Search This Blog

செவ்வாய், 8 ஜனவரி, 2013

புத்தக திருவிழா - எனக்கு ஏமாற்றமே

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சி 30ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தாலும் இது பற்றிய செய்திகளை கடந்த 10ஆண்டுகளுக்குள்ளாகத்தான் நான் கவனித்து வருகிறேன்.

வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் கண்காட்சி இந்த ஆண்டு வேறு இடம், ஏற்கனவே அங்கு நடைபெற்ற விழா அரங்கத்தை மாற்றிஅமைத்தல் உள்ளிட்ட காரணங்களால் 2013 ஜனவரி 11 முதல் 23 வரை என்று மாற்றியிருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு மட்டும்தான் நான் புத்தக கண்காட்சிக்கு சென்றிருக்கிறேன். அங்கே நான் புத்தகம் வாங்க செலவிட்ட தொகை வெறும் பார்மாலிட்டியாகத்தான் அமைந்தது. 50 ரூபாய் விலையில் இரண்டு (கிழக்கு பதிப்பகம்) புத்தகங்கள் வாங்கினேன். 10 சதவீத கழிவில் ஒன்றின் அடக்கவிலை 45 ரூபாய் வந்தது.

இதற்கு காரணம், என்னுடைய பொருளாதாரம்தான். காயிதே மில்லத் கல்லூரி எங்கே இருக்கிறது என்று பார்த்தாயிற்று. நான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து சைக்கிளிலேயே போய்விட்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டேன். அதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டுதான் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள பள்ளிக்கு புத்தக கண்காட்சியை மாற்றிவிட்டார்கள்.

நான் தங்கியிருந்த இடத்திற்கும் கண்காட்சி நடந்த இடத்திற்கும் உள்ள தூரத்தை 15 நிமிடங்கள் நடந்தால் கடந்து விடலாம். மேலும் நான் ஒரு வீடு புதுப்பிக்கும் பணியில் மேற்பார்வையாளராக இருந்தேன். அந்த வீட்டுக்கும் கண்காட்சிக்கும் 5 நிமிட நடை தூரம்தான்.

ரொம்ப வசதியா போச்சு. கண்காட்சிக்கு தினமும் போயிட்டு வரலாம்னு நினைச்சேன். அரைநாள் லீவு சொல்லிட்டு கிளம்பினப்போ வேலை நடந்த பிரமாண்டமான வீட்டில் 6 இடத்தில் டாடாஸ்கை டி.டி.ஹெச் இணைப்பு கொடுக்க கம்பெனி ஆள் வந்துட்டாங்க. அதனால அன்றைய புரோகிராம் பணால்.

கையில் வெச்சிருந்த பணத்துக்கு வேற செலவு வந்துட்டு. அடுத்த நாள் என்னோட பேங்க் அக்கவுண்டுல இருந்த 500 ரூபாய் பணத்தை எடுக்கலாம்னு போனேன். காலையில வேலைக்கு கிளம்பின நேரத்துல அபிராமி தியேட்டருக்கு எதிரில் இருந்த ஒரு வங்கி ஏடிஎம் மிசின்ல கார்டை சொருகினேன். மெசின் ரிப்பேர்.

காலையில இருந்து 4 கார்டுக்கு பணம் வந்தா 2 கார்டு உள்ளே போயிடுது. கம்ப்ளைண்ட் எழுதி வெச்சிட்டு போங்கன்னு செக்யூரிட்டி ரொம்ப கூலா சொன்னார். அண்ணா சாலையில உள்ள வங்கி தலைமையிடத்துக்கு வந்து லெட்டர் எழுதி பார்மாலிட்டி எல்லாம் முடிச்சுட்டு வந்தேன். செக் புத்தகம் கிடையாது. அதனால நான் அக்கவுண்ட் வெச்சிருக்குற திருவாரூர் கிளையிலதான் வித்ட்ராயல் சிலிப் மூலம் பணம் எடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க.

