Search This Blog

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 7 - நிறைவுப்பகுதி - ஐம்பதாவது பதிவு

குளிர்பானம் வாங்கிக்கொடுத்தால்தான் மாப்பிள்ளை வெளியே வருவார் என்று சில குறும்புக்கார பெண்கள் சொல்லவும் ஆவேசமாக உள்ளே நுழைந்தது வெற்றிதான்.
"அட அறிவுகெட்ட வெண்ணை...கல்யாண ஏற்பாட்டை நாமதாண்டா செஞ்சுகிட்டு இருக்கோம்.இப்ப பொண்ணு வீட்டுல இருந்து பார்மாலிட்டிக்கு அஞ்சு பேர் வந்திருக்காங்க.அவ்வளவுதான்.இதுக்கு மெனக்கிடுறது எல்லாம் நானும் என் நண்பர்களும்தான்.இப்ப நான் போய் கூல்டிரிங்கஸ் வாங்கிட்டு வரணுமா...பிச்சுபுடுவன் பிச்சு...ஒழுங்கா புள்ளையா அடக்க ஒடுக்கமா ரெடியாகு...இல்லன்னா தூக்கிடுவோம்...எல்லாம் இவங்களால வந்தது.பெரும்பாலும் வில்லங்கம் உங்க கிட்ட இருந்து தான் ஆரம்பமாகுது.இவன் பாட்டுக்கு எதுவும் சொல்லாம கிளம்பியிருப்பான்.அவனை உசுப்பேத்தி எங்கிட்ட திட்டுவாங்க விட்டுட்டீங்கிள்ள..."என்று வெற்றி அந்த பெண்களையும் லேசாக கடிந்துகொண்டான்.

அவர்களில் ஒருத்தி,"அப்ப உன் கல்யாணத்தப்ப ஜமாய்ச்சுடுவோம்."என்றாள்.



"பிசாசுங்களா...நீங்க யாரும் ஆணியே புடுங்க வேணாம்.நான் கல்யாணம் முடிச்சு ஹனிமூனும் கொண்டாடிட்டுதான் உங்களுக்கெல்லாம் விஷயத்தை சொல்லுவேன்.தெண்டமா இவளுங்ககிட்ட பேசிகிட்டு இருக்காதடா.நமக்கு நேரமாச்சு."என்று மாப்பிள்ளை அழைப்புக்காக அன்புச்செல்வனை துரிதப்படுத்தினான்.
மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாணவேடிக்கையுடன் மாப்பிள்ளை - பெண் ஊர்வலம் திருமண மண்டபத்தை வந்து அடைந்தது.

ஒரு வயதான அம்மா,"டேய்...வெற்றி...ஊர்வலத்தை நீயும் உன் பிரெண்ட்சும் அமர்க்களப்படுத்திட்டீங்கடா."என்றார்.

"அடப்போங்க பாட்டி...இதுல ஒரு கிக்கே இல்ல...பொண்ணு வீட்டுல இதையெல்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தா அது ஒரு மாதிரி.ஆனா நாங்களே ஏற்பாடு பண்ணி இப்படி ஆட்டம் போடுறது காசு கொடுத்து ஆளுங்களை கூட்டிட்டு வந்து கட்சி மாநாடு நடத்துற மாதிரி இருக்கு."என்று அலுத்துக்கொண்டான்.

காயத்ரியின் கூந்தலுக்கு சந்தியாவின் தோழி மிக அழகாக ஒருவித அலங்காரம் செய்திருந்தாள். ஒளிப்பட ஆல்பத்தில் வரைகலைக்காக பயன்படுத்த காயத்ரியை வெவ்வேறு கோணங்களில் படம்பிடித்துக்கொண்டிருந்தது வெற்றியின் நண்பன்தான்.திடீரென சந்தியாவுக்கும் அவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கே வந்த வெற்றி,"இங்க என்னப்பா சத்தம்..."என்றான்.

"நீ மட்டுமில்ல, உன் நண்பர்களாலயும் பிரச்சனைதான்.என் ஃப்ரெண்ட் எங்க அக்காவுக்கு இந்த தலை அலங்காரம் செய்ய எவ்வளவு சிரமப்பட்டிருப்பான்னு தெரியுமா? அதை மொபைல் கேமராவுல படம் பிடிக்க எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆயிடும்?ஆனா போட்டோகிராபர்கிட்ட இருக்குற கேமராவுல பதிவுசெஞ்சா எவ்வளவு தரமா இருக்கும்... அதை சொன்னா, உன் பிரண்டு மாட்டேன்னு சொல்றார்.
நீயும் உன் நண்பர்களும் என் கிட்ட வம்பு பண்ணிகிட்டே இருக்குறதுன்னு தீர்மானமா இருக்கீங்கிளா?"என்று சந்தியா படபடத்தாள்.

"த்தோடா...நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம்...சக்தி...என்னடா பிரச்சனை..."

