Search This Blog

திங்கள், 30 நவம்பர், 2009

இளைய பாரதம் - மலை - புரொஜக்டர் - நண்பர்கள் - ஒரு விளக்கம்.

இளைய பாரதம் வலைப்பூவின் முகப்பில் உங்களை வரவேற்பது இந்த பேனர்தான்.

இதன்  உள்ளடக்கம் பசுமையான மலை, புரொஜக்டர், மூன்று இளைஞர்கள் , வலைப்பூவின் தலைப்பு மற்றும் துணைத்தலைப்பு.

எனக்கு பொழுது போகாத நேரத்தில் மனதில் தோன்றியதை வடிவமைத்து  இங்கே வைத்துவிடவில்லை. நாம் கவனத்தில் வைப்பதுடன் பின்பற்ற வேண்டிய சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் தான் இந்த பேனரை உருவாக்கியிருக்கிறேன்.

இந்த இடம் மருதமலை கோவில் அமைந்துள்ள பகுதி.

ஒரு தாவரம் வளருகிறது என்றால் நிலம், நீர், காற்று, வெப்பம், ஆகாயம் ஆகியவற்றின் பங்களிப்பை தெளிவாக உணரலாம். மனிதன் இல்லை என்றால் தாவரங்கள், விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் மரங்கள் குறைந்ததன் இல்லை இல்லை குறைத்ததன் பலனை நாம் இப்போதே அனுபவிக்கத்தொடங்கிவிட்டோம். மரங்களை அதிகமாக வளர்ப்பதுடன்  மலைகளை சிதைக்காமல் அந்த அழகை அப்படியே விட வேண்டும். இது தாவரங்களையும் இயற்கை வளங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. நம்மையும் வருங்கால சந்ததிகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காக என்ற என்னுடைய எண்ணமே பேனரில் பின்னணியாக உள்ளது.

புரொஜக்டர் : திரைப்படம் கண்டறியப்பட்டு சுமார் நூறு ஆண்டுகளாகி விட்டது. ஆனாலும் மிக சமீப காலம் வரை பிலிம் சுருள் மூலமாக திரையிடும் கருவியின் அடிப்படை தத்துவத்தில் பெரிய மாற்றம் இல்லவே இல்லை. இது அந்த தொழில் நுட்பத்தின் உறுதியைக் காட்டுகிறது.

பிலிம் இல்லாமல் படம் திரையிடும் விஷயமெல்லாம் இன்றைய முன்னேற்றம்தான்.

அந்தக் கருவியின் மூலம் எந்த படத்தைத் திரையிட்டாலும் அதில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே காண்பிக்கும். ஆனால் தவறான விஷயங்கள் அந்த புரொஜக்டர் மூலம் திரையிடப்பட்டால் அதன் பிறகு அந்த திரையரங்கத்திற்கு அஸ்தமனமே...

பிரச்சனைக்குரிய எந்த ஒரு சூழ்நிலையையும் மனிதன் விருப்பு வெறுப்பின்றி அணுக வேண்டும். தவறான பக்கம் சேர்ந்தால் வீழ்ச்சிதான் என்பதை இந்த புரொஜக்டரும் உணர்த்துகிறது.

என்னுடையது  இந்த பார்வை. உங்கள் கோணம் வேறு ஒன்றாக இருக்கலாம். ஏனென்றால் ஒரு விஷயத்தை பத்து பேர் பார்த்தால் பதினைந்து கோணங்கள் கிடைக்க வேண்டும். அது மனிதனின் சிந்திக்கும் குணாதிசயத்தைக் காட்டுகிறது. எந்த கோணத்தில் பார்த்தாலும் நியாயமான விஷயத்தின் பக்கமே உங்கள் வாக்கு இருக்க வேண்டும். நியாயமான விஷயத்தை எப்படி தீர்மானிப்பது?...

நீங்கள் எந்த சூழ் நிலையில் இருந்தாலும் எதிராளியின் நிலையில் உங்களை வைத்து சில நிமிடம் யோசித்துப் பாருங்கள். உங்கள் மனசாட்சி நியாயத்தை சொல்லும்.

(திரையரங்குகள் மூடப்படுவதற்கான காரணங்களை வேறு ஒரு கட்டுரையில் அலசலாம். இந்தக் கட்டுரையின் நோக்கம் அது அல்ல.)

மூன்று இளைஞர்கள் : இந்த உலகில் நீங்கள் வாழ உங்கள் குடும்பமும் உறவினர்களும் மட்டும் ஒத்துழைத்தால் போதாது.

