Search This Blog

புதன், 8 செப்டம்பர், 2010

நடிகர் முரளி - திடீர் மரணம் - என் நினைவிற்கு வந்தவை...

எனக்கு சினிமா மீதும் நடிகர்களின் நடவடிக்கை குறித்தும் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் உண்டு.ஆனால் இந்த பதிவில் அவற்றைப் பற்றி எழுதவில்லை.
ஒரு திரைப்பட விழாவில்,நடிகர் சத்யராஜ் "ரொம்ப வருஷமா முரளி காலேஜ் போய்கிட்டே இருக்கார். தமிழக முதல்வரிடம் சொல்லி பாஸ் போட சொல்லணும்ப்பா."என்று கிண்டலாக சொன்னார். இந்த செய்தியைக் கேட்டதும் அனைவருக்கும் சிரிப்புதான் வரும்.

இவர் பெரும்பாலான படங்களில் காதல் ஹீரோவாகவே அறியப்பட்டார்.அதிரடி சண்டைக்காட்சி உள்ள படங்களில் அதிகமாக நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

அதர்மம்

அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று அதர்மம்.நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது (1994 என்று நினைக்கிறேன்.) வந்த படம். வீரப்பன் கதை, படத்தின் பின் பகுதியில் அடர்ந்த காடுகள்தான் கதைக்களம் என்று இருந்ததால் என்னை அந்த வயதில் அதிகமாகவே கவர்ந்த படம்.
சின்ன பசங்க நாங்க

இந்தப் படமும் என்னுடைய மிகச் சிறிய வயதில் பார்த்ததுதான்.ரேவதி வாயசைக்கும் "என்ன மானமுள்ள பொண்ணு என்னு மதுரையில கேட்டாக..."பாடலும் வலிப்பு நோய் வந்த சார்லியின் கையில் கத்தியைக் கொடுத்து அவர் கையாலேயே அவரை வில்லன்கள் சாக வைப்பதும் அந்தப் படத்தைப் பொறுத்த வரை என் நினைவுக்கு வரும் விஷயங்கள்.
அவர் நடித்த பல திரைப்படங்களை சேட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பார்த்ததுதான். சமுத்திரம்,ஆனந்தம் ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் உறுத்தாத நடிப்பு என்று சொல்லலாம்.

பொற்காலம்-1997

இந்தப் படம் எங்கள் ஊர் திரையரங்கம் ஒன்றில் தீபாவளிக்கு ரிலீசாகி, பொங்கல் வரை சுமார் எழுபத்தெட்டு நாட்கள் திரையிடப்பட்டது. அப்போது நான் அந்த திரையரங்கில் ஆப்ரேட்டர் அசிஸ்டெண்ட்டாக இருந்தேன்.
படத்திற்கு இசை தேவா.

சேலையின் பெருமை சொல்லும் சிகப்புக் கலரு பாடல்,

சிற்பமாகும் மண்ணின் வளத்தைக் கூறும் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்,
பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் வயல்வெளிகளில் பாடல்கள் படமாக்கப்பட்ட காலகட்டத்தில், வறட்சியின் குறியீடான கருவேலங்காட்டை களமாக்கி கதாப்பாத்திரங்களின் சூழ்நிலையை உணர்த்தும் பாடல், உடல் ஊனம் ஒரு குறையே இல்லை என்று நெத்தியடியாய் சொன்ன பாடல் என்று படத்தில் இருந்த நாலு பாடல்களும் (கேசட்டில் ஐந்து) ஆழமான கருத்துள்ளவை.

பொறுப்பில்லாத தந்தையாக மணிவண்ணன். இப்படி ஒரு அண்ணன் நமக்கு கிடைக்கமாட்டானா என்று எல்லா பெண்களையும் ஏங்க வைத்த கதாபாத்திரமாக முரளி நடித்திருந்த பொற்காலம் படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.

என்னதான் தங்கையின் மீது பாசமழை பொழிந்தாலும் அடி மனதில் அவனும் மற்றவர்களைப் போன்ற மன ஓட்டம் உள்ளவன்தான் என்ற வெளியில் தெரியாத, சாதாரணமாக நாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையை வடிவேலு கதாபாத்திரத்தின் வசனம் மூலமாக சாட்டையடியாய் வெளியே கொண்டு வந்திருந்தார் இயக்குனர் சேரன்.