"நீயே எடுடா வெற்றி..."என்று அந்த கேமராவை இவனிடம் தந்தான் சக்திவேல்.

வியூ ஃபைண்டர் வழியே பார்த்த வெற்றி, படம்பிடிக்காமல் கேமராவை நகர்த்திவிட்டு,"அண்ணி...கோவிச்சுக்காம வேற பிளவுஸ் மாத்திட்டு வந்துடுங்க. ஆயிரம் வாட்ஸ் பல்ப்...பிளாஷ் லைட்...உங்க கூந்தல் அழகை அழகா படம்பிடிக்கலாந்தான்...ஆனா போட்டோவுல பார்க்கும்போது கொஞ்சம் நெளியுற மாதிரி இருக்கும்.இந்த விளக்கம் உங்களுக்கு போதும்னு நினைக்குறேன்.நாங்க கொஞ்ச நேரம் வெளியில இருக்கோம்...சந்தியாவோட பேச்சைக்கேட்காதீங்க...ஒரு மண்ணும் தெரியாத விவரம் பத்தாத பொண்ணு."என்று நண்பர்களுடன் வெளியேறினான்.

"கேமராமேன் பசங்க எப்படி சொல்றதுன்னு தவிச்சுருக்கானுங்க. வெற்றிக்கு கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல. எப்படி விஷயத்தை உடைச்சுட்டு போறான் பாரு..."என்று சந்தியா, கதவை சாத்தினாள்.

"அடப்போடி இவளே...இங்கிதம் பார்த்துகிட்டு இருந்தா விடிய விடிய அப்படியே சண்டை போட்டுகிட்டு நின்னுருக்கவேண்டியதுதான்.வெற்றி சொன்னதுதான் சரி. முன்பக்கம் புடவை இருக்குறதால ஒண்ணும் பிரச்சனை இல்லை.

வியர்வையில அப்படியே ஸ்ட்ராப் பளிச்சுன்னு தெரியுது பாரு.அதோட லைட் வெளிச்சமும் சேர்ந்தா அவ்வளவுதான். எதை எதை படம்பிடிக்கணும்னு நாகரிகம் தெரிஞ்ச பசங்கதான். அதான் நம்ம பிரின்ஸ்பால், எஸ்.பி அப்படின்னு எல்லார்கிட்டயும் நல்லபேர் எடுத்துடுறான்.
நான் கூட ஒரு சில கல்யாணவீடியோவை பார்த்துருக்கேன்.விவரம் புரியாத பசங்க அப்படியே ஷூட் பண்ணிருப்பாங்க. சில நொடிகள்தான்னாலும் சம்மந்தப்பட்டவங்க கொஞ்சம் சங்கடமா ஃபீல் பண்ற மாதிரி ஆயிடும்.

அதனால இந்த விஷயத்துல நான் வெற்றி பக்கம்."என்றாள் ஒரு தோழி.

இதற்குள் காயத்ரியும் உடை மாற்றியிருந்தாள்.
******
மறுநாள் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரைதான் முகூர்த்தம்.மண்டபம் மிகப்பெரியதாக இருந்ததால் முதலில் கூட்டம் அதிகமானதை கவனிக்கவில்லை.நேரம் ஆக ஆக சுந்தர்ராஜனுக்கு லேசான பதட்டம் தொற்றிக்கொண்டது.

'நானூறு பேருக்குமேல வரமாட்டாங்க...அப்படின்னு சம்மந்தி சொன்னாருன்னு நம்பி ஆயிரத்து நூறு பேருக்குதான் சமைக்க சொன்னேன்.இப்ப அவரோட சொந்தக்காரங்க எண்ணிக்கையே ஆயிரம்பேர் வந்துடுவாங்க போலிருக்கே...இந்த நிலவரத்தை பார்த்தா, பாதிபேர் நேரமாகுறதைப்பார்த்து சாப்பிடாமலேயே போயிடுவாங்க. அப்படியே எல்லாரும் சாப்பிடலாம்னு உட்கார்ந்தா உணவு பத்தாதே...'என்று குழம்பிய சுந்தர்ராஜனால் திருமண சடங்குகளில் மனம் ஒன்றி ஈடுபடமுடியவில்லை.
சமையலறையை கவனித்துக்கொண்டிருந்த வெற்றி எதற்கோ அரங்கத்துக்குள் வந்த நேரத்தில் தந்தையின் முகத்தைக் கவனித்துவிட்டான்.

வற்புறுத்தி கேட்டதும் தன் கவலையை வெற்றியின் காதோடு காதாக சொன்னார்.

"எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.எத்தனை பேர் வந்தா என்னப்பா...சாதாரணமா இவ்வளவு பேருக்கு நம்மால சாப்பாடு போட முடியுமா?...இந்த புண்ணியத்தை நமக்கு தர்ற இவங்களுக்கு நாம சந்தோஷத்தோட நல்லபடியா சாப்பாடு போட்டு அனுப்பணும்.எழுநூறுபேர்தானே அதிகமா வந்துருப்பாங்க...இதெல்லாம் ஒரு மேட்டரா..."என்று அவருக்கு தைரியம் சொன்ன வெற்றி, தன் நண்பர்களை அழைத்தான்.

