Search This Blog

சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஏப்ரல், 2013

பொதுமக்கள் நூலகம் வருவதை நூலக ஊழியர்கள் தடுக்கிறார்களா?



திருவாரூர் மாவட்ட மைய நூலகம் அனைத்து வசதிகளுடன் இருந்தாலும் தினசரி வாசகர்களின் எண்ணிக்கை 300 முதல் 600 என்ற சராசரி  அளவில்தான் இருக்கிறது. திருவாரூர் நகரின் மையப்பகுதியான தெற்குவீதியில் இருக்கும் கல்யாணசுந்தரம் நூலகத்திற்கே  20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி 400 முதல் 500 வாசகர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகளில் கல்வித்தரம் கூடியிருக்கிறது, மக்கள் தொகை கூடியிருக்கிறது என்று புள்ளி விபரங்கள்தான் சொல்கின்றனவே தவிர பாடப்புத்தகம் தவிர்த்த படிப்பு கேவலமான சூழ்நிலையில்தான் இருக்கிறது. தொலைக்காட்சியை முக்கிய காரணியாக சுட்டிக்காட்டினாலும் ஒரு மாவட்ட மைய நூலகத்திற்கு தினசரி 2ஆயிரம் வாசகர்களாவது பயன்படுத்தவில்லை என்றால் எங்கே பிரச்சனை என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

போட்டித்தேர்வு எழுதும் பலருக்கு திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இயங்கும் தனிப்பிரிவு மிகவும் உதவியாக இருக்கிறது. ஒத்துக்கொள்கிறோம். ஆனால் சாதாரண பொழுதுபோக்கு என்ற அளவில் தொலைக்காட்சியை தவிர்த்து எதாவது படிப்போம் என்று நூலகத்திற்கு வரும் வாசகர்கள் நொந்து போய் வருகையை நிறுத்திக்கொள்ளும் அளவுக்குதான் வெகுஜன இதழ்கள் இங்கே வாசிக்க கிடைக்கின்றன.

திருவாரூர் மாவட்ட மைய நூலகம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நாகைபுறவழிச்சாலையில் அபாயகரமான கனரகப் போக்குவரத்தைக் கடந்து செல்லும் வகையில் இருக்கிறது. இது வயதானவர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்த தடையாக இருக்கும் முதல் காரணியாகும்.

அடுத்து நூலகத்தின் தினக்கூலி பணியாளர்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் திருவாரூர் கடைத்தெருவில் சென்று வார இதழ்களை வாங்கி வர ஆள் இல்லை என்று உயர் அலுவலர்கள் சாக்குப்போக்கு சொல்லிவிடுகிறார்கள். நகரிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஒரு மேம்பாலத்தில் ஏறி இறங்கி சிரமப்பட்டு சென்று பார்த்தால் முதல் வாரம் வரவேண்டிய வார இதழ்கள் கூட இருக்காது.

11-4-2013 முதல் 14-4-2013 வரை நான்கு நாட்கள் தொடர்ந்து நூலகம் விடுமுறை. அடுத்து வந்த திங்கள், செவ்வாய் இரண்டு வேலை நாட்களில் கூட 10-4-2013 வரை வரவேண்டிய வார இதழ்களைக்கூட வாங்கி வைக்கவில்லை. கேட்டால் ஆள் இல்லை என்று சால்சாப்பு.

மாதம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொள்வோம். வாசகர்கள் கணிணியில் பிரெளசிங் செய்ய இருக்கும் அறையிலிருந்து கணிணியை வெளியே எடுத்துவைத்துவிட்டு அந்த அறையில் ஏசியில் தூங்குவோம். ஆனால் யாரும் எதையும் கேட்டுவிடக்கூடாது. வாசகர்கள் வந்தால் இருப்பதை படித்துவிட்டு பேசாமல் போக வேண்டியதுதானே. நிர்வாகத்தில் தலையிட இவர்கள் யார் என்று கூட சிலரை திட்டுவதாக கேள்வி. உண்மை என்னவென்று தெரியவில்லை.

நூலகத்தில் வாங்கச்செய்வதற்காக சில வார இதழ்களும், மாத இதழ்களும் நூலக அலுவலர்களுக்கு பணம் கொடுத்திருக்க கூட வாய்ப்பு உண்டு. அந்த பணம் மட்டும் வேண்டும். ஆனால் நூலகத்திற்கு வர வேண்டிய புத்தகங்களை ஒழுங்காக வாங்கி வர மாட்டோம். மேலும் தினசரி 10 முறை டீ, காபி, சாப்பாடு வாங்கி வர ஆட்களை எப்படியாவது தயார் செய்து பேருந்துநிலையம், கடைத்தெரு பகுதிக்கு அனுப்புவோம். அது எங்கள் உரிமை என்று கூட நூலக ஊழியர்கள் கேட்க வாய்ப்பு இருக்கிறது.

மக்கள் குடித்து சீரழிந்து பிறரையும் சாகடிக்கும் வகையில் வாகனம் ஓட்டுகிறார்கள். அந்த மது வியாபாரம் செய்யும் இடங்கள் ஆண்டுக்கு 4நாள் அல்லது 5 நாட்கள்தான் விடுமுறை. ஆனால் மக்கள் அறிவை விருத்தி செய்துகொள்ள வேண்டிய நூலகத்தை எல்லா அரசு விடுமுறை நாட்களிலும் சாத்திவிடுகிறார்கள். வேலை வெட்டி இல்லாதவனும் போட்டித்தேர்வுக்கு படிப்பதற்காக எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பவனும் மட்டும்தான் நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அளவில்தான் இப்போதைய வேலை நாட்களும் வேலை நேரமும் இருக்கிறது.

தாலுக்கா நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகத்தின் வேலை நேரம் 12 மணி நேரம். நிரந்தர ஊழியர்களுக்கு ஆறு மணி நேர வேலை வீதம் 2 பிரிவாக இருக்கிறார்கள். நாட்டில் எந்த துறையில் ஆறு மணி நேர வேலை இருக்கிறது. அந்த நேரத்தில் கூட இவர்கள் வேலை செய்யமாட்டார்கள் போலிருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறது.

மூன்று புகைப்படத்தையும் பார்த்தால் காட்டு பங்களா போல் இருக்கும் நூலகத்தின் நிலையும், மேம்பாலத்துக்கு செல்லும் அபாயகரமான சாலையின் அமைப்பும் புரியும்.

இது திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தின் நிலை. இன்னும் தமிழ்நாடு பூராவும் சுற்றி வந்தால் என்ன கதியாக இருக்குமோ தெரியவில்லை.

வேறு சில வாசகர்கள் இந்த நூலகத்தின் செயல்பாடு குறித்து புகார் கொடுத்ததாகவும் அந்த புகார்கள் இந்த நூலக உயரதிகாரிக்கே உரிய விசாரணை மேற்கொள்ளும்படி வந்ததாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் பொய்ப்புகார் கொடுத்துவிட்டதாக பைல்கள் மூடப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். இதுவும் எந்த அளவுக்கு உண்மை என்றே தெரியவில்லை.

நூலக ஊழியர்களின் போக்கு மறைமுகமாக நூலகத்திற்கு வருபவர்கள் தாமாகவே வராமல் இருந்துவிடச்செய்யும் நோக்கத்துடன் செய்வதாக கூட இருக்கலாம்.

உண்மை அவரவர் மனசாட்சிக்குதான் தெரியும்.
---------------------------------

பெரும்பாலும் அரசு ஊழியர்களின் அராஜகம் எப்படி இருக்கிறது என்ற சாம்பிளுக்கு பின்வரும் தகவல் கூடுதல் இணைப்பு.
***************
சேலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் தரமுடியாத பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர் விரட்டி அடித்து அந்த பெண்ணுக்கு பேருந்து நிலையத்தில் குழந்தை பிறந்த செய்தி பரபரப்பாக இருக்கிறது. பிரச்சனையை விசாரிக்கும் அதிகாரி, கடந்த சில மாதங்களில் 600 பிரசவம் ஆன இந்த ஆஸ்பத்திரியில் இது ஒன்றுதான் இப்படியாகிவிட்டது என்று சொல்கிறார்.

ஆமாம் அது உண்மைதான் ஐயா...எல்லாரிடமும் காசு கேட்டதும் கொடுத்திருப்பார்கள். இந்த பெண்ணிடம் அதற்கு பணம் இல்லாததால் விஷயம் வீதிக்கு வந்துவிட்டது.

வியாழன், 14 பிப்ரவரி, 2013

5 ஆயிரம் ரூபாய் பரிசு வாங்கித் தந்த காதல்

கடந்த 14.11.2012 அன்று காரைக்காலில் கயவனால் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினி இன்று 12-2-2013 உயிரிழந்தார். அந்த குற்றவாளிக்கு என்ன பெரிய தண்டனை கிடைத்துவிடப்போகிறது?