புத்தகம் வாங்குற ஆசையே போயிடுச்சு. நண்பர் காண்ட்ராக்ட் எடுத்த கட்டிடத்துலதான் நான் வேலை செய்தேன். அவர் அவசர செலவுக்குதான் பணம் தருவார். சம்பளம் 10 நாளைக்கு ஒரு முறைதான் சேர்த்து கிடைக்கும். ஏற்கனவே வேற செலவுகளுக்காக அவர்கிட்ட வாங்கின கடன் வேற பயமுறுத்துனுச்சு. கூட வேலை செய்த பையன்கிட்ட கடனா 100 ரூபாய்தான் கிடைச்சது. அதை வெச்சு அடுத்த நாள் போய் தள்ளுபடி விலையில ரெண்டு புத்தகங்கள் 90 ரூபாய்க்கு வாங்கினேன்.

அடுத்து ஒரு நாள் என்றாவது ஒரு நாள் வாய்ப்பிருந்தால் வாங்கலாம் என்று நினைத்து ஒரு பட்டியல் தயார் செய்யலாம் என்று சென்றேன். குமுதம் ஸ்டாலில் அப்போதைய ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன் தன் கையெழுத்திட்டு ஒரு நூலை 50 பேருக்கு இலவசமாக தந்தார். (இலவசத்தை திட்டி இப்போ பதிவு எழுதுற நானும் போய் வரிசையில நின்னு அந்த புத்தகத்தை வாங்கிட்டு வந்தேன்.)

அடுத்தடுத்த வருசமெல்லாம் போறதுக்கு வாய்ப்பே இல்லை. சென்னையில இருந்தப்பவே ரெண்டுநாள்தான் கண்காட்சியை பார்க்க போனேன். அதுல ஒரு நாள்தான் புத்தகம் வாங்க முடிஞ்சது.

அதுக்கப்புறம் திருவாரூர் வந்ததுக்கு பிறகும் நிலைமை பெருசா மாறிடலை.

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் ஒரு முறை 1000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்குள் உள்ளூரில் இப்படி புத்தக கண்காட்சியின் போது வாங்கிய புத்தகங்கள் மதிப்பு 7 ஆயிரம் ரூபாய்களுக்கு குறையாது. அது தவிர வார இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ் என்று நான் கடந்த 10 ஆண்டுகளாக செலவிடும் தொகை மாதம் ஒன்றுக்கு சராசரியாக 500 ரூபாய் இருக்கும்.

கண்காட்சியில் நான் வாங்குற புத்தகங்களில் 75 சதவீதம் கணிணி துறையில் என் தொழிலுக்கு உதவி செய்யுறதாத்தான் இருக்கும். 15 சதவீதம் புத்தகங்கள் மலையை புரட்டலாம், கடலை பாட்டிலுக்குள்ள அடைச்சுடலாம்னு அந்த சமயத்துல மாஸ்ல இருக்குற புத்தகங்களா இருக்கும். கொஞ்சம் கொஞ்சம் கதை, கட்டுரை எழுத முயற்சி செய்துகிட்டு இருக்குற நான் எழுத்துக்களுக்காக ஆசைப்பட்டு வாங்கிய புத்தகங்கள் 10 சதவீதம் இருந்தாலே அதிகம்.

தொழில் ஆரம்பிக்கிறதுன்னா குறைந்தது 60 சதவீதம் சொந்தப்பணம் வெச்சு ஆரம்பிச்சாதான் சமாளிக்கலாம்னு சொல்லுவாங்க. ஒரு பைசா கூட சொந்தக்காசு இல்லாம கோடிக்கணக்குல பெருக்குறவங்களோட வித்தை எனக்கு தெரியாது. அதனாலதான் சொந்த பணம் ஒரு ரூபாய் கூட இல்லாம தொழில் ஆரம்பிச்சுட்டு திணறிகிட்டு இருக்கேன்.