"டேய்...இந்த விஷயத்துல எங்க சொந்தக்காரங்களை நம்ப முடியாது. நாற்காலியை விட்டு எழுந்திரிக்காம, நாங்க அவங்களை டைனிங் ஹாலுக்கு பஸ்சுல அழைச்சுட்டுப்போய் சாப்பிட வைக்கலைன்னு குத்தம் சொல்லிகிட்டு இருப்பாங்க.அதனால கல்யாணம் முடிஞ்சதும் யாரும் வெளியில போயிடக்கூடாது. அந்த மாதிரி கவனிக்கிறது உங்க பொறுப்பு. ஒரு பந்தியில நானூறு பேர் உட்காரலாம். அதிகபட்சம் ஆறு பந்திக்குதான் ஆள் இருக்கும்.

நான் கூடுதல் சாப்பாட்டுக்கு வேண்டிய வழியை செய்யுறேன்."என்று தலைமை சமையல்கலைஞரிடம் சென்றான் வெற்றி.

"அய்யா...ஆயிரத்து இருநூறு பேருக்கு என்ன சமையல் செய்யுறீங்கிளோ...அதே மாதிரி இன்னும் அறுநூறு பேருக்கும் சமையல் பண்ணிடணும். தேவையான பொருட்களை நாங்க வாங்கிட்டு வர்றோம். உங்களுக்கு பேசிய தொகையை இந்தகூடுதல் வேலைக்கு ஏற்ற மாதிரி நியாயமான அளவுல அதிகரித்து தர்றது என் பொறுப்பு."என்று தெளிவாகப்பேசினான். அவரும் முக மலர்ச்சியுடன் சம்மதித்தார்.

கூடுதல் சமையலுக்கு மூன்று மணி நேரம் அவகாசம் இருந்ததால் வெற்றியின் திட்டப்படி எந்த குளறுபடியும் இல்லாமல் அனைவருக்கும் உணவு உபசரிப்பு நல்லபடியாக நிறைவேறியது.

******

"வெட்டித்தனமா வில்லங்கம் செய்துகிட்டு இருந்தாலும் அவன் மட்டும் இல்லன்னா பாதிப்பேருக்கு சாப்பாடு இல்லாம அசிங்கப்பட வேண்டியதாயிருக்கும்."என்று ஒரு உறவினரிடம் சுந்தர்ராஜன் ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

அது ராமலிங்கத்தின் உறவினர் ஒருவரின் காதுகளில் விழுந்துவிட அவர் மிகச் சரியான முறையில் ஒரு வில்லங்கத்துக்கு நெருப்பு பற்றவைத்தார்.

"சம்மந்தி...இப்ப எவ்வளவு கூடுதலா செலவாயிருக்குன்னு சொல்லுங்க...நான் எப்படியாவது தந்துடுறேன்..."என்று வருத்தம் வார்த்தைகளில் வெளிப்பட்டுவிடாமல் அடக்கிக்கொண்டு பேசினார்.

பதிலுக்கு சுந்தர்ராஜனும் எதோ சொல்ல நினைத்தபோது வெற்றி இடையில் புகுந்தான்.
"ஆஹா...ரொம்ப குடும்பங்கள்ல இப்படிதான் தகராறு ஆரம்பமாகுதா...மாமா...இதுல உங்களை யார் தப்பு சொன்னா...திடீர்னு இவ்வளவு கூட்டம் வரும்னு யாருமே எதிர்பார்க்கலைதான். ஏன்னா...நாம எவ்வளவு பத்திரிகை கொடுத்தாலும் அவங்கள்ல எத்தனை பேர் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்துவான்னு யாராலயும் சொல்ல முடியாது.விசேஷம் நடத்துனா இதெல்லாம் சாதாரணம்.

சின்னப்பையன்...எனக்கு தெரியுது...மணிவிழா கொண்டாடுற வயசுல உங்களுக்கு புரியலையே...இவ்வளவு பேருக்கு சாப்பாடு போட்டு அண்ணனும் அண்ணியும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்காங்க...இது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுமா?இதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த கடவுளுக்கும் வந்திருந்தவங்களுக்கும் நன்றி சொல்றதை விட்டுட்டு புதுசா பூத்திருக்குற உறவை சிதைக்கிற முயற்சியில இறங்கிட்டீங்கிளே...அங்க பாருங்க...அண்ணன்-அண்ணி முகத்துல பசியோட வாட்டம் நல்லா தெரியுது.

பெரிய மனுஷன் நான் சொல்றேன்...பேசாம என் கூட வாங்க..."என்று வெளியில் கிளம்பினான்.