(இது சற்றே பெரிய பதிவு)


சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு (வருடம் சரியாக தெரியவில்லை) மும்பையில் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய பெண்ணை ஒரு கயவன் கற்பழித்து கொடூரமாக தாக்கியதில் இன்றுவரை அவர் கண்விழிக்கவில்லை. மருத்துவமனை நிர்வாகம்தான் பராமரித்து வருகிறது, அந்த பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் நீதிமன்றம் அளித்த சிறைத்தண்டனையை மட்டும் (அதுவும் முழு காலமும் சிறையில் இருந்தானா என்று தெரியாது) அனுபவித்துவிட்டு வெளி உலகில் மனைவி, குழந்தைகள் என்று சுதந்திரமாக வாழ்கிறானாம் என்ற செய்தியை முன்பு ஒரு முறை பத்திரிகையில் படித்ததாக நினைவு.

இப்போது வினோதினி மீது ஆசிட் வீசியவனுக்கும் பெரிய தண்டனை எதுவும் கிடைக்குமா என்று தெரியவில்லை. அழகான பெண்ணின் பின்னால் தொடர்ந்து அலைந்து கொண்டு அதை காதல் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் மிருகங்கள்தான் ஆசிட்வீச்சு போன்ற கொடூரமான காரியங்களில் ஈடுபடுகின்றன.


ஏதாவது ஒரு விசயத்தில் நியாயம் கேட்கும் சாமானியனுக்கு பதில் சொல்ல திராணியில்லாத அதிகார எந்திரம் அந்த அப்பாவியை ஓட ஓட விரட்டுவதற்காக மட்டுமே முழுவீச்சில் கையில் எடுக்கும் ஆயுதமாகத்தான் பெரும்பாலும் சட்டங்கள் இருக்கின்றன. இதை இல்லை என்று மறுக்க முடியுமா?

ஏதோ ஒரு ஊரில் மதுபானக்கடை அருகில் குடித்துவிட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்களை விட்டுவிட்டு போக்குவரத்துக்கு கொஞ்சமும் இடையூறு இல்லாத பகுதியில் பூரி, வடை சாப்பிடுபவர்களை கூட்டம் போடக்கூடாது என்று ...........னர் வந்து விரட்டுவதாக ஏதோ ஒரு பதிவில் படித்தேன். இப்படித்தான் சாதாரண மனிதர்களின் குரல்வளையை முழு அளவில் நெறிக்கும் சட்டம் உண்மையான சமூக விரோதிகளுக்கு கையை அழுத்திப்பிடிக்கும் அளவில் மட்டுமே பல நேரங்களில் அமைந்துவிடுகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு பதினோறாம் வகுப்பு படித்த ஒருவர் வகுப்பில் கவலையுடன் இருக்கும்போது நகைச்சுவை உணர்வு மிக்க ஆசிரியர் ஒருவர், என்ன தம்பி, காதலி பிச்சுகிட்டு போயிட்டாளா? தவற விட்ட பொண்ணைப்பத்தியும், தவறவிட்ட பேருந்தைப் பத்தியும் கவலைப்படக்கூடாது. அடுத்த பொண்ணு, அடுத்த பஸ்சு...அவ்வளவுதான். பள்ளிக்கூட படிப்பு முடிக்கவே இன்னும் ஒன்றரை வருசம் இருக்கு. அப்புறம் மூணு இல்ல நாலு வருசம் கல்லூரி. அப்புறம் வேலை அல்லது தொழில். அடுத்து வாழ்க்கையில பயமில்லாம பயணிக்க நிரந்தர வருமானம். அதுக்கப்புறம் காதல் என்றால் (ஏற்கனவே காதலித்திருந்தால் பெற்றோர் சம்மதம் பெறுவதற்கு இந்த காலகட்டத்தில் முயற்சித்தால்) பெரும்பாலும் பிரச்சனையில்லை. என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் சொற்பொழிவில் சொன்னதாக முன்பு ஒரு பத்திரிகையில் படித்ததை நினைவுகூர்கிறேன்.

"கணவன் மனைவிக்குள் பெரும்பாலும் உரசல்கள், பிரச்சனைகள் வருவதற்கு 90 சதவீதம் பணம்தான் காரணமாக அமைகிறது. அதை நேர்த்தியாக சமாளிக்கும் குடும்பங்களில் மீதம் இருக்கும் பிரச்சனைகள் தாமாகவே வெயில் கண்ட பனித்துளி போல மறைய வாய்ப்பு அதிகம்.''

இதைத்தான் இன்றைய காதலர்களிடம் (அல்லது) காதலிப்பதாக நினைப்பவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

பெண்கள் மீதான வன்முறை மட்டுமல்ல...சக மனிதனின் மீது வன்முறையை பிரயோகிக்கும் ரவுடிகள் அல்லது அரைவேக்காட்டு மனிதர்களின் மனநிலையில் இருந்து கொடூர எண்ணங்களை வேரோடு அழிப்பதற்கு அல்லது ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதில் தூங்கிக்கொண்டிருக்கும் மிருகம் எந்த காலத்திலும் எழுந்துவிடாமல் இருக்கச் செய்வது சாதாரண விசயம் இல்லை. இந்த நெறிப்படுத்துதல் சிறுபிராயத்திலிருந்தே துவங்கப்படவேண்டும்.

என்னுடைய சிறுவயதில் கதைப்புத்தகங்கள் அதிகமாக படித்திருக்கிறேன். அவற்றின் மையக்கருத்து தப்பு செய்தால் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று முடிவைத்தரும் வகையில்தான் அமைந்திருக்கும். தப்பு செய்ய நான் பயந்து ஒழுங்காக இருப்பதற்கு இந்த மாதிரியான கதைகள் படித்ததும் முக்கிய காரணமாக இருக்கலாம். ராஜேஷ்குமார் நாவல்கள் மீதும் பலருக்கும் முரண்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அந்த விமர்சனங்களைத் தாண்டி அவருடைய கதைகளில் உள்ள ஒரு அம்சம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதாவது நான் படித்தவரையில் அவரது எல்லா நாவல்களிலுமே வில்லன்கள் ரொம்பவும் புத்திசாலித்தனத்துடன் தப்பு செய்வார்கள். ஆனால் ஏதோ ஒரு தடயம் காரணமாக கண்டிப்பாக போலீசிடம் மாட்டிக்கொள்வார்கள். இந்த மாதிரி தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற உறுதியான நிலைப்பாடு நம்நாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு.

குற்றம் செய்தால் தப்பிக்க முடியாது என்ற உறுதியான நிலை ஏற்படுவது ஒருபுறம் அவசியமான தேவை. அதேபோல் எந்த தப்பு செய்தாலும் ஏதாவது ஒரு கேடுகெட்ட அரசியல் வியாதி அல்லது தாதா துணை இருந்தால் போலீசில் இருந்து தப்பிவிடலாம் என்ற வகையில் சினிமா, சீரியல் போன்றவற்றில் காட்சி அமைப்புகள் வைக்கப்பட்டு அதுதான் வளரும் தலைமுறை மீதும், பெற்றோர்கள் மனதிலும் திணிக்கப்படுகிறது. மதுபானக்கடைகளுக்கு வருடத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் விடுமுறைகளும், நூலகங்களுக்கு மாதத்தில் குறைந்தது 6 நாட்கள் முதல் 13 நாட்கள் வரை விடுமுறை இருப்பதிலேயே நாம் வாழும் சூழ்நிலையின் அவலநிலையை தெரிந்துகொள்ளலாம்.

---------------------

2010 ஆம் ஆண்டு பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் திருச்சி பதிப்பு தலைமை அலுவலகத்தில் ஒரு வாரம் பக்கம் வடிவமைக்க பயிற்சி பெற்றுவிட்டு திருவாரூர் கிளை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன். இரண்டு நாட்களுக்குள் அந்த நாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் நான் எழுதி அனுப்பிய கதை 5 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு பெற்ற தகவல் அறிந்து எனக்கு பெரிய அளவில் உற்சாகம் இல்லை. 50 ஆயிரம் ரூபாய் கடன் இருக்கும் போது இந்த 5ஆயிரம் ரூபாயை வெச்சு என்ன செய்யுறது என்று கவலைப்பட்ட ஆள் நான்.

அன்று இருந்த மனநிலையைப் பற்றி இப்போது யோசித்துப்பார்க்கும்போது, நான் இப்படி பல தருணங்களில் நிகழ்கால சந்தோசத்தை அனுபவிக்காமல் எதிர்காலம் அல்லது கடந்த காலத்தை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன் என்பது புரிகிறது.

அது தவிர அந்த சிறுகதை என்னுடைய புகைப்படத்துடன் பிரசுரமானதால் திருவாரூரில் பலரும் என்னிடம் வந்து, கதை சூப்பர். தொடர்ந்து எழுதுங்க என்றார்கள். என்னிடம் பேசாமல் இருந்த உறவுக்காரர் ஒருவர் கூட திருமண விழா ஒன்றில் என்னை சந்தித்து, தம்பி...காதல் ‡ கதை சூப்பர் என்று சொன்னார்.

