Search This Blog

வெள்ளி, 23 நவம்பர், 2012

புகையிலிருந்து தப்பிப்பது எப்படி?

குடிச்சுட்டு வாகனம் ஓட்டுறவங்க சாலையில ஒழுங்கா போறவங்களை அடிச்சு சாகடிக்கிறது நடந்தாலும், அப்படி அசம்பாவிதம் நடக்காத பட்சத்தில் அப்படி குடிக்கிறவங்க நம்ம மேல வாந்தி எடுக்காத வரை சிக்கல் இல்லை. ஆனா பழைய கால ரயில் இஞ்சின் மாதிரி புகையை அடுத்தவன் மூஞ்சியில விட்டு கேன்சரை அனுப்புறவங்களை என்ன செய்யுறதுன்னே புரியலை. 2010ல் எழுதிய பதிவை இப்போவும் எந்த திருத்தம் இல்லாம பிரசுரம் செய்யுற அளவுக்கு எந்த டெவலப்மெண்டும் இல்லாம இருக்கு.

நாகரிகமான வார்த்தையில சுதந்திரமா கருத்து சொல்ல பயமா இருக்கு. ஆனா அடுத்தவன் மூஞ்சியில புகையை விட்டு அவன் ஆயுசைக் குறைக்குறவன் எந்த பயமும் இல்லாம இருக்கான். என்ன கொடுமை சார் இது?

என் காசு...நான் குடிக்குறேன்னு சொல்றவங்களை திருத்த நான் பதிவு எழுதலை. வாயில வெச்சு ஊதுங்க. உடம்பு பூராவும் கட்டி வெச்சு கொளுத்திக்குங்க. அது உங்க இஷ்டம். ஆனா பத்தவெச்சு அடுத்தவன் மூஞ்சுக்கு புகையை அனுப்பாதீங்கன்னுதான் சொல்றேன்.

இப்போ 2010ல் எழுதிய பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு.
****************************************

1996ம் ஆண்டு நான் சினிமாதியேட்டரில் வேலை,பள்ளிக்கூடத்தில் படிப்பு என்று இரட்டைக்குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்த காலகட்டம்.(ஒரு குதிரை சவாரியும் இன்று வரை எனக்கு கைகூடலைன்னுங்குறதெல்லாம் இப்ப நமக்கு தேவையில்லை.)
அப்போது திருவாரூர் நகரத்தில் நான்கு, புற நகர்ப்பகுதியில் ஒன்று என்று ஐந்து தியேட்டர்கள் இருந்தன.இப்போது புற நகர்ப்பகுதியில் இருந்த தியேட்டர்(தியேட்டர் மாதிரி) நெல் கோடவுனா மாறிட்டதா சொன்னாங்க.

திருவாரூர் நகரப்பகுதியில் இருந்த ரெண்டு தியேட்டர்களை இடித்து அப்புறப்படுத்தியாச்சு.மிச்சமிருக்குற மூணு தியேட்டர்கள் எப்படியோ சமாளிச்சு உசுரோட இருக்கு.

இந்த மூணு தியேட்டர்களும் 1996ல சிறப்பா இயங்கிகிட்டு இருந்த சமயம்.பரம்பரை,உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு,பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு,பாஞ்சாலங்குறிச்சி,சிவசக்தி போன்ற படங்கள் ஒரு தியேட்டர்ல குறைந்தபட்சம் முப்பதுநாள், அதிகபட்சம் அறுபதுநாள் என்ற கணக்குல நல்லா வசூல் செய்துகிட்டு இருந்துச்சு.

இன்னொரு தியேட்டர்ல தாயகம், செங்கோட்டை, இந்தியன், காதல்கோட்டை, அவ்வைசண்முகி அப்படின்னு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் அணிவரிசை.
இப்படி ரெண்டு தியேட்டர்களும் பிரமாதமான படங்களைத் திரையிட்டு டிக்கட் விலைகளை பதினைந்து, இருபதுன்னு வசூலிச்சுகிட்டு இருந்தாங்க.(பதினைந்து வருஷத்துக்கு முன்னால)

இது தவிர இன்னொரு தியேட்டர்ல ஆறு ரூபாய், பத்து ரூபாய் என்று டிக்கட்டில் உள்ள விலையையே வசூலித்தபடி சுமாரான படங்களைத் திரையிட்டாங்க.ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நல்ல வசூலைதான் அந்த படங்கள் தந்துச்சு.