"நீ கோவிச்சுகிட்டு எங்கடா போற?"

"அதெல்லாம் யாருக்கு தெரியும்?...நமக்கு இங்க மண்டபத்துல சாப்பாடு இல்லை.வேற ஒரு இடத்துல ஏற்பாடு பண்ணியிருக்கேன்... எல்லாரும் பஸ்சுல ஏறுங்க..."என்று வெற்றி சொன்னதும் மற்றவர்கள் புதிராகப்பார்த்தார்கள்.

"என் பிரெண்ட்ஸ் அஞ்சு பேர், இங்கயே சாப்பிட்டாச்சு. அவனுங்க இப்ப எல்லாத்தையும் பார்த்துக்குவானுங்க.பயப்படாம வாங்க."என்று வெற்றி முதல் ஆளாக பேருந்தில் ஏறினான்.

அந்த பேருந்து பத்து நிமிட பயணத்தில் சென்று அடைந்த இடம், ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம்.

"இவங்களை பேசாம மண்டபத்துக்கு அழைச்சுட்டு வந்துருக்கலாமே..."என்று ஒரு உறவினர் தன் தத்துவ முத்துக்களை உதிர்த்தார்.

"பெரியப்பா...ஒரு வேளை சாப்பாட்டுக்காக இவங்களை அலைக்கழிக்கக்கூடாது.இப்பவே பதினஞ்சு நிமிஷம் லேட். இப்படி ஆகும்னு தெரியும். அதனாலதான் ஒரு மணி நேரம் முன்னால எல்லாடுக்கும் பழங்கள், பிஸ்கட் அப்படின்னு கொஞ்சமா கொடுக்க சொல்லிட்டேன்.

நம்மாளயே பசி பொறுக்க முடியலையே...குழந்தைங்களால மட்டும் முடியுமா?...அதோட கல்யாண சாப்பாட்டுல சேர்க்கப்படுற சில பொருட்கள் இந்தக் குழந்தைகளுக்கு எதாவது சங்கடங்கள் தரலாம். அதனால வழக்கமா அவங்களுக்கு தர்ற உணவோட, குறிப்பிட்ட சில வகைகளை மட்டும் குழந்தைகளுக்கு ஒத்துக்குற அளவுல செய்து அவங்களோட புது தம்பதி சாப்பிடணும்னு பிளான் பண்ணினேன். நல்லபடியா போய்கிட்டு இருக்கு."என்றான் வெற்றி.

அந்த குழந்தைகளுடன் மதிய விருந்து உண்டது அனைவருக்குமே நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

மீண்டும் மண்டபத்துக்கு வந்து அனைவரும் ரிலாக்சாக அமர்ந்தார்கள்.

"சின்ன மாப்ள...உங்களைப்பத்தி என்னவோன்னு நினைச்சேன். ஆனா அசத்திட்டீங்க போங்க..."என்று ராமலிங்கம் நெகிழ்ந்தார்.

"என்ன வேணும்னு கேளுடா..."என்று சுந்தர்ராஜன் சொன்னார்.

"கேட்பேன்...திட்டக்கூடாது..."என்று வெற்றி புதிர் போட்டான்.

"அவன் என்ன சொல்லப்போறான்...எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கப்பான்னு சொல்லுவான். என்ன, அதானே..."என்று அவன் தாத்தா சொன்னார்.

உடனே வெற்றி வெட்கப்படவில்லை.

"எப்படி தாத்தா இவ்வளவு சரியா என் மனசுல உள்ளதை சொன்னீங்க..."

"ஒழுங்கா படிப்பை முடி...அப்புறம் பார்க்கலாம்."

"ஏம்பா...ஒரே மாதிரியே சிந்திக்கிறீங்க...ஹவுஸ் வொய்ஃப் தான் இருக்கணுமா? ஏன், ஹவுஸ் ஹஸ்பெண்ட் இருக்ககூடாதா. நல்ல வேலைக்குப்போற பொண்ணா கல்யாணம் பண்ணிகிட்டா வீட்டுப்பணியில அவளுக்கு ஓய்வு கொடுத்த மாதிரி இருக்கப்போகுது..."என்று வெற்றி சொல்லவும் அங்கே கூடி நின்ற அனைவருமே சிரித்தார்கள்.

"நல்லா காமெடி பண்றடா..."என்று சுந்தர்ராஜனும் சிரித்தார்.

"சீரியசாதாம்பா...எப்படியும் நான் ஆங்கிலப்பேப்பர்களை எழுதி பாஸ் பண்ணி டிகிரி வாங்கப்போறது இல்லை. அதனாலதான் புத்திசாலித்தனமா இந்த முடிவு எடுத்தேன்."

"என்னது...இது புத்திசாலித்தனமா?...அப்புறம் காலத்துக்கும் அவ சொல்றதை கேட்டுகிட்டு இருக்க வேண்டியதுதான்."என்று முதன் முதலாக அன்புச்செல்வன் பேசினான்.