அந்த கதை பிரசுரமான நேரத்தில் இரண்டு மாதங்கள் பலரும் என்னை அடையாளம் கண்டு பேசியதை மிகவும் கூச்சமாக உணர்ந்தேன். பள்ளி, கல்லூரியில் கடைசி வரிசையில் வாத்தியார் கண்ணில் படாமல் அமர்ந்தவன் நான். இப்போதும் சில கோவில்கள், சுபநிகழ்ச்சிகளில் முன்னின்று சில உதவிகள் செய்தாலும் என் மீது வெளிச்சம் படுவதை மனம் விரும்புவதில்லை. அது தவிர நான் எழுதி அனுப்பும் கதை, கட்டுரை போன்றவற்றை புனைப்பெயர் குறிப்பிட்டு அனுப்பினாலும் பல நேரங்களில் இயற்பெயருடனேயே பிரசுரம் செய்துவிடுகிறார்கள். அது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. இதனாலேயே அதிகம் எழுதுவதில்லை. தவறான விசயங்கள் எதுவும் எழுதுவதில்லை. பெரும்பாலும் நான் எழுதுபவை கருத்து கந்தசாமி வகையிலேயேத்தான் இருக்கும். அது சரி... உன்னை யாரு நாட்டைப்பத்தி கவலைப்பட்டு எழுத சொன்னது என்று கேட்பது புரிகிறது. என்னதான் இருந்தாலும் என் எழுத்துப்பாதையை மாற்றிக்கொள்ள மனம் விரும்புவதில்லை.

5 ஆயிரம் ரூபாய் பரிசுபெற்ற காதல் என்ற சிறுகதையை இத்துடன் பதிவேற்றியிருக்கிறேன். கதையை புத்தகப்பக்கம் போல் வடிவமைக்க நான் முயற்சி செய்த PDF File-ஐ பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
***********************************************

பழைய பதிவில் கதைக்காக நான் எழுதிய முன்னோட்டம்.


இப்போது பலரும் தன் பிள்ளைகள் கொடுமைப்படுத்தி சாப்பாடு போட மறுக்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்செல்கின்றனர். இந்த சூழ்நிலைக்கு சம்பந்தப் பட்ட பெற்றோர்களே பல நேரங்களில் தங்களின் துன்பத்திற்கு காரணமாகின்றனர் என்று என் மனதில் தோன்றிய கருத்தை வைத்து எழுதிய சிறுகதை.

சுயநலமே உலகம் என்று ஆகிவிட்ட நிலையில் தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது அவசியமே என்பது என்னுடைய கருத்து. தன்னுடைய பிள்ளைகளாக இருந்தாலுமே!

*********************************************


காதல்-சிறுகதை.


தஞ்சாவூரில் உள்ள ஒரு மருந்து விநியோகநிறுவனத்தில் வேலைசெய்வதால் என்னுடைய முக்கியப்பணியே ஊரில் உள்ள அனைத்து மருந்து கடைகளுக்கும் சென்று ஆர்டர் எடுப்பதுதான்.
அன்று வழக்கம்போல் நான் அந்த மருந்துக்கடைக்குச் சென்றபோது வாசுதேவன் என்னைப்பார்த்து புன்னகைத்துவிட்டுக் கிளம்பினார்.

“என்ன இந்த ஆளு...ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கடையில மருந்து வாங்கிட்டு திரியிறாரு? எல்லா கடையிலயும் கடன் சொல்லிட்டுப் போறாரோ?” என்று நான் சாதாரணமாகத்தான் கேட்டேன்.

“டேய் ராமமூர்த்தி...உடம்பு வலியால ராத்திரிஎல்லாம் தூங்கமுடியலை.நாங்க வலிதாங்காம கத்திகிட்டு இருக்குறதால மத்தவங்களுக்கும் தூக்கம் கெடுது.என்னால அடிக்கடி கடைக்கு வந்து மாத்திரை வாங்க முடியாது.அதனால  பத்து மாத்திரை சேர்த்துக் குடு தம்பின்னு கேட்டாரு.நானும் நம்பிட்டேன்.
ஆனா இவரு ஊர்ல இருக்குற கடை எல்லாத்துலயும் ஏறி இறங்குறாருன்னு நீ சொல்றதைப் பார்த்தா, தற்கொலை செஞ்சுக்க ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்குற மாதிரியில்ல தெரியுது.உனக்குத் தெரிஞ்ச ஆளா இருந்தா ஏதாவது புத்திமதி சொல்லி அந்த மாத்திரைகளைப் பிடுங்கி வீசுற வழியைப் பாரு.
இது பாட்டுக்கு நிம்மதியா போய் சேர்ந்துடும்.என் கெட்ட நேரம் அங்க தொட்டு இங்க தொட்டு விசாரணைன்னு போலீஸ் இங்க வந்ததுன்னு வையி...நான் மாமூல் கொடுத்தே கடையை மூடிட வேண்டியதுதான்.” என்று குமார் அலறாத குறையாக பதறினான்.

குமாருடைய பேச்சு எப்போதுமே விளையாட்டாகத்தான் இருக்கும். ஆனால் இப்படி படபடப்புடன் தகவல் சொன்னால் அது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷ­யம்தான்.
நேற்றுதான் அவரை, பெரியகோயிலுக்கு அருகில் இருந்த மெடிக்கலில் பார்த்தேன்.
“பிரதோ­ஷத்துக்காக வந்தேன்.அப்படியே மருந்தையும் வாங்கிட்டுப்போயிடலாம்னு...” என்று சிரித்துவிட்டுச் சென்றார்.

அந்தக் கடை முதலாளி,“அவரு உனக்கும் பழக்கமா?...மன நிம்மதிக்காக பிரதோ­ஷ தரிசனம், நிம்மதியான தூக்கத்துக்காக மாத்திரை கொள்முதல்... வயசாயிட்டாலே இதெல்லாம் சகஜமோ...” என்று சொல்லிவிட்டு அவருடைய வேலையைக் கவனித்தார்.

அப்போது இதை நானும் பெரிய வி­ஷயமாக எடுத்துக் கொள்ள வில்லை. இன்று குமாருடைய மெடிக்கலிலும் அவர் தூக்க மாத்திரைகளை வாங்கிச்சென்றதை அறிந்ததும் என் மனதுக்குள் சந்தேகம் அழுத்தமானது.

****

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு தஞ்சாவூரில் ஒரு வீட்டுத் திண்ணையில் தொடங்கப் பட்டதுதான் வாசுதேவன் மெஸ். சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய தஞ்சை நகர மக்கள் வாசுதேவன்,அவர் மனைவி பத்மா இருவரது கைப்பக்குவத்தில் உருவான உணவின் ருசியையும் அனுபவித்து மகிழ்ந்தார்கள்.

தஞ்சாவூருக்குச் சென்ற யாருக்கும் வாசுதேவன் மெஸ் பற்றி தெரியாமல் இருக்காது என்ற அளவில் புகழ்பெற்று பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

தஞ்சைக்குப் பெருமை சேர்த்த ராஜராஜனின் பிறந்த தினமான சதய நட்சத்திர நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படாத காலத்தில் கூட வாசுதேவன் தன்னுடைய  உணவு விடுதியில் அன்னதானம் செய்வார்.பலரது பசியையும் போக்கி வயிறுடன் மனதையும் நிறையச்செய்த வாசுதேவனைப் பற்றி தஞ்சை நகரத்தில் பேசாதவர் இல்லை.

என்னுடைய தாத்தா முதல் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வரை வாசுதேவனின் குணத்தைப் பற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். தான தர்மம் செய்வதைக்காட்டிலும் தொழிலில் அவர் காட்டும் ஈடுபாடுதான் அனைவரையும் அதிகஅளவில் பிரமிப்பில் ஆழ்த்தி யிருப்பதாக எனக்குத் தோன்றியது.

எங்கள் கல்லூரிப் பேராசிரியரின் தங்கைக்குத் திருமணம்.இரண்டாயிரம் பேர் வருவார்கள் என்று கணக்கிட்டு மதிய உணவு தயாரித்திருக்கிறார்கள்.ஆனால் முகூர்த்த நேரம் நெருங்கியபோதே கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்து விட்டது.

மகளைத் தாரைவார்த்துக்கொடுக்க தயாராகிக்கொண்டிருந்த பேராசிரியரின் தந்தை செல்வகணபதியிடம் சென்ற வாசுதேவன், “அய்யா...எப்படியும் ரெண்டாயிரம்பேர் கூடுதலா வர வாய்ப்பு இருக்கு.” என்று சொன்னதும் செல்வகணபதியின் முகம் இருண்டிருக்கிறது.

“அய்யா...உங்களைப் பயமுறுத்துறதுக்காக இதை நான் சொல்லலை.யாரும் சாப்பிடுறதுக்கு முன்னால கிளம்பாம பார்த்துக்குங்க.முதல் பந்தியில இருக்குற எல்லா வகை பதார்த்தமும் கடைசி பந்தி வரை இருக்குற மாதிரி கூடுதலா தயார் செய்யுறது என் பொறுப்பு.

இலை எண்ணிக்கையை கவனிச்சுக்குறதுக்கு உங்க சார்பா யாரையாச்சும் அனுப்பி வையுங்க.உங்க சொந்தக்காரங்களுக்கு நம்பிக்கை வரணும் இல்லையா...” என்ற வாசுதேவன் கிடுகிடுவென சமையல்கூடத்துக்குச் சென்றுவிட்டாராம்.

