புதிய சட்டசபை வளாகம் அமைவதால் சாலைவிரிவாக்கம் செய்ய சென்னை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை இடித்துவருவதாக படத்துடன் செய்தி வெளிவந்தது. முன்பு ஒரு நாள் நம் முதல்வர், இன்னும்
சிறப்பான வசதிகளுடன் புதிய அரங்கம் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். அது தேர்தல் வாக்குறுதியாகி விடாது என்று நம்புவோம்.
இந்த அரங்கத்தில் நானும் ஒரு விழாவுக்கு பார்வையாளராக சென்றேன். 2007 ஏப்ரலில் விகடன் பிரசுரம் பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் வெளியிடும் விழாவை பிரமாண்டமாக நடத்தியது.
விழாவை சிறப்பித்தவர்கள், கலைஞர் மு.கருணாநிதி, கவிக்கோ. அப்துல்ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, இளமைக்கவிஞர் வாலி, பொள்ளாச்சிமகாலிங்கம், கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுதா சேஷய்யன், விகடன் குழும உரிமையாளர்கள் எஸ்பாலசுப்ரமணியன், பா. சீனிவாசன் மற்றும் ஒரு சிலர் என்
நினைவில் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியவர் சீர்காழி சிவ சிதம்பரம.
அப்போது நான் சென்னையில் இருந்ததால் குறுஞ்செய்தி மூலமாக விண்ணப்பித்து அழைப்பிதழ் பெற்றேன். கெல்லீஸ் ஏரியாவில் இருந்து சென்ற நான் எம்.எல்.ஏ விடுதிக்கு பக்கமாக மிதிவண்டியை பார்க் செய்தது ஒரு சாதனை(?!) (சுற்றுப்புறச் சூழலை காக்கிறேனாக்கும்.)
விழா குறித்த நேரத்திலிருந்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தாமதமாக தொடங்கியது எனக்கு மகிழ்ச்சி தந்த அதிர்ச்சி.
விழாவில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு, "என்னப்பா...கல்யாணம் எப்ப வெச்சிருக்க...எந்த மண்டபம்...மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காரு...அப்படின்னு கேள்வியா கேட்டு அடுக்குவாரு ஒருத்தரு. எப்பன்னு கேட்குறீங்கிளா?...பொண்ணோட கல்யாணப் பத்திரிகையை கொடுக்க வந்தவர்கிட்ட பத்திரிகையை வாங்கி கையில
வெச்சுகிட்டே இவ்வளவு கேள்வி வரும். படிக்கிற பழக்கம் அந்த அளவுக்குதான் இருக்கு. இந்த நிலை மாறனும்." அப்படின்னு பேசினார்.
பெருமை வாய்ந்த அந்த அரங்கம் 2009ம் ஆண்டோட நம்மை விட்டு விலகிடுச்சு.
இது மாதிரி பல விஷயங்கள் புது வருஷத்துல வரும். போகும். நாம நல்ல விஷயங்களுக்கு மனதின் ஓரத்துல இடம் கொடுப்போம். கசப்பான அனுபவங்கள் மறுபடி வராம பார்த்துக்குவோம். இதுதான் புத்தாண்டுல நாம எடுத்துக்குற பாசாங்கில்லாத உறுதிமொழியா இருக்க முடியும்.