"அண்ணி... அண்ணன் உங்க பேச்சைக் கேட்க மாட்டாராமா...இதுக்குமேல உங்க சாமர்த்தியம்..."என்று வெற்றி சொன்னதும் காயத்ரியின் கன்னங்கள் மேலும் சிவந்தன.

"இப்ப பேசுனதெல்லாம் நல்லாத்தான் இருக்கு...நீயும் உன் ஃபிரெண்ட்சும் பிளக்ஸ் போர்டுல திருவாரூரில் திருவிழான்னு போட்டுருக்கீங்கிளே...அப்ப திருவாரூர் தேர் திருவிழாவுக்கு கூடுற கூட்டத்தை எல்லாம் என்னன்னு சொல்றது?"என்று காயத்ரியின் தோழி ஒருத்தி கேட்டாள்.
"நல்லா பாருங்க சார்...தலைக்கு நூறு ரூபா, ஒரு பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் அப்படின்னு செலவு பண்ணி பொதுக்கூட்டத்துக்கு கூட்டத்தைக் கூட்டிட்டு  திருவாரூர் மாநகரில் திருவிழா அப்படின்னு விளம்பரம் செய்யுவாங்க...அந்த கூட்டத்தோட ஒப்பிடும்போது நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வந்த கூட்டம் சொற்பம்தான்.

ஆனா இந்த கூட்டம் நாம பத்திரிகை வெச்சதை மதிச்சு வந்த கூட்டம். அதனால திருவாரூரில் திருவிழான்னு நாங்க பிளக்ஸ்ல போட்டது தப்பே இல்லை.இதை இவங்க கேட்கலை...சந்தியாதான் கேட்க சொல்லியிருப்பான்னு எனக்கு நல்லா தெரியும்...

இப்பவே இப்படின்னா...காலம் பூரா நான் எப்படி சமாளிக்கிறதுன்னு நீங்களே சொல்லுங்க..."என்று வெற்றி கூறியதின் அர்த்தம் பலருக்கும் உடனடியாக புரியவில்லை.

அவன் தாத்தாதான்,"அட...திருட்டு ராஸ்கல்...உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கா...இது முன்னாலேயே தெரிஞ்சிருந்தா ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து முடிச்சிருக்கலாமே..."என்றார்.

இதைக்கேட்ட சந்தியாவின் முகத்தில் திகைப்பு.

"தாத்தா...நீங்களா எதாவது சொல்லி தீர்மானம் பண்ணிடாதீங்க...அப்புறம் சந்தியா என்னை அடிச்சு தொவைச்சு காயப்போட்டுடுவா...முதல்ல எங்க படிப்பு முடியட்டும்...அப்புறம் சந்தியாவுக்கு ஒரு வேலை கிடைக்கட்டும். நான் அதுக்குள்ள அம்மாகிட்ட நல்லா சமையல் கத்துக்குறேன்...அப்புறம் சம்மதமான்னு சந்தியா சொல்லட்டும். அதுவரை  யாரும் இதைப்பத்தி பேசக்கூடாது...பேசக்கூடாது...பேசக்கூடாது..."என்றான்.

"அதை ஏண்டா மூணு தடவை சொல்ற..."என்று தாத்தா கேட்கவும்,"எல்லாம் ஒரு எஃபெக்டுக்காகதான்."என்று வெற்றி சொன்னான்.

"பய ஒரு தீர்மானத்தோடதான் இருக்கான் போலிருக்கே..."என்று சுந்தர்ராஜன் சொல்லவும், அங்கே மீண்டும் சிரிப்பொலி.

சுபம்.
******

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 4
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 5
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 6

******
பள்ளிப்பருவத்தில் இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் தன் வாழ்வைத் தொலைத்த எவ்வளவோ பெண்கள் உண்டு.
 ஆனால் ஒரு பெண் இதே போல் பள்ளியில் படிக்கும்போதே காதலில் விழுந்தாலும் அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? விகடனின் காதலர் தின சிறப்பிதழில் வெளிவந்த இந்த சிறு கட்டுரையை படிக்க இங்கே க்ளிக்கவும்.

கொஞ்சம் சமூக அக்கறை...இந்த இடத்தில் க்ளிக் செய்து பாருங்களேன்.

சனி, 13 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 6

"ஒரு பிரின்ஸ்பால் எதுக்கு மாணவனோட வீட்டுக்கு பழங்களோட வந்திருக்காருன்னு உங்களுக்கெல்லாம் வியப்பா இருக்கும். அதிகமா யோசிக்க வைக்காம நானே சொல்லிடுறேன். இது என் அண்ணன்.வன இலாகா அதிகாரியா இருக்கார்.
இவருக்கு 'ஓ நெகட்டிவ்' வகை ரத்தம். ரொம்ப பிரச்சனைக்குரியதும் அரிதானதும் கூட.இப்ப ஒரு அறுவை சிகிச்சைக்காக தேவைப்பட்டப்ப போதுமான அளவு ரத்தம் கிடைக்கலை. வெற்றியோட நண்பர் ஒருத்தர் கிட்ட இருந்து அவசரத்துக்கு கிடைச்ச ரத்தம்தான் இப்ப என் அண்ணன் உங்க முன்னால நிற்க காரணம். 


