Search This Blog

வியாழன், 6 ஜூன், 2013

எப்படி சிறுகதை எழுதுவது?

ஒரு பத்திரிகையில சிறுகதைப்போட்டி அறிவிச்சதும் எழுத ஆசைப்படவேண்டியது. கடைசி தேதிக்கு இரண்டு நாள் முன்பு வரை அப்படி எழுதலாம். இப்படி மிரட்டலாம்னு கற்பனையிலேயே காலம் தள்ள வேண்டியது. அப்புறம் முதல்நாள் காலையில 4 மணிக்கு எழுந்து உட்கார்ந்து 6 மணிக்குள்ள அவசர அவசரமா கதையை எழுதி (இப்போ நாலு வருசமா கம்ப்யூட்டர் டைப்பிங்) அனுப்பிட்டு அந்த கதையை பரிசுக்கு தேர்ந்தெடுக்கலையேன்னு புலம்ப வேண்டியது. கடந்த 10 வருசமா எனக்கு இதே பிழைப்பா போச்சு.

Image Credit : Indiaglitz

அப்படி இருந்தும் சில கதைகள், கட்டுரைகள், நகைச்சுவை துணுக்குகள் பிரசுரம் ஆனதோட கணிசமான தொகையையும் வாங்கித்தந்திருக்கு.

சிறுகதை எழுதுவது எப்படின்னு சுஜாதா எழுதுன சிறுகதைத்தொகுதியை ஆர்வத்தோட எடுத்து படித்துப்பார்த்து அசடு வழிஞ்சவங்கள்ல நானும் ஒருத்தன். முதல்ல எழுதுறதுக்கு என்ன முக்கிய தகுதி தெரியுமா. நிறைய படிக்கணும். அப்புறமா எழுத முயற்சிக்கலாம். சிறுகதை, நாவல் எழுதணும்னா கற்பனை அதிகமா இருக்கணும். பக்கத்து வீட்டு கிருஷ்ணசாமியைப் பத்தி எழுதுனா கூட அவரே இது நான் இல்லைன்னு சொல்ற மாதிரி மாத்தி எழுத கத்துக்கணும்.

இப்போ வலைப்பூ தொடங்கி எழுதுறவங்களுக்கு பத்திரிகை ஆசிரியர், உதவி ஆசிரியர், பக்கம், கருத்து இது மாதிரி எந்த கவலையும் இல்லை. ஆனா அச்சு ஊடகத்துல கதை பிரசுரம் ஆகணும்னா பல நிபந்தனைகளை பூர்த்தி செய்யணும். (இப்போ அனேகமா பல வெகுஜன இதழ்கள் புதியவர்களின் சிறுகதையை பிரசுரிப்பதே இல்லை) அப்படி சில யுக்திகளை நான் கத்துக்க காரணமா அமைந்தது ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது என்ற புத்தகம்தான். இது சென்னை தியாகராயநகரில் உள்ள மதிநிலையத்தின் வெளியீடாக வந்தது. இந்த புத்தகத்தை பொறுமையாக படித்துப்பார்த்தால் போதும். சாதாரணமாக எழுதுபவர்கள் கண்டிப்பாக தங்களை மேம்படுத்திக்கொள்ள இயலும். ஆனால் இப்போது பிரபல இதழ்களில் உங்கள் கதைகள் உடனடியாக பிரசுரமாக வாய்ப்பு இருக்கிறது என்று சொல்வதற்கு இல்லை.

2002ஆம் ஆண்டு நான் இந்த புத்தகத்தை வாங்கினேன் என்று நினைக்கிறேன். திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இந்த புத்தகத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்.

அந்த புத்தகத்தில் உள்ள யுக்திகளைப்படித்து புரிந்து கொண்டு என் கற்பனைக்கு வடிவம் தந்தபிறகுதான் வரிசையா சில பிரபலமில்லாத இதழ்களில் பிரசுரமாயின. (இவற்றிற்கு சன்மானம் எல்லாம் கிடையாது) ஆனால் அப்படி கதைகள் பிரசுரமாக ஆரம்பித்த நாலு மாதத்திற்குள் நான் எழுதி அனுப்பிய சிறுகதை பிரபல நாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. இது தவிர மேலும் பல இதழ்களில் நான் எழுதிய சில சிறுகதைகளும், கோயில்கள் பற்றிய தகவல் கட்டுரைகளும் பிரசுரமாயிருக்கின்றன.