அந்த மாதிரி சின்ன விலையில டிக்கட் விற்பனை செய்ததுக்கு காரணம்,சின்ன பட்ஜெட் படங்களா அவை இருந்ததுதான்.

ஆனா இப்போ,மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு நம்புற ஹீரோவுக்கு பத்துப் பதினைஞ்சு கோடியை சம்பளமா கொடுத்து, சத்யம், ஐனாக்ஸ் மாதிரியான தியேட்டர்கள்ல திரையிட்டு ஒரே வாரத்துல கோடிகளை அள்ளிடணும்னு நினைக்கிறாங்க.இந்த ஐடியா பல நேரங்கள்ல தப்புக்கணக்காயிடுது.

காயலான் கடைக்குப் போற நிலையில இருக்குற பஸ்சுலயும் ஏ/சி வால்வோ பஸ்சுலயும் ஒரே டிக்கட் வசூல் செய்தா அது எப்படி சரியா வரும்? இது கூட தீபாவளி, பொங்கல் சமயமா இருந்தா வேற வழி இல்லாம சொந்த ஊருக்குப் போறவங்க புலம்பிகிட்டே ஏறுவாங்க.அதுவும் ஒருநாள் கூத்துதான்.
பாழடைஞ்ச நிலையில இருக்குற தியேட்டர்களிலயும் ஐம்பது நூறுன்னு டிக்கட் விலை வெச்சா யாரால தாங்க முடியும்?. அவனவன் முப்பது ரூபாய் கொடுத்து குடும்பத்தோட ...........யில பார்த்துடுறான்.

செல்போன் உபயோகம் இப்படி அதிரடியா வெற்றி அடைஞ்சதுக்கு முக்கிய காரணம் என்ன? ஆயிரம் ரூபாயில இருந்து லட்ச ரூபாய் வரை மொபைல் கிடைக்குது. எல்லோருக்கும் தாங்கக்கூடிய விலையில சேவைக்கட்டணமும் இருக்கு.

வெளி செல்லும் ஒரு நிமிட அழைப்புக்கு பத்து ரூபாய்,உள் வரும் ஒரு நிமிட அழைப்புக்கு ஐந்து ரூபாய் என்று கட்டணம் இருந்தால் இந்த துறையின் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்னு சொல்ல பள்ளிக்கூட பையனே போதும்.பி.ஹெச்.டி படிச்ச நிபுணர் தேவையில்லை.

எந்த தொழிலா இருந்தாலும் நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர் இருந்தால் அவர்களுக்கு பொருளை கொண்டு சென்று சேர்ப்பது சற்று கூடுதல் செலவு பிடிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். இதற்குப் பயந்து பெரிய விலைப்பொருட்கள் அல்லது பெரிய அளவு வாங்கும் வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிருந்தால் ஒரே ஒரு வாடிக்கையாளர் எடுக்கும் சின்ன முடிவு கூட பெரிய அளவில் கவிழ்த்துவிடும்.

இப்போது சினிமா தொழிலிலும் இந்த..................................தனத்தைதான் சில தயாரிப்பாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அவர்கள் சினிமாவை தொழிலாக நினைக்காமல் சூதாட்டமாக மட்டுமே கருதி பேராசைப்பட்டதுதான் நல்ல படங்களுக்கு கூட சரியான தியேட்டர் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை காரணமாக அதிக நாட்கள் படம் ஓடுவதில்லை.

இதே டெக்னிக்கை பயன்படுத்தினால் புகைப்பிடிக்கும் வழக்கத்தையும் குறைத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எப்படின்னுதானே கேட்குறீங்க?

ஒரு சிகரெட் விலை மூணு ரூபாய் நாலு ரூபாய் என்று இருப்பதால்தானே நிறையபேர் ஈஸியா அதுக்கு அடிமையாயிடுறாங்க? ஒரு சிகரெட் விலை நானூறு ரூபாய் ஐநூறு ரூபாய் என்று வைத்துவிட்டால் அதைப் பயன்படுத்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்வதோடு, அடுத்தவர் நலனுக்கும் வேட்டு வைப்பது குறையும்.
இப்படித்தானே டிக்கட்,பார்க்கிங்,கேண்டீன் கட்டண விலையேற்றம் ஆகிய விஷயங்களை மட்டுமே வைத்து தியேட்டருக்கு செல்லும் நடுத்தர மக்களை அலற விடும்போது சிகரெட் விலையை ஏற்றி புகைப்  பிடிக்கும் வழக்கத்தை குறைக்க முடியாதா என்ன?