அதுதான் வெற்றியையும் ரத்தம் கொடுத்த அந்தப் பையனையும் பார்த்துட்டுப் போகலாம்னு கிளம்பி வந்துட்டோம்."என்று கல்லூரி முதல்வர் சொல்லி முடித்தபோதுதான் வெற்றி வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

"அடடே...வாங்க சார்...முதல்ல எல்லாரும் உட்காருங்க...எங்க அப்பா உட்கார சொல்லலையேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. என் அளவுக்கு விபரம் பத்தாது."என்று வெற்றி சொன்னதும்தான் சுந்தர்ராஜனுக்கு தன் தவறு புரிந்தது.

"சாரி சார்...இவன் பேசுறதைப் பத்தி உங்களுக்கும் தெரிஞ்சுருக்கும். எதையும் சீரியசா எடுத்துக்காதீங்க...முதல்ல உட்காருங்க..."என்று சுந்தர்ராஜன் வழிந்தார்.

"கல்லூரியில சேர்ந்த புதுசுல வெற்றி மேல நிறைய புகார் வரும்.ஆனா இவன் மேல எந்த தப்பும் இருக்காது. ஆனா தனக்கு மேல அதிகாரத்தோட இருக்குறவங்க செய்யுற தப்பை சுட்டிக்காண்பிக்கிறதே நம்ம நாட்டுல பெரிய குற்றமாச்சே.

ஜாலியான பையனா இருந்தாலும் இவனோட படிக்கிற மாணவர்கள் மட்டுமில்லாம வெளியில உள்ள பசங்க நிறைய பேரும் சேர்ந்து நிறைய பேருக்கு ரத்த தானம் செய்துகிட்டு இருந்துருக்காங்க. பல பெரிய ஆளுங்க தலைவர்களோட பிறந்த நாள் அன்னைக்கு ரத்த தான முகாம் நடத்துறதோட சரி. இன்னும் ரத்தம் தானம் கிடைக்காம பலர் பாதிக்கப்பட்டுகிட்டுதான் இருக்காங்க.

ஆனா வெற்றியும் அவன் நண்பர்களும் எந்த விளம்பரமும் இல்லாம இந்த உதவியை செய்துகிட்டு வர்றது நான் மட்டுமில்ல நீங்களும் பெருமைப்பட வேண்டிய விஷயம்."என்று பிரின்ஸ்பால் சொல்லவும் சுந்தர்ராஜனின் குடும்பத்தார் சந்தோஷத்தில் எதுவும் சொல்லத் தோன்றாமல் திகைத்தார்கள்.

"நல்லா சொல்லுங்க சார். அப்பவாச்சும் அப்பாவுக்கு நல்ல சிந்தனை வருதான்னு பார்ப்போம்.அண்ணே...உன்னை மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலை பார்க்குறவங்களால நாட்டுக்கும் வீட்டுக்கும் பொருளாதார நன்மை இருக்கு. ஒத்துக்குறோம்.இது மறைமுக பலன்தான். ஆனா என்ன மாதிரி ஆளுங்களாலதான் நேரடி நன்மை இந்த நாட்டுக்கு அதிகமா கிடைக்குதுன்னு புரிஞ்சுக்குங்க."என்று வெற்றி சற்று நேரம் சுயபுராணம் பாடினான்.

"அதெல்லாம் சரிதான் வெற்றி. ஆனா நீ அந்த நாலு பேப்பர் அரியர் வெச்சிருக்கியே...அதாம்பா...ஆங்கிலத்தாள்...அதையும் இப்ப எழுதப்போற கடைசி செமஸ்டர்லயாவது பாஸ் பண்ணிடேன்."என்று பிரின்ஸ்பால் சிரித்தார்.

"சார்...டவர் இல்லை...நீங்க பேசுறது சரியா கேட்கலை...அம்மா...நான் தான் டீ காபி குடிக்கிறது இல்லைன்னு முடிவெடுத்துருக்கேன்.என்னைப் பார்க்க வர்றவங்களும் அப்படியா இருப்பாங்க...

நான் இவங்களுக்கு தண்ணி கொண்டு வந்து தர்றேன். நீங்க காபி, ஹார்லிக்ஸ் எதாவது கொண்டு வந்து கொடுங்க..." என்று சமையலறைக்குள் நுழைந்தான் வெற்றி.

