Search This Blog

வியாழன், 18 அக்டோபர், 2012

சென்னைக்கு கூடுதலாக ஒருமணி நேரம் மின்வெட்டு-வெளி நாட்டு கம்பெனி எல்லாம் பொட்டி தூக்கிட்டு ஓடிடுமா?

நேற்று ஒரு ஐந்து நிமிடம் தொல்லைக்காட்சி செய்தி பார்க்க நேர்ந்தது. அப்போது எனக்கு ஷாக் கொடுத்த விஷயம் தமிழகத்தில் மின்வெட்டு நிலை எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திதான். (இன்று காலை நாளிதழ் செய்திகளில் 10 பேர் என்று அறிவித்திருக்கிறார்கள்)

ரமணா படத்தில் யூகிசேது 4வது ரீலிலேயே கண்டு பிடித்த விஷயத்தை உயரதிகாரிகள் (?!) கிளைமேக்ஸ் நெருங்கும்போதுதான் கண்டு பிடிப்பார்கள். இந்த காட்சி எனக்கு ஏன் இப்போது நினைவுக்கு வந்து தொலைத்தது என்று தெரியவில்லை.

சென்னைக்கு கூடுதல் நேரம் மின்சாரத்தை வெட்டினால் கழிவறை வரை ஏசி போட்டுக்கொண்டு குடிப்பதையும், இன்னும் பல ...................... வேலைகளையும் முக்கிய பணியாக வைத்துக்கொண்டு 24 மணி நேரமும் எல்லா கதவையும் அடைத்து வைத்து மின் விளக்கையும் எரிய விடும் மென்பொருள் நிறுவனங்கள், ஹோட்டல் போன்றவை நஷ்டப்பட்டுவிடும் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

கோடிக்கணக்குல காசு வாங்கிட்டு இப்படி அவங்களுக்கு தடையில்லாம கரண்ட் கொடுக்குறதை இந்த அரசியல் வியாதிகள் மாத்திக்கப்போறது இல்லை. மக்கள் எல்லாரும் ஓட்டுக்கு பணம் வேணாம், இலவசம் வேணாம் அதுக்கு பதில் அடிப்படை உரிமையை கொடுன்னு கேட்டு வெளக்கமாத்தை தூக்குற வரை அரசியல் வியாதியை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. ஒரு பெட்டிக்கடை வைத்தாலே மாதம் 10 ஆயிரம் லாபம் எதிர்பார்க்கும்போது, ஜனங்களுக்கு ஓட்டுக்கு பணமும் கொடுத்து மத்த செலவும் செய்ய அவங்க என்ன நோட்டா அடிக்கிறாங்க?

எங்களுடைய கேள்வி எல்லாம் என்னன்னா பெரும்பாலான அரசு அலுவலங்கள் நல்ல காற்றோட்டமான பகுதியிலதான் அமைந்திருக்கு. (முக்கியமாக பெருந்திட்ட வளாகம்) அங்க எல்லாம் என்ன ...................த்துக்கு ஏ/சி வசதின்னு கேட்குறேன்?

மருந்து சேமிப்பு கிடங்கு, பால் பொருள் சேமிப்பு பகுதி தவிர மத்த எல்லா அரசு அலுவலகத்துக்கும் ஏ/சியை புடுங்கி வீசுனா பாதி பிரச்சனை சால்வுடு.

அடுத்த விஷயம் வீடுகள்ல ஏ/சி இருந்தா அவங்களுக்கான வணிக நிறுவங்களுக்கான டேரிப் நிர்ணயிச்சு அதன்படி கட்டணம் வசூலிக்கலாம். ஏன், யூனிட்டுக்கு 10 ரூபா வாங்கினாலும் தேவலை. அப்போதான் மாசம் 60 ஆயிரம் எழுபதாயிரம் வருமானம் வர்றவன் கூட 1 அங்குலம் கூட வெளிச்சம் வராம வீடு கட்டுற கலாச்சாரத்தை நிறுத்துவான்.