எனக்குப் பல வாழ்வியல் உண்மைகளை உணர்த்தியதுடன், யதார்த்த உலகத்தையும் மனிதர்களையும் எடைபோட கற்றுக் கொடுத்தது இந்த படம்.

ஒருவன் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்க்கும் புகழ், சொத்து ஆகியவற்றை அவனது வாரிசுகளும் அனுபவிப்பது இயற்கை. அந்த வகையில், தனது மகனை ஹீரோவாக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மரணமடைதல் என்பது யாரையும் கலங்கடிக்கும் சம்பவம்தான்.
தினக்கூலித் தொழிலாளியாக அல்லது மிகப்பெரிய அதிகாரி என்று எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், நாற்பத்தைந்து வயது முதல் ஐம்பது வயதுக்குள் மரணமடையும்போது மிக மோசமான அதிர்ச்சியை அளிக்கும். மற்ற வயதில் மரணமடைந்தால் அதிர்ச்சி வராதா என்று நீங்கள் கேட்கலாம். நான் சொன்ன இந்த வயது,மகன் அல்லது மகளின் கல்வி, திருமணம் தொழில் என்று ஒருவனின் வாரிசுகளுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் அல்லது அதை செயல்படுத்தும் காலகட்டத்தில் ஒருவன் இருக்கும் வயது என்ற காரணத்தால்தான்.
மற்றபடி யார் சொல்லும் ஆறுதல் வார்த்தைகளும் முரளியின் குடும்பத்தாரை முழுவதுமாக சோகத்தின் பிடியில் இருந்து மீட்டு வந்துவிடாது. காலம்தான் அதை செய்யும்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கந்தா - ஆசிரியர் - மாணவன் உறவை மையமாக கொண்ட கதைக்களம்.

நான் எல்.கே.ஜி படிக்கும்போது (அப்படியா என்று ஷாக்காக கூடாது.) என் பெயரை ஆங்கிலத்தில் எழுதித்தந்த ஆசிரியையிடம் ஒரு கேள்வி கேட்டதை நினைத்தால் அப்பவே நமக்கு எவ்வளவு அறிவு இருந்துருக்கு என்று பெருமையாகத்தான் இருக்கிறது(?!)
சரவணன் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் ஒவ்வொரு எழுத்துக்குப்பிறகும் A என்ற எழுத்து இருக்கும். மத்தவங்க பேருல எல்லாம் இப்படி இல்ல. என் பேருல மட்டும் ஏன் இத்தனை A ? என்று ஆசிரியையிடம் கேள்வி கேட்டிருக்கிறேன்.

இந்த அதி புத்திசாலி நாளைக்கு தானே நிறைய படிச்சு விஷயங்களைத் தெரிஞ்சுக்கும். ஆனா இப்ப என்ன சொன்னாலும் ஏத்திக்கிற அளவுக்கு  மண்டையில ஒண்ணும் இல்லைன்னு அந்த  ஆசிரியைக்கு நல்லாவே தெரியும் போலிருக்கு.

"அது அப்படித்தான். நீ பெரியவனானதும் இலக்கணம் சொல்லிக்கொடுப்பாங்க. அப்ப ஏன் இத்தனை A அப்படின்னு புரியும்."னு சொன்னாங்க.

இந்த விஷயம் நடுவுல பல காலம் மறந்துடுச்சு.பின்ன எப்படி நினைவுக்கு வந்துச்சுன்னுதானே கேட்குறீங்க?மதராச பட்டினம் படத்து டிரெய்லர்ல ஆர்யா  அந்த ஆசிரியருக்கே எ...ஏ கத்துக்கொடுக்கும் காட்சியைப் பார்த்ததும்தான்.

******

சிறு குழந்தை ஆர்வத்துடன் வரைந்து காட்டும் இயற்கைக்காட்சி ஓவியத்தை மணியம் செல்வன் போன்ற ஓவிய மேதைகளின் ஓவியம் போல அழகாக இல்லையே என்று ரொம்ப சாதாரணமாக ஒரு சாமானிய மனிதன் சொல்லிவிடுவான்.

