Search This Blog

வியாழன், 14 ஏப்ரல், 2011

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 ஐநூறு தமிழ் அறிஞர்கள் கூடி ஆய்வு (?!) செய்து தை 1 அன்று தமிழ் புத்தாண்டு என்று சொன்ன பிறகும் நீ எப்படி சித்திரை முதல் தேதியை தமிழ் புத்தாண்டு என்று கூறலாம் அப்படின்னு ஆட்டோவெல்லாம் அனுப்பிடாதீங்க.

தமிழ் பஞ்சாங்க முறையில் வெறும் மூடநம்பிக்கையாக பார்க்காமல் முட்டாள் தனமாக நடந்து கொள்ளாமல் வான சாஸ்திர அறிவியல் முறையாக நினைத்துப்பாருங்கள். பிரமிப்பு வரும்.

மனிதன் என்றால் கண்கள், கால்கள், காதுகள், கைகள் போன்றவை இரண்டு என்ற எண்ணிக்கையிலும், இன்னும் பல விஷயகள் சுருதி பிசகாமலும் தான் பிறந்து வருகிறான். அதே போல் அவனுடைய மனமும், அவன் ஈடுபடும் காரியங்களும் அவற்றின் வெற்றிகளும் எதோ ஒரு வரையரைக்குட்பட்டுதான் நடக்கின்றன.

 இதை மிகச் சரியாக ஜோதிடக் கலை மூலமாக கணிக்க முடியும். இதை பலருக்கும் சரியாக செய்ய முடியவில்லை. அதாவது கணக்கு பண்ண முடியவில்லை.

இதனால் ஜோதிடமே தவறு என்ற வாதம் தப்பு. இதை வழிகாட்டிப் பலகையாகத்தான் பயன் படுத்த வேண்டும். வாகனமாக்க நினைத்தவர்கள் அது முடியாமல் போகவும்தான் ஜோதிடமே தவறு என்று சொல்கிறார்கள்.

கடவுள் இல்லை என்று சொல்லும் கட்சியில் இருக்கும் பலரும் புது வீட்டுக்கு கிரஹப்பிரவேச நாளில் ஹோமம் செய்யாமல் இருப்பதில்லை.

இதுதான் உலகம். அதாவது ஊருக்கு உபதேசம்

புதன், 13 ஏப்ரல், 2011

அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...


பகுத்தறிவைப்பற்றி பேசினாலும் திருவாரூர் வாழ் மக்களின் மன உணர்வுக்கு மதிப்பளித்து பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரை சீரமைத்து வலம் வரச் செய்தார் என்று அவரைப்பற்றி பெருமை பேசினார்கள். இருக்கட்டும்.

இப்போது என்னுடைய குழப்பமெல்லாம் என்னவென்றால் முதல்வருக்கும் அவரது குடும்பத்துக்கும் கடவுள் நம்பிக்கை உண்டா, இல்லையா. இந்த உண்மையை தெளிய வைத்தால் நல்லது.



கடவுள் பக்தியைப் பற்றி ஒரு பக்கத்துக்கு தங்கள் சவுகர்யத்துக்கு பேசிவிட்டு பின்னர் பிசிறில்லாமல் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். இன்று 13.4.2011 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை எமகண்டம். அதனால் காலை 7.15 மணி சுமாருக்கு முதல்வருக்காக திருவாரூர் தொகுதி முழுவதும் வாக்கு கேட்ட அவரது புதல்வி திருவாரூர் பெரிய கோவிலில் வந்து அர்ச்சனை செய்தார்.