என்னுடைய அனுபவத்தில் ஆனந்தவிகடன், தினமணி, தினமலர் (சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர்) பதிப்புகள்) மட்டுமே சன்மானத்தொகையினை சரியாக அனுப்பி வைக்கின்றன. சில பிரபல இதழ்களில் இருந்து எனக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் சன்மானங்கள் வராமலேயே போயிருக்கின்றன. அங்கே பணிபுரிபவர்கள் எடுக்கிறார்களா, தபால் துறையில் தவறுகிறதா என்று எந்த பதிலும் கிடைப்பதில்லை.

பிப்ரவரி மாதம் மிகப்பிரபல நாளிதழின் ஆன்மிக இணைப்பில் நான் எழுதிய கோவில் பற்றிய தகவல் கட்டுரை பிரசுரமானது. அதை கம்போஸ் செய்யும்போது மூலவரின் பெயர் குறித்த சந்தேகம் கேட்க அந்த இணைப்பிதழின் ஆசிரியர் எனக்கு போன் செய்தார். சந்தேகங்களை கேட்டுவிட்டு, நீங்கள் எழுதும் நடை நன்றாக இருக்கிறதே. ஏன் நீங்கள் தொடர்ந்து எழுதக்கூடாது என்று கேட்டார். அப்போது பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் நான்கு புகைப்படங்களுடன் இரண்டு பக்கங்கள் அதிகமான தகவல்களுடன் பிரசுரமான அந்த கட்டுரைக்கு எனக்கு தொகை அனுப்பப்படவில்லை. நானும் மெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும்  கேட்டுவிட்டேன். ஒன்றும் வேலைக்காகவில்லை.

கடமையை செய், பலனை எதிர்பாராதே டைப் ஆளுங்களுக்குதான் இது சரிப்பட்டு வரும். அதனால் இப்போது நான் பத்திரிகைகளுக்கு எழுத்துக்கள் அனுப்புவதில் இருந்து சற்று இடைவெளியை கடைப்பிடிக்கிறேன்.

எனக்கு பரிசு வாங்கித்தந்த கதைகள் என்ன கருப்பொருளில் இருந்தாலும் சரி, தொடக்கத்தில் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பாராவுக்குள் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லி அதை வைத்து கதையை நகர்த்துவேன். இறுதியில்தான் அந்த சஸ்பென்ஸ் உடையும். எழுதிப்பழகுபவர்களுக்கு இது மாதிரியான கதைகள் அனுப்ப ஓரளவு செளகர்யமான இதழ்கள் என்றால் பாக்யா, ராணி, தினத்தந்தி குடும்பமலர், ஞாயிறுமலர் ஆகியவைதான்.

ஒருபக்க கதைகள் அனுப்ப குங்குமம் இதழுக்கு முயற்சிக்கலாம். குமுதத்தில் வரும் ஒரு பக்க கதைகள் அதில் பணிபுரியும் ஆசிரியர் குழு எழுதுறதா இருக்கலாம் என்று நண்பன் ஒரு முறை சந்தேகத்தை கிளப்பினான். எனக்கும் அந்த சந்தேகம் இருப்பதால் அவர்களுக்கு எந்த கதையும் நான் அனுப்புவதில்லை. நீங்கள் முயற்சித்துப்பார்க்கலாம். (என் சந்தேகம் தவறாகக்கூட இருக்கலாம் இல்லையா)

சிறு வயதில் இருந்தே எனக்கு கதைப்புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். பாடப்புத்தகத்தை படிக்காமல் இது என்ன வெட்டி வேலை என்று என் அம்மா எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அப்படி நான் கிடைப்பதை எல்லாம் வைத்து படித்ததால்தான் இப்போது தமிழில் தவறின்றி டைப் செய்ய முடிகிறது. சொந்தமாக டிடிபி சென்டர் வைத்து நடத்த முடிகிறது. அந்த வகையில் வாசிப்பு வழக்கம்தான் எனக்கு வாழ்வாதாரத்தை தந்துள்ளது என்று சொல்லலாம்.