மிஸ்-சாகிப்போன பர்ஸ்


இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று டிக்கட் கவுண்டருக்குள் கையை நீட்டும்போதுதான் நேரம் முடிந்தது அல்லது டிக்கட் முடிந்தது என்று சொல்வார்கள்.


ஒரு அரங்கத்தில் ஆயிரம் நாற்காலி இருக்கும். அதில் 960 நாற்காலி காலியாக இருக்கும். ஆனால் அங்கோ உடைந்திருக்கும் ஒரே ஒரு நாற்காலியில் மிகச்சரியாக போய் உட்காருவேன். இப்படி ஏன் சறுக்குது என்று புரியாமலேயே அடி வாங்கிக்கொண்டு புலம்பும் மிகச்சாதாரணர்களில் நானும் ஒருவன்.

அப்படி கிடைத்த ஒரு அனுபவத்தை 2010ஆம் ஆண்டு எழுதியிருந்தேன். மீண்டும் உங்கள் பார்வைக்காக.
**********************************************

கிராமத்தில் இருந்து பட்டணம்(சென்னை ?!) வரும் இளைஞன் பேருந்து  அல்லது ரயில் நிலையத்திலேயே உடைமைகளைத் தவற விடுவது, சென்னை மாநகரப்பேருந்துகளில் பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய திரைப்படங்கள் சற்று அளவுக்கு அதிகமாகவே எனக்கு இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தன.

2004ம் ஆண்டு நான் வேலைக்காக மூட்டை முடிச்சுகளோடு மாம்பலம் ரயில்நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கிருந்து வேகமாக ரங்கநாதன் தெரு வழியாக தி.நகரில் நான் செல்ல வேண்டிய இடங்களுக்கு மிகச்சரியாக போய் சேர்ந்தேன். ஆட்டோக்காரர்கள் சூழ்ந்துகொள்ளப் பார்ப்பார்கள். சாதாரணமாக ஒரு அலட்சியப் பார்வையுடன் அவர்களைக் கடந்து சென்று கொண்டே இரு என்று
என்னுடைய நண்பர் பாஸ் (எ) பாஸ்கரன் கூறியிருந்தார். அது மிகச் சரியான அளவில் எனக்குப் பலன்தந்தது.

வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன்பே பத்து ரூபாய் வரை சில்லறையை சட்டைப்பையில் வைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். பொது இடங்களில் பணத்தை மொத்தமாக வெளியில் எடுத்ததே இல்லை என்பதால் மாநகரப்பேருந்துப் பயணமும் எனக்கு சிக்கலாக அமையவில்லை.

சில சூழ்நிலைகள் காரணமாக திருவாரூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டிய கட்டாயம். இரண்டு மாதங்களுக்குள்ளாகவே ஊர் திரும்பிவிட்டேன். ஆனால் அதற்குள் பேருந்துகள் செல்லும் வழித்தடம் தவிர பிற பாதைகளும் பழக்கமாகிவிட்டன.எல்லாம் என்னுடைய சைக்கிளுடைய உபயம்தான்.

திரும்பவும் 2006ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். அப்போது புரசைவாக்கத்தில் இருந்து சாலிகிராமம் வந்து சேர போக்குவரத்து நெரிசல் நேரத்தில் ஒண்ணரைமணி நேரம் கூட ஆகும். ஆனால் நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து பூந்தமல்லிநெடுஞ்சாலை, பச்சையப்பன்கல்லூரி, நெல்சன்மாணிக்கம் பாலம், நுங்கம்பாக்கம் ரயில்நிலையம், சூளைமேடு, வடபழனி நூறடி சாலை வழியாக சில குறுகியபாதைகள், ஒரு சில சிக்னல்கள் என்று சாலிகிராமத்தை வந்து அடைய முக்கால்மணிநேரம்தான் ஆகும்.