அது மட்டுமில்லாம எல்லா அரசு அலுவலங்கள் மாடியிலயும் சோலார் பேனல் வெச்சா, அந்த கட்டிட காம்பவுண்ட் பகுதியிலயும், எரியுற லைட்டுக்காவது கரண்ட் கிடக்காம போகுமா என்ன?

இப்படி ஒவ்வொரு யூனிட்டையும் எப்படி சேமிக்கலாம், நுகர்வை எப்படி குறைக்கலாம், சோலார், காற்றாலை மூலமா எந்த அளவுக்கு மின்சாரம் தயாரிக்கலாம்னு யோசிக்காம, 13ஆயிரத்து ஐ நூறு கோடியை கணக்குல கொண்டுவராம யுரேனியம், தோரியம் செலவை மட்டும் கணக்கு பண்ணிட்டு யூனிட் 1 பைசாவுக்கு கிடைக்குது, அரை பைசாவுக்கு கிடைக்குதுன்னு இருக்குற மக்களை .............................யா ஆக்குறானுங்க.

அது எப்படி சார், அணு மின்சாரத்துக்கு மட்டும் அணு உலை கட்டுமான செலவை கணக்குல காட்டாம கரண்ட் தயாரிக்கிற செலவை மட்டும் சொல்லி ஆதரவு தேடுறீங்க. ஆனா சூரிய மின்சாரத்துக்கு மட்டும் பேனல் போடுற செலவை சொல்லி ஒரு யூனிட் ஒரு லட்ச ரூபாய் ஆகுதுன்னு கூசாம பேசுறீங்க?

எனக்கு தெரிந்த வரை சோலார், காற்றாலை மின்சார உபகரணங்கள் அதிகரிச்சா குடிசை தொழில் மாதிரி நிறைய சிறு, குறு தொழிற்சாலைகள்லயும் உதிரி பாகம் வாங்க வேண்டியிருக்கும். அவங்ககிட்ட இந்த அரசியல் வியாதிங்க பெரிய அளவுல லஞ்சம், நன் கொடை(கொள்ளை அடிக்க) வாங்க முடியாது.

ஆனா ................... மின்சாரம்னா எத்தனை கோடி தேவையோ அதை ஒரே கம்பெனியில வாங்கி நூறு தலைமுறைக்கு சேர்த்துக்கலாம்.

இந்த பதிவுல நான் சொல்லியிருக்குறதுக்கு மாற்றுக்கருத்து ஏகப்பட்டது இருக்கும். நான் நடைமுறைக்கு ஒத்துவராததை சொல்லியிருக்கலாம். அதை பின்னூட்டமிட்டால் நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களும் புரிஞ்சுக்க ஏதுவா இருக்கும்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர், கோவில்ல பிரசாதம் வினியோகம் செய்யுவாரு. முக்கியமா மார்கழி மாதத்துல எல்லா நாளும் 2 கிலோ அரிசியிலதான் பொங்கல் போட்டு கொண்டு வருவாங்க. சில தினங்கள்ல 50 பேரும் வருவாங்க. ஒரு சில நாள்ல 200 பேரும் வருவாங்க. ஆனா அவர் ஒரு நாள் கூட அளவுக்கு அதிகமா மிச்சம் வெச்சது கிடையாது. சுத்தமா தீர்ந்துடுச்சுன்னு நிறைய பேரை திருப்பி அனுப்புனது கிடையாது.

கூட்டத்தை கண்களால் ஒரு நொடியில் அளந்து விட்டு, அதற்கேற்றார்போல் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் அளவை தீர்மானிப்பார்.

ஆனால் இப்போது மின்சார வினியோகத்தில் என்ன நடக்கிறது? மொத்தமாக வழித்து சென்னையில் உள்ள நாலு பேருக்கு கொடுத்துவிட்டு மற்ற மாவட்டங்களுக்கு அதே கரண்டியால் மண்டை வீங்க அடி பின்னி விடுகிறார்கள்.

