயத்தில் சரியான திசையையும் தெரிந்து வைத்திருப்பதற்கு நாணயம் விகடன் ஒரு முக்கிய தூண்டுகோலாக இருந்து வருகிறது.

இது தனது நான்கு ஆண்டு பயணத்தில் பலரையும் பொருளாதார விஷயத்தில் மேம்பட உதவியதுடன் ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் போது இந்த  சிறப்பிதழில் அற்புதமான மற்றொரு திசையையும் காட்டி இருக்கிறது.


ஆனால் மற்ற வாசகர்கள் இதை எப்படி புரிந்து கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. அதனால்தான் இந்த சிறப்பிதழில் வெளிவந்த ஒரு கட்டுரையைப் பற்றி என் பார்வையில் விமர்சனம் செய்திருக்கிறேன்.

மகளிருக்கு மட்டும் என்ற பகுதியில் உங்கள் கணவருக்கு எப்படி உதவலாம் என்று ஒரு சில யோசனைகளை சொல்லி இருக்கிறார்கள். அதில் உள்ள எட்டு ஐடியாக்களும் அற்புதமானவைதான். பெண்கள் இதைப் பின்பற்றத்தொடங்கினால் மேலும் புதுப்புது யோசனைகள் அருவி போலக் கொட்டும்  என்பது உறுதி.

எதனால் இப்படி சொல்கிறேன் என்றால், எந்த ஒரு விஷயத்திலும், பிரச்சனைகளிலும் பெண்களின் பார்வை வித்தியாசமாகவே இருக்கும். அவர்கள் சொல்லும் தீர்வுகள்  நல்ல பலன்களைத் தர வாய்ப்புக்களும்  அதிகமாகவே உண்டு.

ஆனால் பெரும்பாலானவர்கள் இதைப் பற்றி புரிந்து கொள்ளாமல் பெண்களிடம் உனக்கு என்ன தெரியும்...சும்மா இரு என்று எல்லா பொறுப்புகளையும் தன் தலையிலேயே போட்டுக் கொண்டு அவதிப்படுகிறார்கள். இது பண விஷயத்தில் வெற்றியைக் கொடுத்தாலும் குடும்பத்தைக் குழப்பி விட்டுவிடுகிறது.

இதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு - நடுத்தர குடும்பத்துப் பெண்களில் பலருக்கு கியாஸ் தீர்ந்து போய் விட்டால் புது சிலிண்டரை மாற்றக்கூடத் தெரியாத அளவுக்கு ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதுண்டு.

பெண்களும் கணவரின் வியாபாரம், நிறுவனம், மற்ற குடும்பப் பொறுப்பு ஆகியவற்றில் பங்கு எடுத்துக் கொள்ளாததால் என்னென்ன பிரச்ச்னைகள் வரும் என்று நான் இங்கே எழுதவில்லை.

மாறாக, நாணயம் விகடனில் கூறியுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் (சாம்ர்த்தியம் உள்ளவர்கள் தாங்களாகவே பல விஷயங்களைச் செய்வார்கள்.) குடும்பத்துக்கு எவ்வளவு நன்மைகள் உண்டு என்பதில் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

குறிப்பிட்ட அளவு பணிகளை வீட்டில் உள்ள பெண்களும் பகிர்ந்து கொண்டால் ஆண்களுக்கு மன அழுத்தம் குறையும். வியாபார, நிறுவனங்கள் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களை வெளியில் உள்ளவர்களிடம் கூறுவதைவிட மனைவியிடம் சொல்வது பாதுகாப்பானது. உனக்கு என்ன தெரியும் என்று எரிந்து விழுவதற்கு அவசியம் இருக்காது.


வியாபாரம், நிறுவனம் நடத்துபவர்களாக இல்லாமல் வேலைக்கு சென்று வரும் ஆண்களாக இருக்கும் வீடுகளில் மின்சாரம், தொலைபேசி, வரி,வங்கி போன்ற பணிகளை பெண்களே சென்று முடித்து வந்தால் நெடுந்தொடர்களை பார்க்கும் நேரம் குறையும்.



அப்படியே பார்த்தாலும் அதில் உள்ள கற்பனைக் கதாப்பாத்திரம் போலவே கணவர், மாமியார், நாத்தனார் போன்றவர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு ஒன்றுமில்லாத பிரச்சனைகளை குடும்பம் சிதையும் அளவுக்கு பெரிதாக்க நேரம் இருக்காது. வேலைக்குப் போகும் ஆண்கள் இந்த விஷயங்களுக்காக அலுவலகத்திற்கு தாமதமாகப் போய் அசடு வழிய வேண்டியதில்லை.