பிறகு அலுவலகம் ராயப்பேட்டை பகுதிக்கு மாறிய பிறகும் எனக்கு பயணம் எளிதாகத்தான் இருந்தது. சேத்துப்பட்டு கீழ்ப்பாலம், எழும்பூர், கிரீம்ஸ்ரோடு அல்லது எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சத்யம் தியேட்டர் இந்த பாதை வழியாக ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்குப் பின்புறம் ஒரு தெருவில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று வந்ததால் பேருந்துப் பயணம் என்பது மிக மிக குறைவு. இதனால் என்னுடைய பர்ஸ் பறிபோக வாய்ப்பு என்பதும் மிக அரிதாகத்தான் இருந்தது.

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கேமரா உதவியாளராக நான் பணியாற்றியபோது அந்த விளம்பர நிறுவனத்தின் காரில் போய்தான் பந்தாவாக இறங்குவோம்.அப்படித்தான் ஒருநாள் கிண்டியில் உள்ள அந்த பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் சென்றோம்.

நான் அங்கே செல்வது அதுதான் முதல்முறை. விமான பணிப்பெண்களைக்காட்டிலும் அழகு வாய்ந்த ஒரு தேவதை வந்து உங்களுக்கு உதவட்டுமான்னு ஆங்கிலத்தில் கேட்டதும் கொஞ்ச நேரம் அப்படியே ஷாக்காகி நின்னுட்டேன். வேற என்ன பண்றது,

அந்தப் பொண்ணு கேட்டது புரியுது. திரும்ப எப்படி ஆங்கிலத்துல பேசுறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கேன். அப்புறம் கூட வந்தவங்க இன்விடேஷனைக்காட்டி வழி கேட்டதும் அப்பவும் அந்த அப்சரஸ் பதில் சொன்னது ஆங்கிலத்துலதான்.

படியேறிப் போகும்போது அந்த கேமராமேன், "டேய் சரவணா, கேமரா பேக்கை நீ வெச்சுக்க...கேமரா ஸ்டாண்டை என்கிட்ட கொடு"ன்னு கேட்டார்.

எனக்கு விஷயம் புரியலை.

நாம நாலு பேர் இருக்கோம். அந்தப் பொண்ணு உங்கிட்ட வந்து ஹெல்ப்பண்ணவான்னு கேட்குது. நான் அரைமணி நேரம் மேக்கப் போட்டது வேஸ்ட்.எல்லாத்துக்கும் மச்சம் வேணும் போலிருக்கேன்னார். அப்பதான் அது நக்கல்னு எனக்கு புரிஞ்சது.

இவரு வயித்தெரிச்சலை தண்ணி(விஸ்கி இல்லை) ஊத்தி அணைக்கலைன்னா நாளைக்கு நமக்கே ஆப்புதான்னு ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்டுச்சு.

"அண்ணே...உங்க டேலண்ட்டுக்கு அதால தடுமாறாம பதில் சொல்ல முடியாதுன்னு பயந்துதான் ஊருக்கு இளைச்ச எங்கிட்ட பேசியிருக்கும்." அப்படின்னு சொன்னேன். (எதுவும் உண்மையா இருக்காது.நாலு பேர்ல நான் முன்னால நடந்தேன். அது எங்கிட்ட பேசிடுச்சு. அவ்வளவுதான். இது  குருநாதருக்குப் புரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன்.)

அந்த மீட்டிங் ஹால்ல தமிழக அமைச்சர் ஒருவரும் ஆந்திராவைச்சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் முக்கிய விருந்தினர்கள்.தமிழகத்தில் புதுசா ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கு அறிமுகவிழாதான் அது.

இதுல உன் பர்ஸ் எப்படி போச்சுன்னுதானே கேட்குறீங்க?

மீட்டிங் முடிஞ்சு பஃபே முறையில சாப்பாடு, கூலிங், ஹாட்டிரிங்ஸ் எல்லாமும் உண்டுங்க. நான் அப்பவும் வெஜிடேரியன்தான். அந்தப் பக்கம் போகலாம்னு பார்த்தப்ப கேமராமேன், எங்களுக்கு வண்டியோட்டுன புது டிரைவரை பார்க்கிங்ல போய் அழைச்சுட்டு வரசொன்னார். நானும் ரொம்ப ஆர்வமா போனேன்.

திரும்பி வந்தப்ப எல்லார் கையிலயும் ஒரு புது பர்ஸ். மீட்டிங்ல கலந்துகிட்டவங்களுக்கு கிப்ட். நான் போய் கேட்டப்ப தீர்ந்துடுச்சு. மற்ற மூணு பேர்கிட்டயும், "எனக்கும் வாங்கி வெச்சிருக்கலாமே"ன்னு கேட்டேன்.