"உயிர்பிழைச்ச பல பேரோட வாழ்த்து வெற்றிக்கு இருக்கு சார். அவன் நல்லா வருவான்.கவலைப்படாதீங்க.நம்ம மாவட்ட எஸ்.பியும் இந்த காலேஜ் ஸ்டூடண்ட்தான்ன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். வர்ற குடியரசு தினத்தன்னைக்கு வெற்றியையும் அவன் நண்பர்களையும் கவுரவிக்கப்போறாங்க.இது மேலும் பல இளைஞர்களுக்கு ஊக்கம் தர்றதா அமையும்.

அடுத்து வெற்றியோட நண்பனையும் போய் பார்க்கணும்.நாங்க புறப்படுறோம் சார்..."என்று பிரின்ஸ்பால் சொல்லவும்,சுந்தர்ராஜன் "எங்க சார் கிளம்பிட்டீங்க...அப்புறம் என் பையன் சொன்னது மாதிரி எனக்கு விவரம் பத்தாதுன்னுங்குறது உண்மையாயிடும்."என்று சிரித்தார்.

உபசரிப்புக்குப் பின் அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள்.

"வெட்டி...ச்ச...வெற்றி...இப்ப உண்மையிலயே எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்குப்பா.நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.என்ன வேணுமோ கேளு..."என்று சுந்தர்ராஜன் உற்சாகமானார்.

"கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்தான் இப்ப சென்னைக்கு போறது இல்லையே...அதை வங்கி கொடுங்க...நான் தூசி தட்டி நம்ம வீட்டு கொல்லைப்பக்கம் நிறுத்திக்குறேன்."என்று வெற்றி வழக்கம்போல் கலாய்க்க, சுந்தர்ராஜன் முகத்தில் வழிசல்.

"சும்மா அரசியல்வாதி மாதிரி வாக்கு கொடுக்க வேண்டியது.நீங்க ஒரு பொருட்டாவே கவனிக்காம இருக்கீங்கிளே...நம்ம தாத்தாவுக்கு எண்பது வயசு பூர்த்தியாகப்போகுது. திருக்கடையூர்ல சதாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்வோம்.இதை நீங்க செய்யுறீங்கிளா...இல்ல... நான்..."என்று வெற்றி பாதியிலேயே நிறுத்தினான்.

"நான் நடத்தாட்டி நீ என்னடா செய்வ..."என்று சுந்தர்ராஜனும் சூடானார்.

"உங்க பணத்தை எடுத்து நானே நடத்துவேன்."என்று வெற்றி சொன்னதும் சுந்தர்ராஜனே சிரித்துவிட்டார்.
******
நெருங்கிய உறவினர்களையும் காயத்ரியின் குடும்பத்தையும்தான் திருக்கடையூருக்கு அழைத்திருந்தார்கள்.கோயிலில் சாஸ்திரிகள், உணவு உபசரிப்பு, தங்குமிடம், ஒளிப்படம், சலனப்படம் என்று எல்லா ஏற்பாட்டையும் வெற்றிதான் நண்பர்களின் உதவியோடு செய்திருந்தான்.

ஹோமம் முடிந்து புனித நீர் அபிஷேகத்தின் போது,வெற்றியின் தாத்தா - பாட்டி குளிரில் லேசாக நடுங்கியதை வெற்றி பார்த்தான்.

"டேய்...தாத்தாவுக்கு ரெண்டுபானை வென்னீர் பார்சல்..."என்று வெற்றி சவுண்ட் விடவும் தாத்தா உஷாரானார்.

"வெற்றி...அதெல்லாம் வேணாம்.நீ எதையாவது மனசுல வெச்சுகிட்டு உடம்பை கொதிக்க வெச்சுடுவ...எனக்கு குளிரவே இல்லை."என்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.

"தெய்வமே... என்னைய நம்புறவங்க யாருமே இல்லையா..."என்ற வெற்றி சுற்றிலும் பார்த்தான்.அனைவரும் தாத்தா பாட்டிக்கு அபிஷேகம் செய்வதில்தான் மும்முரமாக இருந்தார்களே தவிர, இவனை யாரும் கவனிக்கவில்லை.

"அது சரி...இதுவே சினிமாவா இருந்தா,'நான் இருக்கேன் அப்படின்னு ஹீரோயின் வந்துருக்கும்.'இங்க சந்தியா கொஞ்சம் கூட கவனிக்காம நிக்கிறா... எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்." என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான்.

"நாங்க என்ன புது ஜோடியா...ஏண்டா  தாலிகட்டுறதுல இருந்து மாலை மாத்துற வரை எல்லாத்தையும் படம் புடிக்கிறீங்க..."என்று தாத்தா அலுத்துக்கொண்டார்.

"தாத்தா...இவ்வளவு காலம் பாட்டியோட குடும்பம் நடத்தியிருக்க.இப்ப மூணாவது தடவை உனக்கு பாட்டியோடவே கல்யாணம்.இந்த கொடுமையை வீடியோ, போட்டோவுல நீ மறுபடி பார்க்க வேணாம்?"என்று வெற்றி சொல்லவும் சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள்.