அவங்க உலகத்தில் இருக்கும் எல்லா கோவில்களிலும் பிரார்த்தனை செய்யட்டும். அது அவர்களது உரிமை. அதை பகிரங்கமாக செய்யட்டுமே. தலைவரிடம் கேட்டால் அது என் பெண்ணின் விருப்பம். அதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. என்று சொல்வார். அதையேத்தான் கேட்கிறோம், வழிபாடு என்பது ஒவ்வொரு மனிதனின் மன உணர்வுடன் சம்மந்தப்பட்டது. எனக்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை. தன்னம்பிக்கை போதுமே என்று சொல்பவர்கள் அப்படியே இருக்கட்டும். ஆனால் தன்னுடைய மன தைரியத்துக்காக மனிதர்களில் பலர் இறைவனிடம் நம்பிக்கை வைக்கிறார்கள். இதை ஏன் ஏளனம் செய்ய வேண்டும்.

பல ஊர்களின் சிறப்பு மிக்க ஆலயங்களில் பக்தர்கள் சுரண்டப்படுவதற்கு முக்கிய காரணமே அரசியல் வியாதிகள்தான். எதாவது ஒரு கோயிலில் கூட்டம் கூடுவது தெரிந்தால் அந்த கோவில் வாசலில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை வாடகை வசூல் செய்யும் வகையில் ஒப்பந்தம் போட்டு மக்களை மொட்டை அடிப்பதில் முன்னணி வகிப்பது அரசியல் குண்டர்கள்தான்.

அரிசி 1ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் சில கட்டண கழிப்பிடங்களில் சிறு நீர் கழிக்க கூட 2 ரூபாய். கண்டதையும் இலவசமாக கொடுப்பவர்கள், மிக அதிக எண்ணிக்கையிலான கழிப்பிடங்களை அமைத்து மக்களின் பயன் பாட்டுக்கு இலவசமாக திறந்து விட்டால், வியாதிகள் வந்த பிறகு மக்களுக்காக அரசு செய்யும் செலவில் பாதி கூட ஏற்படாது.

இப்போது யோசித்துப்பார்க்கும்போது பல விஷயத்தில் சீர்திருத்தம் தேவை என்று தோன்றுகிறது. ஆனால் என் பார்வையில் முதலிடம் பெறும் தேவை: பசித்திருப்பவனுக்கு ஒரு வேளை உணவை பிச்சையாக போடுவதை விட அந்த உணவை அவனுடைய உழைப்பில் பெற வழி செய்ய வேண்டும் என்ற கருத்துடன் முன்பு ஒரு முறை நான் எழுதிய கதை.
 
நெய்விளக்குத்தோப்பு

திருவாரூர் நகரில் பல்வேறு சுடுகாடுகள் இருந்தாலும் அனைத்து வயதினருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது நெய்விளக்குத்தோப்பில் உள்ள சுடுகாடுதான்.இங்குள்ள மக்கள் யாருக்குமே அந்தப் பெயரைக் கேட்டாலோ உச்சரித்தாலோ அவர்கள் மனதில் அச்சம் அல்லது வெறுப்பு கண்டிப்பாகத் தோன்றும்.

ஓடம்போக்கி ஆற்றங்கரையோரம் உள்ள அந்த சுடுகாட்டுப் பகுதியில் நிறைய வீடுகள் வந்துவிட்டன. பேய், ஆவி போன்றவற்றின் மீது மக்கள் கொண்டிருந்த பயம், மூடநம்பிக்கை ஆகியவை மிகவும் குறைந்துவிட்டதற்கான குறியீடுதான் இது.

பேய்கள் பற்றிய வதந்திகளுக்குப் பயப்படாத அந்தப் பகுதி மக்கள் தற்போது நாய்களுக்கு அஞ்சி நடுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

விஜயபுரம் பகுதியிலிருக்கும் பழைய ஆற்றுப்பாலத்தைக் கடந்தால் நகரின் மையப்பகுதியை இணைக்கும் முக்கிய சாலையான நேதாஜி ரோடு. பாலத்தைக் கடந்ததும் நேதாஜி சாலையிலிருந்து ஆற்றோரமாக ஒரு குறுகிய சாலை பிரியும்.