"நீ வாங்கின பிறகு டிரைவரை அழைச்சுட்டு வர்றதுக்காக போயிருக்கலாமே"ன்னு ரொம்ப கூலா சொன்னாங்க. இதுதான் சென்னைன்னு புரியவெச்ச மற்றொரு தருணம்னு உணர்ந்தேன். இதுதாங்க என் அதிர்ஷ்டம்.

இதுல கொடுமை என்னன்னா, அந்த டிரைவர் எதோ சிகிச்சை எடுத்துக்குறதால வெளியில எதுவுமே சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டார். நான் போனதும் வேஸ்ட். பர்சும் போச்சு.

நீதி: எல்லாத்தையும் ஜெயிச்சுட்டோம். யாரும் ஏமாத்த முடியாதுன்னு இறுமாப்பா இருந்தா இப்படித்தான் பல்ப் வாங்கணும்.

வியாழன், 22 நவம்பர், 2012

மோசடியில் சிக்கும் மக்கள்




கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பண விஷயத்தில் படித்தவர், படிக்காதவர் என்று பலரும் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் பணத்தாசையை அதிகமாக காட்டும் விளம்பரங்களை பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏமாந்தது சரி. இப்போதும் பெரிய அளவில் ஊடகங்களில் விளம்பரம் செய்தால் அவர்கள் மோசடி செய்ய வாய்ப்பிருக்காது என்று முழுவதுமாக தங்கள் பணத்தை அர்ப்பணித்துவிட பெரும்பாலான மக்கள் தயாராக இருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.

1ரூபா விதைச்சா 1 கோடிரூபாய் அறுக்கலாம் என்ற ரீதியிலான விளம்பரங்களுக்கு பஞ்சமே இல்லை.  பணப்பட்டுவாடாவில் சிக்கல் வந்து முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று கலைமகள் சபா, அனுபவ், ரமேஷ்கார்ஸ், என்று ஆரம்பித்து ஈமு கோழிகள் வரை எவ்வளவோ உதாரணங்களை பேப்பரில் படித்திருக்கிறேன்.

ஆனாலும் சினிமாக்களில் ஒரே பாட்டில் கதா நாயகன் கோடீஸ்வரனாவது போல் திருவாளர் பொது ஜனமும் ஆசைப்படுவதும் இது மாதிரியான சிக்கல்களுக்கு ஒரு காரணமாக இருக்குமோ.

நிதி நிறுவன மோசடிகள் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துவிட்டு 2010ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவு இப்போது மீண்டும் உங்கள் பார்வைக்கு.


மிகப்பெரிய கோடீஸ்வரர் சென்னை சிட்டி பஸ்சில் செல்லும்போது மூன்று ரூபாய் கொடுத்து டிக்கட் எடுக்க காசு இல்லை என்றால் நடத்துனர்,"யோவ்...சாவுகிராக்கி, எறங்குயா முதல்ல..."என்று நல்ல வார்த்தை(?!) சொல்லி அவரை இறக்கிவிடுவார் அல்லது செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் பிடித்துக்கொடுப்பார்.அந்த நேரத்தில் அந்த பணக்காரரின் சொத்துக்கள் எதுவும் உதவிக்கு வராது.

ஒரு நிதி நிறுவனத்திடம் எல்லாரும் ஒரே நேரத்தில் போட்ட பணத்தை திருப்பிக்கேட்டால் ஏற்படுவதும் இதே நிலமைதான். ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் தவிர்த்து நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சில நிறுவனங்களும் திடீரென மூடப்படுவதற்கும் இதுதான் காரணம்.நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பேராசிரியர் கொடுத்த விளக்கம்தான் இது.

10.01.2010 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் இது தொடர்பான விவாதம் நடந்தது.அதில் புதியதாக சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும் பல விஷயங்களைப் பூசி மெழுகிவிட்டார்கள்.

அதுசரி...நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததில் சில அரசு அதிகாரிகளும் இருந்தார்கள்.பல விதிகளுக்கு உட்பட்டுதானே அவர்களாலும் பேச முடியும்.