குழந்தை வரைந்த அந்த ஓவியத்தில் நேர்த்தியைப் பார்க்காமல் அந்தக் குழந்தையின் ஆர்வத்தையும் முயற்சியையும் காண்பது சாதரண மனிதர்களுக்கு அவ்வளவு எளிதான விஷயமில்லை. அது அதிகமாக ஆசிரியர்களிடம் காணப்படும் உன்னதமான குணம்.

ஓவியம் என்று இல்லை, எந்த ஒரு கலை அல்லது தனித்திறனாகட்டும், அதைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தி புதுப்புது சாதனையாளர்களை உருவாக்கியதில் ஆசிரியர்களின் பங்குதான் மிக அதிகமாக இருக்கும்.
இப்போது நான் மனதில் நினைப்பதை இஷ்டத்துக்கு 'பிளாக்'கில் எழுதி (அது எவ்வளவு குப்பையாக இருந்தாலும் சரி.) உங்கள் பார்வைக்கு கொண்டுவந்துவிட முடிகிறது. ஆனால் நான் அச்சில் பார்க்கவேண்டும் என்று தீவிரமாக எழுதத்துவங்கியது கல்லூரியில் சேர்ந்த ஆண்டான 2000த்தில்.

நான் எழுதிய வாசகர் கடிதம் கூட பிரசுரமாகாத காலகட்டம்.2003 ஜனவரி வரை ஒரு பத்திரிகையிலும் என்னுடைய எழுத்துக்கள் பிரசுரமானதே இல்லை.2003 போகிப்பண்டிகை அன்று மாலைமுரசு பொங்கல் மலரில் முதல் சிறுகதை பிரசுரமானது.அடுத்த நாள் தினபூமி பொங்கல் மலரிலும் ஒரு சிறுகதை. இது அன்றைய காலகட்டத்தில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது. அதன்பிறகு ஆறு மாதங்களுக்கு மாலைமுரசு-வாரமுரசில் தொடர்ச்சியாக என்னுடைய சில சிறுகதைகள் பிரசுரமாயின.

ஆனால் 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் கல்லூரி ஆண்டு மலரில் நான் எழுதிய சிறுகதைகளால் பல மாணவர்களிடையே நான்  பிரபலம். இப்போதும் சில நண்பர்கள் என்னுடைய பெயரை தங்களுடைய செல்போன்களில் 'கதா' என்றுதான் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு கதைகள் கல்லூரி ஆண்டு மலரில் பிரசுரமானதுடன் வேறு பத்திரிகைகளில் எதுவுமே வரவில்லை என்ற நிலையில் நான் எழுதுவதையே விட்டிருக்க வேண்டியது.

ஆனால் முதலாம் ஆண்டிலேயே முதல் கதையைப் படித்த தமிழ்ப் பேராசிரியர் முனைவர் அ.ஜான்பீட்டர், "தம்பி...ஆண்டு மலருக்கு நிறைய பேர் எழுதிக்குடுத்தாலும் காப்பி அடிச்சதுதான் அதிகமா இருக்கும்.ஆனா உன் எழுத்துல உண்மையாவே நீ கற்பனை செஞ்சிருக்குறது தெரியுது. தொடர்ந்து எழுதிட்டு வா. எந்த வேலைக்குப் போனாலும் எழுதுறதை விட்டுடாத. எல்லாருக்கும் அது சாத்தியப்படாது."அப்படின்னு சொன்னதை மனசுல நினைச்சுகிட்டேன்.

மாவட்ட மைய நூலகத்துல 1999லேர்ந்து உறுப்பினரா இருந்ததால நிறைய படிக்க ஆரம்பிச்சேன். அப்பதான் ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது? புத்தகத்தைப் பத்தி தெரிஞ்சு அதை மதி நிலையத்துலேர்ந்து வி.பி.பி மூலமா வரவழைச்சு படிச்சேன்.