அந்தப் பகுதியைத்தான் நெய்விளக்குத் தோப்பு என்று சொல்வார்கள்.அங்கிருந்து சுமார் ஒருகிலோமீட்டர் தொலைவில்தான் சுடுகாடு என்றாலும், பயம் காரணமாக இப்போதும் மனையின் மதிப்பு மற்ற பகுதிகளைவிட குறைவாகத்தான் இருந்தது.

சுடுகாட்டைக் கடந்து சற்று தொலைவில் இருந்த காலி இடங்களில்தான் நகராட்சி நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு.(வேறு என்ன...குப்பைகள் கொட்டப்படும் கிடங்குதான் அது.)

இது ஒன்று போதாதா...வெறிநாய்கள் அந்த இடத்தில் கூடிக் கூத்தடிக்க?

காரில் செல்பவர்கள் எல்லாம் நம்மை ஒன்றும் செய்யக்கூடாது என்று நீதிமன்றப் படியேறி ஆதரவு கொடுத்த வி­யத்தை அவைகள் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டதாக எண்ணும் அளவுக்கு அவை திட்டம் போட்டு  நடந்து செல்பவர்கள், சைக்கிளில் பயணிப்பவர்கள், முக்கியமாக திண்பண்டங்களை வைத்திருக்கும் குழந்தைகள் என்று இனம் கண்டு துரத்தி துரத்திக் கடித்தன.

அப்படித்தான் ஒருநாள் நான்காம் வகுப்பு படிக்கும் தேவயானியை (காதல்கோட்டை படம் வந்தபோது காமாட்சி வயிற்றில் கருவானவள்) நான்கைந்து நாய்கள் கடித்துக் குதறிவிட்டன.

அவளைக் காப்பாற்றச் சென்ற ஆண்களில் சிலரும் நாய்களிடம் சிக்க வேண்டியதாயிற்று. ஆனால் இது வழக்கமான நிகழ்வு என்பதால் யாரும் காமாட்சியிடம் கோபப் படிவில்லை.

இவளின் கெட்டநேரம்...அரசு மருத்துவமனையில் வெறிநாய்க்கடிக்குரிய தடுப்பூசி இருப்பு இல்லை.

""நாங்க என்னம்மா பண்றது...திருவாரூர் மட்டுமில்லாம சுற்றிலும் இருக்குற நூற்றுக்கணக்கான கிராமங்கள்ல இருந்து தினமும் இப்படி பல கேஸ் வருது.அதிகமா மருந்து அனுப்பச் சொல்லி மேலிடத்துக்கு எழுதி அனுப்பியிருக்கோம்.நீ உன் குழந்தையைக் காப்பாத்தணும்னா வெளியில காசு குடுத்துதான் ஊசி மருந்தை வாங்கிட்டு வரணும்.''என்று மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டார் அந்த மருத்துவர்.

உடனடியாக அவள் சென்று தஞ்சமடைந்தது ஆதிகேசவன் என்ற கந்துவட்டிக்காரனிடம்.
ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்பு காமாட்சியின் கணவன் சிக்குன்குனியா காய்ச்சலால் மிகவும் அவதிப்பட்டான். அதற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் வேறு பல காரணங்களால் வாங்கிய கடனுக்கு தவணை தவறிக் கொண்டிருந்தது. காரணம், இப்போது வரை தெனாலி அந்தக் காய்ச்சலின் பாதிப்பால் வேலைக்குச் செல்ல இயலவில்லை.

நிலைமை இப்படி இருந்தாலும் தேவயானிக்கு உயிரைக் காக்கும் ஊசி வாங்கவேண்டும் என்று கூறிய உடனே பணம் கொடுத்த ஆதிகேசவனை தெய்வத்துக்குச் சமமாக நினைத்துப் புகழ்ந்துவிட்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.

ஓரிரு மாதங்களில் அவன் வைக்கப்போகும் வெடி என்ன என்று ஆதிகேசவனைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.ஊசிமருந்து மூலம் தேவயானி உயிர்பிழைத்துவிட்டாலும் நாய்கள் கடித்துக் குதறிய காயம் ஆற இரண்டு மாதங்களாகிவிட்டன.பிறகுதான் பயம் குறைந்து படிப்படியாக பள்ளிக்குச் சென்று வந்தாள்.