பொருளாதார சூழ்நிலை காரணமா நாம விரும்பி படிக்கணும்னு நினைக்குற புத்தகங்களை வாங்க முடியலையேன்னு ஒரு ஆதங்கம் ஒவ்வொரு ஜனவரி மாதம் வந்ததும் என் மனசுல குடியேறிடும். அடுத்த வருசமாவது அதுக்கு தகுதியான பொருளாதார சூழ்நிலை நமக்கு வாய்க்காதான்னு ஒரு ஆர்வம் மனசுக்குள்ள ஏதோ ஒரு ஓரத்துல இருக்கும். அந்த நம்பிக்கையிலதான் வாழ்க்கை ஓடுது.

தொலைக்காட்சி பார்க்க பிடிக்காத எனக்கு இப்போ பெரிய ஆறுதலா இருக்குறது மாவட்ட மைய நூலகம்தான். நிறைய படித்து ஓரளவு பக்குவம் கிடைச்சது அங்கதான். அது தவிர நிறைய புத்தகம் படிச்சதுல தமிழில் இலக்கணப்பிழைகள் மிக மிக மிக அரிதாகவே நான் டைப் செய்யும் போது வரும். இது எனக்கு கூடுதலா வாடிக்கையாளர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கு. சுருக்கமா சொன்னா எனக்கு சோறு  போடுறதுல தமிழுக்கும் முக்கிய பங்கு இருக்கு.

என்ன வருத்தம்னா மாவட்ட மைய நூலகத்துல கடந்த மூணு நாலு வருசமா புது புத்தகம் எதுவும் வாங்குறது இல்லை. சொத்து வரி உள்ளிட்ட வரிகளோட நூலக வரியும் சேர்த்துதான் வசூல் செய்யுறாங்க. அந்த பணம் என்னாச்சுன்னு கேட்டா வாய்மொழியா பல தகவல் வருது.

ஓரளவு அதிக வாசகர்கள் படிக்கக்கூடிய வார இதழ்கள், நாளிதழ்கள் போன்றவற்றில் சிலவற்றை நூலகத்துக்கு வாங்குறதில்லை. அவங்க அரசியல்ல வாசகர்களை பலிகொடுக்குறாங்க. பள்ளிக்கூடத்துலேர்ந்து சுமாரா 200 அடி தூரம் நடந்து திரும்புனா ஒண்ணுக்கு ரெண்டு டாஸ்மாக் கடை இருக்கு. ஆனா மாவட்ட மைய நூலகம் ஊருக்கு ஒதுக்குப்புறத்துல காட்டு பங்களா மாதிரி மேம்பாலத்தை தாண்டி இருக்கு.

தேசிய நெடுஞ்சாலையில வாகனங்கள்கிட்ட தப்பிச்சு இருபது நிமிசம் சைக்கிள்ல போய் அரைமணி நேரம் கூட எதையும் படிக்க முடியுறது இல்லை. எட்டரை மணிக்கு கிளம்பினாதான் திரும்ப 9 மணிக்குள்ள வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு என் தொழிலை கவனிக்க போக முடியும்னு அவதி அவதியா ஓடுவேன்.

இந்த லட்சணத்தில் நூலகம் அமைந்திருக்கும் இடம் இருந்தால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எங்கே வாசிக்கும் பழக்கம் வரப்போகுது?

இதை தனி பதிவா இன்னொரு நாள் போடணும்.

புத்தக கண்காட்சி எனக்கு ஏமாற்றமேன்னு தலைப்பு வெச்சதுக்கு காரணம், இந்த ஆண்டும் என்னால அங்க போக முடியாது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....நான் என்னை சொன்னேன்.