கூடுதல் சமையலுக்கு பெண்வீட்டிலிருந்து பணம் கிடைக்குமா கிடைக்காதா என்றெல்லாம் அவர் யோசித்துக்கொண்டிருக்கவில்லை.அவருடைய ஒரே நோக்கம், அந்த திருமணத்திற்கு வந்தவர்கள்  சாப்பிடாமல் செல்லக்கூடாது. அடுத்தடுத்த பந்திகளில் சாப்பிட அமர்ந்தவர்கள் முதல் பந்தியில் இருந்த பல பதார்த்தங்களைக் காணவில்லை என்றும் சொல்லக்கூடாது.அவ்வளவுதான்.

இந்த ஒரு வி­ஷயத்துலேர்ந்து அவர் மேல எனக்கு அவ்வளவு மரியாதை.என்று எங்கள் பேராசிரியர் சொன்னபோது எங்கள் அனைவருக்கும் வியப்பாகத்தான் இருந்தது.

இப்படி ஊருக்கே பசியாற்றியவர் சரியான உணவு கிடைக்காமல் மெலிந்துகொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரிந்ததும் முதலில் அய்யோ...பாவம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் நிலைமை தூக்க மாத்திரை அளவில் வந்திருப்பது தெரிந்ததும் என்னால் வேலையில் கவனம் வைக்கமுடியவில்லை.

பொதுவாக வயதாகிவிட்டால் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் எதையாவது சொல்லி திட்டிக்கொண்டே இருப்பதும் அவர்களின் வாரிசுகள் பதிலுக்கு இவர்களைத் திட்டுவதும் பெரும்பாலான  இடங்களில் நடக்கும் விஷ­யம்தான் என்பதால் இதைப் பற்றி யோசிக்கவில்லை.

வாசுதேவனின் மகள் திருமணமாகி கோயம்புத்தூரில் இருக்கிறார்.

அவர் அழைத்ததற்கு,“இரண்டு மகன்கள் இருக்கும்போது மகள் வீட்டில் சென்று செத்தால் பிள்ளைகளின் கவுரவம் போய்விடும். அதனால் எங்களுக்கு எது நடந்தாலும் இங்கேயே நடக்கவேண்டும்.” என்று வாசுதேவனும் அவர் மனைவியும் உறுதியாக இருந்தார்கள்.

இதைக் கேட்டதும் உங்களைத் திருத்தவும் முடியாது.நீங்க அவதிப்பட்டு சாகுறதைத் தடுக்க ஆண்டவனாலயும் முடியாது"ன்னு நானே நினைச்சிருக்கேன்.

வாசுதேவன் வீடு இருந்த தெருவுலேயே நாங்களும் கடந்த ரெண்டு வரு­மா குடியிருக்கோம்.அதனால என் அம்மா மூலமா தெரிஞ்ச தகவல்கள்தான் இவை.

இவ்வளவு சம்பாதித்து மகன்களை நல்ல நிலையில் வைத்த வாசுதேவன் இப்படி சாப்பாட்டுக்கு வழியில்லாம அவதிப்படுறதுக்கு அவரும் அவர் மனைவியும் வாய்த்துடுக்கா பேசுறதுதானே காரணமா இருக்க முடியும்னு என் மனசுக்குத் தோணுச்சு. அதை வெளிக்காட்டிக்காம,இவ்வளவு தூக்க மாத்திரை எதுக்குங்க என்று கேட்டேன்.

எனக்கு எல்லா வி­ஷயமும் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்த அவர் தன் மனதில் இருந்த ஆதங்கத்தைக் கொட்டினார்.

“தம்பி...இப்போ நீ மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு எவ்வளவு கஷ்டப்படுறன்னு உனக்கு நல்லாவே தெரியும்.இந்த வேலையில நீ  எவ்வளவுதான் சிரமப்பட்டாலும் சம்பளம் நிச்சயமா கிடைச்சிடும். ஆனா நான் மெஸ் ஆரம்பிச்ச காலத்துல இதை விட கடுமையா உழைக்க வேண்டியிருந்தது.ஆனா இலாபம்னுங்குறது நிச்சயமில்லை.அதுதான் சொந்த தொழிலுக்கும் வேற வேலைக்குப் போறதுக்கும் உள்ள வித்தியாசம்.இந்த ஆபத்தை உணர்ந்து எதிர்நீச்சல் போட்டதாலதான் நான் நேசிச்ச ஹோட்டல் தொழில் எங்களுக்கு படிப்படியா வருமானத்தை அள்ளிக்கொடுத்தது.

இந்தப் பணத்தை என் மகன்கள் அவங்க வசதிக்கு பயன்படுத்திக்கிறாங்க.அது கூட பரவாயில்லை.ஆனா நான் உழைச்ச காலத்துல வருமானத்துல ஒரு பகுதியை மற்றவங்களுக்கு உதவி செய்யுறதுக்காக ஒதுக்கி செலவழிச்சேன்.இவங்க அதை செய்யுறது இல்லை.ஆனா என்னோட மருமகளுங்க அவங்க பிறந்த வீட்டினருக்கு கணக்குவழக்கில்லாம செலவழிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

முடியாதவங்ளோட கல்வி, மருத்துவ செலவுகளுக்குப் பணம் கொடுக்குறது வேற.அதே சமயம், நம்ம பிள்ளைகளுக்கோ, உறவினர்களுக்கோ இஷ்டத்துக்கு அள்ளிக்கொடுத்து சோம்பேறியாக்குறது எனக்கும் பத்மாவுக்கும் சுத்தமா பிடிக்காது.

நாம கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சேர்த்த பணம் இப்படி வீணாகுதேன்னு ஆதங்கத்தை நான் மனசுக்குள்ளேயே பூட்டி வெச்சிட்டேன்.ஆனா என் மனைவியால முடியலை.அவ கோபப்பட்டு பேசுறது என் மருமகளுங்களுக்கு புடிக்கலை.

பெருசுங்களுக்கு சாப்பாட்டுல ஒண்ணும் இல்லாம ஆக்கிட்டா சீக்கிரம் போய் சேர்ந்துடுவாங்க. நாம இஷ்டப்படி செலவழிக்கலாம்னு நினைச்சுட்டாங்க. அவ்வளவுதான்.

இந்த ஜென்மத்துல ஹோட்டல் வெச்சு, முடியாதவங்க பலருக்கும் உணவு கொடுக்க வெச்ச கடவுள், இப்போ எங்களை அவதிப்பட வெச்சிருக்கான்னா அதுக்கு பூர்வ ஜென்மத்துல நாங்க செய்த பாவம்தான் காரணமா இருக்கும்.அதனால சரியான சாப்பாடு கிடைக்காதது கூட எனக்கு வருத்தமில்லை.
என் மனைவிக்கு காது மந்தமாயிடுச்சு. அதனால மருமகளுங்க இஷ்டத்துக்கு அவளைத்திட்டுற வார்த்தைகள் என் காதுல ஈட்டியை வெச்சு குத்துறமாதிரி இருக்கு. அதைத்தான் என்னால தாங்கமுடியலை.இப்படி அசிங்கப்படுறதுக்கு பதில் அவ போயிட்டான்னா மருமகளுங்க செலவழிக்கிறதை தப்பு சொல்ல யாரு இருக்கா?

அவங்களுக்கும் சந்தோஷ­ம். பத்மாவுக்கும் நிம்மதி. நான் என்ன சொல்லப்போறேன்.அவங்க போடுறதை தின்னுட்டு ஒரு மூலையில முடங்கிக் கிடப்பேன்.
ஆனா ஒரு விஷ­யம் தம்பி...நல்லதோ கெட்டதோ, நாளைக்கு உங்க அம்மா அப்பாவை ஓரம்கட்டிடாதீங்க.

அதாவது,சின்னதோ பெரிசோ அவங்களுக்குன்னு ஏதாவது ஒரு பொறுப்பையோ வேலையையோ கொடுங்க.இத்தனை வரு­மா ஓடி ஓடி உழைச்சு புள்ளைங்ளைக் காப்பாத்துனோம்.இப்ப நாம ஓரமா இவங்களுக்கு பாரமா இருக்கோமோ...அப்படின்னு பெரியவங்களுக்கு வர்ற சிந்தனைதான் பல குடும்பங்கள்ல உறவுச் சிக்கலுக்கு காரணமாயிடுது.

என் மனைவி பேர்லயும் தப்பு இருக்கு ஒத்துக்குறேன்.அன்பு இருக்குற இடத்துல சகிப்புத்தன்மைக்கு வேலையில்லை.ஆனா அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை இதெல்லாம் இருவழிப்பாதையா இருக்கணும்.பல குடும்பங்கள்ல இதெல்லாம் ஒருவழிப்பாதையாயிடுச்சு.அதோட விளைவுகள்தான், இவ்வளவு முதியோர் இல்லங்களும், குடும்பநல நீதிமன்றங்களும், சமீப காலமா பிள்ளை என்னைக் கவனிக்கலைன்னு பெத்தவங்க கொடுக்குற புகார்களும்.” என்று சொன்ன வாசுதேவனின் முகத்தைப் பார்த்தேன்.