தெனாலிக்கு சிக்குன்குனியா பாதிப்பு குறைந்து வேலைக்கு திரும்பிச் சென்றபோது அந்த முதலாளி,""இது ஒண்ணும் அரசு அலுவலகம் இல்லை...வேற ஆளை சேர்த்தாச்சு...”என்று விரட்டிவிட்டார்.

இப்போது அவன் வேறொரு கடையில் மிகக் குறைந்த ஊதியத்துக்கு சம்மதித்து வேலை செய்கிறான்.

""உன் பேச்சைக் கேட்டு நாலு பொண்ணு பெத்தேன் பாரு...இப்ப இதுவும் வேணும்...இன்னமும் வேணும். ஒண்ணோட நிறுத்தி இருந்தா அவளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கி இருக்கலாம்.

வைத்திய செலவுக்கு வாங்குன கடனை எந்தக் காலம் கட்டி முடிக்கப்போறோம்னு தெரியலை.நம்ம விதி எந்த நேரத்துல ஆதி ரூபத்துல வந்து ஆட்டம் போடப்போகுதோ தெரியலை.'' என்று காமாட்சி கூறி முடிப்பதற்குள் வீட்டுவாசலில் மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.

இவர்கள் பயந்தது போல் ஆதிகேசவன் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியயல்லாம் மிரட்டவில்லை.

"இதப்பாரும்மா...உசுரு சம்மந்தப்பட்ட வி­யம்னுதான் வேற எந்தக் கேள்வியும் கேட்காம ரூபாயை எடுத்து நீட்டுனேன்.கொஞ்சம் அசந்தா உங்களை மாதிரி என்னையும் யார்கிட்டயாவது வட்டிக்குப் பணம் கேட்க வெச்சிடுவீங்க.

தென்றல்நகர்ல தெரிஞ்சவங்க, புரு­ன் பொண்டாட்டின்னு ரெண்டுபேருமே வேலைக்குப் போறாங்க. வீட்டுல மூணுவயசுக் குழந்தை இருக்கு.சமையல் கூட அந்தம்மாவே பண்ணிடும். புள்ளையைப் பார்த்துக்க,மற்ற வேலைகளைச் செய்ய ஆள் வேணும்.வீட்டோட இருக்கணும்னு கேட்குறாங்க. உன் பொண்ணை அனுப்பிவை... முதல்லயே ரொக்கமா ஒரு தொகை தருவாங்க...எனக்கு தர வேண்டிய கடனுக்கு சரியாப்போகும்.

மாசா மாசம் அவுங்க தர்ற பணம் உங்களுக்கு உதவியா இருக்கும். இந்தப்புள்ளைக்கு துணிமணியும் சாப்பாடும் அவங்க வீட்டுலேயே. வயசுக்கு வந்ததுக்கு அப்புறம் ரெண்டு மூணு வரு­ம் கழிச்சு அவங்களே ஒரு நல்ல இடத்துல கல்யாணம் கட்டிக் கொடுக்க உதவி செய்வாங்க. வேற என்ன வேணும்? ... ரெண்டு நாள் யோசிச்சு முடிவு சொல்லுங்க. எந்த முடிவா இருந்தாலும் என்கிட்ட வாங்குன கடனைத் தீர்க்குற முடிவா இருக்கணும்மா...''என்ற ஆதிகேசவன் இவளை ஒரு வார்த்தை கூட பேசவிடாமல் கிளம்பிச் சென்றான்.

நாய்க்கடியால் ஊசலாடிய உயிரைக் காப்பாற்றிவிட்டு அந்தக் குழந்தையின் எதிர்காலத்தையே தன் வருமானமாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் ஆதிகேசவன் பேசியதைக் கேட்ட காமாட்சியும் தெனாலியும் திகைத்துப்போய்விட்டார்கள்.