வாய்ப்பிருக்கும் வாசகர்கள் கண்டிப்பாக செல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் புத்தகங்களை நேரடியாக வரவழைப்பது என்றால் புத்தக விலையுடன் கூடுதலாக தபால் செலவும் கேட்பார்கள். அது தவிர எந்த பதிப்பகம், எந்த புத்தகம் என்று பல சிக்கல் இருக்கிறது. ஆனால் இங்கே நாம் வாங்க நேரமும் பணமும்தான் பற்றாக்குறையாக இருக்குமே தவிர புத்தகங்களுக்கு பஞ்சம் இருக்காது.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

தாய் மண்ணே வணக்கம்!

2013ல் என்ன செய்ய வேண்டும்

இந்திய சுதந்திர தின பொன்விழாவின்போது தாய் மண்ணே வணக்கம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாடி மேலும் புகழ்பெற்றது பெரும்பாலானவர்களுக்கு நினைவிருக்கும்.

7.1.2013 தேதியிட்ட குங்குமம் புத்தகத்தில் எழுத்தாளர்/திரைப்பட இயக்குனர் திருவாரூர் பாபு எழுதிய தாய்மண் சிறுகதை பிரசுரமாகியிருக்கிறது.

கதைச்சுருக்கம்:
பெரிய கோடீஸ்வரர் தன் மகளுக்கு குழந்தை இல்லை என்று ஏகப்பட்ட தான தர்மம், கோவில் புனரமைப்பு என்று கொடைவள்ளலாகிக்கொண்டு இருக்கிறார். அவ்வளவும் தாய்மண்ணை ஆட்டையைப் போட்டு (மணல் குவாரி நடத்துகிறேன் என்ற பெயரில் ஆற்றில் மண் எடுத்து நிலமகளின் வயிற்றை சூறையாடி) கொள்ளை அடித்து சேர்த்த பணம்.

குழந்தை இல்லாத மகள் கேட்கிறாள்...தாய் (ஆற்றின்) வயிற்றை சுரண்டுவதை நிறுத்துங்கப்பா. எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கும். (இதற்கு வேறு அர்த்தம் கொடுத்து குதர்க்கமாக பேசுபவர்கள் விலகிக்கொள்ளவும்) நிலமகளின் சாபம்தான் எனக்கு பிள்ளை இல்லாமல் போய்விட்டதோ என்னவோ என்று சொல்கிறாள்.

மெத்தப்படித்த அறிவுஜீவிகள், ஆற்றில் மணல் அள்ளக்கூடாது என்றால் அப்புறம் எப்படி வீடு கட்டுவதாம் என்று கேட்பார்கள்.

1. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் பயன்பாட்டை அதிகரித்தல் (நிலத்தடியில் இருக்கும் கச்சா எண்ணை தீர்ந்து போனால் அவ்வளவுதான். ஆனால் எத்தனாலை கரும்பு சாகுபடி மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் பெருக்கிக்கொள்ளலாம்.)

2. ஆற்றுமணலுக்கு பதில் செயற்கை மணலை உபயோகித்தல். (ப்ளைஆஷ் கற்கள் உபயோகம் இதுபோன்று மாத்தி யோசிப்பதில் மணல் பயன்பாட்டை கணிசமாக குறைக்கலாம்.) மேலும் அனல்மின்நிலையங்களில் உண்டாகும் சாம்பலை இஷ்டத்துக்கு விற்றால் சிமெண்டில் கலந்து வில்லங்கம் செய்துவிடுவார்கள் என்று பயந்தால் அந்த சாம்பலை வைத்து உரிய முறையில் கற்கள் தயாரித்து விற்பனை செய்தால் என்ன குடிமுழுகிப்போய்விடும்?

3. சூரிய ஒளி, காற்றாலை ஆகிய இயற்கை வளங்கள் மூலம் எந்த இடத்தில் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கவ்வளவு மின்சாரத்தை தயாரித்து அருகிலேயே பயன்படுத்திக்கொள்ளுதல்.