ஒரு கதைன்னா எப்படி இருக்கும்னுங்குற டெக்னிக்கல் விஷயம் ஓரளவு எனக்குப் பிடிபட்டுச்சு. 2003ல இருந்து வெளி பத்திரிகைகள்ல பிரசுரமான கதைகள் எல்லாமே ரா.கி. ரங்கராஜனோட புத்தகத்தைப் படிச்ச பிறகு நான் எழுதுனதுதான்.
தினமலர்-வாரமலர் சிறுகதைப் போட்டியில இரண்டு முறை ஆறுதல் பரிசு,அமுதசுரபியில முத்திரைக்கதை,இலக்கியச்சிந்தனையின் 2006 ஜனவரி மாத சிறந்த சிறுகதைக்கான பரிசு,(இது தொகுப்பு நூலில் இடம்பெற்றிருக்கிறது.) தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணி வார இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு. மாலைமுரசு வதீபாவளி மலரில் கவிதைக்கான வெள்ளி குங்குமச்சிமிழ் பரிசு என்று 2007ம் ஆண்டுக்குள் நிறையவே எழுதி வந்த நான் இடையில் சில காலம் சோம்பேறித்தனத்தால் மிகக் குறைவாகவே எழுதி வருகிறேன்.

நாலு பேராவது என்னுடைய எழுத்தைப் படிக்கும் வகையில் எழுதி வருகிறேன் என்றால் இந்த ஆர்வத்துக்கு தூண்டுகோலாக இருந்த தமிழ்ப்பேராசிரியர் முனைவர்.அ.ஜான்பீட்டரும்,புத்தகத்தின் மூலம் ஆசானாக இருந்து கதை என்றால் எப்படி எழுத வேண்டும் என்று எனக்கு சொல்லிக்கொடுத்த ரா.கி.ரங்கராஜனும் என் வாழ்வில் முக்கிய இடம் பிடித்த குருநாதர்கள்.

******

பல பேராசிரியர்கள் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்கினால் அல்லது முதல் மார்க் வாங்கினால் போதும் என்ற அளவில்தான் பாடம் நடத்துவார்கள். ஆனால் புத்தகத்தில் இருப்பது மட்டும் தெரிந்தால் போதாது, நீ படிக்கும் பாடம் வாழ்விலும் நீ வேலைக்குச் செல்லும் இடத்திலும் உன்னை உயர்த்த வேண்டும் என்று சொல்லிப் பாடம் நடத்திய பேராசிரியர் கோ.இராமநாதன் அவர்கள்.

பி.காம் படிக்கும்போது இவர் கொடுத்த ஆலோசனைகளின் பேரில்தான் நாங்கள் தேர்வுக்குத் தயாராவோம்.படிப்பு முடிந்த சில மாதங்களிலேயே நூறாண்டுகளாக இயங்கி வரும் ஒரு உற்பத்தி சார்ந்த நிறுவனத்தில் அனைத்து வகையான கணக்குகளையும் மிக எளிதாக கையாண்டேன்.

******

நான் பார்த்த ஆசிரியர்களில் சிலரின் சிறப்புக்களைப் பற்றி சொல்லியாயிற்று.வேறு சிலரைப் பற்றி குறை சொல்லவில்லை என்றால் எனக்கும் தூக்கம் வராது. படிப்பவர்களுக்கும் சுவாரஸ்யம் இருக்காது. அதனால் இந்த தகவல்கள்.

ஒரு பிரிண்டிங் பிரஸ் இருந்த தெருவிலேயே கோவில் திருவிழா.அதற்குரிய அழைப்பிதழ்களை அந்த அச்சகத்தில்தான் பிரிண்ட் செய்திருக்கிறார்கள்.அந்த தெருவின் பெயரையே தவறாக அச்சிட்டிருந்தார்கள். தொழிலில் ஒரு கவனம் இல்லாததால்தான் இந்த தவறு என்று நான் சொன்னேன்.

சரியாக திருத்தி வாங்காதது அழைப்பிதழ் அச்சடிக்க கொடுத்தவரின் தவறு. வேலை செய்பவர் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்க முடியாது என்று ஒருவர் கோபப்பட்டார்.அவர் அரசுப்பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியர்.