மாற்றுவழி எதுவும் உடனடியாகப் புலப்படவில்லை.

"அப்பவே செத்துருந்தா அந்த நேரத்து அவஸ்தையோட முடிஞ்சிருக்கும்.அப்போ கஷ்டப்பட்டு காப்பாத்தி யார் வீட்டுலேயோ அடிமையா வளரணுமா நம்ம பொண்ணு...''என்று தெனாலி புலம்பினான்.

"அடச்சீ...சும்மாரு...நம்ம சந்தோ­த்துக்காக பெத்த புள்ளைங்களை செத்துருந்தா பரவாயில்லைன்னு சொல்றியே...உனக்கு வெட்கமா இல்லை...ஒழுங்கா அதிக சம்பளத்துல வேற வேலை கிடைக்குதான்னு பாரு...நான் வீட்டு வேலை செய்யுற டீச்சரம்மாகிட்ட ஏதாவது கேட்குறேன்...''என்று காமாட்சி கணவனைத் திட்டிவிட்டுக் கிளம்பினாள்.

"ஏய்... காமாட்சி... இவ்வளவு நடந்துருக்கு...என்கிட்ட ஏதாவது உதவி கேட்டா என்ன?...அட்லீஸ்ட் உன் பொண்ணை நாய் கடிச்ச வி­யத்தையாவது சொல்லியிருந்தா மருந்து செலவுக்காவது ஏற்பாடு பண்ணியிருப்பேனே...''வசுந்தரா டீச்சர் அக்கறையுடன் கேட்டாள்.

"இவ்வளவு பாசமா கேட்டீங்கிளே...அது ஒண்ணு போதும் டீச்சர்...எனக்கும் என் வூட்டுக்காரருக்கும் கைகால் எல்லாம் நல்லாத்தான இருக்குது...அப்புறம் ஏன் அடுத்தவங்ககிட்ட உதவி?...அது ஒரு மாசம் ஜூரத்துல படுத்துட்டதால கொஞ்சம் கஷ்டமாப்போச்சு.
அதோட என் வூட்டுக்காரருக்கு உழைப்புக்கு ஏத்த கூலி கிடைக்குறமாதிரி இருந்தா நாங்க யார்கிட்டயும் கடன் கூட வாங்கத் தேவையில்லை.
டீச்சர்...உங்க பள்ளிக்கூடத்துலதான் கேண்டீன் இருக்கே...அதுல எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுங்களேன்.எந்த வேலையா இருந்தாலும் செய்யுறேன்...எக்காரணம் கொண்டும் நாலு பொண்ணுங்களும் படிக்காம இருக்கக் கூடாது.அதுக்காகத்தான் கேட்குறேன் டீச்சர்...''என்ற காமாட்சியின் குரலில் தெரிந்த உறுதி கண்டு திகைத்துப்போன வசுந்தரா,மனதுக்குள்ளே மகிழ்ந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மேலும் சீண்டிப் பார்க்க முடிவு செய்தாள்.

"காமாட்சி...நீ காலையிலேயும் சாயந்திரமும் ரெண்டு வீடுகள்ல வேலை செய்யுறதே கஷ்டமா இருக்குன்னு சொல்லியிருக்க...இன்னும் ஏன் சிரமம்...ஆதிகேசவன் சொன்ன மாதிரியே தேவயானியை வேலைக்கு அனுப்பிட்டா அவளுக்காவது நல்ல உணவு துணிகள் கிடைக்கும். உங்களுக்கும் இப்ப கஷ்டம் தீரும்... எல்லாத்தையும் விட அவளோட கல்யாணத்தைக் கூட அவங்க செலவுல செய்யுறதுக்கு தயாரா இருக்குறது சாதாரண வி­ஷயமா?... நீ கஷ்டப்பட்டு உன் பொண்ணைப் படிக்க வெச்சாலும் பின்னால சம்பாதிச்சு உனக்கா தரப் போறா?... எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசி...''என்ற வசுந்தரா,காமாட்சியின் பதிலுக்கு ஆர்வமானாள்.

"இவ்வளவு படிச்ச நீங்களே இப்படி பேசலாமா டீச்சர்? ஆதிகேசவன் சொன்னபடி செஞ்சு என் பொண்ணும் நாளைக்கு என்னைப் போலவே நாலு பெத்து கஷ்டப்படணுமா?

நானும் என் புரு­னும் ஒழுங்கா பள்ளிக்கூட படிப்பையே முடிக்கலை.அவரு கடைகடையா தாவிகிட்டு சரியான சம்பளம் வாங்க முடியாம அல்லாட, நான் வீடு வீடா பாத்திரம் தேய்ச்சு பிழைப்பை நடத்தலாமான்னு பார்க்குறேன்.

பத்தாவது வரை படிக்க வெச்சாலும் மளிகைக் கடையிலோ எஸ்.டி.டி பூத்துலேயோ அவனுங்க குடுக்குற எழுநூறு எட்டுநூறுக்கு உயிரைக் குடுத்து வேலை செய்யணும்.அதோட ஒரு சில பொறுக்கி முதலாளிங்க தர்ற வேற விதமான தொந்தரவையும் தாங்கணும். இது எல்லாம் தேவையா... கல்லூரி வரை படிக்க வெச்சு, கம்ப்யூட்டர் கிளாசுக்கு அனுப்பிட்டா அப்புறம் அவ சாமர்த்தியம்.

நான் என்னைப் பெத்ததுங்களை திட்டுற மாதிரி என் பொண்ணுங்க என்னைய எதுவும் சொல்லக்கூடாது.அதுக்காக என்னால முடிஞ்ச அளவு என்ன...அதுக்கும் மேலேயே உழைக்கத் தயாராயிட்டேன்.”

"காமாட்சியிடமிருந்த தெளிவான குறிக்கோள் நன்கு படித்து பட்டம் பெற்ற பெண்களிடம் கூட இருப்பது சந்தேகம்தான்...'என்று வியந்த வசுந்தரா,

"இவ்வளவு கஷ்டத்துலேயும் என்கிட்ட பண உதவியை எதிர்பார்க்காம, உன்னைய நம்புன பாரு...அதுக்காக உனக்கு என்ன வேணுன்னாலும் செய்யலாம்.எனக்கு ரொம்ப சந்தோ­மா இருக்கு''என்றாள்.

"பெரிசா எதுவும் வேண்டாம்மா...எனக்கு கேண்டீன்ல வேலை...என் வூட்டுக்காரருக்கு உழைப்புக்குத் தகுந்த கூலி கிடைக்குற மாதிரி வேலை...அது போதும்.''என்று சிரிக்க வசுந்தராவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.

சனி, 9 ஏப்ரல், 2011

இந்த ஒற்றுமை நன்மைக்கா?

இந்தியா கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்றது மகிழ்ச்சியான தருணம்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கடந்த 2007ல் எந்த எதிர்பார்ப்பும் ஏற்படாத வகையில் முதல் சுற்றிலேயே நாம் வெளியேறி வந்து விட்டோம். 2003ல் பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் ஆஸ்திரேலியா நமக்கு ஆப்பு வைத்தது. ஆனால் 2011ஐ பொறுத்தவரை லீக் மேட்ச் வரை மெகா சீரியல் போல் சென்றுகொண்டிருந்த இந்திய அணியின் ஆட்டம், நாக் அவுட் சுற்றில் நச் என்று மூன்றே ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று கோப்பையைக் கைப் பற்றியது. எந்த நேரமும் பரபரப்பாக இயங்கும் நாட்டின் முக்கிய நகரங்களில் இதயம் போன்ற சாலைகள் கூட வெறிச்சோடிப்போயின.

இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதிய அரையிறுதி ஆட்டம் துவங்கும் நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டது. அன்று முழுவது இப்படித்தான் ஏறத்தாழ ஒண்ணரை மணி நேரம் பவர் கட். உடனே திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கிரிக்கெட் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அந்தப் பக்கமாக சென்ற நாகை கலெக்டருடைய காரை வழிமறித்து சாலை மறியல் போராட்டம் செய்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்தன.

கிரிக்கெட் மீது வெறித்தனமாக இருக்கும் பலர் சொல்லும் சப்பைக்கட்டு காரணம், இந்த ஒரு விஷயத்தில் நம் நாட்டு மக்களின் தேசப்பற்று தெரிகிறது என்பதுதான்.

போட்டி நடக்கும்போது மைதானத்திலோ அல்லது வீட்டிலோ இருந்து ஆரவாரத்துடன் நேரிலோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ போட்டியைப் பார்ப்பதுடன் இவர்களின் ஒற்றுமை முடிந்து விடும்.

மின்வெட்டு காரணமாக பல தொழில்கள் முழுமையாகவோ,பகுதியாகவோ முற்றிலும் நசிந்து விட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து கொண்டிருக்கின்றனர். அதுதான் வருடம் தோறும் மென்பொருள் துறையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கிறதே என்று சப்பையாக ஒரு காரணம் சொல்வார்கள்.

நாங்கள் குடியிருந்த பகுதியிலேயே இலவச தொலைக்காட்சி கிடைக்கவில்லையே என்று தெருவில் குடியிருக்கும் கட்சி பிரதிநிதியிடம் சண்டை போட்டு வாங்கிய மக்கள், சாக்கடை எந்த நேரமும் நிரம்பி வழிவதைப் பற்றி நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க முன்வருவதில்லை. அவ்வளவு ஏன், நான் மனு எழுதினால் கூட தெருவாசிகள் என்ற முறையில் கையெழுத்து போடக்கூட மிகவும் தயங்குகிறார்கள்.அது வெறும் கோரிக்கை மனுதான். அதற்கே இப்படி.

இவர்கள் எங்கே ஒரு அநீதி என்றால் பொது நல மனு மூலம் நீதிமன்றத்தில் கேள்வி கேட்கப்போகிறார்கள்.?

சமுதாயத்திற்கு நல்லது செய்யும் விஷயத்தில் இல்லாத ஒற்றுமை ஒரு கேளிக்கையை ரசிக்கும்போது மட்டும் இருப்பது வரமா சாபமா?

ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது. ஆங்கிலேயர்கள் மெக்காலே கல்வி முறையை கொண்டு வந்து மனப்பாடம் செய்வதில் வல்லவர்களுக்கு மட்டும் நல்ல கல்வி என்ற முறையை கச்சிதமாக செய்து விட்டுப் போனார்கள். நாம் கொஞ்சம் முன்னேறி மனப்பாடம் செய்ய முடியவில்லை என்றால் என்ன, கருப்போ, வெள்ளையோ...உன்னிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்தால் உயர்கல்வி உண்டு. பிறகு அதை நீ இந்த சமுதாயத்திடம் எப்படி சுரண்டினாலும் ஓ.கே என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டோம்.

இப்போது அதையும் தாண்டி, நூறு நாள் வேலைத்திட்டம், இலவசம் அது இது என்று கொண்டு வந்து குறிப்பிட்ட சாரரை மேலும் சோம்பேறிகளாக்கி மிகச்சில முதலாளிகளிடம் மட்டுமே கருப்பு பணம் குவிய வழி செய்து கொண்டிருக்கிறார்கள்.

 சிறுதொழில்களையும் விவசாயத்தையும் நாம் அழிய விட்டுக்கொண்டிருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இந்தியாவில் வளர்ந்து நிற்கும். அதற்கு முக்கிய காரணம் நமது மக்கள் தொகை. இவ்வளவு மக்கள் தொகை இருக்கும் நம் நாட்டின் பலமும் பலவீனமும் இதுதான்.