தீர்ந்து போகும் வளங்களை அசுர வேகத்தில் சுரண்டி சில அரசியல் வியாதிகளும், சில பணக்கார முதலைகளும், சில அசுரகுண அதிகாரிகளும் கோடீஸ்வரர்களாகிவருகிறார்கள்.

எதிர்காலத்தை நினைத்து நான் அச்சமடைய இவை மட்டுமல்ல காரணம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை முழுவீச்சில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் இயற்கை நம்மை அடிக்கப்போகும் மரண அடியை தாங்க மாட்டோம். அடுத்ததாக குப்பைகளை சேரவிட்டு வியாதிகளை பரப்பும் மையங்களாக்கி வைத்திருப்பதை தவிர்த்து அவற்றில் இருந்து எரிசக்தியை பெற முயற்சிக்க வேண்டும்.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இந்த இரண்டு விசயங்களை திறம்பட செயல்படுத்தினால் எதிர்காலத்தை நினைத்து அச்சப்படத்தேவையில்லை.

ஆனால் கல்வி, மருத்துவம் வியாபாரமாகிவிட்டது. டோல்கேட் வைத்து பயணம் செய்பவர்களை ஒரு ஆள் விடாமல் நிறுத்தி சுரண்டி விடுகிறார்கள். இது தவிர மதுவால் க்ரைம்ரேட் அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை சிலர் ஒப்புக்கொள்ளாமல் (தங்களுக்கு கொள்ளை லாபம் அளிக்கும் (அமுதசுரபி அல்ல) விஷ சுரபி மூலம் கிடைக்கும் வருமானம் போய்விடுமோ என்ற பயத்தில்) மது இல்லை என்றாலும் மக்கள் தப்பு செய்துகொண்டேதான் இருப்பார்கள் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

புதிய ஆண்டிலாவது உலகம் மேம்பட புதிய வழி பிறக்கட்டும். (இப்போது உலகம் வளரவில்லையா என்று சிலர் கேட்கலாம். நான் சென்ற பதிவில் சொன்னது போல் நிழலுக்கு சிமெண்ட், கம்பி வைத்து நிழற்குடை கட்டுவதைக்காட்டிலும் சாலையோரம் மரங்களை நட்டு வளர்த்து பராமரிப்பது மிக அவசியம்)

சனி, 29 டிசம்பர், 2012

டெல்லி துயரம் தொடராமல் இருக்க என்ன செய்யப் போகிறோம்?

பேருந்து நிறுத்தத்துக்கும் மரத்துக்கும் என்ன சம்மந்தம்? ... விடை இந்த பதிவிற்குள் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனில்லாமல் இன்று சிங்கப்பூரில் உயிரிழந்து விட்டார் என்றதும் நீதி கேட்டு கடுமையாக பொதுமக்கள் போராட்டம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று அரசு கவனமுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

தினம் தினம் இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் இந்த ஆவேசம் என்று சிலர் சில ஊடகங்களில் கேள்விகளை எழுப்பினார்கள்.

எல்லா சம்பவங்களையும் பார்த்து மனம் கொதித்துப்போய் இருந்தவர்கள் ஒரேடியாக பொங்கிவிட்டார்கள் என்று சிலரும் சில ஊடகங்களும் கருத்து சொன்னதாக அறிகிறேன். இது உண்மையாக கூட இருக்கலாம்.

இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு தண்டனை தேவைதான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பெண்ணை சக மனுஷியாக பார்க்காமல் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய பொருளாக சில கயவர்கள் நினைத்து இப்படிப்பட்ட கொடூரங்களை அரங்கேற்றச் செய்யும் மனநிலை எவ்வாறு உருவாகிறது. அந்த மனதை எப்படி சரிசெய்யப்போகிறோம் என்பதில்தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதும் கிடைக்காததும் இருக்கிறது.

பலர் பல நூறு காரணங்கள் சொன்னாலும் மதுதான் இது போன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. சிலர், மதுப்பழக்கம் இல்லாதவர்கள் கூட பெண்களையும், குழந்தைகளையும் சிதைக்கும் கொடூர காரியங்களை செய்கிறார்களே என்று கேட்கிறார்கள்.

அதுவும் உண்மைதான். சும்மா இருக்கும் மனம் சாத்தானின் குடியிருப்பு என்று சொல்வார்கள். வேலையில்லாதவன்தான் இப்படியயல்லாம் தவறு செய்கிறானா? நல்ல பணியில் இருப்பவர்கள் இப்படி தவறு செய்யாமலா இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

மனிதனின் மனம் ஓய்வை நாடும்போது அது நல்ல திசையில் திருப்பப்படாமல் வக்கிர திசையை நோக்கி செலுத்தப்படும்போதுதான் இப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கின்றன.

நான் சிறுவனாக இருக்கும்போது பாடப்புத்தகங்கள் தவிர்த்து எனக்கு பொழுதுபோக்க கிடைத்த முக்கிய பொருள் புத்தகங்கள்தான். தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால், ஈசாப் நீதிக்கதைகள், விக்கிரமாதித்தன் என்று பலதரப்பட்ட நல்ல கருத்துக்களை சொல்லும் கதைகளுடன் தினசரி நாளிதழ்கள் கூட சிறுவருக்கான இணைப்புகளை புத்திக்கூர்மையை பலப்படுத்தக்கூடிய, நல்ல எண்ணங்களை விதைக்கக்கூடிய உள்ளடக்கங்களுடன்தான் வெளியிட்டார்கள்.

எனக்கு 25 வயதில் சாத்தியப்பட்ட செல்போன் இன்று 3 வயதுக்குழந்தைக்கு கிடைக்கிறது. அவர்கள் வெளியில் போய் விளையாட வழி இருப்பதில்லை. வீடியோ கேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவில் ரத்தவெறியைத் தூண்டும் கார்ட்டூன், விளையாட்டுக்கள் என்று பலவும் மனித மனத்தை வக்கிரபுத்தியுடன் கொடூரமான திசையை நோக்கி செலுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த போக்கு நல்ல வசதி படைத்த குடும்பங்கள் மற்றும் ஓரளவு நடுத்தர வசதியுடன் கூடிய குடும்பங்களில் வளரக்கூடிய குழந்தைளைப் பற்றி.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத குடும்பங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் சுற்றுப்புறத்தில் சாக்கடை கூட சரியாக இருப்பதில்லை. அவர்கள் படிக்கும் பள்ளியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இருப்பதில்லை. பிறகு அவர்களுக்கு எப்படி நூலக அனுபவம் கிடைக்கும்?

அப்படி வசதி இல்லாதவர்கள் தங்கள் சக்திக்கு மீறி படிக்க வைத்தாலும் அந்த பள்ளிகள் பாடப்புத்தகங்களை துரத்துவதற்கு மட்டுமே பழக்கப்படுகிறார்கள். சகிப்புத்தன்மை, நற்பண்புகள் இது போன்று எந்த ஒரு விசயமும் சில இடங்களில் கட்டாயத்தின்பேரில் அவர்கள் பின்பற்றுகிறார்களே தவிர, கூட்டம் சேர்ந்தால், யாரும் கவனிக்கவில்லை என்று உணர்ந்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி எவ்வளவு கொடூரமான செயல்களையும் கண நேரத்தில் தெரிந்து வேண்டுமென்றோ அல்லது அவர்களை மீறியோ செய்து விடுகிறார்கள்.

பெரும்பாலும் அவர்கள் செய்யும் செயல் தவறு என்று அவர்கள் புத்தி எச்சரித்தாலும், அதை செய்து பார்க்க வேண்டும் என்று அவர்கள் மனதில் குடியிருக்கும் சாத்தான் சொல்வதையே செய்து விடுகிறார்கள்.

இது போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் கடுமையான கண்காணிப்பு அவசியம். எல்.கே.ஜி மாணவர்கள் கூட வகுப்பில் ஆசிரியை இல்லை என்றால் சளசளவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் போது குரங்கு என்று வர்ணிக்கப்படும் மனித மனம் சும்மாவா இருக்கும்?

சில வெளிநாடுகளில் துண்டுக்காகிதத்தை குப்பைத்தொட்டியை விட்டு வெளியில் போட்டால் கூட அடுத்த 5வது நிமிடம் போலீஸ் வீடு தேடி வரும் என்ற சூழ்நிலை இருப்பதால் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கும் நபர், நம் நாட்டில் பத்து வீடுகள் கொண்ட குடியிருப்புக்குள் நுழையும் 4 அடி அகல வாசலின் குறுக்கே யாரும் நுழைய முடியாதபடி அதே நாலடி நீள இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் பழக்கத்துடன் இருப்பதை என்னவென்று சொல்வது?

வெயில் தாங்க முடியவில்லை. போகும் வழியில் ஆங்காங்கே நிழலில் இளைப்பாறிச் செல்லலாம் என்று (காரில் சென்றால் கூட) நினைப்போம். அப்படி நிழல் தருவதற்காக சிமெண்ட், மணல், ஜல்லி கொண்டு நிழற்குடையை கட்டி வைப்போம். தமிழகத்தில் ஏதாவது ஒரு தேசிய நெடுஞ்சாலையில் மே மாதம் கத்திரி வெயிலில் இப்படி ஒரு நிழற்குடையில் அரை மணி நேரம் நீங்கள் ஓய்வெடுப்பதற்கும், குளு குளு என்று இயற்கை காற்றுடன் நிழல் தரும் பெரிய மரத்தடியில் நின்று ஓய்வெடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? (அந்த மரம் தரும் நன்மைகளை பட்டியலிட்டால் மிகப்பெரியதாக நீளும். நமக்கு ஆக்சிஜன், மழை தருவதிலிருந்து கரியமில வாயுவை கிரஹித்துக்கொள்வது வரை எவ்வளவோ நன்மைகள்.)

பேருந்து நிறுத்தமும் கட்டிடங்களும் தேவைதான். நான் இல்லை என்று சொல்ல வில்லை. நம் நாட்டில் டெக்னாலஜி டெவலப்மெண்ட் என்று வெறும் நிழற்குடைகளைத்தான் கட்டிக்கொண்டிருக்கிறோமே தவிர, மரங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போது மனித மனங்களும் இப்படித்தான், ஏதோ ஒரு இயந்திரம் தயாரிக்கும் பொருள் போல ஆகிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் தான் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள். 50 வருசத்துக்கு முன்னால இப்படி எல்லாம் இல்லையா என்று கேட்காதீர்கள். அப்போது குற்றம் செய்பவர்களை விரல் விட்டு எண்ண வேண்டியிருந்தது. இப்போது குற்றம் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

ஒருவன் வேலையை முடித்து விட்டு ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதை விட நல்ல நூல்களை படித்தால் அவன் மனதில் எவ்வளவு மாற்றங்கள் இருக்கும் தெரியுமா?

அதெல்லாம் சரி...நல்ல புத்தகங்கள் எங்கே வருகிறது என்றும் நீங்கள் கேட்கலாம். நிறைய எழுத்துக்களில் நேர்மை இருப்பதில்லை என்பதும் உண்மைதான். நிறைய படிக்கும்போது சரடு விட்டு மக்களை முட்டாளாக்குபவர்களையும் அந்த மாதிரியான எழுத்துக்களையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி புரிந்து கொண்டுவிட்ட மக்கள் தொகை அதிகரித்தால் யாருக்கெல்லாம் ஆபத்து வருமோ அவர்கள் என் மீது எதாவது பொய்ப்புகார் கொடுக்க முயற்சிக்கலாம்.

.............அதனால இத்தோட இந்த பதிவை நிறுத்திக்கிறேன்.