சமூகத்தின் துணையும் வேண்டும். சமூகம் என்பதும் ஒரு வகையில் நண்பர்கள்தான். சிந்தித்துப் பாருங்கள். புரியும். இந்த கோணத்தில் அணுகினால் பல நன்மைகள் உண்டு.

ஆனால் இது இரு வழிப் பாதையாக இருக்க வேண்டும். ஒருவழிப்பாதையாக இருந்தால் பலன் இல்லை. நீங்கள் சாலையில் சரியாக சென்றாலும் எதிரில் வருபவர் விதிகளை மதிக்கவில்லை என்றால் விபத்துதான். ஒருவர் மட்டும் சரியாக இருந்தால் பல நேரங்களில் விபத்துக்களை தவிர்த்துவிடலாம். சில நேரங்களில் பெரிய பாதிப்பு இருக்காது. அவ்வளவுதான்.
 
இனிவரும் காலம் இளைஞர் காலம் என்பது எந்த காலத்துக்கும் பொருந்தும்.


இதுதான் சரியான திசை என்பதை தேர்ந்தெடுக்கும் திறமைதான் ஒவ்வொருவருக்கும் அவசியத் தேவை. இதற்கு பத்து வரிகளில் விளக்கம் கூறிவிட என்னால் முடியாது.

வீட்டில் தனியாக இருப்பவர்கள் கொலைகாரர்களிடமிருந்தும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் தப்பிப்பது எப்படி?


குங்குமம் 07.12.2009 இதழில் தனிமையாக இருப்பவர்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்யும் வழிகள் குறித்த கட்டுரை வெளியாகி இருக்கிறது.

முன்பெல்லாம் புறநகர்ப்பகுதிகளில்தான் கொள்ளை அடிப்பதும் அந்த நேரத்தில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் ஆகியவரை கொலை செய்வதும் நடந்துகொண்டிருந்தன. இப்போது இந்த வகை குற்றங்கள் நகரின் நெரிசலான பகுதிகளிலும் நடைபெற்று நம்மை எல்லாம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நேரத்தில் இந்த கட்டுரை பிரமாதமான வழிகாட்டியாக வந்திருக்கிறது.

 அதற்காகவே கட்டுரையை வெளியிட்ட குங்குமம் இதழுக்கு முதலில் நன்றியோடு வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம்.

இது போன்ற சம்பவங்களில் கொள்ளையுடன் கொலையும் நடக்க முக்கிய காரணம் என்ன தெரியுமா? இதற்கான திட்டமிடலுக்கு முக்கிய அச்சாணியாக இருப்பது நமக்கு நன்றாக தெரிந்தவர்கள், உறவினர்கள், நம் வீட்டின் பணியாளர்கள்.

எனவே நாம் எந்த நேரத்திலும் யாரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அதற்காக இருபத்துநாலு மணிநேரமும் இசட் பிரிவு பாதுகாப்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வில்லை. நமக்கு சாத்தியமாகக் கூடிய வழிகளைத்தான் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

நம்முடன் இருக்கும் ஒருவர் உண்மையாகவே தவறான திட்டமிடலுடன் இருந்தாலும் அல்லது வெள்ளையான மனதுடன் பழகினாலும்(?!) அவர்கள் தப்பு செய்ய தூண்டுவதை நம்மை அறியாமல் நாம் செய்துவிடுவதுண்டு.

தப்பு செய்ய வரும்போதே மாட்டிக்கொள்வோம் என்ற வகையிலான பாதுகாப்பை தனியாக வீட்டில் இருப்பவர்கள் ஏற்படுத்திக்கொள்வது மிக அவசியம் என்று அதிகம் செலவில்லாத சில கருவிகளை பரிந்துரைக்கிறார்கள்.

இதை நான் படித்துவிட்டேனே என்று சொல்பவர்களுக்கு ஒரு சபாஷ் மற்றும் 'ஓ' ஹோ.

வார இதழில் இதைப் படிக்காதவர்களுக்கு ஒரு சில வரிகள். வேலை, பள்ளி (அ) கல்லூரிப்படிப்பு அதனால் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் போன்றவற்றைப் படிக்கவே நேரம் இல்லை என்று மட்டும் சொல்லாதீர்கள். பலர் நள்ளிரவு வரை அதாவது ஐந்து மணி நேரம் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை (உருப்படியான நிகழ்ச்சி என்றால் சரி) பார்ப்பது உண்டு தானே. அந்த நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது முதலில் திருடுங்கள்.