அரசியல் வியாதிகள் மனம் வைத்தால் எல்லாம் சாத்தியம்தான். ஆனால் அவர்கள் மனம் வைப்பதற்கு அந்த காரியத்தால் அவர்களுக்கு லாபம் இல்லையே?

திங்கள், 24 செப்டம்பர், 2012

ஏனுங்க...இது உண்மைதானுங்களா?

வெளி நாட்டுக்காரங்க இங்க சூப்பர் மார்க்கெட் திறந்தா என்ன விளைவு வரும்னு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருத்தர்கிட்ட கேட்டேன்.

அவரு சொன்னாரு, "இன்னைக்கு ஒரு கிலோ 50 ரூபான்னு விக்கிற பொன்னி அரிசியை 1 கிலோ 25 ரூபான்னு தருவான். அதேசமயம், ஒரு மூட்டை நெல்லுக்கு அரசாங்கம் 300 ரூபா கொடுத்தா இவன் 700 ரூபா தர்றேன்னு சொல்லுவான். நாமளும் பல்லைக்காட்டிகிட்டு அவன் பின்னால போயிடுவோம்.

கொஞ்ச நாள்ல விவசாயிகிட்ட இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வெளி நாட்டு கம்பெனி தவிர வேறு யாரும் இல்லைன்னு ஒரு நிலைமை வந்துடும். அப்போ, நீ ஒரு மூட்டை (100 கிலோ ) நெல்லை 10 ரூபாய்க்கு கொடு. இல்லைன்னா நிலத்தை என் கிட்ட கொடுத்துட்டு எங்கயாச்சும் போய் செத்துடு அப்படின்னு சொல்லுவான். அப்போ யார் என்ன செய்ய முடியும்?

அதே மாதிரி ஒரு சில மாதங்கள்லேயே நாம மளிகை பொருட்கள் வாங்க அண்ணாச்சி கடை மாதிரி எந்த கடையும் இல்லாம போயிடும். அப்போ ஒரு கிலோ சாதா அரிசி 500 ரூபா. காசு இருந்தா வா. இல்லைன்னா பட்டினி கிடந்து சாவு. அப்படின்னு சொல்லிடுவான்.

இதுதான் நடக்கும்"னு சொன்னாரு.

ஏனுங்க...இது உண்மைதானுங்களா?

கொசுறு:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் டிரான்ஸ்பார்மர் பழுதால் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் மின் தடை - நாளிதழில் செய்தி.

என்னுடைய சந்தேகம்:

எங்க ஊர்ல டிரான்ஸ்பார்மர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்து மேல கரண்ட் இல்லையே?

சனி, 22 செப்டம்பர், 2012

முடவனை மூர்க்கன் அடித்தால், மூர்க்கனை முனி அடிக்கும்.


சமீபத்தில் இவர் எழுதி பிரசுரமான நூல் "பாவ புண்ணிய கணக்குகள்"

நம்மை மீறி என்ன நடந்து விடப்போகிறது என்ற நம்பிக்கை தேவைதான். ஆனால் இந்த எண்னம் அளவுக்கு அதிகமாகப் போய், மற்றவர்களை வதைப்பதில் முடிகிறதே. இதற்கெல்லாம் முடிவில்லையா என்று நான் பலமுறை வேதனைப்பட்டிருக்கிறேன். என் மனதில் இருந்து வந்த இந்த குழப்பத்திற்கு "பாவ புண்ணிய கணக்குகள்" நூலின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு குறிப்புகள் எளிமையாக விடையளித்தன.

முடவனை மூர்க்கன் அடித்தால், மூர்க்கனை முனி அடிக்கும்.

மனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும்!
சம்பாதிக்க கூடாதவை சாபமும், பாவமும்!