இதில் என்னை நெருடிய விஷயம் என்னவென்றால் பதிவு செய்யப்படாத நிறுவனம் பற்றிய தகவல்களை சாதாரண குடிமக்கள்தான் கண்டறிய வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு திறமை இருந்தால் இவ்வளவு நாளும் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்க மாட்டார்களே.

மக்கள் பேராசையால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவது பெரும்பாலும் முறையாக பதிவு செய்யப்படாத நிறுவனங்களில்தான். இதற்கு ஓரளவு எளிமையான தீர்வு என்னவென்றால் அரசின் இணையதளத்தில் முறையான பதிவு பெற்ற எல்லா தனியார் நிறுவனங்களின் பட்டியலையும் துறை வாரியாக வெளியிட்டுவிடலாம்.

கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் இவைதான் மக்களுக்கு அதிக நன்மையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் அவை பதிவு பெற்றால் மட்டும் போதாது. அவர்களின் எல்லை எதுவரை என்பதையும் தெளிவாக வரையறுத்து அதையும் அரசின் இணையதளம் மூலமாக மக்களின் பார்வைக்கு அளிக்கலாம்.

அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்ததும் உரிய துறையில் முழுமையாக மாணவர் பட்டியலையும் அந்த இணையதளத்தில் வெளிப்படையாக்கிவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெறாமலேயே மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களைத் தேர்வு எழுதவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலம் காணாமலேயே போய்விடும்.

ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் சில இணையதளங்களில் உடனுக்குடன் புதிய தகவல்கள் பதிவுசெய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி என்று இணைய தளத்தில் இருந்தால் அது பழைய தகவல் என்று நமக்கு புரிந்துவிடும்.ஆனால் பல தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் தொடர்பான தகவல்களை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நிதிநிறுவனத்தில் ஆரம்பித்து கல்விநிறுவனத்துக்கு போய்விட்டேன்.பரவாயில்லை...கல்வி பெற நிதி தேவை. நிதியைப் பெறவும் கல்வி ஒரு கருவியாக இருக்கிறது.

போலிகளை ஒழிக்க மேலே நான் சொன்ன சில வழிமுறைகள் நிச்சயமாக நல்ல பலன் தரும். ஆனால் நல்ல முறையில் நடைபெறும் சில நிதிநிறுவனங்களும் திடீரென மூடப்படுகின்றனவே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்.

ஆப்பு எதுவும் வெளியில் இல்லை. அதற்கும் மக்கள்தான் காரணம். கடன் வாங்கியவர்கள் திரும்ப கட்டவில்லை என்றால் அது முதலீட்டாளர்கள் தலையில்தான் துண்டாக விழும். இதிலும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வங்கியிலும் சரி, சிட்பண்ட்டுகளிலும் சரி சிறு தொகை வாங்கியவர்களில் 95 சதவீதம் பேர் ஒழுங்காக திரும்ப செலுத்துவதாகத்தான் சொல்கிறார்கள். இது உண்மையாகத்தான் இருக்கும்.

அப்போது வில்லங்கம் எங்கே இருக்கிறது. எல்லாம் சில பணக்கார முதலைகளால்தான்.அவர்கள் அப்படி பணத்தை திரும்ப செலுத்தாமல் தப்பிக்க யார் காரணம்? நிதி நிறுவனம் என்றால் நிர்வாக இயக்குனர்கள், அரசுடமை வங்கி என்றால் உயரதிகாரிகளிடமிருந்து பல மக்கள் பிரதிநிதிகள் வரை எல்லா மட்டத்திலும் தவறு செய்கிறார்கள்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுரத்தை கட்ட எத்தனை ஆயிரம் மூளைகளும் கரங்களும் கால்களும் உழைத்தனவோ? ஆனால் அதை தரைமட்டமாக்கியது மூளை இல்லாத ஒரு சிலர்தானே.

அதேபோல் ஊழலுக்கு முக்கியக் காரணம் சிலரின் பேராசைதான்.

நாலுபேர் நல்லா இருக்கணும்னா எதுவுமேதப்பு இல்லை.- இது நாயகன் படத்தில் வரும் வசனம். இதை ரொம்ப தப்பா புரிஞ்சுகிட்டு தப்பாவே செயல்படுத்துறதுக்கு கொஞ்சபேர்தான் இருக்காங்க. ஆனா இதையே நாடு தாங்காது போலிருக்கே.