வரும் 15ஆம் தேதி கல்கி வார இதழின் சிறுகதைப்போட்டிக்கு கதை அனுப்ப கடைசி தேதி.

வரும் 30ஆம் தேதி தினமலர்-வாரமலர் இதழுக்கு கதைகள் அனுப்ப கடைசி தேதியாகும்.

இரண்டு போட்டிகளுக்குமே அந்த இதழ்களில் வெளிவந்த கூப்பனை கத்தரித்து இணைத்து அனுப்ப வேண்டியிருக்கும்.

நிறைய படிங்க. அப்புறமா எழுதுங்க. இது நான் சொன்னது இல்லை. பிரபல எழுத்தாளர்கள் சொன்னது.

இப்படி நானும் அடிக்கடி படித்துக்கொண்டே இருப்பதால்தான் பல நேரங்களில் நான்கு வரியில் இருக்கும் ஒரு தகவலைக்கூட செய்தியாக்கி கடந்த இரண்டு வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் ஒரு நாளிதழுக்கு அனுப்பி வருகிறேன்.

என்னதான் ஒருவர் உத்திகளை சொல்லிக்கொடுத்தாலும் எழுத வேண்டிய விஷயங்கள் ஒருவரது மனதில் தோன்றி டெவலப் ஆக வேண்டும். அதை ஒருவர் இன்னொருவருக்கு சொல்லித்தரமுடியாது. உங்களுக்காக நான் சாப்பிட முடியாது. உங்களுக்காக நான் படித்து தேர்வெழுத முடியாது (எழுதினால் மாட்டிக்கொள்வோம்) என்பது போல.
---------------------------------------------
சிறுகதை எழுதுவது குறித்து இணையத்தில் தேடியபோது கிடைத்த சில கட்டுரைகளின் சுட்டிகளை கொடுத்திருக்கிறேன்.
---------------------------------------
1. இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. சுட்டி : http://solvanam.com/?p=15167
------------------------------------------

சுஜாதா கருதியதைப் போல யாரும் விரல் பிடித்தெல்லாம் சொல்லித் தந்துவிட முடியாது. ஆனால் இப்போது பத்திரிகைகளில் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்களை விட பல திறமையான கதை சொல்லிகள், தங்கள் திறமையை அறியாமலேயே ஆயா வடை சுட்டக் கதையை தினுசு தினுசாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறார்கள். நேரமும், வாய்ப்பும் வாய்த்தவர்கள் இன்று இணையங்களில் எழுதுகிறார்கள். எதை எழுதவேண்டும் என்று தெரிந்தவர்கள் கூட எப்படி எழுதுவது என்று தெரியாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள். சுட்டி : http://www.luckylookonline.com/2009/08/blog-post_17.html
-----------------------------------------
பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு. சுட்டி :http://etamil.blogspot.in/2008/01/blog-post.html
------------------------------------

5 கருத்துகள்:

  1. அனைவருக்கும் பயன்படும்
    அருமையான பதிவு
    விரிவான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. >>குமுதத்தில் வரும் ஒரு பக்க கதைகள் அதில் >>பணிபுரியும் ஆசிரியர் குழு எழுதுறதா
    ----
    ஒரு காலத்தில் நானும் அப்படி தான் நினைத்திருந்தேன். என்னுடைய சில சிறுகதைகள் குமுதத்தில் பிரசுரமாகும் வரை! (இப்போது எப்படி என்பது தெரியாது. இது பத்து பதினைந்து வருடங்களுக்கு முந்தைய கதை!)

    நிறைய மெனக்கெட வேண்டும். ஒரு பத்து கதைகள் அனுப்பினால் ஒன்று பிரசுரமாக வாய்ப்பு இருக்கிறது. நிறைய பேர் ஒன்பது கதைகள் திரும்பி வந்தவுடன் விரக்தியில் முயற்சியை கைவிட்டு விடுவார்கள்!

    கதைக்கு மட்டுமல்ல -- எல்ல்ல்லாவற்றுக்கும் இது பொருந்தும். முயற்சியை கைவிடக் கூடாது!

    பதிலளிநீக்கு
  3. நிறைய இதழ்களில் உங்களின் பெயரை பார்த்து இருக்கிறேன்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு