Search This Blog

செவ்வாய், 1 ஜனவரி, 2013

தாய் மண்ணே வணக்கம்!

2013ல் என்ன செய்ய வேண்டும்

இந்திய சுதந்திர தின பொன்விழாவின்போது தாய் மண்ணே வணக்கம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாடி மேலும் புகழ்பெற்றது பெரும்பாலானவர்களுக்கு நினைவிருக்கும்.

7.1.2013 தேதியிட்ட குங்குமம் புத்தகத்தில் எழுத்தாளர்/திரைப்பட இயக்குனர் திருவாரூர் பாபு எழுதிய தாய்மண் சிறுகதை பிரசுரமாகியிருக்கிறது.

கதைச்சுருக்கம்:
பெரிய கோடீஸ்வரர் தன் மகளுக்கு குழந்தை இல்லை என்று ஏகப்பட்ட தான தர்மம், கோவில் புனரமைப்பு என்று கொடைவள்ளலாகிக்கொண்டு இருக்கிறார். அவ்வளவும் தாய்மண்ணை ஆட்டையைப் போட்டு (மணல் குவாரி நடத்துகிறேன் என்ற பெயரில் ஆற்றில் மண் எடுத்து நிலமகளின் வயிற்றை சூறையாடி) கொள்ளை அடித்து சேர்த்த பணம்.

குழந்தை இல்லாத மகள் கேட்கிறாள்...தாய் (ஆற்றின்) வயிற்றை சுரண்டுவதை நிறுத்துங்கப்பா. எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கும். (இதற்கு வேறு அர்த்தம் கொடுத்து குதர்க்கமாக பேசுபவர்கள் விலகிக்கொள்ளவும்) நிலமகளின் சாபம்தான் எனக்கு பிள்ளை இல்லாமல் போய்விட்டதோ என்னவோ என்று சொல்கிறாள்.

மெத்தப்படித்த அறிவுஜீவிகள், ஆற்றில் மணல் அள்ளக்கூடாது என்றால் அப்புறம் எப்படி வீடு கட்டுவதாம் என்று கேட்பார்கள்.

1. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் பயன்பாட்டை அதிகரித்தல் (நிலத்தடியில் இருக்கும் கச்சா எண்ணை தீர்ந்து போனால் அவ்வளவுதான். ஆனால் எத்தனாலை கரும்பு சாகுபடி மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் பெருக்கிக்கொள்ளலாம்.)

2. ஆற்றுமணலுக்கு பதில் செயற்கை மணலை உபயோகித்தல். (ப்ளைஆஷ் கற்கள் உபயோகம் இதுபோன்று மாத்தி யோசிப்பதில் மணல் பயன்பாட்டை கணிசமாக குறைக்கலாம்.) மேலும் அனல்மின்நிலையங்களில் உண்டாகும் சாம்பலை இஷ்டத்துக்கு விற்றால் சிமெண்டில் கலந்து வில்லங்கம் செய்துவிடுவார்கள் என்று பயந்தால் அந்த சாம்பலை வைத்து உரிய முறையில் கற்கள் தயாரித்து விற்பனை செய்தால் என்ன குடிமுழுகிப்போய்விடும்?

3. சூரிய ஒளி, காற்றாலை ஆகிய இயற்கை வளங்கள் மூலம் எந்த இடத்தில் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கவ்வளவு மின்சாரத்தை தயாரித்து அருகிலேயே பயன்படுத்திக்கொள்ளுதல்.

தீர்ந்து போகும் வளங்களை அசுர வேகத்தில் சுரண்டி சில அரசியல் வியாதிகளும், சில பணக்கார முதலைகளும், சில அசுரகுண அதிகாரிகளும் கோடீஸ்வரர்களாகிவருகிறார்கள்.

எதிர்காலத்தை நினைத்து நான் அச்சமடைய இவை மட்டுமல்ல காரணம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை முழுவீச்சில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் இயற்கை நம்மை அடிக்கப்போகும் மரண அடியை தாங்க மாட்டோம். அடுத்ததாக குப்பைகளை சேரவிட்டு வியாதிகளை பரப்பும் மையங்களாக்கி வைத்திருப்பதை தவிர்த்து அவற்றில் இருந்து எரிசக்தியை பெற முயற்சிக்க வேண்டும்.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இந்த இரண்டு விசயங்களை திறம்பட செயல்படுத்தினால் எதிர்காலத்தை நினைத்து அச்சப்படத்தேவையில்லை.

ஆனால் கல்வி, மருத்துவம் வியாபாரமாகிவிட்டது. டோல்கேட் வைத்து பயணம் செய்பவர்களை ஒரு ஆள் விடாமல் நிறுத்தி சுரண்டி விடுகிறார்கள். இது தவிர மதுவால் க்ரைம்ரேட் அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை சிலர் ஒப்புக்கொள்ளாமல் (தங்களுக்கு கொள்ளை லாபம் அளிக்கும் (அமுதசுரபி அல்ல) விஷ சுரபி மூலம் கிடைக்கும் வருமானம் போய்விடுமோ என்ற பயத்தில்) மது இல்லை என்றாலும் மக்கள் தப்பு செய்துகொண்டேதான் இருப்பார்கள் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

புதிய ஆண்டிலாவது உலகம் மேம்பட புதிய வழி பிறக்கட்டும். (இப்போது உலகம் வளரவில்லையா என்று சிலர் கேட்கலாம். நான் சென்ற பதிவில் சொன்னது போல் நிழலுக்கு சிமெண்ட், கம்பி வைத்து நிழற்குடை கட்டுவதைக்காட்டிலும் சாலையோரம் மரங்களை நட்டு வளர்த்து பராமரிப்பது மிக அவசியம்)

சனி, 29 டிசம்பர், 2012

டெல்லி துயரம் தொடராமல் இருக்க என்ன செய்யப் போகிறோம்?

பேருந்து நிறுத்தத்துக்கும் மரத்துக்கும் என்ன சம்மந்தம்? ... விடை இந்த பதிவிற்குள் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனில்லாமல் இன்று சிங்கப்பூரில் உயிரிழந்து விட்டார் என்றதும் நீதி கேட்டு கடுமையாக பொதுமக்கள் போராட்டம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று அரசு கவனமுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

தினம் தினம் இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் இந்த ஆவேசம் என்று சிலர் சில ஊடகங்களில் கேள்விகளை எழுப்பினார்கள்.

எல்லா சம்பவங்களையும் பார்த்து மனம் கொதித்துப்போய் இருந்தவர்கள் ஒரேடியாக பொங்கிவிட்டார்கள் என்று சிலரும் சில ஊடகங்களும் கருத்து சொன்னதாக அறிகிறேன். இது உண்மையாக கூட இருக்கலாம்.

இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு தண்டனை தேவைதான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பெண்ணை சக மனுஷியாக பார்க்காமல் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய பொருளாக சில கயவர்கள் நினைத்து இப்படிப்பட்ட கொடூரங்களை அரங்கேற்றச் செய்யும் மனநிலை எவ்வாறு உருவாகிறது. அந்த மனதை எப்படி சரிசெய்யப்போகிறோம் என்பதில்தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதும் கிடைக்காததும் இருக்கிறது.

பலர் பல நூறு காரணங்கள் சொன்னாலும் மதுதான் இது போன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. சிலர், மதுப்பழக்கம் இல்லாதவர்கள் கூட பெண்களையும், குழந்தைகளையும் சிதைக்கும் கொடூர காரியங்களை செய்கிறார்களே என்று கேட்கிறார்கள்.

அதுவும் உண்மைதான். சும்மா இருக்கும் மனம் சாத்தானின் குடியிருப்பு என்று சொல்வார்கள். வேலையில்லாதவன்தான் இப்படியயல்லாம் தவறு செய்கிறானா? நல்ல பணியில் இருப்பவர்கள் இப்படி தவறு செய்யாமலா இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

மனிதனின் மனம் ஓய்வை நாடும்போது அது நல்ல திசையில் திருப்பப்படாமல் வக்கிர திசையை நோக்கி செலுத்தப்படும்போதுதான் இப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கின்றன.

நான் சிறுவனாக இருக்கும்போது பாடப்புத்தகங்கள் தவிர்த்து எனக்கு பொழுதுபோக்க கிடைத்த முக்கிய பொருள் புத்தகங்கள்தான். தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால், ஈசாப் நீதிக்கதைகள், விக்கிரமாதித்தன் என்று பலதரப்பட்ட நல்ல கருத்துக்களை சொல்லும் கதைகளுடன் தினசரி நாளிதழ்கள் கூட சிறுவருக்கான இணைப்புகளை புத்திக்கூர்மையை பலப்படுத்தக்கூடிய, நல்ல எண்ணங்களை விதைக்கக்கூடிய உள்ளடக்கங்களுடன்தான் வெளியிட்டார்கள்.