தூக்கிய சுமையை நெடுநேரம் கழித்து இறக்கிவைத்தவர் போல் அவருடைய முகம் தெளிவாக இருந்தது.
இவரைப்பொறுத்தவரை மனதில் உள்ள கவலைகளை நியாயமான முறையில் பேசினார்.இதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்க ஆட்கள் இருந்தாலே, இவரைப்போன்ற முதியவர்கள் மனதில் சலனமில்லாமல் இருப்பார்கள் என்று  எனக்குத் தோன்றியது.

“நீங்க சொன்னதெல்லாம் சரிதான் அய்யா...ஆனா மரணத்தை முடிவுசெய்யுறது கடவுள்தான்.பல பேரோட பசியைப்போக்கிய எனக்கு சரியான சாப்பாடு இல்லை. அது போன ஜென்மத்துல செய்த பாவமாத்தான் இருக்கும்னு நீங்களே சொல்லிட்டீங்க.இப்போ உங்க மனைவியை உலகத்தை விட்டு அனுப்பி ஏன் இன்னும் பாவத்தை சுமக்க நினைக்குறீங்க?

இந்த ஜென்மத்துல நீங்க செய்த புண்ணியங்கள் மட்டுமே உங்க கணக்குல இருக்கட்டுமே.தயவு செய்து அந்த மாத்திரைகளைக் கொடுங்க.” என்று நான் கேட்டதும் அவர் கண்களில் கண்ணீர்.ஆனால் முகத்தில் பிரகாசம்.

“என்னை மாதிரி வயசானவங்க பேச ஆரம்பிச்சாலே கிழம் அறுக்க ஆரம்பிச்சிடுச்சுன்னு ஒதுங்கிப் போறவங்கதான் அதிகம்.ஆனா நீ ரொம்ப பேசலைன்னாலும் சொன்ன சில வார்த்தைகள் என் மனசுக்கு ஆறுதலா இருக்கு. நம்ம ஆயுளைத் தீர்மானிக்கிற உரிமையையே பகவான் நமக்குத் தரலை. அடுத்தவங்களுடைய வாழ்நாளைப் பற்றி முடிவுசெய்ய நான் யாரு?...பெரிய பாவம் செய்ய இருந்த எனக்கு நல்ல வழி காட்டிட்ட தம்பி. வீட்டுல இருக்குற மாத்திரைகளைத் தூக்கிப்போட்டுடுறேன். ” என்ற அவர் தன் கையில் இருந்த மாத்திரைகளை என்னிடம் தந்தார்.

“ஆனா ஒண்ணு தம்பி...என் மருமகளுங்க அவ்வளவு அசிங்கமான வார்த்தைகளால என் மனைவியைத் திட்டுறாங்க.இதையயல்லாம் வாங்கிகிட்டு அவ இருக்குறதைவிட போய்ச் சேருறது மேல்னு நினைச்சுதான் தூக்கமாத்திரைகளைக் கொடுக்க முடிவு செஞ்சேன்.” என்று மீண்டும் கண்கலங்கினார்.

அடுத்த சில நாட்களில் வாசுதேவனின் மனைவி பத்மா, கீழே விழுந்ததில் நினைவிழந்து விட்டார்.இரண்டு நாட்கள் அதே நிலையில் இருந்து அவருடைய உயிர் பிரிந்தது.

நான் வாசுதேவனின் வீட்டுக்குச் சென்றபோது அவருடைய மருமகள்கள், அவர்களுடைய உறவுக்கார பெண்களைக் கட்டிக்கொண்டு, “ஆயுசுக்கும் இவங்களுக்கு சேவை செய்யணும்னு நினைச்சோமே...இப்படி எங்களை அநாதையா தவிக்கவிட்டுட்டு போயிட்டாங்களே...” என்று அழுதார்கள்.

எனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டேன். அதுவரை பேசாமல் இருந்த வாசுதேவன் என் கைகளைப் பிடித்துக்கொண்டு,“தம்பி...என் மனசு சஞ்சலப்பட்டது அவளுக்கு எப்படியோ தெரிஞ்சுடுச்சு...அதான் உங்களுக்கு எந்த பாவமும் வேண்டாம்...நானே போயிடுறேன்னு அவ வாழ்க்கையை முடிச்சுட்டு போயிட்டா...இனிமே எனக்கு யாரு இருக்கா...நான் அனாதையா நிக்கிறேனே...” என்று கதறியவரைத் தேற்ற எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
****************************************

கதை ஏற்கனவே 2010ஆம் ஆண்டு வலையேற்றப்பட்டது. எனவே இது பழசு பாதி புதுசு பாதி என கலந்து எழுதப்பட்ட பதிவு.

சனி, 19 ஜனவரி, 2013

உங்கள் வாடிக்கையாளரை உங்களை விட்டு விட்டு ஓடச்செய்வது எப்படி?

நாம் அம்பானி, டாடா மாதிரி சரித்திரம் படைக்கும் தொழிலதிபர்களாக ஆக வேண்டாம். மாதத்திற்கு குறைந்தது 4 லட்ச ரூபாய்க்கு வியாபாரம் செய்து 20 ஆயிரம் ரூபாயாவது லாபம் பார்க்கும் வகையில் வெற்றிகரமான தொழில்முனைவோராக பிரகாசிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கலாம். நம் நாட்டைப் பொறுத்தவரையில் அரசாங்க விதிமுறை உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக தொழில் நடத்துவதை விட யாரிடமாவது அடிமையாக இருந்துவிடலாம் என்று நினைப்பவர்கள் ஏராளம். அவ்வளவு இம்சைகளையும் தாண்டி பலர் வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக வலம் வருவது பெருமைப்படத்தக்க தனிக்கதை.

ஆனாலும் இதுபோன்று சுயதொழில் முயற்சியில் முன்னேறிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்களை கூலிக்காரர்கள் (அ) பிச்சைக்காரர்களாக்காமல் விட மாட்டோம் என்ற கொள்கை உறுதியுடன் உயிரில்லாத மின்சாரம் உயிருள்ள மனிதர்களை வதைக்கிறது.

எல்லாரும் தொழிலதிபர்களாக மாற ஆசைப்பட்டாலும், அனைவரும் பணியாளர்களாக மாற நினைத்தாலும் சிக்கல்தான். இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைக்க முக்கிய காரணம், திறமையான பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதில்லை. நல்ல மனம் படைத்த தொழில்முனைவோர்களுக்கு திறமையான பணியாளர்கள் கிடைப்பதில்லை. இந்த முரண்பாடுகளை எல்லா ஊர்களிலும் காணலாம்.

இந்த சிக்கலுக்கு பயந்துதான் தொழிலை நிலைநிறுத்தும் வரை நான் வேறு பணியாளர்களை வைத்துக்கொள்ளும் யோசனையே இல்லாமல் நான் மட்டும் உழைத்து வருகிறேன்.

சென்னையில் இருக்கும் ஒரு திருமண தாம்பூலப்பை தயாரிப்பாளர்களால் ஏற்பட்ட மோசமான அனுபவம்தான் இந்த பதிவை நான் எழுதக் காரணம். ஆயிரம் திருமண தாம்பூலப்பைகளுக்கு ஒரு ஆர்டர் கிடைத்தது. உள்ளூரில் உள்ள பை தயாரிப்பாளர்களிடம் பேசிப்பார்த்ததில் சென்னை விலைக்கும் உள்ளூர் விலைக்கும் அதிக வித்தியாசம் இருந்தது. மேலும் மெசின் தையல் பைகளுக்கு மிக அதிக நாட்கள் அவகாசம் கேட்டார்கள். இடையில் பொங்கல் விடுமுறை ஒரு வாரத்தை விழுங்கி விடும் என்பதால் யோசித்து சென்னையில் உள்ள ஒருவரிடம் ஆர்டரை ஒப்படைத்தேன்.

எங்கள் ஊரிலும், பரமக்குடி, இராமநாதபுரம் பகுதியிலும் பலருக்கு இவர்கள் தாம்பூலப்பை சப்ளை செய்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் ஆர்டர் கொடுக்க முயற்சித்தேன். முதலில் சாம்பிள் பைகள் அனுப்ப சொல்லி கேட்டபோது நிறைய முறை போன் செய்த பிறகுதான் அனுப்பினார்கள். அப்போதே நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். நாங்கள் தேர்வு செய்த மாடலை சொல்லி எத்தனை நாளில் கிடைக்கும் என்று கேட்டபோது ஜனவரி 11க்குள் அனுப்பிவிடுவோம் என்றார்கள். நானும் நம்பினேன். ஆனால் பையில் பிரிண்ட் செய்ய வேண்டிய டிசைனை நான் அனுப்பி வைக்க அவருடைய இமெயில் ஐடி கேட்டபோதும், முன்பணம் செலுத்த நான் வங்கி விவரம் கேட்டபோதும் அநியாயத்துக்கு தாமதம் செய்தார்கள். அப்போதும் நான் கோட்டை விட்டேன்.

என்னால் அப்போது சென்னைக்கு நேரடியாக செல்ல முடியாத சூழ்நிலை. நானும் நண்பர்கள் மூலம் வேறு சில இடங்களில் விசாரித்து விட்டு வேறு வழியில்லாமல் மேற்படி நபரிடமே ஆர்டர் கொடுத்தேன். 15 நாளில் உற்பத்தி தொடங்கிடும்னு ஒருத்தர் பேட்டியா கொடுத்து தள்ற மாதிரி நாளைக்கு மதியம் பார்சல் புக் பண்ணிடுவேன்று ஒரு வாரமா சொல்றார் அந்த நபர்.