-இப்படி பல சிந்திக்க வைக்கும் கருத்துக்களுடன் வெளிவந்திருக்கிறது "பாவ புண்ணிய கணக்குகள்"

நூல் விலை ரூ.90/-
Blackhole Media Publication Limited,
7/1, 3rd Avenue, Ashok Nagar,
Chennai - 83.
Cell:96001 23146
Land Line : 044 43054779


**************************************


தெய்வங்களுக்கும் நண்பர்கள் தேவைப்படலாம்!
*********************************
சென்னைக்கு அருகில் இருக்கும் மலைக்கோயில் திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டு வழியாகவும், மாமல்லபுரம் வழியாகவும் செல்ல முடியும்.  1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது. (தஞ்சை பெரிய கோயிலைவிட மூப்பு.) மலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்டது என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மலைமேல் ஒரு கோயிலும்; தரையில் ஒரு கோயிலும் உள்ளது. எனது பயணம் மலைக்கோயிலை நோக்கி இருந்ததால் தாழக்கோயில் என்று அழைக்கப்படும் தரைக்கோயில் பக்கம் திரும்பவில்லை.

அதற்கு மற்றொரு காரணம், நான் அங்கு செல்லும் போது மாலை ஐந்தரை மணியைத் தாண்டியிருந்தது. இருட்டுவதற்கு முன்னால் மலை ஏற வேண்டுமே என்ற உந்துதல், வேகமாக ஏறத்தொடங்கினேன். 500 அடி உயரமுள்ள இம்மலையில் செங்குத்தான 565 படிகள். நடக்க, நடக்க சளைக்காமல் படிகள் தோன்றிக்கொண்டே இருந்தன. சற்றே ஆசுவாசப்படுத்த வேண்டியிருந்தது. சிறு சவாலாக கூட உணர்ந்தது. இறுதியில் கோயிலை அடைந்த போது நாலாபுறமும் இருந்து வந்து தழுவிய காற்றால், நடந்த களைப்பு மறைந்து, கண்களில் ஊரின் அழகு படர்ந்தது. மனம் ஆனந்தம் கொண்டது. சிறுவயது முதல் வயலும் வயல் சார்ந்த இடமும், கடலும்,கடல் சார்ந்த இடமுமாக வாழ்ந்து பழகியதினாலோ என்னவோ, மலையும் மலைச் சார்ந்த இடங்களுக்கு செல்கிற போது இங்கேயே இருந்துவிடக்கூடாதா என்கிற ஏக்கம் தரக்கூடியதாகவே இருக்கிறது. (எதிர்காலம் அப்படியும் அமையலாம்! யார் அறிவார்?)




நான் சென்ற நேரம், மாலை பூஜை தொடங்கியிருந்தது. சங்கொலி இசைக்க, மின்சார மேள தாளங்கள் ஒலிக்க, கருவறையில் சாம்பிராணி உள்ளிட்ட நறுமணங்கள் நாசியை வந்து தழுவ, அந்த ஞாயிற்றுகிழமையில் சுமார் இருபது நபர்களுக்கு உள்ளாகவே குழுமியிருக்க, நம் தேகமென்னும் ஆலயத்தில் குடியிருக்கும் ஆன்ம கடவுள் சற்றே அமைதி பெற்றது. அத்தகைய சூழலால் உடல் நல் அதிர்வுகளை உள்வாங்கியது. ஆலயங்களில் எனக்கு அபூர்வமாக நிகழ்வது இத்தகைய மனநிறைவு.(பொதுவாக ஆலயம் தோறும் நிரம்பி வழியும் புராணக்கதைகளைக் கேட்டு அடியேன் அதிர்வு பெறுவதில்லை.)