எனக்கு 25 வயதில் சாத்தியப்பட்ட செல்போன் இன்று 3 வயதுக்குழந்தைக்கு கிடைக்கிறது. அவர்கள் வெளியில் போய் விளையாட வழி இருப்பதில்லை. வீடியோ கேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவில் ரத்தவெறியைத் தூண்டும் கார்ட்டூன், விளையாட்டுக்கள் என்று பலவும் மனித மனத்தை வக்கிரபுத்தியுடன் கொடூரமான திசையை நோக்கி செலுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த போக்கு நல்ல வசதி படைத்த குடும்பங்கள் மற்றும் ஓரளவு நடுத்தர வசதியுடன் கூடிய குடும்பங்களில் வளரக்கூடிய குழந்தைளைப் பற்றி.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத குடும்பங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் சுற்றுப்புறத்தில் சாக்கடை கூட சரியாக இருப்பதில்லை. அவர்கள் படிக்கும் பள்ளியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இருப்பதில்லை. பிறகு அவர்களுக்கு எப்படி நூலக அனுபவம் கிடைக்கும்?

அப்படி வசதி இல்லாதவர்கள் தங்கள் சக்திக்கு மீறி படிக்க வைத்தாலும் அந்த பள்ளிகள் பாடப்புத்தகங்களை துரத்துவதற்கு மட்டுமே பழக்கப்படுகிறார்கள். சகிப்புத்தன்மை, நற்பண்புகள் இது போன்று எந்த ஒரு விசயமும் சில இடங்களில் கட்டாயத்தின்பேரில் அவர்கள் பின்பற்றுகிறார்களே தவிர, கூட்டம் சேர்ந்தால், யாரும் கவனிக்கவில்லை என்று உணர்ந்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி எவ்வளவு கொடூரமான செயல்களையும் கண நேரத்தில் தெரிந்து வேண்டுமென்றோ அல்லது அவர்களை மீறியோ செய்து விடுகிறார்கள்.

பெரும்பாலும் அவர்கள் செய்யும் செயல் தவறு என்று அவர்கள் புத்தி எச்சரித்தாலும், அதை செய்து பார்க்க வேண்டும் என்று அவர்கள் மனதில் குடியிருக்கும் சாத்தான் சொல்வதையே செய்து விடுகிறார்கள்.

இது போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் கடுமையான கண்காணிப்பு அவசியம். எல்.கே.ஜி மாணவர்கள் கூட வகுப்பில் ஆசிரியை இல்லை என்றால் சளசளவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் போது குரங்கு என்று வர்ணிக்கப்படும் மனித மனம் சும்மாவா இருக்கும்?

சில வெளிநாடுகளில் துண்டுக்காகிதத்தை குப்பைத்தொட்டியை விட்டு வெளியில் போட்டால் கூட அடுத்த 5வது நிமிடம் போலீஸ் வீடு தேடி வரும் என்ற சூழ்நிலை இருப்பதால் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கும் நபர், நம் நாட்டில் பத்து வீடுகள் கொண்ட குடியிருப்புக்குள் நுழையும் 4 அடி அகல வாசலின் குறுக்கே யாரும் நுழைய முடியாதபடி அதே நாலடி நீள இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் பழக்கத்துடன் இருப்பதை என்னவென்று சொல்வது?

வெயில் தாங்க முடியவில்லை. போகும் வழியில் ஆங்காங்கே நிழலில் இளைப்பாறிச் செல்லலாம் என்று (காரில் சென்றால் கூட) நினைப்போம். அப்படி நிழல் தருவதற்காக சிமெண்ட், மணல், ஜல்லி கொண்டு நிழற்குடையை கட்டி வைப்போம். தமிழகத்தில் ஏதாவது ஒரு தேசிய நெடுஞ்சாலையில் மே மாதம் கத்திரி வெயிலில் இப்படி ஒரு நிழற்குடையில் அரை மணி நேரம் நீங்கள் ஓய்வெடுப்பதற்கும், குளு குளு என்று இயற்கை காற்றுடன் நிழல் தரும் பெரிய மரத்தடியில் நின்று ஓய்வெடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? (அந்த மரம் தரும் நன்மைகளை பட்டியலிட்டால் மிகப்பெரியதாக நீளும். நமக்கு ஆக்சிஜன், மழை தருவதிலிருந்து கரியமில வாயுவை கிரஹித்துக்கொள்வது வரை எவ்வளவோ நன்மைகள்.)

பேருந்து நிறுத்தமும் கட்டிடங்களும் தேவைதான். நான் இல்லை என்று சொல்ல வில்லை. நம் நாட்டில் டெக்னாலஜி டெவலப்மெண்ட் என்று வெறும் நிழற்குடைகளைத்தான் கட்டிக்கொண்டிருக்கிறோமே தவிர, மரங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போது மனித மனங்களும் இப்படித்தான், ஏதோ ஒரு இயந்திரம் தயாரிக்கும் பொருள் போல ஆகிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் தான் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள். 50 வருசத்துக்கு முன்னால இப்படி எல்லாம் இல்லையா என்று கேட்காதீர்கள். அப்போது குற்றம் செய்பவர்களை விரல் விட்டு எண்ண வேண்டியிருந்தது. இப்போது குற்றம் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

ஒருவன் வேலையை முடித்து விட்டு ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதை விட நல்ல நூல்களை படித்தால் அவன் மனதில் எவ்வளவு மாற்றங்கள் இருக்கும் தெரியுமா?

அதெல்லாம் சரி...நல்ல புத்தகங்கள் எங்கே வருகிறது என்றும் நீங்கள் கேட்கலாம். நிறைய எழுத்துக்களில் நேர்மை இருப்பதில்லை என்பதும் உண்மைதான். நிறைய படிக்கும்போது சரடு விட்டு மக்களை முட்டாளாக்குபவர்களையும் அந்த மாதிரியான எழுத்துக்களையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி புரிந்து கொண்டுவிட்ட மக்கள் தொகை அதிகரித்தால் யாருக்கெல்லாம் ஆபத்து வருமோ அவர்கள் என் மீது எதாவது பொய்ப்புகார் கொடுக்க முயற்சிக்கலாம்.

.............அதனால இத்தோட இந்த பதிவை நிறுத்திக்கிறேன்.

புதன், 12 டிசம்பர், 2012

விஸ்வரூபம் - கமலின் வியாபார உத்தி சரியா?


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவு வீடுகளில் தொ(ல்)லைக்காட்சிகளும் கிடையாது. டிவிடி பிளேயரும் கிடையாது. மக்களுக்கு பொழுது போக்கு என்றால் பெரும்பாலும் சினிமா தியேட்டராகத்தான் இருந்தது. அதை விட முக்கியமான விசயம், அதிகாலையில் இருந்து இரவு வரை மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் போக்கு அப்போது இந்த அளவுக்கு இல்லை.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். வேலை செய்யும் இடம், பணி செய்யும் இடத்திற்கும் குடியிருக்கும் இடத்திற்கும் உள்ள தூரம் போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஆற அமர தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் அளவுக்கு நேரம் ஒதுங்குவது இல்லை.

பெரும்பாலும் காதலர்களையும் மாணவர் உலகத்தை மட்டுமே தியேட்டர்கள் நம்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தனது படத்தை பார்க்கும் நபர்களிடம் ஓரளவுக்காவது சிந்தாமல் சிதறாமல் பணத்தை வசூல் செய்ய வேண்டுமே என்ற நோக்கத்தில்தான் விஸ்வரூபம் படத்தை தொலைக்காட்சியிலும் ரிலீஸ் செய்ய கமல் முடிவு செய்துள்ளார்.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதனால் நன்மை, தீமை கலந்துதான் இருக்கும். அதில் உள்ள தீமைகளின் பாதிப்பை எந்த அளவுக்கு குறைக்க வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அந்த முறை ஒத்துவராது என்று மறுத்துவிடுவது பிற்காலத்தில் கிடைக்கும் நன்மைகளையும் புறந்தள்ளியதற்கு சமமாகும்.

நான்குவழிச்சாலைகளை அமைத்துவிட்டு டோல் கேட் அமைத்து வசூலிப்பவர்களிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒன்று, சுங்கம் வசூலிக்கும் இடத்தில் அவர்கள் அனுமதி இன்றி ஒரு சைக்கிள் கூட கடந்து செல்ல முடியாத அளவுக்கு கட்டமைப்பு இருக்கும். அதாவது அந்த சாலையில் செல்பவர்களிடம் சிந்தாமல் சிதறாமல் பணம் வசூலிக்கும் முறையை அப்படியே படம் பார்ப்பவர்களிடம் செயல்படுத்த முடியாது. ஆனால் பல தியேட்டர்களில் இருக்கும் பகல் கொள்ளை கட்டணம் ( பார்க்கிங் முதல் கேண்டீன் வரை), நேரமின்மை போன்ற காரணங்களால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாதவர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் வீட்டிலேயே அந்த படத்தை பார்த்துவிடுகிறார்கள். அவர்களிடம் ஓரளவாவது கட்டணம் பெற்று படம் பார்க்க வைப்பதை வருங்காலத்தில் முறைப்படுத்தி செய்தால்தான் சினிமா தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும்.

பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ஒரு சில சிரமங்களை அனுபவித்தாலும் அவர்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. ஆனால் நல்ல கதையுடன் சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து 10 தியேட்டர் கூட கிடைக்காமல் அதில் 20 காட்சிகள் திரையிடுவதற்குள் அடுத்த படத்திற்காக தூக்கப்பட்டுவிடும். படம் பார்க்கலாம் என்று நினைத்து தியேட்டருக்கு சாமானிய ரசிகன் கிளம்பும் வரை படம் காத்திருப்பதில்லை. அதற்கெல்லாம் டிவியில் திரையிட்டு ரசிகர்களிடம் நேரடியாக வசூலிக்கும் முறை ஓரளவாவது தீர்வு தரும் என்று நினைக்கிறேன்.

16 ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டரில் பணியாற்றிய அனுபவத்தில் என் மனதில் தோன்றிய சில விசயங்கள்:

1. அப்போதெல்லாம் எந்த படம் திரையிடப்பட்டாலும் சுமாரான படங்கள் கூட 10 நாளைக் கடந்துவிடும். தோல்வி அடைந்த படங்கள் கூட 14 நாட்கள் ஓடி தியேட்டர்களுக்கு கொஞ்சமாவது லாபம் சம்பாதித்து கொடுத்துக்கொண்டிருந்தன.

2. இதில் நான் கவனித்த இன்னொரு விசயம், மூன்று வாரங்கள் வரை படம் ஓடும்போது, கடைத்தெரு, மார்க்கெட், சுமைதூக்கும் தொழிலாளர்கள் போன்றவர்கள் திரும்ப திரும்ப இரவுக்காட்சிகளுக்கு வருவதை பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு பாடல்கள், சில நகைச்சுவைக்காட்சிகளுக்காக இதுபோன்ற ரிப்பீட் ஆடியன்ஸ் வருவார்கள். இப்போது அதற்கெல்லாம் வேலையில்லை. ஏனென்றால் இசையருவி, சிரிப்பொலி போன்ற சேனல்களும், உள்ளூர் சேனல்களும் பாடல்கள், நகைச்சுவையை மக்களுக்கு கொடுக்கும் வேலையை பார்த்துக்கொள்கின்றன.

3. அப்படி ரிப்பீட் ஆடியன்ஸ் வருவதற்கு மற்றொரு முக்கிய காரணம், கட்டணம். அப்போது எட்டு ரூபாய், பத்து ரூபாய், அதிகபட்சம் 15 ரூபாய் என்றுதான் கட்டணம் இருந்தது. ஆனால் சிறு நகரங்களிலேயே இப்போது குறைந்தபட்சம் 60 ரூபாய். படம் ரிலீசாகும் நாட்களில் 100 முதல் 150 ரூபாய் வரை. கட்டண உயர்வைப் போலவே தியேட்டர்களில் மூட்டைப்பூச்சி, கொசுக்கடி என்று ரசிகர்களை இம்சைப்படுத்தும் விசயங்களும் அதிகரித்துவிட்டன. (கொசுக்கடியே தேவலாம் என்று நினைக்கும் அளவுக்கு சில படங்கள் இருக்கும்.அதைப் பற்றி பிறகு பேசுவோம்)

4. இப்போதும் 30 ரூபாய் என்ற அளவில் கட்டணம் இருந்தால் சாதாரண படங்களுக்கு கூட கூட்டம் வர வாய்ப்பு உண்டு. அதெல்லாம் வர மாட்டாங்க. எப்படி இருந்தாலும் வீட்டில் டிவிடி போட்டுதான் பார்ப்பாங்க என்று சிலர் சொல்லக்கூடும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் திருட்டு டிவிடி விற்கும் இடத்தில் ஒரிஜினல் டிவிடியை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் வேலையை செய்யவில்லை என்றால் நஷ்டம் படம் பார்க்கும் மக்களுக்கு இல்லை.

5. திருட்டு டிவிடியை சுத்தமாக ஒழித்து விட்டாலும், அதனால் தியேட்டருக்கு கூட்டம் திருவிழா போல் வந்து விடுமா என்று கேட்டால் அதற்கும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஏனென்றால் மக்களின் சாப்பாட்டுக்கு தேவையான அரிசி, குடிநீர் போல் சினிமா இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை எல்லாம் இல்லை.

6. டிவிடி கிடைக்கவில்லை என்றால் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று (என்ன, 2 மணி நேரப்படம் விளம்பரங்களுடன் 5 மணி நேரம் ஒளிபரப்பாகும்) மற்ற வேலைகளைப் பார்க்க போய்விடுவார்கள். ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி வேலை முடித்து வந்து மாலைக்காட்சி பார்க்கும் அளவுக்கு மக்களின் வேலைநேரமோ, சூழ்நிலையோ அமையவில்லை.

7. இன்னொரு காரணம், பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளரவில்லை, கதையில் லாஜிக் இல்லை என்று ஏகப்பட்ட இல்லைகள் சொன்னாலும் அப்போதைய படங்களை இப்போது பார்த்தாலும் படம் முடியும் போது ஒரு மனநிறைவு, படம் பார்த்து முடித்த சந்தோசம் கிடைக்கும். ஆனால் இன்றைய படங்களைப் பார்க்கும்போது இவையயல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறையும் தொலைக்காட்சியில் சற்றே பழைய படங்களைப் பார்க்கும் போது உணர்வார்கள்.

8. அவ்வளவு ஏன், என்னுடைய மன நிலையை சொல்லட்டுமா? சேது, நந்தா, பிதாமகன், காசி, காதல் இது போன்று முடிவுகள் சோகமாக உள்ள படங்கள் எவ்வளவுதான் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தாலும் தொலைக்காட்சிகளில் மீண்டும் பார்க்க நேரும்போது, நடுவிலேயே வேறு சேனல்களுக்கு மாறிவிடுகிறேன். காரணம், வாழ்க்கையில்தான் இவ்வளவு சிரமப்படுகிறோம், படத்தைப்பார்த்தும் மனம் கலங்க வேண்டுமா என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொள்வதுண்டு.

9. படத்தை படமாத்தான் பார்க்கணும். பெண்கள் மெகாசீரியல்களைப் பார்த்து ஒப்பாரி வைப்பது போல் நீயும் படத்தைப் பார்த்து அழுதால் அதற்கு நாங்களா பொறுப்பு என்று சிலர் கேட்கக்கூடும். நான் சொல்ல வந்த விசயம் அது இல்லை. இது போன்ற படங்கள் நல்ல படங்கள்தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்தப் படங்களும் ரசிக்கத்தக்கவைதான். ஆனால் சாமானிய ரசிகன், அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து விட்டு சற்று நேரம் இளைப்பாறலாம் என்று படம் பார்க்க வந்தால் இது போன்ற படங்கள் மன நிறைவை அளிக்காது. அவர்களுக்கு இரவு வாட்ச்மேன் தூக்கம் வராமல் இருக்க டீ குடித்து தூக்கத்தைப் போக்கி உற்சாகப்படுத்திக்கொள்வது போல் நிமிர்ந்து உட்காரச்செய்யும் படங்களும் தேவை என்றுதான் சொல்கிறேன்.

10. இப்போதும் இப்படி மசாலா படங்கள் வந்தாலும், ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசி காதுகளை பஞ்சராக்கி அது போன்ற படங்களையும் பிடிக்காமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

11. முன்பு பிலிம் சுருள் மூலம் தியேட்டரில் படம் திரையிடும்போது, ஆப்ரேட்டர் பணி செய்யும் முறையை வைத்தே படத்தின் தன்மையை கணித்துவிடலாம். ஒரு படம் என்பது 2000 அடி நீளம் உள்ள பிலிம் சுருள் கொண்ட ஏழு பகுதி அல்லது எட்டு பகுதியாக வரும். இடைவேளைக்கு முன்பு நாலு சுருள். பிறகு மூன்று அல்லது நான்கு.

18 முதல் 22 நிமிடங்கள் வரை ஒரு சுருள் ஓடும். ஒரு புரொஜக்டரில் 20 நிமிடம் ஓடி முடிந்த உடன் அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்த ஆப்ரேட்டர் ஓடி முடிந்த பிலிம் சுருளை ரீவைண்ட் செய்வது, மூன்றாவது சுருளை அடுத்த புரொஜக்டரில் பொருத்தி, கார்பனை சரிபார்ப்பது போன்ற பணிகளை 4 முதல் ஆறு நிமிடங்களுக்குள் செய்து விட்டு அவரும் படம் பார்த்துக்கொண்டே கார்பனை நெருக்கி சரியாக எரியூட்டினால் படம் ஆப்ரேட்டருக்கு பிடித்து விட்டது என்று பொருள். எல்லா நாளும் அப்படி பார்க்க வில்லை என்றாலும் குறைந்தது 4 நாட்களாவது இப்படி இருக்க வேண்டும். (பல தியேட்டர்களில் பிலிமை ரீவைண்ட் செய்யவும், கார்பனை ஒழுங்காக எரிக்கவும் உதவியாளர்கள் இருப்பார்கள். நான் சொல்வது ஆப்ரேட்டர் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்யும் தியேட்டர்களைப் பற்றி)

அதைவிட்டுவிட்டு ஒரு சுருள் (2 ரீல் ) படம் ஓடும் 20 நிமிடங்களும் ஏற்கனவே ஓடிய பிலிமை ரீவைண்ட் செய்தல், அடுத்து ஓட வேண்டிய பிலிமை மற்றொரு புரொஜக்டரில் பொருத்துதல் ஆகிய வேலைகளை 10 முதல் 13 நிமிடம் வரை செய்து விட்டு படத்தை பார்க்காமல் ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு கார்பனை நெருக்கிக்கொண்டிருந்தால் படம் அவர் மனதைக் கவரவில்லை என்று சொல்லலாம்.

13. அந்த காலகட்டத்தில் நான் பார்த்த பல படங்களில் இப்போதும் தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவது என்றால் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, முத்து, அவ்வை சண்முகி, ஜென்டில்மேன், என்று பல படங்களை சொல்லலாம். இவற்றில் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் உள்ள படங்களைத்தான் நாம் விரும்புவோம். எல்லா நேரங்களிலும் அழ நாம் விரும்புவதில்லை. இந்த உண்மையை படமெடுப்பவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. அதற்காக மொக்கை ஜோக்குகளை வைத்து ரம்பம் போட்டுடாதீங்கப்பா.

14. விஸ்வரூபம் படத்தை கமல் தொலைக்காட்சியில் முதலில் ரிலீஸ் செய்வது சரியா தவறான்னு பதிவுக்கு தலைப்பு வெச்சுட்டு என்னென்னமோ எழுதிட்டு போறேன்னு எனக்கும் புரியுது.

என்னைப் பொறுத்தவரை கமல் மட்டுமில்லை. படம் எடுக்கும் எல்லோருமே மக்கள் தியேட்டர்களில் மட்டுமே வந்து (சிலர் பொருளாதார நிலைக்கு ஒரு வாரத்து சம்பளமா இருக்கும்) பணத்தை கொட்டி அழுதுட்டு படம் பார்க்கணும்னு நினைக்காம, அவர்கள் இடத்துக்கே டோர் டெலிவரி மாதிரி ஏதாவது செஞ்சு காசு வசூல் பண்றதுக்கு நேர்த்தியான வழியை முயற்சிக்கணும். இதை சொல்ல வந்துதான் மெகாசீரியல் மாதிரி என்னென்னவோ எழுதுறேன்.

என்ன பண்றது. பல நேரங்கள்ல படம் எடுக்குறவங்களும் இப்படித்தான். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்லாம, ஹீரோவைப் பத்தி பில்ட் அப் கொடுக்கவும், மிட்நைட் மசாலாவுல போடுறதுக்காக எடுத்து வச்ச பாட்டை செருகுறதுக்கும் ஏத்த மாதிரி கதையை சின்னாபின்னமாக்கி நான் இப்ப எழுதுன பதிவு மாதிரி ஆடியன்சுக்கு எதையும் புரிய விடாம பண்ணிடுறாங்க.