நிச்சயம் அது உங்கள் வாழ்க்கைக்கு உரிய நல்ல விஷயம் ஒன்றையாவது உங்களிடம் ஒப்படைக்காமல் போகாது. துரோகம் செய்யாத நல்ல நண்பர்களில் முதலிடம் பெறுவது  நல்ல புத்தகம்தான் என்று உறுதியாக சொல்ல முடியும்.

இப்போது வீட்டில் தனியே இருக்கும் முதியவர்கள், பெண்கள் போன்றோரை பல ரூபத்திலும் நெருங்கும் ஆபத்துக்களைக் கண்டறியவும் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்கவும் இருக்கும் சில பாதுகாப்புக் கருவிகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

அவை
  • மேக்னடிக் சென்சார்: வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் பொருத்தலாம். வீட்டுக்குள் யாரேனும் அத்து மீறி நுழைந்தால் அலாரம் அடித்து ஊரைக் கூட்டும்.
  • மோஷன் சென்சார்: வீட்டுக்குள் 2 ஜன்னல்கள், 4 கதவுகளுக்கு சேர்த்துப் பொருத்தக் கூடியது. 6 மீட்டர் தூரம், 90 டிகிரி கோணத்தில் கண்காணிக்கும். அத்து மீறி யாரேனும் நுழைந்தால், அந்த அசைவை வைத்து அலாரம் எழுப்பும்.
  • கிளாஸ் பிரேக் சென்சார்: கண்ணாடி ஜன்னல், கதவுகளில் பொருத்தலாம். கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய யாராவது முயற்சித்தால் இது அலறும்.
  • வீடியோ டோர் போன்: வெளியே காலிங் பெல் பக்கத்தில் கேமராவும், வீட்டினுள் மானிட்டரும் பொருத்தப்படும். வீட்டுக்குள்ளிருந்தபடியே மானிட்டரில் பார்த்துவிட்டு, தெரிந்தவர்களாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கலாம்.
  • சிசிடிவி: பெரிய அலுவலகங்களில் உபயோகிக்கிற இது, இப்போது வீடுகளுக்கும் பயன்படுகிறது.


சில ஆயிரம் ரூபாய் செலவில் சாத்தியமாகக்கூடிய பாதுகாப்புக் கருவிகள்தானாம் இவை.

அந்தக் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் கூட சில கிராமங்களில் ஒருவருக்கும் தெரியாமல் அன்னிய நபர் உள்ளே நுழைய முடியாது.

நகர வாழ்க்கையில் இதற்கெல்லாம் சாத்தியம் குறைவுதான். ஆனால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று உதாரணமாக சென்னை வாலஜா சாலையில் உள்ள நாராயணா அரிஹந்த் ஓஷன் டவர்ஸ்  பற்றிய ஒரு அறிமுகம் குங்குமம் இதழில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது நிச்சயம் மற்றவர்களுக்கு வழிகாட்டிதான் என்பதில் சந்தேகமே இல்லை.

மீண்டும் குங்குமம் இதழுக்கு ஒரு நன்றி.

ஞாயிறு, 29 நவம்பர், 2009

மனத்திருப்தி





"நீ எதுவும் வேலைக்கெல்லாம் போக வேண்டாம்"என்று முதலிரவு அன்றே கணவன் சொல்வான் என்று சசிகலா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.



திருமணத்துக்கு முன்பே அவன் சசிகலாவிடம்,"ஓவியம்,படிப்பு அப்படின்னு உனக்கு இருக்கும் தனித்தன்மைகள் நம்ம வீட்டோடயே முடங்கிட நான் காரணமாக மாட்டேன்."என்று உறுதியளித்திருந்தான்.



இப்போது என்னவென்றால் முதலிரவு அறைக்குள் வந்ததும் வராததுமாக நீ எந்த வேலைக்கும் போக வேண்டாம் என்று சொல்கிறானே...கடைசியா இவனும் சராசரி மனிதன்தானா  என மனதுக்குள்ளேயே புழுங்கினாள்.



ஆனால் அவன் அடுத்து சொன்ன வார்த்தைகள் சசிகலாவுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தன.



"நீ ஒரு இடத்துக்கு வேலைக்குப் போனா சம்பளம் கிடைக்கும். ஆனா உன்னோட மற்ற திறமைகள் வெளிவராமலேயே போற அபாயம் இருக்கு. அதனால நீ நம்ம ஊர்ல இருக்குற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு தினமும் குறிப்பிட்ட நேரம் போனா உன் திறமைகளை நாலு பேருக்கு கற்றுக் கொடுத்த மனத் திருப்தியும் இருக்கும். சந்தோஷமும் கிடைக்கும்."என்று அவன் சொன்னதும் சட்டென்று கணவனைக் கட்டிக் கொண்டாள் சசிகலா.