"நாங்க பாட்டுக்கு சிவனேன்னுதானே கிடந்தோம்.இப்படி எங்களை கூட்டிட்டு வந்து காலை வாரிவிடுறியே?"என்று வெற்றியை தாத்தா பரிதாபமாக பார்த்தார்.

"தாத்தா...கல்யாணம் நடக்கும்போது இதெல்லாம் சகஜம்.இப்ப நாங்கதான் பெரியவங்க...அதனால நீங்க எதிர்த்துப்பேசக்கூடாது.ஓ.கே..."என்று வெற்றி சிரிக்காமல் சொன்னாலும் மற்றவர்களால் சும்மா இருக்கமுடியவில்லை.

இந்த குடும்பத்தின் குதூகலத்தைப் பார்த்த பிற குடும்பங்களும் தங்கள் வீட்டு மணிவிழா தம்பதியரை அதிகமாகவே சீண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

தினமும் குறைந்தது இருபதுக்கும் குறையாத சுபகாரியங்கள் நிகழும் இந்த தலத்தில் எப்போதும் குதூகலத்திற்குக் குறைவிருக்காது.

வீடியோ எடுக்கும் நண்பனுடன் உதவிக்கு வந்த வெற்றிக்கு இந்த சூழ்நிலை மிகவும் பிடித்துப்போனதும்தான் தாத்தா பாட்டிக்கு இந்த விசேஷத்தை நடத்திப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

******
வெற்றி தாத்தாவின் எண்பது வயது பூர்த்தி திருக்கடையூரில் கொண்டாடிய கையோடு அன்புச்செல்வன்-காயத்ரி திருமண ஏற்பாடுகள் தொடங்கின.
திருமணத்துக்கு முதல் நாள்.மாப்பிள்ளையை அழைக்க பெண்வீட்டார் வந்தார்கள்.அன்புச்செல்வனுக்கு தங்கை முறை வரும் சில பெண்கள் மாப்பிள்ளைக்கு கூல்டிரிங்கஸ் வாங்கிக்கொடுத்தால்தான் வருவார்." என்று சொன்னார்கள்.

அந்த பெண்களும் அதை அப்படியே வந்திருந்தவர்களிடம் சொல்ல, அவர்களில் ஒருவன் உள்ளே நுழைந்து,"அட வெண்ணை...உனக்கு அறிவிருக்கா..."என்று திட்டவும் அங்கிருந்த அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.

6 - தொடரும்.

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 4
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 5

******

சிம்பு - த்ரிஷாவின் பின்னணியில் இருப்பது அபிமுக்தீஸ்வரர் ஆலயம். இது திருவாரூர் நகரின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் கோயில்.ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்று புகழ் பெற்ற ஆழித்தேர் திருவிழா நடைபெறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கொடியேற்றத்தின் போது இந்த அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் மண் எடுத்து அதில் முளைப்பாலிகை வளர்ப்பார்கள் என்பது பலருக்கு புதிய தகவலாக இருக்கும்.
ஆலயத்தைப்பற்றி அறிய...
பஞ்சபாண்டவர் பூஜித்த தலம் என்ற பெருமையை உடைய இந்த ஆலயத்தில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு...

***************************************************

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

என்ன கொடுமை சார் இது.


"பிட்' அடித்து பிடிபட்ட மாணவன் தற்கொலை

தூத்துக்குடி :கோவில்பட்டி தனியார் பள்ளியில், தேர்வில் 'பிட்' அடித்தபோது பிடிபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன், பெற்றோருக்கு பயந்து ரயிலில்விழுந்து தற்கொலை செய்து கொண்டான்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி,ராஜிவ் நகர் ராமமூர்த்தி மகன் அருண்குமார்(13), அங்குள்ள தனியார்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தான். நேற்று பள்ளியில் அறிவியல் தேர்வுநடந்த போது, 'பிட்' அடித்தான். அப்போது, அருண்குமாரை பிடித்த ஆசிரியர்,தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தார்.அது தொடர்பாக அருண்குமாரை கண்டித்ததலைமையாசிரியர், பின் அறிவுரை கூறி அனுப்பினார். சம்பவம் குறித்துதெரிந்தால், பெற்றோர் திட்டுவரோ என பயந்த அருண்குமார், வீட்டிற்குப்போகாமல் பல இடங்களில் சுற்றினான். இரவில், தனியார் தியேட்டர் பின்புறமுள்ளதண்டவாளத்திற்கு சென்று, அவ்வழியாக வந்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான். தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
தினமலர் செய்தி.
உழைத்துப்பிழைக்க இந்த உலகத்துல ஓராயிரம் தொழில். ஆனால் இன்னும் தேர்வுல மார்க் எடுக்கலன்னா அவனுக்கு உலகமே இல்லன்னுன்குற மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கி வெச்சிருக்குறதுதானே  இது மாதிரியான தற்கொலைக்கு காரணம்?