மலையில், மாலை வழிபாடு முடிந்த அடுத்த அரைமணி நேரத்தில், இரவு வழிபாட்டை தொடங்கி விடுகிறார்கள். இரவு ஏழரை மணிக்கெல்லாம் மலைக்கோயில் சாத்தப்படுகிறது. திருக்கழுக்குன்றத்தின் நட்சத்திர ஈர்ப்பே, ஒருகாலத்தில் மலையில் தினமும் மதிய பொழுது இரு வெள்ளைகழுகுகள் வந்து சக்கரைப்பொங்கல் சாப்பிட்டது தான். அதைக் காண இந்திய முழுதும் இருந்து பக்தர்கள், சுற்றுலாவாசிகள் நாளும் திரண்டனர். இதனால் ஊரின் பெயரே அப்படி அமைந்தது. கழுகுக்கு உணவு வைக்க என நிலங்கள் எழுதப்பட்டன. தனிப்பாரம்பரியம் உருவானது. நீண்ட காலமாக தொடர்ந்த இச்செயல், ஒருநாள் சட்டென ஸ்தம்பித்துபோனது. கழுகுகள் வருவதில்லை என்பது பேச்சானது.

ஆம், கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக கழுகுகள் வருவதில்லை. ஏன் என்ற காரணமும் அறிய இயலவில்லை. கடும் முயற்சிகள் செய்து பார்த்தார்களாம். சந்தேகத்தின் பேரில் ஊர் கடைசியில் தங்கியிருந்த பறவை வேட்டையாடும் குறவர் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டார்களாம். மந்திரங்கள், பூஜைகள் செய்து பார்த்தார்களாம். கழுகுகளின் வருகை திரும்ப, இன்று வரை தொடங்கவே இல்லை. அவை என்ன ஆனது? அதுவும் தெரியவில்லை. இரவு பூஜைக்கான இடைப்பட்ட நேரத்தில் ஆலயத்துக்குள் அருகே அமர்ந்திருந்த வயோதிகர் ஒருவரோடு உரையாடும் ஆர்வம் ஏற்பட்டது. ஏனெனில் அவரது தோற்றத்தில் ஒரு ஈர்ப்பு இருந்தது. முதல் பேச்சையே இப்படித்தான் தொடங்கினேன்.

ஐயாவுக்கு அகவை என்ன ஆகிறது? பனிவோடு கேட்டேன். 85 தொடங்கி விட்டது என்றார். வயதைக்கேட்டு, வியந்துவிட்டேன். அவரது பாதி அகவையில் உள்ள நான், சற்றுமுன் தானே படியேறி வந்திருக்கிறேன். தினமும் மாலை வழிபாட்டுக்கு வந்துவிடுவதாக சொன்னார். நாற்பது ஆண்டுகளாக அவ்வூரில் வசிப்பதாக சொன்னார். ஆலயத்தின் சிறப்புகள் குறித்து நிறைய பேசினார்.

"இது, அதக்குடு இதக்குடுன்னு கேட்கிற இடமில்லையே. முக்திக்கு சித்தி பன்னுற இடமாயிற்றே. அதனால சிவாலாயங்களில் தினப்படிக் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். விழாக்காலங்களில் இங்க ஒருலெட்சம் ஜனம் கூடும்.'' என்றார்.  அவரது பேச்சில் சில ரசிக்கும்படி இருந்தன.
மலையைவிட்டு இறங்கியதும் அவரது சந்திப்பு எனக்குள், மற்றொருவரை நினைவுப்படுத்திவிட்டது. மலையில் சந்தித்த இவரைபோலவே,  வேறொரு ஆலயத்தில் இன்னொருவர் அறிமுகமானவர். அறிமுகத்தோடு நின்றுவிடாமல், நட்பாகத் தொடர்ந்தவர். அந்த நபர் திருக்கண்ணமங்கை ஆபத்சகாயம். (திருவாரூர் மாவட்டம்) அவரை நான் கடைசியாக சந்தித்து, பேசி பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். தொடர்பே இல்லை. திருக்கழுக்குன்றம் பயணத்திற்குப் பிறகு, அவரது நினைவு என்னை முழுமையாக ஆட்கொண்டது.

திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலுக்கு தொடர்ச்சியாக செல்பவர்கள் ஆபத்சகாயத்தை சந்திக்காமல் இருக்க முடியாது. நான் சந்திக்கும்போது, அவருக்கு அகவை 65யைத் தாண்டியிருக்கும் என கருதுகிறேன். பெருமாளின் உண்மைத்தொண்டனாகவே அங்கு வரும் பக்தர்களுக்கு தொண்டு செய்வார். நல்ல உயரமான தோற்றம். ஆச்சார வைணவர் போல் காட்சியளிப்பார், எப்போதும் சிரித்த முகமாய் உரையாடுவார்.  எனினும் அவர் அய்யங்கார் அல்ல. அவரது அணுகுமுறையாலே அந்த பெருமாள் கோயில் எனக்கு பிடித்து போனது. என், வீட்டிற்கு வரும் விருந்தினர்களோடு அடிக்கடி போகும்படியானது. அவ்வாறு போகிற சமயங்களில் அவர் வீட்டிற்கு முதலில் சென்று, அவரை அழைத்துக்கொண்டு ஆலயத்திற்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன். அவர் வீட்டு வாசலில் ஒரு சிறு திண்ணை இருக்கும். அதில் எப்போதும் மஞ்சள் பூசி கோலம் போடப்பட்டிருக்கும். அங்கே ஒரு விளக்கு எரிந்துகொண்டிருக்கும். அந்த திண்ணையில் காளி வாசம் செய்வதாக கூறுவர். அத்திண்ணையில் வீட்டிற்கு வரும் புதியவர்கள் உட்கார்ந்துவிடாமல் எச்சரிக்கை செய்வார்.

பெருமாள் கோயிலுக்கு புதிதாக வரும் பக்தரிடம், தானே முன்வந்து கோயில் குறித்து விளக்கம் தருவார். பெருமாள் குறித்து பெருமை பேசுவார். கோயிலின் உட்பிரகாரத்தின் சுவர்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பு குறித்தெல்லாம் கூறுவார். இருட்டான இடங்களில் இடுப்பில் செருகி வைத்திருக்கும் மெழுகுவர்த்தியை எடுத்து ஏற்றி காட்டி விளக்குவார். புரணக்கதைகçeக் கூறுவார். ஒரு நாளில் பலமுறை விளக்கம் சொல்ல நேர்ந்தாலும், அலுப்புகாட்டாமல் நடந்துகொள்வார். அவரை கைடு என கருதி வெளியூர்காரர்கள் பணம் தர முற்பட்டால் சிரித்துகொண்டே மறுப்பார். தன் குடும்ப பாரம்பரியம் சொல்லுவார். தொலைவில் இருந்து வந்திருக்கிறார்கள் என்றால் வீட்டிற்கு அழைப்பார். உபசரிக்க முற்படுவார். இதெல்லாம் பெருமாள் தொண்டு என்பார். எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கிக் கொள்ளமாட்டார். இப்படியாக அந்த பெருமாளுக்கு பக்தராக வருபவர்கள், பின்னாளில் அவருக்கு நண்பராக மாறிப்போவார்கள்.

ஆலயங்களில் தெய்வங்களுக்கு பணிவிடை செய்ய குருக்கள், பட்டாச்சாரியர் போன்றோரை அரசு, ஆதீனங்கள் நியமிக்கின்றன. அதையும் தாண்டி ஆபத்சகாயம் போன்றோர்களைத் தெய்வங்களே, நேரடியாக தங்களின் நம்பிக்கைக்குரியவர்களாக, நண்பராக நியமித்துக் கொள்கிறதோ எனக் கருதத்தோன்றும். ஆபத்சகாயம் பெருமாளுக்கு நண்பரைப் போல் விளங்கினார். நண்பரை போல் தினமும் சந்தித்தார். உறவாடினார். இன்றும் அந்த நட்பு அவர்களுக்குள் இருக்கும் என்றே நம்புகிறேன். .
ஆம், மனிதர்களைப் போல் தெய்வங்களுக்கும் நண்பர்கள் தேவைப்படலாம். யாருக்கு தெரியும்?