வேலைகளை மனைவியும் பகிர்ந்து கொள்வதால் இருவரும் தனிப்பட்ட வகையில் மனம் விட்டுப் பேச நேரம் இருக்கும். இதற்கு நேரம் ஒதுக்காததுதானே பல குடும்பங்களில் பணம் இருந்தும் நிம்மதி இல்லாததற்குக் காரணம். (வேறு ஒரு பெண்ணோ, ஆணோ இவர்கள் இடையில் புகுவதற்கும் வாய்ப்பு இல்லை.) விதி விளக்குகளைப் பற்றி நான் எழுதவில்லை.



இன்னும் ஒரு சில வேலைகளை மகன், மகள் ஆகியோரிடம் கூட பிரித்துக் கொடுக்கலாம். அதுவும் நல்ல பலன் தரும்.

அச்சச்சோ... பிள்ளைகள் படிப்பு என்னாவது என்று அலறுபவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல குடும்பங்களில் படிப்பைத் தவிர வேறு எந்த பொறுப்பும் இல்லாத பிள்ளைகள், கூடா நட்பால் தீய வழிகளில் சென்றுகொண்டிருப்பதை மறுக்க முடியாது. அப்படி போகாமல் நல்ல விஷயங்களையும் நாட்டு நடப்பையும், குடும்ப பொறுப்பையும் அவர்கள் கற்றுக் கொள்வதால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மைதான்.

ஆனால் ஒரு விஷயம். தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என் மேல நம்பிக்கை இல்லையா என்ற வார்த்தைகளுக்கு இடம் கொடுத்தால் பெரும்பாலும் தீமையில் தான் முடியும்.

இருட்டு, கண்காணிப்பின்மை ஆகியவையே ஒருவரை தவறு செய்யத்தூண்டும் காரணிகள். இதை மனதில் கொண்டு பிள்ளைகளிடமும் பொறுப்பைக் கொடுத்தால் வாழ்வு தடுமாற்றமில்லாமல் இருக்கும்.

அந்தக் கட்டுரையைப் படிக்கும் போது என் மனதில் தோன்றிய விஷயங்கள் இவை. நீங்கள் அதைப் படிக்கும் போது வேறு சில யோசனைகள் தோன்றலாம். அதுதான் சரி. ஆறு பொருளாதார வல்லுனர்கள் இருக்கும் இடத்தில் ஏழு கருத்துக்கள் தோன்றும் என்று சொல்வார்கள்.


நம்மைப் போன்ற ஆட்கள் இருந்தால் பத்து பேருக்கு ஐம்பது கோணத்தில் வழி தெரியாவிட்டால் கவுரவம் என்ன ஆவது?

அதனால விசாலமாவே சிந்திங்க...நேர்மையான வழியில குடும்பம் முன்னேற வழியைக் கண்டுபிடிச்சீங்கன்னா சரி.

நன்றி : நாணயம் விகடன்.

திங்கள், 30 நவம்பர், 2009

வீட்டில் தனியாக இருப்பவர்கள் கொலைகாரர்களிடமிருந்தும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் தப்பிப்பது எப்படி?


குங்குமம் 07.12.2009 இதழில் தனிமையாக இருப்பவர்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்யும் வழிகள் குறித்த கட்டுரை வெளியாகி இருக்கிறது.

முன்பெல்லாம் புறநகர்ப்பகுதிகளில்தான் கொள்ளை அடிப்பதும் அந்த நேரத்தில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் ஆகியவரை கொலை செய்வதும் நடந்துகொண்டிருந்தன. இப்போது இந்த வகை குற்றங்கள் நகரின் நெரிசலான பகுதிகளிலும் நடைபெற்று நம்மை எல்லாம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நேரத்தில் இந்த கட்டுரை பிரமாதமான வழிகாட்டியாக வந்திருக்கிறது.

 அதற்காகவே கட்டுரையை வெளியிட்ட குங்குமம் இதழுக்கு முதலில் நன்றியோடு வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம்.

இது போன்ற சம்பவங்களில் கொள்ளையுடன் கொலையும் நடக்க முக்கிய காரணம் என்ன தெரியுமா? இதற்கான திட்டமிடலுக்கு முக்கிய அச்சாணியாக இருப்பது நமக்கு நன்றாக தெரிந்தவர்கள், உறவினர்கள், நம் வீட்டின் பணியாளர்கள்.