பொங்கல் விடுமுறைக்காக 10 ஆம் தேதியே சொந்த ஊருக்கு சென்ற பணியாளர்கள் 18ஆம் தேதிதான் பணிக்கு திரும்பியதாக சொல்கிறார். இது மாதிரியான சிக்கல் வருமே என்று நான் 1ஆம் தேதி வாக்கிலேயே கேட்டதற்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை. 12ஆம் தேதியே உங்களுக்கு 1000 பையும் கிடைச்சுடும் என்று சொன்ன பார்ட்டி இன்று 19 ஆம் தேதி வரை 500 தான் ரெடி, 600 தான் ரெடி என்று மழுப்புகிறார். அது தவிர 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் கேட்டரிங் ஆர்டர் அவசரப்படுத்துனாங்க. அதனால அந்த வேலை குறுக்கே வந்துடுச்சு என்கிறார். இவர்கிட்ட நாணயம், நேர்மை பற்றி எதாவது கேட்டா புரியுமா?

நல்ல தொழில்முனைவோருக்கு அழகு, பொங்கல் விடுமுறையில் வேலை பாதிப்பு என்றதும் அவரே போன் செய்து, சார்...23 ஆம் தேதி கல்யாணம், 20ஆம் தேதி வேலை முடிச்சு பார்சல் புக் பண்ணிடுவோம். 21ஆம் தேதி நீங்கள் எடுத்து கொடுத்துடலாம் அப்படின்னு நம்பிக்கையோட சொல்லி அதன்படி முன்னால் ஒப்புக்கொண்ட வேலையை முடிச்சு கொடுக்க முழு மூச்சா இறங்கணும். அதை விட்டுட்டு 12ஆம் தேதியிலிருந்தே நாளைக்கு, நாளைக்கு என்று மழுப்புபவரைப்பார்த்தால் வாக்கு முக்கியம் என்பதையே குறிக்கோளாக கொண்டு தொழில் செய்யும் என்னைப்போன்றவர்கள் முட்டாளாகிவிடுகிறோம்.

குறித்த நேரத்தில் ஆர்டரை முடிக்க முடியாத அளவுக்கு எந்த ஒரு தொழிலிலும் ஆயிரம் இடர்ப்பாடுகள் வரலாம். அதை சமாளிக்கத் தெரிவதுடன் வாடிக்கையாளர் நம்பிக்கையுடன் காத்திருப்பதற்கு உரிய பதிலை தெளிவாக கூற வேண்டும். இப்படி இருந்தால்தான் தொழிலை வளர்க்கலாம் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களை மாதிரி மாசத்துக்கு ஒரு வேலை கொடுக்குறவர் முக்கியமில்லை. அடிக்கடி கேட்டரிங் ஆர்டர் கொடுப்பவர்தான் எங்களுக்கு தேவை என்று நினைத்தால் வெளி ஆட்களின் வேலையை ஒப்புக்கொள்ளவே கூடாது.

வாடிக்கையாளரே தெய்வம் என்று மகாத்மா காந்தியின் வார்த்தைகளை பல கடைகளில் ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால் நடைமுறையில் எவ்வளவு பேர் அப்படி மதிக்கிறார்கள் என்றால் சொற்பமே.

இந்த ஒருவரைப்பற்றி குறை சொல்லும் நேரத்தில் இவ்வளவு மின்வெட்டுப்பிரச்சனையிலும் குறித்த நேரத்தில் ஒப்புக்கொண்ட அச்சு வேலைகளை சரியாக டெலிவரி செய்யும் நிறுவனங்கள் கோயம்புத்தூரிலும், சிவகாசியிலும் இருக்கின்றன. அவர்களின் சேவையில் இதுநாள் வரை எனக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை. ஒரு சில முறை ஓரிரு நாட்கள் தாமதமாக எனக்கு பொருட்கள் வந்து சேரும். ஆனால் அவர்கள் அதையும் போன் செய்து நிலவரம் இப்படி இருக்கிறது. இந்த தேதியில் எதிர்பாருங்கள் என்று கூறி விடுவார்கள்.

நான் சென்னையில் உள்ள தாம்பூலப்பை தயாரிப்பாரைப் பற்றி இப்படி பதிவு எழுதக்காரணமே உண்மைக்காரணத்தை மட்டுமின்றி, சரியான பதில் எதுவும் சொல்லாமல் அவர் மழுப்புவதால்தான். வியாபார நிறுவனத்துக்குரிய ஆர்டர்கள் என்றால் ஒருசில தினங்கள் தாமதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் திருமணம் போன்ற விழாக்களுக்குரிய பொருட்கள் தாமதமானால் அவ்வளவுதான். இது எல்லாம் ஒரு தொழில் செய்பவர்களுக்கு நான் சொல்லியா தெரியணும்?

2011 ஜூன் மாதம் நான் தொழில் தொடங்கினாலும், 7 மாதங்களுக்குள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த என்னுடைய அலுவலகத்தை நகரின் மையப்பகுதியில் இடமாற்றம் செய்தது 19.01.2012 அன்றுதான். படிப்பு முடித்த பிறகு சம்பளம் ஒழுங்காக கிடைக்காத ஒரே காரணத்தால் நான் வேலை செய்ய எந்த இடத்திலும் ஒரு ஆண்டினை நிறைவு செய்ய முடிந்ததில்லை.

புதிதாக தொழில் தொடங்கிய பிறகு புறநகர் பகுதியிலிருந்து நகரின் மையப்பகுதிக்கு இடமாற்றம் நிகழ்ந்தாலும் 7 மாதத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று மனதின் ஓரத்தில் உறுத்தல் இருந்தது. புதிய இடத்தில் இன்று தேதி கணக்குப்படி இரண்டாம் ஆண்டு இன்று தொடங்கும் நேரத்தில், வியாபாரத்தில் நேரம், நாணயம் மிக முக்கியம். ஒருவேளை குறித்த காலத்தில் ஒப்புக்கொண்ட வேலையை முடிக்க முடியாதபடி சூழ்நிலை அமைந்தால் வாடிக்கையாளரிடம் உண்மையை சொல்லிவிடுவது நல்லது என்ற உண்மையை ஏற்கனவே அறிந்திருந்தாலும் அனுபவப்பூர்வமாக ஒருவன் என்னை புலம்ப விட்ட பிறகு அழுத்தம் திருத்தமாக உணர்ந்துகொண்டேன்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ் மின்னூல் பணிக்காக சுமார் 500 பக்கங்கள் தமிழில் டைப் செய்ய ஒப்புக்கொண்டேன். சென்னை தவிர தமிழகம் முழுவதையும் மின்வேட்டு மிக மோசமாக புரட்டிப்போடத்தொடங்கிய நாட்கள் அவை. அதனால் ரெகுலர் வேலைகளையும் செய்து கொண்டு, நள்ளிரவு 1 மணிக்கும், இரண்டு மணிக்கும் எழுந்து ஒரு மணி நேரம் விட்டு ஒரு மணி நேரம் மட்டுமே இருக்கும் மின்சார நேரத்துக்கு மத்தியில் குறித்த நேரத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக வேலையை முடித்துக்கொடுத்தேன்.

அதேபோல் 2012 ஜுன் மாதத்தில் பள்ளிக்குழந்தைகளின் அடையாள அட்டை தயாரிப்பாளர்களிடம் இருந்து சுமார் 10ஆயிரம் குழந்தைகளின் பெயர், ரத்தவகை, தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட தகவல்களை இதே போல் இரவில் மாலை  6 மணி முதல் காலை 6 மணி வரை மொத்தம் 12 மணி நேரத்தில் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கும் நேரத்தில் கண் விழித்து பதிவேற்றி கொடுத்ததை நினைத்துப்பார்க்கிறேன்.

இப்போது சென்னையில் தாம்பூலப்பை தயாரிப்பாளர் செய்வதைப் பார்க்கும்போது நான் கண் விழித்து குறித்த நேரத்தில் வேலையை முடித்துக்கொடுத்தது முட்டாள்தனமா அல்லது அவர் செய்வது முட்டாள்தனமா என்ற குழப்பம்தான் என் மனதில் மிஞ்சியிருக்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இனிமேல் ஜென்மத்துக்கும் இப்போது ஆர்டர் கொடுத்த நபர் இருக்கும் பக்கம் கூட போகமாட்டேன். இப்படி நாலு வாடிக்கையாளர்களை அலைக்கழித்தால் நாம் இருக்கும் திசை பக்கம் அவர்கள் தலை வைத்துப்படுப்பார்களா? அது சரி...நான்தான் இப்படி புலம்புறேன். சம்மந்தப்பட்ட நபர் இதைப்பத்தி அலட்டிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. ஏன்னா, இப்போ எனக்கு பை கையில் கிடைக்கணும். அதனால ஒரு வார்த்தை கூட அவர்கிட்ட தவறா பேசலை. திட்டி என்ன ஆகப்போகுது?...

வாக்குல சுத்தம் இல்லாம அலட்சியமா இருந்தபடியே பணம் சம்பாதிக்க கூட அதிர்ஷ்டம் வேணுமோ?