அந்த அச்சகம் இருக்கும் தெருவின் பெயரையே தவறாக அச்சடிக்கிறார்கள் என்றால் தொழிலில் கவனம் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

செப்.15 நாணயம் விகடனில் ஒரு கட்டுரையின் சில வரிகள் என்னுடைய கருத்தை உங்களுக்கு விளக்கும் என்று நினைக்கிறேன்.
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் ஒருவருடைய வேலையை மற்றொருவர் மேற்பார்வையிடுவது என்பது கட்டாயமாகிவிட்டால் அவர் ஒரு சிறந்த புரஃபஷனல் இல்லை.பதிலாக அவர் ஒரு பயிற்சி பெறுபவர் என்கிற நிலையில்தான் இருக்கிறார் என்று அர்த்தம்.

தனது வேலையை நன்றாகச் செய்து விட்டோம் என தனக்குத்தானே சர்ட்டிஃபை செய்து கொள்ளக்கூடிய திறமை.(எல்லா தொழிலிலும் இது பொருந்தாமல் போகலாம். ஆனால் இந்த குணம் ஒருவர் வாழ்வின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம்.

******

எங்கள் ஊர் இயக்குனர் பாபு K. விஸ்வநாத் இயக்கும் படத்தில் ராஜேஷ் ஆசிரியராகவும் கரண் மாணவனாகவும் நடிக்கிறார்கள். இது ஆசிரியர் மாணவர் உறவு பற்றி எப்படி சொல்கிறது என்று பார்ப்போம்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

தளபதி முதல் எந்திரன் வரை 1

இவரு பெரிய வி.ஐ.பின்னு நினைப்பு...படம் பார்த்த அனுபவங்களை அப்படியே அசைபோட வந்துட்டாருன்னு சொல்லிகிட்டே நிறைய பேரு பல்லைக் கடிக்கிறது எனக்கும் கேட்குதுங்க.ஆனா என்ன பண்றது?...சில விஷயங்களை இப்ப நினைச்சா எனக்கே சின்னப்புள்ளைத்தனமாத்தான் தெரியுது.அதனாலதான் இந்த பதிவு.



ராஜா சின்ன ரோஜா படம் திருவாரூர் சோழா தியேட்டரில் திரையிடப்பட்டபோது அங்கே வாழைமரம் தோரணம் என்று திருவிழாக்கோலம் பூண்டிருந்ததை அம்மாவுடன் கடைத்தெருவுக்குப் போகும்போது பார்த்திருக்கிறேன்.அப்போதெல்லாம் நான் தொலைக்காட்சி பார்த்த அனுபவம் என்றால் கோவில் திருவிழா அல்லது திருமண நிகழ்ச்சியின் போது விசிஆர் பயன்படுத்தி திரையிடப்பட்ட படங்களைப் பார்த்ததாகத்தானிருக்கும்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது தளபதி படம் வெளிவந்தது.அப்போது அந்தப் படம் பார்க்க எங்கள் வீட்டில் அழைத்துச்செல்லவில்லை. என் தந்தை வைத்திருந்த டீக்கடையில் மாதக்காலண்டர் ஒன்றை அப்பாவின் நண்பர் ஒருவர் கொண்டுவந்து தந்தார். பக்கத்துக்கு ஒரு தளபதி படத்தின் ஸ்டில்ஸ் அச்சாகி இருந்தது.

பானுப்ரியாவின் கணவராக படத்தில் நடித்த தினேஷ் தலையின் பின்புறம் மங்கலாகத் தெரிய,  ரஜினிகாந்த் முகம் மட்டும் ஷோல்டர் ஷாட்டாக இருக்கும் ஸ்டில், போலீசார் ரஜினியை லாக்கப்பில் சித்ரவதை செய்யும் காட்சி, சுந்தரி என்று தொடங்கும் பாடலில் ஷோபனா ரஜினிக்கு மாலையிடும் காட்சி, உட்பட இன்னும் சில புகைப்படங்கள் அந்த காலண்டரில் அச்சாகி இருந்ததன.
சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் உருவான இந்தப் படத்தின் ஸ்டில்களில் இருந்த வித்தியாசமான (இருபது ஆண்டுகளுக்கு முன்பு) லைட்டிங் அந்த வயதிலேயே என்னைக் கவர்ந்தது.ஆனால் அந்தப் படத்தை நான் சன்டிவியில் பார்த்த பிறகுதான் திரையரங்கில் பார்த்தேன்.கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு.