எனவே நாம் எந்த நேரத்திலும் யாரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அதற்காக இருபத்துநாலு மணிநேரமும் இசட் பிரிவு பாதுகாப்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வில்லை. நமக்கு சாத்தியமாகக் கூடிய வழிகளைத்தான் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

நம்முடன் இருக்கும் ஒருவர் உண்மையாகவே தவறான திட்டமிடலுடன் இருந்தாலும் அல்லது வெள்ளையான மனதுடன் பழகினாலும்(?!) அவர்கள் தப்பு செய்ய தூண்டுவதை நம்மை அறியாமல் நாம் செய்துவிடுவதுண்டு.

தப்பு செய்ய வரும்போதே மாட்டிக்கொள்வோம் என்ற வகையிலான பாதுகாப்பை தனியாக வீட்டில் இருப்பவர்கள் ஏற்படுத்திக்கொள்வது மிக அவசியம் என்று அதிகம் செலவில்லாத சில கருவிகளை பரிந்துரைக்கிறார்கள்.

இதை நான் படித்துவிட்டேனே என்று சொல்பவர்களுக்கு ஒரு சபாஷ் மற்றும் 'ஓ' ஹோ.

வார இதழில் இதைப் படிக்காதவர்களுக்கு ஒரு சில வரிகள். வேலை, பள்ளி (அ) கல்லூரிப்படிப்பு அதனால் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் போன்றவற்றைப் படிக்கவே நேரம் இல்லை என்று மட்டும் சொல்லாதீர்கள். பலர் நள்ளிரவு வரை அதாவது ஐந்து மணி நேரம் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை (உருப்படியான நிகழ்ச்சி என்றால் சரி) பார்ப்பது உண்டு தானே. அந்த நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது முதலில் திருடுங்கள்.

நிச்சயம் அது உங்கள் வாழ்க்கைக்கு உரிய நல்ல விஷயம் ஒன்றையாவது உங்களிடம் ஒப்படைக்காமல் போகாது. துரோகம் செய்யாத நல்ல நண்பர்களில் முதலிடம் பெறுவது  நல்ல புத்தகம்தான் என்று உறுதியாக சொல்ல முடியும்.

இப்போது வீட்டில் தனியே இருக்கும் முதியவர்கள், பெண்கள் போன்றோரை பல ரூபத்திலும் நெருங்கும் ஆபத்துக்களைக் கண்டறியவும் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்கவும் இருக்கும் சில பாதுகாப்புக் கருவிகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

அவை
  • மேக்னடிக் சென்சார்: வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் பொருத்தலாம். வீட்டுக்குள் யாரேனும் அத்து மீறி நுழைந்தால் அலாரம் அடித்து ஊரைக் கூட்டும்.
  • மோஷன் சென்சார்: வீட்டுக்குள் 2 ஜன்னல்கள், 4 கதவுகளுக்கு சேர்த்துப் பொருத்தக் கூடியது. 6 மீட்டர் தூரம், 90 டிகிரி கோணத்தில் கண்காணிக்கும். அத்து மீறி யாரேனும் நுழைந்தால், அந்த அசைவை வைத்து அலாரம் எழுப்பும்.
  • கிளாஸ் பிரேக் சென்சார்: கண்ணாடி ஜன்னல், கதவுகளில் பொருத்தலாம். கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய யாராவது முயற்சித்தால் இது அலறும்.
  • வீடியோ டோர் போன்: வெளியே காலிங் பெல் பக்கத்தில் கேமராவும், வீட்டினுள் மானிட்டரும் பொருத்தப்படும். வீட்டுக்குள்ளிருந்தபடியே மானிட்டரில் பார்த்துவிட்டு, தெரிந்தவர்களாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கலாம்.
  • சிசிடிவி: பெரிய அலுவலகங்களில் உபயோகிக்கிற இது, இப்போது வீடுகளுக்கும் பயன்படுகிறது.


சில ஆயிரம் ரூபாய் செலவில் சாத்தியமாகக்கூடிய பாதுகாப்புக் கருவிகள்தானாம் இவை.

அந்தக் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் கூட சில கிராமங்களில் ஒருவருக்கும் தெரியாமல் அன்னிய நபர் உள்ளே நுழைய முடியாது.

நகர வாழ்க்கையில் இதற்கெல்லாம் சாத்தியம் குறைவுதான். ஆனால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று உதாரணமாக சென்னை வாலஜா சாலையில் உள்ள நாராயணா அரிஹந்த் ஓஷன் டவர்ஸ்  பற்றிய ஒரு அறிமுகம் குங்குமம் இதழில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது நிச்சயம் மற்றவர்களுக்கு வழிகாட்டிதான் என்பதில் சந்தேகமே இல்லை.

மீண்டும் குங்குமம் இதழுக்கு ஒரு நன்றி.