வெள்ளி, 11 ஜனவரி, 2013

டெல்லி மாணவிக்காக குரல் கொடுத்தவர்கள் கவனிக்க...

டெல்லி மாணவிக்கு நேர்ந்த கொடூரத்துக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது உண்மை. அதுபோன்ற கொடூரச்செயலுக்கு கொஞ்சமும் சளைக்காத மற்றொரு செயல் ஆசிட் வீச்சு. விருப்பமில்லாத பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து நாடு முழுவதும் அவ்வப்போது இது போன்று ஆசிட் வீச்சு சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது.

கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு கொடுக்கும் தண்டனையைப் போலவே இதற்கும் கொடுக்கலாம்.

இந்த பதிவில் நான் சொல்ல வந்தது பொருளாதார உதவியை எதிர்நோக்கியிருக்கும் ஒரு சகோதரியைப்பற்றி.

கடந்த தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு சென்னைக்கு திரும்பிய வினோதினி என்ற பெண்ணின் மீது ஒரு கொடூர மனம் கொண்ட மிருகம் ஆசிட் வீசியது பெரும்பாலானவர்கள் அறிந்த செய்திதான்.

16-01-2013 தேதியிட்ட விகடனில் இது குறித்த கட்டுரை வெளிவந்திருக்கிறது. சந்தாதாரகள் மட்டுமின்றி அனைவரும் படிக்கக்கூடிய வகையில் இந்த கட்டுரையை பிரசுரம் செய்திருக்கிறார்கள். அதைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து கடன் வாங்கி பி.டெக் படித்து பணியில் சேர்ந்த அந்த பெண் இப்போது உயிருக்குப் போராடுகிறார். அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்ய நினைக்கும் நபர்கள் நேரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அணுக முடியவில்லை என்றால் விகடனை தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்து கட்டுரையின் இறுதியில் வந்த பகுதி

////////////////
காதலை மறுத்த ஒரே காரணத்துக்காக கயவன் ஒருவனால் ஆசிட் வீசப்பட்டு உடல் கருகி உயிருக்குப் போராடும் வினோதினிக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ண பரிதவிப்புடன் பல வாசகர்கள் விகடனை தொடர்புகொண்டு வருகிறீர்கள். வாசகர்களின் இந்த உதவிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் readers@vikatan.com என்ற புதிய மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டிருக்கிறது. வாசகர்கள், தங்கள் உதவிகள் மற்றும் ஆலோசனைகளை இந்த புதிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இப்போதும், இனிமேலும் விகடனில் வெளிவரும் கட்டுரைகளின் அடிப்படையில், இதுபோன்ற மனிதாபிமான உதவிகளை செய்திட வாசகர்கள் இந்த மின்னஞ்சல் முகவரியையே தொடர்பு கொள்ளலாம். நன்றி!
///////////

சனி, 7 ஜூலை, 2012

தேர்வில் சொதப்புவது எப்படி?

மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்த டி என் பி எஸ் சி.

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இன்று (7 ஜூலை 2012) தொகுதி 4 மற்றும் 8க்கான தேர்வுகளை நடத்துகிறது. இப்போது ஐபிஎஸ் அதிகாரி நட்ராஜ் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது எல்லாம் பாராட்டத்தக்கதுதான். ஆனால் அந்த நல்ல விஷயங்களை நினைத்து சந்தோஷப்படுவதை தாண்டி ஒரு கசப்பான சம்பவம் நடந்து விட்டது. கடைசி நேரத்தில் ஒரு சில தேர்வுமையங்கள் மாற்றப்பட்ட விஷயம் கசிந்து நேற்று பலர் மீண்டும் ஹால் டிக்கட் பதிவிறக்கம் செய்து பார்த்தவர்களுக்கு தேர்வு மையம் மாறியிருப்பது தெரிந்து விட்டது.

கடைசி நேரத்தில் கூட்டத்தில் போய் ஹால் டிக்கட் எடுக்க கூடாது என்று பல மாணவர்கள் அரசு அறிவித்த நாள் முதலே நுழைவுச்சீட்டை பெற்று வந்தனர். அப்படி செய்யாமல் தேர்வாணையம் இப்படி சொதப்பும் என்று தேர்வுக்கு முதல் நாள் வரை ஹால் டிக்கட் பெறாமல் காத்திருக்க முடியுமா.

திருவாரூரில் தேர்வெழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த சிலர் (சுமார் 900 பேர் இருக்கும்) அம்மையப்பன், கொரடாச்சேரி என்று வெவ்வேறு ஊர்களுக்கு சென்று தேர்வு எழுத மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். என்னதான் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் தேர்வு மையத்துக்கு போனாலும், மாறி செல்ல வேண்டிய மையம் உள்ளூரிலேயே இருந்தால் கூட பதட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் கொரடாச்சேரி 19 கிலோமீட்டர். அங்கே பஸ் பிடித்து சென்று மெயின் ரோட்டிலேயே இறங்கி அரசுப்பள்ளியை தேடிச் சென்று...இதுபோல் தமிழகம் முழுவதும் எவ்வளவு இடத்தில் பிரச்சனையோ?

நிச்சயம் பலர் தேர்வு எழுத முடிந்திருக்காது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக கிராமப்புற மாணவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். கிராமம் முதல் நகரம் வரை அனைவரிடமும் செல்போன் வந்து விட்டது. ஆனால் இணைய இணைப்பு அப்படி இல்லை. தேர்வு மையம் மாற்றப்பட்டவர்களுக்கு அப்போதே அவர்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தி செல்ல வழி செய்வது தேர்வாணையத்துக்கு பெரிய காரியம் இல்லை. வரும் காலத்தில் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

போட்டித்தேர்வு எழுதுபவர்கள் தினமும் நாட்டுல என்ன நடக்குது என்று பேப்பரை பார்க்க வேண்டும் என்று சிலர் சொல்லலாம். இந்த செய்தி எதாவது ஒரு உள்பக்கத்தில் ஒரு கால செய்தியாகத்தான் வந்திருக்கும். எல்லாருடைய கண்களிலும் பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. இப்படி தேர்வு மையங்கள் மாற்றப்படுவது ஒவ்வொரு மாணவருக்கும் முன் கூட்டியே தெரிவிப்பது மிகவும் எளிதான காரியம்தான். ஆனால் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் இன்று பலர் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார்கள் என்று சொல்லலாம்.

திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இரண்டு பெண்கள் கொரடாச்சேரி தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டுமே என்று அழுது கொண்டு நின்றிருக்கிறார்கள். நண்பர் ஒருவர் நகர்மன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் அந்த இரண்டு மாணவிகளையும் தன் டூவீலரில் ஏற்றிக்கொண்டு அரை மணி நேரத்தில் கொரடாச்சேரிக்கு கொண்டு சென்று தேர்வெழுத வேண்டிய பள்ளியில் விட்டிருக்கிறார். இப்படி கடைசி நேரத்தில் எவ்வளவு பேர் சென்றிருக்க முடியும்? நண்பரால் உதவ முடிந்தது 2 பேருக்குதான்.

இந்த மாதிரி அடிக்கடி நடந்தால், இனி வரும் தேர்வுகளில், எல்லாரும் தேர்வுக்கு முதல் நாள் போய் ஹால் டிக்கட் எடுக்க முயற்சிப்பார்கள் சர்வர் படுத்து தூங்கிவிடும். அதிகாரிகளுக்கு என்ன கவலை. இந்த தேர்வுகள்தான் வாழ்க்கை என்று நினைப்பவன் தான் நொந்துபோவான்.

நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போதே எந்த அரசுப்பணிக்கும் முயற்சி செய்யப்போவதில்லை என்று முடிவு செய்தேன். இப்போது சொந்த தொழில்தான் செய்து வருகிறேன். என் கவலை எல்லாம், அரசுப்பணியை வாழ்க்கையாக நினைத்து கடுமையாக படித்து தயாரானவர்களுக்கு தேர்வு எழுதும் வாய்ப்பே பறிபோகக்கூடாது என்பதுதான்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

ஊரில் பலர் அறியாத ரகசியம்

ஊரறிந்த ரகசியம் தெரியும். அது என்ன ஊர் அறியாத ரகசியம்?....இது கூட தெரியாதா?. நம்ம அரசியல் வியாதிகள் செய்யுறதுல 99 சதவீதம் இப்படிப்பட்ட வேலைகள்தான். அவங்க பேரைச் சொல்லி அதிகாரிங்க அடிக்கிற கொள்ளையும் இதுலதான் சேரும்.


ஆகஸ்ட் மாத இறுதியில் வேளாங்கண்ணி திருவிழாவுக்காக கிட்டத்தட்ட 15 நாட்கள் நிறைய ஊர்கள்லேர்ந்து சிறப்பு பேருந்துகள் திருவாரூர் வழியா போறதைப் பார்த்திருக்கேன். அது அவசியமும் கூட. அதைத் தவிர்த்துப்பார்த்தா திருவாரூர் தேர்திருவிழா அன்று ஒரு நாள் மட்டும் சில சிறப்புப்பேருந்துகள் வரும். ஆனா சமீப காலமா அப்பப்ப திருவாரூர்ல சிறப்புப்பேருந்துன்னு ஒரு ஸ்டிக்கரோட பாடாவதி பேருந்து நிற்கும். அது ஏன்னு அப்ப எனக்கு புரியலை.