திருவாரூரில் இருந்த பேபி தியேட்டரில் மணிரத்னம் படத்தில் இருக்கும் லைட்டிங் போலவே எல்லாப் படங்களுமே மங்கலாகத்தான் தெரியும். வேறு என்ன செய்வது என்று தளபதியை அந்த திரையரங்கத்தில் பார்த்து ரசித்தேன்.(?!)

இப்போது அந்த தியேட்டர் இடிக்கப்பட்டதால் மரம், செடி, கொடி, புதர்கள்தான் அங்கே இருக்கின்றன. இன்னும் அந்த தியேட்டர் நினைவாக மிச்சமிருப்பது அந்த தியேட்டர் இருந்த சாலைக்கு பேபி டாக்கீஸ் ரோடு என்ற பெயர் மட்டும்தான்.
******
வெயில் படத்தில் பசுபதி சிறுவயது பையனாக தியேட்டர் கேபினில் இருக்கும்போது பிலிமில் நேரடியாக படத்தைப் பார்க்கிறேன் என்று அவ்வளவு பிலிமையும் உருவிக் குவித்துவிடுவார்.

பிலிம் சுருளை புரொஜக்டரில் பொருத்தி திரையிட உதவும் ஸ்பூல் ஒரு சக்கரம் போலத்தான் இருக்கும். இரு பக்கமும் கம்பிகள் இருப்பதால் பிலிம் உருவிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்கும். ஒரு ஸ்பூலில் நிறைய இருக்கும் பிலிம் இருபத்தைந்து நிமிடம் வரை ஓடும்.அந்த ஸ்பூல் அளவை விட அதிகமாக பிலிம் இருந்தால் அதை ஓவர் லோடு என்று சொல்வோம்.

புரொஜக்டரில் இருந்து கீழே இறங்கும் பிலிம் மிகச் சரியாக சுற்றிக்கொள்ளும்.ஆனால் அதை ரீவைண்ட் செய்யும்போது உருவிக்கொள்ளாமல் சுற்றுவதுதான் ஆப்ரேட்டர்களுக்கும் அசிஸ்டெண்ட்டுகளுக்கும் சவால்.ஓட்டுநர் வேலை போல் இதுவும் முதலில் தயக்கத்தில் ஆரம்பித்து பிறகு பழக்கத்தில் வழக்கமாகிவிடும்.

புரொஜக்டரில் ஓடிமுடிந்த பிலிம் தலைகீழாக இன்னொரு ஸ்பூலில் மெஷின் மூலமாக சுற்றிக்கொள்ளும். அதிலிருந்து காலியாக உள்ள ஸ்பூலில் மீண்டும் பிலிமை கையால் சுற்றி லோட் செய்வதுதான் ரீவைண்ட் செய்வதாகும்.

வலது கையால் லீவரை சுற்றி ரீவைண்ட் செய்யும்போது இடது கையால் பிலிம் இருக்கும் மற்றொரு ஸ்பூலை அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். அந்தக் கையை எடுத்தால் பிலிம் இழுக்கப்படும் வேகத்தில் வேகமாக உருவிக்கொண்டு சிக்கிக்கொள்ளும்.

ஒரு கையால் ரீவைண்ட் செய்யும்போது அப்படி இடது கையை எடுத்தாலும் அந்த ஸ்பூல் ஒரே சீராக ஓடினால் பிலிமை பேக் செய்து ஸ்பூலில் இருந்து கழற்றும் பணியைக் கற்றுக்கொள்ளத் தயாராகி விட்டதாக அர்த்தம்.

இப்போது இந்த விளக்கங்கள் ஏன் என்று நீங்கள் கேட்கலாம். இன்னும் சில காலத்தில் பிலிமைப் பயன்படுத்தி திரையிடும் திரையரங்கங்களே இல்லாமல் போகும். சுமார் நூறு ஆண்டுகள் சினிமாவில் நீடித்திருந்த புரொஜக்டர் தொழில்நுட்பத்தை எனக்குத் தெரிந்த தமிழில் ஆவணப்படுத்தும் முயற்சிதான் இது.

எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது இந்த பதிவு தொடரும்...