சாதா பேருந்துக்கும் சிறப்புப்பேருந்துக்கும் என்ன வித்தியாசம்னுதானே கேட்டீங்க? சாதா பேருந்துக்கும் எக்ஸ்பிரஸ்னு ஸ்டிக்கர் ஒட்டின பேருந்துக்கும் உள்ள வித்தியாசம்தான். சரி...இப்படி சிறப்பு பேருந்து இயக்கும்போது சினிமா தியேட்டர்ல பிளாக்ல டிக்கட் விக்கிற மாதிரி இருபது, முப்பதுன்னு பிளாட் ரேட்டா டிக்கட் போட்டு வசூலிக்கிறாங்களே. நஷ்டத்துல ஓடுற பஸ்சுக்கு முட்டு குடுக்குறாய்ங்கன்னு பார்த்தா, போக்குவரத்துக்கழக கிளைமேலாளரும், கோட்ட மேலாளரும் சிறப்பு பேருந்து பேரைச் சொல்லி எப்படி கொள்ளை அடிக்கிறாங்கன்னு ஒரு தகவல் கசியுது.

ரெகுலர் டிரிப்பை கேன்சல் செஞ்சுட்டு திடீர்னு ஒரு சிறப்பு டிரிப் அடிச்சா சுமாரா 600 ரூபா டீசலுக்கு எக்ஸ்ட்ரா செலவாகுறதோட, டிரைவர், கண்டக்டர் படிக்காசு தலா 40 ரூபாயாம். இது போகட்டும். அந்த சிறப்பு பேருந்தையும் பகல்ல அவ்வளவா இயக்க மாட்டாங்க. அப்ப எப்போ?  நடுராத்திரி 12 மணியிலேர்ந்து 3 மணி வரைக்கும் அடிச்சா, இந்த சிறப்பு பேருந்து இயக்குறது அந்த வழிகள்ல இருக்குற ஊருக்கு போறவனுக்கே தெரியாதாம். ஆளில்லா கடையில நல்லாவே டீ ஆத்துறாங்கப்பா. உண்மையிலேயே 4 பஸ் வழியுற அளவுக்கு கூட்டம் நிற்கும்போது அந்த வழியில ரெகுலரா போற பஸ்சைக்கூட நிறுத்துற கேவலம் நடக்கும்.

ஊருக்குள்ள எவனுக்கும் தெரியாம சிறப்புப்பேருந்து இயக்குறதுக்கு கோட்ட மேலாளருக்கும், கிளை மேலாளருக்கும் தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாம். ஆனா இந்த மாதிரி டிரிப்புகளில் 200 ரூபா அல்லது 300 ரூபாய்தான் வசூல் ஆகுமாம். அட துரோகிகளா? இப்படி நீங்க கொள்ளை அடிச்சீங்கன்னா பஸ் ரோட்டுல எப்படிடா ஓடும். நஷ்டத்துல ஓடி ஆத்துல...சாரி... அதுல வெறும் பள்ளம் மட்டும்தான் இருக்கு. கடல்ல தான் முழ்கும். இதை எல்லாம் சரி செய்ய முடியாம பஸ் டிக்கட்டை மனசுல 500 கிலோ வெயிட்டோட வேதனையோடதான் ஏத்திருக்கேன்னு அறிக்கை வேற.

ஒரு படத்துல விவேக் பேசும் வசனம். ''ஏண்டா...நீங்க பிச்சைக்காரியை கூட விட்டு வெக்கலியான்னு''. அப்படித்தான் இந்த அரசியல் வியாதிங்க இப்படி போக்குவரத்துக்கழக கிளை மேலாளர், கோட்ட மேலாளர் போஸ்டிங் போடுறதுக்கு எத்தனை லட்சம், எத்தனை கோடி லஞ்சம் வாங்குனானுங்களா? அதை உங்க மூளையை பயன்படுத்தி ஜனங்க .......................குள்ள கையை விட்டு குடைஞ்சு எடுத்து சாப்பிடுங்க அப்படின்னு தண்ணி தெளிச்சு விட்டுருப்பாங்க.

அது சரி...அரசியல் வியாதிங்க சாப்பிடுற டிபனுக்கு பொதுஜனம்தான் பில் மட்டும் இல்லை...டிப்ஸ் கூட கொடுக்கணும்னு தலையெழுத்து.

சிறுதுளி பெருவெள்ளம்னுங்குற கான்செப்டை யார் புரிஞ்சு வெச்சிருக்காங்களா இல்லையோ...இந்த அரசியல் வியாதிங்க நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்காங்கப்பா. இந்தியாவுல இருக்குற 120 கோடி மக்கள் கிட்ட இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒத்தை ரூபாய உருவுனா கூட 120 கோடியாச்சுன்னு ப்ளான் பண்ணி நம்ம தோலை உரிச்சு தின்னுகிட்டு இருக்காங்க.

இன்னும்தான் இந்த அரசியல் வியாதிங்களை நாமும் நம்பிகிட்டுதானே இருக்கோம்.

புதன், 25 ஏப்ரல், 2012

பயணிகள் கவனிக்கவும்

இரவு உணவின் போது சிறிது நேரம் கேபிள் தொல்லைக்காட்சி பார்க்கும் சூழ்நிலையை என்னால் தவிர்க்க இயலாது. அந்த சில நிமிடங்களில் ஒரு நிறுவனத்தின் விளம்பரம் சற்று கவனிக்க வைத்தது. CEAT டயர் நிறுவனத்தின் விளம்பரம்தான்.



1. நடக்க பழகும் குழந்தையை கவனிக்காமல் இரண்டு பெண்கள் சாலையின் ஓரத்தில் நின்று வம்பு பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக்குழந்தை சாலையின் நடுவே வந்து டிராபிக் போலீஸ் வேலை பார்க்க முயற்சிக்கும். அப்போது டூவீலர் ஓட்டி வரும் ஒருவர் திடீர் பிரேக் போட்டதும் சட்டென்று வண்டி நின்றுவிடும். அப்போது அந்த குழந்தையின் தாய், டூவீலர் ஓட்டி வந்தவரைப்பார்த்து, இடியட், குழந்தை இருக்குறது தெரியலை...என்று இஷ்டத்துக்கு திட்ட ஆரம்பிப்பார்.

2. கணவனும் மனைவியும் திரைப்படம் பார்த்துவிட்டு டூவீலரில் பேசிக்கொண்டு போவார்கள். இரவு நேரம். டிராபிக் இருக்காது. சிக்னலில் பச்சை விளக்கு எரியும். இவர்கள் அந்த சந்திப்பை கடந்து செல்ல முயற்சிக்கும் போது திடீரென்று குறுக்கே ஒரு கார் பாம்பு மாதிரி இஷ்டத்துக்கு நெளிந்து போகும்.(அப்படிக்கூட சொல்ல முடியாது. இன்னும் கேவலமாக) அப்போது சட்டென்று பிரேக் பிடித்து நிறுத்திய கணவரின் தோளில் கைவைத்து அவரது மனைவி பெருமூச்சு விடுவார் பாருங்கள்...நம் நிஜ வாழ்விலும் இப்படித்தான். ஒழுங்காக ரூல்சை மதிப்பவர்கள் இப்படி செத்துப்பிழைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் விதி மீறும் மதிகெட்ட மாந்தர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள்.


இன்னும் இரண்டு மூன்று பேட்டர்னில் இந்த விளம்பரம் ஒளிபரப்பானது. அவர்கள் நோக்கம், எங்கள் டயர் எப்படிப்பட்ட சூழலில் பிரேக் பிடித்தாலும் சாலையில் கிரிப்பை விடாது என்று மக்களுக்கு சொல்வது. அவர்கள் சொல்லியிருக்கும் இன்னொரு விஷயம், சாலையில் இப்படி நிறைய இடியட்ஸ் இருக்காங்க என்று நான் சிவப்பு எழுத்துக்களாக காட்டியிருக்கும் நபர்களைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அது உண்மைதான். நான் கல்லூரியில படிக்கும்போது ஒரு பேராசிரியர், உனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியலன்னா என்ன சொல்லுவ? என்றார். எனக்கு தெரியாதுன்னு உண்மையை ஒத்துக்குவேன் என்றேன். அதற்கு அவர், நீ வேஸ்ட். உனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியலன்னா எதிர் கேள்வி கேட்டு அவங்களை குழப்பி விட்டுடணும். இல்லை... வாயை மூட வெச்சுடணும். அப்படின்னு சொன்னார்.

நான் என்ன அரசியல் வியாதியாவா ஆகப்போறேன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டேன். செல்போன் பேசிகிட்டே குழந்தையை கவனிக்காம இருக்குறது மாதிரியான ஆளுங்க, அவங்க தப்பை நீங்க சுட்டிக்காட்டுறதுக்கு முன்னாலேயே  உங்களைத் திட்டி சேப்டியாயிடுவாங்க.

எச்சரிக்கை தேவை நண்பர்களே!